Friday, December 24, 2021

ஆதார் எண் வாக்காளர் அடையாள அட்டை எண் இணைப்பு (முழுமையான விபரங்கள்)

நீங்கள் மத்திய மாநில அரசுகளை எப்படிப் பார்ப்பீர்கள் என்று எனக்குத் தெரியாது? கட்சி ரீதியாக? கொள்கை ரீதியாக? அல்லது அவர்கள் செய்யும் நிர்வாக ரீதியாக.  நான் எப்போதும் நான் பணிபுரிந்த வருடம் 100 கோடி வரவு செலவு செய்த நிறுவனத்தோடு மாநில அரசையும், 3000 கோடி அளவுக்கு உயர்ந்துள்ள மற்றொரு நிறுவனத்தை மத்திய அரசுடன் அவ்வப்போது ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்வதுண்டு.  

நிர்வாக அமைப்பு வேறு. எதிர்பார்ப்புகளும் வேறு.  





ஆனால் இரண்டு இடங்களிலும் தரவு என்பது மிக மிக முக்கியம். துறை சார்ந்த கணக்கீடுகள், மாதவாரியான லாப நட்ட கணக்கு என்பதற்கு அப்பாற்பட்டு நிறுவனம் எந்தத் திசையில் செல்கின்றது என்பதனை உணர முதலாளிக்குக் கட்டாயம் தரவு முக்கியம். 

கட்சி என்ற எண்ணத்தை ஒதுக்கி விடுங்கள். 

தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளில் இங்கே ஏதாவது ஒரு துறைக்குத் தரவுகள் உள்ளது. வருடம் தோறும் வெளியிடுகின்றார்கள்? என்பதனை உங்களால் உறுதிப்படுத்த முடியுமா? முதலில் தமிழகத்தில் எத்தனை துறைகள் உள்ளது? வலைதளம் உள்ளதா?

எதுவும் இல்லை.  முக்கியமான மின்சாரத்துறை, போக்குவரத்துத் துறைக்கே எந்தத் தரவுகளும் இல்லை.  பட்ஜெட் சமயத்தில் உத்தேசமாக புள்ளிவிவரங்களை வைத்து ஒப்பேற்றிக் காணாமல் போய்விடுகின்றார்கள். அதுவொரு சடங்கு.  கடந்த ஐந்தாண்டு, பத்தாண்டுகள், இருபத்தி ஐந்து ஆண்டுகள் என்ற புள்ளி விபரங்கள் உங்கள் கைகளில் இருந்தால் இந்த ஆண்டின் நிலவரம் குறித்துப் பேச முடியும். கிராப் எந்த நிலையில் உள்ளது என்பதனை உள்ளீடு செய்து பார்க்க முடியும்.  

அதிமுக உள்ள ஜெயகுமார், ஓபிஎஸ் க்கு நிதி குறித்து ஏதாவது தெரியும் என்றா நம்புகின்றீர்கள்?  இருவருக்கும் தெரிந்த நிதியென்பது அவரவர் பைக்குத் தினமும் ஒதுக்கும் நிதி மட்டுமே தெரியும்.

அதீத புத்திசாலி தியாகராஜன் க்கு எந்த அளவுக்குத் தெரியும் என்பதனை விட எதை மட்டும் இங்கே வெளியிடலாம்? வெளியிட முடியாது? கூடாது? என்பதனை உணர்ந்து தான் அல்லது அறிந்து தான் அந்த இருக்கையில் அமர வைத்து இருப்பார்கள்.  

காரணம் ஓர் ஓட்டையைத் திறந்து விட்டால் எலிகள் வெளியே ஓடி வரும்.  மற்றொரு ஓட்டையில் கை வைத்தால் பெருச்சாளி வெளி வரக்கூடும்.  ஒவ்வொரு பொந்துக்குள்ளும் வினோதமான ஜீவராசிகள் இருக்க அதிகாரிகளும் சரி அமைச்சர்களும் சரி இங்கே இப்படித்தான் கடந்த ஐம்பது ஆண்டுகளாக பொதுச் சேவை செய்கின்றார்கள்.

ஆனால் மோடி வந்த பிறகு தரவுகள் முக்கியம் என்ற வாசகம் அறிமுகம் ஆனது.

நான் இணையம் வழியே கண்டு உணர்ந்த மத்திய அரசின் மொத்த அமைச்சக துறைகள் 51. இதில் 21 துறைகள் மட்டுமே அரசு அலுவலகங்களாக நேரிடையான கட்டுப்பாட்டில் இயங்குகின்றது.  மற்ற துறைகள் அனைத்தும் டெல்லியில் உள்ள மற்ற பகுதிகளில் எல்லா இடங்களிலும் பரவி உள்ளது. வாடகை கட்டிடங்களில் செயல்பட்டு வருகின்றது. எங்கே யார் யார் இருக்கின்றார்கள் என்பதை அறியவே சில வாரங்கள் ஆகும்.  

இது போன்ற சூழலில் தான் 2014 ஆண்டு மோடி பதவிக்கு வருகின்றார்.  புதிய பாராளுமன்றக் கட்டிடம் கட்ட வேண்டிய அவசியத்தை உணர்கின்றார்.  வாடகை கட்டிடங்கள் மூலம் எந்தந்த பைகளுக்குப் பணம் மாதம் தோறும் போய்க் கொண்டு இருப்பதை உணர்ந்தாலும் வெளியே காட்டிக் கொள்ள முடியாமல் செய்ய வேண்டிய வேலைகளில் கவனம் செலுத்தினார். அடுத்த வருடம் புதிய பாராளுமன்றக் கட்டிடத்தின் முதல் பகுதி திறப்பு விழா காண இருக்கின்றது. மொத்த விஸ்டா திட்டமும் 2024 க்குள் முடிவுக்கு வருகின்றது.  அனைத்துத் துறைகளும், அமைச்சகங்களும் ஒரே கூரையின் கீழ். 

காரணம் தரவுகள் என்பது நிர்வாகத்திற்கு முக்கியம். அந்த நோக்கத்தில் தான் பாஜக தன் தேர்தல் அறிக்கையில் சொல்லியிருந்த ஒவ்வொரு திட்டங்களும் படிப்படியாக நிறைவேற்றி வருகின்றது.  தொடர்ச்சியாக இப்போது ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டை எண் இணைத்தல்  என்ற வார்த்தையைக் கேட்டவுடன் எப்போதும் போல எதிர்க்கட்சிகள் வானத்துக்கும் பூமிக்கும் குதியாட்டம் போடுகின்றார்கள்.  

ஒருவர் ஜனநாயக விரோதம் என்கிறார். மற்றொரு கட்சி பாசிசம் என்கிறார்கள்.

அரசாங்கம், தெளிவான பெரும்பான்மையுடன், பொது மக்களின் நலனுக்காக ஒரு மசோதாவை முதலில் மக்களவையிலும் பின்னர் மாநிலங்களவையிலும் நிறைவேற்றுகிறது. எதிர்க்கட்சிகள் விவாதத்திற்கு அழைக்கப்படுகின்றனர், ஆனால் அவர்கள் ஒன்று கூடி வெளிநடப்பு அல்லது சபைக்குள் போராட்டம் நடத்துகிறார்கள் அல்லது ஜனநாயகத்தைக் காரணம் காட்டி, அவர்களின் பொறுப்பற்ற செயல்களைக் கற்பனையான பாசிசம் என்று கூறி சபாநாயகரை நோக்கி விதி புத்தகத்தை வீசுகின்றார்கள். இந்த முற்றுகை நடைமுறையில் இரண்டு விஷயங்கள் ஒருங்கிணைந்தவை. 

ஒன்று, சட்டங்களை இயற்றுவதற்கான அரசியலமைப்பு உரிமையைப் பயன்படுத்துவதற்கான தெளிவான பெரும்பான்மை அரசாங்கத்தின் யோசனையைக் குற்றமாக்குவது.

இரண்டு, தவறான தகவல் மற்றும் சதி கோட்பாடுகள் மூலம் பொது மக்களைத் தவறாக வழிநடத்துவது. உதாரணமாக, ஏற்கனவே, பல தொலைக்காட்சி விவாதங்களில், எதிர்க்கட்சிகளின் செய்தித் தொடர்பாளர்கள் தரவு தனியுரிமை, கண்காணிப்பு, அரசாங்கத்தின் தலையீடு, சமூக விவரக்குறிப்பு போன்ற வசதியான வார்த்தைகளை வைத்து மக்களைப் பீதிக்குள்ளாக்கிக் கொண்டு இருக்கின்றனர்.

மேலும் 

நீண்டகாலமாக ஆதாரை இணைக்கும் சீர்திருத்தம் குறித்து எதிர்மறையான கருத்தை உருவாக்க சீனாவும் முயன்று கொண்டே வருகின்றது என்பதனையும் நாம் கவனத்தில் வைத்திருக்க வேண்டும்.. 

வாக்காளர் அட்டை.

வாக்காளர் பட்டியலில், இரண்டு பிரச்சினைகள் உள்ளன. 

ஒன்று, பட்டியலில் இடம் பெறக்கூடாதவர்கள்

உதாரணமாக, பங்களாதேஷ் அல்லது ரோஹிங்கி யாக்களிலிருந்து வந்த சட்டவிரோதக் குடியேறிகள். 

இரண்டாவது பிரச்சனை நீக்கம் ஆகும். 

எடுத்துக்காட்டாக, போலி வாக்காளர்களைக் கண்டு பிடித்தாலும் அதை நீக்கினார்களா? அதற்குப் பிறகு என்ன ஆனது? என்பது போன்ற விபரங்கள் இனி தேவையிருக்காது.

மேலும் இன்றைய சூழலில் பெரும்பாலும், ஒரு குறிப்பிட்ட தொகுதிக்கான மொத்த வாக்காளர் அட்டைகளில் 20 சதவிகிதம் போலி வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

இவ்வாறு, தரவுத்தளம் நான்கு சாத்தியக்கூறுகளால் பாதிக்கப்பட்டுள்ளது. 

ஒன்று

ஒரே வாக்காளர் அட்டையுடன் இந்தியாவின் சட்டப்பூர்வக் குடிமகன். 

இரண்டு, 

பல வாக்காளர் அட்டைகளைக் கொண்ட இந்தியாவின் சட்டப்பூர்வக் குடிமகன். 

மூன்று

இந்தியாவில் சட்டவிரோதமாக, ஒரே வாக்காளர் அட்டையுடன் வசிக்கும் எவரும். 

கடைசியாக

இந்தியாவில் சட்டவிரோதமாக, பல வாக்காளர் அட்டைகளுடன் வசிக்கும் எவரும்.

முதல் சாத்தியம் ஒரு சிக்கலை ஏற்படுத்தாது, ஆனால் மற்ற மூன்றில், புதிய சட்டம் பல வாக்காளர் அட்டைகளின் இரண்டாவது மற்றும் நான்காவது பிரச்சனையை மட்டுமே தீர்க்கிறது. 

இந்தியாவில் சட்டவிரோதமாக வசிக்கும் எவரும், போலி ஆதார் அட்டை அல்லது போலியான ஆதார் அட்டையுடன் அல்லது தவறான வழிகளில் பெற முடிந்தால், வாக்குப்பதிவு தரவுத்தளத்திலிருந்து நீக்க முடியாது. 

இந்தியாவில் வசிக்கும் சட்டவிரோத நபர்களின் முதல் பிரச்சனைக்கு வழி வகுக்கும், நீண்ட காலத்திற்கு, போலி ஆதார் அட்டைகள் மூலம் வாக்காளர் அட்டைகளைப் பெற முடியும். 

பிக் டேட்டாவைப் பயன்படுத்துவதன் மூலம், பல கிராமப்புற நலத் திட்டங்களின் அறிவைப் பயன்படுத்தி, போலி ஆதார் அட்டைகள் இருப்பதை ஓரளவிற்கு அரசாங்கம் கண்டறிந்து, அதனுடன் தொடர்புடைய வாக்காளர் அட்டைகளைப் பறிமுதல் செய்யும் நிலை ஏற்படும். இப்போதைக்கு வெகு தொலைவில் உள்ளது, ஆனால் எதிர்காலத்திற்கான சரியான பயன்பாடு.

தனியுரிமை பற்றிய கேள்வியும் உள்ளது. 

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைப்பது அரசாங்கத்திற்கு ஒருவரின் வாக்கைக் கண்காணிக்க உதவும், அல்லது ஏதேனும் ஓர் அரசியல் கட்சியுடனான ஒருவரின் தொடர்பை அல்லது நீண்ட காலத்திற்குக் குடிமக்களின் விவரக்குறிப்புக்குப் பயன்படுத்தப்படலாம் என்பது பொதுவான கருத்து. 

உதாரணமாக, PDS (பொது விநியோகத் திட்டம்) அமைப்பின் கீழ், பயனாளிகள் அரசாங்கத்திடம் இருந்து இலவச உணவு தானியங்களைப் பெற, அவர்களின் ஆதார் அட்டையைத் தங்கள் ரேஷன் கார்டுடன் இணைக்கிறார்கள். 

இதேபோல், தொற்றுநோய்களின் போது பணப் பரிமாற்றத்திற்கு உதவிய பெண்களுக்கு ஜன்தன் யோஜனா திட்டத்தின் கீழ் அவர்களது வங்கிக் கணக்குகளுடன் ஆதார் இணைக்கப்பட்டது. 

இரண்டு சந்தர்ப்பங்களிலும், அரசாங்கம் பயனாளியின் பெயரை இணைக்க முடியும். அதாவது, ஒரு குறிப்பிட்ட மாவட்டம் மற்றும் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு குறிப்பிட்ட குடிமகனுடன் ஒரு குறிப்பிட்ட ஆதார் அட்டை எண் இணைக்கப்பட்டுள்ளது என்பதை அரசாங்கம் அறிந்திருந்தது.

ஆனால், அந்தப் பயனாளி தங்களுக்கு வழங்கப்பட்ட உணவு தானியங்களை என்ன செய்தார் என்பது அரசுக்குத் தெரியவில்லை. புலாவ், பிரியாணி அல்லது கீர் செய்ய இதைப் பயன்படுத்தினார்களா? 

அவர்கள் மாற்றப்பட்ட பணத்தை அதிக காய்கறிகள் வாங்க, தங்கள் குழந்தைகளுக்குப் பொம்மைகள் வாங்க, அல்லது புதிய ஆடைகள் வாங்க பயன்படுத்தினார்களா? 

வாக்காளர் அட்டையிலும் இதே கதைதான். 

ஆதார் அட்டைகளுடன் இணைக்கப்பட்ட வாக்காளர் அட்டைகள் பற்றிய தகவல் மட்டுமே அரசாங்கத்திடம் உள்ளது. 

தொல். திருமாவளவனுக்கு ஒரு பகிங்கர கடிதம்

ஆனால் குடிமக்கள் எந்தக் கட்சிக்கு வாக்களிக்கிறார்கள் என்பது பற்றிய தகவல் அறிய வாய்ப்பு இல்லை. இந்த சீர்திருத்தத்தின் மற்றொரு நீண்ட கால நன்மையும் உள்ளது. எந்த ஒரு ஜனநாயகத்தின் தனிச்சிறப்பும் ஒவ்வொரு வாக்கும் சமமாக இருக்க வேண்டும் என்பதே. முதன் முதலில் தொகுதிகள் வரையறை செய்யப்பட்டபோது, மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் ஒவ்வொரு வாக்குக்கும் ஒரே மதிப்பு இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது.  இன்று, வடக்கிலும் தெற்கிலும் உள்ள மாநிலங்களுக்கிடையேயான மக்கள் தொகைப் பெருக்கத்தில் உள்ள வேறுபாடுகள் காரணமாக, மக்களவைத் தேர்தலில் வடக்கிலிருந்து ஒருவரின் வாக்கை விடத் தெற்கிலிருந்து ஒரு வாக்கு அதிக பலம் கொண்டதாக மாறியுள்ளது.

மத்திய அரசின் 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டம்

இதனால், ஒவ்வொரு மாநில அரசுகளும் தேசிய எல்லை நிர்ணயம் குறித்த விவாதங்களைத் தொடங்கியுள்ளன. ஆனால் அதற்கு அரசியல் கட்சிகள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்?

சட்டப்பூர்வக் குடிமக்கள் மட்டுமே வாக்களித்து அதுவும் ஒருமுறை மட்டுமே வாக்களிக்க வேண்டும் என்பது நீண்டகாலமாக இருக்கும் அடிப்படை அம்சம். ஆனால் இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் அரசியல் கட்சிகளின் நேர்மை மற்றும் உள்நோக்கத்தை நாம் கேள்வி கேட்டால் அதற்குள் பல்வேறு பொந்துக்குள் ஒளிந்திருக்கும் உண்மைகளைக் கண்டறிய முடிகின்றது. ஏனென்றால் அவர்கள் பாஜகவுக்கு எதிராக  எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இந்திய அரசியலமைப்புச் சட்டம் உத்தரவாதம் அளித்துள்ள உரிமைகள் மேல் தான் அவர்கள் தங்கள் வன்முறையைப் பிரயோகிக்கின்றார்கள் என்பதனை நாம் உணர வேண்டும்.

சற்று நிதானமாக யோசித்துப் பாருங்கள். தன்னை தக்க வைத்துக் கொள்ள ஓர் அரசியல் கட்சி என்பது அத்தனை  குறுக்கு வழியையும் கடைப்பிடிப்பதைத்தான் நாம் தொடர்ந்து பார்த்து வருகின்றோம்.  ஆனால் மோடி செய்யக்கூடிய சீர்திருத்தம், மாற்றங்கள் என்ற எல்லாமே பாஜக என்ற கட்சிக்கு எதிராக போய் விடாதா?  வருகின்ற தேர்தலில் நாம் ஆட்சியை இழந்து விட்டால்? என்ற பயம் மோடிக்கும், பாஜக வில் உள்ள கட்சியினருக்கும் பதட்டம் இருக்காதா? இந்த இடத்தில் தான் மோடி அரசின் நிர்வாகத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆதார் எண் முதல் இன்று அஸ்ஸாம் மாநிலத்தில் பிரம்பபுத்திரா நதியில் மேல் கட்டப்பட்டுள்ள பிரமாண்டமான பாலம் வரைக்கும் அனைத்தும் காங்கிரஸ் கட்சியில் போடப்பட்ட திட்டங்கள்.  சொல்லப் போனால் இன்று மோடி உருவாக்கிய அனைத்தும் காங்கிரஸ் என்ற கட்சிக்குத்தான் பெருமை சேர்க்கும்.  ஆனால் அவர்கள் தான் இன்று பதட்டப்படுகின்றார்கள்?  

வலிமையானவன் பதட்டப்படமாட்டான்.

மக்கள் புரிந்து கொள்வார்கள் என்று நம்பிக்கை கொண்ட மோடி அவர்கள் அடிக்கடி சொல்லும் வாசகத்தை இங்கே நான் மீண்டும் உங்களுக்கு நினைவு படுத்த விரும்புகின்றேன்.

"நான் தேர்தலுக்காக ஆட்சி நடத்த விரும்பவில்லை". 

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

என்ன அண்ணே... இப்படியா எழுதி மாட்டிக் கொள்வது...?

// குடிமக்கள் எந்தக் கட்சிக்கு வாக்களிக்கிறார்கள் என்பது பற்றிய தகவல் அறிய வாய்ப்பு இல்லை... //

ஹா... ஹா... எங்களுக்கு தான் வாக்களித்து உள்ளார்கள் என்பதற்கான ஆவணம் அல்லது "ஆணவம்" வரும்... (இதை செய்வதே அதற்காகத் தான்...! - Mind Voice)

உளவு பார்ப்பதில் நாங்கள் கில்லாடி - ஐயன் சொல்வது : கீழ்கள்...