இந்த முறை தேர்தலில் தொடக்கம் முதல் இரண்டு பேர்களை கவனித்துக் கொண்டே வருகின்றேன். ஒன்று சீமான். மற்றொருவர் விஜயகாந்த.
சீமானைப் பொறுத்தவரையில் அவரின் உண்மையான நிலைப்பாடு இந்த முறை தேர்தலில் பங்கெடுப்பது இல்லை. அடுத்து வரும் தேர்தலுக்கு (2016)முன்னோட்டமாக இன உணவாளர்களை ஒன்று சேர்க்க வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார். குறிப்பாக காங்கிரஸ் கட்சியை முடிந்த வரைக்கும் முடித்துக் கட்டுவதில் குறியாக இருக்கிறார். சீமான் பேசும் கூட்டங்களில் இளையதலைமுறையினர் ஆர்வமாக பங்கெடுத்துக் கொள்கின்றனர். முக்கியமாக படித்தவர்களின் பங்களிப்பு அதிகமாக உள்ளது.
சீமான் மனதிற்குள் போட்டுள்ள கணக்கை விட இந்த தேர்தல் முடிவுதற்குள் கிங்கர ராஜாக்கள் என்ன மாதிரியான கணக்கை வைத்துள்ளார்களோ?
காரணம் புதுக்கோட்டையில் முதல் களப்புலியை காவு வாங்கி தங்களது புனிதப்பணியை தொடங்கியுள்ளனர். இதற்குள் உள்குத்து அதிகமாக இருந்தாலும் முழுமையாக எந்த ஊடகமும் இதைக் குறித்து ஆராயாமல் சற்று மேம்போக்காகவே போய்விட்டது. இன்னும் எத்தனை பேர்களை பலி பீடத்திற்கு அழைத்துச் செல்லப் போகிறார்களோ? சென்னையில் இயக்குநர் பாரதிராஜா அலுவலகத்தை யார் தலைமையில் சூறையாடினார்கள் என்று அணைவருக்கும் தெரிந்து போதிலும் அத்தனை பேர்களும் அமைதி காத்தனர். காரணம் கடந்த தேர்தலில் ப. சிதம்பரம், இளங்கோவன் போன்றவர்களை மண்ணைக் கவ்வியதற்கு முக்கிய காரணம் ஈழம் என்ற ஒரு சொல்லும் அதன் ஆதரவாளர்களுமே காரணமாக இருந்தனர்.
ஆனால் ப. சிதம்பரம் அழிச்சு கிழிச்சு கெஞ்சி கூத்தாடி கழைக்கூத்தாடி போலவே ஆளை விட்டால் போதுமடா சாமின்னு ஓட்டமாய் பின்வாசல் வழியே மேலே போய் உட்கார்ந்து விட்டார். இப்போது காங்கிரஸ் மக்கள் கொஞ்சம் உசாராகவே இருக்கின்றனர். ஈழம் என்று சொல்லிக்கொண்டு வெற்றி வாய்ப்பை தட்டிப் பறிப்பவர்கள் எவராயினும் அவர்களுக்கு உரிய பாடம் புகட்டப்படும் என்பதை உணர்த்திக் காட்ட எதற்கும் தயாராகவே உள்ளனர். மீறி உணர்த்திக் காட்டிவர்களுக்கு முடிந்த வரைக்கும் அவ்வப்போது ஒவ்வொரு கணக்கும் தீர்த்துக் கொண்டே வரப்படுகின்றது.
செயலில் இறங்கிய இளங்கன்றுவின் வேகம் இன்று வாசன் கோஷ்டியை விட மேலேறி உச்சாணிக் கொம்பில் உட்கார்ந்துள்ளது. உடன்பிறப்பு, ரத்தத்தின் ரத்தம் தொண்டர்களுக்கு நான் எந்த வகையில் சளைத்தவன் அல்ல என்று இளங்கன்றுவின் வேகத்தை உள்துறை கூட மனதில் உள்ளே வைத்து ரசித்து இருக்கக்கூடும். காரணம் இது அரசியல். இப்போது தவறவிட்டால் எப்போதும் தவறாய் போய் முடிந்து விடும்.
ஆனால் இந்த 2011 தேர்தல் என்பது தமிழ்நாட்டில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு சுயபரிசோதனை என்பதை விட உண்மையிலே ஈழம் இனப்படுகொலை என்பது தமிழ்நாட்டில் எந்த தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது? என்பதை உணர்த்தக் கூடும். இதை வைத்து தான் சீமான் களத்தில் இறங்கியிருக்கிறார். முடிந்த கதையை எத்தனை நாளைக்கு பேசிக் கொண்டு இருக்கப்போகிறாய்? என்று தமிழ்நாட்டு வாக்காளர்கள் கேட்கப்போகிறார்களா? அல்லது சீமானின் கர்ஜனை எந்த அளவிற்கு தாக்கத்தை உருவாக்கும்? என்று தெரியவில்லை. பெரும்பாலும் இந்த தேர்தல் முடிவை வைத்து சீமான் செல்வாக்கானவரா இல்லை செல்லக்காசா? என்று முடிவு தெரிந்து விடும்.
விஜயகாந்த்.
நான் தான் முதலமைச்சர்!!!! என்று தைரியமாக கூவியதற்கே முதலில் பாராட்டுரை வழங்க வேண்டும். பெரும்பாலும் தேமுதிக என்ற கட்சி தொடங்கிய பிறகு தான் விஜயகாந்த் அரசியல் குறித்து கொஞ்சமாவது படித்து கேட்டு இருக்கக்கூடும். பண்ட்ருட்டி ராமச்சந்திரன் மனம் மாறாமல் இன்னமும் விஜயகாந்த பக்கத்தில் இருப்பதால் கொஞ்சம் அனுபவ பாடங்களும் கிடைத்து இருக்கக்கூடும். ஒரு பக்கம் மனைவி பிரேமலதா மற்றொரு புறம் மச்சினன் சுதிஷ் பின்பக்கம் பண்ட்ருட்டி முன்பக்கம் எப்போது அவர் சொல்லிக் கொண்டு இருப்பது அந்த ஆண்டவன்.
விஜயகாந்த மேடையில் பேச்சும் தெளிவாக இல்லை. கோர்வையாகவும் சொல்லத் தெரியவில்லை. மொத்தத்தில் நிதானமும் இல்லை. ஆனால் தொடக்கம் முதல் இந்த தில்லுதுர வைத்திருந்த நம்பிக்கை இன்று வீணாகிப் போய்விடவில்லை. பட்டையைக்கிளப்பி போய்க் கொண்டு இன்று அதிமுக வில் 41 சீட்டு பெற்றுள்ளார். பாவம் வைகோ, கம்யூனிஸ்ட்கள்.
விஜயகாந்தின் பழைய படங்களைப் பார்த்தால் அந்த வெண்திரையில் விஜயகாந்த சிரித்தால் அந்த பற்கள் மட்டும் கொஞ்சம் வெள்ளையாக தெரியும். நடிகர் விஜய் அப்பா எஸ்.ஏ.சி க்கும் நண்பர் இப்றாகிம் ராவுத்தருக்கும் தான் விஜயகாந்த் காலம் முழுக்க நன்றி சொல்ல வேண்டும். கதாநாயகனுக்கு உரிய எந்த அங்கலட்சணமும் இல்லாமல், இன்று வரையிலும் தமிழ் உச்சரிப்பு கூட சரியாக பேச முடியாமல், தொப்புளில் பம்பரம் விட்டு கலைச்சேவை செய்து இன்று நாட்டுக்கு சேவை செய்ய வந்து இருக்கும் இவரின் சேவையை யார் உணர்ந்தார்களோ இல்லையோ விருத்தாச்சலம் தலித் மக்கள் கொடுத்த ஆதரவு மகத்தானது.
பாசமுள்ள மகன் கட்சிக்கு சொந்தக்காரன ராமதர்ஸ் கோட்டைக்குள் நுழைந்து பிடறியை உலுக்கியதோடு பீடு நடை போட்டு சட்டமன்றம் வரைக்கும் சென்றது வரைக்கும் முழுக்க முழுக்க அவரின் தனிப்பட்ட அசாத்தியமான தைரியமே. வைகோ போல் குறுக்கும் நெடுக்கும் நடைபயணம் இல்லை. திருமா போல வீர வசனம் இல்லை. மற்ற அரசியல் தலைவர்கள் போல களப்பணிகள் இலலை. மொத்தத்தில் பெரிதான கஷ்டங்களை சந்திக்காமல் நானே ராஜா நானே மந்திரியாய் முழு நேர அரசியல் தலைவராய் பரிணமித்துள்ளார். இன்று கேப்டன் தொலைக்காட்சியில் இவர் புகழ் எட்டுத்திக்கும் பறந்து கொண்டுருக்கிறது.
கலையுலகம் முதல் இன்றைய அரசியல் உலகம் வரைக்கும் அத்தனையிலும் தான் கொண்ட நம்பிக்கையை விஜயகாந்த் இன்று வரைக்கும் மாற்றிக் கொள்ளவேயில்லை. இந்த நம்பிக்கை தான் இன்றைய அதிர்ஷ்ட திசையின் ஆரம்பம்?
டெல்லியில் இருந்து வந்த பாரதிய ஜனதா கட்சி நபர்களையே வாசலில் காக்க வைத்த போயஸ்தோட்டம் இன்று வேறு வழியே இல்லாமல் விஜயகாந்தை வெத்தலை பாக்கு வைக்காத குறையாக வரவேற்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறது.. குறிப்பாக பா.ம.கா வை கலைஞர் உள்ளே இழுத்தது காங்கிரஸ்க்கு எரிச்சலாக இருந்து இருக்குமே தவிர விஜயகாந்த்திற்கு மற்றொரு அதிர்ஷ்ட வாய்ப்பு. மீதி இருக்கும் ஒரே வாய்ப்பு தேமுதிக மட்டுமே என்கிற நிலை வந்த போது அதிமுக வேறு என்ன செய்ய முடியும்?
தொடக்கம் முதல் விஜயகாந்த் கடைபிடித்த அமைதி ரொம்பவே ஆச்சரியமானது. எதிலும் பிடிகொடுக்கவில்லை. எந்த வாய்ப்புகளையும் தவற விட தயாராய் இல்லை. டெல்லிக்கு படையெடுத்தது முதல் காங்கிரஸ் ஒரு பக்கம், மற்றொரு புறம் தனது அக்கா விஜயலெட்சுமி மூலம் அழகிரி ஒரு பக்கம் என்று உருவாக அரசியல் சந்தையில் தேமுதிக முக்கியமானதாக போய்விட்டது.
விஜயகாந்த் அரசியல் வாழ்வில் இத்தனை பெரிய அதிர்ஷ்டக் காற்று அடிக்கும் என்று அவரே நினைத்து இருக்கமாட்டார்.
' நான் ஆண்டவனுடன் மற்றும் மக்களுடன் கூட கூட்டணி வைப்பேன் ' என்று சொன்னவர் இன்று அதிமுகவுடன் வந்து சேர்ந்துள்ளார். விஜயகாந்த் வைத்திருக்கும் பத்து சதவிகித ஓட்டுகள் இந்த முறை அதிமுகவுக்கோ உதவுகின்றதோ இல்லையோ நிச்சயம் தன்னுடைய அரசியல் ஸ்திரத்தன்மையை மேம்படுத்திக் கொள்ள இந்த தேர்தல் தேமுதிகவுக்கு உதவும். போயஸ் தோட்டத்தில் கனகம்பீரமாக உள்ளே நுழைந்த நபர் இவராகத்தான் இருப்பார்.
இவர் தொடக்கம் முதல் சொல்லிக் கொண்டிருக்கும் ஒரு வாக்குறுதி வித்யாசமானது. "நான் ஆட்சிக்கு வந்தால் ரேசன் பொருட்கள் அத்தனையும் ஒவ்வொருவரின் வீட்டுக்கே வந்து சேரும். இதைப் போலவே பல ஐடியாக்கள் வைத்துள்ளேன். இப்போது அதை வெளியே சொன்னால் திமுக காப்பி அடித்து விடும்" என்று வேறு பயமுறுத்தி வைத்துள்ளார். ஏற்கனவே இதைப்போலவே பா.மா.க, விடுதலை சிறுத்தைகள். தனிப்பட்ட முறையில் பல வாக்குறுதிகளை வழங்கியிருந்தனர். இன்று அத்தனையும் காற்றில் அலைகின்றது. இவரின் ஐடியாக்களை இவர் முதலமைச்சராக ஆகும் போது இவருக்கு கீழே இருக்கும் ஐஏஎஸ் அதிகாரிகள் எப்படி புரிந்து கொள்ளப் போகின்றார்களோ?
காங்கிரஸை வழிக்கு கொண்டு வர திடீர் ஞானோதயம் பெற்ற கலைஞர் எப்படி ராமதாஸை திமுக கூட்டணிக்கு கொண்டு வந்துள்ளாரோ அதைப் போலவே இந்த முறையும் ஓட்டு பிரிந்து போய் திமுக ஆட்சிக்கு வந்து விடக்கூடாது என்பதற்காக பலமடங்கு கீழிறங்கி நம்ம கேப்டன் அதகளத்தை கடைவாயில் அடக்கிக் கொண்டு போயஸ் தோட்டம் புன்னகை சிந்தியுள்ளது.
இன்னும் 90 நாட்களில் அதிமுக ஜெயித்து வரும் பட்சத்தில் இப்போது நடந்து கொண்டிருக்கும் திரைக்கதையில் உருவாகப்போகும் முடிச்சுகள் அவிழத் தொடங்கும். என்னையே அலைக்கழித்தாயா? என்று யோசிக்கத் துவங்கும் போது இயக்குநர் மகேந்திரனின் உதிரிப்பூக்கள் போல தேமுதிக வின் உண்மையான பலம் பலவீனம் அப்போது நமக்குத் தெரியும்..
இன்றைய விஜயகாந்தின் அதிர்ஷ்டத்தை விட அன்று உருவாகப்போகும் துரதிஷ்டத்தை எப்படி சமாளிப்பார் என்பதில் தான் விஜயகாந்தின் அரசியல் எதிர்காலம் இருக்கிறது. தமிழ்நாட்டு வாக்காளர்களைப் பற்றி அத்தனை எளிதாக கணித்து விட முடியாது. கடைசி நிமிடம் வரைக்கும் சாவடித்து விடக்கூடியவர்கள்.
சொல்லமுடியாது. ஒரு வேளை நடைபெறப் போகும் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில்??
கேப்டன் காட்டில் அடைமழையல்ல. மழைக்குள் கேப்டன்.







