Tuesday, April 29, 2025

புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கம் -- அறமனச் செம்மல் சீனு சின்னப்பா -- இலக்கிய விருதுகள் 2025

 

 

நான் எழுதத் தொடங்கிய நாள் இன்றும் என் நினைவில் உள்ளது.

 

ஜுலை 3 2009. 

 

வரப்போகின்ற 2025 வருட ஜுலையுடன் கணக்கிட்டால் 15 வருடங்கள் முடிவடையப் போகின்றது.

 


அதாவது என் எழுத்துக்கு 16 வயது தொடங்கப் போகின்றது. 


விரும்பிய அனைத்தையும் எழுதியுள்ளேன்.


தேவையான விசயங்களை எழுத்தாக மாற்றியுள்ளேன்.



எதிரிகள், மிரட்டல்கள் மீறி எழுதியுள்ளேன்.

வாழ்ந்த சமூகத்தை என் எழுத்தின் மூலம் வாசிப்பவர்களுக்கு கடத்தியுள்ளேன்.

பிறந்த ஊர், வாழ்ந்து கொண்டு இருக்கும் ஊர். இரண்டையும் முழுமையாக எனக்குத் தெரிந்த வரையிலும் எழுதியுள்ளேன்.

எவரிடமும் பயிற்சி பெறவில்லை. எந்த பிரபல்ய நபரிடமும் சுய லாபத்துக்காக உறவாடியதில்லை. 

உண்மைகளை உணர்ந்த வரைக்கும் எழுதியுள்ளேன். தவறு என்று தெரிந்ததும் தவறாமல் அதைப் பற்றியும் எழுதியுள்ளேன்.

நட்பு வருத்தப்படுவார்கள் என்பதற்காக நான் எழுத்தில் சமரசம் செய்து கொண்டது இல்லை. இதனால் இழந்தது அதிகம்.



மதம், சாதி இவற்றை போற்றியதும் இல்லை. இகழ்ந்ததும் இல்லை. கடவுள் நம்பிக்கைகளை அவரவர் பாணிக்கு விட்டுள்ளேன். அதிகம் கண்டு கொண்டதில்லை. தொழில், குடும்பம் என்ற இரு கண்கள் போலவே எழுத்து என்பதனை முக்கண்ணாக வைத்திருப்பது என்பது இயல்பாகவே உள்ளது.

கலை உலகத்தில் உள்ள போட்டி, பொறாமை போன்றவற்றை முழுமையாக அறிந்தவன் என்ற முறையில் அந்தப் பக்கம் நான் சென்றது இல்லை. அதாவது அங்கீகாரத்திற்காக அலைந்ததும் இல்லை. எதிர்பார்ப்பில் எழுதுவதும் இல்லை.



ஆனால் முதல் முறையாக மிகப் பெரிய கௌரவம் நிறைந்த அங்கீகாரம் ஒன்று மே 1 2025 அன்று கிடைக்க உள்ளது.



இது எங்கிருந்து தொடங்கியது எப்படி என்னை வந்து சேர்ந்தது என்பதனை விழாவிற்கு சென்று வந்ததும் எழுதுகிறேன்.