Saturday, October 12, 2013

குதியாட்ட டாலரும் திருப்பூரின் இறக்குமதியும்

என்னப்பா இன்றைக்கு டாலர் டான்ஸ் ஆடுமா? இல்லை குதிக்குமா?

திருப்பூரில் நடைபயிற்சிக்கென காலையில் நடந்து செல்லும் ஏற்றுமதியாளர்களை நீங்கள் கடந்து செல்லும் போது நிச்சயம் இது போன்ற உரையாடல்களை கட்டாயம் கேட்கமுடியும்.  இன்று திருப்பூரில் உள்ள ஒவ்வொரு ஏற்றுமதியாளரும் காலையில் செய்தித்தாளை பிரித்ததும் முதலில் பார்ப்பதே இந்த டாலர் யூரோ பண மதிப்புகளைத் தான். 

அதற்குப்பிறகே திருப்பூரில் உள்ள எழவு செய்திகளை படிக்கத் தொடங்குகின்றார்கள்.  

முதலில் படிக்கும் செய்தியை வைத்து இன்று வங்கியில் ஆவணங்களை வங்கியில் கொண்டு போய் கொடுக்கலாமா? இல்லை நாளை டாலர் மதிப்பு ஏறியவுடன்  கொடுக்கலாமா? என்று யோசிக்கின்றார்கள்.  இரண்டாவது செய்தியை படித்தவுடன் தான் எப்போது குளிக்க வேண்டும் என்று முடிவுக்கு வருகின்றார்கள். 

ஏற்றுமதி தொழிலில் இருந்தால் ஏறிக்கொண்டிருக்கும் டாலர் மதிப்பால் நல்லது தானே என்ற எண்ணம் கொண்டவரா நீங்கள்?

அந்த நிறுவனம் திருப்பூரில் முக்கியமான நிறுவனம்.  ஆய்த்த ஆடை ஏற்றுமதி தொழிலில் முதல் இடத்தில் இருக்கும் நிறுவனமும் கூட. வாரத்திற்கு ஒரு முறை ஏற்றுமதி செய்து ஒன்று இரண்டு பில்களை (INVOICE) வங்கிகளில் கொடுக்கும் நிறுவனங்களைப் போலில்லாமல்   வங்கியின் அலுவலக தினங்களில் தினந்தோறும் இரண்டு மூன்று கோடிக்கான ஏற்றுமதி செய்யப்பட்ட ஆவணங்களை வங்கியில் கொடுப்பது வாடிக்கை.  

இது போன்ற நிறுவனங்களுக்கு அமெரிக்கன் டாலரின் ஏற்றம் என்பது பம்பர் லாட்டரி  அடித்தது போல இருக்கும்.  மொத்தமாக  இரண்டு லட்சம் அமெரிக்கன் டாலர் உள்ள பில்களைக் கொண்டு போய் வங்கியில் கொடுக்க, அன்றைய தினத்தின் அடிப்படையில் ஏறிய அமெரிக்க டாலர் மூலம் குறைந்தபட்சம் இந்திய பண மதிப்பில் பத்து லட்சம் ரூபாய் வரைக்கும் கூட தனியாக கிடைக்கும். இந்த தொகையின் அடிப்படையில் அரசாங்கம் கொடுக்கும் ஊக்கத் தொகையின் அளவும் எகிறும். மாதத்தில் 24 நாட்கள் என்று கணக்கு போட்டுப் பார்த்தால் கூட இந்த தொகையே இரண்டரை கோடி என்கிற அளவுக்கு அந்த நிறுவனத்திற்கு உபரி லாபமாக கிடைக்கும்.

ஆகா நல்லது தானே?  என்று சொல்பவர்கள் மட்டும் சற்று முன்னால் வாங்க. உங்களுக்கு மட்டும் ஒரு சின்ன ரகசியம்.  

இது போன்ற நிறுவனமும் இப்போது நிதிச் சுமையில் தள்ளாடிக் கொண்டிருக்கின்றது.  ஆச்சரியமாக இருக்கின்றதா?  

உங்களை வெளியே ஓட விட்டு தாக்கினால் என்ன செய்வீர்கள்? முடிந்தவரைக்கும் வேகமாக ஓடி தப்பிக்கத்தானே பார்ப்பீர்கள். அதுவே ஒரு அறைக்குள் வைத்து அடிக்கத் தொடங்கினால்?  ஒன்று எதிர்த்து தாக்க வேண்டும் அல்லது அடியை வாங்கிக் கொண்டு அழுது கொண்டு தான் இருக்க வேண்டும்.  

தற்போது திருப்பூரில் உள்ள ஏற்றுமதியாளர்கள்  ஊமைக்காயங்களை வெளியே சொல்ல முடியாமல் முனங்கிக் கொண்டிருக்கின்றார்கள்.  

தற்போது இந்தியாவில் தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு நடப்பது இரண்டு முனை தாக்குதல் அல்ல.  நான்கு முனைத்தாக்குதல்களில் நாடி நரம்பெல்லாம் கழன்று போய் பேயை பார்த்தவன் கதையைப் போல் திண்டாடிக் கொண்டிருக்கின்றார்கள்.

மின்சார பற்றாக்குறை, எரிபொருளின் விலையேற்றம், ஆய்த்த ஆடைகளில் பயன்படுத்தப்படுகின்ற வெளிநாட்டுப் பொருட்களின் விலையேற்றம், தொழிலாளர் பற்றாக்குறை என்று திரும்பிய பக்கமெல்லாம் திகில்பட காட்சிகள் போல இருக்கின்றது.

புதிய பொருளாதாரக் கொள்கைகளை நரசிம்மராவ் ஆட்சியில் நிதி அமைச்சராக இருந்த மன் மோகன் சிங் கொண்டு வந்த போது வானாள புகழ்ந்தவர்கள் இப்போது அது திரும்பி தாக்க முழி பிதுங்கிப் போய் நிற்கின்றார்கள்.  

சற்று விபரமாக பார்ப்போம்.

இந்த கட்டுரையை எழுதும் நாளில் அமெரிக்கன் டாலரின் மதிப்பு 70 ரூபாய். ஆனால் திருப்பூரில் உள்ள ஏற்றுமதியாளர்கள் வைத்துள்ள ஒவ்வொரு ஒப்பந்தங்களும் குறைந்தபட்சம் 90 நாட்களுக்கு முன் எடுக்கப்பட்டு அது அன்றைய தின அமெரிக்கன் அல்லது யூரோ நாணய மதிப்பில் எடுக்கப்பட்டவையாக இருக்கும்.  சிலர் பார்வேர்ட் காண்ட்ராக்ட் போட்டு வங்கியுடன் குறிப்பிட்ட நிலையான பண மதிப்பை பெற்றிருப்பர்.  சிலரோ ஏறப்போகும் அமெரிக்கன் டாலரை நினைத்து வழி மேல் விழி வைத்து காத்திருப்பர்.  

முன்பு ஏறி இறங்கி என மாறிக் கொண்டிருக்க அமெரிக்கன் டாலரின் மதிப்பு தற்போதைய இந்திய பொருளாதார மேதைகளின் செயல்பாட்டால் சர் என்று எகிறிக் கொண்டிருக்கின்றது. இனி இறங்க வாய்ப்பில்லை என்கிற அளவுக்கு பல ஏற்றுமதியாளர்களுக்கும் உருவான மகிழ்ச்சி நிலையானதாகவும் இல்லை.  காரணம் பையில் வைப்பது போல வைத்து அப்படியே எடுத்துக் கொண்டது போல கிடைத்த லாபமெல்லாம் கண் திறப்பதற்குள் காணாமல் போய்விடுகின்றது.

இந்த தொழிலில் உள்ள ஒவ்வொரு பகுதிகளையும் சற்று விபரமாக பார்ப்போம்.

இன்று பஞ்சாலை தொழில் முற்றிலும் நவீனமாக்கப்பட்டு விட்டது. 80 சதவிகித எந்திரங்கள் வெளிநாடுகளிலில் இருந்தே இறக்குமதியாகின்றது.  வளர்ந்த நிறுவனங்கள் முற்றிலும் குளிரூட்டப்பட்ட இடத்தில் மொத்த நிறுவனமும் இயங்கும் அளவுக்கு வளர்ந்துள்ளது. 

ஆனால் இந்த எந்திரங்களுக்கு பயன்படுத்தப்பட்ட வேண்டிய உதிரிப்பாகங்கள் இறக்குமதி செய்யப்பட வேண்டிய நிலையில் இருப்பதால் அவ்வப்போது மாறிக் கொண்டிருக்கும் டாலர் மதிப்பில் கிடைக்கும் லாபங்கள் டான்ஸ் ஆடத் தொடங்குகின்றது. இந்தியாவில் உள்ள பஞ்சாலை தொழிற்சாலை மற்றொரு பிரச்சனையில் தவிக்கின்றது. 

இந்தியாவில் வெங்காயத்தின் விலை தங்கம் போல எகிற வெங்காயத்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக்கூடாது என்ற போது நம் சரத்பவார்  நாம் ஏற்றுமதி செய்யாவிட்டால் மற்ற ஒப்பந்தங்கள் பாதிக்கப்படும்.  இந்திய பொருளாதாரத்தின் நம்பகத்தன்மை போய்விடும் என்ற அழகான வசனத்தை நாம் படித்து விட்டு மறந்து போயிருப்போம்.  

ஆனால் பஞ்சாலை தொழிலில் உள்நாட்டு நிறுவனங்களுக்கே பற்றாக்குறையாக இருக்கும் பஞ்சு அனைத்தும் வெளிநாடுகளுக்குத் தான் ஏற்றுமதி செய்யப்படுகின்றது. உடனடி லாபத்தை கணக்கில் கொண்டும், உடைக்க முடியாத லாபியும் சேர்ந்து இந்த பஞ்சு வெளியே பறக்க காரணமாக இருக்கின்றது.  

வாங்கிப் போட்ட கோடிக்கணக்கான வெளிநாட்டு எந்திரங்களில் உற்பத்தியாகும் நூலும் கூட பல இடங்களில் நூறு சதவிகித ஏற்றுமதி நிறுவனம் என்ற பெயரில் கடல் கடக்கத்தான் பாடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

இன்று பின்னலகம் என்று சொல்லப்படுகின்ற நிட்டிங் துறையில் உள்ள எந்திரங்களும் இறக்குமதி செய்யப்பட்ட நவீன ரக எந்திரங்கள் மூலமே துணியாக மாறுகின்றது. இந்த எந்திரங்களுக்குத் தேவைப்படும் உதிரிப்பாகங்கள் தவிர தினந்தோறும் தேவைப்படும் பலதரப்பட்ட ஊசிகள் அனைத்தும் இன்று வெளிநாட்டு நிறுவனங்களை சார்ந்தே இந்த துறை இயங்குகின்றது. மாதம் தோறும் இந்த ஊசி சந்தை என்பது பல கோடிகளைத் தாண்டும். ஜெர்மனி, தைவான், கொரியா , சீனா போன்ற நாடுகளே இதில் முன்னிலையில் இருக்கின்றது.

சாயப்பட்டறையில் பயன்படுத்தப்படும் சாப்ட் புளோ எந்திரங்களின் நவீனம் என்பது நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டேயிருக்கின்றது. சாயமேற்ற பயன்படுத்தும் முக்கிய சாயங்கள் இரண்டு நிலையில் உள்ளது.  ஒன்று உள்நாட்டு சந்தையில் உற்பத்தியாவது.  

ஆனால் அதன் முக்கிய மூலக்கூறுகள் அனைத்தும் வெளிநாட்டு நிறுவனங்களையே சார்ந்து இருப்பது. மற்றொன்று வெளிநாடுகளில் இருந்து நேரிடையாக பலவித சாயங்கள் இந்தியாவிற்கு இறக்குமதியாகிக் கொண்டிருக்கின்றது.  

இந்திய ரூபாய் பண வீழ்ச்சியின் காரணமாக நேரிடையாக விரைவாக பாதிக்கப்பட்டது இந்த சாயத்துறையே. தற்போது விற்கப்படும் அனைத்து ரக சாயங்களின் விலைகளும் 50 சதவிகிதம் விலையேறி உள்ளது. இதற்கு மேலாக செயற்கையாக உருவாக்கப்பட்ட தட்டுப்பாடு என்பது இதன் விலையேற்றத்தை மேலும்  அதிகரித்துக் கொண்டிருக்கின்றது.  

அரசாங்கம் உருவாக்கிய கொள்கையின்படி சுத்திகரிக்கப்பட்ட சாய நீரை உருவாக்க சுத்திகரிப்பு நிலையத்தில் முக்கியமாக மெம்பரேன் என்றொரு சமாச்சாரம் தேவைப்படுகின்றது.  இது உப்பின் அளவை கட்டுப்படுத்தி அதை பிரிக்க உதவும் ஒரு சமாச்சாரம்.  சவ்வூடு பரவல் என்று பள்ளிக்கூடங்களில் படித்த விசயத்தை இப்போது நினைவுக்கு கொண்டு வந்தால் இந்த மெம்பரேன் குறித்து உங்களால் எளிதாக புரிந்து கொள்ள முடியும்.  தண்ணீரில் உள்ள உப்புத்தன்மையை கட்டுப்படுத்துவது. 


இந்த மெம்பரேன் என்பது வெளிநாட்டு நிறுவனங்களைச் சார்ந்து இறக்குமதி மூலமே பெறுவதால் மாதம் தோறும் கோடிக்கணக்கான ரூபாய் இந்த தொழிலில் புழங்குகின்றது.  

சாயம் தேவைப்படும் மற்றொரு துறை பிரிண்ட்டிங் துறைகளும் பெரிதாக பாதிக்கப்பட்டுள்ளது.  இந்த பிரிண்ட்டிங் துறையில் பயன்படுத்தப்படும் சாயமும் வெளிநாட்டு நிறுவனங்களை சார்ந்திருப்பதால் இறக்குமதி செய்யப்படும் அளவு நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டேயிருக்கின்றது.

மேலே சொன்ன துறைகளைப்போல எம்ப்ராய்ட்ரி துறையில் பயன்படுத்தப்படும் எந்திரங்கள் முதல் முக்கியமாக தேவைப்படும் நூல் வரைக்கும் இறக்குமதி மூலமே அதிக அளவு பெறப்படுகின்றது. மொத்தத்தில் வெளிநாட்டு நிறுவனங்களின் ஒத்துழைப்பு இல்லாவிட்டால் இன்றைய சூழ்நிலையில் இங்கே ஒரு ஆடை கூட வெளியே வராது என்கிற அளவுக்கு எங்கெங்கு காணினும் புதிய பொருளாதார மாற்றங்கள் உருவாக்கிய நவீன வளர்ச்சியடா என்று நாம் வளர்ந்துள்ளோம்.  

ஆய்த்த ஆடையில் உற்பத்திக்கான ஒவ்வொரு அடியிலும் இன்று வெளிநாட்டு எந்திரங்களின் பங்களிப்பும், அவர்களின் ஒத்துழைப்பும் இல்லாவிட்டால் முடங்கிப் போய்விடும் அபாயத்தில் தான் இன்றைய திருப்பூர் ஏற்றுமதி நடந்து கொண்டிருக்கின்றது. 

இந்த மாற்றங்கள் எல்லாம் ஏமாற்றத்தை தந்து கொண்டிருப்பது எப்படி?

இன்று பஞ்சு முதல் துணியாக மாறி வருவதற்குள் இத்தனை பிரச்சனைகளை கடந்து வந்த போதிலும் தற்போது நிலவிக் கொண்டிருக்கும் மின்சார பற்றாக்குறையைப் போக்க ஒவ்வொரு நிறுவனமும் குறைந்தபட்சம் எட்டு மணி நேரம் டீசல் மூலம் தான் நிறுவனத்தை நடத்த வேண்டிய சூழ்நிலையில் உள்ளார்கள்.  

இன்று பெட்ரோலிய நிறுவனங்களின் தன்னிச்சையான வானாளாவிய அதிகாரத்தினால் வாரந்தோறும் விலை எகிற இருப்பு வைப்பதா இல்லை இருப்பதை விற்று விடுவதா என்கிற நிலையில் தான் ஒவ்வொரு ஏற்றுமதியாளர்களும் விழி பிதுங்கிப் போய் நிற்கின்றார்கள். 

(செப்டம்பர் 2013 ஆழம் மாத இதழில் வெளியான கட்டுரையின் விரிவாக்கம்.)

தொடர்புடைய பதிவுகள்


25 comments:

chandrasekaran said...

சிறப்பான ஆய்வுக் கட்டுரை. உற்பத்தியாளர்கள் விழிப்பாக இருக்க வேண்டிய தருணம் இது என்று நீங்கள் கூறுவது 100 க்கு 100 % உண்மை. இதில் அறிய வேண்டிய உண்மை என்னவென்றால் உள் நாட்டு தயாரிப்பகளை மேம்படுத்த வேண்டும். அதற்குரிய ஆய்வும் அதற்க்கு அரசு ஒத்துழைப்பும் அவசியம்.

நிகழ்காலத்தில்... said...

திருப்பூரில் ஏற்றுமதி சார்ந்த இருப்பவர்களின் நிலைமை திண்டாட்டம்தான் :) என்ன வாங்கிய அடிகளை மறைக்க நல்ல வெள்ளைச் சட்டையாப் போட்டுகிட்டு வெளியே சுத்த வேண்டியதுதான் :)

தி.தமிழ் இளங்கோ said...

டாலர் நகரத்தில் நடக்கும் டாலர் கூத்துக்கள். திருப்பூரின் இன்னொரு பக்கம். விரிவான அலசல். சாயத் துணிகளை அலசுவதற்குத்தான் தண்ணீர் இல்லை.

// மின்சார பற்றாக்குறை, எரிபொருளின் விலையேற்றம், ஆய்த்த ஆடைகளில் பயன்படுத்தப்படுகின்ற வெளிநாட்டுப் பொருட்களின் விலையேற்றம், தொழிலாளர் பற்றாக்குறை என்று திரும்பிய பக்கமெல்லாம் திகில்பட காட்சிகள் போல இருக்கின்றது. //

இன்னும் எத்தனை நாட்கள் இப்படியே கழியப் போகிறதோ தெரியவில்லை. பேசாமல் பத்து பத்து தொழிற்சாலைகளாக இணைந்து கோ- ஆபரேடிவ் முறையில் செயல் படலாம்.

திண்டுக்கல் தனபாலன் said...

ஒவ்வொரு பகுதியின் விபரமும் அடி வயிற்றை கலக்கும்...

ஆடி மாதம் ஆடித் தான் போய் உள்ளது - வியாபாரமும்...!

இது எங்கு போய் முடியப் போகிறதோ...?

நம்பள்கி said...

நல்ல பதிவு! நான் எழுதிய பதிவுக்கு வலு சேர்ப்பதாகத்தான் இருக்கிறது! நமது இந்தியாவில் நாம் தாயரிக்கும் இயந்திரங்கள் என்ன? ஊசி கூட இறக்குமதியா? சாயம் கூடவா? இன்றைக்கு ஒரு இறக்குமதி கூட இல்லையென்றால்...திருப்பூர் கதி என்ன? துணிக்கே இப்படி!

மருந்து மருந்துக்கு கூட நம்ம தாயரிப்பு இல்லை; எல்லாம் அறிவுத் திருட்டு. அரசாங்கமும் அரசாங்க அதிகாரிகளுமே இந்த மருந்து திருட்டுக்கு துணை.

நாங்கள் 4.5 டாலர் கொடுத்து வாங்குகிற அமேரிக்கா தாயரித்த மருந்தை ஒரு மாத்திரையை இந்தியாவில் 12 ரூபாய்க்கு விற்கிறார்கள். கோர்ட்டும் துணை; அவர்கள் கையை கடிக்குமே.

இதில் எப்படி இந்தியா வல்லரசு?

'பரிவை' சே.குமார் said...

அருமையான பகிர்வு அண்ணா...
இப்படியே போனால் இந்தியாவின் நிலை?

நம்பள்கி said...

தமிழ் மனம் விருதுகள் என்று சில பார்வைக்கு இருக்கு: ஒட்டுப்பட்டை எங்கே? காணோம்?

ஜோதிஜி said...

ஓட்டுப்பட்டை நான் வைத்துக் கொள்ளவில்லை. தமிழ்மணம் இன்ட்லி தமிழ்வெளி மூன்றில் மட்டும் இணைத்து வைப்பதோடு சரி. என் எழுத்துக்கு வேறெந்த முயற்சியும் செய்வதில்லை. அது தேவையும் இல்லை என்று கருதுவதால். கடந்து வந்த பாதையில் சில நிகழ்வுகள் மறந்து போய்விடக்கூடும் என்பதற்காகவும் அதை எழுத்தாக்க வேண்டும் என்பதாலும் இந்த தளம்.

ஜோதிஜி said...

இந்தியா வல்லரசாகிவிடும் குமார்.

ஜோதிஜி said...

இங்குள்ள நீதிமன்றங்கள் இதற்கு மட்டுமா துணை நிற்கின்றது. இங்குள்ள மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் 75 ரூபாய் பெறுமான மருந்தை 250 ரூபாய்க்கு சந்தையில் விற்கும் கொடுமையும் நடந்து கொண்டு தான் இருக்கின்றது. ஒரு சளிக்கான மாத்திரை அதன் வேகம் அதீக வேகம் என்று கடந்த இரண்டு ஆண்டுகளில் பத்து மடங்கு ஏறியுள்ளது. ஆனால் உட்கொள்ளும் போது வாயெல்லாம் புண்ணாகி விடும் குழந்தைகள் பலரை பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றேன். ஃபார்மா மாபியா குறித்து நிறைய எழுதலாம். எழுத தகுதியான நபர் நீங்க. எழுதலாமே?

ஜோதிஜி said...

நாம் வாழ்வதற்கான முயற்சிகளும் வாழ்ந்தே ஆக வேண்டும் என்பதன் புள்ளியும் குடும்பம் என்கிற கோட்டில் இருந்து தொடங்குவதால் நிச்சயம் கடந்து தான் வர வேண்டும். நாமும் கண்டும் காணாமல் கடந்து வந்து கொண்டே தானே இருக்கின்றோம் தனபாலன்.

ஜோதிஜி said...

நீங்கள் சொல்வது முற்றிலும் சரியே. பத்து பேர்கள் சேர்ந்தால் சூரிய ஒளி மூலம் எளிதாக மின்சாரத்தை தயாரிப்பது முதல் உள்ளூர் தேவைகள் பலவற்றையும் அரசாங்கம் சார்பின்றி சுய சார்பில் மூலம் செய்து ஜெயிக்க முடியும். ஆனால் செய்ய மாட்டார்கள். காரணம் நம்மவர்கள் நான் மட்டும் என்க்கு மட்டும் என்னுடையது என்ற வட்டத்திற்குள் இருப்பதால் இது போல இன்னமும் பலவற்றை திருப்பூர் சந்தித்தே ஆக வேண்டும்.

ஏற்கனவே நீங்க எழுதிய சாய மனிதர்கள் என்ற வார்த்தையே பல அர்த்தம் தரக்கூடியது.

ஜோதிஜி said...

அடிகள் ஒவ்வொன்றும் இடி போல இருந்தாலும் எதுவும் மாறவில்லை சிவா. ஆட்சிகள் மாறினால் ஒரு வேளை காட்சி மாறும் என்று மௌனமாக பல வேலைகள் நடந்து கொண்டு இருக்கின்றது.

ஜோதிஜி said...

உள்நாட்டு தயாரிப்பு என்றால் நம் பொருளாதார மேதைகளுக்கு வேப்பங்காய் போலவே கசக்கின்றது. பார்க்கலாம்.

உலக சினிமா ரசிகன் said...

‘சரிவுகளை’ சகித்துக்கொள்ள வேண்டும் என்பாரே இன்றைய நிதி அமைச்சர்!

ஜோதிஜி said...

அவரின் சகியும் பன்னாட்டு நிறுவனங்களின் ஆலோசகராக இருப்பதால் அவரின் ஆலாபனை என்பது எப்போதுமே அமெரிக்கா குறித்தே அக்கறையின் வெளிப்பாடாக வரும்.

சேக்காளி said...

//இப்படியே போனால் இந்தியாவின் நிலை//
இங்க பார்டா.அவனவன் தன் குடும்ப நெலமைய நெனக்குறதையே மறந்துட்டான்.இப்ப போயி இந்தியா பாகிஸ்தான் னு சொல்லிகிட்டு.

வவ்வால் said...

தொழிலதிபதிரே,

//இன்று பஞ்சு முதல் துணியாக மாறி வருவதற்குள் இத்தனை பிரச்சனைகளை கடந்து வந்த போதிலும் தற்போது நிலவிக் கொண்டிருக்கும் மின்சார பற்றாக்குறையைப் போக்க ஒவ்வொரு நிறுவனமும் குறைந்தபட்சம் எட்டு மணி நேரம் டீசல் மூலம் தான் நிறுவனத்தை நடத்த வேண்டிய சூழ்நிலையில் உள்ளார்கள். //

அப்போ பருத்திக்கொட்டை மட்டும் தானா பஞ்சாகிடுதா?

அதையும் விதைச்சு , கரன்ட் கட் ஆனாலும் டீசல் வாங்கி ஊத்தி தண்ணிப்பாய்ச்சி தானே உருவாகுது, பஞ்ச உருவாக்குன விவசாயிக்கு நல்ல விலை கிடைக்குதா, நாட்டிலேயே பருத்தி விவசாயிகள் தான் அதிகம் தற்கொலை செய்துக்கிறாங்க அது ஏன்?

திருப்பூர் முதலாளிகளுக்கு நஷ்டம்னா பணத்தோட போயிரும்,ஆனால் விவசாயிக்கு நஷ்டம்னா உசுரே போயிரும்யா,அதெல்லாம் உங்களை போன்ற பணக்கார ரத்தங்களுக்கு புரியவே புரியாது, பஞ்சு ஏத்துமதி செய்யக்கூடாதுனு சொல்வீங்க,ஆனால் அப்படி ஏற்றுமதி செய்யலைனா உள்நாட்டில இருக்க பின்னலாடை,நூற்பாலை முதலைகள் சரியான விலைக்கு பஞ்ச வாங்கவும் வாங்காது ஆனால் இவங்க ஜட்டி பனியன், துணினு செய்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்வாங்களாம்,பஞ்ச ஏற்றுமதி செய்யாதென சொல்ல ஜட்டி ,பனியன் ஏற்றுமதி செய்யுற எவனுக்கும் உரிமை இல்லை,விவசாயின் உற்பத்தியை உரிய விலைக்கு வாங்க தயாரில்லைனா ,ஏன் ஏற்றுமதி செய்யக்கூடாது?

ஒலகப்பொருளாதாரம்னு பேசுற மூதேவிகளுக்கு ஏன் புரிய மாட்டேங்குது,அமெரிக்காவில ஒரு விவசாயி நினைச்சா அவனோட உற்பத்தியை அவனா ஏற்றுமதி செய்யலாம்னு? இந்தியாவில் மட்டும் விவசாய பொருளுக்கு ஏற்றுமதிக்கு தடை விதிக்கனும், ஆனால் அதை வச்சு உற்பத்தி செய்யுற மூதேவிகள் ஏற்றுமதி செய்யலாமாம் ,என்ன கொடுமைடா இது!

நூற்பாலை அதிபர்கள் ஏன் விவசாயிகளிடம் போய் கான்ட்ராக்ட் ஃபார்மிங் முறையில் பஞ்சு உற்பத்தி செய்து தர முன் ஒப்பந்த போடக்கூடாது?

ஆனால் அதை செய்யாம ,அரசாங்கம் பஞ்ச ஏற்றுமதி செய்ய தடை விதிக்கனும், வாங்க ஆளே இல்லைனு பஞ்சு விலை குறையனும், அதை தானே ஈன விலைக்கு வாங்கனும்னு நினைக்கும் கொடுரா மனசு எப்படிய்யா வந்துச்சு?

பஞ்சு ஏற்றுமதி செய்யக்கூடாதுனா, ஜட்டி பனியன் ஏற்றுமதியும் கூடாது, ஏற்றுமதியாவதால் உள்நாட்டுல ஜட்டி ,பனியன் விலை ஏறுது!

ஜோதிஜி said...

இது போன்ற விவாதத்தோடு நீங்க வருவீங்கன்னு தெரியும் பேரவைத் தலைவரே.

பஞ்சு ஏற்றுமதி செய்வதால் என்னமோ உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு நேரா போய் கிடைக்குதுன்னு நினைக்கின்றீர்களா? இந்தியா முழுக்க பத்து விரல்களுக்கு அடங்கிப் போய்விடுகின்ற நல்லவர்கள் மட்டும் ஆதாயம் பெறும் புண்ணியவான்கள்.

உள்நாட்டு தேவையை கணக்கிட்டுத்தானே ஏற்றுமதி கொள்கையை வகுக்க முடியும். அறந்தாங்கி பகுதியில் 20 வருடங்களுக்கு முன் பத்து பதினைந்து எண்ணெய் மில் இருந்தது. சுற்றியுள்ள கிராமத்தில் விளைந்த எள் கடலை அனைத்தும் ஏல முறையில் வந்து விற்பனை ஆனது. நேரிடையாக மறைமுகமாக பல ஆயிரக்கணக்கான பேர்கள் பலன் அடைந்து கொண்டு இருந்தார்கள்.

சுத்தமான கடலை எண்ணெய் நல்லெண்ய் என்பது அனைவர் வாழ்க்கையிலும் இயல்பானதாக இருந்தது. இப்போது ஒரு மில் கூட அங்கே இல்லை. இறக்குமதி எண்ணெய் அனைத்தையும் தின்று ஏப்பம்விட்டு விட்டது. இப்போது எள் என்பது குறிப்பிட்ட லாபியில் சேர்ந்து குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே வெளியே தலைகாட்டுகின்றது. இது தவிர குறிப்பிட்ட சிலர் அங்கங்கே மிளகாய் தொடங்கி பல தானிய வித்துக்களுக்க ஏசி மண்டபம் தயார் செய்து பதுக்கி வைத்து கொள்ளை லாபம் அடைவதும் நடந்து கொண்டு தான் இருக்கின்றது.

நீங்கள் கவலைப்படுவது போல எந்த விவசாயிகளுக்கும் இங்கே எதுவும் போய்ச் சேருவதில்லை. உள்நாட்டில் பஞ்சு இல்லை என்பதால் பல நூற்பாலைகள் காத்தாடுது அல்லது மூடி விட்டார்கள், மூடத் தயாராக உள்ளார்கள். லட்சக்கணக்கான வேலை இழப்புகள்.

இவர்கள் அத்தனை பேரும் தெருவுக்கு வருவது உங்களுக்கு நியாயமா தெரியுதா?

ஜோதிஜி said...

நன்றி

சேக்காளி said...

வவ்வால் said...

தொழிலதிபதிவரே,

ஓரு துறையில் இருப்பவர் சொல்வதெல்லாம் உண்மை என நம்பியே ஆக வேண்டுமெனில்,அரசியலில் மஞ்சத்துண்டு சொல்வதெல்லாம் உண்மை,,நிதித்துறையில் ரிசெர்வ் வங்கி சொல்வதெல்லாம் உண்மைனு கண்ண மூடிக்கிட்டு நம்பியாகனும்,நீங்க அப்போ மட்டும் வியாக்கியாணம் கொடுப்பீர் :-))

விவசாயியின் பொருளை எங்க வேண்டுமானர்லும் வித்துட்டுப்போறான், உள்நாட்டுல சரியான விலைக்கொடுத்து வாங்க துப்பில்லை,ஏற்றுமதி செய்வதால் தட்டுப்பாடுனு சொல்ல மட்டும் எப்படி வாய்வருது.

முதலில் ஏற்றுமதியால் தட்டுப்பாடு,நூற்பாலைகள் பஞ்சில்லாமல் மூடப்படுகின்றன என்பதே பெரும்பொய்,

வெளிநாட்டுக்கு ஏற்றுமதியாகும் பெருமளவு பஞ்சு குட்டை இழை வகை உபரியாக உள்ளது.

நீண்ட இழை தட்டுப்பாடானது,இறக்குமதி செய்கிறோம்,சமீபக்காலங்களில் நீண்ட இழை பஞ்சாக இறக்குமதி செய்வதற்கு பதிலாக நூலாகவே இறக்குமதி செய்துவிடுகிறார்கள் உங்களைப்போன்ற தொழிலதிபர்கள், ஏன் எனில் சீன நூல் ரொம்ப மலிவாம்,இப்படி செய்யறெதெல்லாம் செய்துப்புட்டு பழியை தூக்கி வேற வேற எடத்துல போடும் அரசியல் ஏன்?

குட்டை இழை பஞ்சு உபரியாகவும், நீண்ட & மித இழை தட்டுப்பாடு, இறக்குமதியாகிறது,அதே போல் நிறைய நூலாக இறக்குமதி செய்வது ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது,இதனால் தான் பல மில்கள் மூடும் நிலை,பயன்ப்பாட்டு தேவைக்கு மேல் இருக்கும் குட்டை இழை பருத்தி மட்டுமே ஏற்றுமதியாகிறது. மிகச்சிறியளவு மித இழை யும் ஏற்றுமதியாகிறது ஆனால் அதனால் பெரிய பாதிப்பெல்லாம் வர வாய்ப்பே இல்லை.

இதெல்லாம் மினிஸ்ட்ரி ஆf காமெர்ஸ் தளத்துல புள்ளி விவரத்தோட இருக்கு,அப்போ பொய்யான விவரங்களா அவை?

நூலாக இறக்குமதி செய்ய Tஹடை விதிக்க சொன்னாலாவது ஒரு நியாயம் இருக்கு,ஆனால் அப்படி தடைப்போட்டா முத ஆளா நீங்கதான் கூப்பாடுப்போடுவிங்க :-))

வவ்வால் said...

Indian cotton production- 372 laks bales,

Consumption- 242 laks bales only,around 100 laks bales allowed to export that's a surplus volume. Read more,

http://articles.economictimes.indiatimes.com/2013-09-01/news/41663384_1_bales-natural-fibre-exports-cotton-advisory-board

Due to import of finished yarns Indian spinning mills affected that's the real fact!

ஜோதிஜி said...

The price of a cotton candy (356 kg) is hovering around Rs 45,000 at present.

பேரவைத்தலைவரே

கடைசியில் போட்டிருக்கும் விலையை பார்த்ததும் மனதிற்குள் சிரித்துக் கொண்டேன்..

இப்போதைக்கு ஓரளவுக்கு வசதி இருக்கக்கூடியவர்கள் நடத்தும் பஞ்சாலைத் தொழில் என்பது லாபகரமான தொழிலும் கூட. ஆனால் திருப்பூரிலிருந்து ஆந்திராவிற்கு குஜராத்திற்கு பஞ்சு வாங்கச் செல்பவர்கள், சென்று வந்தவர்கள் பகிர்ந்து கொண்ட பல சம்பவங்களை யோசிக்கும் பொழுது எந்த காலத்திலும் அடித்தட்டு மக்கள், குறிப்பாக விவசாயிகள் இந்த நாட்டில் எந்த காலத்திலும் முன்னேற வாய்ப்பே இல்லை என்பதை மட்டும் இங்கே எழுதி வைக்க விரும்புகின்றேன்.

சமீபத்தில் ஒரு தேர்தல் இங்கே உள்ளூரில் நடந்தது. சிவகெங்கை பாணியில் ஜெயித்தவர் தோற்றுப்போனார். தோற்றுப் போனவர் ஜெயித்து வந்தார்.

டெல்லியில் இருந்து வந்த ஒரே ஒரு அலைபேசி அத்தனையும் மாற்றிவிட்டது. பணம் அதிக அளவு படைத்தவர்களே பயந்து போய்க் கிடக்கும் அளவுக்கு.

காட்சிகள் மாறும். நிச்சயம் எழுதுவேன்.

பல விசயங்களை எழுத முடியாத நிலைக்கு என் ஆழ்ந்த வருத்தம்.


வவ்வால் said...

தொழிலதிபதிவரே,

//
காட்சிகள் மாறும். நிச்சயம் எழுதுவேன்.

பல விசயங்களை எழுத முடியாத நிலைக்கு என் ஆழ்ந்த வருத்தம்.

//

வருத்தமே வேண்டாம்,எப்படியும் அதுவும் பருத்தி தட்டுப்பாடு போல் உடாண்ஸா தாம் இருக்கப்போவுது :-))

நம்ம நாட்டில ஏற்றுமதிக்கும் அப்புறமும் பல லட்சம் பேல் பருத்தி சீண்டுவார் இல் லாமல் கிடக்கு ,நூற்பாலை பாதிப்புக்கு காரணம் இறக்குமதி நூல் அதை செய்வது யாருநு சொல் லாம ரொம்ப "ஆழமா" உங்களால் மட்டும் தா எழுத முடியும் :-))

# ஏற்றுமதி செய்வதால் விவசாயிக்கு லாபம் இல் லாமல் இருக்கலாம், ஆநால் ஏற்றுமதியும் தடை செய்யப்பட்டால் இப்பொழுது கிடைக்கும் விலையும் பஅருத்திக்கு கிடைக்காது, ஒரே அடியா படுக்க வச்சு குத்திட்டு போயிருவிங்க அவ்வ்!