Sunday, May 10, 2020

முதலாளித்துவ கொரானா

சுய ஊரடங்கு 3.0 - 47
Corona Virus 2020

(மாா்ச் 25 முதல் மே 17 வரை)

மிக மிக அதிக சுயநலம் கொண்ட முதலாளித்துவ அமெரிக்காவில் கொரானா

என் மகன் நிறுவனத்தின் கோ ஃபவுண்டருக்கு பாசிடிவ். அவர் நியூயார்க் நகர் மருத்துவமனையில் ஐ.சி.யூ.பிரிவில் அதி தீவிர சிகிச்சை தருகிறார். அங்கு வரும் மக்கள் கொசுப்போல் மடிகிறார்கள் என்றார் அவர் வீட்டில் ஏழு மாத குழந்தையை தவிர எல்லாருக்கும் பாசிடிவ். அதனுடந்தான் மருத்துவ பணியும் செய்கிறார்.

ஏன் இந்தியா தப்பிக்கிறது என்னும் குழப்பம் பின் இது புரிகிறது.. அடி வயிற்றில் பயம் பரவாமல் இல்லை



"அமெரிக்கா அதன் அநியாய அலட்சியத்திற்கான விலையை உயிர்களாகப் பறி கொடுத்துக் கொண்டிருக்கிறது. விட்டில் பூச்சிகளைப் போல கொத்துத் கொத்தாக வீழ்ந்து மடிகிறார்கள் மக்கள். 50 தினங்களில் 50,000 உயிர்கள் கொரானாவால் பலியாகியுள்ளன. “கடந்த நூறு வருடங்களில் இப்படியொரு பேரழிவைச் சந்தித்ததில்லை. இது வெறும் நோய்த் தொற்றல்ல, இது அமெரிக்கா மீது நிகழ்த்தப்பட்ட ஒரு கொடும் தாக்குதல்” என்கிறார் ட்ரம்ப். காரணம் என்ன ?

வுஹான் நகரில் இருந்து பரவியது முதல் இன்று வரை SARS-CoV-2 அதன் பரிணாமப் பாதையில் 33 பிறழ்வுகளை (Mutation) அடைந்திருக்கிறது. (33 Separate Strains). வைரஸ் பிறழ்வுகள் புதிதல்ல, அதன் வாழ்க்கைச் சுழற்சியின் ஒரு பகுதியே இது. பெரும்பாலும் இப்பிறழ்வுகள் வைரஸை பலவீனமடையச் செய்யுமே அன்றி வீரியம் மிக்கதாக மாற்றாது. அதிலும் புரதக் கூட்டுக்குள் தனது ஜெனடிக் சங்கதிகளை கொண்டுள்ள RNA வகை வைரஸ்களின் பிறழ்வு பலவீனமாகத்தான் இதுவரை இருந்திருக்கிறது.

ஆனால் CoV-2 வின் தற்போதைய பிறழ்வுகள் வீரியம் மிக்கதாக மாறத் துவங்கியுள்ளது. அதிலும் ஒரு திரிபு (strain) 270 மடங்கு சக்தி வாய்ந்ததாக மாறியுள்ளதாக சீனா ஆய்வறிக்கைகளை வெளியிட்டுள்ளது. அதாவது இத்திரிபால் ஒருவர் பாதிக்கப்பட்டால் அவரது உடலில் வைரஸ் ஏற்படுத்தும் நோய்த் தாக்கம், மற்ற கொரானா நோயாளிகளை விட 270 மடங்கு அதிகமாக இருக்கும். பிழைப்பது கடினம். அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் கொரானா கோரத் தாண்டவம் ஆடக் காரணம் இதுவே.

நியுயார்க் நகரம் வழியாக அமெரிக்காவிலும், இத்தாலி வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கும் இத்திரிபு பரவியிருக்கலாம் என அனுமானிக்கிறார்கள். இந்தியாவிற்குள் இது நுழைந்திருக்க தற்போது வரை சாத்தியமில்லை. ஆனால் வரும் நாட்களில் இது நிகழ்ந்தால், விளைவுகள் நாம் நினைப்பதை விட மிகக் கொடியதாகத் தான் இருக்கும். சிக்கல் இது மட்டுமல்ல. ரத்தம் உறைதல் தான் தற்போதைய பேரதிர்ச்சி.

COVID-19 சுவாச மண்டலத்தைத் தாக்கிச் செயலிழக்க செய்யும் நோயாகத்தான் இதுவரை அறியப்பட்டுள்ளது. ஆனால் நியுயார்க் நகரின் Mount Sinai Hospital மருத்துவர்கள், கொரானா நோயாளிகளின் உடலின் பல உறுப்புகளில் ரத்தம் உறைந்து திட்டுகளாகப் படிந்துள்ளதைக் கண்டறிந்துள்ளனர். கடந்த மூன்று வாரங்களில் மட்டும், 32 பேர் பக்கவாத நோயால் (Stroke) இம்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இந்த எண்ணிக்கை வழக்கத்தை விட இருமடங்கு அதிகமாம், இவர்கள் அனைவருக்கும் மூளையில் பெரிய ரத்தத் திட்டுகள் இருந்துள்ளது. இதில் 5 பேருக்கு பக்கவாதம் வருவதற்கான Risk Factors எதுவும் இல்லாததைக் கண்டு அதிர்ந்துள்ளார்கள் மருத்துவர்கள். மேலும் செயற்கை சுவாசத்தில் (Ventilator) இருந்த நோயாளிகளின் நுரையீரலின் ஒரு பகுதி ரத்தமிழந்திருந்தது தான் அதிர்ச்சியின் உச்சம்.

ரத்த உறைவைத் தடுக்கும் பொருட்டு, COVID-19 நோயாளிகளுக்கு தற்போது ரத்தத்தை மெலிதாக்கும் மருந்தும் தரப்படுகிறது. SARS-CoV-2 வைரஸ் தான் ரத்த உறைவிற்க்குக் காரணம் என உறுதியாகச் சொல்ல முடியாது என்றாலும், COVID-19 என்பது நிச்சயமாய் சுவாச மண்டலத்தை மட்டும் தாக்கும் நோயல்ல என்கிறார்கள் அமெரிக்க மருத்துவர்கள்.

ஆக நாம் எதிர்கொண்டிருப்பது வெறும் தொற்று நோய் மட்டுமல்ல. மனித குல வாழ்வை நிரந்தரமாக மாற்றியமைக்கப் போகும் மற்றுமொரு பெரு வெடிப்பு. மே 3 உடன் அனைத்தும் நலமாகிவிடாது. பொருளாதாரம் மற்றும் வாழ்வியல் சிக்கல்கள் அதன் பிறகுதான் அதி தீவிரமடையும். ப்ரிட்டனில் ஊரடங்கு ஒரு வருடம் தொடரலாம் என்கிறார்கள். 

இந்தியாவிலும் தொடர வாய்ப்பிருக்கிறது.

- கிருத்திகா தரன்


இங்கிலாந்து மருத்துவ கட்டமைப்பு


முன்பு பஞ்சம். இப்போது வைரஸ்




1 comment:

வெங்கட் நாகராஜ் said...

எத்தனை மாற்றங்களை கொண்டு வரும் இந்தப் பேரிடர்...

ரத்தம் உறைதல் - சில நாட்களாக இது பற்றி செய்திகள் வந்த வண்ணம் இருக்கிறது. இந்தியாவில் இது வரை இல்லை என்றே தெரிகிறது.