Friday, October 02, 2020

ஏன் இங்கே இத்தனை கற்பழிப்புகள்? | Why so many rapes here?

ட்விட்டர், டெலிகிராம் வாயிலாகப் பத்திரிக்கைகள், வார இதழ்கள், செய்தி ஊடகங்களின் முக்கியமான செய்திகளைப் பார்வையிட்டாலும் ஓரளவுக்கு (கள்ளக்காதல் செய்திகள் இன்றி) நாகரிகமான செய்திகளைத் தந்து கொண்டிருக்கும் புதிய தலைமுறை செய்திகளை யூ டியூப் வாயிலாக சமயம் கிடைக்கும் போதெல்லாம் ஆன்லைன் மற்றும் சேமிக்கப்பட்ட செய்திகளை இடைவெளி விட்டுப் பார்ப்பதுண்டு.


நாலைந்து நாட்களுக்கு முன் அதிகாலையில் திறந்த போது "சமூக எதிர்க்கருத்தைப் பரப்புகின்றது" என்ற குற்றச்சாட்டு வந்துள்ளது. நீங்கள் பார்க்க விரும்புகின்றீர்களா? என்றொரு பட்டன் தெரிய இல்லை என்று தட்டிவிட்டுப் பார்க்கத் தொடங்கினேன். அடுத்தடுத்த நாளும் அவ்வாறு வர சரி நம் எளிய தமிழ்ப்பிள்ளைகள் களப் பணி செய்துள்ளார் என்று புரிந்து கொண்டேன். என் நட்பு பட்டியலில் இரண்டு பேர்கள் (புதிய தலைமுறையில் பணியாற்றுபவர்கள்) இருக்கின்றார்கள். இப்போது சில விசயங்கள் சொல்லத் தோன்றுகின்றது.

நிச்சயம் புதிய தலைமுறை செய்தி ஊடகம் மட்டுமல்ல தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சேனல்களும் நட்டத்தில் தான் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது.

வேறு பக்கம் வரக்கூடிய வருவாயை இந்தப் பள்ளத்தில் போட்டு நிரப்பிக் கொண்டிருக்கின்றார்கள். எத்தனை நாளைக்கு இப்படிச் செய்வார்கள் என்று தெரியவில்லை. பச்சமுத்து என்ற பாரிவேந்தர் என்று மாறி வெற்றி பெற்ற முதலாளியும் எஸ்ஆர்எம் குழுமத் தலைவரும் பாஜக ஆதரவில் இருந்த போதிலும் காலமும் சூழலும் அவரை திமுக வில் கொடுக்க வேண்டியதைக் கொடுத்து சீட் வாங்கி வெல்லும் நிலையை உருவாக்கி பாராளுமன்ற உறுப்பினராக மாற்றியது,

தன் மகனைப் பொறுப்பில் வைத்திருந்தாலும் மற்ற சேனல்களைப் போல இதில் பணியாற்றுபவர்கள் மற்றவர்களிடமும் மறைமுகமாக ஒப்பந்தம் அடிப்படையில் பணியாற்றுவதை ஒவ்வொருவரும் அறிந்தே வைத்துள்ளோம். அவர்கள் மறுக்கலாம். ஆனால் எதார்த்தம் இதுவே. அது அவர்களின் திறமை. ஆனால் நிறுவனத்திற்கென்று சில கொள்கைகள் இருக்க வேண்டும். நபர்கள் மாறுவார்கள். நிறுவனத்தின் கொள்கைகள் பேசப்படுவதாக இருக்க வேண்டும். ஒரு சின்ன உதாரணம்.

பாராளுமன்ற இரு அவைகளிலும் விவசாய மசோதா நிறைவேற்றப்பட்டு விட்டது. 

விவசாயிகளுக்கான உற்பத்தி வர்த்தக மற்றும் வணிகம் மசோதா 2020,

விவசாயிகளுக்கான விலை உறுதிப்பாடு மற்றும் வேளாண் சேவைகள் ஒப்பந்த மசோதா,

அத்தியாவசியப் பொருள்கள் சட்டத்திருத்த மசோதா

ஆகிய மசோதாக்கள் மக்களவையில் நிறைவேறிவிட்ட நிலையில், மாநிலங்களவையில் இன்று (ஞாயிற்றுக் கிழமை) தாக்கல் செய்யப்பட்டு இறுதியாக அமளி, கூச்சல், குழப்பம், அநாகரிக செயல்பாடுகள், ஆத்திர வார்த்தைகள், ஆவேசம் போன்ற ஒரு திரைப்படத்திற்குண்டான அனைத்துச் சமாச்சாரங்கள் நடந்து முடிந்தது

ஆபரேசன் சக்சஸ்.

அதிமுக ரவிந்திர நாத் ஆதரவு எஸ்ஆர் பாலசுப்ரமணியம் எதிர்ப்பு என்ற நாடகம் என்ற பெயரில் எதிர்க்கட்சிகள் எடப்பாடியைக் குறி வைத்துத் தாக்கும் அறிக்கையை மையமாக வைத்து புதிய தலைமுறை தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இதனை மக்களிடம் கொண்டு போய் சேர்த்துக் கொண்டிருக்கின்றது.

எஸ்ஆர்பி மாநிலங்களவையில் ஆங்கிலத்தில் பேசியதைக் கேட்டேன். ஆதார விலை, மாநில உரிமைகள் இரண்டிலும் கவனம் செலுத்துங்கள் என்று சொல்லிவிட்டு ஆதரித்துத் தான் பேசியுள்ளார். எடப்பாடி கம்பீரமாக அதிமுக ஆதரிக்கின்றது என்று பூசி மெழுகாமல் அறிவித்தும் உள்ளார். இதையே பிரதமர் அரசு கொள்முதல் தொடரும். ஆதார விலை நீடிக்கும் என்றும் சொல்லியுள்ளார்.

ஒரு வரியை எடுத்துக் கொண்டு எதிர்க்கட்சிகள் விடுக்கும் அறிக்கையை வைத்துக் கொண்டு பேசும் ஊடகங்கள் உடனே ஒன்று செய்ய வேண்டும்.

1. தமிழக விவசாயச் சங்கங்கள் யாருக்குப் பலன் தந்தது? எப்படி இதுவரையிலும் இருந்தது? தமிழக விவசாயிகள் இதன் மூலம் பலன் அடைந்தார்களா? புள்ளி விபரங்கள் உள்ளதா?

2. மாநில கொள்முதல் மையங்கள் முறையாகச் செயல்படுகின்றதா? விவசாயிகள் மகிழ்ச்சியுடன் இருக்கின்றார்களா? இப்போது உருவாகியுள்ள மழையின் காரணமாக ஒவ்வொரு கிட்டங்கியும் முறையற்ற உள் கட்டமைப்பு இல்லாத காரணத்தால் கொண்டு போய் இறக்கி வைத்திருக்கும் நெல் மூட்டைகள் அழுகி நாற்றாக மாறும் அளவுக்கு இருப்பதற்குக் காரணம் என்ன?

3. கோயம்பேடு முதல் ஒட்டன்சத்திரம் வரைக்கும் உள்ள அனைத்துக் காய்கறிச் சந்தைகளும் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதா? குறிப்பிட்ட தனியார்கள் தான் ஆதிக்கத்தில் வைத்து உள்ளார்களா?

4. வாய்ப்பும் வசதிகளும் உள்ள அரசியல் வியாதிகள் கொரானா சிகிச்சைக்காகத் தனியார் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை எடுப்பதும், ஆனால் அரசு மருத்துவமனைகள் தரமாக உள்ளது என்று தொடர்ந்து லாவணி பாடுவதும் நடக்கும் சூழலில் தமிழகத்தில் ஒரு கிலோவிற்கு 37 ரூபாய் செலவாகும் (மத்திய மாநில அரசு மானியத் தொகை சேர்த்து) ரேசன் அரிசியை எத்தனை மக்கள் இப்போது பயன்படுத்துகின்றார்கள். 70 சதவிகித மக்களே விரும்பாத அந்த அரிசிக்கு ஒவ்வொரு வருடமும் மத்திய அரசு ஒதுக்கும் மானியத் தொகை 80 முதல் 90 ஆயிரம் கோடி. தேவையில்லாதவர்களுக்கு வேறு பொருட்கள் வாங்க இங்கே வழியில்லை. அதனை வெளிப்படைத்தன்மையாக முழங்க இங்கே யாருமில்லை போன்ற விசயங்களை விவாதமாக மாற்றலாமே?

5. எடப்பாடி அறிக்கை மூலமாகப் பேசுவதை விட நேரிடையாகவே பேசுகின்றார். ஆனால் ஊடகங்கள் பலரும் அறிக்கை வாயிலாகத் தெரிவித்தார் என்பதனை வைத்துக் கொண்டு பழைய படங்களைக் காட்சிகளை வைத்து ஒப்பேற்றுவது ஏன்?

உங்கள் உயிர்மூச்சு விளம்பரம் என்பதனை அறிந்தே வைத்துள்ளோம். ஆனால் விளம்பரம் உங்கள் நம்பகத்தன்மையைக் குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் மாற்றிவிடும் என்பதனையும் கவனத்தில் வைத்திருங்கள்.

காரணம் 25 ஆண்டுகளுக்கு முன்பிருந்த சந்தையல்ல. எளிய தமிழ்ப்பிள்ளைகள் எங்கு வேண்டுமானாலும் ஆணி முதல் ஆப்பு வரைக்கும் வைக்க வாய்ப்புண்டு என்பதனையும் கவனத்தில் வைத்திருங்கள் நண்பர்களே. உங்கள் கவனத்தில் ராஜ் டிவி யாரால் எப்படி சீரழிக்கப்பட்டது என்பதனை பாடமாக வைத்திருங்கள். விஜய் டிவியை மொக்கை டிவியாக மாற்றியதற்குக் காரணம் என்ன? யார் செய்தார்கள்? ஏன் அவர்களால் செய்திகளை வழங்க முடியவில்லை என்பதனை பழைய வரலாற்றுச் சம்பவங்களை நினைவில் கொண்டு வாருங்கள். 

#PuthiyaThalaimuraiLive: #PuthiyaThalaimurai

()()()

மனிதர்களின் மிருக குணத்தை நமக்கு அப்பட்டமாக உணர்த்துவது கற்பழிப்புகள் மட்டுமே. இதுவொரு கொடூரமான மனநிலையின் வெளிப்பாடு. வெறியின் உச்சம். பாலியல் துன்புறுத்தல், பாலியல் வன்புணர்வு, பாலியல் சீண்டல், கூட்டு கற்பழிப்பு என்று ஒவ்வொரு நாளும் நாம் வாசிக்கும் செய்தித்தாளில் இந்த வார்த்தைகள் கடந்த சில வருடங்களாக அதிகமாக ஏன் வந்து கொண்டே இருக்கின்றது? யார் குற்றவாளி? என்ன காரணம்? எப்படி மாற்றுவது? யார் மாற்றுவது?

#JoPechu #ஜோபேச்சு

6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

விவசாயத்தையும் கற்பழித்து விட்டதாக பதிவும், காணொளியும்...?

திண்டுக்கல் தனபாலன் said...

காணொளி உரை அருமை அண்ணே...

ஜோதிஜி said...

நிச்சயம் விவசாய மசோதா பலன் அளிக்கும். நம்பலாம்.

ஜோதிஜி said...

நன்றி

மாறன் said...

இது reliance freshly ம் கந்தசாமி க்கும் போட்டியா

ஜோதிஜி said...

இனி வரும் போட்டிகளில் தக்க வைத்துக் கொள்ளத் தெரிந்தவன் மட்டுமே இங்கே வாழ முடியும்.