Tuesday, July 30, 2019

ஜுலை மாதமென்பது.........



ங்கு ஒவ்வொருவருக்கும் ஒரு வாழ்க்கையுண்டு. தான் பணிபுரியும் வேலைக்குத் தொடக்கத்தில் எட்டு மணி நேரம் ஒதுக்கினார்கள். இப்போது 12 மணி நேரம் ஒதுக்க வேண்டிய சூழல் மாறியுள்ளது. மீதி 12 மணி நேரத்தில் தான் தன் சுய விருப்பங்கள், குடும்ப விருப்பங்களுடன் ஓய்வும் எடுத்துக் கொள்ள வேண்டியதாக உள்ளது.  தினந்தோறும் இரண்டு மணி நேரத்தை தன் சுயவிருப்பதிற்காக எடுத்துக் கொண்டாலும் நிறையச் சாதிக்க முடியும்.

ஆனால் நாம் செய்வதில்லை.  ஆனால் நான் எப்போதும் என் ஓய்வு நேரங்களை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறை எடுத்துக் கொள்வதுண்டு.  அதனை வாசிக்க, எழுதத் தான் அதிகம் பயன்படுத்துகிறேன்.


நாம் வாசிக்கும் புத்தகம் ஒவ்வொன்றும் மிக முக்கியமானதாக இருக்கவேண்டும் என்பதில் குறியாக இருப்பேன்.  வெறுமனே வாசிப்பு என்பதற்கும் அதனைப் புரிந்து கொண்டு அதனைப் பற்றி விமர்சனமாக எழுத வேண்டிதற்கும் வித்தியாசம் நிறைய உள்ளது.  இதன் மூலம் உணர்ந்து படிக்க முடியும்.  முழுமையாக உள்வாங்கவும் முடியும். இது கடந்த சில மாதங்களில் சாதிக்க முடிந்ததாக மாறியது மகிழ்ச்சியே.


ணைய உலகில் எனக்கென்று சொந்த விருப்பங்கள் சில உண்டு.  குறிப்பாக வலைபதிவில்  சில விருப்பங்களைச் செய்ய வேண்டும் என்று நினைத்து வைத்து இருந்தேன். ஒவ்வொரு வருடத்திலும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதம் எனக்குத் தனிப்பட்ட முறையில் முக்கியமான மாதமாகும்.  அது என்ன? என்பதனைப் பற்றி அடுத்த பதிவில் எழுதியுள்ளேன்.


2013 ஆம் ஆண்டு மிக மிக அதிகமாக எழுதிய ஆண்டு.  அதற்குப் பிறகு படிப்படியாகக் குறைந்து கொண்டே வந்தது.  ஒரு மாதத்தில் 17 பதிவுகள் எழுதிய காலம் மாறி ஒரு வருடத்தில் மொத்தமே 30 பதிவுகள் எழுதியதும் நடந்தது.  ஆனால் சென்ற மாதம் இந்த முறை எத்தனை இடர்பாடுகள் வந்தாலும் தினமும் ஒன்று எழுத வேண்டும். ஒவ்வொன்றும் சமகால சமூகத்தில் நடக்கும் சம்பவங்களாக இருக்க வேண்டும். அதிக விவாதத்தை உருவாக்கியதாக இருக்க வேண்டும். புதிய மாற்றம், பிரச்சனைகளை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்று யோசித்து வைத்திருந்தேன். 

அதன்படி இந்த மாதம் முழுக்க தினமும் ஒரு பதிவு என்று எழுத முடிந்தது. 

நிச்சயம் ஏதோவொரு சமயத்தில் தினமும் இரண்டு பதிவுகள்  எழுதி வெளியிட வேண்டும் என்ற எண்ணம் உண்டு.  அதையும் சமயம் வரும் போது நிறைவேற்றுவேன்.


த்து வருடங்களாக ஃபேஸ்புக்கில் இருந்தாலும் அதனை அதிகமாகப் பயன்படுத்துவதில்லை.  முக்கியமான நபர்கள் எழுதுவதை அதன் மூலம் படிக்க வாய்ப்பு இருந்த காரணத்தால் வாசிப்புத் தளமாகப் பயன்படுத்தி வந்தேன்.  இந்த வருடம் தான் மிக அதிக அளவு அதாவது தினமும் ஏதாவது ஒன்றைப் பற்றி எழுதத் தொடங்கினேன். ஆனாலும் இருட்டுக்குள் இருந்து கொண்டு கல்லெறியும் கலாச்சாரம் நிறைந்த பிற்போக்குவாதிகள் அந்த தளத்தில் அதிகம் இருப்பதால் கரம் சிரம் புறம் பார்த்து நகர்ந்து கொண்டே வந்தேன்.  

அங்கு எழுதியது, வாசித்தது எனக்கு இந்த  மாதம் பலன் உள்ளதாக இருந்தது.  நான் நினைத்த மாதிரியே இந்த மாதத்தில் என் நீண்ட நாள் விருப்பத்தைச் சாதித்த திருப்தியுள்ளது.


ண்பர் சீனிவாசன் தான் முதலில் மின் நூலுக்கென இணையதளம் உருவாக்கினார்.  அதற்கு முன்னால் தமிழில் யாராவது உருவாக்கி இருக்கின்றார்களா? என்று தெரியவில்லை.  

ஆனால் அவர் இடைவிடாமல் உழைத்த உழைப்பில் இன்று அந்த தளம் 61 லட்சம் இலவச மின் நூல்களை உலகம் முழுக்க வாழும் தமிழர்களிடம் கொண்டு சேர்த்துள்ளது. தமிழர்கள் தமிழகத்தில் எட்டு கோடியும் வெளியே மூன்று கோடியும் இருப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. 11 கோடி என்றால் இணையம் பயன்படுத்த தெரிந்தவர்கள், நாள் தோறும் இணைய பயன்பாட்டில் இருப்பவர்கள் என்று ஓரு கோடி தமிழர்களை எடுத்துக் கொள்ள முடியும். இதனை கணக்கிட்டால் சீனிவாசன் மற்றும் அவரின் குழுவின் உழைப்பு எத்தனை சதவிகித மக்களைச் சென்று அடைந்துள்ளது. இது மலைப்பான சாதனை ஆகும்.

என் மின்னூல்களைச் சீனிவாசன் தான் சிரத்தை எடுத்து வெளியிட்டு அங்கீகாரம் கொடுத்தார்.  அதன் பிறகு பல தளங்கள் எடுத்து வெளியிட்டது.  பிரதிலிபி தளமும் ஒன்று.  இன்று பத்திரிக்கைகளில் கதைகள் என்ற அமைப்பே காணாமல் போய் திரைத்துறை துணுக்குகளை மட்டும் வைத்துப் பிழைப்பு நடத்திக் கொண்டு இருக்கிறது.


னால் பிரதிலிபி இன்று தமிழில் பல நூறு எழுத்தாளர்களை, கட்டுரையாளர்களை உருவாக்கிக் கொண்டேயிருக்கின்றது.  துடிப்பான இளைஞர்கள் அதில் சுயலாபம் எதுவும் இல்லாமல் இந்த சேவையைச் செய்து கொண்டு இருக்கின்றார்கள்.  அவர்களுக்கு என் வாழ்த்துகள்.  சில நாட்களுக்கு முன் இந்த தகவலை எனக்கு அனுப்பி இருந்தார்கள்.  யாரோ ஒருவருக்கு நம் எழுத்து ஏதோவொரு வகையில் சென்று சேர்ந்து கொண்டேயிருப்பது மகிழ்ச்சி.


2019 ன் மற்றொரு குறிப்பிடத்தக்கச் சாதனை கிண்டில் அறிமுகமாகி அதில் என் மின்னூல்கள் வெளியிடப்பட்டது.  மூன்று மாதத்திற்கு ஒரு முறை சிறிய தொகை என்றாலும் வங்கியில் வந்து விழுந்து கொண்டேயிருக்கின்றது.

இவையெல்லாம் எழுத்தே தொழிலாகக் கொண்டவர்களுக்கு மட்டும் தான் முடியும் என்று நம்பியிருந்தேன்.  ஆனால் நாம் உருவாக்கியுள்ள நம்பகத் தன்மை ஏதோவொரு வகையில் நமக்கு திரும்பவும் வந்து கொண்டு இருக்கின்றது என்பதாக நினைத்துக் கொண்டேன்.

அடுத்த பதிவு இம்மாதத்தின் இறுதி பதிவு.  சிறிது இடைவெளி விட்டு உரையாடுவோம்.

பிரதிலிபி எழுத்தாளர்களின் சிறந்த படைப்புகளை வாசியுங்கள்

உங்களது படைப்புகளின் புள்ளிவிவரம்
வணக்கம் ஜோதிஜி திருப்பூர்,
கடந்த வாரம் உங்கள் படைப்புகளுக்கு நல்ல எதிர்வினைகள் வந்திருக்கிறது. பிரதிலிபியில் உங்களது புள்ளிவிவரங்கள் இதோ :


எழுத்தாளர் புள்ளிவிவரம் 
மொத்த வாசகர்கள்
10343
சராசரி மதிப்பீடு
3.71
மொத்த விமர்சனங்கள்
31
மொத்த ஃபாலோவர்ஸ்
270
























10 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

உள்வாங்குவதையும், அதைவிட அவற்றை தட்டச்சு செய்யும் வேகமும் நேரில் கண்டுள்ளேன்...!

என்னது தினமும் இரண்டு பதிவுகளா...? சிந்திக்க நேரம் அதிகம் ஒதுக்க வேண்டும் - எனக்கு...!

நல்ல எதிர்வினைகளுக்கு பாராட்டுகள்...

நண்பர் சீனிவாசன் அவர்களுக்கும் நன்றிகள்... வாழ்த்துகள்...

விருப்பங்களை அறிய காத்திருக்கிறேன்...

G.M Balasubramaniam said...

முதலில் நண்பர் ஸ்ரீநிவாசனுக்கு பதிப்பிக்கக் கேட்டு அனுப்பி இருந்தேன் எந்துர்திஷ்டம் அவரிடமிருந்துபாசிடிவ்வான பதில் வரவில்லை பிரதி லிபிக்கு சிலபதிவுகளனுப்பி இருந்தேன் அதில் கருத்திட சிரமம் இருப்பதுடெரிந்தது இப்போது புஸ்தகாவில் நான்கு மின் பதிப்புகள்வந்திருக்கின்றனஎங்கள் வீட்டிலு ஜூலை மாதம்ம் விசேஷங்கள் நிறைந்தது பிறந்தநாட்களும் மண நாட்களும் வரும்மாதம் இது

த. சீனிவாசன் said...

கடும் காலதாமதத்துக்கு மன்னிக்கவும் ஐயா.
https://github.com/KaniyamFoundation/Ebooks/issues/251

இப்போது, இங்கே மின்னூலாக்கம் பற்றி எழுதியுள்ளேன்.

விரைவில் வெளியிடுவோம்.

மிக்க நன்றி

ஸ்ரீராம். said...

அடுத்த பதிவில் 'எழுதியுள்ளேன்' என்பதை 'எழுதவுள்ளேன்' என்று எழுதினால் பொருத்தமாய் இருக்கும்! :)) (ஏற்கெனவே நீங்கள் எழுதி வைத்திருந்தாலும்) அல்லது அடுத்து வெளியிடவிருக்கும் பதிவில் எழுதியுள்ளேன் என்று இருக்கலாம். இது ஒரு பெரிய விஷயமா என்றால் உங்கள் பதிவுகள் பின்னால் மின்நூல் ஆகலாம். எடிட்டிங் இப்போதே செய்து விடலாமே!

ப்ரதிலிபியின் சேவை பாராட்டத்தக்கது. தினசரி எனக்கு வந்து கொண்டிருக்கிறது.

உங்கள் பதிவுகள் பாராட்டத்தக்க உபயோகமான பதிவுகள்.

ஜோதிஜி said...

உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்கிறேன். நன்றி. பிழை திருத்த நீச்சல்காரன் தளம் இருப்பதால் என்னால் இந்த அளவுக்கு தினம் ஒன்று எழுத முடிகின்றது. என்னுடைய சூழலில் பிழை திருத்த வாய்ப்பே இல்லை.

ஜோதிஜி said...

நன்றி சீனி

ஜோதிஜி said...

சீனிவாசன் பணி என்பது தமிழர்களின் அடுத்த 50 ஆண்டுகளுக்கான உழைப்பு.

கரந்தை ஜெயக்குமார் said...

பிரதிலிபி மற்றும் சீனிவாசன் ஆகியோரின் முயற்சி போற்றுதலுக்கு உரியது

Rathnavel Natarajan said...

அருமை. நன்றி

வெங்கட் நாகராஜ் said...

நண்பர் சீனிவாசன் அவர்களின் முயற்சி பாராட்டுக்குரியது. தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கிறார். அவர் தளம் மூலம் எனது சில பயணக் கட்டுரைகளும் வெளி வந்திருக்கிறது என்பதில் மகிழ்ச்சி. இன்னும் சில பயணக் கட்டுரைகளை தொகுத்து அனுப்ப வேண்டும்.

தினம் ஒரு பதிவு - வாழ்த்துகள்! தொடர்ந்து எழுதுங்கள் ஜோதிஜி!