இன்னமும் காமராஜர் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றார்.
இந்த முறை பழகிய ஒவ்வொருவரும் கேட்டார்கள்.
"இரண்டு பேர்கள் இருக்கின்றார்கள். இரண்டு மாதத்திற்கு ஏதாவது ஒரு நிறுவனத்தில் சேர்த்து விடுங்கள்" என்று.
அதாவது பள்ளி கோடை விடுமுறை முடிந்து விடுமுறையில் இருப்பவர்கள் இரண்டு மாதத்தில் ஏதோவொரு இடத்தில் வேலை செய்து வரக்கூடிய பணத்தை மேற்கொண்டு படிப்பதற்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
ஆனால் இங்கே பெரிய நிறுவனங்கள் இது போன்ற விசயங்களை ஊக்குவிப்பதில்லை. உள்ளே நுழையக்கூட முடியாது. நாம் எத்தகைய பதவியில் இருந்தாலும் அதற்கான வாய்ப்பை உருவாக்க முடியாது. இடையில் கிளம்பிப் போனவர்களின் மூலம் உருவாகும் பஞ்சாயத்துக்களை தீர்க்க அடுத்த இரண்டு மாதம் ஆகலாம்.
ஆனால் மிகச் சிறிய உள்நாட்டு தயாரிப்பில் கவனம் கொண்டு செயல்படும் நிறுவனங்களுக்கு இது போன்ற மாணவர்கள் தேவைப்படுவார்கள். சக்கையாக பிழிந்து இரண்டு மாதத்திற்குள் எலும்பாக மாற்றிவிடுவார்கள்.
பெட்ரோல் பங்கில் நிறைய பேர்கள் தென்பட்டார்கள். மாதம் 4000 சம்பளம். தங்கிக் கொள்ள இடமும் தினமும் மூன்று வேளை சாப்பாட்டுக்கு தினந்தோறும் 90 ரூபாயும் கொடுப்பதாக ஒரு பையன் சொன்னான்.
பெரிய உணவகங்களில் நிறைய புதிய தலைகள் தென்பட்டது. அங்கே மாதம் 6000 சம்பளமும் தங்கிக் கொள்ள இடமும் கொடுப்பதாகச் சொன்ன பையன் ஒவ்வொரு மேஜைக்கும் சென்று தண்ணீர் ஊற்றிக் கொண்டுருந்தான்.
அவன் விரலில் உள்ள காயத்தைப் பார்த்து என்னப்பா? என்று கேட்டேன்.
"பள்ளிக்கூடம் போகமாட்டேன் என்று சொன்னபோது என் அப்பா ஒரு கல்லை எடுத்து சுண்டு விரலில் தேய்த்த போது நகம் பிய்ந்து அப்படியே புண்ணாகி விட்டது" என்றான்.
"இப்ப இங்கே வேலைக்கு வந்துருக்கியே. கையில் பணம் புழங்க இனிமேல் பள்ளிக்கூடம் செல்ல மனம் வருமா?" என்றேன்.
"அண்ணே இது சும்மா என் செலவுக்கு. அப்பா கடலை வித்த பணத்தில் +1 க்கு பணம் கட்ட தனியாக எடுத்து வைத்துள்ளார்" என்றான்.
கள்ளக்குறிச்சியின் அருகே பக்கத்தில் உள்ள அந்த கிராமத்தில் வாழ்ந்து கொண்டிருந்த அந்த தகப்பன் எனக்கு காமராஜராக தெரிந்தார்.
தினமலரில் டாலர் நகரம்.
டாலர் நகரம் விழா நடப்பதற்கு முன்பே ஆங்கிலப் பத்திரிக்கையான தி ஹிண்டு வில் ஆச்சரியப்படக்கூடிய வகையில் டாலர் நகரம் புத்தகத்தைப் பற்றி என்னிடம் பேட்டி கண்டு எழுதியிருந்தார்கள்.
வீட்டில் மூத்தவர் என்னிடம் ஒரு பந்தயம் கட்டினார்.
தினமலரில் வந்தால் தான் நான் ஒத்துக் கொள்வேன் என்றார்.
அவர் 90 நாளுக்குள் வந்தாக வேண்டும் என்று காலக்கெடு வேறு விதித்திருந்தார். எல்லோரும் செய்யக்கூடிய அத்தனை பத்திரிக்கைகளுக்கும் புத்தக மதிப்புரை என்ற பகுதிக்கு அனுப்பி வைத்திருந்தேன்.
சென்ற வாரம் தினமலரில் வந்தது. ஊரில் இருக்கும் அவரை அழைத்து நான் தோற்று விட்டேன் என்று என்னிடம் வாங்கிச் சென்ற 500 ரூபாயை திரும்ப தந்தாக வேண்டும் என்ற போது பந்தயத்தில் தோற்ற நீங்க என்ன பெரிய எழுத்தாளர்? என்கிறார்.
மாலை மலரில் வந்த கட்டுரை.
தற்போதைய திருப்பூர் நிலவரம் குறித்து ஒரு கட்டுரை எழுதித்தாருங்கள் என்றார் நண்பர்.
அவருக்கு ஏற்கனவே இந்த தளத்தில் எழுதிய நம்பி கை வை என்ற கட்டுரையை கொடுத்து அதுவும் மாலை பத்திரிக்கையில் வந்த போதும் அதை சேமிக்க முடியாமல் போய்விட்டது.
இந்த முறை மாலை மலர் தொழில் மலரின் வெளிவந்ததை கவனமாக கேட்டு வாங்கி வந்து விட்டேன். நண்பர் என் மேல் உள்ள அக்கறையின் காரணமாக என் அனுமதியின்று டாலர் நகரம் புகைப்பட தொகுப்பில் உள்ள என் படத்தையும் கட்டுரையோடு சேர்த்து கொடுத்து ஏற்றுமதி ஆலோசகர் என்ற பட்டத்தையும் கொடுத்துள்ளார்.
நண்பர் வேறு சில வாக்குறுதிகளையும் கொடுத்துள்ளார். நன்றி நண்பா.
நண்பர் வேறு சில வாக்குறுதிகளையும் கொடுத்துள்ளார். நன்றி நண்பா.
இங்கே இப்போது இருக்கும் சூழ்நிலையில் யாருக்காவது ஆலோசனை சொல்லப் போனால் கழுத்தைப் பிடித்து வாசல் வரைக்கும் கொண்டு வந்து தள்ளி விட்டுத்தான் மறுவேலை பார்ப்பார்கள்.
ஜெர்மனியில் நடந்த மாநாட்டில் ஐரோப்பிய தேசங்களுக்கு இறக்குமதியாகும் ஆய்த்த ஆடைகளுக்கு பங்களாதேஷ் போல இனி வரி விதிப்பு இருக்காது. அதன் இறுதிகட்ட பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்து விடும் என்றார்கள்.
பேச்சு மூச்சே காணோம்.
ஆச்சரியம் தந்த படங்கள்.
நீங்கள் பார்த்த பழைய படங்களை கடந்த இரண்டு வாரத்தில் பார்க்க எனக்கு வாய்ப்பு அமைந்தது. பரதேசி, சுந்தரபாண்டியன், விஸ்வரூபம்,ஹரிதாஸ்
ஹரிதாஸ் படத்தில் வரும் ஆட்டிஸம் குறித்து பாலபாரதி எழுத்தை படித்தபின்பு தான் இப்படி ஒரு விசயம் இருக்கின்றது என்பதே எனக்குத் தெரிந்தது.
இரட்டையர் பிறந்த போதும், தொடர்ந்து வந்த மூன்று ஆண்டுகள் ஒருவரை காப்பாற்ற நாங்கள் பட்ட பாடுகள் என்று ஒவ்வொன்றும் அந்த படத்தைப் பார்த்த போது மனதில் வந்து போய்க் கொண்டேயிருந்தது.
அசாதாரணமான மனிதர்கள் தங்களது அசாத்தியமான தன்னம்பிக்கையின் மூலம் தான் இங்கே பலவற்றையும் சாதிக்க முடிகின்றது.
ஊரில் இருக்கும் அவரிடம் "என்னம்மா அப்பாக்கிட்ட பேசவே இல்லையே " என்றேன். "நாம் ரொம்ப பிசியா இருக்கேம்ப்பா..... நான் வீட்டுக்கு வந்ததும் உங்கிக்கிட்டே பேசுறேன்" என்கிறார்.
+++++++
விஸ்வரூபம் பார்த்ததும் மீண்டும் ஒரு முறை நம்ம அகில உலக அசின் பேரவைத்தலைவர் எழுதிய விபரங்களை பார்க்கச் சென்றேன்.
உலக அரசியலை சொட்டுச் சொட்டாக வடித்து இருந்தார்.
படிக்க சுவராசியமாகவே இருந்தது. எனக்கு கமல் என்றே அந்த பெயரே போதும் என்கிற அளவுக்கு அந்த படம் திருப்தியைத் தந்தது.
சுந்தரபாண்டியனில் தெற்கு மாவட்டங்களின் பழக்க வழக்கங்களை இன்னமும் பல இடங்களில் சொல்லியிருக்கலாமோ என்று எனக்குத் தோன்றியது.
பள்ளிக்கூடத்தில் அப்பாஸ் என்பவரை கிண்டலடிக்க அப்போது பிரபல்யமாக இருந்த நடிகை ரேவதியை கண்டபடி அவர் காதில் கேட்கும் வண்ணம் கிண்டலடிப்போம். அவர் அடிக்க ஓடி வருவார். அந்த அளவுக்கு ரேவதி மேல் அப்பாஸ் பைத்தியமாக இருந்தார். நீண்ட நாளைக்குப் பிறகு ரேவதி போல இந்த கும்கி மேனன் வருவார் என்று நினைக்கின்றேன்.
பரதேசி படம் பார்த்தவுடன் ஒரு பயம் வந்து விட்டது. வசூல் தந்த படமா என்று யோசிக்க வைத்தது.
இலங்கையில் வேலை செய்ய அழைத்துச் சென்ற தோட்டத் தொழிலாளர்கள் பற்றி ஈழம் சம்மந்தமாக பல புத்தகங்களை படித்துக் கொண்டே வந்த போது ஆராய்ச்சி கட்டுரை பாணியில் எழுதப்பட்ட பல முனைவர் கட்டுரைகளை படிக்க வாய்ப்பு கிடைத்தது.
மூன்றாண்டுகளுக்கு முன்னால் படித்த போதிலும் இன்று பாதி விபரங்கள் நினைவில் இல்லை. படத்தை பார்த்த போது ஒளிப்பதிவாளர் மற்றும் கலை இயக்குநர் தான் என் மனக்கண்ணில் வந்து போனார்கள்.
பயந்தபடியே இணையத்தில் பரதேசியின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் விபரங்கள் எந்த அளவுக்கு இருந்தது என்பதைப் பார்த்த போது திருப்திகரமாக இருந்தது.
எனக்கு எப்போதும் பிடித்த நடிகைகள் காந்திமதி மற்றும் வடிவுக்கரசி. அதே போல தற்போது உள்ள நடிகர்களில் பிரகாஷ்ராஜ் அவர்களை ரொம்பவே பிடிக்கும்.
குறிப்பாக வாரிசு நடிகர்களை ரொம்பவே கவனித்துக் கொண்டு வருவதுண்டு. அந்த வகையில் சிவகுமார் மகன்கள் மட்டும் நம்பிக்கையை தந்து கொண்டு இருக்கின்றார்கள். வளர்ப்பும் முக்கிய காரணம் என்பதை எடுத்துக் கொள்ள வேண்டும்.
கருத்தம்மா படத்தில் நடித்த பெரியார்தாசன் (தற்போது இஸ்லாமிய பெயராக மாற்றிக் கொண்டு விட்டார்) அவர்களைப் பார்த்த போது அவரைப் பற்றி அன்று ஒன்றும் தெரியாமல் இவர் பிறவி நடிகராக இருப்பாரோ என்கிற அளவிற்கு ஒரு தாக்கத்தை உருவாக்கினார். அதே போல அதர்வாவை இயக்குநகர் பாலா வேலை வாங்கியுள்ளார்.
ஆனால் முரளி மகன் அதர்வா பேசிய பல கலந்துரையாடல் நிகழ்ச்சிகளை பார்த்த போது அந்த அளவுக்கு மேலே வருவார் என்ற நம்பிக்கை எனக்கில்லை.
திறமையான இயக்குநர்கள் மூலம் தான் இங்கே பல நடிகர்களுக்கு நடிப்பே வருகின்றது.
தமிழ்நாட்டு மக்களின் அரசியல் விருப்பங்களைப் போல காலம் தோறும் மாறிக் கொண்டு வரும் ரசனைகளையையும் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு வித்தியாசமாக/வியப்பாகவே உள்ளது.
மரணத்தைப் பற்றி ரொம்பவே யோசிக்க வைத்து விட்டார்.
இதைப்பற்றி ஒரு தனியான பதிவு எழுதியுள்ளேன்.
தன்னைப்பற்றி தன் விபரங்களைப் பற்றி வெளியே தெரியாத அளவுக்கு வைத்திருந்த இவரின் புகைப்படத்தை நண்பர் பிரபாகர் தனது கூகுள் ப்ளஸ் ல் வெளியிட்டு இருந்தார்.
இன்று அவர் இறந்து ஏழு நாட்கள் முடிந்து விட்டது.
இன்றைய தினம் அவருக்கு துக்கம் அனுதிஷ்டிக்கும் தினமாக பதிவுகள், முகநூல் போன்றவற்றில் எதுவும் எழுதாமல் நினைவு தினமாக கடைபிடிப்போம் என்று நண்பர்கள் சொல்லியிருந்தார்கள்.
ஆனால் இந்த சமயத்தில் அவரின் இந்த புகைப்படத்தை போட்டு தேவியர் இல்லத்தின் அஞ்சலியை அவரின் ஆத்மாவுக்கு சமர்ப்பிக்கின்றேன்.
இது வரை இந்த தளத்தில் நூல் விமர்சனம் என்கிற ரீதியில் 6 பதிவுகளுக்கு மேல் எழுதியுள்ளேன்.
முக்கியமானவர் - முனைவர் மு. இளங்கோவன்
வருகின்ற ஜுன் 3 அன்று எனது வலையுலக பயணத்தின் ஐந்தாம் ஆண்டு தொடங்குகின்றது.
அவ்வப்போது சிறிய அளவில் முடிந்தவரைக்கும் என்னை மாற்றிக் கொண்டே வருவதன் தொடர்ச்சியாக இந்த முறையும் என் எழுத்து நடையில், எழுதும் விசயங்களில் சில உருப்படியான விசயங்களை இனி கடைபிடிக்க வேண்டும் என்று மனதில் வைத்துள்ளேன். காரணம் கடந்த இரண்டு வாரமாக ஒரு தளத்தை தொடர்ச்சியாக வாசிக்க நேரம் கிடைத்தது. .
இந்த சமயத்தில் முதல் முதலாக ஒரு தளத்தைப் பற்றி அவரின் எழுத்தைப் பற்றி விமர்சன பாணியில் எழுத வேண்டும் என்று தோன்றியுள்ளது.
அந்த அளவுக்கு மனதில் ஒரு புயலை ஒருவர் கிளப்பி விட்டார்.
அது குறித்து அடுத்த பதிவில் எழுதுகின்றேன்.