Friday, September 13, 2013

மரபணு மாற்ற விதைகள் -- பயங்கரத்தின் கதை 5

பிடி தொழில் நுட்பம் பன்னாட்டு விதை நிறுவனங்களிடம் மட்டுமே உள்ளது. இந்திய விதை நிறுவனங்கள் அவர்களிடம் காப்புரிமை கப்பம் கட்டியே அவற்றைப் பயன்படுத்துகின்றன. இதை மாற்ற இந்திய வேளாண் ஆய்வுக் கழகம் (ஐசிஏஆர்) வழிகாட்டுதலின் படி  தார்வாட் பல்கலையில் பி.ட் பிகனேரி என்ற பெயரில் பிடி பருத்தி உருவாக்கும் வேலையில் இறங்கியது. 

ஆனால் அது முடிவடையும் நிலையில் உள்ளே வைக்கப்பட்ட மரபணுக்களில் ஒன்று தன்னுடைய காப்புரிமைப் பெற்ற மரபணு என்று மான்சான்டோ எதிர்ப்பு தெரிவிக்க உடனே அந்த த்திட்டம் இழுத்து மூடப்பட்டது. 

செர்பாய் தலைமையில் விசாரணைக்கமிசன் அமைக்கப்பட்டு ஊழல்கள் மூடி மறைக்கப்பட்டது.

இந்தியாவில் விவசாயிகள் பயிர் இரகங்கள் பாதுகாப்புச்ட்டத்தின்படி மான்சான்டோ இப்படி எதிர்ப்பு தெரிவிக்க முடியாது அப்படி தெரிவிக்கப்பட்ட எதிர்ப்பு செல்லுபடியாகாது. இருப்பினும் பிடி பிகனேரி திட்டம் வெறும் கனவாக முடித்து வைக்கப்பட்டது. சில பல விஞ்ஞானிகள்  பலன் பெற்றனர்.

நாடாளுமன்றத்தில் ஏப்ரல் 22 அன்று இந்த சட்டவரைவு தாக்கல் செய்யப்பட்ட போது நடந்த விவாதம்

மதிப்பிற்குறிய அவைத்தலைவர் அவர்களே, 

நவீன உயிரித்தொழில்நுட்பத்தை பாதுகாப்பான முறையைப் பயன்படுத்தவும், உயிரித்தொழில்நுட்ப ஆணையம் உருவாக்கி உயிரித்தொழில் நுட்பத்தை ஒருங்குபடுத்தும் வரையைறைகள் சிறப்பாக திறமையாக செயல்படுத்தப்படவும், அதன்மூலம் நவீன உயிரித்தொழில்நுட்பத்தின் மூலம் உருவாகும் உயிரினங்களை, பொருட்களை ஆராய்தல், எடுத்துச் செல்லல், இறக்குமதி செய்தல், உற்பத்தி செய்தல் உள்ளிட்ட அதனுடன் தொடர்புடைய வேலைகள் அணைத்தையும் ஒருங்குபடுத்துவதற்காக....

பாசுதேவ் ஆச்சார்யா- மதிப்பிற்குரிய அவைத்தலைவர் அவர்களே நான் உயிரித்தொழில்நுட்ப ஆணையத்திற்கான சட்ட வரைவு-2013 ஐ அறிமுகப்படுத்துவதை கீழ்கண்ட காரணங்களால் எதிர்க்கிறேன் என்று பேசத் தொடங்கியதும் பல குறுக்கீடுகள் எழுந்தது.

மதிப்பிற்குறிய அவையைத்தலைவர் அவர்களே உயிரித்தொழில் நுட்பத்தை வளர்க்கும் துறையே எப்படி அதைக்கட்டுப்படுத்தும் துறையாக இருக்க முடியும். அண்மையில் வேளாண்மைக்கான நிலைக்குழு தனது மரபணு மாற்றுப்பயிர்கள் மற்றும் உணவுப்பொருட்கள் குறித்த அறிக்கையில் சுதந்திரமான, சார்பு நிலையில்லாத (Conflict of Interest) ஒருங்குமுறை ஆணையம் தேவை என்று பரிந்துரைத்துள்ளது. இந்தப் பரிந்துரையை நிறைவேற்றாமல், இப்போது பன்னாட்டு விதை நிறுவனங்களுக்கு உதவிட அரசு இந்த வரைவு கொண்டுவரப்பட்டுள்ளது. 

விதை நிறுவனங்களுக்கு ஆதரவான ஒன்றாக இல்லாமல் உயிரித்தொழில்நுட்ப ஒருங்காற்று ஆணையம் உயிரிப்பாதுகாப்பு, பல்லுயிர் பெருக்கம் (உயிர் பன்மயம்) மனிதர்களின் ஆரோக்கியம், கால்நடைகளின் ஆரோக்கியம் ஆகியவைகளுக்கான முழுமையான ஒன்றாக இருக்கவேண்டும், 

ஆகவே இதை சுற்றுச்சூழம் ஆமைச்சகம் அல்லது மக்கள் நலன் மற்றும் குடும்ப நலத்துறை மற்றும் வேளாண் அமைச்சகம் ஆகியவை இணைந்து...(குறுக்கீடுகள்) உத்தேசிக்கப்பட்டுள்ள இந்தச் சட்ட வரைவு பல்லுயிர் பெருக்க சட்டம் மற்றும் விவசாயிகளின் பயிர்உரகங்கள் உரிமைகாப்புச் சட்டத்திற்கு இணக்கமாக இல்லை. 

இந்தச் சட்ட வரைவு இந்தியா கையெழுத்திட்டு ஏற்றுக்கொண்டுள்ள பல சஞர்வ தேச ஒப்பந்தங்கள், உயிரிப்பாதுகாப்பு மாநாட்டு ஒப்பந்தம், பல்லுயிர்பெருக்கம், சுற்றுச்சூழல், மனித உரிமைகள்,உள்ளிட்ட பலவற்றுடன் உசைவாக இல்லை. (குறுக்கீடுகள்) அமைச்சர் - திரு.பாசுதேப் ஆச்சார்யா எழுப்பிய வினாக்கள ஏற்கத்தக்கதல்ல. நாடாளுமன்றம் இத்தகு சட்டத்தை இயற்ற தகுதியுள்ளது தான்

மற்றொரு பக்கம் மரபணு மாற்று தொழில் நுட்ப ஆதரவாளர்கள் இந்திய இயற்கை வளங்களை சட்டரீதியிலும், அறிவியல் அமைப்பு ரீதியிலும் காப்பதற்காக உருவாக்கிய அமைப்புகளை கைவசப்படுத்திக் கொண்டுள்ளன. இந்தியாவில் உள்ள தாவர வளங்கள். அவற்றின் பயன்பாடுகளை பதிவது ,பாதுகாப்பது போன்ற வேலைகளுடன் அன்னிய நிறுவனங்கள் இந்திய தாவர வளத்தைப் பயன்படுத்த அனுமதி வழங்கல் போன்ற பணிகளை செய்ய தேசிய தாவர, மரபியல் வள பெட்டகத்தின் (National Bureau of Plant Genetic Resources (NBPGR) என்ற அமைப்பை இந்திய அரசு உருவாக்கியுள்ளது. 

தேசிய தாவர மரபியல் வள பெட்டகம் என்பது இந்தியாவின் தாவர உயிரினங்களின் மரபியல் பெட்டகம் போன்றது. அவைகளின் வகைபாடு, பயன்பாடு உள்ளிட்ட அணைத்துவிவரங்களையும் தொகுத்தும் பாதுகாத்தும் வரும் அமைப்பு. சுருங்கக் கூறின் இந்திய தாவர வகையினங்களின் ஒட்டுமொத்த பாதுகாப்பகம் எனலாம்.

இது இந்தியாவில் உள்ள எல்லா தாவர, நுண்ணுயிர் வளங்களைப் பற்றிய பதிவு, அவைகளின் விதைகள், மாதிரிகளைச் சேகரித்து பாதுகாத்து வருகிறது. அன்னிய அமைப்புகள் இவற்றைப் பயன்படுத்துவதாக இருப்பின் இதன் அனுமதியுடன் தான் செய்ய வேண்டும். ஆனால் இத்தகு அனுமதியின்றி தான் இந்திய கத்திரிக்காய் இரகங்கள் மரபணு மாற்றுக் கத்தரியாக உருவாக்கப்பட்டது. 

இது பல்லுயிர் பெருக்கச் சட்டத்தின் படி (Biodiversity act) தவறானது என்பதால் பிரச்சனைகள் கிளப்பப்பட்டது. வழக்கு நடத்தப்பட்டது. இந்திய அரசு மான்சான்டோ-மகிஹோவிற்கு ஆதரவாக தனது முடிவை தெரிவித்தது.

இத்தகு முக்கியத்துவம் வாய்ந்த தேசிய தாவர, மரபியல் வள பெட்டகத்தின் (National Bureau of Plant Genetic Resources (NBPGR)) இயக்குனராக முனை.கே.சி.பன்சால் நியமிக்கப்படுகிறார். இவர் நிலக்கரி வழக்கு பன்சால் அல்ல.. அவர் நிலக்கரி வளமையை கொள்ளையடிக்க அனுமதிப்பவர், இந்தியத் தாவர வளங்களை கொள்ளை கொண்டு போவதற்கான அனுமதி வழங்க நியமிக்கப்பட்டவர் என்றே குறிப்பிடலாம். ஏனெனில் இவரின் பின்புலம் அத்தகையகது..

இவரை இப்பொறுப்பில் நியமித்த போதே, ’’அடுத்தவர் ஆராய்ச்சியை தனது என்று கூறி காப்புரிமை பெற்று  விஞ்ஞானிகளுக்கு வழங்கப்படும் விருதுகளில் மதிப்பு மிக்க விருதான ‘ரஃபி அகமது கித்வாய் விருதை’ 2009ல் பெற்றுள்ளார்,’’ என்ற குற்றச்சாட்டு எழுந்தது. 

வேற்று உயிரின் மரபணுவை கத்தரியில் புகுத்துவதில் புதிய முறையை பிறிதொரு விஞ்ஞானி உருவாக்கிட அதைத் தன் பெயரில் காப்புரிமை பெற்றவர். 

மேலும் வேளாண் விஞ்ஞானிகள் தேர்வுக் குழுவின் விதிகளின் படி மேல் மட்ட பணிகளின் தேர்விற்கும், பதவி உயர்வுகளுக்கும் இரகசியப் பணிக்குறிப்பு சமர்பிக்கப்படுவது அவசியம். இவரது பணி இரகசியக் குறிப்பு 2004ல் இருந்தே அளிக்கப்படவில்லை. இவரைத் தேர்வு செய்ய வேண்டும் என்பதற்காகவே தேர்வுக்குழு இரண்டு முறை உருவாக்கப்பட்டதும் நடந்துள்ளது. 

இவரின் மூத்த அதிகாரியாகவும் விஞ்ஞானியாகவும் தேசிய தாவர உயிரித் தொழில்நுட்ப ஆய்வு மையத்தின் தலைவராகவும் இருந்த முனை. ஆனந்தகுமார் (இவரும் மரபணு மாற்று வித்தகரே!!!) முனை.பன்சால் தனது தக்காளி, கடுகு, கோதுமை உள்ளிட்ட 8 மரபணு மாற்று ஆய்விற்காகப் பெற்ற ஆய்வு விதைகள் உள்ளிட்ட பொருட்களை திரும்ப ஒப்படைக்கவில்லை என்றும் ஒப்படைக்கக் கேட்ட கடிதத்திற்கு  பதில் கூட அளிக்கவில்லை என்று கூறியுள்ளார். 

இத்தகையவரையே இந்திய தாவர வகைகளைக் காப்பதற்கான பெட்டகத்தின் இயக்குனராக நியமிக்கட்டுள்ளார். 

இந்த விவரங்களை எல்லாமே பத்திரிக்கைகளிலும் வந்தது. இருப்பினும் எந்த நடவடிக்கையும் இல்லை.

available online at


சில அண்மைக்கால சர்வதேச நிகழ்வுகள்

மரபணு மாற்றுப் பயிர்களுக்கு ஏற்கெனவே விதித்திருந்த 10 ஆண்டுகள் தடையை பெரு நாடு மீண்டும் மே மாதத்தின் கடைசியில் உறுதி செய்தது. அதற்கு அடுத்த சில நாட்களுக்குள் பிலிப்பைன்ஸ் நாட்டு உச்சநீதி மன்றம் அந்த நாட்டு அரசு அனுமதியளித்திருந்த பி.டி கத்தரிக்குத் தடை விதித்தது. 

தாங்கள் வாங்கும் பண்டங்களில் மரபணு மாற்று விளைபொருட்கள் கலந்துள்ளதா என்பதை நுகர்வோர் அறிந்திட வேண்டும். அதற்கு பண்டங்களின் பொட்டலத்தில் அடையாளம் (லேபிள்) வேண்டும் என 90 விழுக்காடு அமெரிக்கர்கள் கேட்டும் போராடியும் வருகிறார்கள். 

ஆனால் அமெரிக்க ஐக்கிய அரசு அதை ஏற்கவில்லை, 

மான்சான்டோ அடையாளமிடல் என்ற கருத்தையே கடுமையாக எதிர்க்கிறது.. சில மாதங்களுக்கு முன் கலிபோர்னியா மாநில அரசு மக்களின் வற்புறுத்தலையடுத்து நடத்திய பொது வாக்கெடுப்பு நடத்தியது. மான்சாட்டோ உள்ளிட்ட நிறுவனங்கள்.வழக்கின் இறுதி முயற்சி என்பது நம்பமுடியாத அளவிற்கு மில்லியன் டாலர்களில் விளம்பரங்கள் செய்து மிக மெல்லிய இடைவெளியில் அடையாளம் தேவை என்ற வாக்கெடுப்பை தோற்கடித்தன 

ஆனால் வெர்மாண்ட் மாநிலம் தன் மாநிலத்தில் இத்தகு அடையாளம் தேவை எனத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. மாய்னே-வும் இத்தகு விதியை உருவாக்கியுள்ளது.

கடந்த மாதம் உலகின் பல்வேறு நாடுகளில் 10 இலட்சத்திற்கும் அதிமான மக்கள் மரபணு மாற்றுப் பயிர்களுக்கு எதிரான உணர்வை ‘மான்சான்டோவிற்கு எதிரான ஊர்வலமாக’நடந்தனர், ஆர்பாட்டம் நடத்தினர். 

ஐரோப்பிய மக்களின் தொடர் எதிர்ப்பு, புறக்கணிப்பின் காரணமாகவும், மக்களிடம் தங்களின் வாதங்கள் பலிக்கவில்லை, நம்ப வைக்கமுடியவில்லை என்பதாலும் ஐரோப்பிய நாடுகளில் செயல்பட்டு வந்த ஆய்வகங்களை மான்சான்டோ உள்ளிட்ட அனைத்தநு மரபணு மாற்று விதை நிறுவனங்களும் மூடிவிட்டன. இனி ஐரோப்பாவில் இவைகள் இருப்பதில் பயன் ஏதுமில்லை என்றும் அறிவித்துவிட்டன. 

ஹங்கேரியில் பயிரிடப்பட்டிருந்த 500 ஹெக்டருக்கும் அதிகமான பரப்பில் பயிரிடப்பட்டிருந்த மரபணு மாற்று மக்காச்சோள பயிரை அரசே எரித்து அழித்தது.

அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கோதுமையில் மரபணு  மாற்றம் செய்யப்பட்ட கோதுமை கலந்திருப்பதைக் ஜப்பான் கண்டறிய அமெரிக்க கோதுமையை திருப்பி அனுப்பியது. பல ஆசிய, ஐரோப்பிய நாடுகள் தத்தமது துறைமுகங்களில் இத்தகு கலப்படத்தைக் கண்டறிய கண்காணிப்பை அதிகரித்துள்ளன. 

அமெரிக்க கோதுமை விவசாயிகள் மான்சான்டோ நிறுவனத்திற்கு எதிராக நட்ட ஈடு கேட்டு வழக்கு தொடுத்து வருகின்றனர். இவையனைத்தும் மே மாத நிகழ்வுகள். ஜூன் மாத்தில் மனித மரபணுக்களை காப்புரிமை செய்வது செல்லாது எனத் தீர்ப்பு வழங்கி இன்னுமொரு குண்டைப் போட்டுவிட்டது அமெரிக்க நீதிமன்றம்.

அனைத்தும் மான்சான்டோ தலைமையிலான மரபணு மாற்றுப் பயிர்களை உருவாக்கும் விதை நிறுவனங்களுக்கும் அவைகளின் காப்புரிமை வெறிக்கும் எதிரான உலக உணர்வுகள். ‘விதைகளைத் தங்களின் சொத்தாக்கும்’ மான்சான்டோக்களின் கனவு கலைக்கப்பட்டு வருகிறது.. உலக உணர்வு இப்படியாக இருக்க மான்சான்டோக்கள் விதைகளின் மீதான தங்களது பிடி நழுவாதிருக்க சட்ட சந்துபொந்துகளை உருவாக்குவதைத் தீவிரப்படுத்தி வருகின்றன.

இந்தியா என்ன செய்யவேண்டும்?

இந்தியாவிற்கு இ.உ.தொ.ஆணையத்திற்கு மாற்றாக உயிரிப்பாதுகாப்பிற்கான சட்டம் தான் உடனடித் தேவை.

எந்த மரபணு மாற்று உயிரினங்கள் எந்த வகையினதாயினும்அதை ஒருங்குபடுத்தும் அமைப்பின் முதன்மைப்பணி நவீன உயிரித் தொழில் நுட்பம் தரக்கூடிய ஆபத்துக்களிடமிருந்துமக்களையும் இயற்கைச்சூழலையும் பாதுகாப்பதாகவே இருக்க வேண்டும்.உலகலெங்கிலும் பெரும்பான்மையான மக்களும், நிறைய அரசுகளும் மரபணு மாற்றுத் தொழில் நுட்பத்தை நிராகரித்துவரும் வேளையில் அதைத் தொங்கிக் கொண்டிருப்பதை மறுபரிசீலனை செய்யவேண்டும்.

எந்த வகைச் சட்டமாயினும் இதன்அடிப்படையில் கீழ்கண்டவைகள் அடங்கியதாக இருக்கவேண்டும்.

முன்பாதுகாப்பு கொள்கையே (Precautionary Principle) மைய நிலையாக இருக்கவேண்டும்.

மாற்று வழிகளில் பயிர் பிரச்சனையை சரிசெய்யவழியில்லை என்கிற சூழ்நிலையில் தான் மரபணு மாற்றுத் தொழில் நுட்பத்தை எடுக்கவேண்டும்.

மரபணுக்கள் வெளியேறா வண்ணம் பாதுகாக்ப்பட்ட வகையில் நடக்கும் சோதனைகள் மற்றும் வெளிச்சூழலில் வளர்த்தல் ஆகிய சோதனைகள் வரிசைக்கிரமமாக நடத்துதல் மற்றும் இவ்விரண்டிற்குமான அவையவைகளுக்கான தனித்தனி ஒருங்கமைப்பு, கண்காணிப்பு முறைகள் தேவை.

முடிவெடுக்கும் இடத்தில் உள்ளவர்கள் சார்பு நிலையற்றவர்களாக சுதந்திரமானவர்களாக இருக்கவேண்டும்.

பொதுமக்களிடம் எதையும் மறைக்காத வெளிப்படையாக செயல்பாடு தேவை, 

சுதந்திரமான அலசி ஆராய்தல் தேவை

பொதுமக்கள் பங்கேற்பு கொண்ட ஜனநாயகமான செயல்பாடுகள் தேவை.

ஆபத்து மதிப்பிடல்-  

(அ) முழுமையான, சரியாக அறிவியல்ரீதியில் சரியாக வடிவமைக்கப்பட்ட சோதனைகளை பரிந்துரைத்து அவைகளை மரபணு மாற்றுப்பயிர்கள் உருவாக்குபவர்களைக் கடைபிடிக்கச் செய்யவேண்டும் மேலும் அந்த நிறுவனங்கள் அளிக்கும் ஆய்வறிக்கைகளை தனித்த சுதந்திரமான ஆய்வாளர்கள் கொண்டு பரிசீலிக்கப்படவேண்டும்

 (ஆ)எல்லா ஆய்வுகளையும் செய்யக்கூடிய, தேவையான எல்லா கட்டமைப்பு வசதிகளும் கொண்ட ஆய்வகத்தை அமைத்து அதன் மூலம் சுதந்திரமாக அந்த ஆய்வறிக்கைகளை அலசி ஆராயவேண்டும்

தொடர் கண்காணிப்பு, மதிப்பீடுகள் தொடர்ந்து செய்தல் மற்றும் ஆபத்துகள் அறியப்பட்டால் அனுமதியை திரும்பப் பெறல் ஆகியன ஆபத்துக்கள மேலாண்மை செயலெபாட்டில் தேவை.

தவறு நேர்ந்தால் பொறுப்பேற்கும் வழிமுறையும் அந்தத்தவறுகளுக்கான தண்டனைகள், நட்டஈடு, தவறுகளை சரிசெய்தல்உள்ளிட்ட வழிமுறைகள் வேண்டும். மேலும் அவற்றிற்கு அந்தப் பயிர்களை உருவாக்கியவர்களை மட்டுமின்றி தவறிழைக்கும் ஆணையத்தவர்களையும் இந்த பொறுப்பேற்றலில் சேர்க்க வேண்டும்.

வாங்குவோர் விவரங்கள் அறிந்து வாங்கிப் பயன்படுத்தும் வகையில் இறக்குமதி உள்ளிட்ட எல்லா மரபணு மாற்றுப் பயிர் விளைபொருட்கலும்’’மரபணு மாற்று விளைபொருட்கள் கொண்டது’’ என்ற லேபிள் இருக்கவேண்டும்

பாதிக்கப்பட்டவர்கள் எளிதில் முறையிடும் வகையில் எளிமையான முறையீட்டு முறைகளும், பொது நலன் கருதி எவர் வேண்டுமானாலும் முறையீடு செய்யும் வகையிலும் கால வரை நிர்ணயம் இல்லாத வகையிலும் முறையீடு செய்யும் முறை இருக்க வேண்டும்.

இந்திய கூட்டாட்சி அமைப்பு முறையில் உள்ளது. அரசியல் சாசனம் விவசாயத்தை மாநிலங்களின் உரிமைப் பட்டியலில் வைத்துள்ளது. ஆகவே மாநிலங்கள் தம் பங்கிற்கு தனக்கான கட்டுப்பாட்டு முறைகளையும் ஒழுங்குபடுத்தும் அமைப்புகளையும் உருவாக்கிக் கொள்வதற்குரிய சரத்துகள் உள்ளதாக இருக்க வேண்டும். 

மேலும் அரசியல் சாசனம் அளித்துள்ள பஞ்சாயத்து அமைப்புகள் மற்றும் கிராம சபைகளுக்கு உரிய தனது இயற்கை வளம் மற்றும் மக்கள் நலனைப் பாதுகாப்பதற்கும் உள்ள அதிகாரத்தை பறிக்கும் படியாகவும் இருக்க வேண்டும்.

Precatuionary Principle – முன்னெச்சரிக்கை கொள்கை – 

இது பல்லுயிர் பெருக்கம் மாநாட்டில் (Convention on Biodiversity-CBD) எடுக்கப்பட்ட கொள்கை. இந்திய அரசால் ஏற்கப்பட்ட கொள்கையாகும். இதன்படி எந்த வகையான தொழில் நுட்பமாயினும் அல்லது அதன் நடவடிக்கைகளாயினும் பாதிப்புகள் ஏற்படுத்தலாம் என்பதற்கான அறிகுறிகள் இருந்தால், அது முழுமையாக பாதுகாப்பானது என்று உத்திரவாதம் அளிக்க இயலாத போது, முன்னெச்சரிக்கை அடிப்படையில் அதை கைக் கொள்ளாமல் இருக்கலாம் அல்லது தடை செய்யலாம்.

Risk assessment 

மரபணு மாற்றுப் பயிர்கள் மனிதர்களுக்கு, கால்நடைகளுக்கு, பிற உயிரினங்களுக்கு, சுற்றுச்சூழலுக்கு, இயற்கைக்கு பயிராக, விதையாக, கால்நடைத்தீவனமாக, உணவாக இன்னும் வேறு எந்த வடிவத்திதலாயினும் பாதிப்பு அளிக்குமா என்பது குறித்த ஆய்வுகள், நீண்டகாலத்தில் ஏற்படும் பாதிப்புகள், தொடர் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள் (Long term cumulative effect) உள்ளிட்டவைகளை மதிப்பீடுகள் ஆகியனவே ஆபத்து மதிப்பீடு எனப்படுகிறது.

Biosafety

மனிதர்கள் , பிற உயிரினங்கள் மற்றும் இயற்கைச் சூழலின் பாதுகாப்பை இது குறிக்கிறது. மாற்றி வைக்கப்பட்ட மரபணுக்கள் பிற தாவர, பயிர் வகைகளுடன் கலந்து மரபணுக் கலப்படமாதல், மரபணு மாற்றுப் யிர்களின் விளை பொருட்கள், பண்டங்கள் உணவு மூலம் பாதிப்பை உருவாக்கமல் இருப்பது உள்ளிட்ட பலவும் இதில் அடங்கும்.

(முற்றும்)
.

2 comments:

Ranjani Narayanan said...

எப்படி இப்படி நடக்க முடியும் என்ற ஒரு கேள்வியைத் தான் திரும்பத்திரும்ப கேட்க வேண்டும்.

ஜோதிஜி said...

மானம் கெட்டவர்கள் மரியாதையான பதவியில் இருக்கும் வரையிலும் நமக்கு விமோசனம் கிடைக்கும். சற்று தாமதமாக.