Tuesday, November 10, 2009

நிலமெல்லாம் ரத்தம்

"இறப்பு என்பது சர்வ நிச்சயம்".

தனி விமானத்தில் போய் அத்தனை ஹோமம் செய்த போதும் கூட திருபாய் அம்பானியின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை.  தள்ளிக்கூட போட்டு விட முடியவில்லை. எந்த கையூட்டும் இறைவனிடம் அல்லது இயற்கையிடம் கொடுத்தாலும் நிச்சயிக்கப்பட்டது தான்.

"நின்று போய்விடுகின்ற நிச்சயார்த்த நிகழ்ச்சிகள்" போல் மாறிவிடாது.  நெருங்கி விட்டது என்று உணரும் போது உங்கள் உள் உணர்வு உரையாடலும் தொடங்கி விடும். அறிவாளியா? சிந்தனையாளரா? சிறப்பாய் தான் வாழ்ந்தீர்களா? மற்றவர்களுக்கு சிக்கலைத்தவிர வேறு எந்த மலச்சிக்கலும் எனக்குத் தெரியாது?

எல்லாவற்றையும் புடம் போட்டு நகர்த்தி விடும் "நகர்"வு அது.

அந்த நகர்வின் போது உங்களை நாறடித்துவிட்டு தான் உங்கள் ஆத்மா உங்களை விட்டு நகரும். நம்பவேண்டுமென்ற அவஸ்யமில்லை.  நாள் வரும் போது நீங்கள் உணர்த்த கணத்தில் உங்கள் அருகில் யாரும் இருக்க போவதும் இல்லை.

"உள்வாங்கியவர்களின்" வாழ்க்கை அத்தனையும் இதைத்தான் உணர்த்துகிறது. இனத்தின் போராட்டம் அதன் அழிவு என்பது கூட பெரிதாக தெரியவில்லை.  அலறும் குரல்கள் கூட அத்தனை முக்கியமாய் தெரியவில்லை.  ஆனால் அத்தனை அலறல்களையும் ஆட்சிக்காக வாக்குச் சீட்டாக மாற்ற நிணைப்புள்ளவர்களும், உங்கள் நாற்ற வாழ்க்கை தான் எங்கள் நல்ல வாழ்க்கை என்று உள்ளேயே வாழ்ந்து கொண்டுருக்கும் மாக்களை மனிதர்களை எவ்வாறு உணர்வீர்கள்?

பயம் என்பது வெளியில் தெரியாதவரையில், அல்லது  காட்டிக்கொள்ளாத நேரம் வரையிலும் அதற்குப் பெயர் வீரம்.  மொத்தமும் தெரிந்தாலும் முகம் முழுக்க அமைதியுடன் அச்சப்படாமல் முன்னேறுதல் விவேகம்.  வீரத்துடன் வெள்ளைக் கொடி காட்டி உங்களிடம் வந்து சேர்கிறோம் என்றவர்களுக்கும் நடந்த கதி அதோகதி தான்.  அது தான் சிங்கள "பாசம்".  அதற்குக்கூட பின்னால் இருந்தது உண்மையாக உழைத்துவர்களை ஆயாசம் கொள்ள வைத்துவிட்டது.

ஆனால் வீரம், விவேகம் இரண்டும் அறிந்தும் இச்சைகளுடன் மட்டுமே நகர்வது?

அரசியல்.  ஆட்சி, அதிகார ஆசை/வெறி.

அன்றைக்கு ஒவ்வொரு மன்னர்களுக்குள் உள்ளே உள்ளுக்குள் புகைந்த எரிச்சல், பொறாமை, விவேகமற்ற கொள்கைகள் ஒரு புறம்.

ஆதாயம் அடைய முடியாதவர்கள், அவசரமாய் ஆண்டு விட வேண்டும் என்று சிந்தனையில் இருந்தவர்கள்.

கொள்கை வேறுபாடுகள் என்று கபடி ஆட்டம் ஆடிக்கொண்டுருந்தவர்கள் என்று இருந்தவர்கள் அத்தனை பேர்களும், தமிழ் இனத்தையும், தமிழனின் மொத்த பண்பாட்டு, கலாச்சாரத்தையும் இன்று போல் அன்றும் சிதறடித்தார்கள்.
வந்தவர்களிடம் ஆட்சியை கொடுத்ததோடு மட்டுமல்லாமல் மொத்த கொள்கைகளையும் மகிழ்ச்சியுடன் வராக்கடன் போல் ஒப்படைத்து ஓரமாய் அவர்களிடம் அடங்கி வாழ்ந்தார்கள்.

இந்த ஒரு குணத்தினால் மட்டுமே ஏறக்குறைய 2000 ஆண்டுகள் இந்த தமிழனத்தை வந்தவர்கள் போனவர்கள் அத்தனை பேர்களும் ஆண்டனர்.  அள்ளிக்கொண்டும் சென்றனர்.  கொள்ளி வைக்காமல் கொன்றனர். கொள்கை வேறுபாடுகள் என்று சொன்ன குனக்குன்றுகள் உருவான கலப்பினத்தில் காணாமல் போனார்கள்.

ஒரு பக்கம் பிரபாகரன், நம்பிக்கையாளர்கள்.

அவரை வைத்து வியாபாரம் செய்பவர்கள், உணர்ச்சிகளை தூண்டுபவர்கள், துவண்டு போய் நிற்பவர்கள், மானத்தை மறைக்க ஒரு நீள துண்டு கூட இல்லாமல் துடித்துப் போய் வாழ்பவர்கள்.

மறுபக்கம், கருணா, அம்சா, பிள்ளையான், கிருஷ்ணமூர்த்தி, என்று தொடங்கி டக்ளஸ் வரைக்கும்.  இவர்கள் வெளியில் தெரியும் பட்டியல்.
இங்கே இருக்கும் பல பேர்களையும் டக் டக் என்று பயம் இல்லாமல் இந்த பட்டியலில் சேர்க்க முடியும்.

ஏன் இத்தனை நிகழ்வுகள் தமிழன் வாழ்வியல் முழுக்க?

அறிவு என்பதே உண்மையில் தமிழனத்தில், தமிழனிடம் இருக்கிறதா? என்பதை அச்சத்துடன் தான் யோசிக்க வேண்டி உள்ளது?  நடந்த நிகழ்வுகள், நடத்திக் காட்டிய நிகழ்ச்சிகள், அறிந்த பாடங்கள், புரிந்த கொள்கைகள் ஏதுவுமே தமிழனுக்கு பாடம் கற்றுக்கொடுக்கவில்லை என்றால் இனி எந்த அம்மியில் வைத்து மை போல் நச்சு கொடுக்க வேண்டும்?

சோழர் ஆட்சி சிறப்பாக இருந்தபோதிலும் (கிபி 900 முதல் 1200) ஓயாமல் நடந்து கொண்டுருந்த போரினால் அத்தனை வெறுப்பும் உருவானது.  விரும்பத்தகாத பல விளைவுகளும் தோன்றியது.

சோழருக்கு பின் வந்த பாண்டிய ஆட்சியும் (கிபி 1200 முதல் 1300) வீழ்ச்சி அடைந்ததற்கும் முக்கிய காரணம் தமிழர்களின் முக்கிய குணமான ஓற்றுமையின்மையே.

மாறவர்மன் குலசேகர பாண்டியன் மறைவுக்குப் பின் அவரின் புதல்வர்கள் சுந்தர பாண்டியன், வீரபாண்டியன் ஆகியோரிடையே கடுமையான வாரிசுப் போர் நடந்து.

ஆனால் இன்று நார்வே போல அன்றும் பஞ்சாயத்து பேச கோவூர்கிழார் இருந்தார்.  சோழ மன்னர்களான நலங்கிள்ளியையும், நெடுங்கிள்ளியையும் அன்று அவர் தான் ஒற்றுமைப்படுத்தி உலகறிய அவர்களின் பெருமையையும், தமிழனத்தின் வளர்ச்சியையும் நீண்டு வாழ வழி செய்தார்.

கோவூர்கிழார் இல்லாத காரணத்தால் வீரபாண்டியனிடம் தோற்று ஓடிய சுந்தர பாண்டியன் செய்த காரியம் என்ன தெரியுமா?

படை எடுக்க பயந்து கொண்டுருந்த டில்லி அலாவூதின் கில்ஜீயின் படைத்தலைவன் மாலிக்கா பூரிடம் சென்றடைந்தான்.

பாண்டிய நாட்டுக்கு படையெடுக்க அத்தனை முன்னேற்பாடுகளையும் செய்தான்.  செய்து கொடுத்தான்.  படையெடுத்து வந்தவர்கள் அழித்து, மொத்த வளத்தையும் கைப்பற்றியதோடு அல்லாமல், கொடுக்கப்பட்டுருந்த வாக்குறுதியின்படி ஆசையோடு காத்துருந்த சுந்தர பாண்டியனையும் ஆட்சியில் அமரவிடவில்லை.

வரலாறு காணாத கொலை, கொள்ளை, கற்பழிப்பு, சூறையாடல், கலப்பினம், மதமாற்றுதல்.  மொத்தத்தில் மொத்த தமிழனத்தையும் ஊதி தள்ளி விழுங்கி ஏப்பம் விட்டார்கள்.

அதனை தொடர்ந்தும் வந்த அத்தனை அந்நிய படையெடுப்புகளும் அட்டகாசமாக தங்களுடைய ராஜபாட்டையை தொடர்ந்தார்கள். நம் முன்னோர்கள் அத்தனை பேர்களும் இவர்கள் பின்னால் தொங்கினார்கள்.

வட இந்திய படையெடுப்புகள், இஸ்லாமியர்கள், மராட்டியர்கள், தெலுங்கு நாயக்கர்கள் என்று தொட்டு தொடர்ந்து கடைசியாக வந்து உள்ளே நுழைந்தவர்கள் தான் ஆங்கிலேயர்கள்.

நன்றாக கவனித்துக்கொள்ளுங்கள்.  துணை புரிந்தவனும் ஆள முடியவில்லை.  வாழவும் முடியவில்லை.  ஆனால் இன்று போல் அன்று தூக்கம் மொத்தத்தையும் தொலைத்து தெருவில் நின்றவர்கள் மக்கள் மட்டுமே.

இன்றைக்கும் அன்றைக்கும் என்ன பெரிதான தமிழன் வாழ்வில் முன்னேற்றங்கள்?

ஒவ்வொரு இனமும், போராட்டங்களும் வீழ்ச்சி அடைவதற்கு எத்தனையோ காரணங்களை நீங்கள் வரலாற்றில் படித்து இருக்கலாம். வீரம் இருக்கும்.  அச்சம் ஆச்சரியம் கூட இருக்கும்.  மொத்தத்தில் எல்லாவற்றிலும் எதிர்மறை நியாயங்கள் இருக்கும்.  ஆனால் மொத்தமாக தமிழனின் தொடக்க வரலாற்று தொடங்கி இன்று அறுதிப் பெரும்பான்மை இல்லாத வரைக்கும் ஆட்சிகள் அத்தனையும் நமக்கு உணர்த்துவது ஒன்றே ஒன்று தான்.

தமிழர்களிடம்  இல்லாத ஒற்றுமையின்மை.

சொந்த காசில் சூனியம் வைத்துக்கொண்ட தூதுவளைக்குழுவும் ஒன்றுதான்.  ஒன்றுபடுங்கள். வென்றிடுவோம் என்று நாக்கு வறண்டு கத்தும் ஊதுகுழலும் ஒன்று தான்.

திருந்தவே மாட்டோம் என்றே வாழ்ந்த மன்னர்களின், முன்னோர்களின் வழித்தோன்றல்கள் தானே நாம்?

இவர் தான் மொத்த தமிழனத்தின் துரோகி என்று நாம் யாரை சுட்டிக்காட்ட விட முடிகின்றது,

யாதும் ஊரே. யாவரும் கேளீர் என்று பெருமை பேசிவிட்டு அடுத்து தொடர்ந்து வரும் வரியை எளிதில் மறந்து விடுகின்றோம்.

தீதும் நன்றும் பிறர் தர வரா.

ஒற்றுமை இல்லை என்றால் கூட பராவாயில்லை. ஓதுங்கி ஓரமாய் போய் வாழ்ந்து தொலைத்தால் கூட பரவாயில்லை.

வாழ்ந்தாலும் அடி.  இருந்தாலும் அடி.  உள்ளுக்குள்ளேயே இடி முழக்கம் தொடர்ந்து கொண்டுருக்கும் போது இன்று முள்வேலிக்குள் முகவரி அற்று இருக்கிறோம்?  இதுவே நாளை?

 நீடித்து வாழ்ந்து இருந்த தமிழன் வாழ்வியலை , இந்த எழுத்துக்களை புலம் பெயர்ந்து வாழ்பவர்கள் படிக்க்கும் அளவிற்கு நகர்த்த நீங்கள் அளிக்கும் ஓட்டு.  இது ஒன்று மட்டும் தான் மற்றவர்களையும் சென்றடையும் வழி.

விழிகளில் வழியும் நீர் விடியலைக் காட்டாமலே போகும்?

தமிழனின் வாழ்வியல் சங்க காலம் முதல் இன்று முகவரியற்று முள்கம்பிகளுக்குப்பின்னால் முடங்கிக்கிடப்பது வரைக்கும் உள்ள தொடர் ஓட்டம்.

14 comments:

கோவி.கண்ணன் said...

//தனி விமானத்தில் போய் அத்தனை ஹோமம் செய்த போதும் கூட திருபாய் அம்பானியின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. தள்ளிக்கூட போட்டு விட முடியவில்லை. எந்த கையூட்டும் இறைவனிடம் அல்லது இயற்கையிடம் கொடுத்தாலும் நிச்சயிக்கப்பட்டது தான்.
//

இறப்புக்கு மட்டுமல்ல வயிற்றிற்கும் பொருந்தும் எவ்வளவு தான் செல்வம் இருந்தலும் ஒருவேளைக்கு வயிறு கொள்ளும் அளவைத்தான் ஒருவர் ஒருவேளைக்கு உண்ண முடியும்.

vasu balaji said...

ஜோதிஜி. மிக மிக அருமை.
/சொந்த காசில் சூனியம் வைத்துக்கொண்ட தூதுவளைக்குழுவும் ஒன்றுதான். ஒன்றுபடுங்கள். வென்றிடுவோம் என்று நாக்கு வறண்டு கத்தும் ஊதுகுழலும் ஒன்று தான்./

உச்சி மண்டையில் நச்.

/ஒற்றுமை இல்லை என்றால் கூட பராவாயில்லை. ஓதுங்கி ஓரமாய் போய் வாழ்ந்து தொலைத்தால் கூட பரவாயில்லை/

உண்மையில் வருந்துபவர்களின் ஏக்கமும் இதுதான்.

ஜோதிஜி said...

கோவி கண்ணன் , வானம்பாடிகள் இருவரின் கருத்தும் அவர்களின் ஓட்டும் தமிழர்கள் உணர்ந்து கொள்ள வேண்டிய பாதை, வாழ்க்கை. தொடங்கி வைத்தமைக்கு நன்றி.

ஜோதிஜி said...

"வணங்கா மண்" கப்பல் தமிழ்நாட்டில் இருந்து நகர வைக்க வெளியே தன்னைக் கொள்ளாமல் உழைத்த அந்த நல்ல உள்ளத்தை உங்களுக்குத் தெரியுமா?

உரையாடல் மூலம் தெரிவித்த நண்பருக்கு நன்றி.

இலங்கையின் முல்லை மார்க்கெட் பிரச்சனைகள், பின்புலம் என்பதை உரையாடியபோது இலங்கையில் வாழ்ந்தவரிடம் பேசிய போது அவருக்கே அது புதிதாக இருந்ததாக சொன்னபோது ?

மொத்த தமிழனத்திலும் இன்று வரையிலும் ஒரு "புரிதல்" இல்லை. ஒவ்வொருவருக்கும் தெரிந்து விசயங்கள் அடுத்தவருக்கு தெரியவில்லை. எழுதுபவர் படிப்பவர், உணர்பவர் என்று பாரபட்சம் இல்லாமல்.

கலகலப்ரியா தன்னுடைய எழுத்தில் மூலம் உணர்த்திய சிங்கள தமிழ் மாணவர்கள் மதிப்பெண் பாரபட்சம் அந்த வலியுடன் வாழ்ந்தவர்களுக்கு மட்டும் தான் தெரியும். புரியும்.

இதைப்பயன்படுத்தி தான் தகுதி இல்லாதவர் கூட இன்று தலைவர்களாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

நாலைந்து இடுகைகளாக இந்த ஓட்டு குறித்து உங்களுக்கு தெரிவிக்க காரணம், தமிழ்நாட்டில் இருப்பவர்களுக்கு என்னுடைய எழுத்து வருகையை உணர்த்துதல், தெரிந்து கொண்டேன் என்ற மகிழ்ச்சி, சிந்தனை என்ற சிறப்பு.

ஆனால் புலம் பெயர்ந்து பல நாடுகளில் வாழ்பவர்களுக்கு இது ஆறுதல் அளிப்பது மட்டுமல்ல. எதிர்கால நம்பிக்கையை விதைக்கும் விதை.

நீங்கள் விமர்சிப்பதற்கு முன் மேலே உள்ள கருவிப்பட்டையில் உள்ள இரண்டு விரலை ஏதாவது ஒன்றை தொட்டு விட்டு விமர்சியுங்கள்.

கருவிப்பட்டை புதிது என்பவருக்கு சொடுக்கி கேட்கும் யாகூ மின் அஞ்சல் முகவரியை பதிவு செய்து இந்த கருத்துக்களை உலகம் முழுக்க நகர்த்துங்கள்.

உங்களின் வெளிப்படுத்த முடியாத உள்ளே இருக்கும் மனிதாபிமானம் என்னுடைய உழைப்பு அளிக்கும் மரியாதை என்பதை இனிமேல் எதிர்காலத்தில் தமிழர்கள் உண்மையான அறிவுடன் கூடிய உணர்வுடன் வாழ வேண்டிய புரிந்துணர்வை உருவாக்கட்டும்.

வனம் said...

வணக்கம் ஜோதிஜி

ம்ம்ம் மிகச்சரியான வார்த்தை.
\\தமிழர்களிடம் இல்லாத ஒற்றுமையின்மை.\\

ஆம் இப்போதும் பாருங்கள் எங்களுக்கும் புலிகளுக்கும் தொடர்பில்லை நாங்கள் வெறும் குடியானவர்கள் எனத்தான் அங்கிருக்கும் ஒவ்வொரு தமிழ் மக்களும் கூறச்செய்துவிட்டனர்.

இராஜராஜன்

ஹேமா said...

//துணை புரிந்தவனும் ஆள முடியவில்லை. வாழவும் முடியவில்லை. ஆனால் இன்று போல் அன்று தூக்கம் மொத்தத்தையும் தொலைத்து தெருவில் நின்றவர்கள் மக்கள் மட்டுமே.//

முகுந்தன் இவ்வளவும் போதும்.எம் வலி சொல்ல.

//சமைக்க நேரம் இல்லாமம், விருப்பம் இல்லாமல், ஒரு ரொட்டியில் வாழ்ந்து கொண்டு //

ஏன் எங்களுக்கென்ன தலைவிதியா !

vanathy said...

சிந்தனையைத் தூண்டும் பதிவு.வாக்கினை அளித்துவிட்டேன்.

தமிழர் என்றோர் இனமுண்டு,தனியே அவர்க்கோர் குணமுண்டு என்று சொல்வது எதையென்று நினைத்துக் கொள்வேன்.
அது எதுவென்று இன்று நன்றாகவே புரிகிறது.
தனியே அவர்க்குள்ள குணம் அன்று தொட்டு இன்றுவரை 'ஒற்றுமையின்மைதான்'
மற்ற இனங்களிலும் ஒற்றுமையின்மை இருந்தாலும் தமிழர்களுக்குத்தான் அது மிகவும் கூடுதலாக இருக்கிறது .அதுதான் இன்றைய தமிழரின் வேதனை மிக்க வரலாற்றுக்கு அடிப்படைக் காரணம்.
ஈழமாக இருந்தாலும் சரி இந்தியாவாக இருந்தாலும் சரி இந்த ஒற்றுமையின்மை நன்றாகவே தெரிகிறது.

சமீபத்தில் இலங்கையின் படைத்தளபதி சரத் பொன்சேகாவை அமரிக்க நாடு கோத்தபாய ராஜபக்சாவுக்கு எதிராக சாட்சி சொல்ல அழைத்தபோது .ராஜபக்ச சகோதரர்களின் அரசியல் எதிரிகளான ரணில் விக்கிரமசிங்க ,முன்னால் ஜனாதிபதி சந்திரிக்க குமாரதுங்க ஜே வி பி கட்சி காரர்கள் எல்லோரும் துடித்துப் பதைத்து அவர்களைக் காப்பாற்ற ராஜ தந்திர ரீதியில் உடனே செயலில் இறங்கினார்கள்
அவர்கள் தங்களுக்குள் எவ்வளவுதான் சிண்டைப்பிடித்துக் கொண்டு சண்டை பிடித்தாலும் தமது இனத்துக்கு ஏதாவது கேடு என்றால் பகைமையை மறந்து செயல்படுகிறார்கள்.
நமது தமிழ் தலைவர்களும் இருக்கிறார்களே!
எத்தனை அழிவுகளை தமிழர்கள் கண்டுவிட்டார்கள் ஆனால் இப்போதும் புத்தி வந்ததாகத் தெரியவில்லை.
வேதனையும் விரக்தியும்தான் மிஞ்சுகிறது

--வானதி

அஹோரி said...

// அறிவு என்பதே உண்மையில் தமிழனத்தில், தமிழனிடம் இருக்கிறதா? //

"அறிவு" என்றால் உதடுகள் ஒட்டாது.
"பிரியாணி" என்றால் தான் உதடுகள் ஓட்டும்.

அமர்ஹிதூர் said...

ஒற்றுமையின்மை, பொறாமை, "நான்" என்ற அகந்தை, நம்பிக்கை துரோகம் இவை அனைத்தும் தமிழனின் பண்புகள்.
இப்ப சினிமாக்காரன்களின் ஆட்சியில் இருந்து தமிழன் கற்ற மற்றுமொரு பண்பு
"இலவசமாக கொடுத்தால் பினாயிலையும் குடிப்பது".என்னைக்குதான் தமிழனுக்கு ஆத்திசூடியும், திருக்குறளும் ஒழுங்காய் புரியுமோ ?

ஜோதிஜி said...

வானதி மிக அற்புதமான ஆழ்ந்த விமர்சனமும் காட்டிய அக்கறைக்கும் நன்றி.

பாகற்காய் நீங்கள் சொல்லி உள்ள விசயங்கள் கசப்பு என்றாலும் மாறும் என்ற நம்பிக்கை உண்டு.

அஹோரி. முதலில் பயந்து விட்டேன். வித்யாசமான பெயர். ஆனால் நீண்ட நேரம் சிந்திக்கவும் சிரிக்கவும் வைத்து விட்டீர்கள். நன்றி.

ஹேமா அதென்ன அத்தனை இலங்கை வாழ் பதிவர்களின் இடுகையும் பெரும்பான்மையாக பின்புலமாக கருப்பு நிறத்தை தேர்ந்தெடுத்து உள்ள காரணம் வாழ்வியலின் அவலத்தை பொருட்டா? ஆனாலும் உங்களின் கசிப்பு விமர்சனத்தில் வந்து தெறித்து விழுகின்றதே ஏனம்மா?

இராஜராஜன் உரையாடிய போது சொன்ன வாசகம் தான் வருகின்றது. மாற்றம் என்பது மட்டும் மாறாதது. இத்தனை சித்ரவதையிலும் தன்னை விற்காமல் காலை இழந்த அந்த பெண்மணி போல் உள்ளே இன்னமும் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள். அது விதை. விளைச்சல் வெளியே வரும். வந்து தான் தீரும். சமஉரிமை என்ற வார்த்தை இல்லாத வரைக்கும் விபரீதம் தான் வாழ்க்கை முழுக்க.

ஈரோடு கதிர் said...

மிக நிறைவான எழுத்து வீச்சு...

வலியைப் பகிரவும்,
வைராக்கியம் எழவும் இது ஒரு துளி

ஜோதிஜி said...

நன்றி கதிர். உன்னதமாக உங்களில் இருந்து உருவான இந்த துளி நிச்சயம் ஒரு நாள் பெருவெள்ளம் ஆகும். ஒரு ஆள். ஒரு துப்பாக்கி. வீடற்ற நிலமை. உணவற்ற சூழ்நிலை. உன்னதமான லட்சியம். உருவான வைராக்கியம். ஆறாக ஓடிய இரத்தம். தொடருமா? முடியுமா?

Thenammai Lakshmanan said...

காரைக்குடி உங்கள் சொந்த ஊரா ?

உங்களைப் பற்றி விரிவாக எழுதுவதாக கூறியுள்ளீர்கள் ஜோதிஜி

அறிய விழைகிறேன்

Anonymous said...

"ஆறாக ஓடிய இரத்தம். தொடருமா? முடியுமா?"

padhil illaa kelvi. vidai illaa ekkam.