Sunday, July 21, 2019

இந்தியாவை உலுக்கிய ஊழல்கள்


இந்தியாவில் இதுவரை நடந்துள்ள ஊழல்களால் இழந்த தொகை எவ்வளவு தெரியுமா? 73 லட்சம் கோடிக்கும் மேல்.

1. நாட்டையே உலுக்கி, ராஜீவ் குடும்பத்தை பத்தாண்டுகளுக்கு மேலாக அதிகாரம் ஏதும் வழங்காமல் அலைக்கழித்த போபர்ஸ் ஊழலின் மொத்தத் தொகை 64 கோடி ரூபாய்

2. நரசிம்மராவ் பிரதமராக இருந்த போது நடந்த யூரியா இறக்குமதி ஊழல் ரூபாய் 33 கோடி.

3. உர இறக்குமதி ஊழல் ரூபாய் 1300 கோடி.

4. லாலு பிரசாத் யாதவ் சம்பந்தப்பட்ட மாட்டுத் தீவன ஊழல் ரூபாய் 950 கோடி.

5. 1994 ஆம் ஆண்டின் சர்க்கரை இறக்குமதி ஊழல் ரூபாய் 650 கோடி.

6. சுக்ராம் தொலைத் தொடர்புத் துறை ஊழல் ரூபாய் 1500 கோடி.

7. லாவ்லின் மின் உற்பத்தித் திட்ட ஊழல் ரூபாய் ரூபாய் 374 கோடி.

8. சி.ஆர்.பன்சாலி பங்கு பேர ஊழல் ரூபாய் 1200 கோடி.

9. மேகாலயா வன ஊழல் ரூபாய் 650 கோடி

10. ஹர்ஷத் மேத்தா சம்பந்தப்பட்ட பங்குச் சந்தை ஊழல் ரூபாய் 4 ஆயிரம் கோடி.

11. யு.டி.ஐ. பங்குப் பத்திர ஊழல் ரூபாய் 4800 கோடி.

12. தினேஷ் டால்மியா புதிய பங்கு வெளியீட்டு ஊழல் ரூபாய் 59.5 கோடி.

13. ராணுவ ரேஷன் ஊழல் ரூபாய் 5 ஆயிரம் கோடி.

14. நாட்டையே உலுக்கிய போலி முத்திரைத்தாள் ஊழல் ரூபாய் 190 கோடி.

15. மதுகோடாவின் சுரங்க ஊழல் ரூபாய் 4000 கோடி.

16. காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஊழல் ரூபாய் 50 ஆயிரம் கோடி.

17.ஜார்கண்ட்டில் மருத்துவ உபகரணங்கள் வாங்கிய ஊழல் ரூபாய் 130 கோடி.

18. அரசி ஏற்றுமதி ஊழல் ரூபாய் 2500 கோடி.

19. ஒரிஸ்ஸாவின் சுரங்க ஊழல் ரூபாய் 7000 கோடி.

20. சுவிட்சர்லாந்து வங்கிகளில் இருப்பதாகச் சொல்லப்படும் உத்தேச கறுப்புப் பணம் ரூபாய் 71 லட்சம் கோடி.

படிக்கப் படிக்க மயக்கம் வருகிறதா?

இழந்தது கொஞ்ச நஞ்சத் தொகையா என்ன?

இந்தியாவில் நடத்த மொத்த ஊழல் தொகையையும் கணக்கிட்டால் 75 லட்சம் கோடி ரூபாய் வருகின்றது.

இந்தத் தொகையை வைத்து இந்தியாவின் ஒவ்வொரு கிராமத்துக்கும் மூன்று ஆரம்பச் சுகாதார நிலையங்கள் அமைக்கலாம். 2.4 கோடி வீடுகள் கட்டலாம். 2703 அனல் மின் நிலையங்கள் கட்டலாம். 

இவ்வளவு ஏன்? சுருக்கமாகச் சொல்வதானால் ஒவ்வொரு இந்தியனுக்கும், தலா 56 000 ரூபாய் தரலாம். அப்படி இல்லையென்றால் வறுமைக்கோட்டுக்குக் கீழே இருப்பவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 1,82,000 ரூபாய் தரலாம்.

சவுக்கு சங்கர் எழுதிய இந்தியாவை உலுக்கிய ஊழல்கள் என்ற புத்தகத்தின் தொடக்க அத்தியாயத்தின் சில பகுதிகள்.

(ஸ்பெக்ட்ரம் ஊழல் மற்றும் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வரைக்கும் உண்டான 16 வகையான ஊழல்கள் குறித்து இந்தப் புத்தகத்தில் விரிவாக பேசப்பட்டுள்ளது)

#Amazon

இந்தியாவை உலுக்கிய ஊழல்கள் / Indiavai Ulukkiya Oozhalgal (Tamil Edition) Kindle Edition


17 comments:

KILLERGEE Devakottai said...

இதில் இந்திய மக்கள் வாக்களிக்க வாங்கிய தொகை எவ்வளவு ?

அதையும் ஊழல் கணக்கில்தான் காட்டிட வேண்டும்.

திருந்தாத மாக்'கள் இருந்தென்ன லாபம் ?

தமிழக கடன் மட்டும் இன்றைய தேதியில் ஒரு தலைக்கு 46,571 ரூபாய் இருக்கிறதாம்.

இதில் முதல்வர் முதல், தெருவோர பிச்சைக்காரரும் அடக்கம்.

Unknown said...

Backstabbing for Beginners என்ற திரைப்படம் பார்த்தீர்களா. அதில் வரும் Oil for Food என்ற திட்டத்தில் நமது அந்த சமயத்தில் ஆண்ட அரசினர் என்ன கொள்ளை அடித்தார்கள் என்பது பற்றி நினவு இருக்கிறதா .

கிருஷ்ண மூர்த்தி S said...

ஜோதிஜி! நல்லதொரு பதிவு! ஒவ்வொரு ஊழலும் யார் ஆட்சிக்காலத்தில் நடந்தது, குற்றம் சாட்டப்பட்டவர் யார் என்பதை அடைப்புக் குறிக்குள் கொடுத்திருந்தால் இன்னமும் உபயோகமாக இருந்திருக்கும்! சவுக்கு சங்கர் புத்தகத்தில் என்ன எழுதியிருக்கிறதோ தெரியாது. ஆனால் 2011 இல் அவுட்லுக் வார இதழை ஆதாரமாக வைத்து எழுதிய பதிவு இது https://consenttobenothing.blogspot.com/2011/07/sunday-special-ii-kd-brothers.html உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி SH கபாடியா முன், CAG ஆய்வு அறிக்கையில் அடுத்தடுத்து வர இருந்த ஊழல்கள் பற்றிய ஒரு தொகுப்பு. நிலக்கரி சுரங்க ஊழலில் சம்பந்தப்பட்டதாக சொல்லப்பட்டதி 2 லட்சம் கோடி

2004 முதல் 2014 வரை பானாசீனா தன் திறமையால் சேர்த்த சொத்து ஊழல் எதுவும் இந்தப்பட்டியலில் இல்லை என்பதே பெரிய குறை!

Avargal Unmaigal said...

அலைகள் ஒய்வதில்லை என்பது போல ஊழல்களும் ஒய்வதில்லை......அது தொடர்கின்றன....ஆனால் 2014 க்கு அப்புறம் ஊழகள் சுத்தமாக ஒழிந்துவிட்டன.. ஊழல் என்ற பெயரும் மறைந்துவிட்டது இப்போது ஊழல் என்ற வார்த்தை நன்கொடை என்று மருவி இருக்கிறது

Avargal Unmaigal said...

இவ்வளவு ஊழகள் நடந்து இருக்கிறது ஆனால் இதில் ஈடுபட்டவர்களில் சிலர்தான் சிறைத்தணடனை அனுபவிக்கின்றனர்... மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் அவர்கள் சிறை செல்லாமல் இருக்க நம்ம நீதிதுறையிலும் ஊழல்கள் பெருது இருக்கவேண்டும் இல்லையெனில் இப்படி ஊழ்கள் செய்தவர்கள் ஹாயாக இருக்க முடியாது அல்லவா?

Avargal Unmaigal said...

மோடி அவர்கள் வெளிநாடுகள் சென்று இந்தியாவிற்கு முதலீடு திரட்டுவதற்கு பதிலாக மேல் சொன்ன ஊழல்களில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான சட்டநடவடிக்கைகள் எடுத்து அப்படி கொள்ளை அடித்த பணத்தை மீட்டு இருந்தால் இந்தியா உலகின் வல்லரசு நாடுகளில் ஒன்றாக ஆகி இருக்கும் ஹும்ம்ம்ம்ம்

ஸ்ரீராம். said...

நீதித்துறையின் வேகம் இந்த மாதிரி வழக்குகளில் அசாதாரணமான ஸ்லோ. இது மாதிரி வழக்குகளில் நீதித்துறையும் காவல்துறையும் பெரும்பாலும் பணம் படைத்தவர்கள் பக்கமே பேசுவது நடந்துகொள்வதும் வேதனை.

ஜோதிஜி said...

2019-20-ம் நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், தமிழக அரசின் தற்போதைய கடன் எவ்வளவு? கடன் அதிகரிக்க காரணங்கள் என்ன?
2006 அதிமுக ஆட்சியின் முடிவில் 57 ஆயிரத்து 457 கோடி ரூபாயாக இருந்தது.
2011 ஆண்டு திமுக ஆட்சியின் முடிவில் 1 லட்சம் 14 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்தது.
அதிமுக ஆட்சியில், 2016-17ல் 3 லட்சத்து 17 ஆயிரம் கோடி ரூபாயாகவும்,
2019 மார்ச் மாதம் கடன் அளவு 3 லட்சத்து 55 ஆயிரத்து 844 கோடி ரூபாயாக கணிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் வாங்கியுள்ள கடனுக்கு ஆண்டிற்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் வட்டி செலுத்தப்படுகிறது

ஜோதிஜி said...

நீங்க சொன்ன பிறகு அதனைத் தேடி சேமித்து வைத்துள்ளேன். பார்க்கிறேன்.

ஜோதிஜி said...

ஆச்சரியமாக உள்ளது. நீங்கள் எழுதியதா? பாஜக வை வெளுத்து வாங்கியீருங்க? இன்னோரு பாகம் எழுதும் போது உங்கள் ஆவல்நிறைவேறும்.

ஜோதிஜி said...

உங்கள் வார்த்தை தவறு. ஊழல் என்பது முறைப்படுத்தப்பட்டு உள்ளது. ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன். சாதாரண மாநில சாலைகள் போடும் திட்ட மதிப்பீடு என்னவோ அந்தத் தொகையை செலவளிக்காமல் அப்படியே தின்று விடுவார்கள். சில வருடங்களில் அந்த சாலை பல் இளித்து விடும். இப்போது நாடு முழுக்க மாநில மற்றும் மத்திய அரசு சேர்ந்து தேசிய நெடுஞ்சாலைகள் போடுகின்றார்கள். மத்திய அரசு தான் அதிகம் போடுகின்றது. ஒரு சாலை போடும் போது ஒரு கிலோமீட்டருக்கும உத்தேசமாக மூன்று முதல் ஆறு கோடி வரைக்கும் இடம் பொறுத்து செலவாகின்றது. ஆனால் இப்போது நடப்பது என்னவென்றால் திட்ட மதிப்பீடு மூன்று கோடி என்றால் அதனுடன் ஒப்பந்தக்காரர் லாபம், அதிகாரிகள் லஞ்சம் என்று தொடங்கி அமைச்சருக்குக் கொடுக்க வேண்டிய லஞ்சம் வரைக்கும் உண்டான தொகையையும் அத்துடன் சேர்க்கப்படுகின்றது. காரணம் அடிப்படைத் திட்ட மதிப்பில் கை வைத்து தேசிய நெடுஞ்சாலை பல் இளித்து விடக்கூடாது என்பதற்காக. தரமும் கிடைத்து விடுகின்றது. அதிகாரிகள் அமைச்சர்களுக்கும் தேவையானதும் கிடைத்து விடுகின்றது. இது தான் வளர்ச்சி.

ஜோதிஜி said...

அதனால் தான் நீதித்துறையை அசைத்துப் பார்க்கும் நடவடிக்கைகள் கடந்த ஐந்தாண்டுகளில் நடந்தது. முடியவில்லை. இப்போது முயன்று கொண்டிருக்கின்றார்கள். இந்த ஐந்தாண்டு இறுதியில் தெரியக்கூடும்.

ஜோதிஜி said...

வாய்பில்லை. அதிகாரம் என்பது தேவைப்படும் சமயத்தில் தான் மக்களாட்சியில் பயன்படுத்த வேண்டும். அப்போது தான் எதிரிகள் கட்டுப்பாட்டுக்குள் இருப்பார்கள். லஞ்சத்தை ஒழிப்பது ஆட்சியாளர்களின் எண்ணமாக இருக்காது. தங்கள் அதிகாரகத்திற்கு பிரச்சனை வந்து விடக்கூடாது என்பது தான் முக்கிய எண்ணமாக இருக்கும். இது யார் வந்தாலும் இப்படித்தான் இங்கே இயங்க முடியும். இங்கு எல்லாத்துறைகளும் அரசியல்வாதிகளின் கடைக்கண் பார்வையில் தான் உள்ளது. மேலைநாடுகளின் நிர்வாகம் வேறு. உங்கள் ஊரில் ட்ரம்ப் மகள் மாட்டினார். தண்டனைத் தொகை கட்டி விட்டுத் தானே வெளியே வர முடிந்தது. இங்கே கவுன்சிலர் மகன் மேல் கூட கை வைக்க முடியாது.

ஜோதிஜி said...

அடுத்த பத்தாண்டுகளில் இன்னமும் கொஞ்சமாவது மாறும் என்று நம்புவோம்.

கிருஷ்ண மூர்த்தி S said...

நான் எழுதியதுதான் ஜோதிஜி! நான் BJP கட்சிக்காரனோ ஆதரவாளனோ இல்லை என்பது நினைவுக்கு வந்தால் அதிசயிப்பதற்கு ஒன்றுமில்லை. என்னுடைய எதிர்ப்பு காங்கிரஸ், திமுக இவைகள் இரண்டின் மீதானவை மட்டுமே என்பதற்கும் வலுவான காரணங்கள் இருக்கின்றன. பிஜேபியைக் கண்மூடித்தனமாக எதிர்ப்பதில்லை, அவ்வளவுதான்!

ஜோதிஜி said...

பிஜேபியைக் கண்மூடித்தனமாக எதிர்ப்பதில்லை

இதையே நான் சொல்லும் போது மக்கள் என்னை கொலவெறியாகப் பார்க்கின்றார்கள்.

வெங்கட் நாகராஜ் said...

ஊழல் - இங்கே புறையோடிவிட்ட ஒன்று. இதை மாற்ற, சரி செய்ய சரியான/ஒட்டைகள் இல்லா சட்டங்களும், அவற்றை மதிக்கிற மக்களும், சரியான நேரத்தில் வழக்குகளை தீர்த்து வைக்கிற நீதி மன்றமும் தேவை. இன்னும் இன்னும் தேவைகள் உண்டு! காசு கொடுத்தால் எதையும் செய்து விடலாம் என்ற எண்ணம் இங்கே அனைத்துத் தரப்பு மக்களிடமும் மனதில் ஊறி விட்டது.