Showing posts with label இந்தியக்கல்வி முறை. Show all posts
Showing posts with label இந்தியக்கல்வி முறை. Show all posts

Sunday, July 28, 2013

இதற்கு தானே ஆசைப்பட்டாய்?

இறுதியாக கேள்வி பதிலாக இந்த கல்வித்தொடர் பகுதியை முடிவுக்கு கொண்டு வருவோம். 

இந்த தொடரில் மாணிக்கம் கந்தசாமி மற்றும் நிரஞ்சன் போன்றவர்கள் சில கோரிக்கை வைத்துள்ளனர். வேறொரு சமயத்தில் அவற்றை என் பார்வையில் அனுபவ பகிர்வாக எழுதுகின்றேன்.

இந்த தொடர் நான் எழுத காரணமாக இருந்தவரும், இதைப் பற்றி அதிக அளவு என்னுடன் பல மணி நேரம் உரையாடி எனக்கு புரிதலை உருவாக்கியதோடு முக்கிய ஆவணங்களை அனுப்பிய பிகேஆர் என்கிற ராமச்சந்திரனுக்கு என் நன்றி.

மொழி என்றால் ?

ஒருவரின் அறிவு நிலைப்பட்டுள்ளது என்பதை நமக்கு உணர்த்துவதே மொழி தான். குழந்தை  பேசத் தொடங்கும் பொழுது  உறுப்புகள் வளர்வதைப் போல அதன் சிந்தனைகளும் வளர தேடலும் தொடங்கி விடுகின்றது. ஒன்றைத் தேடத் தொடங்கும் போது அறிவும் வளரத் தொடங்கி விடுகின்றது.

அறிவின் அடிப்படை தேடல். தேடலின் அடிப்படை சிந்தனை.  சிந்தனையின் அடிப்படை மொழி. 

மொழியின் முக்கியத்துவம்?

தனி மனிதனின் வளர்ச்சியை அவன் வாழும் சூழ்நிலைகள் தீர்மானிக்கின்றது. ஒருவன் எந்த இடத்தில் வாழ்கின்றானோ அதற்கு தகுந்தாற் போல அவனது எண்ணம், நோக்கம், செயல்பாடுகள் என்று ஒவ்வொன்றும் படிப்படியாக மாறிவிடுகின்றது.

கடல்புறப் பகுதியில் மலைப்பிரதேசங்களில்,கிராமப்புறங்களில், சிறிய மற்றும் பெரிய நகர்புறங்களில்,வெளிநாடுகளில் உள்ள வாழ்க்கை வெவ்வேறாக இருப்பதால் மொழி தொடர்பு ரீதியாக முக்கியத்துவம் பெறுகின்றது.   

ஒரு இடத்தில் பேசப்படும் மொழி வேறோரு அடுத்த இடத்தில் வேறொரு விதமாக உள்ளது. ஒரே மாநிலத்திற்குள் மாவட்டம் தோறும் வித்தியாசமான வட்டார வழக்கு மொழிகள் இதன் காரணமாகவே உருவாகின்றது.  குறிப்பிட்ட   பழக்கவழக்கங்கள், பண்பாட்டு கலாச்சார முறைகள் என அனைத்தும் புவியியல் அமைப்பின்படியே தோன்றிவிடுகின்றது.

மொழி என்பது வெறுமனே தொடர்பு சாதனம் மட்டுமல்ல. தலைமுறை தலைமுறையாக  ஒருவர் வாழ்ந்த வாழ்க்கையின் தடங்களை கடத்திச் செல்ல உதவுவதும் இந்த மொழியே.

தாய்மொழியின் சிறப்பு?

தாய்மொழியின் முக்கிய சிறப்பே குழந்தைகள் ஒன்றோடு ஒன்றை ஒப்பிட்டுக் கொள்ள உதவுகின்றது.  படித்த கல்வியின் மூலம் பார்க்கும் காட்சிகளை ஒன்றாக சேர்த்து பார்க்க உதவுகின்றது.அதன் மூலம் தோன்றும் கேள்விகளுக்கு பதில் தேடும் போது அது அறிவை விசாலமாக்குகின்றது. இதனால் எல்லாவற்றையும் எளிதில் கற்றுக் கொள்ள முடிகின்றது. தாய்மொழியில் கற்கும் போது குழந்தைகள் ஆசிரியர்களுடன் எளிதில் உரையாட முடிகின்றது.  உரையாடும் போது நம்பிக்கை உருவாகின்றது. பயம் நீங்க கல்வி என்பது ஆர்வத்துடன் செய்யப்படும் ஒரு இயல்பான கடமையாக மாறி விடுகின்றது.

தாய்மொழியின் முக்கியத்துவம்?

மொழியென்பது ஒரு தொடர்பு சாதனம் மட்டுமல்ல. அது அறிவுக்குரியது என்ற எல்லையோடு மட்டும் நிற்பதல்ல.  தாய்மொழி என்பது நாம் வாழும் சூழ்நிலையில் உள்ள பழக்கவழக்கங்கள்,கலாச்சார நடைமுறைகள் அனைத்தையும் அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்க உதவுகின்றது. ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு கலாச்சாரத்தை வைத்துத் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றது.  

அது அங்குள்ள சூழ்நிலையின் அடிப்படையைக் கொண்டே உருவாகின்றது. வாழும் சூழ்நிலை வேறு. கற்பிக்கும் சூழ்நிலை வேறு என்பதாக வளரும் மாணவனின் அறிவு குழப்பத்தில் தொடங்கி குழப்பத்தோடு வாழ வேண்டியதாக உள்ளது. 

மாற்று மொழி சொல்லும் கலாச்சாரத்தை படிக்கும் மாணவனின் பெற்றோர்களின் வாழ்க்கை ஒரு விதமாகவும் மாணவனின் சிந்தனைகள் வேறுவிதமாகவும் மாறத் தொடங்கி விடுகின்றது.

இந்தியாவில் கல்வி?

இங்கே கல்வி என்பதை குழப்பதோடு தான் பார்க்கப்பட்டு வருகின்றது. கற்றுக் கொள்வதற்கும் சிந்திப்பதற்கும் இடையே உள்ள வித்தியாசங்களைப் பற்றி எவரும் புரிந்து கொள்ள தயாராக இல்லை.  அதை முறைப்படி புரியவைக்கவும் எவரும் விரும்பவும் இல்லை .  

கல்வியில் இரண்டு வகைகள் உள்ளது. 

ஒன்று தெரிந்து கொள்வதற்காக கல்வி.  மற்றொன்று சிந்திப்பதற்கான கல்வி.

ஒரு விசயத்தை  படித்து தெரிந்து கொண்டு அதை அப்படியே எழுதி விட்டால் ஆசிரியர் எதிர்பார்க்கும் மதிப்பெண்கள் மாணவர்களுக்கு கிடைத்து விடும். ஆனால் அந்த விசயத்திற்கு முன்னால் பின்னால் உள்ள எந்த புரிதலும் அந்த மாணவனுக்கு தேவையில்லை என்பதான கல்வி தான் இந்தியாவில் உள்ளது.

கல்வி கற்றும் சிந்திக்கத் தெரியாதவர்களை உருவாக்குவதில் தான் நாம் வெற்றியடைந்துள்ளோம்.

இந்தியாவில் ஆங்கில மொழிக்கல்வி வளர முக்கிய காரணமாக உள்ளதன் பட்டியல்.

1. இந்தியாவில் தொடக்கத்தில் இருந்த வறுமை பலரையும் கல்வி கற்க விடாமல் பெரும் தடையாக இருந்தது.

2. கல்வியென்பது குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே என்பது போன்ற காரணங்கள் இந்த தடைகளை மேலும் வளர்த்தது.

3ஆங்கிலேயர்கள் உருவாக்கிய நிர்வாக அமைப்பில் ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கு மட்டுமே வேலை என்ற காரணிகள் ஆங்கிலத்தை வளர்க்க முக்கிய காரணமாக இருந்தது.

4. ஆங்கிலத்தினால் வசதியான வாழ்க்கை பெற்றவர்கள் அதுவே சரியென்று சொல்ல ஆங்கிலேயர்கள் சென்ற பிறகும் இங்கே கல்வி முறையில் எவரும் மாற்றம் கொண்டுவர விரும்பவில்லை.  மேலும் மக்களின் வாழ்க்கை முறை ஒரு விதமாகவும் அந்த மக்களை ஆள்கின்றவர்களின் அலுவல் மொழி வேறொன்றாகவும் இருக்க மக்களுக்கும் ஆட்சியாளர்களும் மிகப் பெரிய இடைவெளி இயல்பாகவே உருவாகத் தொடங்க அதுவே ஊழல் முதல் எதிர்த்து கேள்வி கேட்ட முடியாது என்கிற நிலை வரைக்கும் கொண்டு வந்து நிறுத்திவிடுகின்றது.  

காலம் முழுக்க எளியவர்களுக்குண்டான உரிமைகள் மறுக்கப்படுவதென்பது இயல்பானதாகவும் மாறிவிடுகின்றது.  மறுக்கப்பட்டவர்கள் இந்த மொழிப் பிரச்சனையின் காரணமாக மருகிக் கொண்டே வாழ வேண்டியதாகவும் உள்ளது.

5. நாகரிகம் என்ற பெயரில் வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகள் அதிகமாக அடையக்கூடிய வசதிகளுக்கு எது உடனடியாக பயன்படுகின்றதோ அதுவே மக்களும் தேவையென கருதத் தொடங்க கல்வி முதல் பழக்கவழக்கங்கள் என ஒவ்வொன்றும் மாறத் தொடங்கியது. இதன் மூலம் தங்கள் குழந்தைகள் ஆங்கிலத்தில் கல்வி கற்றால் தான் வளமான வாழ்க்கை வாழ முடியும் என்ற நம்பிக்கை பெற்றோர்களின் மனதில் ஆழமாக பதியத் தொடங்கியது.

6. பொருளாதார ரீதியாக வளர்ச்சியடைந்த நாடுகளை மக்கள் வாழத் தகுந்த இடம் என்ற நம்பிக்கை உருவாக அந்தந்த நாடுகளின் மொழிகளை தங்கள் குழந்தைகள் கற்றால் எளிதில் அங்கே வேலை கிடைக்கும் என்ற எண்ணம் வலுப்பெறத் தொடங்கியது.

7.இன்று இந்தியாவில் ஒருவனது பொருளாதாரமே அனைத்தையும் தீர்மானிக்கக்கூடிய சூழ்நிலையில் இருப்பதால் ஒவ்வொருவரும் சூழ்நிலைக் கைதியாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.  மொழிக்கும் அறிவுக்கும் உள்ள வித்தியாசம் மறைந்து விட்டது. முந்தியவர்களுக்கு முன்னுரிமை என்பது இயல்பானதாக மாறிவிட்டதால் அவரவர் தாய்மொழி எண்ணம் பின்னுக்குப் போய்விட  பிழைக்க ஒரு மொழி என்கிற நிலைக்கு வந்துள்ளார்கள்.

8. இன்று வரையிலும் மேலைநாடுகளில் அருகாமைப் பள்ளி என்பது ஒரு முக்கியமான நடைமுறைக் கொள்கையாகவே வைக்கப்பட்டுள்ளது.  ஒரு குறிப்பிட்ட இடத்தில் வாழ்பவர் வேறொரு இடத்தில் கொண்டு போய் தங்கள் குழந்தைகளை சேர்கக வேண்டும் என்றால் அதற்கு சரியான காரணங்கள் இல்லாவிடில் வாய்ப்பு மறுக்கப்படும்.

இதன் காரணமாக அந்தந்த பகுதியில் இருப்பவர்களுக்கு முன்னுரிமையும், பள்ளியில் கூட்ட நெரிசலும் தவிர்க்கப்படும்.  இங்கே அந்த பழக்கம் இல்லை என்பதோடு அப்படியெல்லாம் உண்டா? என்கிற வினோத கேள்வி தான் நம்மை வந்து தாக்கும்?  இதே போல இங்கே உருவாகும் போது அரசாங்கம் கட்டாயம் குறிப்பிட்ட பகுதிகளில் தேவைப்படும் பள்ளிகளை திறந்தே ஆக வேண்டும். 

இங்கே சட்டம் என்பது பட்டம் போல பறந்து கொண்டிருப்பதால் வெறுமனே எழுதி ஆறுதல் பட்டுக் கொள்ளலாம். தவறில்லை.

தாய்மொழி வளர அரசாங்கம் செய்ய வேண்டிய முக்கிய கடமைகள்.

1. கிராமத்து பள்ளியில் படிப்பவர்களுக்கு உயர்கல்வி முதல் வேலைவாய்ப்பு வரைக்கும் ஒவ்வொரு இடங்களிலும் முன்னுரிமை.

இப்போதுள்ள இடஒதுக்கீடு போல ஒவ்வொரு துறையிலும் குறிப்பிட்ட சதவிகிதம் இவர்களுக்கே என்கிற சட்ட தீர்மானம் கொண்டு வந்து விட்டாலே பாதி பிரச்சனைகள் முடிவுக்கு வந்து விடும்.

2. அரசுப்பணி என்பது அரசுபள்ளியில் படித்தவர்களுக்கு மட்டுமே.

3 அரசியல்வாதிகளின் குழந்தைகள் அரசு பள்ளியில் படிக்க வைக்காவிட்டால் அவர்கள் பதவியில் இருக்க முடியாது என்கிற நிலை.

4. ஒருவர் அரசு ஊழியராக இருப்பவர்கள் தங்கள் குழந்தைகள் அரசு பள்ளியில் குறைந்தபட்சம் தொடக்க கல்வி வரைக்கும் படிக்க வைக்காவிட்டால் அவர்களின் வேலை பறிபோய்விடும்.

5.நகர்புறங்களில் உள்ள அரசு பள்ளிகளின் எண்ணிக்கையை குறைத்து புறநகர்களில், கிராமங்களில் அதிக அளவு உருவாக்குதல். நகர்புறங்களுக்கு குடும்பமே இடப்பெயர்வுக்கு இது முடிவு கட்டும். 

6.கல்வி அமைப்பு என்பதை தன்னாட்சி பெற்ற நிர்வாகமாக மாற்ற வேண்டும். இரண்டு வருடத்திற்கொரு முறை உலக மாறுதல்களுக்கேற்ப ஏற்ப பாடத் திட்டங்களை மாற்றுதல். இந்தியா முழுமைக்கும் பொதுக்கல்வி திட்டம் ஒன்றை உருவாக்குதல். அந்தந்த மாநில கல்விக்குழுக்கள் மூலம் ஒப்பு நோக்குதல். தொடக்க கல்வி என்பது அந்தந்த மாநில மொழிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம். 

7.பத்தாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரையில் உள்ள தற்போதையை சூழ்நிலையை முற்றிலும் மாற்றி விட்டு மூன்று வகுப்புகளையும் கல்லூரி போல மூன்றாண்டு கல்வித்திட்டமாக மாற்றுதல். ஒன்பதாம் வகுப்போடு மொத்த பாடங்களையும் கற்பிப்பதை நிறுத்தி விட்டு பத்து முதல்  அடுத்த மூன்றாண்டுகளுக்கு ஒரு மாணவன் எந்த துறையில் தனது மேற்கல்வியை படிக்க விரும்புகின்றானோ அந்த துறை சார்ந்ததை மட்டும் கற்பித்தல்.  இந்த மூன்றாண்டு பாடத்திட்டத்தில ஆங்கிலம் மற்றும் மாநில மொழியில் கற்க வாய்புகளை உருவாக்கிக் கொடுத்தல்.

வக்கீல் படிக்க விரும்புவனுக்கு கணக்கு தேவையிருக்காது.  மென்பொருள் துறையில் சேர விரும்புவனுக்கு வரலாறு தேவையிருக்காது. கல்லூரியில் நுழையும் பொழுதே அவனது துறை சார்ந்த கல்வி எளிதாக மாறி விடும். அன்றாட வாழ்க்கைக்கு தேவைப்படும் அத்தியாவஸ்யமான துறைகளை ஒரு பாடமாக வைக்கப்படும் போது எளிய குடும்பத்தில் இருந்து வருபவர்களுக்கு இந்த துறை வரப்பிரசாதமாக இருக்கும். கைத்தொழில் ஒன்றை கற்றுக் கொள் என்பது நிஜமாகவே சாத்தியமாகும்.

8 ஒவ்வொரு வருடமும் தனியார் அரசாங்க பள்ளிகள் என்று பாரபட்சமில்லாது ஆசிரியர்களின்  தகுதியை தேர்வு வைத்து சோதித்தல். தகுயில்லாதவர்கள் மீண்டும் ஒரு முறை வாய்ப்பளித்து அதிலும் தேர்ச்சியடையவில்லை என்கிற பட்சத்தில் எங்கும் கல்விப்பணி ஆற்ற தடைவிதித்தல். 

தற்போது தமிழ்நாடு அரசாங்கம் அரசுபள்ளியில் கொண்டு வந்துள்ள ஆங்கில வழிக்கல்வி?

உறுதியாக விரைவாக தோற்றுவிடும் சாத்தியக்கூறுகள் தான் அதிகமுள்ளது. நமது மக்கள் இலவச மனப்பான்மையை விரும்பும் காரணத்தால் இன்னும் சில ஆண்டுகள் அதனை விரும்புவார்கள்.இதற்கு மேலாக தகுதியற்ற ஆசிரியர்களால் தங்களின் குழந்தைகளின் வளர்ச்சியடையாத திறமைகளைக் கண்டு மீண்டும் தனியார் பள்ளி பக்கமே ஒவ்வொரு பெற்றோர்களும் வரத் தொடங்குவர்.

தற்போதைய சூழ்நிலையில் மாணவர்களுக்கு தேவையான மொழிகள்.

இந்தியாவிற்குள் எங்கு வேண்டுமானாலும் வாழ வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு நிச்சயம்  தமிழோடு ஹிந்தி ஆங்கிலம் அவசியம் தேவை. தமிழ்நாட்டிற்குள் மட்டும் வாழவேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்களுக்கு தாய்மொழியோடு ஆங்கிலமும் அவசியம் தேவை.

மொழியறிவை வளர்க்கும் காரணிகள்.

சூழ்நிலை தான் முக்கிய பங்கு வகிக்கின்றது. அரசு பள்ளியில் படித்தவர்கள் அமெரிக்காவிற்கு தங்கள் கல்வித்தகுதி அடிப்படையில் சென்ற போதிலும் அங்கு சென்றதும் இயல்பான் அமெரிக்க ஆங்கிலமென்பது அவர்களிடம் வந்து விடுவதில்லை. அங்குள்ள சூழ்நிலை நெருக்கிக் தள்ள இதுவொரு இயல்பான பழக்கமாக மாறிவிடுகின்றது.  

ஐந்து பரிச்சை எழுதி ஹிந்தியில் தேர்ச்சியடைந்தவர்கள் எவரும் நல்ல விதமாக ஹிந்தி பேச முடிவதில்லை. அதுவே மும்பையில் ஆறு மாதங்கள் கூலித் தொழிலில் சேர்ந்து ஹிந்தியை வெளுத்து வாங்கியவர்கள் அதிகம். என் பிள்ளை ஆங்கிலம் மட்டுமே பேச வேண்டும் என்று விரும்பும் பெற்றோர்கள் முதலில் செய்ய வேண்டியது வீட்டுக்குள் குழந்தைகளிடம் எளிய ஆங்கிலத்தில் பேசி பயிற்சியை தொடங் வேண்டும். படிப்பறிவு இல்லாத பெற்றோர்கள் அதற்கான சூழ்நிலையை தங்கள் குழந்தைகளுக்கு தனிப்பட்ட முறையில் உருவாக்க வேண்டும்.

இது செலவு பிடிக்கும் சமாச்சாரம் என்றால் மாணவன் கடைசியில் செல்லாக்காசாகி விடுவதை தவிர்க்க முடியாது. இன்று கல்லூரி வரைக்கும் ஆங்கில வழிக்கல்வியில் படித்த போதிலும் திக்கி திணறிக் கொண்டிருக்கும் மாணவர்கள் போலத்தான் ஆங்கிலம் என்பது பின்னங்கால் பிடறி தெறிக்க ஓட வைக்கும் பூச்சாண்டியாக இருக்கும். ஆங்கிலக் கல்விக் கூடத்தில் தங்கள் குழந்தைகள் படித்தால் ஆங்கிலத்தை நன்றாக பேச முடியும் என்பது விழலுக்கு இறைத்த நீரே.

என் குழந்தை அலுவலக வேலையில் மட்டுமே அமர வேண்டும் என்பவர்களுக்கு மட்டுமே இந்த ஆங்கில மொழி அவசியம் தேவை. ஆனால் இங்கே பிழைக்க ஆயிரம் வழிகள் உண்டு. பொருளீட்ட பல தொழில்கள் உண்டு என்பதையும் ஒவ்வொரு பெற்றோர்களும் உணர்ந்திருக்க வேண்டும்.

தாய்மொழியறிவு?

மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட மிகப்பழமையான தமிழ்மொழி ஒவ்வொரு காலகட்டத்திலும் வெவ்வேறு விதமாக பேச்சு எழுத்து மொழியில் மாறி வந்து கொண்டிருந்த போதிலும் இன்றைய நவீன விஞ்ஞான உலகத்திலும் இது அழிந்து போய்விடவில்லை.

ஆனால் ஒவ்வொரு சமயத்திலும் அழிந்து போய்விடப் போகின்றது என்று கூச்சலிட்டுக் கொண்டிருந்தவர்களும்,இன்றுவரையிலும் சொல்லிக் கொண்டு இருப்பவர்களும் இருந்த போதிலும் தமிழ்மொழியின் வளர்ச்சி நின்று போய் உள்ளதே தவிர ஆனால் அது அழிந்தே போய்விடும் என்ற எண்ணத் தேவையில்லை. 

500 வருடங்களில் உருவான ஆங்கில மொழியில் கூட ஷேக்ஸ்பியர் காலத்து ஆங்கிலமென்பது இன்று இல்லை.ஆனால் மாறுதல்களை கவனமாக ஆவணப்படுத்தி முறைப்படியான மாறுதல்களை ஏற்றுக் கொண்டே தான் ஆங்கிலம் இன்றும் வளர்ந்து கொண்டே இருக்கின்றது.  ஆனால் இங்கே தமிழ் மொழி வளர வேண்டும் என்பவர்கள் தான் தமிழுக்கு எதிரியாகவும் இருப்பதால் அதன் விசால வீச்சு இன்று குறுகிய சந்துக்குள் நிற்கும் அளவிற்கு மாறியுள்ளது.

தாய் மொழியை ஆதரிப்போம் சொல்கின்ற அத்தனை பேர்களும் வசதியான வளமான வாழ்க்கை கொண்டிருப்பவர்கள். கவனமாக இரட்டை முகமூடி அணிந்தவர்கள். அவர்கள் வாழும் வாழ்க்கை மேலைநாட்டு கலாச்சாரத்திலும் பேசும் வார்த்தைகள் மட்டும் இந்திய கலாச்சாரத்திலும் இருப்பதால் மக்களின் நம்பகத்தன்மை அடியோடு மாறி நாமும் பிழைக்க வேண்டும் என்று ஒவ்வொருவரும் பிழைப்புவாதிகளாக மாறிக் கொண்டேயிருக்கின்றனர்.

இப்போதைய சூழ்நிலையில் பேசும் மொழியை வைத்தே ஒருவனின் தகுதியை எடை போடும் சூழ்நிலையில் காலச் சக்கரம் நம்மை கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. பெரும்பான்மையான முட்டாள்களின் மத்தியில் வாழ வேண்டிய சூழ்நிலையில் அந்த முட்டாள்தனத்தையே ஏற்றுக் கொள்ள வேண்டிய சூழ்நிலையையும் இந்த காலச்சக்கரம் உருவாக்கியிருப்பது வினோத முரண்.

ஆட்சியில், அதிகாரத்தில் இருப்பவர்கள் பெரும்பான்மையினர் வறுமையைப் பற்றி அறியாத  தங்கஸ்பூன் கோமகன்களாக இருப்பதால் எளியவர்களின் வாழ்க்கை குறித்தோ, அவர்களின் அடிப்படை வசதிகள் குறித்தோ யோசிக்க முடியாத சூழ்நிலையில் வாழ்வதால் எளியவர்களுக்ககான கல்வி உரிமை மறுக்கப்பட்டுக் கொண்டே வருகின்றது.  அப்படியே உரிமை உருவானாலும் அதை அவர்கள் அடைய முடியாத உயர்த்தில் வைத்து தான் பாதுகாத்துக் கொண்டிருக்கின்றார்கள்.  

அடைய முடியாத லட்சியத்திற்கு இடையூறாக இருப்பது இந்த தாய்மொழியே என்று ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையில் முதலில் பலிகொடுப்பது தமிழ்மொழியே.

நம்மால் செய்யக்கூடியவை?

குழந்தைகள் ஆசிரியரோடு இருக்கும் நேரமென்பது ஏறக்குறைய எழு மணிநேரம் மட்டுமே.

ஒரு நாளின் மற்ற பொழுதுகள் அனைத்தும் பெற்றோர்களுடன் தான் குழந்தைகள் இருக்கின்றார்கள்.  முதல் ஆசிரியரே பெற்றோரே. மொழியறிவு, தாய்மொழியறிவு, பழக்கவழக்கங்கள் போன்ற அனைத்துக்கும் காரணமாக இருப்பவர்கள் பெற்றோர்களே.  ஆனால் நடைமுறை வாழ்க்கையில் நகர்புற கணவன் மனைவியும் இருவரும் பொருள் ஈட்டச் செல்ல மாணவர்கள் கண்டதையும் கற்றுக் கொள்ளத் தொடங்கி விடுகின்றனர். 

இதற்கு மேலாக வாசிப்பு என்பது அது பள்ளிக்கூட பாடங்கள் மட்டுமே என்கிற பெற்றோர்கள் இன்று வரையிலும் அதிகமாக இருப்பதால் குறுகிய புத்தியுள்ள சமூகம் விரைவாக வளர்ந்து கொண்டேயிருக்கின்றது.

வெளிநாடுகளில் வாழ்பவர்களுக்கு தங்கள் குழந்தைகள் வெளியே வந்தால் பல நாட்டு குழந்தைகளுடன் பழக வேண்டிய சூழ்நிலையில் பத்து சதவிகிதம் கூட தாய்மொழியின் அவசியம் தேவைப்படாது.  தங்கள் மாநிலங்களை விட்டு மற்ற மாநிலங்களிலும் வாழ்பவர்களுக்கு அங்கே உள்ள மாநில மொழி தான் அவசியம் தேவையாக இருக்கும்.

ஆனால் தமிழ்நாட்டில் வாழ்பவர்களுக்கு என்ன குறைச்சல்?

அவரவர் வாழ முடியாத தன்மையை, அடைய முடியாத லட்சியத்தை, அனுபவிக்க முடியாத சந்தோஷத்தை மனதில் வைத்துக் கொண்டு உங்கள் அழுத்தங்களை குழந்தைகளின் மேல் காட்டும் போதும் அவர்கள் படித்த மேலைநாட்டு கலாச்சாரக்கல்வியின்படி உங்களை ஆதரவற்றோர் இல்லத்தில் கொண்டு போய் விடுவது தான் கடைசியாக நடக்கும்.......

தவறு அவர்கள் மேல் இல்லை.  நீங்கள் தொடங்கி வைத்தீர்கள். அவர்கள் முடித்து வைக்கின்றார்கள்.

இது முடிவே இல்லாத சுழற்சி.

-)(-

"நாம் ஆளுகின்ற லட்சக்கணக்கான மக்களுக்கும் நமக்கும் இடையே இணைப்பாகச் செயல்பட ஒரு வகுப்பினரை நாம் உருவாக்கிட வேண்டும். இந்த வர்க்கத்தினர் ரத்தத்தாலும் நிறத்தாலும் இந்தியர்களாகவும், ரசனையில், கருத்துக்களில், நெறிமுறைகளில், அறிவில் ஆங்கிலேயர்களாகவும் விளங்கவேண்டும்."     

 - 1835 ல் இந்தியக் கல்வித் திட்டத்தை உருவாக்கியபோது மெக்காலே எழுதியதில் இருந்து....

இந்த தொடரின் மொத்த பதிவுகள்