Thursday, May 10, 2018

50 வயதினிலே 7

நான் கடந்து வந்த இந்த மூன்று நிகழ்வுகளும் மிக முக்கியமானதாகத் தெரிகின்றது. குடும்பம், தாய்மை, பாசம், பொருளாதாரம், அர்ப்பணிப்பு போன்றவற்றைக் காலமாற்றத்தில் எப்படி மாறியுள்ளது என்பதனை எனக்குப் புரிய வைத்தது. 

சில மாதங்களுக்கு முன்பு அலுவலகத்தில் உடன் பணிபுரியும் அவர் முதலாளியின் அறைக்கு முன் காத்துக் கொண்டிருந்தார். 

அவர் கட்டாயம் மாதத்தில் சில நாட்கள் விடுப்பு எடுத்து விடுவார். பாதி நாட்களுக்கு மேல் தாமதாகத்தான் வந்து சேர்வார். பலமுறை நிர்வாகம் எச்சரித்தும் அவரால் மாற்றிக் கொள்ள முடியவில்லை. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு காரணங்களைச் சொல்ல நிர்வாகம் இறுதி எச்சரிக்கை கொடுத்தது. அப்போது தான் அவரின் குடும்பச் சூழ்நிலை என் பார்வைக்கு வந்து சேர்ந்தது. 

அவர் மனைவியும் வேறொரு நிறுவனத்தில் பணியில் இருக்க இவர் தான் அவர்களின் மகன், மகளின் பொறுப்புகளை நிறைவேற்றுபவராக இருந்துள்ளார். இது இயல்பானது தான். ஒரு குடும்பத்தில் இருவர் வேலைக்குச் செல்லும் போது யாரோ ஒருவர் மற்ற பொறுப்புகளைப் பார்ப்பது இயல்பானது தான் என்று நானும் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அவர் சொன்ன காரணம் தான் எனக்கு வியப்பாக இருந்தது. குழந்தைகளின் மருத்துவமனை, பள்ளி சார்ந்த நிகழ்ச்சிகள் என்றாலும் இவர் மட்டும் தான் அலுவலகத்தில் விடுப்பு எடுப்பார். அதற்கு அவர் சொன்ன காரணம் மனைவி அலுவலகத்தில் விடுப்பு அனுமதிக்க மாட்டார்கள் என்றார்கள். 

எங்கேயோ பிசிறு தட்டுகின்றதே என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டேன். அதற்கு மேல் நான் அவரிடம் எதையும் கேட்டுக் கொள்ளவில்லை. 

மீண்டும் ஒரு முறை பையனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறேன். மதியம் தான் வருவேன் என்று அலைபேசி வாயிலாக அனுமதி கேட்ட போது நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் பேரில் அவர் மனைவியிடம் அழைத்துப் பேசிய அலுவலகப் பெண்மணி என்னிடம் சொன்ன வார்த்தைகள் தான் நிகழ்காலத்தின் மாறிய சூழலின் வேறொரு பரிணாமத்தை எனக்குக் காட்டியது. "என் பொண்ணும் பையனும் எனக்கிட்ட ஒட்டவே மாட்டார்கள். அவருதான் ஆரம்பத்திலேயிருந்து அவங்களைப் பார்த்துக்குறாரு. நான் கண்டு கொள்வதே இல்லை. அதனால் தான் அவர் லீவு எடுக்கிற மாதிரி ஆயிடுது" என்று அவர் சொன்ன போது தான் அம்மா என்ற வார்த்தைக்குப் பின்னால் உள்ள பாசம், பிரியம் போன்றவை எப்படி மாறியுள்ளது என்பதனை புரிந்து கொள்ள முடிந்தது. 

இதற்குப் பின்னால் அந்தப் பெண்ணின் குணாதிசியங்கள் சார்ந்த பலவிசயங்கள் இருந்தாலும் முழுமையாகப் பொறுப்புகளைத் துறப்பது என்பது கொஞ்சம் வித்தியாசமாக எனக்குத் தெரிந்தது. இதே போல மனைவி பணிபுரிய கணவன்மார்கள் வேலைக்குச் செல்லாமல் சுற்றிக் கெட்டழியும் போக்கும் உள்ளது. 

வாழ்க்கைக்குத் தேவைப்படும் பொருளாதாரம் மிக முக்கியம். ஆனால் இழப்பதற்கு இனி ஒன்றுமில்லை என்கிற அளவுக்கு வாழ்க்கையில் ஒவ்வொரு நிலையிலும் ஒன்றை இழந்து கொண்டே வரும் நிலையில் தற்போதைய குடும்ப வாழ்க்கை உள்ளது. 

குழந்தைகளைக் கவனிக்க முடியாமலும், கற்றுக் கொடுக்க வேண்டிய பழக்கவழக்கங்களைச் சொல்லிக் கொடுக்க முடியாத போது குழந்தைகள் தீவாக வளர்கின்றார்கள். கடைசியில் பலவற்றை இழந்து சிலவற்றைப் பெறும் வாழ்க்கை அமைகின்றது. அதுவே வாழும் முறையாகவும் மாறிவிடுகின்றது. 

•••••••••• 

"என் மகனின் கணினி அறிவு பற்றி உங்களுக்குச் சொல்ல வேண்டுமே? அவன் ஒரு கில்லாடி சார்? என்று எப்போதும் என்னிடம் வந்து சொல்லும் அலுவலக நண்பர் அன்று சோகத்துடன் வந்து பகிர்ந்த செய்தியை உங்களுக்குச் சொல்ல வேண்டும். வீட்டில் உள்ள கணினியை தொடக்கத்தில் விளையாட்டு, படிப்பு என்று பயன்படுத்தி வந்தவனுக்கு நண்பர்களின் வழிகாட்டல் வழியை மாற்றியுள்ளது. நேரம் காலமின்றி நீலப்படங்களின் ரசிகனாக மாறியிருப்பதை எதிர்பாராத விதமாக நண்பரின் மனைவி கண்டறிந்த போது என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துப் போய்விட்டார். 

அதன்பிறகு எப்படி அவனை மீட்டார்கள் என்பது குறித்து நாம் இங்கே பேசப்போவதில்லை. 

தொழில் நுட்பங்கள் தந்த வளர்ச்சி எதுவும் தவறில்லை என்ற கொள்கைகளையும் உருவாக்கிக் கொண்டே வருகின்றது. வயதும், வளர்ச்சியும் படிப்படியாக நிகழ்பவை. ஆனால் இப்போதுள்ள சூழல் குழந்தைகளின் அடிப்படை குணாதிசியங்களை மாற்றுகின்றது. பஞ்சு போன்ற மனதில் நஞ்சு கலந்து விட வாழ வேண்டிய வயதில் கருகிவிடுகின்றார்கள். 

அவரவர் கையில் வைத்துள்ள அலைபேசி என்பது நாசகார ஆயுதமாக மாறியுள்ளது. எதைத் தேர்ந்தெடுப்பது என்ற புரிதல் இல்லாத காரணத்தால் அசிங்கங்களைச் சிங்கமெனக் கருதிக் கொள்கின்றார்கள். கல்விக்கென்று ஒரு வயது. கலவிக்கென்று ஒரு வயது என்பது தலைகீழாக மாறும் போது இங்கே ஒவ்வொரு நாளும் வக்கிரம் அரங்கேறுகின்றது. வயதுக்கேற்ற மனப்பக்குவம் இல்லாத நிலையில் அது நேரிடையாகவே குடும்ப வாழ்க்கையைப் பாதிக்கின்றது. 

நம் வாழ்வில் ஒரு லட்ச ரூபாய் என்பது நம் உழைப்பின் மூலம் பெற்றுச் சேமிப்பது என்பது நீண்ட நாள் கனவாக இருக்கும். ஆனால் இன்று கல்லூரி நுழைவதற்கு முன்பே மகனின் பைக் ஆசையை நிறைவேற்றுபவர் அதிகம். நரம்புகள் முறுக்கேற, நிலையில்லாத சிந்தனையோட்டத்தில் அவன் மட்டும் அழிவதில்லை. கூடவே பலரையும் காவு வாங்கி விட்டே செல்கின்றான். இந்த மாற்றங்கள் எதுவும் முன்பு எப்போதும் நிகழ்ந்தது இல்லை. 

•••••••• 

ஒரு நாள் என் மகள் எங்கள் மிஸ் அலைபேசி எண் என்று சொல்லி என் அலைபேசியில் சேமிக்கச் சொல்லியிருந்தார். எதற்காகவது தேவைப்படும் என்பதற்காகச் சேமித்து வைத்தேன். சில நாட்கள் கழித்துப் பார்த்த போது அவரின் மிஸ் உருவாக்கிய வாட்ஸ் அப் குரூப் ல் இவரும் ஒரு அங்கத்தினராக மாறியிருந்தார். ஒவ்வொரு நாளும் அலுவலகம் விட்டு நான் உள்ளே வந்த அடுத்த அரைமணி நேரத்தில் அவருக்கு இதுவே முக்கிய வேலையாக இருந்தது. கவனித்துக் கொண்டே வந்தேன். ஒரு நாள் எடுத்துப் பார்த்த போது ஒன்றுக்கும் உதவாத, அரட்டைச் சமாச்சாரங்களும், அவரவர் நடிகர்களின் வீர தீர பிரதாபங்களும் மீம்ஸ்களும் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது. 

இவர்களைக் குறைசொல்வதை விடக் குழுமத்தில் சேர்த்த ஆசிரியை அவர்களைப் பார்க்க வேண்டும் என்று மனதில் குறித்து வைத்திருந்தேன். அன்றொரு நாள் காலாண்டு தேர்வு முடிவுகள் என்று சொல்லி பெற்றோர் வந்து கையொப்பமிட வேண்டும் என்று வரச் சொல்லியிருந்தார்கள். ஒவ்வொரு மாணவ மாணவியரையும் நூறு மதிப்பெண்கள் மட்டுமே எடுக்க வேண்டும் என்று சொல்லி நான் சந்திக்க விரும்பிய ஆசிரியை அறிவுரை சொல்லிக் கொண்டிருந்தார். 

அவரிடம் நான் கேட்க வேண்டிய கேள்விகள் என்னிடம் நிறைய இருந்தது. நான் எதையும் கேட்க வில்லை. 23 வயதுள்ள அவர் பேசியதை மட்டும் கேட்டுக் கொண்டு அமைதியாகவே வந்து விட்டேன். 

குழந்தைகளின் சிந்தனைகளுக்கு, செயல்பாடுகளுக்குத் தாக்குப் பிடிக்க முடியாத ஐம்பது வயது நபர்களின் வாழ்க்கை முறையென்பது இதுவரையிலும் நம் பெற்றோர்கள் அனுபவித்திராத புதிய பாதையாக உள்ளது. முன்பு குழந்தைகளிடம் கெட்ட சிந்தனை கூடாது. கெட்டவர்களின் சகவாசம் ஆகாது என்று இரண்டே கொள்கைக்குள் அடக்கப்பட்டு வளர்க்கப்பட்டதற்கும் இப்போது கெட்டதுக்குள் குழந்தைகள் வளர்ந்தே ஆக வேண்டிய கட்டாயத்திற்குள் இருப்பதும் தான் தற்போதைய சவால். 

அப்படியென்றால் இங்கு நல்லதே இல்லையா? என்ற கேள்வி வரும். நல்லது நிறைய உள்ளது. நம்பமுடியாத வாய்ப்புகளை வழங்கத் தயாராகவே உள்ளது. ஆனால் அதனைச் சுற்றிலும் உள்ள கெட்டவைகளை கடந்து வரவேண்டிய கட்டாயச் சூழலும் தற்போதைய குழந்தைகளுக்கு உள்ளது என்பதனை நாம் உணர்ந்து இருக்க வேண்டும். 

கல்வி பரவலாக்கப்படாமல் இருந்த காலகட்டத்தில் வாய்ப்புகளைப் பயன்படுத்த ஆளில்லாமல் இருந்தது. ஆனால் இப்போது வீட்டை விட்டு இறங்கினால் நம் குழந்தைகள் சந்திக்கும் ஒவ்வொருவரும் போட்டியாளர்களாகத்தான் தெரிகின்றார்கள். மனிதாபிமானம் அறவே தேவை இல்லை என்று ஆழ்மனதில் உருவாவது இந்த இடத்தில் தான். முறைப்படியான வாய்ப்பு வழங்காமல் தங்கள் திறமைகளைப் பயன்படுத்த முடியாமல் வாழ்வில் தோற்றவர்களின் பட்டியல் இங்கு வெகு நீளம். 

குடும்ப வாழ்க்கையில் முக்கிய அங்கத்தினராக இருக்கும் மகன், மகளின் விருப்பங்கள், தேவைகள் என்று பாரபட்சமின்றி இப்போதைய பெற்றோர்களால் உடனடியாக நிறைவேற்றப்படுகின்றது. இதுவே எதுவும் எளிதில் கிடைத்து விட வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்குகின்றது. கிடைக்காத போது தவறான பாதையில் சென்று விடுகின்றார்கள். 

பதின்ம பருவம், வளரிளம் பருவம், வளர்ந்த பருவம் என்று மூன்று நிலைகளாகப் பிரித்துக் கொள்வோம். 

எதையும் ஏற்றுக் கொள்ள மாட்டேன். எனக்குத் தெரியும் என்ற நிலை என்பது ஒரு இளைஞனின் வாழ்வில் முதலில் வரும். கேட்டுக் கொள்கிறேன். ஆனால் நானும் முயற்சித்தும் பார்ப்பேன் என்ற இரண்டாவது நிலையில் தான் அனுபவம் தன் பாடங்களை நடத்தத் தொடங்குகின்றது. மூன்றாவது நிலையில் என் அப்பா கோபக்காரர் ஆனால்? என்று தன் தந்தையைப் பற்றி நல்லதும் கெட்டதுமாக அனைத்தும் அலசி ஆராய்ந்து ஏற்றுக் கொள்ளும் நிலையில் வந்து நிற்கின்றது. 

அந்த நிலையில் நிச்சயம் கல்லூரி வாழ்க்கை முடித்து அவர்களுக்குண்டான வாழ்க்கையைத் தேடத் தொடங்கியிருப்பார்கள். அதற்குள் பெற்றோர்களுக்குச் சூழ்நிலைகளைக் கையாளும் பக்குவம் சரியாகத் தெரியாவிட்டால் ஒவ்வொரு நாளும் மரணக்குழிக்குள் இறங்கி ஏற வேண்டியதாக இருக்கும். 

கிராமச் சூழலில் வளர்ந்தவர்களின் வாழ்க்கை நகர்ப்புறத்திற்கு மாறினாலும் அவர்கள் பெரும்பாலும் மனதளவில் கிராமவாசிகளாகவே வாழ்கின்றனர். சிந்தனை, நோக்கம், செயல்பாடுகள் என்று அனைத்திலும் கிராமத்தின் தாக்கத்தை ஏதோவொரு நிலையில் பார்க்க முடியும். ஆனால் கிராமம் என்றே தெரியாதவர்கள் வாழும் வாழ்க்கையென்பது முற்றிலும் புதிது. 

வீட்டில் அரிசி சாப்பாடு என்றால் பணக்காரர் என்று பார்த்து வாழ்ந்த வாழ்க்கையில் இன்று அரிசி சாப்பாட்டை உங்கள் நோய்க்காகக் குறைத்தே ஆக வேண்டும் என்கிற அளவிற்கு உணவு முதல் உடைகள் வரைக்கும் மிதமிஞ்சி அனுபவிக்கும் நிலையில் இருக்கும் அந்தக் காலம் போல வராது. இப்ப எல்லாமே மோசம் சார்? என்பதைச் சொல்ல முடியுமா? 

ஒவ்வொரு ஐம்பது வயதுக்காரர்களும் இருபது வயதுக்குள் இருப்பவர்கள், அதனைக் கடந்து வாழ்பவர்கள் என்று அடுத்த இரண்டு தலைமுறைகளுடன் வாழ்ந்தே ஆக நிலையில் உள்ளனர். ஐம்பதைக் கடந்தவர்களின் அறிவென்பது இருபதைக் கடந்தவர்களுக்கு விளங்க முடியாததாக இருக்கும். அதுவே இருபதுக்குள் இருப்பவர்களுக்கு ஏற்றுக் கொள்ள முடியாததாகவே இருக்கும்.

இந்த இரண்டையும் கடந்து வரத் தெரிந்தவர்களுக்கும், கட்டுப்பாட்டு எல்லைக்கோட்டை புரிந்தவர்களுக்கும் தலைமுறை இடைவெளி பெரிய அளவு பாதிப்பை உருவாக்காது. இல்லாவிட்டால் இந்தக் காலத்தில் சிறுசுங்க எல்லாம் எங்கே நம்ம பேச்சை கேட்குது என்ற புலம்பல் மொழி கட்டாயம் வரத்தான் செய்யும். 

இறுதியாக

இங்கு எல்லாமே என் சொந்தம். கடைசி வரைக்கும் என் கட்டுப்பாட்டுக்குள் இருந்தே ஆக வேண்டும் என்ற எண்ணங்கள் முன்பு குடும்பத்தை வளர்க்க உதவியது. அதுவே இப்போது குடும்பங்கள் பிரிவதற்கான முக்கியக் காரணமாக உள்ளது. 15 வயதில் என் உரிமை இது? என்று பேசத் தொடங்கும் குழந்தைகளிடம் உங்கள் உரிமைகளை வார்த்தைகளாகப் பேசாதீர்கள். உரிமை என்பதற்கும் கடமை என்பதற்கும் உண்டான வித்தியாசத்தை உங்கள் செயல்பாட்டின் மூலம் காட்டுங்கள். செயல் தான் முக்கியம். 

என் சுதந்திரத்தில் நீங்கள் தலையிடாதீர்கள் என்று சொல்லும் உங்கள் குழந்தைகளிடம் உடனே எதையும் புரிய வைக்க முயலாதீர்கள். அவர்களுக்குக் காலம் கற்றுக் கொடுக்கும் நேரம் வரவில்லை என்பதனை சந்தர்ப்ப சூழ்நிலையை உருவாக்குவதில் கவனம் செலுத்துங்கள். 

இப்போது நேருக்கு நேர் பேசும் வார்த்தைகள் அனைத்தும் அவரவர் குழந்தைகளின் பத்து வயதிற்குள் முடிந்து விடுகின்றது என்பதனை எப்போதும் கவனத்தில் வைத்திருங்கள். சுருங்கிய உலகத்தில் மனமும் சுருங்கத்தான் செய்யும் என்ற எதார்த்தத்தையும் உணர்ந்து கொள்ளுங்கள். அவர்கள் ஆசிரியர்களைத் தேடவில்லை. அறிவுரை தேவையில்லை. அவர்களுக்கான உலகத்தில் வாழ அவர்கள் தான் அவர்களின் தேவையைக் கண்டறிய முடியும். 

இவையெல்லாம் மாயம் என்பதனை அவர்கள் உணர பலசமயம் உங்கள் வாழ்க்கை முழுமையையும் அவர்களுக்காகப் பணயம் வைத்து ஆக வேண்டும். அது போன்ற சமயங்களில் அதற்காக உங்கள் ஆரோக்கியத்தையும் சேர்த்து அவர்களுக்காகக் காவு கொடுத்து விடாதீர்கள். செல்வம் இருந்தாலும் ஆரோக்கியம் இழந்து நடைபிணமாக வாழும் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பவர்களை முன் உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள். 

காலம் ஒவ்வொரு காலகட்டத்திலும் அவரவருக்கான பாடத்தைக் கற்றுத் தந்தே தீரும். மாற்றங்கள் இங்கே மாறாதது. நீங்கள் சொல்ல விரும்பும் பாடங்களை உங்கள் குடும்பமே புறக்கணிக்கின்றது என்றால் நாம் காலாவதியாகிவிட்டோம் என்பதனை உணர்ந்து உங்களுக்கான வாழ்க்கையை மட்டும் வாழ முயற்சி செய்யுங்கள். 

காலம் மருந்து போடும். 

"தப்பிப் பிழைத்தவர்களால் மட்டுமே இங்கு வாழ முடியும்" என்பது தான் எந்த காலமும் சொல்லக்கூடிய வாழ்க்கை தத்துவம்.

( பயணம் முடிவடைந்தது. தொடர் வாசிப்புக்கு நன்றி)






50 வயதினிலே 5

50 வயதினிலே 6

22 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

காலம் ஒவ்வொரு காலகட்டத்திலும் அவரவருக்கான பாடத்தைக் கற்றுத் தந்தே தீரும். மாற்றங்கள் இங்கே மாறாதது. நீங்கள் சொல்ல விரும்பும் பாடங்களை உங்கள் குடும்பமே புறக்கணிக்கின்றது என்றால் நாம் காலாவதியாகிவிட்டோம் என்பதனை உணர்ந்து உங்களுக்கான வாழ்க்கையை மட்டும் வாழ முயற்சி செய்யுங்கள்.

உண்மையான வார்த்தை ஐயா
நன்றி

திண்டுக்கல் தனபாலன் said...

குழந்தைகளுக்கு Search-ல் ஆரம்பிக்கிறது அழிவு காலம்...

முத்தாய்ப்பான முடிவு...

விரைவில் இந்த தொடரை மின்நூலாக எதிர்பார்க்கிறேன்...

iramuthusamy@gmail.com said...

இன்று நம் குழந்தைகளுக்குக் கிடைக்கும் வசதிகள் ஏராளம். தீதும் நன்றும் பயில ஏதுவாக வாய்ப்புகளும் ஏராளம். இந்தப் போக்கு இன்னும் விரிவடையுமே தவிர மாறாது. இந்த சூழ்நிலையில் பெற்றோருக்கே விழிப்புணர்வு தேவை. பதிவு மிகவும் பயனுள்ள தகவல் களஞ்சியம். வாழ்த்துகள்.

G.M Balasubramaniam said...

இந்த தொடர் ஒன்றுக்கு நான் எழுதி இருந்த பின்னூட்டம் காணோம் மறு மொழி காண வந்தேன்

Nagendra Bharathi said...

அருமை

Amudhavan said...

மிகச் சரியான தீர்க்கமான பார்வை. பல பேருக்கு இந்த எண்ணங்கள் ஏற்பட்டிருக்கும். ஆனால் வெளியே சொல்லத் தோன்றாது. அதனை அழகாகச் சொல்ல வந்திருக்கிறது என்பது உங்களுக்கு அமைந்த திறமைதான். உங்கள் எழுத்து வளம் நாளுக்குநாள் மெருகேறிக்கொண்டே இருக்கிறது. வாழ்த்துகள்.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

உங்களின் இத்தகைய பதிவுகள் எங்களுக்குப் பாடமாக உள்ளன. நுண்ணிய முறையில் நோக்கி, பிசிறின்றி எழுதுகின்ற உங்கள் பாணி ரசிக்கத்தக்கது.

Rathnavel Natarajan said...

குழந்தைகளின் சிந்தனைகளுக்கு, செயல்பாடுகளுக்குத் தாக்குப் பிடிக்க முடியாத ஐம்பது வயது நபர்களின் வாழ்க்கை முறையென்பது இதுவரையிலும் நம் பெற்றோர்கள் அனுபவித்திராத புதிய பாதையாக உள்ளது. முன்பு குழந்தைகளிடம் கெட்ட சிந்தனை கூடாது. கெட்டவர்களின் சகவாசம் ஆகாது என்று இரண்டே கொள்கைக்குள் அடக்கப்பட்டு வளர்க்கப்பட்டதற்கும் இப்போது கெட்டதுக்குள் குழந்தைகள் வளர்ந்தே ஆக வேண்டிய கட்டாயத்திற்குள் இருப்பதும் தான் தற்போதைய சவால். - எனது பக்கத்தில் பகிர்கிறேன். நண்பர்கள் கட்டுரையை ஆழ்ந்து முழுவதும் படிக்க வேண்டுகிறேன். - வாழ்த்துகள் திரு ஜோதிஜி

Thulasidharan V Thillaiakathu said...

அவரிடம் நான் கேட்க வேண்டிய கேள்விகள் என்னிடம் நிறைய இருந்தது. நான் எதையும் கேட்க வில்லை. 23 வயதுள்ள அவர் பேசியதை மட்டும் கேட்டுக் கொண்டு அமைதியாகவே வந்து விட்டேன். //

ஜோதிஜி தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். தற்போதைய ஆசிரிய பெருமக்களின் செயல்பாடுகளை நான் கவனித்த வரையில் மனதிற்கு வேதனை அளிப்பதாகவே இருக்கிறது. ஆசிரியர் தின விழா என்று சொல்வதெல்லாம் இனி சரியில்லையோ என்று சொல்லும் அளவிற்கு. இது பள்ளி ஆசிரியர்கள் மட்டுமல்ல கல்லூரி ஆசிரியர்களுக்கும் பொருந்தும். நமது கல்வியின் தரம் தாழ்ந்து பல வருடங்கள் ஆகிவிட்டது.

என் வீட்டருகில் வசிக்கும் சாதாரணக் குடும்பத்தைச் சேர்ந்த பெண் வீட்டு வேலைசெய்து சமையல் வேலை செய்து குடும்பத்தை நடத்துபவர். அவரது இரு பெண் குழந்தைகளும் இங்கு ஒரு நல்ல? பள்ளியில் சேர்த்திருக்கிறார்கள். அரசு சார்ந்த பள்ளி அது. அவரது ஒரு பெண் 4 ஆம் வகுப்பு. எல்லா பாடத்திற்கும் ஒரு ஆசிரியைதான். அவர் வகுப்பிற்கு வந்து தனது மொபைலை நோண்டி தன் காதலுடன் உரையாடுவாராம். பின்னர் பக்கத்து வகுப்பு ஆசிரியையுடன் அன்றைய வம்புச் செய்திகள். நான் கேட்டேன் பாடம் எடுக்க மாட்டார்களா? என்று. போன வாரம் எப்போதோ எடுத்த ஒரு பாடத்தை அதன் கேள்வி விடைகளை ஏதோ ஒரு நோட்ஸ் கொடுத்து எழுதச் சொல்லுவாராம்? அவ்வளவுதான். குழந்தைகள் கேள்விகள் கேட்க முடியாது. சந்தேகங்கள் கேட்க முடியாது..இதுதான் தினமும் நடக்குமாம். நான் கேட்டேன் நிஜமாவா இப்படி என்று. அக்குழந்தை என் கையைப் பிடித்து சத்தியாமா ஆன்டி என்றது. கல்வி பற்றி அதிகம் பேசும் குடும்பம் மற்றும் கல்வித் துறையில் இருந்தவர்கள், இருப்பவர்கள் என் குடும்பம். கேட்டு மனம் நொந்து போனேன். சில கல்லூரிகளைப் பற்றிக் கேட்டால் இன்னும் வேதனைதான். நிறைய சொல்லலாம்...

நீங்கள் அமைதியாக வந்ததன் காரணம் அந்த ஆசிரியை ஜஸ்ட் 23 வயது என்பதாலா? அவரும் இப்போதைய இளைய சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதாலோ? அதனால் அவரிடம் கேட்பதில் பயனில்லை என்பதாலோ?

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

குழந்தைகளின் சிந்தனைகளுக்கு, செயல்பாடுகளுக்குத் தாக்குப் பிடிக்க முடியாத ஐம்பது வயது நபர்களின் வாழ்க்கை முறையென்பது இதுவரையிலும் நம் பெற்றோர்கள் அனுபவித்திராத புதிய பாதையாக உள்ளது. முன்பு குழந்தைகளிடம் கெட்ட சிந்தனை கூடாது. கெட்டவர்களின் சகவாசம் ஆகாது என்று இரண்டே கொள்கைக்குள் அடக்கப்பட்டு வளர்க்கப்பட்டதற்கும் இப்போது கெட்டதுக்குள் குழந்தைகள் வளர்ந்தே ஆக வேண்டிய கட்டாயத்திற்குள் இருப்பதும் தான் தற்போதைய சவால். //

மிகச் சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள் ஜோதிஜி. இந்த தலைமுறை வித்தியாசம் காலம் காலமாக இருந்து வந்தாலும் இப்போது அதிகமாகியுள்ளது என்பது உண்மையே. அதிகமான தரம் கெட்ட மீடியாக்களின், தொழில்நுட்பத்தின் நுழைவு என்றும் சொல்லலாம்.

என் மகன் பள்ளியில் படித்த போது அவன் தந்தையினால் அவன் லெவலுக்கு இறங்கி வந்து இயற்பியல் மற்றும் கணக்குப் பாடங்களைச் சொல்லித் தர இயலவில்லை. அவனது சிறு வயது முதலே..என்னுடைய சிந்தனை எப்போதுமே என் சிறுவயது அனுபவத்திலிருந்து வந்த ஒன்று... பாடம் மட்டுமல்ல எல்லா விஷயங்களிலுமே நல்லவையும் கூட நாம் குழந்தைகளின் லெவலுக்கு இறங்கி வந்து தோழமையோடு ஒரு தோழனைப் போல வழி காட்டுதல் அவசியம்..கற்றுக் கொடுப்பது என்பதை விட சொல்லும் விதத்தில் சொல்லி வழிகாட்டினால் மட்டுமே ரீச் ஆகும் என்று. இதைத்தான் நான் என்னிடம் கேட்கும் பெற்றோர்களுக்குச் சொல்லுவது. எத்தனைக்கெத்தனை தோழமையுடன் நேரம் செலவிட முடியுமோ அத்தனைக்கத்தனை குழந்தைகளுடன் நேரம் செலவிட வேண்டும். இப்போதைய தலைமுறையை இன்னும் கவனமாகக் கையாள வேண்டும் நீங்கள் சொல்லியிருப்பது போல். அவர்களைச் சுற்றிக் களைகள்தான் அகிதம் இருக்கின்றன நீங்கள் அதையும் சொல்லியிருக்கிறீர்கள். நல்ல அவதானிப்பு மற்றும் தொகுப்பு. அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள் ஜோதிஜி.

என்னைக் கேட்டால் ஆசிரியர்கள் (அவர்களும் பெற்றோர்கள் தானே) பெற்றோருக்குத்தான் நிறைய விழிப்புணர்வும், குழந்தைகளைக் கையாளும் வகுப்பும் எடுக்க வேண்டும்...ஆய கலைகள் 64 கலைகளில் குழந்தை வளர்ப்பு என்பதுதான் மிகப் பெரிய சவால்.

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

இறுதியாக என்று நீங்கள் சொல்லி வந்திருப்பது அனைத்தும் டிட்டோ செய்கிறேன் ஜி! அருமை..

குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்குப் அழகாகப் பொறுமையாகப் பதில் சொல்ல வேண்டும். அல்லாமல் இதெல்லாம் பிற்பாடு என்றோ நாங்கல்லாம் எங்க அம்மா அப்பாட்ட இப்படி எல்லாம் கேட்டதே இல்லை என்றோ சும்ம இரு தொண தொணனு என்ன இது என்றோ பெற்றோர் சொல்லச் சொல்ல குழந்தைகள் தனிமையை நாடுகிறார்கள்..பதின் பருவத்திற்கு முன்பாகவே சில கேள்விகள் பிறக்கும். அதற்கும் பெற்றொர் அழகாகச் சொல்லக் கற்றுக் கொள்ள வேண்டும். நல்ல உதாரணங்களாகவும் இருக்க வேண்டும்



"தப்பிப் பிழைத்தவர்களால் மட்டுமே இங்கு வாழ முடியும்" என்பது தான் எந்த காலமும் சொல்லக்கூடிய வாழ்க்கை தத்துவம்.//

முடிவு அருமை...பல விஷயங்களைப் பேசிய நல்ல தொடர் ஜி.

கீதா

ஜோதிஜி said...

நன்றி

ஜோதிஜி said...

அடுத்த மாதம் வெளிவருகின்றது.

ஜோதிஜி said...

தொடர் வாசிப்புக்கு மிக்க நன்றி.

ஜோதிஜி said...

மின் அஞ்சலிலும் வரவில்லையே?

ஜோதிஜி said...

நன்றி

ஜோதிஜி said...

உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி. மகிழ்ச்சி.

ஜோதிஜி said...

மிக்க நன்றி.

ஜோதிஜி said...

நன்றி

ஜோதிஜி said...

தற்போதைய ஆசிரியர்கள் ஆச்சரியமானவர்கள். அவர்களைச் சொல்லி குறையில்லை. ஒரு நிர்வாகம் வளர வளர பலவற்றை இழந்து சிலது மட்டும் இருந்தால் போதும். ஆனால் லாபம் முக்கியம் என்கிற நோக்கில் இதற்குள் பல விசயங்கள் உள்ளது. அது தனிப்பதிவுக்கான சமாச்சாரம்.

ஜோதிஜி said...

அப்பா அம்மா ஆசிரியர்கள் நல்லவர்களாக அமைந்தால் அறுபது சதவிகிதம் உத்தரவாதம். ஆனால் அவர்கள் சந்திக்கும் சுற்றுப்புறம் தான் அவர்களை வடிவமைக்கின்றது என்பது தான் எதார்த்தம். அதற்கான மனோநிலையைத்தான் தற்போதும் பெற்றோர்கள் புரியவைக்க வேண்டும். என் அப்பா உருவாக்கிய தாக்கம் இன்னமும் என்னுள் உண்டு.

ஜோதிஜி said...

பதிவு போலவே இருவரும் பகிர்ந்து கொண்ட கருத்துக்களுக்கு தொடர் ஆதரவுக்கும் மிக்க நன்றி.