Tuesday, July 10, 2018

நாட்டு நடப்பு - சின்னச் சின்ன குறிப்புகள் - 9

திமுக வில் உள்ள முக்கிய நண்பரிடம் சொன்னதை மீண்டும் இங்கே எழுதி வைக்கத் தோன்றுகின்றது. 

தமிழகத்தில் தேர்தலில் வெற்றி என்பது தேர்தலுக்கு முந்தைய மூன்று நாட்களில் நடக்கும் சம்பவங்கள், சடங்குகள் பொறுத்து தானே ஒழிய நல்லவர், கெட்டவர், தரமானவர், நம்ம சாதிக்காரர் எல்லாமே இரண்டாம் பட்சமே. இந்த நாளில் எவரும் மண்டையைப் போடாமல் இருக்க வேண்டும். இதில் விதிவிலக்காகப் பெரும் கோபம், பெரும் சோகம் உருவாகும் பட்சத்தில் தலைகீழ் மாற்றங்கள் உருவாக வாய்ப்புண்டு. 

காரணம் நம் மக்கள் தரம் அப்படி. (அறிஞர் அண்ணா வெற்றி பெற்றதும் சொன்ன வார்த்தை "இவ்வளவு பெரிய வெற்றியை எதிர்பார்க்கவே இல்லை". காரணம் காங்கிரஸ் ன் தோல்வி என்பது அவரை மனதளவில் நிறையவே பாதித்தது) 

இன்று வரையிலும் நடுத்தர மக்களுக்குக் கீழே உள்ளவர்களின் வாழ்க்கையைத் தினந்தந்தி தான் தீர்மானிக்கின்றது. தூத்துக்குடி கலவரம் கொளுந்து விட்டு எறிந்த போது தூத்துக்குடி, திருநெல்வேலி பதிப்புகளில் கூட இந்தக் கலவரச் செய்திகள் வராமல் இருக்க அந்தப் பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் கொந்தளித்து விட்டனர். மிகப் பெரிய எதிர்ப்பு உருவானது. வீட்டுக்கு வந்த தினத்தந்தியை வேண்டாம் என்று சொல்லும் அளவிற்குச் சென்றது. கடைசியில் இது போன்ற செய்திகள் கூடத் துணுக்குச் செய்தியாக மாறிவிட்டது.

நடுத்தரவர்க்கமும், வியாபாரிகளுக்கும் தினமலர் முக்கியமாக உள்ளது. விமர்சனமாக எழுதவே கூச்சமாக உள்ளது. வார்த்தை பிரயோகம், எழுதும் விதமும் மொத்தமும் அசூசை. மனசாட்சி என்றால் கிலோ என்ன விலை என்கிற அளவிற்கு?

ஒரு பக்கம் அதிகாரத்தில் இருப்பவர்களின் தயவு வேண்டும்.  மற்றொரு பக்கம் முதலாளிகளின் அருள் கடாட்சம் வேண்டும்.  ஊடக முதலாளிகளுக்கு இருவருமே முக்கியம்.

ஒவ்வொரு தேர்தலில் உண்மையிலே ஓட்டளித்து தங்கள் ஜனநாயக கடமையைச் செய்து கொண்டிருப்பவர்களுக்கு முக்கியச் செய்திகள் எதுவும் போய்ச் சேர்வதில்லை.  அன்றாட வாழ்க்கைப்பாடுகளில் அதைப் பற்றி அவர்கள் கண்டு கொள்ளவும் நேரமும் இருப்பதில்லை. கொள்ளை அடிப்பவன் துடிக்கத் துடிக்க அறுத்துக் கொண்டே தான் இருக்கின்றான். 

எல்லாச் செய்திகளையும் வாசித்தவனும், விசயங்கள் புரிந்துவனுக்குத் தேர்தலுக்கு முன்பும் பின்பும் விடுமுறை நாளாக இருந்தால் விடு ஜுட். கொண்டாட்டம் தான். 

இணையத்தில் எல்லாமே வெளிப்படையாக உள்ளது. நல்லதும், கெட்டதும், பத்திரிக்கையில் வராமல் இருப்பது, ஊடகங்கள் மறைப்பது, பெரிய மனிதர்களின் லீலைகள் தொடங்கி அனைத்தும் உள்ளது.  அது இணையத்திற்குள் தான் உள்ளது.  பொது வெளிக்கு வருவதும் இல்லை.

வரும் அளவிற்கு நம்மவர்கள் இன்று வரையிலும் மாறவும் இல்லை.  

ஆனால் இவற்றையெல்லாம் உடைத்துக் கொண்டு வாட்ஸ் அப் என்ற தொழில் நுட்பம் கக்கூஸ் வரைக்கும் வந்து சேர்ந்து விட்டது.

எது சரி? எது தவறு? எது உண்மை? எது பொய்? என்பதனை உணரும் அளவிற்கு மக்களுக்கு படிப்பறிவும் இல்லை. அதனை உள்வாங்கி சிந்திக்கின்ற வாசிப்பனுவமும் இல்லை.  

இந்த முறையும் (வருகின்ற தேர்தலில்) திமுக ஆட்சிக்கு வர முடியாமல் போனால் நிச்சயம் அது வாட்ஸ் அப் என்ற தொழில் நுட்பம் தான் முக்கியக் காரணமாக இருக்கும் என்று என்னால் இன்று உறுதியாகச் சொல்ல முடியும்.

வருடந்தோறும் மருத்துவர் ராமதாஸ் மாதிரி பட்ஜெட் கொண்டு வருவார்.  தமிழகத்தில் பத்தாயிரம் பேர்களுக்குக்கூட அதன் சாரம் சென்று சேரவில்லை.

ஊடகப் பசியில் மலத்தைக்கூட அப்படியே வாயில் அள்ளி போட்டுக் கொள்ளும் பழக்கத்தால் சினிமா.. சினிமா.. சினிமா  இது தான் முக்கியமாக பேசப்படுகின்றது.  இதன் காரணமாகத்தான் ரஜினி போன்றவர்கள் இங்கே எப்போதும் முக்கிய செய்தியில் இடம் பெறுவராக இருக்கின்றார்.

எப்போதும் போல எந்திரன் 2 வரும் வரை அவருக்கு அரசியலென்பது பார்ட் டைம் வேலை தான். அடுத்தடுத்து வேறு பட ஒப்பந்தங்களில் வேறு ஈடுபாடு காட்டிக் கொண்டிருக்கின்றார். மொத்தத்தில் அவருக்கு என்ன தேவையோ அவர் கடமைகளில் கண்ணும் கருத்துமாகவே இருக்கின்றார். அவரைப் பின்னால் இருந்து இயக்குபவர்களை விட ஊடகங்கள் தாங்குவது கொடுமை என்றால் சமூகவலைத்தளங்கள் சொறிந்து கொண்டிருப்பது தான் பெரிய கொடுமை. 

நம்மவர்களுக்குக் கத்த தெரியும் அல்லது கல் எடுத்து அடிக்கத் தெரியும். புறக்கணிக்கத் தெரியாது. 

முன்பே ரஜினிக்கு அரசியல் ஆசை வந்த போது இப்போது காங்கிரஸ் ல் இருக்கும் திருநாவுக்கரசர் அவர்களை ரஜினி சந்தித்தார்.  அப்போது திருநாவுக்கரசர் ரஜினியிடம் சொன்ன வாசகம் இது.

"நாங்க பத்து நாட்கள் கஷ்டப்பட்டு ஒரு விசயத்தை நடத்தி விடலாம் என்று யோசித்து முடிவெடுத்து இருப்போம்.  கலைஞரின் ஒரு அறிக்கை எல்லாவற்றையும் அப்படியே புரட்டிப் போட்டு விடும். நாங்க எங்க வேலையை மறுபடியும் தொடங்க வேண்டும்" என்றாராம்.

தூத்துக்குடியில் கலவரம் நடப்பதற்கு முன்பு 99 நாட்கள் அமைதியாகத்தான் நடந்தது. கடைசி நாள் தான் அனைத்தும் மாறியது.

நூறு நாட்கள் எத்தனை காணொளிக்காட்சிகள், ஆவேச அறிக்கைகள், பேச்சுகள், விவாதங்கள், போராளிகள்.  ஆனால் இன்று அனைத்தும் காற்றில் அடித்துச் செல்லும் தூசி போல மாறிவிட்டது.  எம்.ஜி.ஆருக்கு மக்களிடம் செல்வாக்கு இருந்தது.  கலைஞருக்கு அவர் பேனா வலிமையாக இருந்தது. ஆனால் இன்று ஊடகங்களுக்கு ரஜினி என்றும் தேவையாய் இருக்கின்றார்.  

அந்த ஊடகங்களை கட்டுப்படுத்துபவர்களுக்கு ஒவ்வொன்றும் தேவையாய் உள்ளது.

மாற்ற, திரிக்க, திசை திருப்ப.

அறிவார்ந்த போராட்டங்கள் முன்னெடுக்காத வரைக்கும் இங்கு எல்லாமே கடைசிவரைக்கும் கண்டு களிக்கும் காட்சியாகத் தான் இறுதியில் முடியும். 

மற்ற போராட்டங்களை விட இந்த வேதாந்த நிறுவனம் இந்த முறை சற்று ஆடிப்போயுள்ளது என்பதனை சமூக வலைதளங்களை வாசிக்கும் போது புரிந்து கொள்ள முடிகின்றது.  எங்கு அடித்தால் அவர்களுக்கு வலிக்குமே அதன் எல்லை வரைக்கும் நம்மவர்கள் செய்திகளை கொண்டு சேர்த்துள்ளார்கள். இது இதற்கு முன்னால் நடக்காத நிகழ்விது.

ஆனால் இவற்றையெல்லாம் புரிந்து கொள்ளும் அளவிற்கு ரஜினிக்கு பக்குவமும் இல்லை.  அது முழுமையாக புரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை.  அதனால் தான் உளறிவிட்டார்.

அனில் அகர்வால் ஒரு வியாபாரி என்றால் ரஜினியும் வியாபாரி தான்.  அவருக்கு தொழில் மூலம் வருமானம் வருகின்றது.  இவருக்கோ மக்களின் முட்டாள் தனத்தில் மூலம் கோடி கோடியாய் கொட்டுகின்றது.

சேர்த்த கோடிகளை காக்க வேண்டும்.  பழைய பெரிய நடிகர்கள் போல தெருக்கோடிக்கு போகாமல் வாரிசுகளுக்கு கொடுத்து விட்டுச் செல்ல வேண்டும்.  இதைத் தவிர இவருக்கு பெரிய கொள்கைகள் எதுவும் இல்லை.  

தூத்துக்குடி கலவரத்தில் இறந்த மக்களுக்கு அனுதாபம் கூட தெரிவிக்க விரும்பாத பிரதமர் தமிழர்களின் மேல் காழ்ப்புணர்வு கொண்டவர் என்று விமர்சித்தால் அதை விட  உள்ளுருக்குள் இருந்து கொண்ட தந்திரசாலியாக வலம் வரும் ரஜினி பெரிய ஆபத்தானவராக தெரிகின்றார்.

ஆன்மிகம் என்பதனை எப்போது ஒருவன் உரக்க அறிவுரையாகப் பேசத் தொடங்குகிறானோ அவன் தான் ஒன்றாம் நம்பர் அயோக்கியன் என்று அர்த்தம். 

காரணம் சாமியை வெறுத்துப் பேசியவர்கள் எவரும் இங்கே சிலைகளை, மசூதியை, தேவாலயங்களை உடைத்ததில்லை. எல்லா மதங்களில் உள்ள பிதாமகன்கள் தான் மக்களை ரத்தவெறி பிடிக்க வைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

ரஜினி தனிப்பட்ட வாழ்க்கையில் நல்ல மனுசன். அவர் மனைவிக்கு, இரண்டு பெண் குழந்தைகளுக்கு, மருமகனுக்கு.  

ஆனால் பொது வாழ்க்கையில்? 

அவர் உழைப்பு. அவர் சம்பாத்தியம். அவர் சுகவாழ்க்கை. அதனைக் கேட்க எவருக்கும் உரிமையில்லை.  ஆனால் துரும்பைக்கூட கிள்ளிப் போட மனமில்லாத மனம் கொண்டு மகான் மன்னவனாக முடிசூட்ட நினைப்பது தான் தமிழர்களின் வாழ்வில் நடக்க இருக்கும் ஆகப் பெரும் சோகமாக இருக்கப் போகின்றது. 

கன்னடராக பிறந்து இருந்தாலும் இவருக்குப் பின்னால் வந்த முரளி, பிரகாஷ்ராஜ் முதல் பலரும் பேசக்கூடிய தமிழ் கூட இவரால் சரியாகப் பேச முடியவில்லை. விருப்பமில்லை என்று சொல்ல முடியாது.  அதற்கான அறிவும் பொறுமையும் இல்லை என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. 

காரணம் அவர் கழுவுவதைக்கூட காணக்கிடைக்காத காட்சியாக ஊடகங்கள் மாற்றிய பின்பு நமக்கு அவர் பேசும் மொழி தான் தமிழகத்தின் தலைவிதியாக தெரிவதில் என்ன ஆச்சரியம்?

காலம் தன்னை வில்லனாக மாற்றுவதற்குள் அரசியல்வாதிகள் பதவியில் இருக்கும் போதே போய்ச் சேர்ந்து விட வேண்டும். நடிகர்கள் புகழுடன் இருக்கும் போதே கரைந்து விட வேண்டும். 

ரஜினி வில்லனாக வாழ்க்கையைத் தொடங்கினார். 

வில்லனாகத்தான் மாறிக் கொண்டு வருகின்றார். 

இழந்து போன  தனது ஆரோக்கியத்தை பொருட்படுத்தாமல் அவர் பணயம் வைத்துள்ளார். பயணம் நடத்துவதாக பயம் காட்டுகின்றார்.  அது தமிழர்களின் தலைவிதியாக வேறு இருந்து தொலைக்கின்றது.

இங்கே அடிப்படை எண்ணங்கள் மாறாதவரைக்கும் நல்ல ஆட்சியாளர்களை எதிர்பார்க்காதீர்.


21 comments:

bandhu said...

/துரும்பைக்கூட கிள்ளிப் போட மனமில்லாத மனம் கொண்டு மகான் மன்னவனாக முடிசூட்ட நினைப்பது தான் தமிழர்களின் வாழ்வில் நடக்க இருக்கும் ஆகப் பெரும் சோகமாக இருக்கப் போகின்றது. /
இது எந்த விதத்தில் சரி? கிள்ளிப் போட மனம் வருவது எந்த விதத்தில் முதல்வர் பதவிக்கு முக்கியம்?

முதல்வர் பதவிக்கு தேவையான நேர்மை / மக்கள் நலம் சார்ந்த தூரப்பார்வை / தெளிவு / துணிவு / நிர்வாக திறமை, இவையெல்லாம் இப்போதிருக்கும் யாருக்கு இருக்கிறது?

இவை அனைத்தும் சேர்ந்து நமக்கு எப்போது வாய்த்திருக்கிறது? கடைசியாக காமராஜருக்கு அடுத்து?

காசு செலவழிக்காமல் மக்களை சேர்க்க ஒரு பிம்பம் தேவைப்படுகிறது. அதற்கு ரஜினி பெரிதாக தெரிகிறார். அவ்வளவுதான். கொள்கை என்பதெல்லாம் வெறும் பம்மாத்து!

வருத்தமாக இருந்தாலும் உண்மை இதுதான்!

Admin said...

நீண்ட நாட்களின் பின் உங்கள் பக்கம் வருகை தந்தேன்.

Unknown said...

ஐயா இது நீங்களா எழுதினீங்க? ஆச்சர்யமருக்கே. நிறைய புது வார்த்தைகள் பெரும்பாலும் உங்கள மாதிரி நல்ல மனுஷங்க உபயோகிக்காதவை அல்லது உபயோகிக்க விரும்பாதவைகள். வழக்கம் போல கட்டுரை ஆரம்பிச்ச இடம் வேற, நகர்ந்து முடிஞ்ச இடம் வேற.

ரஜினி ஒரு முட்டாளாக காட்டிக்கொண்டே மக்களை முட்டாளாக்குகிற மனுஷன், அது பெரும்பாலும் 50 வயசுக்கு அருகிலே இருக்கிறவங்க அழகா புரிஞ்சிக்கிட்டாங்க. சில விசிலடிச்சான் குஞ்சுகதான் இன்னும் தலையில தூக்கி வச்சிக்கிட்டு ஆடிக்கிட்டிருக்காங்க.

ஒரு உதாரணத்துக்கு சொல்லணும்னா இப்போ இருக்கிற அ.தி.மு.க அமைச்சர்களை பாருங்க (செல்லூர் ராஜு, மணியன், ஜெயக்குமார், இன்னும் பல) நமக்கு தெரியும் இவங்கள விட முட்டாள் இது வரைக்கும் அமைச்சர்களா இருந்ததில்லை, இனிமேலும் வருவதற்கான வாய்ப்பு மிக குறைவு). ஆனாலும் அவங்களுக்கு கொஞ்சம் கூட கூச்சம் கிடையாது.அவங்களுக்கே தேவை பப்லிஸிட்டி மற்றும் பாழாப்போன பணம்.

உடுங்க சார் நம்ம மக்கள் தலையெழுத்து இப்படித்தாண்ணா என்ன பண்ண முடியும். கஷ்டம். கடவுள்தான் காப்பாத்தணும்.

ஆதி said...

உண்மை

ஆதி said...

அறம்வாய்ந்த பொதுவாய் பலர் ஏற்கும் ஒருவரை முன் மொழீயுங்கள்

Unknown said...

தங்கள் கட்டுரையின் சாரம் தெளிவாகவே இருக்கிறது. ஒரேயொரு கருத்துப் பிழை. ரஜினி ஒரு கன்னடர் என்று எழுதியிருக்கிறீர்கள். ரஜினி கர்நாடகாவில், குறிப்பாக பெங்களூரில் வசித்த ஒரு மராட்டியர்.கர்நாடகத்தில் கன்னடர்களுக்கு அடுத்தபடியாக தமிழர்களும், தெலுங்கர்களும் உள்ளனர். இவர்களுக்கு அடுத்தபடியாக பெரும்பான்மையாக இருப்பவர்கள் மராட்டியர்களே. ஆனால் அத்தனை மராட்டியர்களும் கன்னடம் படித்து கன்னடர்களாகவே தங்களை மாற்றிக்கொண்டவர்கள். வீட்டில் பேசு மொழி மட்டும்தான் மராட்டியம். ஆனால் கர்நாடகத்தில் இருக்கும் பெல்காமில் இதற்கு நேர் எதிர். அவர்கள் பெல்காமை மகாராஷ்டிரத்துடன் சேர்க்க வேண்டும் என்று ஆதிகாலம் முதற்கொண்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள். பெல்காம் முழுக்க ஒரு ஏழெட்டு எம்எல்ஏக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விடுவார்கள். அவர்கள் தலையில் தலைப்பாகையுடன்தான் சட்டமன்றத்துக்கே வருவார்கள். நடிகர்களில் அர்ஜூனும், ரஜினியும் மராட்டியர்கள். முரளி கவுடாஸ் எனப்படும்(இன்றைய முதல்வர் குமாரசாமி) பிரிவைச் சேர்ந்தவர்.

வருண் said...

***நிறைய புது வார்த்தைகள் பெரும்பாலும் உங்கள மாதிரி நல்ல மனுஷங்க உபயோகிக்காதவை ***

இவரும் ரஜினி மாதிரி சுயரூபத்தை காட்டிவிட்டார்போல இருக்கு? எத்தனை காலம்தான் இவரும் நடிக்க முடியும்? :)

வருண் said...

*** ரஜினி தனிப்பட்ட வாழ்க்கையில் நல்ல மனுசன். அவர் மனைவிக்கு, இரண்டு பெண் குழந்தைகளுக்கு, மருமகனுக்கு.

ஆனால் பொது வாழ்க்கையில்? ***

பொது வாழ்வில் ரஜினி நெறையப்பேரு குடியை கெடுத்துட்டாரா என்ன? உங்க இதயதெய்வம் எம் சி ஆர் சினி ஃபீல்ட்ல சந்திரபாபு, அசோகன், நாகேஷ், எம் ஆர் ராதா னு பல பேரு குடியை கெடுத்த மாதிரி, ரஜினி யாரு குடியையும் கெடுத்ததா எதுவும் செய்தி வரலையே???

வருண் said...
This comment has been removed by the author.
வருண் said...

***ஆனால் இன்று ஊடகங்களுக்கு ரஜினி என்றும் தேவையாய் இருக்கின்றார். ***

இந்த ஊடகங்களில் நீங்களும், அப்புறம் நம்ம இடதுசாரி ராமன் அங்கிள் (எதுக்கெடுத்தாலும் ரஜனி ரஜனினு எதையாவது 108 பஹ்டிவில் எழுதி சூடாக்குறாரு அவர் பதிவை) இருவரின் சேவையும் முக்கியமானது.

ஆமா, "ஆன்மீகவாதி ரஜினி" னா ஏன் இப்படி பயப்படுறீங்க?

ஒரு வேள, ரஜினி மக்கள் மன்றத்தில் 1 கோடி அங்கதினர் சேர்ந்துவிட்டதா ஒரு செய்தி வந்ததே அதை படிச்சீங்களா? :)

வருண் said...

***வருத்தமாக இருந்தாலும் உண்மை இதுதான்!***

பந்து: நீங்க வருத்தப்படுற மாதிரி எனக்கு எதுவும் தெரியலை :)

ஜோதிஜி said...

வருண் உங்கள் விமர்சனங்கள் ரஜினி யின் தீவிர ரசிகன் என்பதனை எனக்குப் புரிய வைத்தது. நன்றி.

ஜோதிஜி said...

நீங்க சொல்வது உண்மை தான். அர்ஜுன் மராட்டியர் என்பது உங்கள் மூலம் தான் தெரிந்து கொண்டேன்.

ஜோதிஜி said...

மக்கள் அப்படி வாழ விரும்பாத போது நாம் ஏன் ஒருவரைத் தேட வேண்டும்? மக்கள் எவ்வழியோ மன்னன் அவ்வழியே?

ஜோதிஜி said...

கார்த்திகேயன்.... ஒரு சாதாரண நடுத்தர வாழ்க்கை என்பது அதிக ஆசை இல்லாமல் இயல்பாக வாழ்வது எளிது. ஆனால் அந்த வாழ்க்கையைக் கூட இங்கே வாழ விடாமல் தடுப்பது அரசாங்கத்தின் கொள்கைகள். அந்த கொள்கைகள் குறித்து இவர் எதுவும் பேசுவதில்லை. ஆனால் நேரதிராக பேசும் போது எப்படி நல்ல வார்த்தைகளை எழுத முடியும்? சொல்லப் போனால் இன்னமும் காரமாகத்தான் எழுத வேண்டும். ஒன்று உண்மையைப் பேச வேண்டும். அல்லது பேசாமல் தன் பணி என்று எப்போதும் போல அமைதியாக இருந்து விட வேண்டும். எவரும் அவரை ஒன்றும் சொல்லப் போவதில்லை. பலரும் அப்படித்தானே இங்கே இருக்கின்றார்கள்.

ஜோதிஜி said...

நன்றி. நலமா?

ஜோதிஜி said...

பந்து...... பெரிய ஆச்சரியம் என்னவென்றால் அவரின் குடும்ப உறுப்பினர்கள் உருவாக்கும் பிரச்சனைகள் குறித்து எந்தக் கருத்துமே சொல்லமாட்டேன் என்கிறார். மற்ற எல்லாவற்றையும் பேசுகின்றார்.

இராதாகிருஷ்ணன் said...

உண்மையை சரியாக சொன்னனீர்கள், நாட்டு நடப்பு - சின்னச் சின்ன குறிப்புகள் இல்லை தமிழகத்தின் எதிர்காலத்திற்கு தேவையான பதிவு . என்றைக்கு நம் முன்னோர்கள் காமராஜர் ஆட்சியை கவிழ்த்து திராவிட கவர்ச்சி ஆட்சியை நம்பினார்களோ அதற்க்கு பலனாய் அன்றிலிருந்து தொடர்ந்து நாம் வஞ்சிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றோம். இன்றைய சூழ்நிலையிலும் இதற்க்கு ஒரு முடிவு இருப்பதாய் தெரியவில்லை.
நீண்ட நாட்களாக எனக்கு இரண்டு ஆதங்கம்,
ஓன்று “கன்னடராக பிறந்து இருந்தாலும் இவருக்குப் பின்னால் வந்த முரளி, பிரகாஷ்ராஜ் முதல் பலரும் பேசக்கூடிய தமிழ் கூட இவரால் சரியாகப் பேச முடியவில்லை. விருப்பமில்லை என்று சொல்ல முடியாது. அதற்கான அறிவும் பொறுமையும் இல்லை என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது.”
மற்றொன்று அவர் ஒரு நல்ல வியாபாரி. அவ்வளவுதான்.
ஆனால் இது அதிகப்படியான தமிழக மக்களுக்கு ஏன் விளங்குவதே இல்லை?

ஜோதிஜி said...

நன்றி. நலமா இருக்கின்றீர்களா? ரொம்ப நாளாச்சு?

bandhu said...

இந்த பாசிபிலிட்டியை யோசியுங்கள். ரஜினி என்ற பிம்பமும் டி டி வி தினகரன் என்ற அதிரடி அரசியல்வாதியும் இணைந்தால் ரஜினி முதல்வராவது எளிதில் நடக்கும்!

அது நல்லதா, நடக்குமா என்ற விவாதங்களுக்கு நான் செல்லவில்லை!

நீங்கள் கேட்ட கேள்விகளை எல்லோரும் எளிதில் மறந்து விடுவார்கள்!

வருண் said...

ஜோதிஜி: லதா ரஜினிகாந்த் சட்ட விரோதமாக ஏதாவது செய்தால், சட்டம் அவரை சும்மா விடாது. அதே சமயத்தில் செலிரிட்டி மனைவி என்பதால் பேரைக் கெடுக்க எத்தனையோ பேர் அலைகிறார்கள். அதனால் உண்மையிலேயே அவர் குற்றம் செய்தாரானு எனக்குத் தெரியவில்லை.

நீங்க கமல் அபிமானி, உங்க வீட்டுக்காரம்மாவுக்கு ரஜினி பிடிக்கும்னு வச்சுக்கோங்க, அது அவருடைய தனிப்பட்ட விசயம். அதற்க நீங்க என்ன செய்வீங்க பாவம்??

அதேபோல் கலைஞர் ஒரு நாத்திகர். கனிமொழியின் அம்மா ஆத்திகராக இருக்கலாம். அதனால் கலைஞரை விமர்சிக்க முடியாது. அது அவர் மனைவியின் தனிப்பட்ட விசயம். அதை கலைஞர் மதிப்பதே சரி.

அதேபோல் லதா ரஜினிகாந்த் தனிப்பட்ட கொடுக்கல் வாங்கள் டீலிங்ஸ்ல ரஜினி தலையிடனும்னு அவசியமே இல்லை. லதா ரஜினிகாந்துக்காக வக்காலத்து வாங்கவோ, வக்கீலாக டிஃபென்ட் பண்ணவோ அவசியம் இல்லை. லெட் ஹெர் டீல் வித் இட்! இட் இஸ் நன் ஆஃப் ரஜினிஸ் பிசினெஸ்! சுப்ரீம் கோர்ட் விசாரித்து தவறூ செய்திருந்தால் தண்டனை வழங்கும். அவரை சும்மா விடாது.

சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் சம்மந்தமாக ஒரு பொய் செய்தி வந்தது. உண்மையான டாக்குமெண்டை வெளீயிடும் வரை உங்களப் போல் பலர் பலவிதமான புரளீயைப் பரப்பினார்கள்.

நீங்க என்னவோ ரஜினி குடும்பத்தில் உள்ளவங்க எல்லாம் தரமற்றவர்கள்ணு அவங்க கூட பழகியதுபோல் சொல்லிக்கொண்டு அலைகிறீர்கள். லதாவுக்கு எதிராக குற்றம் சொல்றவன் எல்லாரும் யோக்கியன்னு ஏன் நம்புறீங்கனு தெரியலை. உங்களூக்கு அவர்கள யாருனு தெரியுமா? அவர்கள் தரம் தெரியுமா?? என்ன டீலிங், எழுதப்பட்ட உண்மையான டாகுமென்ட் என்னனு தெரியுமா? அது தெரியாமல் ரஜினி குடும்பத்தார் அனைவரும் 'ப்ராடு"ணு முத்திரை குத்துவது சிந்திக்காமல், தீர விசாரிக்காமல் அரைகுறயாகப் பேசுவது. ஏன் இப்படி இருக்கீங்கனு தெரியலை/??

மறூபடியும் சட்டப்படி லதா தவறேதும் செய்து இருந்தால் சுப்ரீம் கோர்ட் அவரை விடாது. அதுவரை வார்த்தையை அள்ளீ விடாமல் பொறூமை காக்கவும். ஏன் சும்மா இஷ்டத்துக்கு அரைகுற நீதி வழங்குறீங்க???