Showing posts with label சோனியா. Show all posts
Showing posts with label சோனியா. Show all posts

Wednesday, March 02, 2011

சோனியா காங்கிரஸ் - தமிழ்நாட்டில் கவிழும் தருணம

தேர்தல் என்பது இப்போது ஒரு வகையில் திருவிழாக் கொண்டாட்டம் போல் ஆகிவிட்டது.  ஊடகங்களுக்கு திகட்ட திகட்ட தீனி.  பணத்தை பெட்டி பெட்டியாக சேர்த்து வைத்துள்ளவர்களுக்கு கரைக்க வேண்டிய அவஸ்யமான நேரமிது. கட்சிகளுக்கு சீட்டு கணக்கு. பார்வையாளர்களுக்கு தெரிந்து கொள்ள வேண்டிய நோட்டு கணக்கு.  

எந்த வகையில் பார்த்தாலும் ஜனநாயகம் என்ற உலுத்துப் போன வார்த்தையால் ஏமாறப் போவது திருவாளர் பொதுஜனமே?


ஆனால் இப்போது உச்ச பதவியில் இருக்கும் அதிகாரவர்க்கத்தினர் உசாராகி எந்த கட்சி ஜெயிக்கும் என்பதை மனதில் கொண்டு ஆளுங்கட்சி சிபாரிகளை புறந்தள்ளுவது முதல், பெயர் மாற்றி பிறந்த நாளுக்கு பூங்கொத்து அனுப்பி நாங்கள் எப்போதும் உங்கள் அனுதாபி என்பது வரைக்கும் நடந்து கொண்டிருக்கிறது.  மொத்தத்தில் ஒவ்வொரு தேர்தல்களும் அதிகாரத்தை வைத்து சம்பாரித்த பலருக்கு தோல்வி பயத்தை தந்து கொண்டு இருப்பதைப் போல இந்த முறையாவது ஜெயித்து பல தலைமுறைகளுக்கு தேவையானதை சம்பாரித்து விட வேண்டும் என்று கங்கணம் கட்டி முதலீடு செய்ய வேண்டியதாகவும் இருக்கிறது.

உத்திர பிரதேசத்தில் ராகுலின் அரசியல் கணக்கு வென்றவுடன் புதிய புதிய பட்டங்கள் சூட்டி அழகு பார்த்தனர்.  ராஜதந்திரி என்றனர். அனாதைகளை ரட்சிக்க வந்த தேவதூதன் என்று அவரவர்களும் வார்த்தைகளால் அழகு சூட்டி பார்த்தனர். ஆனால்?

பீகார் கொடுத்த பாடத்தில் பீச்சாங்கை போதாது என்று இப்போது சோத்துக் கையிலும் கழுவியாக வேண்டிய சூழ்நிலை.  இப்போது ஓட்டுக்காக காட்ட வேண்டிய கைகூட அழுக்குடன் உள்ளது.  நாட்டுக்காக பாடுபட்ட காங்கிரஸ் கட்சியின் கைச் சின்னம் கூட இப்போது நாத்தம் புடுச்ச கையாக மாறியுள்ளது. காரணம் இப்போது காங்கிரஸ் உறுப்பினர்கள் என்பது கணினி மயமாக்கப்பட்டது.  அதுவும் கண் இமைக்கும் நேரத்தில் ஆயிரக்கணக்கில் சேர்ந்து கொண்டே இருக்கிறார்கள். எப்படிச் சேர்கிறார்கள்? எப்படி சேர்த்தார்கள் போன்ற கணக்கெல்லாம் கேட்கக்கூடாது.  ஒருவர் பாதயாத்திரை போகிறார்.  மற்றும் சிலர் பல்லாக்கு தூக்கியாக டப்பிங் வாய்ஸ் மனிதனதாக இருக்க மிரட்டிப் பார்க்கும் கட்சியாக இன்று விஸ்வரூபம் எடுத்துள்ளது.  யார் கொடுத்த தைரியம்?  வினையை விதைத்தால் எது கிடைக்கும்?  அது தான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது.

இந்தியாவிற்கு விடுதலை வாங்கித் தந்த காங்கிரஸ் வரலாறு முக்கியம் என்பதை போல் இப்போது காங்கிரஸ் ஆசைப்படும் 90 சீட்டுகள் பார்த்து யாரும் வாயால் சிரிக்கக்கூடாது. தமிழ்நாட்டில் காங்கிரஸ் என்பது எங்கே இருக்கிறது என்பதைப் போல இந்த கட்சியில் எத்தனை தலைவர்கள் இருக்கிறார்கள் என்பதெல்லாம் அடி(ம)பட்ட தொண்டர்களுக்கும் தெரியாத ரகஸ்யம். காரணம் இப்போது காங்கிரஸ் என்றால் கார்ப்ரேட் காங்கிரஸ்.  காந்தி விரும்பிய காங்கிரஸ் எல்லாம் புதை பொருளாகி எப்போதே மாறிவிட்டது.


இந்த தேர்தலில் எங்களுக்கும் ஆட்சியில் பங்கு வேண்டும் என்பதைக் கேட்டு இதுவொரு அதீத ஆசை என்று நகர்ந்து போய்விடக்கூடாது. பொதுத் திட்டம் என்று ஒன்று வேண்டும்.  ஒவ்வொன்றுக்கும் கூட்டணி தர்மத்தின்படி ஒப்புதல் கொண்டு ஆட்சியை நடத்த வேண்டும் என்று இன்று பஞ்சபாண்டவர் குழு கேட்கும் ஒவ்வொரு வெடிகுண்டுகளையும் நமுத்துப் போகச் செய்யக்கூடியவர் கலைஞர்.  

ஒரு இனத்தையே கதறடிக்க காரணமாக இருந்தவர்களுடன் கூட்டணி அமைத்து இருந்த கலைஞர் இந்த முறை அந்த பாவத்தை கழுவ ஒரு நல்ல சந்தர்ப்பம் இயல்பாகவே அமைந்துள்ளது.


கலைஞர் பார்க்காத தலைவர்கள் இல்லை.  வாங்காத திட்டுக்கள் இல்லை. இது குறித்து சந்திக்க வேண்டிய அத்தனை அவதூறுகளையும் சந்தித்து விட்டவர்.  அத்தனைக்கும் அவருக்கு உண்டான வரவுகளுக்கும் குறைவில்லை. ஆனால் ஒவ்வொரு முறையும் பிடறியை சிலிப்பிக் கொண்டு சிலிர்த்து வந்தவர். 'அடப் போங்கப்பா இந்தாளு உயிரோடு இருக்கிற வரைக்கும் நம்மால் குறுக்குசால் ஓட்ட முடியாது' என்று புலம்பும் தலைவர்களைப் போல இவரின் ராஜதந்திரம் அத்தனையும் வெகுஜன ஊடகங்கள் கொண்டு வராத விசயங்களாகும்.

அறிஞர் அண்ணா வாயால் சொன்ன ஒரு ரூபாய் அரிசியை செயலாக்கியவர் கலைஞர்.  அண்ணா அன்றைய உண்மையான காங்கிரஸ் சகாப்தத்தை முடித்து வைத்து தமிழ்நாட்டில் புதிய பாதையை உருவாக்கியதைப் போல இப்போது கலைஞரின் இறுதிக்காலத்திலாவது தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு சாமாதி கட்டினால் எதிர்கால சந்ததிகள் கொஞ்சம் சந்தோஷப்படும். சங்கடங்களை தந்து கொண்டிருக்கும் இந்த அல்லக்கை ஐந்து முகங்களை அனாதை ஆக்க வேண்டிய தருணம் இது.  கலைஞர் செய்வாரா? என்பதை விட அவர் செய்து தான் ஆக வேண்டிய சூழ்நிலையில் தான் இப்போது நடந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு நிகழ்வும் நகர்ந்து கொண்டிருக்கிறது. 


காரணம் குஜராத்தில் ஆண்டு கொண்டிருக்கும் நரேந்திர மோடி ஆட்சியை சிறந்த உள்கட்டமைப்பு உள்ள மாநிலம் என்று ஐபிஎன் ஊடகம் பாராட்டி இருப்பதைப் போல நமக்கு துடிப்பான பிரதமர் எதிர்காலத்தில் தேவை. கலைஞரின் சுயநலம் அணைவரும் அறிந்ததே.  அந்த சுயநலத்தில் பொதுநலமாய் இப்போது கலைஞர் இந்த காங்கிரஸை கழட்டி விட்டால் கூட செய்த பாவங்களுக்கு கொஞ்சம் பரிகாரம் தேடிக் கொண்டது போல இருக்கும்.  எப்போதும் போல கடந்த தேர்தலில் அதிமுக முன்னாள் அமைச்சர் இராஜகண்ணப்பனை இன்றைய உள்துறை அமைச்சர் ப சிதம்பரம் அழுகுணி ஆட்டத்தின்படி ஜெயித்து வந்தது போல் காங்கிரஸ் வெள்ளூடை வேந்தர்களில் ஒன்று இரண்டு பேர்களுக்காவது கட்டிய டெபாஸிட் தொகை கிடைக்குமா என்று நாம் வேடிக்கை பார்க்க உதவும். 

அய்யா கழட்டிவிட ஆத்தா காப்பாத்தினா?

வாழ்நாள் முழுக்க காங்கிரஸ் தலையில் 'பகவான்' உட்கார்ந்து விட்டான் என்று அர்த்தம்.

குழும மின் அஞ்சலில் இந்த படங்களை பகிர்ந்து கொண்ட நண்பருக்கு நன்றி.