Saturday, December 31, 2016

2016 -- தலைமைக் கொள்ளைக்காரன்


ந்த வருடமும் இல்லாத அளவிற்குப் புதிய புதிய சம்பவங்கள் 2016 ஆம் ஆண்டு நடந்தது. எப்போதும் போல ஏற்றமும் வீழ்ச்சியும் கலந்தே வரவேற்றது. "கற்றதும் பெற்றதும்" ஏராளம். ஆனால் நான் நினைத்தே பார்த்திராத பல விசயங்களை, குடும்பம், தொழில், சமூகம் உருவாக்கிய பாதிப்புகளை வருடத்தின் இறுதி நாட்களில் எழுதி வைக்க விரும்புகிறேன். 

னது எட்டாவது மின் நூல் (பழைய குப்பைகள்) நாளை வெளிவருகின்றது. இதுவொரு சுய அலசல். இந்தப் புத்தகம் பதிவில் தொடர்ந்து எழுதி வந்த விசயமாக இருந்தாலும் மொத்தமாகக் கோர்த்துப் பார்த்தபோது என்னை நானே உணர்ந்து கொள்ள முடிந்தது. ஏற்கனவே வெளியிட்ட ஏழு மின் நூல்களும் 1,70,000 பேர்களைச் சென்றடைந்துள்ளது என்பது முதல் ஆச்சரியம். இன்று வரையிலும் யாரோ ஒருவர் வாசித்த மின் நூல் குறித்து மின் அஞ்சல் வழியாக அவர்களின் விமர்சனத்தை எழுதி அனுப்பியபடி தான் இருக்கின்றார்கள். படிக்க ஆள் இருக்கின்றார்கள் என்ற நம்பிக்கையில் தான் இந்த மின் நூலை உருவாக்க எண்ணம் உருவானது. 

ந்த வருடம் வாசித்த புத்தகங்களில் முக்கியமான இரண்டு புத்தகங்கள். ஒன்று. எழுத்தாளரும் நண்பர் என்ற சொல்லுக்கு அப்பாற்பட்டு என்னுடன் நெருக்கம் பாராட்டும் அமுதவன் எழுதிய சிவகுமார் என்னும் மானுடன். இவர் மூலம் தான் நடிகர் சிவகுமார் அவர்களின் தொடர்பும் கிடைத்தது. இரண்டு. நண்பர் ரவி எழுதிய வெட்டிக்காடு. இந்த இரண்டும் எனக்குள் உருவாக்கிய தாக்கத்தின் விளைவே "பழைய குப்பைகள்". இந்த மின் நூல் யாருக்குப் பயன்படுகின்றதோ இல்லையே என் குழந்தைகள் மற்றும் பேரன் பேத்திகளுக்கு என்னைப் பற்றிப் புரிந்து கொள்ள உதவும். 
திவில் எழுதுகின்ற நம் எழுத்து குறித்து நமக்கு நாமே எத்தனை முன்னேற்றம் கண்டுள்ளோம்? என்று நமக்கு நாமே சமாதானம் சொல்லிக் கொண்டாலும் நெருங்கிய நண்பர்கள் சொல்லும் சில விமர்சனங்கள். 

தொடர்பற்று இருக்கின்றது. அலைபாய்கின்றது. ஒரே விசயம் திரும்பத் திரும்ப வருகின்றது. கூர்மை இல்லை. ஆணித்தரம் விட்டுப் போகின்றது முடிக்கும் போது தெளிவு இல்லை போன்ற பல விமர்சனங்களை எடுத்துக் கொள்ள வேண்டியதாக உள்ளது. இது உண்மையும் கூட. எதனையும் கற்றுக் கொண்டால் குற்றமில்லை.

தொடக்கத்தில் எழுதும் போது பிழை திருத்த நேரம் இல்லாமல் அப்படியே வெளியிட்டு வந்தேன். இப்போது நீச்சல்காரன் உதவியினால் சந்திப்பிழை, வாணி பிழைதிருத்தி மூலம் அதனைச் சரி செய்ய முடிந்தது. மற்றபடி அன்றைய தின தாக்கத்தை அப்படியே வரும் வேகத்தில் எழுதி முடிக்கும் போது அதனை ஆராய்ந்து வெட்டி ஒட்டி மாற்றப் பொறுமை இருப்பதில்லை. சமீபத்தில் எழுதிய ஜெ. பதிவுகள் கூட நண்பர் சிவா தான் செப்பினிட்டுக் கொடுத்தார். ஒவ்வொரு முறையும் ஒருவரை தேடிக் கொண்டிருக்க முடியாது. ஆனால் எழுத்தே தொழிலாக மாறும் காலம் வரும் போது உள்ளே நுழைந்து அதனுடன் வாழும் போது இந்தக் குறைபாடுகளை நீக்க வழி கிடைக்கும் என்று நம்புகிறேன். 

"பழைய குப்பைகள்" மின் நூலை நெருங்கிய வட்டத்திற்குள் இருக்கும் நண்பர்களுக்கு அனுப்பி அது குறித்த அவர்களின் எண்ணங்களைக் கேட்டு வாங்கியுள்ளேன். நிச்சயம் படிப்படியாக ஒவ்வொன்றாக நேரம் கிடைக்கும் போது வெளியிடுவேன். நண்பர்கள் பொருத்தருள்க. என் குறைகளையும் தாண்டி எழுத்துலகில் என்னையும் நேசிக்க நிறைய நண்பர்கள் இருக்கின்றார்கள். ஒவ்வொருவரின் விமர்சனங்களையும் வாசித்த போது என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. எனக்குக் கிடைத்த அங்கீகாரமாகக் கருதுகிறேன். 

குழந்தைகள் பதின்ம வயதிற்குள் நுழைந்துள்ளார்கள். அவர்களின் முதல் பத்து வயதிற்குள் நடந்த சம்பவங்களைத் தொடர்ந்து பதிவாக மாற்றி எழுதியுள்ளேன். கடந்த சில வருடங்கள் அதிகம் எழுதவில்லை. இதுவரையில் 700 பதிவுகள் எழுதியுள்ளேன். ஆரோக்கியத்துடன் 1000 பதிவுகள் எழுதிவிட வேண்டும் என்ற எண்ணமுண்டு. இனியும் சில காலம் அதிகம் எழுத முடியாத சூழ்நிலையில் இருப்பதால் குழந்தைகளை அதிகம் கவனித்து வருகிறேன். 

வர்களின் மாறிய நடவடிக்கைகள், தலைமுறை இடைவெளியை உருவாக்க நினைக்கும் அவர்களின் செயல்பாடுகள், கவனச் சிதறலின் காரணங்கள், சம காலக் கல்வி அவர்களைச் சிதைக்கும் காரணிகள், தகுதியில்லாத ஆசிரியர்களால் அவர்கள் இழக்கும் பொக்கிஷங்கள் என்று ஏராளம் உண்டு. 

ந்த வருடம் எனக்குப் புதிதாக அறிமுகமான தமிழ் திரைப்படத்துறை பல பாடங்களை, அனுபவங்களைத் தந்தது. இந்தச் சமயத்தில் அதனைப் பற்றி எழுதுவது சரியாக இருக்காது என்பதால் சமயம் வரும் போது விரிவாக எழுதும் எண்ணம் உண்டு. ஆறு மாதங்கள் அதற்குள் இருந்த போதிலும் பல ஆண்டுகள் இருந்த அனுபவங்கள் கிடைத்தது. பத்தாண்டுகளாக ஊடகத்துறை, திரைப்படத்துறையைக் கவனித்து வருபவன் என்ற முறையில் நடந்த எதுவும் எனக்கு ஆச்சரியமளிக்கவில்லை.

ம்பிக்கைத் துரோகம், பணம் படுத்தும் பாடு, விட்டில் பூச்சிகள் போன்ற தலைப்புக்கு பயன்படுத்தும் வார்த்தைகள் மூலமே பலருக்கும் புரிய வைக்க முடியும்.  நண்பர் எனக்குச் சொன்ன ஒரு அறிவுரை இப்போது நினைவுக்கு வருகின்றது.  "பணம் போட்டவரை மதிக்காத தொழில் ஒன்று உண்டு என்றால் அது திரைப்படத்துறை மட்டுமே" என்றார். அவர் ஒரு தீர்க்கதரிசி.  அவரும் இதை வாசித்துக் கொண்டிருப்பார். 

ஜெ. மறைவு எனக்கு ஆச்சரியமளிக்கவில்லை. தமிழ்நாடு என்ற மாநிலத்தின் "தலைமைச் செயலாளர்" என்ற மொத்த அதிகாரம் கொண்ட பதவியைத் "தலைமைக் கொள்ளைக்காரன்" என்கிற ரீதியில் இருந்த ராம் மோகன் ராவ் தொடங்கி நாள் தோறும் ஒவ்வொரு பத்திரிக்கையிலும் வந்து கொண்டிருக்கும் செய்திகளை வாசித்துக் கொண்டே வரும் போது மனதில் உருவாகும் வார்த்தைகளைப் பதிவுகளாக மாற்ற தற்போது நேரமில்லை என்ற வருத்தம் மேலோங்குகின்றது. 

காரணம் அடுத்தடுத்து தொடர் பயணங்கள் என்று நகர்ந்து கொண்டே இருப்பதால் எப்போதும் போல இணையத்தை விட்டு சில காலம் வெளியே இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. நிச்சயம் இது போன்ற விசயங்களை ஆவணப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்குண்டு. காரணம் சமகாலத்தில் அங்கங்கே சிதறிக் கிடக்கும் விசயங்களை மேலோட்டமாக வாசித்து விட்டு "எல்லாருமே திருடனுங்க தான்" என்கிற ஒற்றை வாக்கியத்தில் கடந்து சமூகக் கூட்டத்திற்கு ஊழல் என்பது ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகவே மாறிவிட்டது. 

ஜெயலலிதா என்ற பெண்மணி ஆட்சிப் பொறுப்புக்கு வந்தது முதல் இன்று வரையிலும் எத்தனை லட்சம் கோடி கொள்ளையடிக்கப்பட்டது என்பதனைக் கூட எவராலும் அறுதியிட்டு கூற முடியாத அளவிற்கு ஊழல் என்பது எல்லையெல்லாம் கடந்து மீறி விட்டது. காயங்களைக் கூட மறந்துவிடலாம். ஆனால் தழும்பு மாறாது. 

தன் காரணமாகவே ஜெயலலிதா பதிவை விளக்கமாக எழுதி வைத்தேன். ஒரு வேளை இன்னும் நான்கு வருடங்கள் ஜெயலலிதா ஆட்சியில் இருந்திருந்தால் தமிழ்நாடு என்ற மாநிலமே பட்டா போட்டு இந்தக் கொள்ளைக்கூட்டம் மற்ற மாநிலத்திடம் விற்று இருக்கக்கூடும். இயற்கை விதி மாறாதது. கழிப்பதும் சேர்ப்பதும் அதன் அடிப்படை. 

னால் தமிழ்நாட்டில் மாநில ஆளுநர் என்ற பெயரில் அலங்கோல கூத்து நடத்தி விட்டுச் சென்ற பீஷ்மநாராயணன் சிங், பாத்திமா பீவி, ரோசையா போன்றவர்களை எவரும் கண்டு கொள்ளவே இல்லை என்ற வருத்தம் எனக்குண்டு. 

வ்வொரு துறையிலும் "திறமை இல்லாதவர்கள்" என்ற நிலையில் பலரையும் பார்க்க முடியும். ஆனால் இந்த வருடம் "நாங்கள் எங்கள் திறமையை வளர்த்துக் கொள்ளவே மாட்டோம்" என்கிற ரீதியில் நான் பார்த்த பலரும் எனக்கு ஆச்சரியமளித்தார்கள். அதனை விடத் தனக்கு என்ன தேவை? என்பதில் எந்த அளவுக்குக் கண்ணும் கருத்துமாக இருந்து தங்கள் சுயபாதுகாப்பை காப்பாற்றிக் கொள்கின்றார்கள் என்பதனைப் பார்த்த போது "நான் ஒரு முட்டாளுங்க" என்ற பழைய பாடல் நினைவுக்கு வந்தது. 

சாதகமற்ற சூழ்நிலை ஏன் நம்மை நோக்கி வருகின்றது என்று கேள்வியைக் கேட்டுக் கொண்டால் அதற்கு முக்கியக் காரணம் நம்முடைய நேர்மையாக அணுகுமுறை என்று தான் சொல்லத் தோன்றுகின்றது. 

குறுகிய மனமும், கொடூர குணமும் இயல்பான வாழ்க்கையாக மாற்றிக் கொண்டவர்களைப் பார்க்கும் போது பல பதிவுகள் எழுதும் அளவிற்குப் பல சம்பவங்கள் மனதில் வந்து போகின்றது. "வாழ முடியும் ஆனால் வளரமுடியாது" என்று தெரிந்த போதிலும் இது தான் வாழ்க்கை என்று ஒரு பெருங்கூட்டமே இப்படித்தான் இங்கே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். "பணத்திற்கு அப்பாலும்  இங்கே பல மகிழ்ச்சிகளும் உண்டு" என்பதனை எவருமே ஏற்றுக் கொள்ளத் தயாராகவே இல்லை என்பது தான் வருத்தப்படும் செய்தியாக உள்ளது. 

"ராஜதந்திரங்களை நான் கரைத்துக் குடித்தவன்"  என்ற போர்வையில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் கடைசியில் பலியாவது ஆரோக்கியம் சார்ந்த விசயங்களில் என்பதனை இந்த வருடம் அதிகம் பார்த்தேன். உடலை பாராமாகச் சுமந்து வாழ்பவர்கள் அநேகம் பேர்கள். ரசிக்க, ருசிக்க இவ்வுலகில் உள்ள அனைத்தும் அவர்களுக்குக் கசப்பாக இருக்கின்றது. 

வர்களின் எண்ணங்கள் அனைத்தும் மற்றவர்களின் வாழ்க்கையை தாக்குகின்றதோ இல்லையோ அவசியம் அவர்களின் ஏதோவொரு உடல் உறுப்பை உள்ளும் புறமும் தாக்கிக் கொண்டேயிருக்கின்றது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றை இழந்து வேறு ஏதோவொன்றைப் பெற்று நாங்கள் பொருளாதார ரீதியாக வெற்றிகரமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்கிறார்கள். பாவப்பட்டுப் பாரம் சுமப்பவர்களைக் கடைசியில் அவர்கள் சேர்க்கும் பணம் காப்பாற்றுமா? என்று யோசித்ததுண்டு. 

ங்களின் விடமுடியாத கொள்கைகள் காலப்போக்கில் கேள்வியாக மாறி கேலி செய்யும். மனைவியும், குழந்தைகளும் கேட்கும் கேள்விகள் அனைத்தும் உங்களின் அடிப்படை சித்தாந்த அஸ்திவாரத்தை ஆட்டம் காணவைக்கும். உறவுக்கூட்டம் உறங்க விடாமல் தவிக்கவிடும். மொத்தத்தில் “பொருள் இல்லாதவருக்கு இவ்வுலகம் இல்லை” என்பதனை மொத்த உலகமும் உங்களுக்கு கற்றுக் கொடுக்கும். 

வாழ்க்கையில் எனக்கு உருவாகும் சோர்வினை எழுத்துலகம் மூலமாக ஒவ்வொரு முறையும் கழுவி துடைத்துக் கொள்கிறேன். இதுவே காயங்களுக்கு மருந்து போடுவது போல உள்ளது. 

75 வயதுக்குண்டான அனுபவங்கள் எனக்குக் கிடைத்த காரணத்தினால் பழைய குப்பைகள் என்ற மின் நூலைப் படிக்கும் உங்களுக்கு உண்மையான பரவத்தைத் தரும் என்றே நம்புகிறேன். 

ணம் என்ற ஒற்றைச்சொல் உங்களின் இறுதிப் பயணம் வரைக்கும் படாய்படுத்தும். ஆனால் அதற்கு உங்களின் ஆரோக்கியம் என்பதனை விலையாக வைக்க வேண்டும் என்பதனை உணர்ந்தவர்கள் என்னைப் போல “ருசியான வாழ்க்கை” வாழத் தெரிந்தவர்கள். அளவான பணம் மூலம் நீங்கள் வாழ முடியும். ஆனால் அளவற்ற பணமென்பது எதனையும் ஆள முடியும் என்றாலும் முழுமையாக வாழ முடியுமா? என்று கேட்டுக் கொள்பவனின் காலடித் தடமிது. 

"கொள்கை ஏதும் தேவையில்லை. பொருளாதார ரீதியாக பெற்ற உயர்வே வாழ்வின் அங்கீகாரம். இறுக்கமாக எப்போதும் இருந்து விடு. எதனையும் எப்போதும் பகிர்ந்து கொள்ளாதே. இதனையே வாழ்வின் தத்துவமாக கொண்டு விடு" என்ற மாறாத பாடங்களை  புதிய சமூகம்  கற்றுக் கொடுக்கும் பாடத்தில் இன்று வரையிலும் சராசரி மதிப்பெண்கள் வாங்க முடியாமல் வாழ்ந்தால் நீங்களும் என் தோழனே?

"இப்படித்தான் வாழ வேண்டும்" என்ற கொள்கை கொண்டவனின் வாழ்க்கையை உலகம் ஏற்றுக் கொள்ளாமல் ஏளனப்படுத்தும் என்பது எத்தனை உண்மையோ அந்த அளவுக்குப் பிடிவாதமாக "இப்படியே வாழ்ந்து பார்த்து விட்டால் என்ன?" என்ற கேள்வியோடு ஒவ்வொரு நிகழ்வினையும் ரசனையோடு சுற்றியுள்ள சமூகப் பார்வையை பொருப்படுத்தாமல் என் பயணம் சோர்வின்றி இன்று வரையிலும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. 


வ்வொரு காலகட்டத்திலும் நானே உருவாக்கிக் கொண்ட காயங்களைக் கடந்த ஏழு ஆண்டுகளாக எழுத்து வழியாக மருந்திட்டு வந்துள்ளேன். தொழில் வாழ்க்கையில் உருவாகும் போட்டிகள் அதன் மூலம் உருவான எதிரிகள் என் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு காரணமாக இருந்துள்ளார்கள். இன்றைய என் ஆரோக்கியத்திற்கும் வளர்ச்சிக்கும் முக்கிய காரணம் இதுவே. என் "வாழ்நாள் கனவு" சாத்தியக்கூறின் முதல் படியில் காலடித்தடம் பதிக்கும் ஆண்டாக இந்த வருடம் முடிவுக்கு வந்துள்ளது.

வ்வொரு சமயத்திலும் நான் கண்ட, அனுபவித்த, சந்தித்த நிகழ்வினை அதன் வெளிப்படைத் தன்மையை எல்லா இடங்களிலும் நீக்கமற விதைத்து வந்து உள்ளேன். எந்த சமயத்திலும் என் எண்ணங்களை மாற்றிக் கொண்டதே இல்லை. என்னுள் பகிர்ந்து கொள்ள வேண்டிய அனுபவங்கள் இருக்கும் வரையிலும் இந்த எழுத்துலகத்தில் என் தடம் மாறாமல் தொடர்ந்து கொண்டேயிருக்கும் என்றே நம்புகின்றேன். 

த்திய அரசாங்கம் ஏன் சமஸ்கிருத திணிப்பை நடத்துகின்றது என்று விபரம் தெரிந்தவர்கள் புலம்புகின்றார்கள். இந்த வருடம் நான் சந்தித்த 90 சதவிகித குழந்தைகளின் பெயர்கள் அனைத்தும் சமஸ்கிருதம் கலந்ததாகவே இருந்தது. அதனைத்தான் பெற்றோர்கள் விரும்புகின்றார்கள் என்பது முதல் ஆச்சரியம். ஒவ்வொரு கணினி வேலைகள் சார்ந்த கடைகளில் ஜாதகம் என்பது வளம் கொழிக்கும் தொழிலாக உள்ளது. தெய்வ நம்பிக்கை என்பது கொடுக்கல் வாங்கல் போல மாறியுள்ளது. 

ந்த வருடம் ஏற்காடு சென்றோம். ஏன் சென்றோம்? என்கிற அளவிற்கு இருந்தது. தமிழ்நாடு அரசாங்கம் மட்டும் சுற்றுலாத்துறை மற்றும் அறநிலைத்துறையை மட்டும் சரியான அதிகாரிகள் வசம் ஒப்படைத்தால் வருட நிதிநிலை தொகையில் பாதி வருமானத்தை இந்த இரண்டு துறைகளில் இருந்து எடுக்க முடியும். ஆனால் செய்ய மாட்டார்கள். காரணம் இதனை வைத்து சம்பாரித்துக் கொண்டிருப்பவர்கள் வாயில் மண்ணு விழுந்துவிடுமே?

500,1000 ரூபாய் நோட்டு செல்லாது என்று பிரதமர் மோடி நவம்பர் எட்டாம் தேதி மாலை அறிவித்த அந்த நிமிடம் முதல் எழுதும் இந்த நேரம் வரைக்கும் எனக்கு என் குடும்பத்திற்கு எந்தப் பிரச்சனையும் உருவாகவில்லை. காரணம் என்னிடம் உள்ள ஒரு பெரிய கெட்ட பழக்கம் இந்தச் சமயத்தில் உதவியது. வீட்டில் வைத்திருக்கும் எந்தப் பெரிய தொகை என்றாலும் முதல் வேளையாக அதை உடைப்பது என் வாடிக்கை. மனைவி உடைக்காமல் காவல் காத்துக் கொண்டிருப்பார். நான் அவருக்கே தெரியாமல் உடைத்துப் புத்தகங்கள் வாங்கி வந்து விடுவதுண்டு. அப்படிச் சேர்த்த ரூபாய்கள் உதவியது. 

அதற்கு மேலாகத் திட்டமிட்ட வாழ்க்கையில் அதிகப்படியான செலவீனங்கள் இருக்க வாய்ப்பில்லை. தகுதிக்கு மீறிய ஆசைகள் இல்லை என்பதோடு திருப்பூரைப் பொறுத்தவரையிலும் தனியார் வங்கிகள் சிறப்பாகவே செயல்பட்டன. 

டந்த ஒரு மாதத்தில் ஏறக்குறைய 2000 கிலோ மீட்டர் பயணம் செய்துள்ளேன். அடித்தட்டு மக்கள், அன்றாடம் வியாபாரம் செய்து பிழைப்பை நடத்த வேண்டிய மக்கள், வங்கி என்றால் தெரியாமல் வாழ்ந்த மக்கள் என்று அத்தனை பேர்களும் மொத்தமாக நடைப்பிணமாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்பதும் உண்மை. இனி அவர்களால் இழந்த இழப்பைச் சரி செய்ய முடியுமா? என்ற பெரிய கேள்வி உருவானது. வீட்டுக்குக் காய், பழம், மற்ற பொருட்கள் கொண்டு வரும் பெண்களின் வாழ்க்கை சோகங்களைக் கேட்ட போது அழ முடியாத சோகமாக இருந்தது. 

வ்வொரு சமயத்திலும் யாரோ சிலரின் நலனுக்காக அவ்வப்போது உருவாக்கப்படும் போரினால் லட்சணக்கான அப்பாவிகள் எப்படிக் கொல்லப்படுகின்றார்கள் என்பதனை நேரிடையாகப் பார்க்கும் வாய்ப்பை 2016 பண மதிப்பு இழப்பு காட்டியுள்ளது. இதன் விளைவுகள் இன்னமும் எப்படியிருக்குமோ? என்று அச்சப்பட வேண்டியதாக உள்ளது. அரசாங்க கொள்கைகள் ஆமை வேகத்தில் உள்ளது. பாதிக்கப்படுவர்களின் வாழ்க்கை சுனாமி கோரத்தை விடக் கொடுமையாக உள்ளது. 

ந்தச் சமயத்திலும் முயற்சிகளையும் தொடர்ந்து கற்றுக் கொள்ள வேண்டிய பயிற்சிகளை நான் விட்டு விடுவதே இல்லை. தன்னம்பிக்கை என்பது மற்றொரு கை போல உள்ளதால் ஒவ்வொரு நிகழ்வும் அடுத்தக் கட்ட வளர்ச்சிக்கு உதவக்கூடியதாகவே இருந்து உள்ளது. காரணம் தற்போதைய சூழ்நிலையில் எங்கிருந்து? எப்போது? நமக்கான வாய்ப்பு வரும்? என்பதனை அறுதியிட்டுக் கூறமுடியாது. அப்படியான முயற்சிகள் பலிதமாகும் போது எப்போது போல நான் நினைத்துக் கொள்வது "வாழ்ந்து காட்டுவதை விடப் பழிவாங்குதல் வேறொன்றுமில்லை."

பழைய வருட டைரிக்குறிப்புகள் வாசிக்க



25 comments:

தாராபுரத்தான் said...

அலசல் அருமை.

தாராபுரத்தான் said...

அலசல் அருமை.

Imayavaramban said...

அருமை! அருமையிலும் அருமை!! வார்த்தைகள் ஒவ்வொன்றும் மனதின் ஆழத்திலிருந்து வெளிப்பட்டவை! வாழ்த்து க்கள்! புத்தாண்டு வாழ்த்துக்கள்!

திண்டுக்கல் தனபாலன் said...

அடுத்த வருடம் மேலும் சிறப்பாக அமைய எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்....

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

நுணுக்கமாக அதேசமயம் தேவையுள்ளனவற்றை அலசி ஆராயும் முறை அருமை. வாழ்த்துகள்.

'பரிவை' சே.குமார் said...

2016 டைரிக் குறிப்பு அருமை அண்ணா...

வரிகள் அனைத்தும் உள் மனதில் உதித்தவையாய்...
2017 சிறப்பான ஆண்டாக அமைய வாழ்த்துக்கள்.

ஜோதிஜி said...

நன்றி குமார். இனிய வாழ்த்துகள்.

ஜோதிஜி said...

மிக்க நன்றியும் வாழ்த்துகளும்.

ஜோதிஜி said...

காலங்கள் வைத்திருக்கும் ரகசியங்கள் என்பதனை கண்டுணர்ந்தால் எவ்வளவு சிறப்பாக இருக்கும் தனபாலன்? இனிய வாழ்த்துகள்.

ஜோதிஜி said...

நன்றி இமயவரம்பன். இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

ஜோதிஜி said...

நன்றி அய்யா.

செந்தில்குமார் said...

பணம் இருந்தால் எதுவும் செய்ய முடியும் என்று நினைக்கிறார்கள்.உலகமயமாக்கல் பின் நமது மக்களின் எண்ணங்கள் முற்றாக மாறிஇருக்கிறது.மேலும் நீங்கள் குரியது போல குழந்தைகளின் பெயர் மற்றும் அல்ல(பல விசயங்களை உன்னதமானது என்று ிஉருவாக்கி ்இருக்கிறார்கள்) விஷ்ணுசரகசானதமும் சுப்பரபாததையம் தெரியும் என்று சொல்பவர்களுக்கு தேவாரம் திருவாசகம் தெரியவில்லை அப்பிடி ஒன்று இருக்கிறதா என்று கேட்க்காத குறைதான்.மாநில அரசு உதவி பெரும் பள்ளியில் படிக்கவைத்தால் நல்லபடிப்பானா என்று கேட்க்கிறார்கள்.சிந்திக்கவே கூடாது என்று சபதம் எடுத்து இருக்கிறார்கள்.விரலுக்கு ஏத்த வீக்கம் இல்லை.நிறைய இருக்கு சொல்ல ஆதங்கபடுவதை தவிர இருந்தாலும் சில விசயங்களை சுட்டிக்காட்டுகிறோம்.நண்பர்கள் கூட குடிபழக்கம் இருந்தால்தான் கிடைக்கின்றனர்.

செந்தில்குமார் said...

கசாயம் குடித்து வளர்ந்த இனம் இன்று சாரயம் குடிக்க ஏங்குதே? (உங்கள் வரிதான்)

சாராயம் குடித்து சிந்திக்கவே மறுக்கிறார்கள்

Rathnavel Natarajan said...

2016 -- தலைமைக் கொள்ளைக்காரன்
= அருமையான அலசல். எனது பக்கத்தில் பகிர்கிறேன். நண்பர்கள் ஆழ்ந்து படிக்க வேண்டுகிறேன். நன்றி திரு ஜோதிஜி

Pandiaraj Jebarathinam said...

வாசிப்பிற்கான வேகமுள்ள எழுத்து.

அருமை. புத்தாண்டு வாழ்த்துகள் :-)

ஊரான் said...

சில தவிர்க்க முடியாத காரணங்களால் நானும் வலைப் பூ பக்கம் வந்து பல மாதங்கள் ஆகிவிட்டன. உங்களுடைய இந்தப் பதிவு என்னை உற்சாகப்படுத்தியுள்ளது. அடிக்கடி சந்திப்போம் இணையத்தில்... வாழ்த்துகள்!

ஜோதிஜி said...

நண்பர்கள் கூட குடிபழக்கம் இருந்தால்தான் கிடைக்கின்றனர்.

தற்போதைய சமூக நிலைமையின் அழகான விமர்சனம் இது. மிக்க நன்றி செந்தில்.

ஜோதிஜி said...

நன்றி

ஜோதிஜி said...

நன்றி அய்யா

ஜோதிஜி said...

நன்றி பாண்டியராஜ். இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

ஜோதிஜி said...

அவசியம் எழுதுங்க. காரணம் என் முந்தைய பதிவில் உள்ளது. நன்றி நண்பரே.

நிகழ்காலத்தில்... said...

//என் "வாழ்நாள் கனவு" சாத்தியக்கூறின் முதல் படியில் காலடித்தடம் பதிக்கும் ஆண்டாக இந்த வருடம் முடிவுக்கு வந்துள்ளது.// தொடரட்டும் வெற்றிப்பாதையில் பயணம்..வாழ்த்துகள் ஜோதிஜி.

ஜோதிஜி said...

இதனை எழுதும் போது உங்களை நினைத்தேன். உங்கள் கத்திரி இல்லாமல் அப்படியே டைரியாக இருக்கட்டும் என்பதால் வெளியிட்டேன். நன்றி சிவா.

கிரி said...

தொடர்பற்று இருக்கின்றது. அலைபாய்கின்றது."

இதை நான் முன்பே கூறியிருக்கிறேன்.. தற்போது சரியாக உள்ளதாக கருதுகிறேன்.

ஜோதிஜி, தமிழ் பெயர் வைப்பதில்லை.. குறைந்த பட்சம் தமிழ் பெயர் மாதிரி கூட வைக்க விருப்பப்படுவதில்லை.. :-(

அம்மா அப்பா போய் டாடி மம்மி நிரந்தரமாகி விட்டது ... இது குறித்து எழுத நினைத்துள்ளேன். விரைவில் எழுதுவேன்.



ஜோதிஜி said...

இனி என் எழுத்தில் அவசியம் மாற்றத்தைக் கொண்டு வருவேன். பயிற்சி மற்றும் முயற்சியும் உண்டு.