Wednesday, October 23, 2019

ஃபேஸ்புக் Face book என்ற மாய உலகம்

தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு ஃபேஸ்புக் என்ற மந்திரச் சொல் என்னவெல்லாம் கடந்த பத்து வருடங்களிடம் தந்துள்ளது என்பதனை பட்டியல் இட்டுப் பார்த்தால் அதனை பின்வருமாறு பிரிக்கலாம்.

1. என் மதம் தான் பெரிது.

2. என் சாதி தான் பெரிது.

3. என் கட்சி தான் பெரிது

4. பெரியார் மட்டுமே சிறந்த தலைவர்.

5. பிரதமர் நரேந்திர மோடி செய்தது, செய்து கொண்டிருப்பது, செய்ய நினைத்திருப்பது அனைத்தும் மிகச் சரியானது.

6. திரைப்படங்கள் அது சார்ந்த தகவல்கள்.

இதனைத் தவிரத் திராவிடம், ஆரியம், தமிழ்த் தேசியம், சீமான்,  ஒடுக்கப்பட்ட ஒதுக்கப்பட்டவர்களின் உரிமைக்குரல்கள்.

இதற்குள் தான் நீங்கள் சுற்றிச் சுற்றி வர வேண்டியதாக இருக்கும்.  

மூக்கை பொத்தியே ஆக வேண்டிய துர்நாற்றம் இருக்கும் இடத்தில் வாழும் போது எங்கேயாவது நல்ல வாசனையை முகர்ந்து பார்க்க முடியாதா? என்று ஏங்கும் மனநிலையில் நாம் இருந்தால் எப்படியிருக்கும்?  அப்படித்தான் தற்போதைய ஃபேஸ்புக் உலகத்தை நம்மவர்கள் மாற்றி வைத்துள்ளனர்.  மேலும் மேலும் இதனை மாற்றிக் கொண்டே வந்து கொண்டும் இருக்கின்றார்கள்.

சில நண்பர்கள் அழுத்தம் தாங்க முடியாமல், தங்கள் நேரத்தை ஃபேஸ்புக் திருடிவிடுகின்றது என்று இதனை நிரந்தரமாக மூடி வைத்து விட்டு வெளியேறி விடுகின்றார்கள். சிலரால் முடிவதில்லை. 

கிண்டில் ஒரு போட்டி அறிவித்துள்ளார்கள்.  

கதை, கட்டுரைகள் இது வரை எங்கும் வெளியே பிரசுரம் செய்யாமல் இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு விதித்து போட்டியில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்து உள்ளனர்.  நான் இதுவரையிலும் போட்டிகள் எதிலும் கலந்து கொண்டதில்லை.  நான் இதில் கலந்து கொள்கிறேன்.  திருப்பூர் குறித்து ஒரு நான் பிக்சன் வடிவில் ஒரு புத்தகம் எழுதிக் கொண்டிருக்கின்றேன்.  

5 முதலாளிகளின் கதை.  

திருப்பூரில் உள்ள ஐந்து முதலாளிகளின் வாழ்க்கை மூலமாக இங்குள்ள சமூகம், தொழிலாளர்களின் வாழ்க்கை, மாறிக் கொண்டே வந்த சூழல்கள், வீழ்ந்த சாதித்த முதலாளிகளின் தொழில் வாழ்க்கை என்பதனை பதிவு செய்யக் கடந்த ஒரு மாதமாக எழுதிக் கொண்டு வருகின்றேன்.

நான் எப்போதும் எந்தக் காரியத்தில் இறங்கி விட்டாலும் முழுமையாக அதற்குள் என்னைப் பொருத்திக் கொண்டு முழுமையாக அதனுடன் ஒன்றிப் போய்விடுவதுண்டு.  அந்தக் காரியம் முழுமை அடைந்ததும் மட்டுமே அடுத்த வேளையில் கவனம் செலுத்துவேன்.  இதுவரையிலும் தொடர்ந்து எழுதிக் கொண்டு வருவதும் இப்படிப்பட்ட குணாதிசயம் இருப்பதால் தான் இங்குள்ள என் தொழில் வாழ்க்கை நிர்ப்பந்தங்களைக் கடந்து என்னால் இந்த எழுத்துலகில் இயங்க முடிகின்றது.

ஆனால் கடந்த ஒரு வருடமாகத் தினமும் ஃபேஸ்புக் உலகில் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் எனக்கு ஃபேஸ்புக் என்னைத் தொடர்ந்து எழுத வைத்துக் கொண்டிருப்பதைப் போல என் சிந்தனைகளைத் திருடிக் கொண்டுள்ளது என்பதனை இப்போது தான் என்னால் உணர முடிகின்றது.

ஆழமற்ற வாசிப்பு, அர்த்தமற்ற வாசிப்பு என்று எல்லாவற்றையும் கவனித்து நம் திறமைகளை எப்படி மட்டுப்படுத்துகின்றது என்பதனை என்னால் இப்போது நன்றாக உணர முடிகின்றது.  

5 முதலாளிகளின் கதை குறித்து அடுத்து அறிவிப்பு விரைவில் வெளியே வரும்.

இணைய உலகம் இப்போதைய சூழலில் முக்கியமானது. நமக்கு அவசியமானது.  இரண்டு நாட்களுக்கு முன்னால் நடந்த செய்திகள் அனைத்தும் ஒரு வருடத்திற்கு முன்னால் நடந்தது போலப் பழசாக மாறிவிடுகின்றது.  ஆனாலும் ஃபேஸ்புக் குறித்து, அதனை உருவாக்கிய அதன் முதலாளி மார்க் குறித்து எனக்கு எப்போதும் தீரா ஆச்சரியமுண்டு.

எழுத்தாளர் என்.சொக்கன் அவர்கள் பேஸ்புக் எப்படி உருவானது? அதனை உருவாக்கிய மார்க் அவர்களைப் பற்றி ஒரு புத்தகம் எழுதி உள்ளார்.  கிண்டிலில் வாசிக்கக் கிடைக்கின்றது.

சொக்கன் இது தவிர கூகுள், அம்பானி, மிட்டல் என்று தொடர்ந்து பல புத்தகங்களும் எழுதி உள்ளார்.  இரண்டு மாதங்களுக்கு முன்னால் இவரின் பல புத்தகங்களை ஒரே வாரத்தில் தொடர்ந்து வாசித்துக் கொண்டே வந்தேன்.  அப்போது தான் என் மனதில் பல ஆச்சரியங்கள் வந்து போனது.

)(

எழுத்தாளர் என் சொக்கன் ஃபேஸ்புக் முதலாளி மார்க் குறித்து ஒரு புத்தகம் எழுதியுள்ளார். அமேசானில் வாசிக்கக் கிடைக்கிறது.

அந்தப் புத்தகத்தில் ஒரு இடத்தில் வரும் விசயங்கள் என்னைப் பல நாட்கள் தூங்க விடாமல் தவிக்க வைத்தது. யோசிக்க வைத்துக் கொண்டேயிருந்தது. மார்க் கல்லூரியிலிருந்த போது கல்லூரி வலைதளத்தில் அனுமதியின்றி உள்ளே நுழைந்து பார்வையிட்டு அதில் உள்ள தகவல்களைத் திரட்டி (நிர்வாக அனுமதியின்றி) பொதுவில் வைத்த போது அது பல பக்க விளைவுகளை உருவாக்கியது. அவரை கண்டித்து பஞ்சாயத்து வரைக்கும் கொண்டு போய் நிறுத்தியது. அப்போது தான் மார்க் யோசித்தார்.

நாம் எடுத்துப் போட்டால் தான் பஞ்சாயத்து வருகின்றது. நம் தளத்திற்கு வருகின்றவர்கள் அவர்களே விருப்பப்பட்டு தங்கள் தனிப்பட்ட தகவலை அவர்களாகவே விருப்பப்பட்டு பதிவேற்றினால் என்ன ஆகும்?

இது தான் இன்றைய ஃபேஸ்புக்கின் ஆதார வெற்றியை அள்ளித் தந்தது. ஒரு யூதரின் மூளை எப்படி யோசித்துள்ளது என்று யோசித்துப் பார்த்தேன்.

இத்தனைக்கும் அப்போது அவரின் வயது நிறையவே ஆச்சரியம் அளித்தது. அதாவது நம் இளையர்கள் பிடித்த நடிகர்களுக்கு கட் அவுட் பாலாபிஷேகம் செய்து தங்களை நிரூபித்துக் கொண்டிருக்கும் வயதை விடக் குறைவு தான்.

அதன் பிறகு தான் ஃபேஸ்புக்கில் தங்களுக்குப் பிடித்த தேவையான இணையர்களைத் தேடும் வசதிகளை உருவாக்கினார். தளம் அதன் பிறகே நூறு குதிரை வேகத்தில் அமெரிக்கா முழுக்க மிக விரைவாகச் சென்று சேர்ந்தது என்று எழுதியிருந்தார்.

நீயே வா. நீயே கொட்டு. நான் உன்னை எதுவும் கட்டாயப்படுத்தவில்லை. உன் பாடு. உன் எதிரிகள் அல்லது நண்பர்கள் பாடு.

போதாதா?

இன்று நடக்கும் அத்தனை பஞ்சாயத்துக்களின் ஆதார விதை அங்கிருந்து தான் உருவானது என்றால் நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும்.

https://www.amazon.com/s?k=n+chokkan&page=2&qid=1571787312&ref=sr_pg_2

)(

இன்றைய சூழலில் ஃபேஸ்புக் நம்மை எப்படிப் பிரித்து வைத்துள்ளது.

1. நீ பெரியாரை, அண்ணாவை, கலைஞரை எதிர்த்தால் முழு முட்டாள்.

2. நம் மதம் முக்கியமானது.  அத்துடன் இஸ்லாம், கிறிஸ்துவத்தை வெறுத்து ஒதுக்கி விடு. அவர்களுடன் பழகுவது கூட பாவம்.

3. நம் நாட்டை நேசிக்க மோடியை ஆதரிக்க வேண்டும்.  மற்றவர்கள் ஆன்டி இன்டியன்.
4. மோடியை ஆதரிப்பவன் நாட்டின் துரோகி.

5. திராவிடம் தான் எனக்கு டவுசர் போடக் கற்றுத் தந்தது. பெரியார் வந்த பின்பு தான் அ ஆ எழுதவே தமிழர்களால் முடிந்தது.  அதற்கு முன்னால் தெருத் தெருவாகச் சுற்றிக் கொண்டிருந்தார்கள். படிப்பு வாசனையே தெரியாது.

இந்த பஞ்சபாண்டவர் தான் உங்களையும் என்னையும் இணைத்துள்ளது. பிரித்துள்ளது. வெறுக்க, விரும்ப வைத்துள்ளது.

உங்கள் தொடர்பில் உள்ள நெருக்கமான பழக்கத்தில் உள்ளவர்கள் எத்தனை நாட்களுக்கு முன்னால் உங்களை அலைபேசியில் அழைத்தார்கள்.  கடைசியாக உங்கள் நண்பரை எத்தனை நாளைக்கு முன்னால் நேரிடையாக சந்தித்தார்கள்?  மனம் விட்டு மாற்றுக் கருத்துடன் எவ்வளவு மணிநேரம் உரையாட முடிந்தது?  இடைவெளி விட்டு அதே நேசத்துடன் மீண்டும் எத்தனை நாட்கள் கழித்து மீண்டும் மீண்டும் உங்கள் நட்பு புதுப்பிக்கப் படுகின்றது என்பதனை நீங்கள் தனியாக இருக்கும் போது யோசித்துப் பாருங்கள்.

உங்கள் வாழ்க்கை அர்த்தமுள்ளதா? அர்த்தமற்றதா? என்பது புரியும்.

MY KINDLE PAGE

16 comments:

Avargal Unmaigal said...

இதை எழுதியது ஜோதிஜியா???

Anuprem said...

நான் இதில் கலந்து கொள்கிறேன். ...

வாழ்த்துக்கள் ...உங்கள் சிறப்பான எழுத்துக்கள் மிளிர...


நல்ல கோணத்தில் ஒரு கட்டுரை ...

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

ஃபேஸ்புக் என்ற மாய உலகம். இதில் வாட்ஸ்அப்பையும் சேர்த்துக்கொள்ளலாம்.

ஜோதிஜி said...

அமெரிக்காவில் உள்ள நண்பர் மத தலை மேல் அடித்துச் சொல்கிறேன்.நான் தான் எழுதினேன்.

ஜோதிஜி said...

நீங்கள் வெற்றி பெற வாழ்த்துகிறேன் அனு.

ஜோதிஜி said...

அதைப் பற்றி அடுத்து........

Anuprem said...

அசோ நான் கலந்து கொள்ள வில்லை ...

தங்கள் வரி அது .....அதற்கான எனது பதிலே அந்த வாழ்த்து ..


....நான் இதுவரையிலும் போட்டிகள் எதிலும் கலந்து கொண்டதில்லை. நான் இதில் கலந்து கொள்கிறேன். திருப்பூர் குறித்து ஒரு நான் பிக்சன் வடிவில் ஒரு புத்தகம் எழுதிக் கொண்டிருக்கின்றேன். ....

இப்படி மேற்கோள் காட்ட நினைத்தேன்...ஆனால் ஒரு வரி மட்டும் எடுத்ததால் வந்த குழப்பம்

ஜோதிஜி said...

நன்றி. அடுத்த வருடமும் இதே போல போட்டி நடத்துவார்கள். நீங்கள் அதில் கலந்து கொள்ள வேண்டும். தகுதியை வளர்த்துக் கொள்ளவும். வாழ்த்துகள்.

Avargal Unmaigal said...



இது நீங்கள் எழுதியது என்று தெரியும் ஆனால் அப்படி கேட்டதற்கு காரணம் பேஸ்புக்கில் உங்களின் பதிவுகள் அனேகமாக பார்வோர்ட் பதிவுகளாக இருக்கும்...... ஆனால் அப்படி இல்லாமல் இப்படி எழுதினால் உங்களின் சுய சிந்தனைகளோடு மிக அருமையாக இருக்கிறது. உங்களை போல உள்ளவர்கள் சுயம் இழக்க வேண்டாம்... மோடியை நீங்கள் பாராட்டி எழுதினாலும் அது உங்களின் சுய சிந்தனையில் வரும் போது அதில் பல செய்திகள் உண்மைகள் வரும் மோடியை கலாய்த்து எழுதி வரும் நான் கூட உங்களின் பதிவுகளை பார்த்து எனது எண்ணங்களை மாற்றிக் கொள்ளலாம்.... உங்கள் பதிவுகள் பெரிதாக இருந்தாலும் அதில் விஷயங்களை அறியாதவைகளை அறிந்து கொள்ளலாம் தெளிந்து கொள்ளலாம் அதனால் மீண்டும் சொல்லுகிறேன் உங்களிடம் இருந்து உங்களின் சுயமான பதிவுகளையே எதிரப்பார்க்கிறேன் பார்வோட் பதிவுகளை அல்ல

ஸ்ரீராம். said...

பேஸ்புக்கில் தாமரை இலை தண்ணீர் போலவும் இருக்க முடியும்.  அவரவர்கள் மனோபலத்தைப் பொறுத்தது!  போட்டியில் கலந்துகொள்ளும் உங்களுக்கு வாழ்த்துகள்.  போட்டியில் வெற்றிபெற அவர்கள் என்னென்ன விதிமுறைகள் வைத்திருப்பார்களோ...    உங்களிடமிருந்து அது ஒரு நல்ல படைப்பை உருவாக்குகிறது என்பதுதான் விசேஷம்.

ஜோதிஜி said...

பூக்கடையில் தான் நறுமணம் இருக்கும். சாக்கடையில் எதிர்பார்க்கக்கூடாது. அலைபேசி வாயிலாக பேஸ்புக் படிப்பவர்களின் 95 சதவிகிதம் எவரும் படிப்பதில்லை. படங்கள் காட்சிகள் பார்ப்பவர்கள் தான் அதிகம். பார்வேர்ட் பதிவுகள் என்பது நீங்கள் சொல்வது போல வாட்ஸ்அப் சொல்லும் முன்னோர்கள் முட்டாள்கள் அல்ல என்ற வகையைச் சார்ந்தது அல்ல. அது பலரும் என்னை விட சிறப்பாக எழுதியவர்களின் எழுத்து. அவர்களின் எழுத்துக்கு நான் கொடுக்கும் அங்கீகாரம். பலரின் பார்வைக்கு கொண்டு சேர்க்கின்றேன்.

ஜோதிஜி said...

https://www.amazon.in/b?ie=UTF8&node=13819037031&fbclid=IwAR00-cqoOFrjIEw3iQK1GCgP0Jw-zWGvm-YOSYxLz9Vfnu2t-uj-fgCWr4g

ஜோதிஜி said...

http://www.kaniyam.com/workshop-on-ebook-making/?fbclid=IwAR2C-6UCIoJeym2sYvfAEhZu24rK5ydq626h0CNMTDL1-ueSmbDyS-asF2Y

ஜோதிஜி said...

https://www.vikatan.com/news/miscellaneous/amazon-pen-to-publish?fbclid=IwAR00-cqoOFrjIEw3iQK1GCgP0Jw-zWGvm-YOSYxLz9Vfnu2t-uj-fgCWr4g

ஜோதிஜி said...

https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156512661822108?hc_location=ufi

ஜோதிஜி said...

நன்றி ராம். ஆரோக்கியம் இருக்கும் போது சிலவற்றை ஆவணப்படுத்தி விட வேண்டும். இந்த சமயத்தில் எழுதினால் தான் வாய்ப்புண்டு. இதில் கொடுத்துள்ள இணைப்பு இது குறித்து தெரிந்து கொள்ள விரும்புவர்களுக்கு உதவும்.