ஒரு ஏற்றுமதி நிறுவனத்தில் பல துறைகள் உள்ளது.
பல்வேறு பிரிவுகளில் (H.R.DEPARTMENT) மனிதவளத்துறையும் ஒன்று.
கடந்த ஐந்தாண்டுகளாகத்தான் இந்த பிரிவுக்கு இங்கே முக்கியத்துவம் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. காரணம் தற்போது திருப்பூருக்குள் வரும் பன்னாட்டு நிறுவனங்கள் குறிப்பிட்ட நிறுவனத்திற்கு ஒப்பந்தம் கொடுக்கும் பொழுதே அவர்கள் எதிர்பார்க்கின்ற ஆவணங்கள்,சான்றிதழ்கள் இருக்கின்றதா? என்று கேட்டு உறுதிப்படுத்திய பிறகே அடுத்த கட்ட பேச்சு வார்த்தையை தொடங்குகின்றார்கள்.
தற்போதைய போட்டி மிகுந்த சூழ்நிலையில் ஒரு நிறுவன முதலாளி விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தங்களின் கவனத்தை இதன் மேல் வைத்து செயல்பட வேண்டியதாக உள்ளது.
ஒவ்வொரு நிறுவனமும் பன்னாட்டு நிறுவனங்கள் கேட்கும் சான்றிதழ்களை எடுக்க வேண்டிய கட்டாயம் இருப்பதால் அதன் சட்ட திட்டத்திற்கென்று தங்களின் நிறுவன செயல்பாடுகளை மாற்ற வேண்டியதாக உள்ளது. குறிப்பாக தொழிலாளர்களின் நலவாழ்வுக்கென பல்வேறு விதமான ஆக்கபூர்வமான செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டிய கட்டாயம் உருவாகி விடுகின்றது. இது சார்ந்த விசயங்களை தனியாகப் பார்ப்போம்.
நாம் பார்க்கப் போவது மாறி வரும் சமூகத்தில் சாதி ரீதியான ஏற்றத்தாழ்வுகள் எப்படி தொழில் சமூகம் படிப்படியாக மாற்றிக் கொண்டு வருகின்றது என்பதைப் பற்றி பார்க்கலாம்.
மனிதவளத் துறையில் தொழிலாளர்களின் வைப்பு நிதி, சேமநல நிதி என்ற இரண்டு பிரிவுகள் மிக முக்கியமானது. இவை இரண்டும் தொழிலாளர் நலச்சட்டத்தில் மிக முக்கியமான அங்கமாக இருப்பதால் பத்து நபர்களுக்கு மேல் வைத்து வேலை வாங்கும் ஒவ்வொரு நிறுவனமும் இதை கடைபிடித்தே ஆக வேண்டும்.
ஆனால் இது இந்திய அரசின் மற்றும் தமிழ்நாட்டின் தொழிலாளர் நலச் சட்டதிட்டங்களில் உள்ள ஓட்டை உடைசல்களை பயன்படுத்தி பெரும்பாலும் எவரும் சரியான விதத்தில் பின்பற்றுவதில்லை. தங்களிடம் பணிபுரியும் தொழிலாளர்கள் குறித்த எண்ணிக்கையை முழுமையாக காட்டுவதும் இல்லை.
ஆனால் பன்னாட்டு நிறுவனங்கள் எதிர்பார்க்கும் சான்றிதழ்களில் இதுவும் ஒரு அங்கமாக இருப்பதால் தற்போது மேலே சொன்ன இரண்டுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதாக உள்ளது.
தங்களிடம் பணிபுரிகின்ற தொழிலாளர்களில் குறைந்த எண்ணிக்கையாவது காட்டியாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றார்கள்.
ஒரு தொழிலாளி ஒரு நிறுவனத்தில் சேரும் பொழுதே அவர்களைப் பற்றிய சுயகுறிப்புகள் முதல் அவர்கள் சார்ந்த பல்வேறு ஆவணங்களை பரிசோதித்து ஒவ்வொருவருக்கும் தனித்தனியான கோப்புகள் உருவாக்கப்படுகின்றது. இது இவர்களின் ஜாதகம் போல. இதற்கென்று ஒவ்வொரு நிறுவனத்திலும் மனிதவளத்துறை மேலாளர் இருப்பார்.
அவரின் கீழ் இந்த துறை செயல்படுகின்றது. இது சார்ந்த முக்கிய முடிவுகள் மற்றும் தேவைப்படும் கையெழுத்துக்கென நிறுவனத்தில் உள்ள பொது மேலாளர் பார்வைக்கு வரும். ஒவ்வொரு நாளும் இந்த துறை சார்ந்த கோப்புகள் என் பார்வைக்கு வரும் போது என்னுடைய மற்ற வேலைகளை ஒதுக்கி வைத்து விட்டு இதில் அதிக கவனம் செலுத்துவதுண்டு.
காரணம் பல்வேறு முகங்கள் உள்ள புகைப்படங்கள், தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து குடியேறியவர்கள், குறிப்பாக அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் முழுவதும் உள்ள புகைப்படங்கள் என்று ரசிக்க யோசிக்க நிறைய வாய்ப்புள்ளது.
எனது கையெழுத்துக்காக வரும் கோப்புகளை கவனிக்கும் போது தமிழ்நாட்டின் மனிதர்களின் சமூக வாழ்க்கை எந்த அளவுக்கு மாறிப்போய்விட்டது என்பதை யோசிக்க முடிகின்றது.
பணிபுரியும் தொழிலாளர்களின் உண்மையான இருப்பிடம் குறித்து அறிய, அவர்களின் கல்வித்தகுதி, வயது என்று பலதரப்பட்ட விசயங்களை உறுதிப்படுத்த ஏராளமான உண்மையான ஆவணங்கள் ஒவ்வொரு கோப்பிலும் இருக்க ஒவ்வொரு முறையும் ஒரு தொழிலாளர் குறித்த கோப்பு என்பது ஒரு குறும்படம் பார்க்கும் நிலையை எனக்கு உருவாக்குகின்றது.
பள்ளிச் சான்றிதழ் இருப்பதால் அவர்களின் சாதி குறித்து தெரிந்து கொள்ள முடிகின்றது. அவர்களின் குடும்ப புகைப்படத்தைப் பார்க்கும் குறிப்பிட்ட தொழிலாளரின் அப்பா அம்மா போன்றவர்களின் உண்மையான முகத்தை வெளிச்சம் போட்டு காட்டுகின்றது. ஏறக்குறைய ஒவ்வொரு கோப்புகளும் குறிப்பிட்ட நபரின் மொத்த அந்தரங்கத்தையும் விலாவரியாக எடுத்துரைக்கின்றது.
குறிப்பிட்ட சாதியில் பிறந்திருப்பார். அவரால் மறைத்துக் கொள்ள முடியாத தாழ்வு மனப்பான்மையின் காரணமாக அவரின் நடை உடை மாற்றங்கள் போன்ற பலவற்றையும் வலிய திணித்துக் கொண்டு புதிய அவதாரமாக உருவாகியிருப்பார். உடன் பழகும் பலரிடமும் நான் இந்த சாதி என்று சொல்லிக் கொண்டிருப்பார். பல்வேறு ஊரிலிருந்த வந்திருப்பவர்களிடத்தில் இது போன்ற ஆராய்ச்சிகள் உள்ளூற இருந்தாலும் உறுதிப்படுத்த முடியாத நிலையில் அவரவர் வேலையைப் பார்ப்பதற்கே நேரம் சரியாக இருக்கும். ஏறக்குறைய இதுவும் ஒரு வகையில் குறிப்பிட்ட நபருக்கு விடுதலை போலவே இருக்கும்.
தொழிலாளர்கள் தங்கும் வீடுகளில் என்ன சாதி? என்ற பிரச்சனைகள் இருந்த போதிலும் இன்று அதுவும் மாறி வரும் பொருளாதார சூழ்நிலையில் மெதுமெதுவாக மாறிக் கொண்டே தான் வருகின்றது. மேலும் குறிப்பிட்ட குடியிருப்புகள் என்கிற ரீதியில் இருப்பதால் ஒவ்வொரு பகுதியும் குறிப்பிட்ட மக்களுக்கு தனித்தனி ராஜாங்கம் போலவே உள்ளது. இன்னமும் நிறைய மாற வேண்டும்.
ஆனால் அலுவலக ரீதியாக வேலை செய்பவர்கள் சற்று வசதியான வீடுகளைத் தேடும் போது தான் இந்த பிரச்சனை விஸ்வரூபம் எடுக்கின்றது. நேரிடையாக தாக்குகின்றது. வீடு கேட்கும் பொழுதே உரிமையாளர்கள் கேட்கும் கேள்விகளுடன் நிச்சயம் இந்த சாதி குறித்த வார்த்தைகளும் வந்து விடுகின்றது.
நான் இந்த சாதி என்று சொன்னாலும் உறுதிப்படுத்த பல்வேறு யுக்திகளை கையாள்பவர்களையும் பார்த்திருக்கின்றேன்.
"நாங்க வீடு தருகின்றோம். ஆனால் உள்ளூருக்குள் உங்களைப் பற்றித் தெரிந்தவர்கள் இருந்தால் சொல்லச் சொல்லுங்க" என்று சொல்லி விட பெரும்பாலும் பலருக்கும் பிரச்சனை இங்கேயிருந்து தான் தொடங்குகின்றது.
இது போன்ற நல்லதும் கெட்டதுமான பலவற்றையும் நான் அமைதியாக மனதிற்குள் வைத்துக் கொள்வதுண்டு.
எங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் இந்த மனிதவளத்துறையில் பணிபுரியும் அறுபது வயதைக் கடந்தவர் ஒவ்வொரு முறையும் கோப்புகளை எடுத்துக் கொண்டு என் அறைக்கு வருவார். பல்வேறு துறைகளை கவனிக்கும் நான் குறிப்பிட்ட அந்த துறையை மட்டும் கவனிக்கும் அவரிடம் பலதரப்பட்ட விசயங்களைப் பற்றி உரையாடுவதுண்டு.
காரணம் பல்வேறு நிறுவனங்களில் அவர் பணியாற்றி வந்த பாதையில் அவர் பார்த்த பலதரப்பட்ட விசயங்களை கேட்கும் பொழுது நமக்கு முடிவெடுக்க வசதியாக இருக்கும்.
சென்ற வாரத்தில் பேசிக் கொண்டிருந்த போது எப்போதும் போல பலவிதமான குற்றச்சாட்டுகள் தான் முன்னால் வந்து விழுந்தது. அதில் நிறுவனத்தில் கூட்டிப் பெருக்குபவர்களைப் பற்றிய குற்றச்சாட்டுக்கள் தான் முதன்மையாக இருந்தது.
ஒரு ஏற்றுமதி நிறுவனத்தில் பல துறைகள் உண்டு.அலுவலகம், உற்பத்திக்கூடங்கள் அது சார்ந்த துணைப்பிரிவுகள் என்று ஏராளமாக இருக்கும். காலை எட்டுமணிக்குள் கூட்டிப் பெருக்கி முடித்து இருக்க வேண்டும். இதன் காரணமாக காலை ஆறு மணிக்கே இந்த தொழிலாளர்கள் வர வேண்டும்.
"சார் அவங்களை எந்த கேள்வியும் கேட்க கூடாது என்கிறார்கள். அப்படி கேட்டால் அடுத்த நாள் வரமாட்டேன் என்கிறார்கள்" என்றார்.
"ஏன் வேறு நபர்களை போட்டுக் கொள்ள வேண்டியது தானே?" என்றேன்.
"இல்லை சார். ஆட்கள் கிடைப்பதில்லை" என்றார்.
பெரும்பாலும் இது போன்ற வேலையில் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் தான் இருக்கின்றார்கள்.
இதற்கென்று புதிதான ஆட்கள் வருவதில்லை. விரும்புவதில்லை என்பது தான் இங்கே முக்கியம்.
இதில் மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் இவர்களின் குழந்தைகள் நிச்சயம் படித்து மேலே வந்து விட முடிந்தவர்கள் பெருநகரங்களுக்கு சென்று விடுகின்றார்கள். அவர்கள் வாழ்க்கையின் திசை மாறி விடும்.
கல்லூரி வரைக்கும் சென்று ஒழுங்காக படித்தவர்கள் குறிப்பிட்ட காலகட்டத்திறகுள் பலதரப்பட்ட அலுவலகம் ரீதியான வேலையில் தங்களைப் பொருத்திக் கொண்டு விடுகின்றார்கள். பள்ளி இறுதி வரைக்கும் படித்தவர்கள் முதல் படிப்பை பாதியில் விட்டவர்கள் வரைக்கும் திருப்பூரைப் பொருத்தவரையில் டைலர் வேலை முதல் ஏற்றுமதி துறையில் உள்ள பலதரப்பட்ட வேலைகளை குறுகிய காலத்திற்குள் கற்றுக் கொண்டு அவர்களும் புதிய வாழ்க்கையைத் தொடங்கி விடுகின்றார்கள்.
யோசித்துக் கொண்டே அவரிடம் கேட்டேன்.
"அப்ப இது போன்ற வேலைகளுக்கு எதிர்காலத்தில் யார் இருப்பார்கள்?" என்றேன்.
"நவீனங்கள் புதிய மாறுதல்களை உருவாக்கும். இப்போது சிறிய அளவில் உள்ள வாக்குவம் கீளீனர் போன்ற சமாச்சாரங்கள் காலப்போக்கில் பெரிய ஹால் போன்ற அமைப்புகளை சுத்தம் செய்ய பயன்படுத்தும் நிலைக்கு வரலாம்" என்றார்.
"அப்படிப்பார்த்தாலும் அதிலும் மனித உழைப்பு சில இடங்களில் தேவைப்படுமே" என்றேன்.
"அது போன்ற இடங்களில் பொருளாதார ரீதியாக போட்டி போட முடியாதவர்கள் இது போன்ற வேலையைத் தேர்ந்தெடுக்கும் சூழ்நிலையை உருவாக்கும்" என்றார்.
"புரியவில்லை" என்றேன்.
"தற்போது ஒவ்வொரு வேலைக்கும் ஏராளமான போட்டிகள் உருவாகிக் கொண்டேயிருக்கின்றது. தகுதிகள் ஒரு பக்கம் என்றால் சம்பளம் குறைவாக கேட்பவர்களுக்குத்தான் முன்னுரிமை கொடுக்கின்றார்கள்.இதுவே காலப்போக்கில் போட்டிகள் அதிகமாகும் போது பலராலும் போட்டி போட முடியாத சூழ்நிலை உருவாகும். பாதிப் பேர்கள் சம்பளம் கட்டவில்லை என்று ஒதுங்கி வேறு பக்கம் மாறுவார்கள். வேறு துறைகளை தேர்ந்தெடுப்பார்கள். புதிய துறைகள் வளரும். சில துறைகள் அழியும். பல துறைகளுக்கு ஆட்கள் கிடைப்பதே குதிரை கொம்பாக இருக்கும். அது போன்ற சூழ்நிலையில் பலரும் கிடைத்த வரைக்கும் லாபம் என்பதாக கிடைத்த வேலையில் சேருவார்கள்" என்றார்
"அப்போது கௌரவம் சார்ந்த தொழில் அப்படி இல்லாத தொழில் என்கிற மாயபிம்பம் உடைபடும். வாழ்ந்தே ஆக வேண்டும் என்கிற சூழ்நிலையில் வாழ்பவர்களின் எண்ணிக்கை எதிர்காலத்தில் அதிகமாகும்" என்று பேசிக் கொண்டே சென்றார்.
அவரும் காரைக்குடி பகுதியைச் சேர்ந்தவர். நாட்டுக்கோட்டை நகரத்தார் சாதியில் பிறந்த அவரின் ஒரு மகள் திருமணம் செய்திருப்பது தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த பையனை. அவர் சொன்ன போது எனக்கு ஆச்சரியமாக இல்லை. ஆனால் அவர் எதனால் இந்த முடிவு எடுத்தார் என்று சொன்ன போது தான் ஆச்சரியமாக இருந்தது.
"பையன் நல்லவனாக இருந்தான். பெண்ணுடன் அலுவலகத்தில் கடந்த ஐந்து வருடமாக ஒன்றாக பணிபுரிந்து கொண்டு இருக்கின்றான். எந்த கெட்ட பழக்கமும் இல்லை. அவனது பெற்றோர்கள் ஊரில் இருக்கின்றார்கள். எங்களுடன் இங்கே கூட்டுக்குடித்தனத்தில் இருக்க அவனுக்கும் விருப்பமாகவே உள்ளதால் பாதி செலவு குறையும். என் மனைவி குழந்தைகளை பார்த்துக் கொள்கின்றார். இருவரும் ஒரே வண்டியில் சென்று விட முடிகின்றது. என்றார்.
இது குறித்த பிரச்சனைகள் உங்கள் பக்கம் உருவாகுமே? என்றேன்.
"உருவாகியது தான். அதற்காக என்ன செய்ய முடியும். மகள் வாழ்க்கை முக்கியமா? கௌரவம் முக்கியமா? என்றால் எனக்கு மகள் வாழ்க்கை தான் முக்கியமாகத் தெரிகின்றது. நான் ஊரை விட்டே வந்து 40 வருடங்கள் ஆகிவிட்டது. இனி அங்கே போய் வாழும் எண்ணமும் எனக்கில்லை. நான் எதற்கு பயப்பட வேண்டும்" என்றார்.
அவர் அடித்தட்டு மக்கள் குறித்தும் அவர்களின் வேலைகளை குறித்தும் பேசப்பேச பல விசயங்களை அதன் எதார்த்தத்தை புரிந்து கொள்ள முடிந்தது.
கடந்த ஒரு மாதத்தில் பார்த்த சம்பவங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மனதில் வந்து போனது.
நண்பர் திருமணத்திற்கு அழைத்திருந்தார். திருமணத்திற்கு முந்தைய நாள் என்னை பார்க்க வேண்டும் சொல்லியிருந்த காரணத்தால் குறிப்பிட்ட அழகு நிலையத்திற்கு வந்து விடுங்கள் என்றார். அன்று தான் முதன் முதலாக இந்த அழகு நிலையம் என்ற பியூட்டி பார்லர் என்ற கடையின் விபரங்களை முழுமையாக பார்த்தேன்.
திருப்பூரில் சிறிதும் பெரிதுமாக ஏராளமான அழகு நிலையங்கள் இருந்த போதிலும் இப்போது வணிக ரீதியாக பெரிய நிறுவனமாகவே மாறிக் கொண்டு வருகின்றது.
ஒவ்வொரு நிறுவனமும் அதன் வளர்ச்சியைப் பொறுத்து பல்வேறு இடங்களில் கிளைகளுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. இதுவே தமிழ்நாடு அளவில் செயல்படும் நிறுவனங்கள் தங்களது சார்பாளர்கள் என்கிற நிலையில் ப்ராஞ்சைஸ் என்று பல்வேறு இடங்களில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
நண்பர் இருந்த அழகு நிலையத்தில் உள்ளே நுழைந்ததும் நாம் 20 வருடங்களுக்கு பின்னால் வாழ்ந்து கொண்டிருக்கின்றோமோ? என்றே யோசிக்க வைத்தது.
ஆண்களுக்கு பெண்களுக்கு என்று தனித்தனியாக அறைகள். அது சார்ந்த பல்வேறு வசதிகள். தொடக்கத்தில் வரவேற்பறை .
அங்கே மாட்டி வைக்கப்பட்ட அழகு நிலையத்தின் செயல்பாடுகள், விலைப்பட்டியல் போன்றவற்றை படித்த போது "என்னடா ஒரு மயித்த செரைக்கிறதுக்கு இம்பூட்டு ஆர்ப்பட்டமா?" என்று வேடிக்கை பார்க்கத் தொடங்கினேன்.
ஊரில் கண்மாய் கரையில், மரத்தடியில் நடந்த முகச் சவரமும், முடிவெட்டலும் சிறிய கடைகளாக மாறியது. வெறுமனே மரச்சேரில் தொடங்கிய பயணம் சுழலும் இருக்கைக்கு மாறியது. தண்ணீரை கைகளால் தடவியது மாறி பாட்டிலில் உள்ள பீச்சி மூலம் பீச்சியடித்து சாரல் மழையில் நனைய வைத்தார்கள். இருபது வருடத்திற்குள் இன்று அழகு நிலையமாக மாறி இன்று "கம்ப்ளீட் பேஸ் பிளிச்சீங்" 500 ரூபாய் என்று பயமுறுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.
ஆனால் வியாபாரம் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கின்றது. சென்ற வாரத்தில் இது போன்ற ஒரு அழகு நிலையத்தை இங்கே திறந்து வைத்தவர் ஒரு அமைச்சர். அத்துடன் மேயர் போன்ற படைபட்டாளங்கள் போன்ற அதிகாரவர்க்கத்தினர் கலந்து கொண்டனர்.
இந்த மாற்றம் கடந்த 20 வருடத்திற்குள் நடந்துள்ளது.
இங்கே குறிப்பிட வேண்டிய முக்கியமான அம்சம் என்னவென்றால் இந்த அழகு நிலையம் நடத்துபவர்கள் எவரும் நாவிதர் சாதியில் பிறந்தவர்கள் அல்ல. நான் முடிவெட்டும் கடையில் பணிபுரிபவர்கள் வரைக்கும் சோதித்து பார்த்து விட்டேன். பலதரப்பட்ட சாதியில் பிறந்தவர்கள் தான் தற்போது இந்த தொழிலில் இருக்கின்றார்கள்.
நாவிதர் சாதியில் பிறந்தவர்கள் இந்த தொழிலில் சொற்ப எண்ணிக்கையில் தான் உள்ளனர்.
ஒரு தலைமுறைக்குப் பிறகு கல்வி ரீதியாக வளர்ந்துள்ளார்கள். அல்லது வேறு துறையை தேர்ந்தெடுத்து தங்கள் வாழ்க்கையை மாற்றி வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இது இந்த சாதியில் மட்டுமல்ல. அடித்தட்டு மக்கள் என்று சமூகம் ஒதுக்கி வைத்த அத்தனையும் இன்று மாறியுள்ளது.
காரணம் நகரமயமாக்கல், ஒவ்வொரும் தங்கள் பிழைப்பைத் தேடி உருவான இடப் பெயர்ச்சி தான் இன்று இதை சாத்தியமாக்கியுள்ளது.
ஊரில் சலவை செய்து கொடுப்பவர்களை நாம் எந்த நிலையில் வைத்திருந்தோம்? நாம் எப்படி அவர்களைப் பார்த்தோம் என்பது இதை படிக்கும் ஒவ்வொருவருக்கும் நன்றாகவே தெரியும்.
ஆனால் இந்த துறை எப்படி வளர்த்துள்ளது தெரியுமா?
நகர்புறங்களில் ட்ரை கிளீனர்ஸ் என்பது இன்று வளர்ந்த லாபம் கொழிக்கும் தொழிலாக உள்ளது. எவரும் ஆற்றில் போய் துவைப்பதில்லை. ஆற்றில் தண்ணீரே இல்லை என்பது வேறு விசயம்.
சலவைக்கல்லில் கூட துவைப்பதில்லை.
இன்று துணி துவைக்கும் எந்திரங்கள் இந்த வேலையைச் செய்து கொண்டிருக்கின்றது. பெரிய அளவுக்கு முதலீடு போடத் தைரியம் இருப்பவர்கள் வைத்திருக்கும் உலர வைக்கும் எந்திரங்களின் விலையைக் கேட்டதும் தலைசுற்றுகின்றது. இந்த துறையின் முகமே மாறியுள்ளது.
கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்லும் நகர்புறங்களில் இன்று துணி துவைக்க நேரம் இருப்பதில்லை. வீட்டில் துணி துவைக்கும் எந்திரங்கள் இருந்த போதிலும் பலரும் இது போன்ற ட்ரை கிளினர்ஸ் கடைக்கு நிரந்தர வாடிக்கையாளராக இருப்பதால் லாபம் கொழிக்கும் தொழிலாகத்தான் உள்ளது.
இது எனக்கு ஆச்சரியமாக இல்லை.
ஏற்றுமதி நிறுவனங்களில் அயரன் என்றொரு பிரிவு உண்டு.
அதாவது ஆடைகள் வெட்டி தைத்து பரிசோதித்து வந்த பிறகு கடைசியாக அதை அயரன் செய்து அதன் பிறகே பாலிபேக்கில் போட்டு பெட்டியில் போட்டு லாரியில் ஏற்றுவார்கள்.
இந்த அயரன் துறையில் பணிபுரிபவர்களை கடந்த 20 ஆண்டுகளாக பார்த்துக கொண்டிருக்கின்றேன். 15 ஆண்டுகளுக்கு முன் எப்போதும் போல இந்த சாதியில் பிறந்த பலரும் பணிபுரிந்து கொண்டிருந்தார்கள். பெரும்பாலும் 40 வயதை கடந்தவர்களாக இருந்தார்கள்.
ஆனால் தற்போது முதுகலை பட்டப்படிப்பு படித்தவர்கள் வரைக்கும் இந்த துறையில் பணிபுரிந்து கொண்டிருக்கின்றார்கள்.
சென்ற மாதத்தில் நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த ஒருவரை நீண்ட நேரமாக பார்த்துக் கொண்டிருந்தேன். ஆள் எடுப்பாக இருந்தார். அலுவலக ரீதியாக வேலைகளில் மட்டுமே செயல்படக்கூடியவர் என்பதை அவர் செய்து கொண்டிருந்த சொதப்பல் வேலையின் மூலம் புரிந்து கொள்ள முடிந்தது. காரணம் பீஸ் ரேட்டில் ஆடைகளை தேய்த்துக் கொண்டிருப்பவர்கள் மின்னல் வேகத்தில் தங்கள் வேலைகளை கவனித்துக் கொண்டிருப்பார்கள். இவரால் வேகமாக செயல்பட முடியவில்லை என்பதை மனதில் வைத்துக் கொண்டு சாப்பாட்டு நேரத்தில் வெளியே வந்தவரை தனியாக அழைத்துப் பேசிய போது தான் பல உண்மைகள் புரிந்தது.
முதுகலை பட்டப்படிப்போடு வேறு சில படிப்புகளையும் முடித்தவரால் திருப்பூரில் உள்ள அலுவலக நடைமுறைகளில் ஜெயிக்க முடியவில்லை. உயர் வகுப்பில் பிறந்தவருக்கு இந்த பீஸ் ரேட் சமாச்சாரம் பிடித்த காரணத்தால் கற்றுக் கொள்வதன் பொருட்டு தனது தொழில் வாழ்க்கை பயணத்தை இந்த துறையில் தொடங்கியுள்ளார்.
இன்று 90 சதவிகித இளைஞர்கள் தான் இந்த அயரன் துறையில் இருக்கின்றார்கள். பள்ளி இறுதி வகுப்பு படித்தவர்கள் முதல் பலதரப்பட்ட பட்டங்கள் வாங்கியவர்கள் வரைக்கும் பணிபுரிந்து கொண்டிருக்கின்றார்கள்.
இன்றைய மாறிய சமூகத்தில் குறிப்பிட்ட தொழில் குறித்த எண்ணம் அதன் மூலம் கிடைக்கும் லாபம் குறித்த விசயங்கள் மட்டுமே பேசு பொருளாக இருப்பதால் முதலீடு போடத் தயாராக இருப்பவனுக்கு எல்லாமே ஒரே தொழிலாகத்தான் உள்ளது.
இன்றும் சாதி ரீதியான கொடுமைகள் இருக்கின்றதா என்றால் இருக்கத்தான் செய்கின்றது. அது மாறுமா? மறையுமா என்றால் நிச்சயம் என் பார்வையில் மாறும் மறையும் என்றே தோன்றுகின்றது.
இதற்கென போராளிகள் தேவையில்லை. பொருளாதாரமே மாற்றிவிடும்.


