Monday, September 07, 2020

பிரணாப் குமார் முகர்ஜி

மறைந்த வசந்த் குமார் மறைவிற்குப் பின்பு சமூக வலைதளத்தில் ஏதாவது ஓர் இடத்தில் அவரைப் பற்றி தவறான அபிப்பிராயம் கொண்டவர்கள் யாராவது எழுதுவார்களா? என்று கூர்மையாகக் கவனித்துக் கொண்டே வந்தேன். ஆனால் என் பார்வையில் அப்படியொரு தகவல் கண்ணில்படவே இல்லை. 

99 சதவிகிதம் அவரைப் பற்றி உண்மையான நேர்மையான அருமையான அஞ்சலி செய்திகள் தான் கண்ணில்பட்டது. அவர் அரசியல்வாதி, தொழில் அதிபர், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர், சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். தற்போது பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் வகித்தவர். 400 கோடிக்கும் மேல் என் சொத்து உள்ளது என்று கம்பீரமாகத் தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்தவர். இதற்கு மேலாக அம்பானி அதானி என்று பேசிக்கொண்டிருக்கும் தமிழர்களின் மத்தியில் தன் முனைப்பை ஏற்படுத்திக் காட்டியவர்களின் முக்கியமானவராகவே தெரிகின்றார்.


அதே போல பிரணாப் குமார் முகர்ஜி மறைவு செய்திக்கு வந்து விழுந்த அஞ்சலிகளைக் கோர்த்துப் பார்த்தேன். ஏனிந்த மாறுபாடு? அது தான் சமூக வலைதளங்களுக்கும், தொலைக்காட்சி ஊடகங்களுக்கும் உண்டான வித்தியாசம். பேரிழப்பு. தியாக சீலர், பாரதம் இழந்த தவப்புதல்வர் இத்யாதி இத்யாதி என்று வரிசையாகத் தோரணம் கட்டி வார்த்தைகள் வந்து விழுந்து கொண்டேயிருந்தாலும் உண்மைக்கும் பொய்க்கும் உண்டான வித்தியாசங்கள் ஒவ்வொருவரும் பார்த்த கேட்ட நடந்த சம்பவங்களை வைத்து எளிதாக கிழித்து தோரணமாக கட்டிவிடுவது தான் தற்போதைய தொழில் நுட்பம் கொடுத்த வரப்பிரசாதம்.

குக்கிராமத்திலிருந்து தத்தமது பயணத்தைத் தொடங்கி இந்தியாவின் முதல் குடிமகனாக உயர்ந்தவர்கள் என்று இரண்டு பேர்களை இந்திய அரசியல் சரித்திரம் பதிவு செய்துள்ளது. ஒன்று மறைந்த அப்துல் கலாம். மற்றொருவரும் பிரணாப். இருவரையும் ஒரே தட்டில் வைக்க முடியுமா? என்றால் முடியாது. தட்டே நகராது. இறங்கித் தொலைங்கப்பா என்று ஒருவரைக் கீழே தள்ளிவிடும்.

மக்களின் முதல் குடிமகன், மாணவர்களின் கனவு முதல் குடிமகன், அஞ்சு பைசா கூட அடுத்தவர் பணம் தேவையில்லை என்று கடைசி வரைக்கும் வாழ்ந்த அப்துல் கலாமோடு வேறு எவரையாவது ஜனாதிபதி மாளிகையில் வாழ்ந்த, வசித்த,கொண்ட்டாங்களுடன் அனுபவித்துச் சென்றவர்களை ஒப்பிட முடியுமா?

1969ல் தொடங்கிய பிரணாப் ன் அரசியல் பயணம் ஐந்து முறை (மாநிலங்களவை உறுப்பினர்) புற வாசல் பயணமாகவே இருந்தது. நிதியமைச்சர், பாதுகாப்பு, வெளியுறவு என்ற இந்திய அதிகாரத்தின் மூன்று முக்கிய துறைகளையும் அனுபவித்தவர் கடைசி வரைக்கும் பிரதமர் பதவியென்பது அவருக்கு எட்டாத கனியாக இருக்க அதில் உருவான பூசல் ராஜீவ் காந்தியால் மூன்றாண்டு வனவாசம் அனுபவிக்க நேர்ந்தது. அதாவது அரசாங்கப் பணத்தில் வாழாத மூன்றாண்டுகள். இத்தாலி அம்மையாரின் தீர்க்க தரிசன யோசனையின் காரணமாக ஜனாதிபதி மாளிகை வாசல் கதவு திறக்க காரணமாகவும் இருந்தது.

கணவான் அரசியல் என்பதனை கடைசி வரைக்கும் கடைப்பிடித்த காரணத்தால் பாரத் ரத்னா விருது வரைக்கும் அவரால் கம்பீரமாக நடைபயில முடிந்தது. நிதியமைச்சராக இருந்த காலத்தில் அவரின் உழைப்பு எல்லாமே திருபாய் அம்பானி மறைவுக்குப் பின்னால் அந்தக் குடும்பம் பாகப் பிரிவினைக்குப் பஞ்சாயத்து செய்பவராக வாழ்ந்த இவர்கள் என் மகன்கள் என்று அறிவிக்கும் அளவிற்கு இந்தியச் சமுத்திரத் திரளுக்கு தன்னால் ஆன மக்கள் பணியைச் செய்தார்.

என்னவெல்லாம் செய்தார் என்பது அவர் சார்ந்திருந்த காங்கிரஸ் கட்சியும் சொல்லாது. அவர் மனதளவில் கடைசி காலத்தில் ஞானம் வந்து விரும்பிய பாஜகவும் பிரகடனம் செய்ய முடியாத அளவிற்குக் கம்பி மேல் பயணம் செய்த காரியக்காரராகவே வாழ்ந்து முடித்துள்ளார். இறந்த அவர் மனைவிக்கு ஒரு வேளை தெரிந்திருக்கக்கூடும். மகள் சொன்னது போல "பிரதமர் பதவியை எட்ட முடியவில்லை என்ற வருத்தம் அவருக்குள் இருந்தது. ஜனாதிபதி ஆன பின்பு அதைப் பற்றி பேசி ஒன்றும் ஆகப் போவதில்லை" என்று அவருக்கு அவரே சமாதானம் செய்து கொண்டிருந்ததை அவர் எழுதியுள்ள இரண்டு ஆங்கிலப் புத்தகங்களில் சொல்லியுள்ளாரா? என்பதனை வாசித்து நாம் தான் தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்திரா காந்தி அமைச்சரவையில் 47 வயதில் இந்தியாவின் இளம் நிதியமைச்சர் என்று பெயர் பெற்றவர் 2017 வரைக்கும் ஏறக்குறைய ஐம்பது ஆண்டுகள் இந்தியர்களின் வரிப்பணத்தில் அவர் சகலவிதமான சந்தோஷங்களையும் அனுபவித்து மறைந்துள்ளார். அதனை ஊடகங்கள் சொல்வது போல நாட்டுக்காகத் தன்னை அர்ப்பணித்தார் என்று நாம் நாகரிகமாகச் சொல்ல வேண்டும். அதற்கு மேலும் அவர் வேறெந்த பதவியையும் விரும்பாத காரணம் அவர் உடல் நிலை ஒத்துழைக்கவில்லை என்பது மட்டுமே. காரணம் உடம்பில் உள்ள ஒவ்வொரு உறுப்புகளும் சீர் கெட்டு கடைசியில் எந்த மூளையில் இப்படி அதிசயமான நாட்டு நலன் குறித்து சிந்தனைகள் வந்ததோ அந்த இடத்தில் கட்டி வந்து அதுவே கோமா நிலைக்குக் கொண்டு சென்றது.

உயர்ந்த இந்திய இராணுவ மருத்துவமனை வசதிகள் அவருக்கு கடைசியில் கோமா நிலையைத் தான் தந்தது. தான் யார் என்று தெரியாமல், தன் உடம்பு எங்கேயுள்ளது என்பதனை அறியாமல், தான் செய்து வந்த காரியங்கள் அனைத்தும் நல்லதா? கெட்டதா? என்பதனை அறியும் அறிவு மறைந்து, உணர்வு நீங்கி, உள்ளுற அலையும் ஆத்மாவோடு அவர் உரையாடியிருக்கக்கூடும். எங்கேயோ லட்சக்கணக்கான மக்கள் இறந்த இரத்தச் சுவடுகளில் நம் கையும் நனைந்திருந்தது என்பதனை அவர் அந்தராத்மா அவருடன் உணர்த்தியிருக்குமா? என்று யோசித்துப் பார்த்தேன். அதாவது வாழும் போது நரகம். வாழ்க்கை முடியும் போது எப்போது இறந்தோம் என்று அறியாத பயணமாக அவர் உயிர்க்குருவி அவரை விட்டுப் பறந்துள்ளது.

அவரின் கடைசி 17 நாட்கள் எவ்வித சுயசிந்தனைகளைப் புடம் போட்டு அவருக்குள் உரையாடலை வளர்த்திருக்குமோ? என்று யோசித்துப் பார்த்தேன். காரணம் இந்து மத தத்துவங்களின் படி இறப்பவர்களுக்கு இறக்கும் நேரம் துல்லியமாகத் தெரியும். அவர்களின் முன்னோர்கள் அவர்களை வரவேற்கத் தயாராக இருப்பார்கள் என்று சொல்வதுண்டு. இவரை நிச்சயம் திருபாய் அம்பானி வரவேற்று இருப்பார். கூடவே அவர் இந்தியாவிற்குச் செய்ய மறந்த கடமைகளை நினைவூட்டப் பல லட்சம் பேர்களும் அந்த வரிசையில் இருந்திருக்கக்கூடும். அவருக்கு இந்திய அரசியல்வாதிகள் அஞ்சலிப் பூக்களை தூவிக் கொண்டிருந்த போது அவருக்கு உண்மையிலேயே அஞ்சலி செலுத்த வேண்டிய சகோதரர்கள் செய்துள்ளார்களா என்பதனை ட்விட்டரில் கவனித்துக் கொண்டிருந்தேன்.

கச்சிதமாக நன்றி விசுவாசத்தை வெளிப்படுத்தியுள்ளனர். சிங்களர்கள் எப்போதும் நன்றி மறவாதவர்கள் என்பதனை நினைத்து பெருமையாக இருந்தது.

Gotabaya Rajapaksa

@GotabayaR

I am deeply saddened to learn the demise of former Indian president #PranabMukherjee. He will be remembered for his service to the people of #India.

My heartfelt condolences to his family and friends.

Mahinda Rajapaksa

@PresRajapaksa

I am saddened to hear of the passing of the Fmr. #Indian President, #Bharatratna Shri #PranabMukherjee. He was a statesmen par excellence, a writer & a man loved by all. The passion with which he served his nation is unparalleled. My deepest condolences to his family & friends.

இதனை படித்த பின்பு வருத்தப்படும் நண்பர்களுக்காகவே வைரமுத்து எழுதி எங்கள் ஊர் மின் மயானத்தில் ஒவ்வொரு பிணமும் எரிக்கப்படும் போது ஒலிக்கும் பாடலை அவருக்கு அர்ப்பணிக்கின்றேன்.

மரணத்தினால் சில கோபங்கள் தீரும்.....

மரணத்தினால் சில சாபங்கள் தீரும்......

வேதம் சொல்லாததை மரணங்கள் கூறும்....

விதை ஒன்று வீழ்ந்திடில் செடி வந்து சேரும்....

இந்தியச் சட்டங்களை தங்களுக்கு சாதகமாக வைத்துக் கொண்டு தங்கள் நல்வாழ்க்கைக்காக கடைசி வரை வாழ்ந்த அரசியல்வாதிகளின் பாவங்களை எந்த மரணமும் மாற்றது. மறைக்காது. அதன் அழுக்கை கழுவாது. அதன் தாக்கம் தலைமுறைகள் அனுபவிக்கும்.

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்
வித்தகர்க் கல்லால் அரிது

அணுகுமுறை பொறுத்து புகழ் உண்டாகும் + நிற்கும்... ஆனால் புகழ் என்பது இரக்கம்...!

raajsree lkcmb said...

//சிங்களர்கள் எப்போதும் நன்றி மறவாதவர்கள் என்பதனை நினைத்து பெருமையாக இருந்தது.//
உங்கள் நையாண்டி புரிகிறது. அவர்கள் அரசாங்க மட்டத்தில் சம்பிரதாயமாக இரங்கல் தெரிவித்து இருக்கலாம். ஆனால் உண்மை என்ன தெரியுமா? சிங்களவர்களின் மிக பெரிய கெட்டகுணம், எனக்கு இவர்களிடம் அறவே பிடிக்காத குணம் "செய்நன்றி மறப்பது"
நன்றி என்ற சொல்லுக்கும் இவர்களுக்கும் வெகு தூரம்.

வெங்கட் நாகராஜ் said...

நல்லதொரு கட்டுரை.

ஜோதிஜி said...

நீங்கள் தொடர்ந்து வாசிப்பது நான் அறிந்ததே. அடுத்து ஒரு பதிவு போட்டுள்ளேன். அவசியம் வாசித்து கருத்திடவும். சிங்களர்களின் துரோகம் என்பது ஐந்து தலைமுறை வரலாறு கொண்டது. அது நாடி நரம்பு ரத்தம் சதை புத்தி என்று எல்லா இடங்களிலும் உள்ள விசயமது.