Friday, June 15, 2018

நாட்டு நடப்பு - சின்னச் சின்ன குறிப்புகள்





இதில் வரக்கூடிய கதாபாத்திரங்கள் அனைவரும் ஊரில் வசிப்பவர்கள். 23 வயதுக்குக் கீழே இருப்பவர்கள். அனைவரும் பி.ஈ முடித்தவர்கள். முக்கியமான நெருங்கிய உறவுக்கூட்டத்தில் அங்கத்தினராக இருப்பவர்கள். 

1. அப்பாவுக்கும் மகளுக்கும் சண்டை நடந்து கொண்டிருந்தது. என்ன பிரச்சனை என்று கேட்டேன். 24 மணி நேரமும் மொபைல் போனை நோண்டிக் கொண்டே இருக்கிறாள். சொன்னால் கேட்கவே மாட்டுறா? என்றாள். மகளைப் பார்த்தேன். நீங்களே சொல்லுங்கள்? தினமும் 1.5 ஜிபி இலவசமாகக் கொடுக்குறாங்க. வீணாப் போயிடாதா? இந்த அப்பாவுக்குப் புரியவே மாட்டுது என்றார். 
••••••• 
2. மகள் ரூபாய் 4000 க்கு அருகே உள்ளே ஆங்கில வழிக்கல்வியில் ஆசிரியையாகப் பணிபுரிகின்றார். அப்பாவுக்கும் மகளும் தினமும் சண்டை. உன்னோடு படிச்சவங்க சென்னை, பெங்களூரென்று கிளம்பிப் போய் எப்படிச் சம்பாறிக்குறாங்க. இவ இதை விட்டுக் கிளம்பவே மாட்டுறா? இவளுக்கு 5 லட்சம் ரூபாய் செலவு செஞ்சுருக்கேன். நான் இனி மாப்பிள்ளை பார்க்கனும்ன்னா நகைக்கு எங்கே போறது? 

மகளைப் பார்த்தேன். 

+2 முடித்தவுடன் நான் விரும்பிய ஆசிரியர் பயிற்சிக்கு அனுப்பாமல் விழுப்புரம் அருகே உள்ள பொட்டைக் காட்டுக்குள் உங்களை யார் கொண்டு போய்ச் சேர்க்கத் சொன்னது? நான் வெளியே எங்கேயும் வேலைக்குப் போக மாட்டேன். பத்தாயிரம் சம்பளத்துக்கு என் உயிரை எடுப்பானுங்க. எனக்கு இந்த வேலை புடுச்சுருக்கு. நிம்மதியா ஐந்து மணிக்கே வீட்டுக்கு வந்துடலாம். நீங்க மாப்பிள்ளை பாருங்கள். கஷ்டம்ன்னா சொல்லுங்கள் நானே லவ் பண்ணி கல்யாணம் செய்துக்குறேன். 

அப்பா கத்திய கத்தலில் சென்சார் செய்யப்பட்டாலும் வெளியே சென்று கொண்டிருந்தவர்கள் திரும்பிப் பார்த்தார்கள். 

•••••••••••••• 
3. மகன் விருப்பத்தை மீறி இதற்குத்தான் வேலை வாய்ப்பு அதிகமாக இருக்குன்னு எல்லாரும் சொல்கிறார்கள் என்று கணினி சார்ந்த துறையில் மகனைத் தனியார் கல்லூரியில் சேர்த்தார் அப்பா. மகனின் குணாதிசியம் பற்றி நன்றாகவே எனக்குத் தெரியும். அவன் ஒரு எந்திரப் பிரியன். பத்தாம் வகுப்பு படிக்கும் போதே பைக் கில் ஏதாவது பிரச்சனை என்றால் அவனே கழட்டி மாட்டி விடுவான். அவன் மெக்கானிக்கல் விருப்பத்தையும் மீறி கணினித் துறையில் சேர்த்து விட்டார். பாதிப் படித்துப் பாதி முடியாமல் இப்போது அவனுக்குப் பிடித்த ஒர்க் ஷாப் வேலைக்குச் சுறுசுறுப்பாகச் சென்று கொண்டிருக்கின்றான். அப்பா தினமும் கத்திக் கொண்டிருக்கின்றார். 
•••••••••••••••• 

4. மூன்றாம் வகுப்பு படிக்கும் போதே என் மனைவியிடம் வந்து உங்களுக்கு மேக்கப் போட பிடிக்காதா? என்று கேட்டது அந்தக் குழந்தை. எப்படி ஆடைகள் தேர்ந்தெடுக்க வேண்டும்? எப்படி ஐ புரே தடவ வேண்டும் என்று பாடம் நடத்தியது. மிரண்டு போனேன். இத்தனைக்கும் அவர்கள் அப்போது எந்த நாகரிமும் எட்டிப் பார்க்காத கிராமம். எப்படி இந்தக் குழந்தைக்கு இவையெல்லாம் தெரியும்? என்று யோசித்ததுண்டு. எப்போதும் போல அப்பனும் ஆயியும் தரதரவென்று இழுத்துக் கொண்டு போய் ஈஈஈ படிப்பில் சேர்த்து விட்டார்கள். ஏழெட்டுப் தாள்களை வைத்துக் கொண்டு இப்போது சென்னையில் பணிக்குச் சென்று விட்டார். சம்பளம் பத்தாயிரம். விடுதி உணவுக்கு 4000 போக மீதிப் பணத்தில் அழகுக்கலை நிபுணர் பயிற்சிக்கு சென்று கொண்டிருக்கின்றார். அப்பனும் ஆத்தாளும் சாபம் விட்டுக் கொண்டிருக்கின்றார்கள். 
••••••••••••• 

5. அவர்கள் குடும்பத்தில் அவன் தான் முதல் தலைமுறை பட்டதாரி. அப்பாவும் அம்மாவும் படிக்காதவர்கள். தன் ஊரை விட்டு வெளியே எங்கும் செல்லாதவர்கள். ஊருக்குள் வேலை பார்ப்பவர்கள். ஒரே மகன். ஆனால் மகனை மகள் போலவே வளர்த்துத் தொலைத்து விட்டார்கள். பத்தாம் வகுப்பு முடித்து வேலை உடனே கிடைக்கும் என்று பாலிடெக்னிக் கொண்ட போய்ச் சேர்த்தார்கள். யாருடனும் பேச மாட்டான். வீட்டுக்கு ஓட்டமாக ஓடி வந்து விடுவான். 

மறுபடியும் ஈஈஈ யில் கொண்டு போய்ச் சேர்த்தார்கள். உறவுக்கூட்டம் இதற்கு உதவியது. படித்து முடித்து நான் பரிட்சை எழுதி பெரிய இடத்திற்குச் சென்று விடுவேன் என்று சொன்னதை நம்பி கடன் வாங்கிக் காசை இறைத்தார்கள். ஆனால் திருச்சி தாண்டி வேறு ஊர் என்றால் செல்லமாட்டான். ஒரு முறை சென்னை சென்று விட்டு வந்தவன் மூன்று நாட்கள் யாருடனும் பேசாமல் இருந்தானாம். காரணம் கேட்ட போது சென்னையில் பேசுற தமிழே புரியவில்லை என்றானாம். 

இப்போது நான் ஊரே விட்டு எங்கேயும் போக மாட்டேன் என்ற சொல்லி எல்ஐசி முகவராக மாதம் பத்தாயிரம் வருமானத்தில் மனம் கொள்ளா மகிழ்ச்சியுடன் வாழ்கின்றார். பெண் கிடைப்பது தான் பெரிய குதிரைக்கொம்பாக இருக்கின்றது என்றார் அம்மா. 

இதை எழுதுவதற்குக் காரணம் நீட் பரிட்சை எதிர்ப்பில் ஒரு வாதம் முன் வைக்கப்படுகின்றது. இத்தனை ஆயிரம் கோடி ரூபாய் பயிற்சி மையங்கள் மூலம் சுரண்டப்பட்டு இருக்கின்றது என்று. 

அப்படியே பி.ஈ பக்கம் வண்டியைத் திருப்பினால் ஒரு மாணவர் குறைந்த பட்சம் 4 லட்சம் என்று வைத்துக் கொண்டாலும் கடந்த பத்தாண்டுகளில் படித்து முடித்து வேலை இல்லாமல் வேறு தொழிலுக்குச் சென்றவர்கள், இன்னமும் சுற்றிக் கொண்டிருப்பவர்கள், முழுமையாக முடிக்காதவர்கள் என்பவர்களின் பட்டியலிட்டுப் பார்த்தால் பல லட்சம் கோடி ரூபாய் யார் வீட்டுக்குச் சென்று இருக்கும் என்பதனை ரயிலில் வரும் போது யோசித்துக் கொண்டே வந்தேன். 

தமிழகத்தில் அரசியலில் சம்பாரித்ததை, முதலீடாக மாற்றி, கல்வித்தந்தைகள் அதிகமாகி அவர்கள் மூலம் தமிழ்க்குழந்தைகளுக்கு எளிதில் கிடைத்த பி.ஈ என்ற வார்த்தையை நான் மேலே சொன்னவர்கள் அசிங்கமாகத்தான் உச்சரிக்கின்றார்கள் என்பது தனிச் செய்தி. 

ஊருக்கு வெளியே பொட்டைக்காடு. பாதிப் பட்டா நிலம். மீதி தானாகவே இருக்கும் செல்வாக்கு வைத்து சுரண்டிக் கொண்ட நிலம். முதல் வருடம் ஒரு தளம். கல்லூரியின் கட்டமைப்புக் குறித்துக் கவலைப்படத் தேவையில்லை. பாடம் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்கள் அவர்களின் சம்பளம் தகுதி குறித்தும் கவலையில்லை. 

ஐந்து வருடத்தில் பிரமாண்ட வணிக வளாகம் போன்ற வளர்ச்சி. அடுத்தச் சில வருடங்களில் கிளைக் கல்லூரிகள், பள்ளிக்கூடங்கள் என்று தொடங்கிக் குறைந்தபட்சம் 50 முதல் 500 ஏக்கர் வரைக்கும் சுனாமி போலச் சுருட்டியவர்கள் அனைவரும் இன்று இந்நாள் முன்னாள் அமைச்சர்கள். அமைச்சர்களுக்கு உதவியவர்கள், சொந்தக்காரர்கள் என்று பட்டியலிட்டால் தமிழகத்தில் ஃபேர்ப்ஸ் பத்திரிக்கைக்குத் தெரியாத பத்தாயிரம் பேர்களாவது தமிழகத்தில் இருப்பார்கள். 



தமிழகத்தில் கல்வி என்பது முழுமையாகச் சுரண்டல் தொழிலாக மாறி விட்டதால் முன்னே பின்னே இருக்குமே தவிர ஒருத்தனும் மாணவர் நலன் என்று பேச யோக்கியதை இல்லாதவனாகத்தான் இருக்கின்றான். 

இப்போது தான் அண்ணா பல்கலைக்கழகம் பி.ஈ படிப்பைக் கணினி வழியே ரேண்டம் எண் வழியே முறைப்படுத்தியுள்ளது. இந்த அறிவிப்பு வெளி வந்ததும் ஒவ்வொரு அரசியல்வாதிகளும் அலறினார்கள். காரணம் அடிமடியில் சூடு வைத்தால் பொறுக்க முடியுமா? 

பாவம் வசதியில்லாதவர்களும், கிராமப்புறம் சார்ந்த மாணவர்களும். உருவாகும் ஒவ்வொரு மாற்றமும் அவர்களைத்தான் நேரிடையாக மறைமுகமாகத் தாக்குகின்றது. அவர்கள் எதிர்கால வாழ்க்கையையே கேள்விக் குறியாக மாற்றுகின்றது. அவர்கள் மீண்டு வருவதற்குள் இங்கே மாண்டவர்களின் எண்ணிக்கை பட்டியலிட்டு பார்க்க முடியாத அளவிற்கு நீண்டதாக இருக்கப் போகின்றது. 

14 comments:

த. சீனிவாசன் said...
This comment has been removed by the author.
த. சீனிவாசன் said...

பெற்றோர்கள் மகன், மகளின் விருப்பத்தை விட, அவர்களுக்கு பொருளாதார சுதந்திரம் தரவே விரும்புகின்றனர். எந்த தொழில் செய்தாலும், ஒரே அளவு சம்பாதிக்கும் நிலை வரும் வரையிலும் இந்த மோகம் இருக்கவே செய்யும்.

Avargal Unmaigal said...


குழந்தைகள் புத்திசாலிகளாகத்தான் இருக்கிறார்கள் ஆனால் அவர்களை வழி நடத்தும் பெற்றோர்கள்தான் தகுந்த சிந்தனை இல்லாமல் ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைபட்டு அவர்களை கொடுத்து கொன்டிருக்கிறார்கள்

Yaathoramani.blogspot.com said...
This comment has been removed by the author.
Angel said...

இங்கே லண்டனில் பிளம்பிங் வேலை செய்றவங்க டாக்டர்ஸைவிட அதிக ஊதியம் பெறுகிறாரகள் .
எந்த படிப்பை தேர்ந்தெடுத்தாலும் அது மனசுக்கு திருப்தியளிக்கணும் மன நிறைவை தரணும் .அதை இங்குள்ள வெள்ளைக்காரர்களிடம் காணலாம் இவர்கள் யாரையும் பிள்ளைகளை இதுதான் படிக்கணும்னு வற்புறுத்துவதில்லை ..
நீங்கள் சொல்லியிருக்கும் பிள்ளைகள் அனைவரும் வாழ்க்கையை நல்ல முறையில் வாழ்வார்கள் எனபதால் ஐயமில்லை ஏனென்றால் அவர்கள் குறிக்கோள் திருப்தியும் மனநிறைவும் .அவர்களுக்கேற்ற அதே மனநிலையுள்ள குணமுள்ள நல்ல வாழ்க்கைத்துணைகளும்
அமையட்டும்

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

இப்போதைய மகன்/மகள்களின் தேடலுக்கும் பெற்றோரின் தேடலுக்கும் இடையே காணப்படும் இடைவெளியே பல சிக்கல்களுக்குக் காரணமாகின்றன. அதற்கு இருவருமே பொறுப்பாவார்கள்.

கரந்தை ஜெயக்குமார் said...

கல்வி என்பது இன்று வணிகப் பொருளாகிவிட்டது
இதற்கெல்லாம் காரணம் பெற்றோர்களே,
தங்களது ஆசையை, தங்கள் பிள்ளைகள் மீது திணிக்கிறார்கள்.
தான் வாழ்வில் ஆசைப் பட்டதை எல்லாம், தங்களின் பிள்ளைகள் சாதித்துக் காட்ட வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
அதனால் அவர்களது பிள்ளைகளின் விருப்பத்திற்கு செவி மடுக்க மறுக்கிறார்கள்.
அதுமட்டுமல்ல, இன்று படிக்கும், பள்ளி, கல்லூரி அனைத்தும் பெற்றோரின் அந்தஸ்தை, கௌரவத்தை வெளிப்படுத்தும் இடமாக உருவகப் படுத்தப்பட்டுவிட்டது.
இதில் கொடுமை என்னவென்றால், பல ஆசிரியர்கள் கூட, தங்கள் பிள்ளைகளை இதுபோன்று படிக்க அனுப்புவதுதான்.

பத்தாம் வகுப்பில், பனிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி சதவீதத்தை வைத்து பள்ளியின் தரத்தை முடிவுசெய்கிறார்கள்.
ஆனால் இதோ அளவுகோலைக் கொண்டு, கல்லூரியினை அளக்க மறுக்கிறார்களே ஏன்?

ஜோதிஜி said...

நன்றி. இதில் வேறு சில உளவியல் உள்ளது. ஒவ்வொரு பெற்றோர்களும் தங்களால் தங்கள் வாழ்க்கையில் அடைய முடியாத பொருளாதாரம் சார்ந்த விசயங்களை தங்கள் மகன் மகள் மூலம் அடைய முடியுமா? என்று பார்க்கின்றார்கள். சில பெற்றோர்களுக்கு சாதகமாக அமைந்தும் விடுகின்றது. பல பெற்றோர்களுக்கு அது முடியாது என்று தெரிந்த போதிலும் தங்கள் வாரிசுகளை அழுத்தம் கொடுக்கத் தொடங்கி விடுகின்றார்கள். இதன் காரணமாகவே இந்தப் படிப்பு படித்தால் நிச்சயம் உயர்ந்தஇடத்திற்கு வந்து விடலாம் போன்ற நம்பிக்கைகள்.

ஜோதிஜி said...

பெற்றோர்களை விட சுற்றியுள்ள சமூகம் தான் இங்கே ஒவ்வொருவரையும் வழிநடத்துகின்றது. வழிகாட்டியாகவும் உள்ளது. அடுத்தவரிடம் இருப்பது தான் சமூக அளவுகோல் என்ற எண்ணம் மாறாத வரைக்கும் சுயபுத்தியை அடகு வைக்கும் போக்கு இங்கே தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்.

ஜோதிஜி said...

நான் பள்ளி முடித்து வெளியே வரும் போது ஐடிஐ என்ற படிப்புக்கு அதிக கிராக்கி இருந்தது. நீங்க சொல்ற தொழிற்படிப்புகள். அப்புறம் பாலிடெக்னிக் என்று மாறியது. அது கடைசியில் பொறியியல் என்பதாக மாறி ஒயிட் காலர் ஜாப் என்கிற ரீதியில் வந்துள்ளது. திருப்பூரில் உள்ள தொழிற்சாலைகளில் தாக்குப் பிடிக்க முடியாதவர்கள் அத்தனை பேர்களும் உழைக்க முடியாதவர்கள் அல்லது உழைக்கத் தயாராக இல்லாதவர்கள். நீங்க சொன்னதில் ஒரு திருத்தம். ஒவ்வொரு பெண்ணும் இங்கே தன் கணவன் எப்படி இருக்க வேண்டும். எந்த துறையில் இருக்க வேண்டும்? எவ்வளவு சம்பாரிக்க வேண்டும் என்பதனை குறிக்கோளாக வைத்திருக்கின்றார்கள். பல இடங்களில் பல திருமணங்கள் நடக்காமல் இருப்பதற்கும் தள்ளிப் போவதற்கும் இதுவே முக்கிய காரணமாக உள்ளது.

ஜோதிஜி said...

முற்றிலும் உண்மை.

ஜோதிஜி said...

அற்புதமான அழகான எதார்த்தமான விமர்சனம். நன்றி.

Thulasidharan V Thillaiakathu said...

அருமையான தொடர். வாசிக்கத் தொடங்கிவிட்டோம். கல்வி வணிகம் ஆகிவிட்டது. தமிழ்நாட்டில் தான் அதிகம் என்று நினைத்தால் இப்போது கேரளத்திலும் வந்துவிட்டது.

(கீதா: என்னைப் பொருத்தவரை இப்படி வணிகம் ஆனதற்கு ஒரு காரணம் பெற்றோர் என்பதே.)

வேதனையான விஷயம்.

துளசிதரன், கீதா

Thulasidharan V Thillaiakathu said...

கரந்தை சகோவின் கருத்துகள் முழுவதையும் டிட்டோ செய்கிறேன். நம் கல்வியின் தரம் மாறாத வரை நம் நாடு உருப்படப் போவதில்லை. தமிழ்நாட்டின் கல்வி கெட்டுக் குட்டிச்சுவரானதற்குக் காரணமே
//தமிழகத்தில் அரசியலில் சம்பாரித்ததை, முதலீடாக மாற்றி, கல்வித்தந்தைகள் அதிகமாகி அவர்கள் மூலம் தமிழ்க்குழந்தைகளுக்கு எளிதில் கிடைத்த பி.ஈ என்ற வார்த்தையை
//

எந்தக் குழந்தையும் நல்லக்குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே வரிகள் தான் நினைவுக்கு வருகிறது ஜோதிஜி.

கல்வித் துறைக்கு எனது வேண்டு கோள் இதுதான். ஒரு குழந்தையின்மதிப்பெண்களை வைத்து எடை போடக் கூடாது. என்ன குறைபாடு என்று கண்டறிய ஆசிரியர்கள் குழந்தையுடன் பெற்றோருடன் கலந்தாலோசிக்க வேண்டும். இதனைச் சிறு வகுப்பிலிருந்தே தொடங்க வேண்டும். 10 ஆம் வகுப்பு மதிப்பெண் வைத்து குழந்தையின் எதிர்காலத்தை பாழ்படுத்தக் கூடாது. 12க்குப் பிறகு குழந்தை எதிர்பார்க்கும் கல்வியைத் தொடர முடிகிறதோ இல்லையோ அதை அப்போதே கிள்ளி எறியக் கூடாது. என் மகனுக்கு நேர்ந்த அனுபவம் சொல்லியிருப்பேன் என்று நினைப்பதால் இங்கு அதைச் சொலல்வில்லை. ஆனால் நாங்கள் பள்ளி முதல்வருடன் போராடியதால் இன்று அவன் விரும்பிய கால்நடை மருத்துவராக இருக்கிறான்.


கீதா