Thursday, July 25, 2019

சீமானும் கமலும்............


FLEX BOARD

ஊருக்குச் சென்று வரும் போது ஒரு விசயத்தை மட்டும் கூர்மையாகக் கவனிப்பதுண்டு. ப்ளெக்ஸ் போர்டு எங்கே? எதற்காக? யாருக்காக? வைத்துள்ளார்கள் என்பதனைப் பார்த்தால் சில வித்தியாசங்களை உணர முடியும். திருச்சி வரைக்கும் விரலுக்குள் அடங்கும் எண்ணிக்கையில் மட்டும் அங்கங்கே தென்படும். ஆனால் திருச்சியைக் கடந்து புதுக்கோட்டையை நெருங்க நெருங்க எங்கெங்குகாணினும் ப்ளெக்ஸ் போர்டு தொடர்ந்து தென்பட்டுக் கொண்டேயிருக்கும்.

தொடர்ந்து ஆலங்குடி, பேராவூரணி, பட்டுக்கோட்டை செல்லும் வழிகள் எங்கெங்கும் இது பிரமாண்டமாக மாறிக் கொண்டேயிருக்கும். அரசியல் கட்சிகளை விடத் தனி மனிதர்களின் பூப்புனித நன்னீராட்டு விழா, பிறந்த நாள், இறந்தவர்கள் பற்றிக் குறிப்புகள் என்று வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வையும் ப்ளெக்ஸ் போர்டாக மாற்றியிருப்பார்கள். கடந்த ஐந்தாண்டுகளுக்குள் தான் இந்த மாற்றங்களை இங்கே பார்க்கிறேன்.

பெரும்பாலும் வெளிநாட்டிற்குச் சென்று சம்பாரித்த குடும்பங்களில் இது பெரிய அளவுக்கு விஸ்வரூபம் எடுத்துள்ளது என்பதனையும் நாம் கணக்கில் வைத்துக் கொள்ள வேண்டும்.

********************




பெவிக்காலுக்கு பிராண்ட் அம்பாசிடர்க்கு தகுதி படைத்த குமாரசாமி வெற்றிகரமாக தன் முதல் அமைச்சர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.  பாஜக குதிரைபேரம் நடத்தியது என்று வைத்துக் கொள்வோம். ஆனால் சித்தராமையா அரசியல் உலகம் அறிந்தது.  ஆனால் குமாரசாமி குடும்பம் எப்படிப்பட்டது?

தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களுக்குக்கூடத் தெரியாது? எந்தக் கோவில்? எங்குள்ளது? என்ன விசேடம்? என்ன பரிகாரத்திற்கு எந்த கோவில்? எந்த நாளில் எந்த நேரத்தில் வர வேண்டும்? போன்ற அத்தனை விசயங்களுக்கும் அப்பாவுக்கும் மகனுக்கும் தெரியும். கூடவே குடும்பத்திற்கும் தெரியும். அவர்கள் தமிழகத்தை தங்களின் கிரக பரிகாரத்திற்காக, அதிர்ஷ்டத்திற்கு, அடைய வேண்டிய பதவிக்காக மட்டும் பயன்படுத்துவார்கள். அப்படித்தான் பார்ப்பார்கள். மற்றபடி கர்நாடகாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு தேவைப்படும் எந்த விசயத்திற்கும் தொடக்கம் முதல் ஒரே கொள்கையைத்தான் கடைபிடித்தார்கள்.

அதாவது வாயை மூடிப் பேசவும்.

இந்த முறை முன்னாள் பிரதமர் என்ற கௌரவத்தில் இருந்த தேவகௌடா தான் ஆதிக்கம் செலுத்திய தொகுதியில் தோற்க்கடிக்கப்பட்டார். மக்கள் வச்ச ஆப்பு சாகிற வரைக்கும் போதும். பாடையில் ஏறும் போது கூட வரக்கூடாது.

தேவ கவுடா பரிதாபங்கள்.

•••••••••••••••••••••••


மற்ற மாநிலங்களில் எந்த கட்சியில் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் பெரிதாக அலட்டிக் கொள்ள மாட்டார்கள். அவரவருக்கு மாநில நலன் தான் முக்கியமாகக் கட்சி பாரபட்சமின்றி பார்ப்பார்கள். முடிந்தவரைக்கும் மிரட்டி தனக்கு வேண்டியதைப் பெற்றுக் கொள்வார்கள். இங்கே தலைகீழ்.

சம்மந்தப்பட்ட அரசியல்வாதி தனக்கு என்ன வேண்டுமோ? அதில் கனகச்சிதமாக முட்டி போட்டுச் செய்ய வேண்டியதைச் செய்து பெற்றுக் கொண்டு இங்கே வந்து உதார் காட்டுவார்கள். ஆனால் இங்குள்ள மக்கள் எங்களை நீ தொந்தரவு செய்யாமல் இருந்தால் போதும்? நீ என்னவோ செய்துக்கோ? என்ற மனநிலையில் இருக்கிறார்கள். இருப்பார்கள்.

ஆனால் தமிழக மக்கள் ஒரு விசயத்தில் உறுதியாக இருக்கின்றார்கள். தீவிரவாதம், பிரிவினைவாதம் போன்றவற்றை எந்த வழியில் எவரிடமிருந்து வந்தாலும் எதை எந்தக் காலத்திலும் ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள். காந்தி பாணியில் சொல்லப்போனால் சகிப்புத்தன்மை மிக்கவர்கள். இந்த சகிப்புத்தன்மை தான் ஒவ்வொரு தேர்தலிலும் கோடிகோடியாக கொள்ளையடித்தவனாக இருந்தாலும் கட்சி என்ற கட்டத்திற்குள் நின்று பார்த்துக் குத்து குத்து என்று குத்தி தள்ளிவிடுகின்றார்கள்.

கமல் தொடக்கம் முதலே ஓயிட் காலர் வேலை செய்து கிலுகிலுப்பை உருவாக்கினார். வெள்ளைத் தோல் பொய் சொல்லாது என்ற உயரிய தத்துவம் வேறு அவருக்குப் பொருந்திப் போகின்றது. இப்போது வேலூரி பாராளுமன்ற வேட்பாளருக்கு மக்கள் நீதி மையம் தன் வேட்பாளரை நிறுத்தவில்லை.  நாசூக்காக ஒதுங்கிவிட்டார். சீமான் விடுவதாக இல்லை.

எவையெல்லாம் ஓட்டுப் போடுகின்ற மக்களுக்குப் பிடிக்காதோ அதையே தன் கொள்கையாக வைத்திருக்கிறார். அதையே பிரகடனப்படுத்திக் கொண்டேயிருக்கிறார். அவர் வாய் என்ற உறுப்பு அவருக்குக் கட்டுப்படாதது போல. வாட்ஸ்அப் வந்து மானாவாரியான சேதாரத்தை உருவாக்கியுள்ளது.

18 முதல் 25 வயதுள்ளவர்களுக்குக் கிளர்ச்சி ஊட்டுபவராக உள்ளார். அது மொத்தமே ஆறு சதவிகிதம் தான். சாதாரண மனிதர்கள், சராசரி மனிதர்கள் விரும்பக்கூடிய கடன் தள்ளுபடி, ஒரு நொடியில் ஓராயிரம் வேலைவாய்ப்பு போன்ற புளூகுமூட்டைகளைச் சொல்லாமல் புகாபுகா வேறு என்று சிரித்துப் பயமுறுத்துகிறார். ஏறக்குறைய அவர் நம்பிக்கொண்டிருக்கும் உயரிய தத்துவங்கள் இங்கே ஜோக்கர், கோமாளி,நகைச்சுவை நடிகர் போலவே வெகுஜன மக்களால் பார்க்கப்படுகின்றது. அவரும் மாறத் தயாராக இல்லை.

அவரைப் பார்க்கக் கூட்டம் கூடிக் கலைந்து செல்லும் மக்களும் நல்லாப் போசுறாரு. ஆனால் ........ என்று இழுத்துக் கொண்டு போய் அடுத்த வேலையில் இவரை மறந்து விடுகின்றார்கள்.

பக்கா கிரிமினல்கள், பயங்கர கிரிமினல்கள் மத்தியில் அரசியல் எப்படிச் செய்யவேண்டுமென்பதை காளிமுத்து மகள் தான் இனி கற்றுக் கொடுக்க வேண்டும். அல்லது பிறந்த மகன் வாலிபனாக வரும் வரைக்கும் இப்படி ஊருக்கு ஊர் தொண்டைத்தண்ணிர் வற்ற கத்திக் கொண்டே திரிய வேண்டியது தான்.

சீமான் பரிதாபங்கள்..........

•••••••••••••••••••••••••

சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிய ராட்சசி படம் என்னை மிகவும் கவர்ந்தது.  தற்போதைய ஆசிரியர்களைப் பற்றி அதிகம் பேசியது.  இன்னமும் பேசவேண்டிய விசயங்கள் உள்ளது..............

1. அரசுப் பள்ளி அல்லது தனியார் பள்ளி ஆசிரியர்கள் எவராக இருந்தாலும் மாணவர்களை (நீங்க எல்லாம் எப்படித்தான் படிக்கப் போகிறீர்களோ?சிபிஎஸ்சி பாடத்திட்டத்தை விட அதிகமாக இருக்கிறது? பாடம் முழுக்க படித்தால் தான் உங்களால் எழுத முடியும்? எங்களுக்கே பாதி புரியவில்லை? )பயமுறுத்தக்கூடாது என்று சட்டம் கொண்டு வர வேண்டும்.

2. சுவராசியம் என்ற வார்த்தை என்றால் என்ன? என்பதனை முதலில் ஆசிரியர்களுக்குச் சிறப்பு வகுப்பு மூலம் அவர்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டும். பயிற்சி கொடுக்க வேண்டும்.

3. ஒரு செடி எவ்வாறு நீர் உறிஞ்சுகிறது? எப்படி கடத்துகின்றது? அதன் வேர்கள் பங்களிப்பு என்ன? என்ற பாடத்தை நடத்தும் போது குறைந்தபட்சம் ஆசிரியர் செய்முறை விளங்கங்களை மேஜையில் வைத்து மாணவர்களைச் சுற்றிலும் நிற்க வைத்துச் சொல்லிக் காட்டிவிட்டு அதன் பிறகு வாய்ப்பு இருந்தால் காணொளி காட்சி மூலம் புரியவைத்து பாடம் நடத்த வேண்டும். இவை குறித்து எந்த வசதிகளும் இல்லாத பள்ளிக்கூடங்களில் மாணவர்களிடம் உங்கள் வீட்டில் கணினி இருந்தால் அப்பாவிடம் கேட்டு நீங்கள் முழுமையாகக் காட்சியாகப் பார்த்து விட்டு வாருங்கள்? என்று ஊக்குவிக்க வேண்டும். ஆசிரியர் சொன்னால் மட்டுமே மாணவர்கள் அதைப் பார்க்க வேண்டும் என்ற (கட்டாயத்தின் அடிப்படையில்) எண்ணமே உருவாகின்றது.

4. வரலாறு, புவியியல், அறிவியல் பாடங்களை நடத்தும் ஆசிரியர் கட்டாயம் பல புத்தகங்கள் தொடர்ந்து வாசிக்கும் ஆசிரியர்களாக இருந்தால் மட்டுமே அந்தப் பாடங்கள் மாணவர்களுக்குச் சுவராசியமாக இருக்கும். சிறப்பு வகுப்பு என்ற பெயரில் கோடை விடுமுறையில் தொடர்ந்து இரண்டு மணி நேரம் 16 பக்கம் உள்ள பாடங்களை நடத்தி விட்டு நாளை டெஸ்ட் என்று சொல்லும் ஆசிரியர் என் பார்வையில் கொடூரமானவர் மட்டுமல்ல. மாணவர்களின் மனங்களை வெல்ல முடியாத கொடுமையான மனிதரும் கூட.

தற்போது இங்கே ஆசிரியர்கள் தான் மாணவர்களுக்குச் சமமாக தற்கால தொழில் நுட்ப உலகத்தை புரிந்து கொள்ள வேண்டும்.


12 comments:

KILLERGEE Devakottai said...

கதம்பமாக செய்திகள் சுவாரஸ்யமாக இருந்தது நண்பரே

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

கதம்ப செய்திகளில் தேவகௌடா பற்றிய செய்தியை மிகவும் ரசித்தேன்.

திண்டுக்கல் தனபாலன் said...

ராட்சசி - விரைவில் பார்க்க நினைத்த படம்...

ஸ்ரீராம். said...

செய்திகள் சுவாரஸ்யம்தான். ஆனாலும் அந்த முழம்போடும் சிறுமி கவர்ந்து விட்டாள்.

Rathnavel Natarajan said...

அருமை. நன்றி

வெங்கட் நாகராஜ் said...

சின்னச் சின்ன செய்திகள் ஸ்வாரஸ்யம்.

நம் ஊர் அரசியல் - அழுக்கு... பணம் மட்டுமே சம்பாதிக்கும் நோக்கத்துடன் இருக்கிறார்கள் பெரும்பாலான அரசியல்வாதிகள்....

முழம்போடும் சிறுமி - மனதை ஏதோ செய்த படம்.

ஜோதிஜி said...

எனக்கு ரொம்ப பிடித்த படங்களை தொடர்ந்து இங்கே போட விருப்பம். நன்றி.

ஜோதிஜி said...

தொடர் வாசிப்புக்கு நன்றி அய்யா.

ஜோதிஜி said...

நன்றி ராம்.

ஜோதிஜி said...

குடும்பத்துடன் பார்க்கவும்.

ஜோதிஜி said...

அப்பனும் மகனும் சாதாரண நபர்கள் இல்லை. ஐம்பது கலைஞர். ஆனால் கலைஞராவது தமிழகத்திற்கு நிறைய செய்துள்ளார். இவனுங்க அதுவும் இல்லை.

ஜோதிஜி said...

நன்றி நண்பா.