Tuesday, July 03, 2018

நாட்டு நடப்பு - சின்னச் சின்ன குறிப்புகள் - 6


சென்ற வாரத்தில் காலா படம் பார்த்தோம். 

பிறை இன்று தெரியுமா? தெரியாதா? என்ற குழப்பம் உருவான போது பள்ளி விட்ட விடுமுறை இவர்களுக்கு வசதியாகப் போய்விட்டது. காலை முதல் திட்டமிட்டு என்னை மாலை வரவழைத்து அழைத்துச் சென்றார்கள். 

மாலை 6.15 க்குப் படம் தொடங்கும். நான் மட்டும் 6.10 க்குத்தான் திரையரங்கத்தின் உள்ளே சென்றேன். அப்போது மொத்தமே 30 பேர்கள் தான் இருந்தார்கள். இடைவேளை விடும் போது பார்க்கலாம் என்று காத்திருந்தேன். ஆனால் கடைசி வரைக்கும் 50 பேர்களைத் தாண்டவில்லை. 

காலா படம் வெளியான தினத்தில் சென்னையில் இருந்தேன். மாலைக்குள் சென்ற வேலை அனைத்தும் முடிந்து விட நண்பர் கையில் மூன்று இலவச சீட்டுக்கள் இருந்தன. அழைத்தார். வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். வீட்டில் அம்மையாரின் அதிகபட்ச ஆசையான ரஜினியின் படத்தை ஒவ்வொரு முறையும் திரையரங்கில் சென்று பார்ப்பது என்ற கொள்கையின் காரணமாக என்பதனை நண்பரிடம் சொன்ன போது சிரித்தார். 

இயக்குநர் ரஞ்சித் உடன் நேரிடையாக சந்தித்து பேசியுள்ளேன். திரை உலகில் நான் சந்தித்த மற்றவர்களை ஒப்பிடும் போது ரஞ்சித் எதார்த்தவாதியாக எனக்குத் தெரிந்தார். நான் இந்தத் தளத்தில் இப்படித்தான் இயங்கப் போகின்றேன் என்பதில் தெளிவாகவே இருந்தார். தன் பலத்தையும் பலவீனத்தையும் உணர்ந்தே இருந்தார். 

நெருங்கிய தம்பி ஒருவன் அவர் குழுவில் அவருடன் நெருக்கமான வட்டத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கின்றான். சென்னையில் இருந்த போது அவனுடன் பேசினேன். ஐம்பது சதவிகிதம் மக்கள் கூட (அவருக்கென்று உள்ள ரசிகர் கூட்டம் குறிப்பாகக் குழந்தைகள், விடலைகள்) திரையரங்கம் வரவில்லை. வருகின்ற மாதிரி சூழலும் சாதகமாகத் தெரியவில்லை என்றான். தமிழர்களின் எதிரி என்ற பிம்பம் உருவாக்கப்பட்டு அது ஊதிப் பெருக்கப்பட்டு அது வெற்றியும் அடைந்து விட்டது என்றான். 

ரஜினியின் தோல்வியை விட ரஞ்சித்தின் தோல்வியைக் கொண்டாடத்தான் இங்கே அதிகம் பேர்கள் ஆர்வமாக இருக்கின்றார்கள். இப்போது வெளிப்படையாக மொத்த கோடம்பாக்கமும் ரஞ்சித் வைத்துப் படம் எடுக்கக்கூடாது என்பதனை பலர் வெளிப்படையாகவே எழுதத் தொடங்கி உள்ளனர். 

பிராமணியம் குறித்து எப்போதும் எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள் இடைநிலை சாதிகளின் ஆதிக்கத்தைப் பற்றிப் பேசுவதில்லை. இதன் இரண்டுக்கும் உள்ள நுண் அரசியலைத் தெரிந்து கொண்டவர்களால் மட்டுமே ரஞ்சித் போன்றவர்கள் தன் நிலையைத் தக்க வைத்துக் கொள்ள எந்த அளவுக்குப் பாடுபட வேண்டும் என்பதனை உணர்ந்து கொள்ள முடியும். 

படம் என்கிற வகையில் பார்த்தால் ரஞ்சித் வென்றுள்ளார். ரஜினியும் வென்றுள்ளார். ரஜினியின் படங்களில் நீண்ட நாளைக்குப் பிறகு நடித்துள்ளார் என்கிற வகையில் மிகவும் சிறப்பாகவே உள்ளது. 

கரணம் தப்பினால் இது பிரச்சாரப் படமாக மாறிவிட வாய்ப்பு உள்ளது. ஆனால் அதனையும் தாண்டி வர்த்தரீதியான நிலையில் சரியாகவே தொகுக்கப்பட்டுள்ளது. வசனத்தை ரஞ்சித்துடள் மூன்று பேர்கள் எழுதியுள்ளார்கள். பல இடங்களில் ரஜினி எப்படி இந்தப் படத்தில் நடிக்கச் சம்மதித்தார் என்பதே ஆச்சரியமாக உள்ளது. அந்த அளவுக்கு வசனங்கள் கத்திமுனை போலக் குத்திக் கிழிக்கின்றது. இணை இயக்குநர், துணை இயக்குநர்கள் என்று அதிகமான பேர்களுக்கு அங்கீகாரம் கொடுத்துள்ளார் ரஞ்சித். 

ரஜினி போலவே நடித்த ஒவ்வொருவருக்கும் உரிய அங்கீகாரம் கொடுத்து கதைக்குத் தான் முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள். முக்கியமாக வில்லனாக வந்த நானா பட்கேர் நடிப்பைப் பார்க்கும் வியப்பாக இருநத்து. வேறு எவரையும் இந்த இடத்தில் இவருக்குப் பதிலாக வைத்து நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. கச்சிதமாகப் பொருந்தியுள்ளார். 

ஆச்சரியம் என்னவென்றால் இயக்குநர் ரஞ்சித் க்கு நடிகர்களிடம் கதை சொல்லத் தெரியாது. அவர் தனது திரைக்கதை வடிவத்தை அவர்களிடம் வாசிக்கச் சொல்லி அதன் மூலம் தான் புரியவைப்பாராம். ஆனால் ஒரு இயக்குநராகக் காட்சியமைப்பில் அவர் எந்த அளவுக்கு இந்தப் படத்தில் பணிபுரிந்துள்ளார் என்பதனைப் பார்க்கும் போது நிச்சயமாகத் தமிழகத்தில் கொண்டாடப்பட வேண்டிய கலைஞன் என்பதில் சந்தேகமே இல்லை. 

படத்தின் தொடக்கம் முதல் இறுதிவரைக்கும் அதன் தயாரிப்பு சார்ந்த செலவுகளைத் தான் அதிகம் கவனித்துக் கொண்டு வந்தேன். செய்திகளில் வாசித்ததன் மூலம் முதல் இருபது நாட்கள் மட்டும் தாராவியில் எடுத்துள்ளார்கள். மற்ற நாட்கள் அனைத்து இங்கே அரங்கம் அமைத்து தான் எடுத்துள்ளார்கள். காரணம் பெரும்பாலான காட்சிகளில் ஒவ்வொரு ப்ரேமிலும் குறைந்தபட்சம் நூறு தலைகளாவது தெரிகின்றது. இது தவிரக் காலா வின் குடும்பம் ஒரு பெரிய கூட்டுக்குடும்பம். 

படத்தின் செலவு என்பது (ரஜினிகாந்தின் சம்பளம் அறுபது கோடி என்கிறார்கள். இதன் அடிப்படையில் 150 கோடிக்கு விற்பனையாகி இருக்க வேண்டும் என்று கணக்கீடு செய்தார்கள். ஆனால் தமிழகத்தில் மட்டும் விற்ற 51 கோடியே போணியாகவில்லை) நடித்த நடிகர்களுக்கு வழங்கப்பட்ட ஊதியம் தான் பெரிய தொகையாக உள்ளது. உருவாக்கப்பட்ட தாராவி அரங்கம் என்பது அதுவொரு பெரிய செலவு. 

இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் மட்டுமே பெரிய ஜனத்திரளை வைத்துத் தான் நினைக்கும் அளவிற்குத் தான் நினைத்தபடி எளிதாக விரைவாக வேலை வாங்கக்கூடியவர் என்று பெயர் எடுத்துள்ளார். அவரைப் போலவே இவரும் வென்றுள்ளார். 

கடந்த சில படங்களில் ரஜினிகாந்த் குடும்ப உறுப்பினர்கள் இவரின் ஒவ்வொரு படத்திற்கும் விளம்பரம் மூலம் வரும் வருவாயை நேரிடையாகத் தங்கள் நிர்வாகத்தின் கீழ் எடுத்துக் கொண்டார்கள். காலா மூலம் 50 கோடி ரூபாய் எடுத்துள்ளார்கள். வெளிநாட்டு விற்பனை உரிமையும் பெரிய அளவுக்குப் போணியாகவில்லை. ஈழத் தமிழர்கள் முழுமையாகவே புறக்கணித்து உள்ளதாகத் தெரிகின்றது. 

பாலு மகேந்திரா அறிமுகம் செய்யும் கதாநாயகிகள் மேல் எப்போதும் எனக்குப் பெரிய ஈர்ப்பு உண்டு. ஷோபா, அர்ச்சனா, மௌனிகா தொடங்கி இதில் நடித்துள்ள ஈஸ்வரி ராவ் வரைக்கும். ஒப்பனை தேவைப்படாத அழகி. கடந்த ஏழு வருடங்களாக நடிப்புப் பக்கம் வராமல் குடும்ப வாழ்க்கையில் இருந்த ஈஸ்வரி ராவ் அற்புதமாக ஜொலிக்கின்றார். 

ரஜினி போன்றவர்களை வேலை வாங்குவதே கடினம். சில எல்லைகளைத் தாண்ட முடியாது. ஆனால் ரஞ்சித் தான் விரும்பிய அளவுக்கு ரஜினியை பல எல்லைகளை உடைத்து அவரின் பழைய நடிப்பாற்றலைக் கொண்டு வந்துள்ளார். 

ரஜினியின் தனிப்பட்ட பலவீனங்களைக் கடந்து தமிழகம் அவருக்குக் கொடுத்துள்ள சூப்பர் ஸ்டார் என்ற கௌரவத்தை, கட்சி, மதம், சாதி கடந்து அவருக்கு இருந்த ரசிகர் பட்டாளத்தை அவராகவே கெடுத்துக் கொள்வார் என்று நினைத்தே பார்த்து இருக்க மாட்டார். காலச்சூழல் தூத்துக்குடி போராட்டம் தொடர்பாக அவர் பேசிய பேச்சு கொட்டிக் கவிழ்த்து விட்டது. கடந்த 30 வருட உழைப்பை சில உளறல்கள், பேச்சுகள் ஒரு பெரிய வணிக லாபத்தை உண்டு இல்லை என்று ஆக்கி விட்டது. 

ஆன்மீகத்தை மற்றவர்களை விட இவர் தான் அதிகம் பேசுகின்றார். ஆனால் இவரின் உடல் மொழி பொதுவிடங்களில் அதற்கான தகுதியை, ஆன்மீகம் மூலம் பெறும் அமைதியான சுபாவத்தை இவர் வளர்த்துக் கொள்ளவில்லை என்பதனை அப்பட்டமாக உணர்த்திக் காட்டியது. படத்தில் பேசும் ஏழைப்பங்காளன் வசனத்திற்கும் நிஜவாழ்க்கையில் அப்பட்டமாக எதிராக இருப்பதையும் அவர் அறியாமல் வெளிப்படுத்திய சூழலில் கோமாளி போலவே ஆக்கப்பட்டுள்ளார். 

ரஜினி அடுத்தப் படத்தில் நடிக்க டார்ஜிலிங் சென்று விட்டார். ரஞ்சித் தனது அடுத்த ஹிந்திப்பட வேலையில் இறங்கி விட்டார். நம் மக்கள் இன்னமும் காலா வின் குறியீடுகள் குறித்து எழுதித் தள்ளிக் கொண்டேயிருக்கின்றார்கள். 


16 comments:

Amudhavan said...

ரஜினியின் உயரம் அதிகமானது. அதனால் இன்னமும் இரண்டு படங்கள் தோல்வியடைந்தால்கூடத் தாக்குப் பிடிப்பார். ரஞ்சித் தமது இரண்டாவது பெரிய படத்தை அதுவும் ரஜினியுடன் சேர்ந்து தரும்போது தம்மைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டிய முயற்சிகளைக் கொஞ்சமாவது எடுத்திருக்கலாமே என்று படுகிறது.(நான் காலா பார்க்கவில்லை. பார்ப்பதாகவும் இல்லை)

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

இப்படத்தில் நடிப்பில் முதலிடம் என்ற வகையில் நானா படேகர் அருமை. ரஜினியின் மனைவியாக நடித்துள்ளவர் இரண்டாம் இடம். தன் முதல் மனைவியை கதாநாயகன் நினைவுகூறும் விதம் சிறப்பு. ரஜினிகாந்தின் பிற திரைப்படங்களோடு ஒப்புநோக்கும்போது நான் எதிர்பார்த்த ரஜினியை இப்படத்தில் காணமுடியவில்லை.

நம்பள்கி said...

நலமா அமுதவன்!

நான் தமிழ் படங்கள் பார்ப்பதில்ல்லை--அதாவது ஒரு ஹீரோ-இரண்டு ஹீரோயினி-ஒரு ஹீரோ ஒரு வில்லன் -ஒரு ஹீரோயினி -நாலு சண்டை-மண்டையில் இரும்பு தடியால் பத்து முறை அடித்தாலும் சாகாத ஹீரோ-ஒரு அடியில் ஒன்றரை டன் வெயிட்-ஒரு அடியில் நூறு அடி பறக்கும் கார், வில்லன்கள் இப்படிப்பட்ட படங்களை நான் பார்ப்பதில்லை.

முக்கியமாக, தமிழ் நாட்டின் முன்னணி ஹீரோக்கள் படங்கள் எதையும், ஓசியில், கூட பார்ப்பதில்லை. இப்ப அறிமுகம் இல்லாத நடிக நடிகைகள் இயக்குனர்கள் இயக்கி வரும் சில தமிழ் படங்கள் "மிக மிக" நன்றாகவே உள்ளது.

நிற்க...நான் காலா படம் பார்க்கவில்லை. பார்க்கவும் போவதும் இல்லை.
ஆனால், இந்த படம் பற்றிய செய்திகள் நிறையவே படித்துள்ளேன்...

இந்த படம் ரஞ்சித் and ரஜினி இருவருக்கும் win -win situation. ரஜினி புத்திசாலி! சோ வகையறாக்கள் பண்டார ஜனதா கட்சியிடம் மாட்டிவிட்ட முடிச்சை தூத்துக்குடியில் பாதி அவிழ்த்தார். காலா படத்தில் பண்டார ஜனதா கட்சியை முழுவதும் அவிழ்த்து நிர்வாணமாக்கிவிட்டார்.

ஒரு மனிதனுக்கு எவ்வளவு பணம் புகழ் தேவை--தேவைக்கு மேல் நிறையவே இருக்கு அவரிடம். இந்த வயதில் நிம்மதியாக இருக்க ரஜினியை இந்துத்துவா பண்டார ஜனதா கட்சியியின் income tax டிபார்ட்மென்ட் விடாது. அதனால் காலா விற்கு பிறகு பண்டார ஜனதா கட்சியே அவரை வேண்டாம் என்று சொல்லும். அது தான் அவர் எதிர்பார்த்த win situation.

அப்ப ஆன்மிகம்! ஆன்மீகமாவது புடலங்காயாவது..ஆன்மிகம் என்று பேசினால் எல்லோரும் யோக்கியர்கள். இது ரஜினியின் மற்றும் பாபா ராமதேவ், ஜட்டி வாசுதேவ்,, ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ இப்படி 108 ஸ்ரீ சாமியார் எல்லோருக்கும் ஆன்மிகம் ஒரு வியாபார தந்திரம்...அப்ப ரஞ்சித்?

அவரும் நன்றாக சம்பாதித்து இருப்பார். பணம் எல்லோருக்கும் குறிக்கோளுமில்லை. வாழ்க்கையும் இல்லை. ரஞ்சித் தனது சமுகத்திற்கு ஏதாவது செய்யலாம் என்று இந்த படம் எடுத்திருப்பார். இது ரஞ்சித்திற்கும் win situation.

ரஞ்சித் கொள்கைக்காக வாழும் தைரியமான மனிதனாக பார்க்கிறேன். இந்த படத்தின் மூலம் இருவருக்கும் win -win situation. பண்டார ஜனதா கட்சிக்கும் சோ வகையறாக்களுக்கும் "தோல்வி-தோல்வி" situation.

ரஜினி முட்டளால் அல்ல! அறிவாளியாக இல்லாமல் இருக்கலாம், ஆனால், கட்டாயம் அதி புத்திசாலி. எம்ஜியார், கருணா, சிவாஜி, ஜெஜெ இவர்களுக்கு எல்லாம் கழுவுற மீனில் நழுவற மீனாக இருந்தவர்.

மேலும் ரஜினிக்கு பணம் வேண்டுமா? இருக்கவே இருக்கு இமய மலை, பாபா, பழைய ரஜினி பார்முலா படங்கள்...கூடவே கட்சி ஆரம்பிப்பேன்....அரசியலில் சம்பாதிக்க ஆசைப்படும் விசிலடிச்சான் குஞ்சுகள், விபச்சார ஊடங்கங்கள், முட்டாள் தமிழர்கள், etc , etc

நம்பள்கி said...

அமுதவன்!
வீடு வரை உறவு பாட்டின் புகழுக்கு காரணமே TMS தான்!
என்ற என் இடுகையைப் படித்தீர்களா?

தி.தமிழ் இளங்கோ said...

இந்த தொடர் பதிவில், நான் தொடர்ந்து படிக்காமல் விட்டுப்போன பதிவுகள் முழுவதையும் இன்றுதான் படித்தேன். உங்களுக்கே உரிய வெளிப்படையான விமர்சனம், துணிச்சல் தொடர்ந்து பதிவுகளில் எதிரொலிக்கின்றது. பாராட்டுகள். தொடர்கின்றேன்.

ஜோதிஜி said...

நம் வாழ்வில் பேச முடியா தருணங்கள் ஏராளம் உண்டு. சில சமயம் எழுத்தின் மூலமாக பேச வாய்ப்பு அமைந்து விடுகின்றது.

ஜோதிஜி said...

சரியாகச் சொல்லியிருக்கீங்க.

ஜோதிஜி said...

Sorry, the page you were looking for in this blog does not exist.

என்னங்க எல்லாப் பக்கமும் கதவை சாத்தி வச்சுருக்கீங்க.

ஜோதிஜி said...

அமுதவன் ரஞ்சித் ன் சம்பளம் பத்து கோடி என்கிறார்கள்.

நம்பள்கி said...

இல்லையே! வீடு வரை உறவு பாட்டின் புகழுக்கு காரணமே TMS தான்!--- என்ற பதிவின் கதவு திறந்தே இருக்கு!

ஆதி said...

ஒப்பிட்டளவில் ரஜினி இப்படத்தில் நடீத்து பெரிய செயல்...

கிரி said...

ஜோதிஜி உங்களுக்கு ரஜினி பிடிக்காது என்பது தெரியும் ஆனால், உங்கள் வன்மத்தை வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றுவது போல ரஜினி பிம்பத்தை சிதைக்க படிக்கும் வாசகர்களிடையே முயற்சித்து இருப்பது....

ரஜினியை பிடிக்கலை என்று கூறுபவர்களை நம்பலாம், அவர்கள் வெளிப்படையானவர்கள் ஆனால், நடுநிலை என்ற பெயரில் இரண்டையும் கலந்து எழுதுவது போல தன்னுடைய வெறுப்பை வாசகர்களிடையே அவர்கள் அறியாமலே கொண்டு செல்பவர்கள்..

இதில் கூறிய அனைத்துக்கும் பதில் அளிக்க முடியும் ஆனால், என்ன பயன்.

ஒன்றும் சொல்வதற்கு இல்லை. வாழ்க வளமுடன்.

வருண் said...

கிரி, இவர் ரஜினி உடல்நிலை சரியில்லாமல் இருந்து குணமடைந்து வந்ததை என்ன வக்கிரமா எழுதி இருந்தார் தெரியுமா? கொஞ்சம்கூட மனிதாபிமானமே இல்லாமல் எழுதியிருந்தார்

அதனால்தானோ என்னவோ இவர் நண்பர்கள் எல்லாம் அல்ப ஆயிசுல போயிட்டு இருக்காங்க!

பிறற்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தானே வரும்னு சொல்வதுபோல்.

இந்த கமலஹாசன் விசிறீ எல்லாருமே ரஜினி படத்துக்குப் போயி எத்தனை பேரு இருந்தாங்கனு எண்ணீ கணக்கு சொல்ல வேண்யதே வேலையாப்போச்சு! இவரைப் போலவே முத்துக்கு கூட்டமில்லை, தளபதிக்கு கூட்டமில்லை, சிவாஜிக்கு கூட்டமில்லை சொன்ன ஆயிரம் பேர் பார்த்து இருக்கேன். இவரு ஆயிரத்தில் ஒண்ணூ.

படம் தோல்வினு இவருக்கு எப்படித் தெரியும்னு தெரியல?

படத் தயாரிப்பாளரே சொல்றார், இந்தப் படத்தால் எனக்கு வருமானம்தான் என்றூ. இவரு, வினவு, அப்புறம் வீடு திரும்பல்னு சொல்லிக்கொண்டு அலையும் வன்னிய வீரர் ஒருவர் எல்லாருமா படம் தோல்வினு பொய் பிரச்சாரம் பன்ணீக்கொண்டு அலைகிறார்கள். ஆனால் படம் நல்லாயிருக்காம்!

ஒரு படம் தோல்வி என்றால் லிங்குசாமிபோல் உத்தமவில்லன் படம் கமலை வச்சு படம் எடுத்து ஆண்டியாகனும். அதுதான் தோல்வி.

தயாரிபாளர் என்ன சொல்றார்னு பார்ப்போம்


Wunderbar Films
‏Verified account @wunderbarfilms
16h16 hours ago

We would like to dispel rumours run in few articles on #Kaala. Contrary to it, #Kaala is a successful and profitable project for Wunderbar Films and we thank Superstar for the opportunity given to us. We also thank the audience for the positive response given to the film.

மேலும் இந்தப்படம் லிங்காபோல் தியேட்டர் ஓனரிடம் பெரிய தொகை வாங்கி விற்கப்படவில்லை. சின்ன சின்ன விநியோகஸ்தரும் இல்லை. அவகளூக்கு ஒரு கமிஷன் அவ்ளோதான். படம் நல்லாப் போனாலும் போகாட்டாலும் அவர்களூக்கு நஷ்டம் கிடையாது. அதனால் எல்லாமே தயாரிப்பாளர் தலையில்தான் விழும்.

படம் தரமா இருக்கு என்பதால் படத்தை குற சொல்ல வழியில்லை. ரஜினி நடிப்பைப் பத்தி எதுவும் சொல்ல வழியில்லை. உடனே படம் தோல்வினு எந்தவிதமான ஆதாரமும் இல்லாமல் சொல்ல வேண்டியது.

ரஜினி எப்படி இந்தப் படத்தில் நடித்தார்?ணு இவருக்கு ஆச்சர்யமாம்!!!!

ரஜினி என்ன ப்ளாட்ல நடிக்கணூனு ரஜினிக்குத் தெரியும். இவரிடன் ரஜினி அறீவுரை கேக்கனுமா என்ன/?

போராட்டம் தேவையில்லைனு சொன்னது ரியல் வாழ்க்கையில். அரசியல் நிலைப்பாடு அதே, ஆன்மீக அரசியல் என்பதால். போராட்டம் வருவது சினிமாவில். சினிமாவை அரசியல்க்கு பயன்படுத்தணூம் என்கிற அவசியல் இல்லை. அப்படி சினிமாவை அரசியலுக்கு பயன்படுத்தணூம்னு இவர் நினைத்தால் இவர்தான் கோமாளீ.

சினிமால ஒருத்தன் போராட்டம் செய்தால், ரியல் லைஃப்லயும் அடிதடியை தூண்டிவிடனும்னு எவன் சொன்னான்னு தெரியலை இவருக்கு. சினிமாவுக்கு ரியல் லைஃப்க்கும் இருக்கு நெஜமாவே வித்தியாசம் தெரியாதா என்ன???

படம் நல்லா இருந்தால்..இப்படி ஏதாவது கூட்டமில்லை, தோல்வினு பொய் பிரச்சாரம் செய்ய வேண்டியது.

படம் மசாலாத்தனமா இருந்தால், இதென்ன படம்? உக்கார முடியல ணு சொல்ல வேண்டியது!

இவருக்கென்ன தெரியும் படத்துக்கு எவ்ளோ செலவு, திரும்பி வந்தது எவ்ளோனு?

சரி, செல்வழிச்ச தனுசுக்குத் தெரியுமா இவருக்கு தெரியுமா?

யு எஸ் ல 2.3 மில்லியன் வசூல். ஹிந்தி, தெலுகு கலக்சன் இது 10% கூட கிடையாது. தமிழர்கள் பார்க்கலைனா யாரு பார்த்தா?

சக/சம நடிகர் படம், பாவனாசம், தூங்காவனம், உத்தமவில்லன் இந்த மூனு படத்தோட மொத்த யு எஸ் கலக்சன், 1.5 மில்லியன் கூட கிடையாது. அந்தப் படங்கள் எல்லாம் தோல்வினு எங்கேயாவது சொல்லியிருக்காரா?

230 கோடி கலக்சனான படம் தோல்வினா.. இந்தப்படங்கள் எல்லாம் என்ன வகை???
ஈழத்தமிழர்கள் புறகணீத்தார்கல் என்றால் ஆஸ்திரேலியாவில் எப்படி மிகப்பெரிய ஓப்பனிங் பெரும்?

ஏன் யு கே லயும் தூங்காவனம் பாவனாசம் உத்தமவில்லன் கலக்சனைவிட திகம்தான்.

கபாலி ஹைப் இந்தப் படத்துக்கு இல்லை, கபாலி ஹைப்பால் ஏமாந்த மக்கள் இப்படத்தை பார்க்கவில்லை. படம் சுமாரான கலசனுக்கு முக்கியக்காரணம் அதுதான். ஆந்திரா, கேரளா, ஹிந்தி எல்லா பிற மொழிகளீலும் கபாலியைவிட பாதி கலக்சனே பெற்றது காலா. அவர்கள் என்ன தமிழர்களா? அவர்கள் ஏன் கபாலியைப் போல் பார்க்கவில்லை??

இந்தப்படம், பிர்மாண்மாக எடுக்கப்பட்டுள்ள படம். மேலும் இத் ஒரு க்ளாசிக் என்பதை காலம் உணர்த்தும்.




ஜோதிஜி said...

கிரி வருண் உங்கள் இருவருக்கும்

நீங்கள் இருவரும் ரஜினியை ஒரு பிம்பம் போல பாக்குறீங்க. அதற்கு உங்களுக்கு ஏதோவொரு காரணம். அப்புறம் நான் யாருக்கும் தீவிர ரசிகன் தொண்டர் எதுவும் இல்லை. சமூகத்தில் சாதாரண மனிதர்களை விட அரசியல் திரைப்படம் தொழில் மூன்று துறைகளிலும் உள்ள சமூகம் ஒவ்வொரு நிமிடமும் கவனிக்கும் மனிதர்களை அவர்களின் நிறை குறைகளைச் சேர்த்தே நான் பார்க்கின்றேன். கவனிக்கின்றேன். அதையே அப்படியே எழுதவும் செய்கின்றேன். அது படிப்பவர்களின் பார்வையில் தவறாக இருக்கலாம். இது என் பார்வை. அவ்வளவு தான். நான் அடுத்தவரை திருப்தி படுத்த வேண்டும் அவசியம் எனக்கில்லை. என் பார்வையை ஒளிவு மறைவின்றி எழுதத்தான் என் இடம் எனக்கு உதவும். அப்புறம் எனக்குத் தனிப்பட்ட முறையில் ரொம்பவே பிடித்து இருந்தது. அதையும் சுட்டிக்காட்டியிருக்கின்றேன். ஆனால் ரஜினியின் அரசியல் ஆசை, அவரின் நிலைப்பாடு, அவர் அவரின் குடும்ப உறுப்பினர்கள் உருவாக்கிக் கொண்டிருக்கும் தடுமாற்ற செயல்பாடுகள் போன்றவைகளைத்தான் நான் விமர்சனமாக எடுத்து வைக்கின்றேன். நீங்கள் இருவரும் வெளியே இருந்து திரைப்பட உலகத்தை திரைப்படத்தில் உள்ளவர்களைப் பார்க்கின்றேன். எனக்கு உள்ளும் புறமும் பார்க்கும் வாய்ப்புள்ளது. நிறைய நண்பர்கள் உள்ளார்கள். எல்லாவற்றையும் கணக்கில் வைத்து தான் நான் எழுத முடியும்.

ஜோதிஜி said...

Wunderbar Films
‏Verified account @wunderbarfilms
16h16 hours ago

We would like to dispel rumours run in few articles on #Kaala. Contrary to it, #Kaala is a successful and profitable project for Wunderbar Films and we thank Superstar for the opportunity given to us. We also thank the audience for the positive response given to the film.

எந்த தயாரிப்பாளராவது என் படம் வெற்றியடைந்துள்ளது. இவ்வளவு லாபம் என்று வெளிப்படையாக அந்த கணக்கு வழக்குகளை அப்பட்டமாக வெளியிட்டு பார்த்து இருக்கீங்களா? நீங்க இவ்வளவு அப்பாவியாக இருப்பீங்கன்னு நினைக்கவே இல்லை. கோசல்ராம் ங்ற ஒருத்தர் காலா வசூல் பற்றி ஒரு காணொளி காட்சி பேசி வெளியிட்டு இருந்தார். இப்ப என்னால அதைக் கண்டு பிடிக்க முடியல. (அவர் குமுதம் இதழில் ஏற்கனவே பணியாற்றியவர்) அது தான் நான் கேள்விப்பட்டதை மிகச் சரியாக புள்ளி விபரக் கணக்கோடு சொல்லியிருந்தார்.

ஜோதிஜி said...

அதனால்தானோ என்னவோ இவர் நண்பர்கள் எல்லாம் அல்ப ஆயிசுல போயிட்டு இருக்காங்க!

யாரு வருண் அந்த என்னுடைய நண்பர்கள் அல்ப ஆயுளில் சென்றவர்கள்? ச்சும்மா தெரிந்து கொள்வதற்காக?