Friday, December 16, 2016

சசிகலா?


முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதா மறைவுச் செய்தியைக் கேட்டதும் நம் பதிவில் இது குறித்து எழுதி வைத்து விடலாம் என்ற நோக்கத்தில் குறிப்புகளாக எழுதி வைத்தேன். விரிவாக எழுதும் எண்ணமே இல்லை. ஆனால் நிகழ்காலத்தில் சிவா, பகவான்ஜி, அமுதவன் போன்றவர்களால் விரிவான விளக்கமான என் மனதில் உள்ளதை, என் அரசியல் பார்வையை எழுத இவர்கள் தான் உதவி உள்ளார்கள். மூவருக்கும் என் நன்றி.

ஜெ. குறித்துக் கடைசிப் பதிவாக அவர் உடல்நிலைமை மற்றும் ஏன் 75 நாட்கள் அவஸ்தையில் கழிந்து இறந்தார் என்று நான் வாசித்த பத்திரிக்கைகளின் வாயிலாக உணர்ந்ததைப் பற்றி எழுதலாம் என்று நினைத்து இருந்தேன். 2016 ஆம் வருடத்தின் முடிவில் இருக்கின்றோம்.

சுருக்கமான பார்வையுடன் பார்த்து விடலாம்.

ஜெயலலிதா இயல்பாகவே ஆசை, கோபம், வெறுப்பு என மூன்றிலும் அதீத உணர்ச்சிகளுடன் வாழ்ந்தவர். வழிநடத்த ஆள் இல்லை. சுட்டிக்காட்டவும் அருகே எவரும் இல்லை. இவர் அனுமதிக்கவும் இல்லை.

2016 செப்டம்பர் 22ந் தேதி அப்போலோவில் சேர்க்கப்பட்டார். இதன் தொடக்கம் 2014 செப்டம்பர் 27 ஆம் பெங்களூரில் பரப்பன அக்ரஹாரா சிறையில் தான் தொடங்கியது.

"நாம் விலைக்கு வாங்க முடியாத நபர்களும் இவ்வுலகில் இருக்கத்தான் செய்கின்றார்கள்" என்ற எதார்த்தத்தை நீதிபதி குன்ஹா அன்று மதியம் 3 மணிக்கு எழுதிய தீர்ப்பின் மூலம் ஜெ. வுக்குப் புரியவைத்தார். அதுவரையிலும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு இருந்தவர் உருவான மன அழுத்தங்கள் படிப்படியாகச் சிறுநீரகம், நுரையீரல் வரைக்கும் வந்தது. கடைசியாக இதயம் வரைக்கும் வந்து சேர்ந்தது.

அவருடைய அதிர்ஷ்டம் உயரத் தூக்கிக் கொண்டு சென்றது. ஆரோக்கியம் அதலபாதாளத்திற்கு அழைத்துச் சென்றது. மனிதர்களின் இறப்பை மூன்று விதமாகச் சொல்கின்றார்கள்.

இயற்கை மரணம் (முதுமையின் காரணமாக இயற்கையோடு கலந்து விடுவது) 

அகால மரணம் (படுகொலை, கோரமாகச் செயற்கையாக உருவாக்கப்படுவது) 

துர்மரணம் (எப்படிச் செத்தார்? என்பதனை கண்டுபிடிக்கப்படாமல் மரணபிப்பது) 

வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் அதிர்ஷ்டம் வாரி அனைத்த ஜெ. வுக்கு மரணம் என்பது மூன்றாவது வகையில் அமைந்துவிட்டது.

தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு தெருவிலும் குப்பைத்தொட்டியில் கூட ஜெ. புகைப்படம் உள்ள சுவரொட்டிகள் தமிழ்நாடு முழுக்க ஒட்டப்பட்டது.

எல்லாவிதமான அநாகரிகங்களையும் தமிழ்ச் சமூகத்திற்கு அறிமுகம் செய்து அனுமதித்த ஜெ. இனி இல்லை. அதனால் என்ன?

நமக்கு மற்றொரு சின்ன அம்மா கிடைத்து விட்டார். அறிஞர் அண்ணா அவர்களின் புகழ் மறைக்கப்பட்டு எப்படிக் கலைஞர் புகழ் உருவாக்கப்பட்டதோ அதே போல இனி சசிகலா புகைப்படங்களைத் தமிழ்ச் சமூகம் பாரக்கக்கூடிய வாய்ப்பை இப்போது காலம் வழங்கியுள்ளது.

முன்னாள் முதல்வர் மறைந்த ஜெ. ஜெயலலிதா அவர்களின் சொத்துக் குவிப்பு வழக்கு கர்நாடக மாநிலத்தில் நடந்து கொண்டிருந்த போது, ரசிக்கக்கூடியதாக, எரிச்சலடையக்கூடியதாக என்று எல்லாவிதங்களிலும் இருந்தன. அதனை இங்கே பதிவும் செய்துள்ளேன். 

அதற்குப் பிறகு தற்பொழுது தமிழகத்தின் சின்னம்மா சசிகலா (சின்ன அம்மா என்று தான் எழுத வேண்டும் என்று உத்தரவு கொடுத்துள்ளாராம்) சசிகலா புகைபடங்கள் அடங்கிய சுவரொட்டிகள் தற்போது மூலைமுடுக்கெல்லாம் ஒட்டப்பட்டு வருகின்றது. கடந்த ஒரு வாரமாக இது குறித்த செய்திகள் வலைத்தளமெங்கும் அணிவகுத்து வந்து கொண்டே இருக்கின்றது. ரசிக்கும்படி இருக்கும் படங்களைச் சேமித்துக் கொண்டே வந்தேன். காரணம் இப்போது தமிழ்நாடு புதிய பாதைக்குத் திரும்பியுள்ளது. முக்கியமான மாற்றம் இது. சசிகலா குறித்துச் சமயம் வரும் போது எழுதுகின்றேன். 

இந்த வரலாற்று நிகழ்வை ஆவணப்படுத்த வேண்டும் என்பதற்காக உங்கள் பார்வைக்கு. நான் ரசித்த படங்களை இங்கே பதிவேற்றியுள்ளேன். 

15 ஆம் ஆண்டு நூற்றாண்டில் தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த நாயக்கர் காலத்தில் ஒரு பிராமணக் குடும்பம் சார்ந்த நபர்கள் அடுத்தடுத்து மூன்று தலைமுறை அதிகார மையமாக இருந்தார்கள் என்று சுப. வீரபாண்டியன் பேசியுள்ள காணொலியின் வழியாகத் தெரியவந்த போது அது சார்ந்த தகவல்களைத் தேடிப்பிடித்துப் படித்துப் பார்த்தேன்.

மன்னர் ஆட்சி முதல் இன்றைய மக்கள் ஆட்சி வரைக்கும் வெகு ஜன மக்களுக்குத் தெரியாத அதிகார மையங்கள் என்பது எல்லா நாட்டின் அரசியலிலும் உண்டு. இன்று பன்னாட்டு நிறுவனங்கள் அந்தந்த நாட்டின் அதிகார மையங்களைத் தங்கள் கைக்குள் வைத்திருக்கின்றார்கள் என்பது சர்வதேச அரசியலைக் கூர்ந்து கவனிப்பவர்களுக்கு நன்றாகவே புரியும். 

ஆனால் காலம் காலமாக எந்த அதிகார மையமும் ஆட்சி அதிகாரத்தில் நேரிடையாகப் பங்கெடுத்துக் கொள்வதில்லை. முன்னால் வந்து முகம் காட்டுவதில்லை. இந்த முறை தமிழ்நாட்டில் அதிசயம் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. நல்வாழ்த்துகள் சசிகலா அவர்களே. மன்னிக்கவும் சின்னம்மா அவர்களே. ஏறக்குறைய 30 வருடங்கள் தமிழ்நாட்டின் அதிகாரவர்க்கத்தை நேரிடையாக மறைமுகமாகக் கைக்குள் வைத்திருந்த உங்களை வரவேற்கின்றேன்.

ஜெ. வை விட அதிக அதிர்ஷ்டசாலி நீங்கள் தான்.  அடுத்த நாலரை வருட ஆட்சிப் பொறுப்பு என்பதனை தங்கத்தாம்பளத்தில் ஜெ. அவர்கள் உங்களுக்கு கொடுத்து விட்டு சென்று விட்டார். 

மொத்த (அரசியல்) தமிழ்நாட்டின் சூத்திரதாரி. உங்களுக்கு எதனையும் கற்றுக் கொடுக்கத் தேவையில்லை. அரசியலில் உள்ள அனைத்து ராஜதந்திரங்களைக் கரைத்துக் குடித்தவர்.

ஜெ. மட்டுமல்ல. தமிழ்நாட்டின் உள்ள முக்கிய அதிகாரிகளைத் தொடக்கம் முதலே திட்டமிட்டு உருவாக்கியவர். இன்று குறிப்பிட்ட சமூகம் சார்ந்த மக்கள் காவல் துறை முதல் அனைத்துத் துறைகளிலும் கோலோச்சி நிற்பதற்கும் நீங்களும் உங்கள் கணவருமே முக்கியக் காரணம் என்பதனை விபரம் புரிந்த அத்தனை பேர்களுமே அறிந்தே வைத்திருப்பார்கள். ஒவ்வொரு படியாக நகர்ந்து வந்து இலக்கை அடைந்து இருக்கும் சசிகலா தமிழ்நாட்டின் அரசியலில் சாதிக்கப் போவது என்ன? 

ஜெ. வை வைத்து உங்களைத் தூற்றுகின்றார்கள். உங்களுக்கும் வாரிசு இல்லை. நீங்களும் காலத்தின் கடைசி வாய்ப்பில் வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள். இனி பணம் தேவையிருக்காது. புகழ் மட்டும் தான் தேவை. காலம் உங்களுக்கு ஒரு நல்வாய்ப்பு வழங்கியுள்ளது. ஊர் உலகமே உங்களை, உங்கள் குடும்பம் சார்ந்த உறவினர்களைப் பார்த்து பயந்து நடுங்குகின்றார்கள். சாதிக்கப்பிறந்த பெண்மணியா? இல்லை உங்கள் தோழி சென்ற பாதையில் பயணிக்கப் போகின்றீர்களா?

இந்த சமயத்தில் ராகுல் மற்றும் ஸ்டாலின் அவர்களின் நிலைமையை நினைக்கத் தோன்றுகின்றது?





















தொடர்புடைய பதிவுகள்


வரலாறு முக்கியம் அமைச்சரே (அரசியல் மின் நூல்)

ஜெ. ஜெ. சில குறிப்புகள்

அரசியல் (கோர) முகம்


அரசியல் (கோர) முகம் 2


அரசியல் (கோர முகம்) 3




17 comments:

saidaiazeez.blogspot.in said...

//2015 செப்டம்பர் 22ந் தேதி அப்போலோவில் சேர்க்கப்பட்டார்//
நீங்களே கன்ஃப்யூஸ் ஆயிட்டீங்களாஜீ... 2016 தானே அது... ஹி ஹீஹி

அண்ணாவிற்கு பிறகு கருணாநிதி வந்தது என்ன அண்ணாவின் உயில்படியா?
எம்ஜியாருக்கு பிறகு ஜெயலலிதா வந்ததென்ன எம்ஜியாரின் உயில்படியா?
அப்புறம் என்னங்க சகிகலாவுக்கு மட்டும் இவ்ளோ எதிர்ப்பு?
இதிலே ஜோக்கென்னன்னா,
சசிகலாவை வேண்டாம் என்பவர்களின் சாய்ஸ் பட்டியலில் இருப்பது தீபா-வாம்.
வெ...ள...ங்க்...கிடும்... நாடு.... தமிழ்நாடு

தி.தமிழ் இளங்கோ said...

ஆட்சியும், அதிகாரமும் மத்திய அரசால் பிடுங்கப்பட்டால், யாருக்கு யார் மீது எவ்வளவு விசுவாசம் என்பது தெரிந்துவிடும்.

திண்டுக்கல் தனபாலன் said...

மிகவும் ரசித்த படம் - கடைசியில்...!

'பரிவை' சே.குமார் said...

ஒரு பிடி மண்ணள்ளிப் போட்டு உண்மைகளைப் புதைந்த அந்தப் படம் (விகடன் வெளியிட்டது) மிகவும் சிறப்பானது... உண்மையை உரக்கச் சொல்லும் படம்...

சசிகலா பொதுச்செயலாளர் ஆகட்டும்.. தமிழனின் தலைவிதி இதுதான் என்றால் முதல்வரும் ஆகட்டும்...

ஆனாலும் இந்த கூன்பாண்டியர்கள் தங்கள் பணத்தையும் மீதமிருக்கும் பதவிக் காலத்தையும் வருமானத்தையும் தக்க வைக்க காலில் விழுவது கேவலமாக இருக்கிறது. அதேபோல் சசிகலா எதற்காக ஜெயின் உடல்மொழிக்கு மாற வேண்டும்... அந்த நடை, கும்பிடு எல்லாம் சகிக்கலை... இன்னும் பச்சைக் கோட் மாட்டலை... அதுவும் மாட்டிட்டா... அவ்வளவுதான்... தன் நடை, உடையில் தனித்துவம் துறந்தவரால் தமிழகம் என்ன சொர்க்க பூமியாவா மாறாப்போகுது... கொள்ளை தொடரும்... கொள்கை இருக்காது... நாமளும் 200 ரூபாய்க்கு ஒட்டை விற்று விட்டு புலம்பிக் கொண்டிருப்போம்...

சின்ன அம்மா... அடுத்து இன்னைக்கு ஒரு பேனரில் இளவரசிக்கு சின்ன சின்ன அம்மா... முடியலை...

Unknown said...

#அவரவர் தங்களுக்குத் தெரிந்த வகையில் தங்கள் பதவியை காப்பாற்றிக் கொள்ள, தங்களுக்கு வந்து கொண்டிருக்கும் வருமானத்தை காப்பாற்றிக் கொள்ள முயற்சித்துக் கொண்டிருக்கின்றார்கள்#
இது இரண்டாண்டுக்கு முன் நீங்கள் எழுதியது ,இதுதான் இன்றும் தொடர்கிறது ,என்றும் தொடரும் :)

RAVINDRAN MARIAPPAN said...

//அவருடைய அதிர்ஷ்டம் உயரத் தூக்கிக் கொண்டு சென்றது. ஆரோக்கியம் அதலபாதாளத்திற்கு அழைத்துச் சென்றது//. Wonderful.

Madurai Atheenam padam super.

Last But one picture shows the Status of TamilNadu's Slaves.
Last picture shows the status of truth's reality in Tamil Nadu.

RAVINDRAN MARIAPPAN said...

தமிழர்கள் காலந்தோறும் யாரோ ஒருவரிடம் அடிமையாக இருப்பதை பெருமையாக நினைத்துக் கொண்டாலும் இன்று வரையிலும் அதில் எவ்வித மாற்றமும் இல்லை. மேலும் என்னை விட வேறு திறமையான அடிமையை வேறெங்கும் நீங்கள் கண்டுவிட முடியாது என்பதற்கு உதாரணமாக அதிமுக தொண்டர் படையினர் என்ற பெயரில் ஒவ்வொருவரும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். Your comments written for Jayalalitha completely applicable even today's Political scenerio.

Rathnavel Natarajan said...

அருமை.

தாராபுரத்தான் said...

கணிப்பு.அபாரம்.

ஜோதிஜி said...

அவர்கள் அப்படி செய்யமாட்டார்கள். காரணம் இங்குள்ள எம்பி மற்றும் எம் எல் ஏ க்களின் ஓட்டுக்கள் (மசோதாக்கள் மற்றும் வரப்போகும் ஜனாதிபதி தேர்தல்) ரொம்பவே முக்கியம்.

ஜோதிஜி said...

நன்றி. அப்பவே தேதியை மாற்றி விட்டேன்.

ஜோதிஜி said...

இன்று வரையிலும் இனிமேலும் இங்கே இப்படித்தான்.

ஜோதிஜி said...

நன்றி ரவீந்திரன்.

கிரி said...

தமிழ்நாட்டுக்கு நேரம் சரியில்லை அவ்வளோ தான்..

சசிகலா முதல்வராக இருந்த காலத்தில் (விரைவில் ஆகி விடுவார்) நாமும் வாழ்ந்தோம் என்பதை நினைத்தாலே படு கேவலமாக இருக்கிறது.

இது கூட சகிக்கலாம் என்றாலும்.. ஒருவேளை இவர் தொகுதியில் நின்று பணத்தை கொடுத்து வெற்றியும் பெற்று விட்டால்.. ஐயோ நினைத்தாலே..

ஜோதிஜி said...

பணம் கொடுத்து இங்கே வெற்றி பெற முடியும் என்ற எண்ணம் உருவாக காரணமாக இருந்ததும், அதற்கு காரணமாக இருப்பவர்கள் மக்கள் தானே?

ஜோதிஜி said...

ஒவ்வொரு பதிவில் எழுதியுள்ள ஒவ்வொரு விசயங்களும் அடுத்தடுத்து பொருத்தமாக அமைந்து விடுவது ஆச்சரியமல்ல. அது நம் மக்களின் எண்ணங்கள். இப்படித்தான் இங்கே வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

ஜோதிஜி said...

எம்.ஜி.ஆரை மனதளவில் வெறுத்துக் கொண்டு ஜெ. அவரின் ஓட்டு வங்கியை தனதாக்கிக் கொண்டார். இப்போது சசிகலா அந்தப் பாதையில் தான் பயணிக்கின்றார்?