Showing posts with label கலைஞர். Show all posts
Showing posts with label கலைஞர். Show all posts

Sunday, March 06, 2011

கடிதம் (மட்டும்) எழுதும் கலைஞருக்கு தமிழருவி மணியன் எழுதும் கடிதம்


தமிழக முதல்வர் கலைஞர் அவர்களுக்கு... வணக்கம். வளர்க நலம்!

என் பால்ய காலந்தொட்டு உங்கள் அரசியலை நான் பார்த்து வருகிறேன். நீங்கள் ஒரு சாகச அரசியல்வாதி என்பதில் இங்கு யாருக்கும் சந்தேகம் இல்லை!

தமிழகம் கண்ட தலைவர்களில் பல வகைகளில் நீங்கள் தனித்துவம் மிக்கவர். காமராஜரைப் போலவே பாரம்பரியப் பின்புலம், உயர்குடிப் பிறப்பு, செல்வ வளம், கல்லூரிப்படிப்பு என்று எதுவுமின்றி, விலாசமற்ற ஊரில் பிறந்து, ஏழ்மையில் வளர்ந்து, அயராது உழைத்து அரசியல் உலகின் உச்சம் கண்டவர் நீங்கள்.காமராஜர் ஏழையாகப் பிறந்து, ஏழையாக வளர்ந்து, ஏழையாகவே வாழ்ந்து மறைந்தவர். நீங்கள் ஏழையாகப் பிறந்து, ஏழையாக வளர்ந்து, இன்று கோடீஸ்வரர்களில் ஒருவராகக் கொடிகட்டிப் பறப்பவர். காமராஜர் நாட்டுப்பணியில் தாயின் உறவு உட்பட சகலத்தையும் துறந்தார். நீங்கள் எதையும் துறக்காமல் பொதுவாழ்வின் மூலம் சகல நலன்களையும் வீட்டுடைமையாக்கிக்கொண்ட வித்தகராய் விளங்குகிறீர்கள்!



ஈ.வெ.கி.சம்பத் தி.மு.கழகத்திலிருந்து அவசரப்பட்டு விலகிய பின்பு, அண்ணாவுக்கு அடுத்த நாற்காலியில் அமர்ந்திருந்த நெடுஞ்செழியனை இரண்டாம் இடத்திலேயே இருக்கவிட்டு, முதலிடத்தைப் பிடித்து நீங்கள் முதல்வரானது - உங்கள் சாகசச் சரித்திரத்தில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்படக்கூடியது!  ஓர் உறையில் இரு வாட்கள் இருக்கலாகாது என்று சிந்தித்த நீங்கள் செயற்குழுவின் ஆதரவைத் திரட்டி, செல்வாக்குமிக்க எம்.ஜி.ஆரையே விரட்டி, தனிக்காட்டு ராஜாவாக மகுடம் சூட்டிக்கொண்ட மகத்துவத்தை யார் மறக்கமுடியும்? 

அரசியல் விளக்கங்களை எழுதவிடாமல் அன்றைய 'இந்திரா தர்பார்’, செய்தித் தணிக்கையைக் கொண்டு வந்தபோது, 'கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆயமகள்’ என்ற முல்லைக் கவி பாடல் மூலம் இலக்கியப் போர்வையில் அரசியல் வகுப்பு நடத்திய உங்கள் ஆற்றல் யாருக்கு வரும்? 'மனசாட்சி உறங்கும்போதுதான் மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்பி விடுகிறது’ என்ற மறக்கமுடியாத வசனத்தைப் 'பூம்புகார்’ திரைப்படத்தில் தீட்டிய உங்கள் மனசாட்சி முற்றாக உறங்கிப் போனதுதான் தமிழருக்கு வாய்த்த சாபம்.

'தன்மானத் தந்தை பெரியார் பள்ளியில், தமிழ் வீரம் போதித்த அறிஞர் அண்ணா கல்லூரியில் பயின்ற எனக்கு அந்த உணர்வும் மழுங்கி விடுமேயானால், நடைப்பிணம் நிகர்த்தவனாகி விடுவேன்’ (கலைஞர் கடிதம் தொகுதி - 5) என்றீர்களே,  எந்தெந்த வகையில் நீங்கள் பெரியாரையும், அண்ணாவையும் இன்று பின்பற்றுகிறீர்கள் என்று எங்களுக்குக் கொஞ்சம் விளக்க முடியுமா?

'சுயமரியாதை இயக்கத்தின் கொள்கை என்ன தெரியுமா?

ஐந்து கொள்கைகள்தான்.

கடவுள் ஒழிய வேண்டும். மதம் ஒழிய வேண்டும். காங்கிரஸ் ஒழிய வேண்டும். காந்தி ஒழிய வேண்டும். பார்ப்பான் ஒழிய வேண்டும். 

அன்று முதல் இன்று வரை அதே கொள்கைதான் (இறுதிப் பேருரை- 19-12-73) என்றார் பெரியார். இந்த 5 கொள்கைகளில், தன்மானத் தந்தை பெரியார் பள்ளியில் பயின்ற நீங்கள் இன்று எதைப் பின்பற்றுகிறீர்கள்? மஞ்சள் துண்டு எந்தப் பகுத்தறிவின் அடையாளம்? சாய்​பாபாவை வீட்டில் வரவேற்றுப் பேசியதும், உங்கள் வீட்டார் அவர் கால்களில் விழுந்து ஆசி பெற்றதும் பெரியாரின் பகுத்தறிவுப் பாசறை தந்த பாடமா? 

தன்னை வாழ்த்தினால் 'நண்பர்’ என்று புகழ்வதும், விமர்சனம் செய்தால் 'பூணூல்’ என்று எள்ளி நகையாடுவதும் எந்த வகையில் பார்ப்பன எதிர்ப்பு? கஸ்தூரிபாயைத் தன் வழியில் திருப்பியவர் காந்தி.நாகம்மையையும், மணியம்மையையும் தன் மனதின் போக்குக்கேற்ப மாற்றியவர் பெரியார். வீட்டில் கொண்டுவர முடியாத மாற்றத்தை நாட்டில் கொண்டுவருவேன் என்பது நகைப்​புக்குரியது அல்லவா! பக்திப் பரவ​சத்தில் கோயில் கோயிலாகச் சுற்று​வது ஜெயலலிதா மட்டுமன்று, உங்கள் வீட்டு உறவுகளுந்தானே!

அண்ணா இறுதி நாள் வரை காங்​கிரஸை ஆதரிக்கவில்லை. மதுவிலக்கை எதிர்க்க வில்லை. ஆனால், நீங்கள் இரண்டு நிலைகளிலும் அண்ணா வழியில் நிற்கவில்லையே; '

என்னைப் பொறுத்த வரையில் பதவி முடிவு மட்டுமல்ல, வாழ்வின் முடிவே ஏற்படப் போகிறது என்று தெரிந்தாலும், அப்​போதும் என் நினைவு உள்ளவரையில் பெரியாரையும்  அண்ணாவையும் அவர்கள் தந்த லட்சியங்களையும் கொள்கைகளையுந்தான் கூறிக்​கொண்டிருப்பேன். மரணப் படுக்​கையில் என் நாக்கு அசையும் சக்தியை இழந்துவிடுமானால், என் நெஞ்சத் துடிப்புகள் கழகத்தின் பெருமைக்குரிய கொள்கைகளையே ஒலித்துக் கொண்​டிருக்​கும். அம்மா, அப்பா என்று சொல்லி உயிர் பிரியப் போவதில்லை. 'அண்ணா! அண்ணா!’ என்று சொல்லித்தான் இந்த உயிர்த் துடிப்புகள் இறுதியாக அடங்​கும்’ (கலைஞர் கடிதம் தொகுதி - 5) என்று சொன்ன நீங்கள் அண்ணா எதிர்த்த காங்கிர​ஸின் உறவுக்காக ஏங்கி நின்றதும், நிற்பதும் நியாயந்தானா கலைஞரே?

'சித்ரவதை, தூக்கு மேடை, கால் வேறு கை வேறாக வெட்டிக் கடலில் எறிவது போன்ற எந்தக் கொடுமையையும், கொண்ட கொள்கைகளுக்காகத் தாங்கத் தயார்! இது அண்ணாவின் மீது ஆணையாக எடுத்துக்கொண்டுள்ள சூளுரை’ என்று சொன்ன கலைஞரே... உங்களால் ஈழத் தமிழருக்காக மூன்று மணி நேரத்துக்கு மேல் உண்ணாவிரதம்கூட இருக்க இயலவில்லையே? எதையுமே நீங்கள் அழகாக எழுதுகிறீர்கள். உணர்வுததும்பப் பேசுகிறீர்கள்... ஆனால் எழுத்துக்கும் பேச்சுக்கும் எதிராகவே நடக்கிறீர்கள். அது ஏன்?

'முந்திரா ஊழல் 

முப்பத்து முக்கோடி தேவர்களும் அறிந்த விவகாரம். அமீர்சந்த் பியாரிலால் விவகாரம், அதிலே சிக்கிக் கொண்டு தவித்த தவிப்பு, இதெல்லாம் ஈரேழு பதினாலு உலகமும் சிரிப்பாய்ச் சிரித்ததை யாரும் மறந்து விடவில்லை’ என்றும் 'காங்கிரஸ் மாளிகை பாழடைந்த மண்டபமாகி விட்டது. அதிலே வெளவால்​கள் குடியேறத்தான் செய்யும்’ என்றும் (கலைஞர் கடிதம், தொகுதி -
1) 1968-69-களில் உடன்பிறப்புகளிடம் கடிதங்கள் மூலம் காங்கிரஸ் எதிர்ப்பைக் கடுமையாக விதைத்து​விட்டு, 1971 தேர்தலில் அதே காங்கிரஸைக் கட்டித் தழுவியபடி களத்தில் நின்றீர்களே... அந்த நட்புக்குச் செலுத்திய நன்றிதான் கழகத்தின் மீது காங்கிரஸ் பொழிந்த புகழு​ரைகள்(!).

நீங்கள் பதவிப் பல்லக்கில் பவனி வருவதற்கு மத்தியிலும், மாநிலத்திலும் தோள் கொடுத்தால் காங்கிரஸ் சமதர்மம் இனிக்கும். சுமப்பதை விட்டுவிட்டு,அவர்களும் உங்களோடு சேர்ந்து பல்லக்கில் சவாரி செய்ய நினைத்தால் காங்கிரஸின் ஆதிக்கம் கசக்கும்.

 'சமத்துவம் இன்மையே... உனக்குப் பெயர்தான் இந்து மதமா?’ என்று கேட்டார் அண்ணல் அம்பேத்கர்.

'சுயநலமே...உனக்குப் பெயர்தான் தி.மு.கழ​கமா?’ என்று கேட்கத் தோன்றுகிறது கலை​ஞரே! 'பதவிகளுக்காக, பவிசுகளுக்காக, அந்தஸ்துகளுக்காக, அதிகாரங்களுக்காக இந்த இனத்தைக் காட்டிக் கொடுக்கிற இழி செயலுக்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருக்கின்ற ஒரு சாதாரணத் தொண்டன்கூடத் தயாராக இல்லை’ (முரசொலி 7-7-1981) என்று வீர முழக்கமிட்டவர் நீங்கள். ஆனால், ஈழம் எரிந்தபோது,நம் இனம் கரிந்தபோது களத்துக்கு வராமல் பாசறையிலேயே பதுங்கிவிட்டது ஏன் கலைஞரே? 'தியாகத் திருவிளக்கு சோனியா காந்தி’ என்று பரவசம் பொங்கப் புகழ்மாலை சூட்டிய நீங்கள், வீரத்தின் விளைநிலம் பிரபாகரனை ஈன்ற பார்வதி அன்னையை மனிதநேயமின்றி விமான நிலையத்தில் பாதம் பதிக்க அனுமதிக்காமல் திருப்பி அனுப்​பிய இந்திய அரசின் வன்கொடுமைக்கு எதிர்ப்புக்​குரல் எழுப்பாதது ஏன் கலைஞரே? 

பதவி நாற்காலியைத் தக்க வைத்துக்கொள்ள சோனியா காந்தி என்னும் 'சொக்கத் தங்கத்தின்’ கருணைப் பார்வைக்கு இவ்வளவு தூரம் முதுகு வளைந்திருக்க வேண்டுமா முத்தமிழறிஞரே!

கலைஞரே... கடந்த இரண்டு ஆண்டுகளில் நீங்கள் இரண்டு முறை மட்டும் புதுடெல்லிக்குப் புறப்பட்டீர்கள். பிரபாகரன் சடலம் என்று ஒரு சடலத்தை ஊடகங்கள் ஓயாமல் காட்டிக் கொண்டிருந்த போது, உலகத் தமிழர்கள் செய்வதறியாது சோகம் கனக்க விழிநீர் வெள்ளமாய்ப் பெருக்கிய போது, தள்ளு வண்டி​யில் அமர்ந்தபடி சோனியாவிடம் உங்கள் மகனுக்கும், மகளுக்கும், பேரனுக்கும் அமைச்சர் பதவி கேட்டு அலைக்கழிந்தீர்கள். அதற்குப் பின்பு ஆயிரம் பிரச்னைகள் தமிழகத்தில் அரங்​கேறின. ராமேஸ்வரம் முதல் நாகப்பட்டினம் வரை அன்றாடம் மீனவர்கள் சிங்களரால் வேட்டையாடப் பட்டனர்.

இன்று வரை 400- க்கும் மேற்பட்ட மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். நீங்கள் கைநோக மன்மோகன்சிங் அரசுக்குக் கடிதம் எழுதிக் கடமை​யாற்றினீர்கள். இப்போது இரண்டாவது முறை​யாக முதலமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்கும் போர்வையில் புதுடெல்லி சென்று ஆ.ராசாவைக் காக்கவும், காங்கிரஸ் கூட்டணி நிலைக்கவும் அரும்பாடு பட்டீர்கள். உங்கள் கொள்கைப் பிடிப்பு, நினைக்கும்போதே நெஞ்சமெல்லாம் சிலிர்க்கச் செய்கிறது கலைஞரே!

''எந்தப் பதவியானாலும், எந்த மட்டத்திலா​னாலும் அதனைத் தேடிப்போய் நெருக்கடி கொடுத்துப் பெற முனையும்போதோ, அல்லது பெற்றுவிட்ட பிறகோ, உன்னைப் பற்றி உனக்கே ஒரு வெறுப்பு தோன்றும், உனக்குத் தோன்றுகிறதோ இல்லையோ, நாட்டுக்குத் தோன்றும்’ (கலைஞர் கடிதம் - தொகுதி 1) என்று உடன்பிறப்புக்கு எவ்வளவு தெளிவாக 9-11-68-ல் நீங்கள் கடிதம் தீட்டியிருக்கிறீர்கள்! அவ்வளவும் சத்திய வார்த்தைகள். இன்று உங்களைப் பற்றி நாட்டுக்கு அப்படித்தான் தோன்றி​விட்டது.

'வாண்டையார், வடபாதி மங்கலத்தார், நெடும்பலத்தார், குன்னியூரார், மூப்பனார், மன்றாடியார், பேட்டையார், பெரும்பண்ணையார், செட்டி நாட்டார், சிவகங்கை சீமையார்’ என்று அண்ணா அன்று மேடைதோறும் காங்கிரஸில் இருந்த பணக்காரர்களைப் பட்டியலிட்டார்; சென்னையில் 1951 டிசம்பரில் நடை​பெற்ற தி.மு.க. முதல் மாநில மாநாட்​டில், 'தமிழகத்தில் உண்மையான கம்யூனிஸ்ட் கட்சி தி.மு.கழகம்தான்’ என்று பிரகடனம் செய்தார். நீங்களும் பல்வேறு தருணங்களில் 'நானும் ஒரு கம்யூ​னிஸ்ட்’ என்று 'நகைச்சுவை’ ததும்பப் பேசியிருக்கிறீர்கள். 



இன்று உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் குபேரபுரியின் வாரிசுகளாக விண்ணிலும் மண்ணிலும் வலம் வருகின்றனர். இந்த ரசவாத மாற்றம் எப்படி நிகழ்ந்தது கலைஞரே! நாற்பதாண்டுகளுக்கு முன்பு நடைபாதை மனிதர்களாக இருந்த உங்கள் அமைச்சர்களும், தானைத் தளகர்த்தர்களும் தமிழகத்து அம்பானி​களாய் உருமாறிய ரகசியத்தை உருக்​குலைந்து நிற்கும் எந்தமிழர் அனைவருக்கும் நீங்கள் சொல்லிக் கொடுத்து விட்டால் இலவசங் களுக்கே இடமிருக்காது கலைஞரே!

ஸ்பெக்ட்ரம் ஊழலில் ராசா சிக்கிச் சிறைப்பட்டதும், சி.பி.ஐ. கரங்கள் கலைஞர் தொலைக்காட்சி வரை விரிந்ததும் உங்கள் அம்பறாத் தூணியில் தூங்கிக் கொண்டிருந்த ஆரிய - திராவிட அம்பெடுத்து வீசி விட்டீர்கள்.

காமராஜரின் வேட்பாளராக சஞ்சீவரெட்டியும், இந்திராவின் வேட்​பாளராக வி.வி.கிரியும் குடியரசுத் தலைவர் தேர்தலில் நின்றபோது நீங்கள் வி.வி.கிரியைத்தானே வெற்றி பெறச் செய்தீர்கள். இந்திராவும், கிரியும் உங்கள் வார்த்தையில் ஆரியர்; காமராஜரும், சஞ்சீவரெட்டியும் திராவிடர். அப்போது எங்கே போனது

உங்கள் இனமான உணர்வு? 'இராமன் இரு பேச்சாளன் இல்லை’ என்பான் வான்மீகி.இரு பேச்சு இல்லாமல் நீங்கள் இல்லை என்பதுதானே உண்மை கலைஞரே!

ஆறாவது முறை நீங்கள் ஆட்சிக்கு வர ஆசைப்படுகிறீர்கள். நல்லது. ஐந்து முறை நீங்கள் முதல்வராக இருந்து என்ன சாதித்​தீர்கள்? மாநில சுயாட்சி வாங்கிக் கொடுத்து விட்டீர்களா? தமிழை மத்திய ஆட்சி மொழிகளில் ஒன்றாக ஆக்கி விட்டீர்களா? உங்களால் ஊழல் வழக்குகளுக்குள்ளான கண்ணப்பன், செல்வ​கணபதி இந்திரகுமாரி, ரகுபதி, முத்துசாமி போன்​றவர்களைக் கழகத்தில் சேர்க்காமல் அரசியல் ஆரோக்கியம் காத்தீர்களா? 

சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய பின்பு மேலவையைக் கொண்டுவர நீங்கள் மேற்கொண்ட முயற்சியில் பத்தில் ஒரு பங்காவது தமிழை உயர் நீதிமன்ற மொழியாக்க முனைந்தீர்களா? நிர்வாக மொழியாகத் தமிழை நூறு விழுக்காடு நடைமுறைப்படுத்தி விட்டீர்களா? 'உணவு, உடை, குடியிருப்பிடம் எனும் மூன்று அடிப்படைத் தேவைகளைக்கூட 17 ஆண்டு ஆட்சிக்குப் பிறகும் நிறைவேற்றிக் கொடுத்திட இயலாத காங்கிரஸ் ஏன் ஆட்சியில் நீடிக்க வேண்டும்?’ என்று கேட்டார் அண்ணா... அதையே உங்களிடம் நாங்கள் கேட்கிறோம். ஊழலற்ற ஆட்சிக்கும் உங்களுக்கும் என்றாவது தொடர்பிருந்ததுண்டா?

ஈழத் தமிழர் நலன் காக்கத் தவறிய நீங்கள் ஆட்சியில் நீடிப்பதால், உலகத் தமிழருக்கு என்ன நன்மை? தாயக மீனவர் மீது நடக்கும் தாக்குதலைத் தடுக்க முடியாததும் உண்மை தானே! வீதிக்கு வீதி மதுக்கடை திறந்து ஆண்டுக்கு 13 ஆயிரம் கோடிக்கு மேல் ஏழை மக்களை மயக்கி வாங்கி, இலவச நாடகம் நடத்தி அதே மக்களிடம் பிச்சைக்கார மனோபாவத்தை வளர்க்கும் உங்க​ளுக்கு ஏன் நாங்கள் வாக்களிக்க வேண்டும் என்று லட்சக்கணக்கான மகளிர் கேட்பது உங்கள் காதில் விழவில்லையா? 



நீங்களும், உங்கள் வாரிசுகளும், கழக உடன்பிறப்புகளும் அதிகாரத்தைத் தொடர்ந்து சுவைக்கவும், சொத்துகளை எல்லையின்றிக் குவிக்கவும், மணற் கொள்ளையிலிருந்து அரிசிக் கடத்தல் வரை அமோகமாக நடத்தவும் 'திருமங்கலம் ஃபார்முலா’வை நம்பிக்கொண்டு இருக்கிறீர்கள். 

எந்தப் பணத்தை நம்புகிறீர்களோ அது தான் உங்கள் காலையும் வாரப் போகிறது.பொறுத்திருந்து பாருங்கள்!

இப்படிக்கு,

ஐந்தாவது முறையாவாது நல்லாட்சி தருவீர்கள் என்று நம்பி ஏமாந்த,

தமிழருவி மணியன்

நன்றி ... பகிர்ந்து கொண்ட தமிழ் கனல் 

Saturday, March 05, 2011

விஜயகாந்த் அதிர்ஷடக்காரர்?

இந்த முறை தேர்தலில் தொடக்கம் முதல் இரண்டு பேர்களை கவனித்துக் கொண்டே வருகின்றேன். ஒன்று சீமான்.  மற்றொருவர் விஜயகாந்த.  

சீமானைப் பொறுத்தவரையில் அவரின் உண்மையான நிலைப்பாடு இந்த முறை தேர்தலில் பங்கெடுப்பது இல்லை.  அடுத்து வரும் தேர்தலுக்கு (2016)முன்னோட்டமாக இன உணவாளர்களை ஒன்று சேர்க்க வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார்.  குறிப்பாக காங்கிரஸ் கட்சியை முடிந்த வரைக்கும் முடித்துக் கட்டுவதில் குறியாக இருக்கிறார்.  சீமான் பேசும் கூட்டங்களில் இளையதலைமுறையினர் ஆர்வமாக பங்கெடுத்துக் கொள்கின்றனர்.  முக்கியமாக படித்தவர்களின் பங்களிப்பு அதிகமாக உள்ளது. 

சீமான் மனதிற்குள் போட்டுள்ள கணக்கை விட இந்த தேர்தல் முடிவுதற்குள் கிங்கர ராஜாக்கள் என்ன மாதிரியான கணக்கை வைத்துள்ளார்களோ?  

காரணம் புதுக்கோட்டையில் முதல் களப்புலியை காவு வாங்கி தங்களது புனிதப்பணியை தொடங்கியுள்ளனர். இதற்குள் உள்குத்து அதிகமாக இருந்தாலும் முழுமையாக எந்த ஊடகமும் இதைக் குறித்து ஆராயாமல் சற்று மேம்போக்காகவே போய்விட்டது.  இன்னும் எத்தனை பேர்களை பலி பீடத்திற்கு அழைத்துச் செல்லப் போகிறார்களோ?  சென்னையில் இயக்குநர் பாரதிராஜா அலுவலகத்தை யார் தலைமையில் சூறையாடினார்கள் என்று அணைவருக்கும் தெரிந்து போதிலும் அத்தனை பேர்களும் அமைதி காத்தனர். காரணம் கடந்த தேர்தலில் ப. சிதம்பரம், இளங்கோவன் போன்றவர்களை மண்ணைக் கவ்வியதற்கு முக்கிய காரணம் ஈழம் என்ற ஒரு சொல்லும் அதன் ஆதரவாளர்களுமே காரணமாக இருந்தனர்.  

ஆனால் ப. சிதம்பரம் அழிச்சு கிழிச்சு கெஞ்சி கூத்தாடி கழைக்கூத்தாடி போலவே ஆளை விட்டால் போதுமடா சாமின்னு ஓட்டமாய் பின்வாசல் வழியே மேலே போய் உட்கார்ந்து விட்டார்.  இப்போது காங்கிரஸ் மக்கள் கொஞ்சம் உசாராகவே இருக்கின்றனர். ஈழம் என்று சொல்லிக்கொண்டு வெற்றி வாய்ப்பை தட்டிப் பறிப்பவர்கள் எவராயினும் அவர்களுக்கு உரிய பாடம் புகட்டப்படும் என்பதை உணர்த்திக் காட்ட எதற்கும் தயாராகவே உள்ளனர். மீறி உணர்த்திக் காட்டிவர்களுக்கு முடிந்த வரைக்கும் அவ்வப்போது ஒவ்வொரு கணக்கும் தீர்த்துக் கொண்டே வரப்படுகின்றது. 

செயலில் இறங்கிய இளங்கன்றுவின் வேகம் இன்று வாசன் கோஷ்டியை விட மேலேறி உச்சாணிக் கொம்பில் உட்கார்ந்துள்ளது. உடன்பிறப்பு, ரத்தத்தின் ரத்தம் தொண்டர்களுக்கு நான் எந்த வகையில் சளைத்தவன் அல்ல என்று இளங்கன்றுவின் வேகத்தை உள்துறை கூட மனதில் உள்ளே வைத்து ரசித்து இருக்கக்கூடும்.  காரணம் இது அரசியல்.  இப்போது தவறவிட்டால் எப்போதும் தவறாய் போய் முடிந்து விடும்.  

ஆனால் இந்த 2011 தேர்தல் என்பது தமிழ்நாட்டில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு சுயபரிசோதனை என்பதை விட உண்மையிலே ஈழம் இனப்படுகொலை என்பது தமிழ்நாட்டில் எந்த தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது? என்பதை உணர்த்தக் கூடும். இதை வைத்து தான் சீமான் களத்தில் இறங்கியிருக்கிறார்.  முடிந்த கதையை எத்தனை நாளைக்கு பேசிக் கொண்டு இருக்கப்போகிறாய்? என்று தமிழ்நாட்டு வாக்காளர்கள் கேட்கப்போகிறார்களா? அல்லது சீமானின் கர்ஜனை எந்த அளவிற்கு தாக்கத்தை உருவாக்கும்? என்று தெரியவில்லை.  பெரும்பாலும் இந்த தேர்தல் முடிவை வைத்து சீமான் செல்வாக்கானவரா இல்லை செல்லக்காசா? என்று முடிவு தெரிந்து விடும்.


விஜயகாந்த்.   

நான் தான் முதலமைச்சர்!!!! என்று தைரியமாக கூவியதற்கே முதலில் பாராட்டுரை வழங்க வேண்டும்.  பெரும்பாலும் தேமுதிக என்ற கட்சி தொடங்கிய பிறகு தான் விஜயகாந்த் அரசியல் குறித்து கொஞ்சமாவது படித்து கேட்டு இருக்கக்கூடும். பண்ட்ருட்டி ராமச்சந்திரன் மனம் மாறாமல் இன்னமும் விஜயகாந்த பக்கத்தில் இருப்பதால் கொஞ்சம் அனுபவ பாடங்களும் கிடைத்து இருக்கக்கூடும்.  ஒரு பக்கம் மனைவி பிரேமலதா மற்றொரு புறம் மச்சினன் சுதிஷ் பின்பக்கம் பண்ட்ருட்டி முன்பக்கம் எப்போது அவர் சொல்லிக் கொண்டு இருப்பது அந்த ஆண்டவன். 

விஜயகாந்த மேடையில் பேச்சும் தெளிவாக இல்லை. கோர்வையாகவும் சொல்லத் தெரியவில்லை.  மொத்தத்தில் நிதானமும் இல்லை.  ஆனால் தொடக்கம் முதல் இந்த தில்லுதுர வைத்திருந்த நம்பிக்கை இன்று வீணாகிப் போய்விடவில்லை. பட்டையைக்கிளப்பி போய்க் கொண்டு இன்று அதிமுக வில் 41 சீட்டு பெற்றுள்ளார்.  பாவம் வைகோ, கம்யூனிஸ்ட்கள்.


விஜயகாந்தின் பழைய படங்களைப் பார்த்தால் அந்த வெண்திரையில் விஜயகாந்த சிரித்தால் அந்த பற்கள் மட்டும் கொஞ்சம் வெள்ளையாக தெரியும்.  நடிகர் விஜய் அப்பா எஸ்.ஏ.சி க்கும் நண்பர் இப்றாகிம் ராவுத்தருக்கும் தான் விஜயகாந்த் காலம் முழுக்க நன்றி சொல்ல வேண்டும்.  கதாநாயகனுக்கு உரிய எந்த அங்கலட்சணமும் இல்லாமல், இன்று வரையிலும் தமிழ் உச்சரிப்பு கூட சரியாக பேச முடியாமல், தொப்புளில் பம்பரம் விட்டு கலைச்சேவை செய்து இன்று நாட்டுக்கு சேவை செய்ய வந்து இருக்கும் இவரின் சேவையை யார் உணர்ந்தார்களோ இல்லையோ விருத்தாச்சலம் தலித் மக்கள் கொடுத்த ஆதரவு மகத்தானது. 

பாசமுள்ள மகன் கட்சிக்கு சொந்தக்காரன ராமதர்ஸ் கோட்டைக்குள் நுழைந்து பிடறியை உலுக்கியதோடு பீடு நடை போட்டு சட்டமன்றம் வரைக்கும் சென்றது வரைக்கும் முழுக்க முழுக்க அவரின் தனிப்பட்ட அசாத்தியமான தைரியமே.  வைகோ போல் குறுக்கும் நெடுக்கும் நடைபயணம் இல்லை. திருமா போல வீர வசனம் இல்லை. மற்ற அரசியல் தலைவர்கள் போல களப்பணிகள் இலலை.  மொத்தத்தில் பெரிதான கஷ்டங்களை சந்திக்காமல் நானே ராஜா நானே மந்திரியாய் முழு நேர அரசியல் தலைவராய் பரிணமித்துள்ளார். இன்று கேப்டன் தொலைக்காட்சியில் இவர் புகழ் எட்டுத்திக்கும் பறந்து கொண்டுருக்கிறது.  

கலையுலகம் முதல் இன்றைய அரசியல் உலகம் வரைக்கும் அத்தனையிலும் தான் கொண்ட நம்பிக்கையை விஜயகாந்த் இன்று வரைக்கும் மாற்றிக் கொள்ளவேயில்லை. இந்த நம்பிக்கை தான் இன்றைய அதிர்ஷ்ட திசையின் ஆரம்பம்?

டெல்லியில் இருந்து வந்த பாரதிய ஜனதா கட்சி நபர்களையே வாசலில் காக்க வைத்த போயஸ்தோட்டம் இன்று வேறு வழியே இல்லாமல் விஜயகாந்தை வெத்தலை பாக்கு வைக்காத குறையாக வரவேற்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறது.. குறிப்பாக பா.ம.கா வை கலைஞர் உள்ளே இழுத்தது காங்கிரஸ்க்கு எரிச்சலாக இருந்து இருக்குமே தவிர விஜயகாந்த்திற்கு மற்றொரு அதிர்ஷ்ட வாய்ப்பு.  மீதி இருக்கும் ஒரே வாய்ப்பு தேமுதிக மட்டுமே என்கிற நிலை வந்த போது அதிமுக வேறு என்ன செய்ய முடியும்?  

தொடக்கம் முதல் விஜயகாந்த் கடைபிடித்த அமைதி ரொம்பவே ஆச்சரியமானது. எதிலும் பிடிகொடுக்கவில்லை. எந்த வாய்ப்புகளையும் தவற விட தயாராய் இல்லை. டெல்லிக்கு படையெடுத்தது முதல் காங்கிரஸ் ஒரு பக்கம், மற்றொரு புறம் தனது அக்கா விஜயலெட்சுமி மூலம் அழகிரி ஒரு பக்கம் என்று உருவாக அரசியல் சந்தையில் தேமுதிக முக்கியமானதாக போய்விட்டது. 

விஜயகாந்த் அரசியல் வாழ்வில் இத்தனை பெரிய அதிர்ஷ்டக் காற்று அடிக்கும் என்று அவரே நினைத்து இருக்கமாட்டார்.  

' நான் ஆண்டவனுடன் மற்றும் மக்களுடன் கூட கூட்டணி வைப்பேன் ' என்று சொன்னவர் இன்று அதிமுகவுடன் வந்து சேர்ந்துள்ளார்.  விஜயகாந்த் வைத்திருக்கும் பத்து சதவிகித ஓட்டுகள் இந்த முறை அதிமுகவுக்கோ உதவுகின்றதோ இல்லையோ நிச்சயம் தன்னுடைய அரசியல் ஸ்திரத்தன்மையை மேம்படுத்திக் கொள்ள இந்த தேர்தல் தேமுதிகவுக்கு உதவும்.  போயஸ் தோட்டத்தில் கனகம்பீரமாக உள்ளே நுழைந்த நபர் இவராகத்தான் இருப்பார்.

இவர் தொடக்கம் முதல் சொல்லிக் கொண்டிருக்கும் ஒரு வாக்குறுதி வித்யாசமானது.  "நான் ஆட்சிக்கு வந்தால் ரேசன் பொருட்கள் அத்தனையும் ஒவ்வொருவரின் வீட்டுக்கே வந்து சேரும்.  இதைப் போலவே பல ஐடியாக்கள் வைத்துள்ளேன்.  இப்போது அதை வெளியே சொன்னால் திமுக காப்பி அடித்து விடும்" என்று வேறு பயமுறுத்தி வைத்துள்ளார்.  ஏற்கனவே இதைப்போலவே பா.மா.க, விடுதலை சிறுத்தைகள். தனிப்பட்ட முறையில் பல வாக்குறுதிகளை வழங்கியிருந்தனர்.  இன்று அத்தனையும் காற்றில் அலைகின்றது.  இவரின் ஐடியாக்களை இவர் முதலமைச்சராக ஆகும் போது இவருக்கு கீழே இருக்கும் ஐஏஎஸ் அதிகாரிகள் எப்படி புரிந்து கொள்ளப் போகின்றார்களோ?

காங்கிரஸை வழிக்கு கொண்டு வர திடீர் ஞானோதயம் பெற்ற கலைஞர் எப்படி ராமதாஸை திமுக கூட்டணிக்கு கொண்டு வந்துள்ளாரோ அதைப் போலவே இந்த முறையும் ஓட்டு பிரிந்து போய் திமுக ஆட்சிக்கு வந்து விடக்கூடாது என்பதற்காக பலமடங்கு கீழிறங்கி நம்ம கேப்டன் அதகளத்தை கடைவாயில் அடக்கிக் கொண்டு போயஸ் தோட்டம் புன்னகை சிந்தியுள்ளது.


இன்னும் 90 நாட்களில் அதிமுக ஜெயித்து வரும் பட்சத்தில் இப்போது நடந்து கொண்டிருக்கும் திரைக்கதையில் உருவாகப்போகும் முடிச்சுகள் அவிழத் தொடங்கும். என்னையே அலைக்கழித்தாயா? என்று யோசிக்கத் துவங்கும் போது இயக்குநர் மகேந்திரனின் உதிரிப்பூக்கள் போல தேமுதிக வின் உண்மையான பலம் பலவீனம் அப்போது நமக்குத் தெரியும்..

இன்றைய விஜயகாந்தின் அதிர்ஷ்டத்தை விட அன்று உருவாகப்போகும் துரதிஷ்டத்தை எப்படி சமாளிப்பார் என்பதில் தான் விஜயகாந்தின் அரசியல் எதிர்காலம் இருக்கிறது. தமிழ்நாட்டு வாக்காளர்களைப் பற்றி அத்தனை எளிதாக கணித்து விட முடியாது.  கடைசி நிமிடம் வரைக்கும் சாவடித்து விடக்கூடியவர்கள். 

சொல்லமுடியாது.  ஒரு வேளை நடைபெறப் போகும் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில்??

கேப்டன் காட்டில் அடைமழையல்ல.  மழைக்குள் கேப்டன்.