Thursday, March 01, 2018

ஞாநி -- தாயுமானவன்





கடந்த 25 வருடங்களில் தமிழகத்தில் உள்ள முக்கியப் பிரபல்யங்கள் பலரையும் நேரிடையாகச் சந்தித்துள்ளேன். நெருக்கமாகப் பழகும் வாய்ப்பும் அமைந்து இருந்தது. இன்று வரையிலும் பலருடனும் அந்தத் தொடர்பு இருந்து வருகின்றது. ஆனால் என் வாழ்க்கையில் ஞாநி என்பவர் எங்கள் குடும்பத்தில் ஒருவர் போலவே என்னுடன் இருந்தார். இவருடன் பழகிய அத்தனை பேர்களும் இதனைத் தவறாமல் குறிப்பிடுகின்றார். 
புத்தகங்கள் அதிகம் வாசிக்காத என் சகோதரிகள், உறவினர்கள் என அத்தனை பேர்களும் ஞாநி இறந்த தினம் அன்று என்னிடம் தொடர்ச்சியாக விசாரித்துத் தங்கள் வருத்தங்களைத் தெரிவித்தனர். அந்த அளவுக்குத் தன் தனிப்பட்ட குணநலனால் எங்கள் குடும்ப உறுப்பினர்களைக் கவர்ந்தவர். 
நிச்சயம் இவர் நினைவுகள் எதிர்காலத்தில் பலரின் பார்வைக்குப் பட வேண்டும் என்பதற்காக இந்த மின் நூலை தயாரித்தேன். என் ஆழ்ந்த அஞ்சலிகள்.
நான் இதுவரையிலும் வெளியிட்டுள்ள மின் நூலுக்கு அட்டைப்படத்தை பல்வேறு நண்பர்கள் இலவசமாக வடிவமைத்துக் கொடுத்துள்ளனர்.  குறிப்பாக என் இனிய நண்பர் மதுரைத் தமிழன் ( தற்போது அமெரிக்காவில் வசிப்பவர்)மிக விரைவாக வடிவமைத்துக் கொடுப்பார்.  மாறுதல் சொன்னால் உடனே மனம் கோணாமல் திருத்தி அனுப்பி வைப்பார்.  ஞாநி மின் நூலுக்கும் அவரே தான் வடிவமைத்து இருந்தார்.
திடீரென்று ஒரு நாள் மயிலாடுதுறையில் இருந்து நண்பர் சுரேஷ் மின் அஞ்சல் வாயிலாக என்னைத் தொடர்பு கொண்டார்.  அவர் தொடர்ச்சியாக என் மின் நூல்களை படித்து கவரப்பட்டு எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க என்று கேட்டு இருந்தார். அவர் மயிலாடுதுறையில் புகைப்பட கலைஞராக உள்ளார்.  அவர் வரைந்த அட்டைப்படம் மிகச் சிறப்பாக வந்துள்ளது.  நண்பர் சுரேஷ் க்கு நன்றியும் அன்பும்.






Thursday, February 08, 2018

உணவு அரசியல்


புத்திசாலிகள் ஒரு விசயத்தில் கவனமாக இருப்பார்கள். உனக்குச் சோறு முக்கியமா? இல்லை உன் கொள்கை முக்கியமா? என்று கேள்வியை நம் முன் வீசுவார்கள். நமக்கு வேறு வழி என்ன? எனக்குச் சோறு தான் முக்கியம் என்போம். நம்மிடம் உள்ள கொள்கைகள் காலப் போக்கில் நீர்த்துப் போய்விடும். குடும்பம், குழந்தைகள் என்று ஆன பின்பு கொள்கையா? அது எங்கே தூத்துக்குடி, காரைக்குடி பக்கம் உள்ளதா? என்று கேட்கும் நிலைக்கு வாழ்க்கை கொண்டு வந்து நிறுத்தும்? 

இவர் எழுதும் விசயங்களைப் படிக்கும் போது அப்படித்தான் எனக்குத் தோன்றியது. காரணம் மரபணு மாற்றப் பயிர்கள் குறித்துப் பாராளுமன்றத்தில் நடந்த விவாதங்களை நாலைந்து தொடர் பதிவுகளாகப் பின்னால் உதவும் என்பதற்காக அதை எழுதி வைத்தேன். பல அரசியல்வாதிகளின் உண்மையான சொரூபம் அதில் தெரிந்தது. பல பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளை லாப கொள்கைள் புரிந்தது. 

ஆனால் இவர் எழுதுவதை வாசித்த பின்பு எனக்கே சற்றுக் குழப்பம் வந்தது. உணர்ச்சி வேகத்தில் நாம் யோசிக்கின்றோமோ? என்று பல முறை இவரின் நீண்ட பதிவுகளை ஷேர் செய்து வைத்துக் கொண்டு இரவு வந்து பொறுமையாகப் படித்து உள்வாங்குவதுண்டு. 

பல சமயம் நம் மனதைக் குலைத்து விடுவார். நம் எண்ணங்கள் தவறு என்றே கொண்டு வந்து நிறுத்தி விடுவார். இவரும் தனி மனிதர்கள் தங்களின் அடையாளம் எனக் கருதும் சாதி சார்ந்த விசயங்களை நக்கலாக நையாண்டியாகக் கிண்டி கிளங்கெடுப்பதில் சூராதி சூரர். வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல வார்த்தைகள் கதம்பமாக மாட்டி வைத்து விடுவார். 

என் இது அடையாளம் என்று கருதிக் கொண்டவர்கள் விமர்சனம் வழியாக இவரை வந்து தொடர்ந்து விளாசி தள்ளிக் கொண்டேயிருப்பார்கள். அதற்கு இவர் அளிக்கும் பதில் இன்னும் சுவராசியமாகவே இருக்கும். எழுத்துச் சித்தர் என்று பட்டம் சூட்டலாம். 

ஆனால் சொல்ல வந்த விசயத்திற்குப் பின்னால் உள்ள சாதகப் பாதக விசயங்களை அலசி விட மனமில்லாது பொத்தாம் பொதுவாக அடித்து விட்டு நகர்ந்து விடுவார். எது சரி? எது தவறு? என்பதனை வாசகர்கள் தான் சுய சிந்தனை மூலம் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். 

இந்த வருடத்தில் எனக்குப் பிடித்த முகநூல் பதிவர்கள் இவரும் ஒருவர். வாழ்த்துகளும், நன்றியும், அன்பும். @Rs Prabu 

(This account has been deactivated. Only you can see RS on your friends list. ) 

மக்களின் பசி குறித்து அதிகம் யோசித்த காரணத்தால் தற்போது வனவாசம் போயிருக்கின்றார் என்றே நினைக்கின்றேன். 


Wednesday, February 07, 2018

மதம் மீறும் மனிதர்கள்


எனக்குத் தெரிந்தவரையில், நான் அறிந்தவரையிலும் இந்து மதத்தில் மதம் ஆட்சி செய்வதில்லை. சாதி தான் ஆதிக்கம் செலுத்துகின்றது. ஆனால் இன்றைய அரசியல்வாதிகள் மூலம் மதம் முன்னுக்கு வந்து கொண்டிருக்கின்றது. குழந்தைகள் படிக்கும் பள்ளியில் இந்த ஆண்டு முதல் முறையாகக் கிறிஸ்துவம், முஸ்லீம் மாணவ மாணவியர்கள் ஒவ்வொரு வகுப்பிலும் எத்தனை பேர்கள் படிக்கின்றார்கள் என்று கணக்கெடுத்தார்கள் என்று வந்து சொன்ன போது மனதிற்குள் பல விசயங்கள் வந்து போனது.

வலைபதிவில் பல இஸ்லாமிய நண்பர்கள் விமர்சனங்கள் வாயிலாக அறிமுகம் ஆனாலும் குறிப்பிட்ட சிலர் மட்டுமே மதங்களைத் தாண்டி யோசிக்கத் தெரிந்தவர்களாக இருக்கின்றார்கள். அவர்களை அறியாமல் அவர்களின் மதம் தான் முன்னுக்கு வந்து நிற்கின்றது. இது அவரவர்களின் தனிப்பட்ட கொள்கைகள் என்று நான் கண்டு கொள்ளாமல் கடந்து சென்று விடுவதுண்டு.

தன்னை உணராமல் தனக்கான அடையாளம் இது தான் என்று கடைசி வரைக்கும் நிரூபித்துக் கொண்டேயிருப்பது அவஸ்தையான வாழ்க்கை. அந்த வாழ்க்கையை என்றும் நான் வாழ விரும்புவதில்லை.

இவரின் எழுத்துக்கள் மிதவாதம் இல்லை. அதே சமயத்தில் தீவிரவாதமும் இல்லை. சக இஸ்லாமிய நண்பர்கள் இவரை அவ்வப்போது இப்படி எழுதாதீர்கள் என்று விமர்சனங்களில் வாயிலாகச் சுட்டிக் காட்டுவதையும் கவனித்து வந்துள்ளேன். ஆனால் இவர் தன் கொள்கைகளை மாற்றிக் கொண்டதே இல்லை.

ஒரு முறை பேசியுள்ளேன். நிச்சயமாக என்னால் சொல்ல முடியும். உண்மையான இஸ்லாம் சொல்லும் கொள்கையின்படி தான் வாழ்ந்து கொண்டிருப்பார் என்று நம்பிக்கை வரும் அளவிற்கு அவரின் உரையாடல் இருந்தது.

தன் குடும்பத்தை அதிக அளவு நேசிப்பவர். அதே அளவுக்குச் சமூகத்தைப் பாரபட்சமின்றி நேசிப்பவர் என்பதனை அவரின் எழுத்துக்கள் வாயிலாகப் புரிந்துள்ளேன். ஆனால் சொந்த வாழ்க்கையில் சுதாரிப்பு இல்லாதவர் என்பதால் பலருக்கும் உழைத்துக் கொடுப்பவர் என்ற நிலையில் அவர் மாற முடியாமல் தடுமாறிக் கொண்டேயிருக்கின்றார் என்பதனை யூகிக்க முடிகின்றது.

பணம் என்ற விசயத்தில், தன் உழைப்புக்குக் கிடைக்காத அங்கீகாரம் அதுவும் தான் சார்ந்த இன மக்களே சொல் ஒன்று செயல் ஒன்று வாழும் போது அதன் ஆதங்கத்தையும் அவ்வப்போது எழுத்தில் வாயிலாக வடிகாலாக மாற்றிக் கொண்டு திருப்தி பட்டுக் கொண்டு விடுகின்றார்.

திமுக என்பது இஸ்லாமியர்களின் விருப்பக்கட்சியாக இருந்தாலும் அதன் கொள்கைகள் மீதும், மாறிக் கொண்டே வரும் எண்ணங்கள் மீதும் விமர்சனத்துடன் தன் கருத்தைப் பதிய வைக்கின்றார். அதே போலச் சக இஸ்லாம் சார்ந்த தவறுகளையும் சுட்டிக் காட்டிவிடுகின்றார். சற்று மென்மையாக.

வாழ்த்துகளும் அன்பும் சற்று கூடுதல் பிரியங்களுடன். Jamesha Habib

https://www.facebook.com/home.planners.5?fref=mentions&pnref=story