Sunday, October 20, 2019

திருப்பூர் வாக்கத்தான் ஐந்து கிலோ மீட்டர் Tirupur Walkathan

சென்ற வாரம் காலை சிக்கண்ணா கலைக்கல்லூரியில் இரண்டாவது ஆண்டாக திருப்பூர் வாக்கத்தான் 2019 நடைபெற்றது. சென்ற வருடம் என்னுடன் வீட்டில் இருவர் மட்டுமே கலந்து கொண்டனர். இந்த முறை மூன்றாவது மகளும் என நாங்கள் நான்கு பேர்களும் ஐந்து கிலோ மீட்டர் தொலைவைக் கடந்து வந்தோம்.

சென்றவருடம் ஐந்து கிலோ மீட்டர் என்று சொல்லி பத்து கிலோமீட்டர் தொலைவு வைத்து இருந்தார்கள். மக்கள் தடுமாறிவிட்டார்கள் போல.

இந்த முறை தொலைவைக் குறைத்து விட்டார்கள்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியாளராகப் பொறுப்பேற்ற பின்பு திரு. விஜய கார்த்திகேயன் கலந்து கொண்ட முதல் பொது நிகழ்ச்சி இது.

விழா ஏற்பாடு சுமார் ரகம். சென்றவருடம் நடந்து செல்லும் பாதை முழுக்க பல முன்னேற்பாடுகள் செய்து இருந்தார்கள். இந்த வருடம் இல்லை. 20 வயதுக்கு உட்பட்ட பெண்கள் மயங்கி விழுவதைப் பார்த்தேன். வாழ்நாள் முழுக்க தினசரி வாழ்க்கையில் ஆயிரம் அடிகள் கூட நடக்க வாய்ப்பு இல்லாத வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் இளையர்கள் சற்று தடுமாறத்தான் செய்கின்றார்கள். ஆனாலும் மக்களின் ஆர்வம் பாராட்டக்கூடியதாக இருந்தது. எங்கள் டோக்கன் 10500. சாலை முழுக்க மக்களின் தலை வெள்ளம் போலக் காட்சியளித்தது.

விழா தொடங்கும் போது வார்ம் அப் என்று ஒரு நிகழ்ச்சி நடத்தினார்கள். அதில் யோகாவில் உள்ள சில உடற்பயிற்சிகள் உண்டு. ஆனால் நம் மக்கள் யோகா செய்வதற்கு ஜிமிக்கி கம்மல் பாட்டு போட்டால் தான் சுறுசுறுப்பாகச் செய்கின்றார்கள்.

கலந்து கொண்ட ஒவ்வொருவர் கையிலும் கட்டாயம் அலைபேசி உள்ளது. நூறடிக்கு ஒருவர் ஒரு முறையாவது செல்பி எடுத்துக் கொண்டேயிருக்கின்றார்கள்.

பெண்கள் வஞ்சகம் இல்லாமல் சாப்பிடுவார்கள் போல. ஆனால் அவர்கள் ஆசைப்பட்டு அணியும் டைட் ஆன உடைகள் அவர்களை உண்டு இல்லை என்று படுத்தி எடுக்கின்றது. நடந்து கொண்டேயிருப்பவர்கள் பல இடங்களில் பார்வையாளர்களாக மாறிவிடுகின்றார்கள். இனிவரும் காலங்களில் பெண்கள் உடைகளில் அலைபேசி வைக்கத் தனியாக ஏதாவது டிசைன் செய்ய வேண்டும்.

திருப்பூர் ஏற்றுமதியில் முதல் ஐந்து இடத்தில் உள்ள ஈஸ்ட்மென்ட் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனர் திரு சந்திரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் விளையாட்டுக் காதலன். திருப்பூர் ஜெவாபாய் பள்ளியில் அவர் கட்டிக் கொடுத்த கட்டிடம் மூலம் வருடந்தோறும் ஆயிரக்கணக்கான மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த விழாவிற்கும் நன்கொடை அளித்துள்ளார். மேடையில் பேசியவர் இந்த விழாவிற்கு 2 கோடி செலவு என்று சொல்லி இருந்தார். குழப்பமாக இருந்தது.

இந்த வருடம் முதல் முறையாகக் கலந்து கொண்ட மகளிடம் நான் சொல்லி வைத்திருந்தேன். (அவரும் என்னைப் போல உணவுகளின் காதலன்/காதலி.)

நாம் நடந்து முடிந்த பிறகு தூள் பக்கோடா ஒரு இடத்தில் ரொம்ப சுவையாகச் செய்வார்கள். நாம் இருவரும் மட்டும் செல்வோம் என்று.

மற்ற இருவரும் இதைக் கேட்டு மிக உசாராக எங்கேயும் நிறுத்த விடாமல் வண்டி வீட்டுக்கு வந்து சேரும் வரை உச்சபட்ச காவல் கண்காணிப்புடன் நடந்து கொண்டது வருத்தமாக இருந்தது












7 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நீல வண்ண T-shirt போட்டிருக்கும் பையன் யார்...?

ஜோதிஜி said...

இரட்டையரில் இரண்டாவது பங்காளி. நம்ம கோஷ்டி. சாப்பாடு வெறியர். டோக்கா கொடுத்துக் கொண்டிருந்தார். தூள் பக்கோடா வாங்கித் தர்றேன் என்று நகர்த்திக் கொண்டு போய் நடக்க வைத்தேன். வந்தவுடன் மானாங்கண்ணியாக எனக்கு திட்டு. கால் வலிக்குதாம். ஒரே சிரிப்பு.

G.M Balasubramaniam said...

பள்ளியில் படிக்கும்போது தினமும் 5 கி மீ நடந்துதான் பள்ளிக்குப் போவோம் அப்போதெல்லாம் தினம்தினம் வாக்கதான் தான்

ஜோதிஜி said...

இப்போது 300 மீட்டர் தொலைவு நடப்பதற்கு தடுமாறுகின்றார்கள்.

அது ஒரு கனாக் காலம் said...

நான் BHEL கணேசபுரத்தில் இருந்து ...C/D செக்டர் வழியாக , A வந்து பின் E செக்டர் வந்து , BHELEC சினிமா தாண்டி , GOVT ARTS COLLEGE வர ஏறத்தாழ 4 OR 5 KM இருக்கும் .... இங்கே ( துபாயில் ) 10 KM , மினி மராத்தான் , ஆனால் நிறைய பேர் , அதை walkthaan ஆக மாற்றி விடுவார்கள் ... எனக்கு மாரத்தான் கலந்து கொள்ள வேண்டும் என்று மிக பெரிய அவா , அதுவும் 60 வயதை தொடும் பொழுது ( இப்போ 58 ரன்னிங்) , 4 மாதம் பயிற்சி வேண்டும் என்று சொல்கிறார்கள், அது தவிர , தினம் நடை /ஓட்டம் போன்ற பயிற்சிகளும் தேவை.... பாப்போம் நடக்கிறதா என்று .

ஜோதிஜி said...


நன்றி சுந்தர். மலரும் நினைவுகள் அற்புதம்.
நான் தினசரி வாழ்க்கையில் வாய்ப்பு இருக்கும் போதெல்லாம் நடந்து தான் செல்லவே விரும்புகிறேன். வாகனங்களை எடுப்பதே இல்லை. அலைபேசியை வீட்டுக்குள் வைத்து விட்டுத் தான் வெளியே செல்வேன். லிப்ட் இருக்கும் இடங்களில் மாடிப்படிகளின் வழியே தான் கட்டாயம் செல்வேன். மகள்களுடன் செல்லும் போது ஒருவர் மட்டுமே என்னுடன் சேர்ந்து கொள்வார்.
தினமும் அதிகாலையில் 3 முதல் 5 கிலோ மீட்டர் நடப்பதுண்டு. மூச்சிரைப்பு வருகின்றதா? என்று பார்ப்பதுண்டு. ஆனால் 10 கிலோ மீட்டர் வரைக்கும் நடந்து பார்த்து விட்டேன். ஒன்றும் பிரச்சனையில்லை. நமது இதயம் ஸ்ட்ராங் போலிருக்கு என்று நினைத்துக் கொள்வதுண்டு. முழு உடல் பரிசோதனை செய்த போது மருத்துவரும் இதையே சொன்னார். ஆரோக்கியம் என்ற சொத்தை சேர்க்க முடிந்துள்ளது என்று நினைத்துக் கொண்டேன்.
மாரத்தான் இங்கே நடப்பதில்லை. நீங்க சொன்ன மாதிரி அது நடந்தால் ஒரு கை பார்த்து விடலாம். இன்னமும் ஓடிப் பார்த்தது இல்லை.

Rathnavel Natarajan said...

வாழ்த்துகள்