Sunday, February 06, 2022

குடும்ப அரசியல் நடத்தும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் உருவாக்கியிருக்கும் சமூகநீதி கூட்டமைப்பு யாருக்கானது?

தேதி 03.02.2022

தமிழக பாஜக தலைவர் திரு. கு. அண்ணாமலை அவர்களின் அறிக்கை

குடும்ப அரசியல் நடத்தும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் உருவாக்கியிருக்கும் சமூகநீதி கூட்டமைப்பு யாருக்கானது?




தமிழகத்தில் திமு கழகம் ஆட்சிக்கு வந்து 9 மாதங்கள் முடியப் போகின்றது. எங்கள் ஆட்சி "விடியல் ஆட்சி" என்றார்கள். மோடி அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் வேலை தான் நடந்து வருகின்றது.

"ஓட்டுப் போடாதவர்களும் எங்களை விரும்புகின்ற அளவுக்கு நாங்கள் ஆட்சி நடத்துவோம்" என்றார்.

தமிழகத்தில் எங்கு தொட்டாலும் ஊழல், எதற்குள் நுழைந்தாலும் கட்டிங்.






நேர்மையான அதிகாரிகள் என்று பிம்பமாக்கப்பட்டவர்களை நியமித்துப் பாதுகாப்பு அரண் போல எல்லா இடங்களிலும் தங்களுக்குச் சாதகமான ஊழலில் பெயர் பெற்ற அதிகாரிகள் மூலம் தமிழகத்தைச் சூறையாடுவது தான் நடந்து வருகின்றது.

மிகக் குறுகிய காலத்திற்குள் மிக மோசமாக தமிழக நிர்வாக அமைப்பை மாற்றியதில் தமிழக முதல்வர் வெற்றி பெற்றுள்ளார்.

தமிழக முதல்வர் இப்போது புதிய அவதாரம் ஒன்றை எடுத்துள்ளார்.

பொங்கல் பரிசைக் கூடச் சிறப்பாக கொடுக்க முடியாத நிர்வாகம் நடத்தி வரும் தமிழக முதல்வர், அதில் நடந்த ஊழல் குறித்து இன்று வரையிலும் பேசாமல் இருப்பவர் இன்று புதிதாக அனைத்திய சமூக நீதி கூட்டமைப்பு என்பதனைத் தொடங்கி  37 தேசியத் தலைவர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

அதில் "சமத்துவம், சுயமரியாதை மற்றும் சமூகநீதியைக் காக்க நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்" என்று கூறியுள்ளார்.

யாருக்கெல்லாம் இந்தக் கடிதம் எழுதியுள்ளார் என்பதனை நாம் பார்த்தால் அவர்களின் தகுதியும் தராதரமும் நமக்குப் புரியும்?

தங்கள் குடும்ப உறுப்பினர்களைத் தவிரத் தமிழகத்தில் வேறு எவரும் கட்சித் தலைமைக்கு வந்து விடக்கூடாது என்பதில் அதிக அக்கறை கொண்டுள்ள திரு. மு.க.ஸ்டாலின் அவர்களைப் போலவே கடந்த 75 ஆண்டுகளாக ஜம்மு காஷ்மீர் என்ற பகுதியை இந்தியாவின் பிரச்சனைக்குரிய பகுதியாக தங்கள் சுய லாபத்துக்காக மூன்று தலைமுறையாக வைத்திருந்த திரு. பரூக் அப்துல்லா, (J&K National Conference) மற்றும் மெகபூபா முப்தி  (J&K PDP) 

ஐந்து தலைமுறை நேரு பரம்பரையில் எச்சமும் சொச்சமாக இடைச்செருகலாக வந்து பொம்மை மூலம் இந்தியாவை ஆள முடியும் என்று நிரூபித்த திருமதி சோனியா அம்மையார் (Congress)

தன் குடும்ப சுயநலத்துக்காக பீகார் என்ற மாநிலத்தையே புதைகுழிக்குள் வைத்து மக்கள் எழமுடியாத அளவுக்குக் கடந்த காலத்தில் காட்டாட்சி புரிந்த லல்லு பிரசாத் யாதவ்  (RJD), ஊழலுக்கென்று இந்திய அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயம் உருவாக்கிய சரத்பவார் (NCP), 

இந்தியாவில் மோடி அவர்களின் நிர்வாகத் திறமையைக் கண்டு  கால் நூற்றாண்டுக் காலம் ஆட்சியில் இருந்த மாநிலங்களில் வேரடி மண்ணோடு புடுங்கி எறியப்பட்ட இரண்டு கம்யூனிஸ்ட்கள் டி. ராஜா (CPI), சீதாராம் யெச்சூரி (CPI-M), 

காவல்துறை ஆணையர்கள் என்பவர்கள் எங்களுக்கு மாதாந்திர தண்டல் வசூலித்துத் தரக் கடமைப்பட்டவர்கள் என்று அலங்கோல ஆட்சி நடத்தி வரும் உத்தவ் தாக்ரே (Shiv Sena). 

அலங்கோல ஆட்சி நடத்துவதே என் பாணி என்று மேற்கு வங்க மண்ணின் மைந்தர்களைக் கூட்டு பாலியல் செய்ததை கை கட்டி வேடிக்கை பார்த்த மம்தா பானர்ஜி அம்மையார் (TMC), 

என்று மொத்தம் 37 பேருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

இன்றைய சூழலில் தமிழகத்தில் காவேரி நதி நீர் பிரச்சனை வைத்து அரசியல் செய்ய முடியாது.  கச்சத்தீவு வாயே திறக்க முடியாது. இலங்கை பிரச்சனை பற்றிப் பேசுவதற்கு வாய்ப்பே இல்லை. எல்லை தாண்டும் மீனவர்கள் பிரச்சனைகளும் அவ்வப்போது முடிவுக்கு வந்து விடுகின்றது.  முல்லைப் பெரியாறு என்பது முடிந்து போன ஒன்று. கடந்த ஐம்பது ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போதும், அவர்களுடன் திமுக கூட்டாளியாக இருந்த சமயங்களில் எல்லாம் எதைப் பற்றியும் பேசியதில்லை.  எந்த உரிமை பிரச்சனைகளையும் மாமன்றத்தில் கொண்டு வந்ததும் இல்லை.  

கலைஞர் ஒரே ஒரு விசயத்தில் உறுதியாக இருந்தார். 1996க்குப் பிறகு கலைஞர் மத்திய அரசில் பங்கெடுப்பதை அட்சய பாத்திரத்தைக் கைப்பற்றுவதாகவே கருதினார். அப்படியே செயல்பட்டார்.

தங்களுக்கு வசூலித்துக் கொடுக்கக்கூடியவர்களை மத்திய அமைச்சர்களாக மாற்றியதும், தாங்கள் விரும்பிய துறைகளை மிரட்டி வாங்கியதும் தானே நடந்தது. காங்கிரஸ் இட ஒதுக்கீடு விசயங்களில் என்ன சாதித்தது?  ஓபிசி இட ஒதுக்கீடு ஏன் இத்தனை ஆண்டு காலம் தாமதம் ஆனது? 

இந்தியாவை நேரிடையாகவும் மறைமுகமாகவும் அரை நூற்றாண்டுக்காலம் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சியுடன் திமுக 17 ஆண்டுகள் அதிகாரத்தைச் சுவைத்து தமிழகம் என்ன பெருமை அடைந்தது?

இந்தியர்கள் "பொது சுகாதாரம்" என்ற வார்த்தையே 2014 மோடி அவர்கள் ஆட்சிக்கு வந்த பின்பு தானே உணரத் தொடங்கினார்கள்.

உங்களுக்கு கும்மிடிப்பூண்டி தாண்டி என்ன நடக்கின்றது என்பதே தெரியாது?  காரணம் மொழி அரசியல். பிரதேச அரசியல். சமூக நீதி என்ற பெயரில் சாதீய அரசியல் என்று தமிழர்களை எக்காரணம் கொண்டு வளர்ந்து விடவே கூடாது என்று திட்டமிட்டு திருட்டுத்தனம் செய்து கொண்டு இருப்பது இனியும் நடக்காது. 

நடக்கவும் விட மாட்டோம்.

கலைஞர் இருந்தவரைச் சமூகநீதிக் காவலராக வேடம் தரித்துப் பொய்யும் புனைச் சுருட்டுமாக கதை வசனம் எழுதி தமிழர்களை நம்ப வைத்துக் கொண்டிருந்ததை இன்று நீங்கள் கையில் எடுத்திருப்பது வருத்தமாக உள்ளது.  "காலத்திற்குத் தேவைப்படாத அனைத்தும் காலாவதியாகிப் போகும்" என்பதனை அறியாதவரா நீங்கள்? 

ஆர்ப்பாட்டம் இல்லாமல், அவசரப்படாமல், பாரபட்சமின்றி, மத பாகுபாடின்றி உள்கட்டமைப்பு வசதிகள் முதல் சமூக நீதிக்கான அடித்தளம் வரை அனைத்தையும் கடந்த ஏழு ஆண்டுகளில் மிகச் சிறப்பாக வடிவமைத்த மோடி அவர்களை அடுத்த 100 ஆண்டுகள் இந்தியர்கள் தங்கள் மனதில் வைத்திருப்பார்கள்.

இதுவே இன்று எதிர்க்கட்சியினருக்கு உறுத்தலாக உள்ளது. 

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் இந்தியாவைப் பின்னுக்கு இழுக்கக்கூடிய அனைத்து விசயங்களிலும் கவனம் செலுத்தி பாராளுமன்ற நேரத்தை வீணடிக்கின்றார்கள்.

ஒவ்வொருவரும் பிரதமர் கனவில் மிதக்கின்றார்கள்.  வடக்கே ராகுல்.  மேற்கே  மம்தா பேனர்ஜி. தெற்கே ஸ்டாலின்.

இப்படித்தான் முலாயம்சிங் யாதவ் மற்றும் லல்லு பிரசாத் யாதவ் அவர்களும் ஒரு காலத்தில் பிரதமர் பதவிக்குப் போட்டுப் போட்டுக்கொண்டு இருந்தார்கள்? இன்று அவர்களுக்கு மக்கள் கொடுத்த தண்டனை என்ன?  இரண்டு குடும்பத்திலிருந்தும் அவரவர் வாரிசுகள் தான் அரசியலுக்கு வந்துள்ளனர்.

இங்கே கலைஞருக்குப் பின்னால் ஸ்டாலின். இவருக்குப் பின்னால் உதயநிதி. அவருக்கும் பின்னால் இன்ப நிதி என்ற படிக்கட்டு போல மக்கள் ஜனநாயகத்தைச் சீர்குலைக்கும் நீங்கள் தான் இன்று சமூகநீதி கூட்டமைப்பை உருவாக்கி இருக்கின்றீர்கள்?.

உங்கள் மகன் பட்டாபிஷேகத்திற்காகக் காத்திருப்பது போலக் கடிதம் எழுதிய 37 தேசியத் தலைவர்களின் குடும்பம் தான் அந்தந்த மாநில அரசியலைத் தீர்மானிக்கின்றது. இதன் காரணமாகவே அந்தந்த மாநில மக்களால் தூக்கி எறியப்பட்டு இன்று அரசியல் அனாதை ஆகியுள்ளனர்.

நீங்கள் தமிழர்களுக்குச் செய்ய வேண்டிய பணி ஏராளமாக உள்ளது. ஏனிந்த நாடகம்?   ஆட்சிக்கு வந்து நாற்பது வாரங்கள் முடியப் போகின்றது? என்ன சாதித்துள்ளீர்கள்?

கமிஷன், கரப்சன், கலெக்சன் என்று எதிர்க்கட்சியாக இருந்த போது நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் ஒப்பித்துக் கொண்டிருந்தீர்கள்.

இன்று தமிழகத்தில் ஊழல் என்பது எல்லை மீறிச் சென்று கொண்டேயிருக்கின்றது.  திறமையான அதிகாரிகள் என்று தன்னைச் சுற்றி ஒரு பிம்ப மயக்கத்தை உருவாக்கி இன்று "அனைவருக்கும் பங்கு" என்று மாற்றிய பெருமை உங்களுக்கே  சேரும்.  நீங்கள் தான் இன்று அனைவருக்கும் "சம உரிமை" என்று கடிதம் வழியாக வசனம் எழுதிக் கொண்டு இருக்கின்றீர்கள்.

கடந்த சில மாதங்களாக திமுக விற்கு அதீத விசுவாசத்தோடு இருக்கும் சில பத்திரிக்கைகள் ஒரு செய்தியை வெவ்வேறு விதமான வார்த்தைகள் கொண்டு மாற்றி மாற்றி எழுதித் தள்ளிக் கொண்டேயிருக்கின்றார்கள்.  அதன் சாத்தியக்கூறுகள், எதார்த்தம், உண்மை போன்ற எதையும் மக்கள் அறிந்து கொள்ளக்கூடாது என்பதற்காக திரைப்பட வசனம் போலவே தலைப்புச் செய்திகளாக மாற்றிக் கொண்டு இருக்கின்றார்கள்.

“வட இந்தியாவின் எதிர்க்கட்சி வெற்றிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நிரப்புவார்". 

இதன் நேரிடையான அர்த்தம் பாரதப் பிரதமர் மோடி அவர்களை எதிர்த்து தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இந்தியாவில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்று சேரும். 

இங்கு ஊடகங்களின் மூலம் உருவாக்கப்படும் ஆச்சரியங்கள் ஒன்று இரண்டல்ல. 

"தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் வரப் போகின்ற 2024 பாராளுமன்றத் தேர்தலுக்கு எதிர்க்கட்சிகளுக்குத் தலைமை ஏற்று வழிகாட்டத் தயாராக இருக்கின்றார்" என்பதாகவே செய்திகள் தொடர்ந்து உருவாக்கப்பட்டுவருகின்றன.

இப்போது அதன் தொடர்ச்சியாக மற்றொரு காட்சி. "சமூக நீதி கூட்டமைப்பு". 

கலைஞர் அரசியல் என்பது ஆட்சியில் இருந்தால் பேசுவது ஒன்று. எதிர்க்கட்சியாக இருந்தால் நடந்து கொள்வது வேறு.  கச்சிதமாக அப்பாவைப் போலவே நீங்களும் அந்தப் பாதையில் பயணிக்கத் தொடங்கியிருக்கிறீர்கள்.

குடும்பக்கட்சியாகவும், மாவட்டங்களைக் குறுநிலங்களாகப் பிரித்து பரம்பரையாக ஆளும் மாவட்டச் செயலாளர்களையும் கொண்ட திமுக சமூகநீதி பற்றிப் பேசுவதே பெரும் நகைச்சுவை. 

ஸ்டாலின் கடிதம் எழுதிய கட்சியினர் அந்தந்த மாநிலங்களை ஆண்ட காலத்தையும் மோடி ஆண்ட காலத்தையும் ஒப்பிட்டுப்பார்த்தால் கடந்த ஏழு வருடங்களில்தான் கழிப்பறை, குடிதண்ணீர், மின்சாரம் என அடிப்படை வசதிகள் கடைக்கோடி மக்களுக்கும் சென்று சேர்ந்துள்ளது. இதுதான் அனைவருக்குமான சமூகநீதியே தவிர திமுகவின் சாதிப்பிரிவினை அரசியல் அல்ல.

மன்னிக்கவும்.  

இது 1996 அல்ல.  2022.  புதிய பாராளுமன்றம், புதிய தொழில் நுட்பக் காலம் என்று மோடி அவர்களின் உழைப்பால் இன்று காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை அனைவருக்கும் பொதுவான இந்தியா.

"ஓரே நாடு ஒரே தேர்தல்" என்பதனை நோக்கி நகர்ந்து சென்று கொண்டு இருக்கின்றோம்.

புது சுவாசத்தில் நான் இந்தியன் என்ற தேசிய சிந்தனையின் அடித்தளம் வலிமையடைந்துள்ளது என்பதனை பாஜக வின் அடிமட்டத் தொண்டன் என்ற முறையில் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

ஆட்சியை நடத்தத் தெரியாதவர்கள் நீண்ட நாட்களுக்குக் காரணம் சொல்லிக் கொண்டு இருக்க முடியாது. நீட் குறித்து திமுகழகம் உருவாக்கிய நாடகம் இன்று ஆளுநர் மசோதாவைத் திருப்பி அனுப்பியதோடு உங்கள் நாடகம் முடிவுக்கு வந்து உள்ளது. உங்கள் தமையன் சொன்ன ரகசியம் இனியாவது வெளியே வருமா? அடுத்த வேடத்தை அணியத் தொடங்கியிருக்கிறீர்கள்.

இதற்குப் பதில் நடைப் பெறப் போகும் உள்ளாட்சித் தேர்தலில் தமிழக மக்கள் பதில் அளிப்பார்கள்.

இப்படிக்கு

கு. அண்ணாமலை

மாநிலத் தலைவர்

பாரதிய ஜனதா கட்சி


No comments: