Tuesday, December 17, 2019

உங்கள் வாழ்க்கை. உங்கள் கைகளில்.


ஒவ்வொரு வருடத்தின் ஜனவரி 1 அன்று எத்தனை சபதங்கள் போட்டுத் தொடங்கியிருப்போம். டிசம்பர் 31 அன்று நிதானமாக யோசிப்போமா?  நிச்சயம் செய்ய மாட்டோம்.  ஏன் நடக்கவில்லை? என்ன காரணம்? இந்த இரண்டு கேள்விகளை எழுப்பி அதற்கு விடை தேடிப் பார்த்தால் பெரும்பாலானவர்கள் "என் சூழல் சரியில்லை" என்று தான் முடிப்பார்கள்.  பொய் என்று தெரிந்தே சொல்வோம்.

எனக்குப் புத்தகங்கள் படிக்க நேரமில்லை?

எனக்கு நடைப்பயிற்சி செய்ய நேரமில்லை?

எனக்கு எழுத நேரமில்லை?

எனக்கு கற்றுக் கொள்ள நேரமில்லை? என்று இதைப் போல ஒரு பட்டியல் ஒவ்வொருவரிடமும் உண்டு.

2020 உங்களுக்கு எத்தனை கடமைகள் இருந்தாலும் இதை மட்டும் செய்ய முடியுமா? என்று பாருங்கள்.  




நான் முழு உடல் பரிசோதனை சில வருடங்களுக்கு முன்பு செய்துள்ளேன்.  ஆனால் அதை முக்கியக் கடமையாக எடுத்துக் கொள்ளவில்லை.  நண்பர் அழைத்தார்.  அவருக்குத் தெரிந்த மருத்துவர் மருத்துவ முகாம் நடத்துகின்றார். கட்டணம் குறைவு என்றார்.  நானும் கலந்து கொண்டேன்.

எந்தப் பிரச்சனையும் இல்லை.  மருத்துவர் ஆச்சரியமாகப் பாராட்டினார்.

அதன் பிறகு ஒரு முறை வேறொரு முறை என் குடும்ப மருத்துவர் எடுத்தே ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்த அப்போதும் எடுத்தேன்.  அதையும் நான் முக்கியமானதாகக் கருதவில்லை.  

என்ன காரணம்?  

எதையாவது இவர்கள் ரிப்போர்ட் என்ற பெயரில் சொல்வார்கள். நாம் நினைத்ததைச் சாப்பிட முடியாது.  இதையே நாம் நினைத்துக் கொண்டு இருக்க வேண்டியதாக இருக்கும் என்ற பயத்தில் நான் இது போன்ற விசயங்களில் கவனம் செலுத்தவே இல்லை. ஆனால் எனக்குக் கடந்த அக்டோபர் மாதம் ஞானம் பிறந்தது.  

சென்னையில் உள்ள நண்பர் வேறு எதையோ பேசிக் கொண்டிருந்த போது திடீரென அவரின் நெருங்கிய  நண்பரின் கதையைப் பற்றிச் சொல்லிப் பல தகவல்களைச் சொன்ன போது உள்ளே எங்கோ குமிழ் உடைந்தது போலவே இருந்தது.  ஆரோக்கியமாக இருக்கின்றோம் என்று நம்பிக் கொண்டிருந்த நண்பர் மாரடைப்பில் இறந்து விட்டார்.  குடும்பம் தடுமாறுகின்றது என்றார். 

அப்போது தான் இவர்கள் ஞாபகம் வந்தது.  இவர்களைப் பற்றி முழுமையாகக் கேள்விப்பட்டுள்ளேன். சரி ஒரு முறை இங்கே சென்று வருவோம் என்று சென்றேன்.  

என் முழு அறிக்கையைப் பார்த்து அங்குள்ள மருத்துவர் எல்லாவிதங்களிலும் அற்புதம் என்று சான்று அளித்தார்.

இவர்கள் லாப நோக்கத்தில் செயல்படவில்லை.

இவர்கள் முழு உடல் பரிசோதனை செய்வதற்கு ரூபாய் 2750 கட்டணமாக வாங்குகின்றார்கள்.

ஒரு நாளைக்கு 40 பேர்களை மட்டுமே எடுத்துக் கொள்வார்கள்.  அதற்கு மேல் வரும் நபர்களை அடுத்த நாள் வரச் சொல்லிவிடுவார்கள்.

அதிகாலை 5 மணி முதல் டோக்கன் வழங்குகிறார்கள்.

காலை 6 மணி பரிசோதனை தொடங்கும்.  எதுவும் உண்ணாமல் செல்ல வேண்டும்.

மதியம் 12 மணி  வரை ஒவ்வொரு சோதனையாக நடக்கும்.

தலை முதல் கால் வரைக்கும் அனைத்து உறுப்புகளின் ஜாதகத்தை முழுமையாக அறிக்கையாகத் தந்து விடுகின்றார்கள்.

இரத்தப் பரிசோதனை என்றால் அதில் 65 வகையான ரிப்போர்ட் தருவார்கள். 

இதே போல ஒவ்வொரு அறிக்கையும் விரிவாக விளக்கமாக இருக்கும்.

இவர்கள்  செய்யும் பரிசோதனைகளை நீங்கள் வேறு எங்குச் சென்று எடுக்க நினைத்தாலும் குறைந்தபட்சம் ரூபாய் 50 000 ஆகும்.

உங்கள் வாழ்க்கை. உங்கள் கைகளில்.

உங்கள் உடல் நலம் ஆரோக்கியத்துடன் வாழ என் வாழ்த்துகள்.








8 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

பல ஞானங்கள் இருந்தாலும் சிக்கல்... ஹா... ஹா...

ஜோதிஜி said...

மனித மனமே விசித்திரமானது தானே?

Rathnavel Natarajan said...

உங்கள் வாழ்க்கை. உங்கள் கைகளில். - அருமை. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திரு ஜோதிஜி

ஸ்ரீராம். said...

சோதனைகள் செய்தபின் அறிவுறுத்தப்படும் மருந்துகளை ஒழுங்காக எடுத்துக் கொள்ளா விட்டாலும் பிரச்னைதான்.   நான் அப்படிதான் அவஸ்தைப்பட்டேன்!

கிரி said...

முழு உடல் பரிசோதனை மிக அவசியம் அதுவும் 30+ வயதுக்கு மேல் கட்டாயம்.

புத்தர் படத்தில் இருக்கும் கருத்துகள் நான் பின்பற்றுவது. இதைப் பற்றி எழுத நினைத்துள்ளேன்.. சமீபத்தில் நான் படித்த புத்தகத்தில் வந்து நினைவுபடுத்தியது.

எண்ணம் போல வாழ்க்கை.

ஜோதிஜி said...

நன்றி அய்யா.

ஜோதிஜி said...

இந்த விசயத்தில் தான் நான் கஷ்டப்படுகிறேன் ராம். காரணம் வாயைக் கட்ட முடியவில்லை.

ஜோதிஜி said...

நன்றி. வாழ்க வளமுடன் கிரி.