Showing posts with label தமிழர்கள் வாழ்க்கை தொடர். Show all posts
Showing posts with label தமிழர்கள் வாழ்க்கை தொடர். Show all posts

Wednesday, November 11, 2009

படித்துறை

இந்த நிமிடம் வரைக்கும் பயணித்த, வாசித்துச் சென்ற, இணைந்த அத்தனை இதயங்களுக்கும் நன்றி.  தமிழனின் வாழ்க்கையான " மூவாயிரம் ஆண்டு பெருமை "  என்பதன் முதல் பாகம் இத்துடன் முடிவடைகின்றது.

நண்பர் சொன்னது போது " மனிதர்கள் இருக்கிறார்கள்.  ஆனால் வளர்ந்ததாக சொல்லப்படும் இன்றைய காலகட்டத்தில் மனிதம் இல்லை" .

இது குறித்து எழுதுவது, பேசுவது, பின் ஊட்டம் இடுவதற்கு மனமில்லை.  அதனால் படித்துக்கொண்டு மட்டும் வருகின்றேன்.

உண்மை.

ஏற்றுக்கொள்ள வேண்டிய வார்த்தைகள் தான்.  மறுப்பதற்கு இல்லை.  அன்றாட நிகழ்ச்சிகளை கருத்தாய் மாற்றி படைக்கும் போது எழுதும் பயிற்சியை நமக்குத் தருகிறது. வளர்க்கிறது.  சற்று மேம்பட்ட சிந்தனைகளை உலகுக்கு கூறும் போது ஓகோ இப்படியெல்லாம் சிந்திக்க முடியுமா? என்பதை உணர்த்துகிறது.

ஆனால் அவலத்தை படைக்கும் போது மட்டும் தான் அத்தனை " மனிதர்களின்  தராதரமும் தகுதியும்" நமக்கு புரிய வைக்கின்றது.  வரலாற்று காவியங்களை , படிக்காத எந்த மனிதருக்குள்ளும் தான் எப்படி வாழ்ந்து கொண்டுருக்கிறோம்? நம்முடைய வழித்தோன்றல்களை எப்படி வாழ வைக்க வேண்டும்? என்பதை உணர்வதற்கு வாய்ப்புகள் குறைவு.

அவரவருக்கு தெரிந்த வரையில், அவரவர் மனசாட்சி தான் கோயில் தெய்வம் எல்லாமே.

"நான் என்ன செய்ய முடியும்?  நம்மால் என்ன பண்ண முடியும்? " இரண்டு கேள்விகளில் அத்தனை மனிதமும் ஒவ்வொரு தலைமுறையிலும் மண்ணில் புதைந்தே போய்விடுகின்றது.

குறிப்பிட்டுக்கொண்டு வரும் ஓட்டு என்பது பிட்டு துணி கூட கிடைக்க வழி இல்லாமல் வலியுடன் வாழ்ந்து கொண்டுருப்பவர்களின் முந்தைய, இன்றைய, எதிர்கால சிந்தனைகளை யோசிக்க நம்மை முன் தள்ளினாலும் சரி.  எழுத்து, படங்கள், வாசிப்பு, உள்வாங்கல் எதுவும் சாதிக்காது. அவர்களின் உண்மையான பழைய வாழ்க்கை சீக்கிரம் தந்து விடாது,

சாதி மதம்,பொறாமை, உணர்ச்சிகள்,  போல நிறைய சாத்தான்கள் இன்றுவரையிலும் நம்மிடம் உண்டு. வளர்ந்தவர்கள் கூட இன்றைய கால கட்டத்தில் மற்றவர்கள் வளராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதில் தான் அதிக அக்கறை காட்டுகிறார்கள்.

ஆனால் அத்தனையிலும் மீறி வாழ்க்கை குறித்து "ஒரு நம்பிக்கை வெளிச்சம் எனக்குள் தோன்றுகிறது"  என்ற வார்த்தைகள் எந்த எழுத்துக்கள் தருகிறதோ அது இந்த இல்லம் மட்டுமல்ல?  அத்தனை எழுத்துக்களும் நீக்கமற நம் அத்தனை உள்ளத்தில் ஒளிவிளக்காய் இருக்கும்.

உணர்ந்து கொண்ட விசயங்கள் என்றாவது ஒரு நாள் பாதை காட்டும்.  நகர்த்த நாம் உதவியாய் இருக்கும் போதுதான் சேர வேண்டியவர்களுக்கு நாம் காட்டும் மனிதாபிமானம் அல்லது நம்பிக்கையை இழந்து விடாதே?  இதற்காக மட்டுமே " உலகத்தீரே இதையும் கேளீர்".

கடந்த பல இடுகையில் பகிர்ந்து கொள்ளப்படாத விசயங்கள் பல.

தமிழன் வரலாற்றில் முன் எடுத்துச் சென்ற அத்தனை மூதாதையர்களும் எந்த பிரதிபலன்களையும் எதிர்பார்க்கவே இல்லை.  முக்கியமானவர்கள் அத்தனை பேரும் வறுமையும், வளமையும் இல்லாத வாழ்க்கையில் உழன்று இருக்கிறார்கள்.  ஆனால் அவர்களின் சிந்தனையில் இல்லாத சுருக்கம் மட்டுமே உங்களையும் என்னையும் இன்று சேர்த்து இருக்கிறது. தமிழ் இன்றும் கூட வாழ்ந்து கொண்டுருக்கிறது.

நம்பிக்கை தான் வாழ்க்கை.  நம்பியவர்களால் மட்டும் தான் நாட்டில் இத்தனை வளர்ச்சியும் வீழ்ச்சியும் ஒருங்கே வந்துள்ளது.
இதுவரையிலும் "முன் தோன்றா மூத்த குடி" என்ற பெருமையாய் "நாம்" மட்டும் வெறும் வார்த்தைகளால் தோரணம் கட்டி வாழ்ந்து கொண்டு இருக்கும் தமிழனத்தின் சங்க காலம் முதல் இன்றைய சங்கட காலம் வரைக்கும் பார்த்தாகி விட்டது.
மன்னர்களின் வீரம் என்ற ஆளுமை ஆச்சரியம் தந்தது.  அவர்களின் ஒற்றுமையின்மை என்பது இன்றும் வாழ்ந்து கொண்டுருக்கும் தமிழனத்தின் சாட்சியாய் இருந்து தொலைக்கின்றது.  தமிழ் முதல் இன்றைய டமில் வரைக்கும் படித்து பார்த்து வந்தாலும் இன்று வரையிலும் ஏதோ ஒரு வகையில் உங்களையும் என்னையும் இணைத்துக்கொண்டுதான் இருக்கிறது.

ஆனால் மொத்தமாய் எத்தனை சிரிப்பு, சிந்திக்ககூடிய ஆற்றாமை சமாச்சாரங்கள் இருந்து தொலைத்து போதிலும் காலம் காலமாக நம் தமிழனத்தை தனி மனித (தமிழனின்) ஆளுமைத்திறன் தான் இன்று வரையிலும் இந்த தமிழினத்தை சிறிதாவது நகர்த்திக்கொண்டு வந்து கொண்டே இருக்கிறது.

மன்னர்கள். அவர்களின் வாழ்க்கை நமக்கு வெறும் சரித்திர சான்றுகள்.  ஆனால் அத்தனையும் நீங்கள் இன்று எந்த நூலகத்தில் போய் தேடினாலும் சரி, ஓலைச்சுவடி சான்றுகள் கிடைக்குமா என்று அலைந்தாலும் சரி உங்கள் கைக்கு இன்றைய நிலைமையில் இவை எதுவுமே கிடைக்காது.

மின் ஆளுமை நிறைந்த சொடுக்கினால் நம்மை வந்து சேரும் சென்னை கட்டுமான நூலகத்தில் கவனமாய் இருப்பவர்கள் கூட, வரலாற்று ஆவணத்தில் அத்தனை அக்கறை இருப்பதாக தெரியவில்லை.  உ.வெ.சா

பச்சத்தண்ணி கூட குடிக்காமல்,  அலைந்து திரிந்து உ.வே. சாமிநாதய்யர் சேகரித்த பல ஓலைச்சுவடிகள் இன்று வரையிலும் சேகரிக்கப்படாமல், சரியான முறையில் பராமரிக்கப்படாமல் செல்லரித்துக் கொண்டுருக்கிறது.  இருப்பதை விட்டு பறப்பதற்கு நம்மை ஆள்பவர்கள் மொழியை செம்மு செம்முன்னு செம்மிக்கொண்டு இருக்கிறார்கள்.

புதிய வளர்கல்வி திட்டத்தில் கூட முக்கியத்துவம் ஆங்கிலத்துக்கு தான்.  காரணம் ஆங்கிலம் என்பது கவுரத சமாச்சாரம்.

தமிழ் என்பது தமிழன் பொருளாதார வாழ்க்கையை கவுக்கும் சமாச்சாரம்.

எப்போதும் போல தமிழனுக்கே உரித்தான தனி மனித ஆளுமைத்திறனின், ஒவ்வொரு தமிழனும் அவனுக்கே உண்டான கடமைகள், வாய்ப்புகள், விருப்பங்கள் என்று தன்னால் முடிந்த வரைக்கும் எவர் துணையுமின்று முன்னெடுத்து சென்று கொண்டு இருக்கின்றான்.

தலைவர்கள் என்பவர்கள் வங்கி கணக்கில் கவனமாக இருப்பவர்கள்.  தமிழன் என்பவன் சொங்கிக் கொண்டு சுகமாய் வாழ விரும்புவன்.  முடியாத போது முன்னேற்றத்தில் கவனம் வைத்து ஜெயித்தும் விடுபவன்.

நாம் வாழ்ந்து கொண்டுருக்கும் தமிழ்நாடு உருவான கதையும், அதன் பின்னால் இருந்த ஒற்றுமை இன்மையையும் ஒருங்கே இங்கு பார்ப்பது அவஸ்யம்.  காரணம் அக்கறையுடன் நீங்கள் அக்கரைக்கு பயணிக்க வேண்டிய கட்டாயம் வந்து விட்டது.
சுதந்திரம் வாங்கிய பிறகு மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது, அப்போது சென்னையில் பெரும்பான்மையாக தெலுங்கு மக்கள் வாழாத போதும் கூட சென்னை என்பது ஆந்திராவுடன் சேர வேண்டும் என்று போர்க்கொடி உயர்த்தியோடு ஒரே அணியில் ஒற்றுமையாக இருந்த தலைவர்களின் வரிசைப்பட்டியல் இது.

அன்றைய காங்கிரஸ் தலைவர்கள் பட்டாபி சீதாராமையா, டி.பிரகாசம், அல்லாடி கிருஷ்ணசாமி, நீலம் சஞ்சிவரெட்டி, டாக்டர் இராதகிருஷ்ணனன், என்.ஜி.ரங்கா, பொப்பிலி அரசர், பனகல் அரசர், விஜயநகர அரசர், பசவ பொன்னையா.

இவர்கள் யார்?  இவர்களின் பெருமை என்ன?  என்பதும் நமக்குத் தேவையில்லை.  காரணம் இவர்கள் அத்தனை பேரும் தான் கேட்டுக்கொண்டுருப்பது சுத்த அநியாயம் என்று தெரிந்த போதிலும் அத்தனை சுருதி சுத்தமாய் ஒரே அணியில் நின்றனர்.

நம்முடைய தலைவர்கள் என்ன செய்து கொண்டு இருந்தார்கள்?

கர்மவீரர் காமராஜ், பக்தவச்சலம், கம்யூனிஸ்ட் தலைவர் ராமமூர்த்தி இவர்கள் செய்த காரியங்களும், நீதிக்கட்சியில் இருந்தவர்கள் என அத்தனை பேர்களும் முழுமையாக இங்க விவாதித்தால் அந்த விசயங்கள் இலங்கை வரலாறு என்பதில் இருந்த மாறி தமிழ்நாடு வரலாறு போல் மாறி விடும்.

ஆனால் இன்றைய சிங்காரச் சென்னை, சீர்மிகு சென்னை நம்மிடம் இருப்பதற்கு பல முக்கிய காரணங்களில் பலர் என்ற போதிலும் முதன்மையான காரண தலைவர்கள் இருவர் மட்டும் என்றால் அதில் சந்தேகம் வேண்டாம்.  ஆமாம்.
ராஜாஜியும்.  ம.பொ.சிவஞானம் அவர்களும்.

அன்று மட்டும் அணைத்து தலைவர்களும் ஒன்றாக இணைந்து  இருந்தால் அதிக எண்ணிக்கையில் வாழ்ந்த தமிழர்களைக் கொண்ட பெங்களூர் தமிழகத்துடன் இணைத்து இருக்க வாய்ப்பு அதிகமாக இருந்தது.

கன்னியாகுமரியை தங்களுடன் இணைத்துக்கொள்ள கேரளா அதிகமாக போராடிய போது திரு. நேசமணி அவர்களால் காப்பாற்றப்பட்டது.

நாணயமான நல்ல மனிதர் காமராஜர் எந்த சூழ்நிலையில் அவ்வாறு செயல்பட்டார்? பின்புலம் என்ன என்பதை வேறொரு?.
அது இப்போது தேவையில்லை.  ஆனால் தமிழகத்தின் தேவிகுளம், பீர்மேடு ஆகிய பகுதிகளை கேரளாவிற்கு வழங்கினார்.

இந்த சமயத்தில் தந்தை பெரியார் கூறிய கருத்து மிக முக்கியமானது.

"தேவிகுளம், பீர்மேடு, நெய்யாயிற்றின் கரை, கொச்சி, சித்தூர் ஆகிய பகுதிகள் பற்றி எனக்குக் கவலையில்லை.  அவற்றை மலையாள நாட்டுடன் சேர்க்க வேண்டியது தான்.  சமீபத்தில் சர்தார் பணிக்கர் (மாநில எல்லைக்குழு உறுப்பினர்) சென்னை வந்து இருந்தார்.  அவரை நான் சந்தித்துப் பேசினேன்.  தொழிலுக்குத்தான் தமிழர்கள் அங்கு வந்தார்களேயொழிய நிலம் மலையாளிகளைச் சேர்ந்தது தான் என்று பணிக்கர் சொன்னார்.  நானும் சரி என்று சொல்லி விட்டேன்"
இதே போல் தமிழகத்துக்கு வரவேண்டிய சித்தூரை (முன்னாள் குடியரசுத்தலைவர்) இராதகிருஷ்ணனன், முன்னேற்பாடுகளால் ஆந்திராவிற்குள் போனது.  ஆனால் அவரைவிட நம்முடைய தமிழர் முன்னாள் ஜனாதிபதி ஆர். வெங்கட்ராமன் வார்த்தைகள் உன்னதமானது.
சித்தூர் மாவட்டம் ஆந்திராவில் சேர்க்கப்பட்டு விட்டது.   இனிமேல் தமிழர்கள் அதன் மீது உரிமை கொண்டாடக்கூடாது"
அப்போது இவர் இருந்த பதவி அகில இந்திய காங்கிரஸ் கட்சி செயலாளர்.

மேலும் ஒற்றமை என்பதை நமக்கு அருகில் இருந்தவர்கள் எவ்வாறு உணர்த்தினார்கள்?

விசால ஆந்திரா, சம்யுக்த கர்நாடகா, ஐக்கிய கேரளா என்று ஒரே அணியில் மாநில வளர்ச்சிக்கு போராடினார்கள்.  ஆனால் இங்கு இன்று வரையிலும் நீதிக்கட்சியில் தொடங்கி நேற்று வரையிலும் க கட்சி வரைக்கும் ஏராளமான மக்கள் "நலன்" கொண்ட சமூக ஆர்வலர்கள்?

இடையே வந்து ஆட்சியில் அமர்ந்தவர்களால் பக்கத்து மாநிலங்களை விட நல்ல முன்னேற்றம்.  தொடக்கத்தில் வழிகாட்டியாய் இருந்தோம்.  இன்று கச்சத்தீவு, முல்லை, தொடங்கி பல விசயங்களில் வலிகாட்டியாய்.

ஒரே காரணம் அன்று முதல் இன்று வரையிலும் பெரும்பான்மையான தமிழன் என்பவன் தலைவன் என்பவனை எத்தனை தூரம் தலையில் தூக்கி வைத்து கொண்டாடினாலும் "நாம் தான் நம்முடைய வாழ்க்கை" என்பதை உணர்ந்தவன்.

வளர்ச்சி வேகமாக இருக்காது.  ஆனால் மொத்தத்தில் விவேகமாக இருக்கும். இரண்டாவது தலைமுறையாக வாழ்ந்து கொண்டுருக்கும் நாற்பது சதவிகிதம் கொண்ட தமிழர்களைக் கொண்ட அதிக அமெரிக்க நிறுவனங்களை முக்கிய சாட்சியாக எடுத்துக்கொள்ளலாம்.

உள்ளே இருந்தால் ரசிகர் மன்றம், கட்சி உறுப்பினராக வாழ வேண்டும்.  கடல் கடந்து போய் தமிழ் மன்றம் வைத்து தமிழனாக வளர்ந்து கொண்டுருப்பவர்கள்.

கூட்டம் கூட்டினார்கள்.  குதுகலத்தை தருவதாக உறுதி மொழி கொடுத்தார்.  அலங்கார மொழியில் அச்சத்தை போக்கினார்கள்.  தொடர்ந்து போனவன் தொலைந்தும் போனான்.  கேட்டு திரும்பியவர்கள் மட்டும் திசையெங்கும் பறந்தான்.

அரசியல் பிரச்சனைகள், ஆள்வோரின் இயலாத்தனத்தை பார்த்துக் கொண்டுருப்பது, திரைப்பட மயக்கம், உணர்ச்சி பூர்வ உள்வாங்கல், ஒன்றினைந்து சேர விருப்பமின்னமை என்று மைனஸ் பல இருந்தாலும் எந்த ப்ளஸ் ப்ளஸ் குடிக்காமலே எப்போதும் நல்ல அறிவுடையவன் தமிழன்.

எல்லா இடங்களிலும்.  ஆமாம். ஓபாமா ஊடகத் தொடர்பாளர் (தேவகோட்டை)  வரைக்கும்.

ஆனால் இறுதியில் ஜெயிப்பவன்? தன்னால் தன் உழைப்பால் மட்டுமே உருவான வாழ்க்கையை தகுதியில்லாத தலைவனை தேர்ந்தெடுத்து தன் தலையிலேயே அள்ளி போட்டுக்கொள்பனும் தமிழன்.

படகில் பயணம் செய்வதற்கு ஒரே ஒருவருக்கு மட்டும் கடிதம் மூலம் பயணத்தை தெரிவித்து பயணிப்பபோம்.  காரணம் அவர் தான் தமிழர்களுக்கு கடித கலாச்சாரத்தையே உருவாக்கியவர்.  மற்ற நபர்களுக்கு இடையிடையே நலம் விசாரித்துக்கொள்ளலாம்.

உங்களுடைய ஒத்துழைப்பு என்பது உண்மையான இலங்கை வரலாற்றை படைக்க உதவட்டும்.  இன்று வரையிலும் புரியாத இதன் உள்ளே நடந்து கொண்டுருக்கும் நிகழ்வுகள் இனிமேலாவது உணர்ச்சியை குறைத்து,உண்மையான உணர்வுகளை உருவாக்கட்டும்.

வாழ்ந்து வந்த வாழ்க்கையில் அவரவர் வாழ்விடங்கள் பொறுத்து குளம், ஏரி, கண்மாய், ஆறு, கடல் என்று பார்த்து வாழ்ந்து வந்தாலும் எந்த ஜீவ நதியும் உங்களை கேட்டு ஓடவும் இல்லை.  அதே போல் நிற்கவும் இல்லை.  அது போலத்தான் இந்த தமிழும், தமிழன் வாழ்வும்.  வெளியில் இருந்து பார்த்தவர்கள், உள்ளே கால் மட்டும் நனைத்தவர்கள், முடிந்த வரை நீச்சல் அடித்தப் பார்த்தவர்கள், முடியாமல் மூழ்கியும் போனவர்கள் என்ற போதிலும் வற்றாத ஜீவநதியாக அதன் பாதையில் ஓடிக்கொண்டேதான் இருக்கிறது.

காதும் கண்களையும் திறந்து வைத்துக்கொண்டால் உங்கள் தொழில் மற்றும் குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.  இதயத்தை எப்போதும் திறந்து வைத்து இருந்தால் மொத்த மனித வாழ்க்கையும் சிறப்பாக இருக்கும்.

முயற்சித்தவர்கள் சொல்லியுள்ளார்கள்.  முடியுமா? என்று இனிமேலாவது முயற்சித்து பார்க்கலாமே?

இந்த தலைமுறைக்கு பயன் இல்லை எனறாலும் வரும் தலைமுறையாவது டமிலான இல்லாமல் தமிழனாக வாழ வழிசெய்யட்டும்.

Tuesday, November 10, 2009

நிலமெல்லாம் ரத்தம்

"இறப்பு என்பது சர்வ நிச்சயம்".

தனி விமானத்தில் போய் அத்தனை ஹோமம் செய்த போதும் கூட திருபாய் அம்பானியின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை.  தள்ளிக்கூட போட்டு விட முடியவில்லை. எந்த கையூட்டும் இறைவனிடம் அல்லது இயற்கையிடம் கொடுத்தாலும் நிச்சயிக்கப்பட்டது தான்.

"நின்று போய்விடுகின்ற நிச்சயார்த்த நிகழ்ச்சிகள்" போல் மாறிவிடாது.  நெருங்கி விட்டது என்று உணரும் போது உங்கள் உள் உணர்வு உரையாடலும் தொடங்கி விடும். அறிவாளியா? சிந்தனையாளரா? சிறப்பாய் தான் வாழ்ந்தீர்களா? மற்றவர்களுக்கு சிக்கலைத்தவிர வேறு எந்த மலச்சிக்கலும் எனக்குத் தெரியாது?

எல்லாவற்றையும் புடம் போட்டு நகர்த்தி விடும் "நகர்"வு அது.

அந்த நகர்வின் போது உங்களை நாறடித்துவிட்டு தான் உங்கள் ஆத்மா உங்களை விட்டு நகரும். நம்பவேண்டுமென்ற அவஸ்யமில்லை.  நாள் வரும் போது நீங்கள் உணர்த்த கணத்தில் உங்கள் அருகில் யாரும் இருக்க போவதும் இல்லை.

"உள்வாங்கியவர்களின்" வாழ்க்கை அத்தனையும் இதைத்தான் உணர்த்துகிறது. இனத்தின் போராட்டம் அதன் அழிவு என்பது கூட பெரிதாக தெரியவில்லை.  அலறும் குரல்கள் கூட அத்தனை முக்கியமாய் தெரியவில்லை.  ஆனால் அத்தனை அலறல்களையும் ஆட்சிக்காக வாக்குச் சீட்டாக மாற்ற நிணைப்புள்ளவர்களும், உங்கள் நாற்ற வாழ்க்கை தான் எங்கள் நல்ல வாழ்க்கை என்று உள்ளேயே வாழ்ந்து கொண்டுருக்கும் மாக்களை மனிதர்களை எவ்வாறு உணர்வீர்கள்?

பயம் என்பது வெளியில் தெரியாதவரையில், அல்லது  காட்டிக்கொள்ளாத நேரம் வரையிலும் அதற்குப் பெயர் வீரம்.  மொத்தமும் தெரிந்தாலும் முகம் முழுக்க அமைதியுடன் அச்சப்படாமல் முன்னேறுதல் விவேகம்.  வீரத்துடன் வெள்ளைக் கொடி காட்டி உங்களிடம் வந்து சேர்கிறோம் என்றவர்களுக்கும் நடந்த கதி அதோகதி தான்.  அது தான் சிங்கள "பாசம்".  அதற்குக்கூட பின்னால் இருந்தது உண்மையாக உழைத்துவர்களை ஆயாசம் கொள்ள வைத்துவிட்டது.

ஆனால் வீரம், விவேகம் இரண்டும் அறிந்தும் இச்சைகளுடன் மட்டுமே நகர்வது?

அரசியல்.  ஆட்சி, அதிகார ஆசை/வெறி.

அன்றைக்கு ஒவ்வொரு மன்னர்களுக்குள் உள்ளே உள்ளுக்குள் புகைந்த எரிச்சல், பொறாமை, விவேகமற்ற கொள்கைகள் ஒரு புறம்.

ஆதாயம் அடைய முடியாதவர்கள், அவசரமாய் ஆண்டு விட வேண்டும் என்று சிந்தனையில் இருந்தவர்கள்.

கொள்கை வேறுபாடுகள் என்று கபடி ஆட்டம் ஆடிக்கொண்டுருந்தவர்கள் என்று இருந்தவர்கள் அத்தனை பேர்களும், தமிழ் இனத்தையும், தமிழனின் மொத்த பண்பாட்டு, கலாச்சாரத்தையும் இன்று போல் அன்றும் சிதறடித்தார்கள்.
வந்தவர்களிடம் ஆட்சியை கொடுத்ததோடு மட்டுமல்லாமல் மொத்த கொள்கைகளையும் மகிழ்ச்சியுடன் வராக்கடன் போல் ஒப்படைத்து ஓரமாய் அவர்களிடம் அடங்கி வாழ்ந்தார்கள்.

இந்த ஒரு குணத்தினால் மட்டுமே ஏறக்குறைய 2000 ஆண்டுகள் இந்த தமிழனத்தை வந்தவர்கள் போனவர்கள் அத்தனை பேர்களும் ஆண்டனர்.  அள்ளிக்கொண்டும் சென்றனர்.  கொள்ளி வைக்காமல் கொன்றனர். கொள்கை வேறுபாடுகள் என்று சொன்ன குனக்குன்றுகள் உருவான கலப்பினத்தில் காணாமல் போனார்கள்.

ஒரு பக்கம் பிரபாகரன், நம்பிக்கையாளர்கள்.

அவரை வைத்து வியாபாரம் செய்பவர்கள், உணர்ச்சிகளை தூண்டுபவர்கள், துவண்டு போய் நிற்பவர்கள், மானத்தை மறைக்க ஒரு நீள துண்டு கூட இல்லாமல் துடித்துப் போய் வாழ்பவர்கள்.

மறுபக்கம், கருணா, அம்சா, பிள்ளையான், கிருஷ்ணமூர்த்தி, என்று தொடங்கி டக்ளஸ் வரைக்கும்.  இவர்கள் வெளியில் தெரியும் பட்டியல்.
இங்கே இருக்கும் பல பேர்களையும் டக் டக் என்று பயம் இல்லாமல் இந்த பட்டியலில் சேர்க்க முடியும்.

ஏன் இத்தனை நிகழ்வுகள் தமிழன் வாழ்வியல் முழுக்க?

அறிவு என்பதே உண்மையில் தமிழனத்தில், தமிழனிடம் இருக்கிறதா? என்பதை அச்சத்துடன் தான் யோசிக்க வேண்டி உள்ளது?  நடந்த நிகழ்வுகள், நடத்திக் காட்டிய நிகழ்ச்சிகள், அறிந்த பாடங்கள், புரிந்த கொள்கைகள் ஏதுவுமே தமிழனுக்கு பாடம் கற்றுக்கொடுக்கவில்லை என்றால் இனி எந்த அம்மியில் வைத்து மை போல் நச்சு கொடுக்க வேண்டும்?

சோழர் ஆட்சி சிறப்பாக இருந்தபோதிலும் (கிபி 900 முதல் 1200) ஓயாமல் நடந்து கொண்டுருந்த போரினால் அத்தனை வெறுப்பும் உருவானது.  விரும்பத்தகாத பல விளைவுகளும் தோன்றியது.

சோழருக்கு பின் வந்த பாண்டிய ஆட்சியும் (கிபி 1200 முதல் 1300) வீழ்ச்சி அடைந்ததற்கும் முக்கிய காரணம் தமிழர்களின் முக்கிய குணமான ஓற்றுமையின்மையே.

மாறவர்மன் குலசேகர பாண்டியன் மறைவுக்குப் பின் அவரின் புதல்வர்கள் சுந்தர பாண்டியன், வீரபாண்டியன் ஆகியோரிடையே கடுமையான வாரிசுப் போர் நடந்து.

ஆனால் இன்று நார்வே போல அன்றும் பஞ்சாயத்து பேச கோவூர்கிழார் இருந்தார்.  சோழ மன்னர்களான நலங்கிள்ளியையும், நெடுங்கிள்ளியையும் அன்று அவர் தான் ஒற்றுமைப்படுத்தி உலகறிய அவர்களின் பெருமையையும், தமிழனத்தின் வளர்ச்சியையும் நீண்டு வாழ வழி செய்தார்.

கோவூர்கிழார் இல்லாத காரணத்தால் வீரபாண்டியனிடம் தோற்று ஓடிய சுந்தர பாண்டியன் செய்த காரியம் என்ன தெரியுமா?

படை எடுக்க பயந்து கொண்டுருந்த டில்லி அலாவூதின் கில்ஜீயின் படைத்தலைவன் மாலிக்கா பூரிடம் சென்றடைந்தான்.

பாண்டிய நாட்டுக்கு படையெடுக்க அத்தனை முன்னேற்பாடுகளையும் செய்தான்.  செய்து கொடுத்தான்.  படையெடுத்து வந்தவர்கள் அழித்து, மொத்த வளத்தையும் கைப்பற்றியதோடு அல்லாமல், கொடுக்கப்பட்டுருந்த வாக்குறுதியின்படி ஆசையோடு காத்துருந்த சுந்தர பாண்டியனையும் ஆட்சியில் அமரவிடவில்லை.

வரலாறு காணாத கொலை, கொள்ளை, கற்பழிப்பு, சூறையாடல், கலப்பினம், மதமாற்றுதல்.  மொத்தத்தில் மொத்த தமிழனத்தையும் ஊதி தள்ளி விழுங்கி ஏப்பம் விட்டார்கள்.

அதனை தொடர்ந்தும் வந்த அத்தனை அந்நிய படையெடுப்புகளும் அட்டகாசமாக தங்களுடைய ராஜபாட்டையை தொடர்ந்தார்கள். நம் முன்னோர்கள் அத்தனை பேர்களும் இவர்கள் பின்னால் தொங்கினார்கள்.

வட இந்திய படையெடுப்புகள், இஸ்லாமியர்கள், மராட்டியர்கள், தெலுங்கு நாயக்கர்கள் என்று தொட்டு தொடர்ந்து கடைசியாக வந்து உள்ளே நுழைந்தவர்கள் தான் ஆங்கிலேயர்கள்.

நன்றாக கவனித்துக்கொள்ளுங்கள்.  துணை புரிந்தவனும் ஆள முடியவில்லை.  வாழவும் முடியவில்லை.  ஆனால் இன்று போல் அன்று தூக்கம் மொத்தத்தையும் தொலைத்து தெருவில் நின்றவர்கள் மக்கள் மட்டுமே.

இன்றைக்கும் அன்றைக்கும் என்ன பெரிதான தமிழன் வாழ்வில் முன்னேற்றங்கள்?

ஒவ்வொரு இனமும், போராட்டங்களும் வீழ்ச்சி அடைவதற்கு எத்தனையோ காரணங்களை நீங்கள் வரலாற்றில் படித்து இருக்கலாம். வீரம் இருக்கும்.  அச்சம் ஆச்சரியம் கூட இருக்கும்.  மொத்தத்தில் எல்லாவற்றிலும் எதிர்மறை நியாயங்கள் இருக்கும்.  ஆனால் மொத்தமாக தமிழனின் தொடக்க வரலாற்று தொடங்கி இன்று அறுதிப் பெரும்பான்மை இல்லாத வரைக்கும் ஆட்சிகள் அத்தனையும் நமக்கு உணர்த்துவது ஒன்றே ஒன்று தான்.

தமிழர்களிடம்  இல்லாத ஒற்றுமையின்மை.

சொந்த காசில் சூனியம் வைத்துக்கொண்ட தூதுவளைக்குழுவும் ஒன்றுதான்.  ஒன்றுபடுங்கள். வென்றிடுவோம் என்று நாக்கு வறண்டு கத்தும் ஊதுகுழலும் ஒன்று தான்.

திருந்தவே மாட்டோம் என்றே வாழ்ந்த மன்னர்களின், முன்னோர்களின் வழித்தோன்றல்கள் தானே நாம்?

இவர் தான் மொத்த தமிழனத்தின் துரோகி என்று நாம் யாரை சுட்டிக்காட்ட விட முடிகின்றது,

யாதும் ஊரே. யாவரும் கேளீர் என்று பெருமை பேசிவிட்டு அடுத்து தொடர்ந்து வரும் வரியை எளிதில் மறந்து விடுகின்றோம்.

தீதும் நன்றும் பிறர் தர வரா.

ஒற்றுமை இல்லை என்றால் கூட பராவாயில்லை. ஓதுங்கி ஓரமாய் போய் வாழ்ந்து தொலைத்தால் கூட பரவாயில்லை.

வாழ்ந்தாலும் அடி.  இருந்தாலும் அடி.  உள்ளுக்குள்ளேயே இடி முழக்கம் தொடர்ந்து கொண்டுருக்கும் போது இன்று முள்வேலிக்குள் முகவரி அற்று இருக்கிறோம்?  இதுவே நாளை?

 நீடித்து வாழ்ந்து இருந்த தமிழன் வாழ்வியலை , இந்த எழுத்துக்களை புலம் பெயர்ந்து வாழ்பவர்கள் படிக்க்கும் அளவிற்கு நகர்த்த நீங்கள் அளிக்கும் ஓட்டு.  இது ஒன்று மட்டும் தான் மற்றவர்களையும் சென்றடையும் வழி.

விழிகளில் வழியும் நீர் விடியலைக் காட்டாமலே போகும்?

தமிழனின் வாழ்வியல் சங்க காலம் முதல் இன்று முகவரியற்று முள்கம்பிகளுக்குப்பின்னால் முடங்கிக்கிடப்பது வரைக்கும் உள்ள தொடர் ஓட்டம்.

Sunday, November 08, 2009

எழிலாய் பழமைபேசி

"சூரியன் அஸ்தமனம் இல்லாத நாடு"  எங்களுடையது என்று இறுமாந்து இருந்தவர்களின் ஆளுமையில் இந்தியாவும் இருந்தது.  தொடக்கத்தில் உள்ளே வந்தவர்கள் நாடு பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வரவில்லை.  அவர்கள் வணிக நோக்கத்திற்காகவே மட்டும் வந்து இறங்கினார்கள்.  கைமாறி வரும் பொருளுக்கும், நேரிடையான கொள்முதல் என்பதன் சூட்சுமம் உணர்ந்தவர்கள் அவர்கள்.
அதனால் தான் சூறாவழியும் சுறாமீன்களும் அவர்களின் எண்ணத்தை தடை போட முடியவில்லை.

அந்த நிமிடம் வரையிலும் இந்தியாவில் மத மாற்றத்தை வலுக்கட்டாயமாக உள்ளே புகுத்தி உண்டு இல்லை என்று படுத்திக்கொண்டுருந்த,   கொள்ளை லாபத்தால் உண்டு வாழ்ந்து கொண்டுருந்த அத்தனை டச்சு,பிரெஞ்சு போன்ற பல கெட்டவர்களின் கொட்டமும் அடங்கியது.
நோக்கம் தெளிவாக இருந்தது.

வணிகம். லாபம்.

அதைவிட இருப்பு முக்கியம்.

அவர்கள் பார்வையில் இல்லாதவர்கள், இருப்பவர்கள் என்ற பாகுபாடு எதுவும் தொடக்கத்தில் இல்லை.

ஆனால் "நாங்கள் இப்படித்தான்" என்று வெட்டவெளிச்சம் போட்டுக் காட்டியவர்கள் நம்முடைய முன்னோர்கள்.

உங்கள் வீட்டுக்கு அருகே உள்ள பக்கத்து நிலம் பல ஆண்டுகள் கவனிப்பு இல்லாமல் இருந்தால் என்ன செய்வீர்கள்?  கவனிப்பு இருந்தும் தீர்கக முடியாத பங்காளிச் சண்டை காலம் முழுக்க முடிவே இல்லாமல் போய்க்கொண்டுருந்தால்?

நீங்கள் நியாயம் தர்மம் பார்த்துக்கொண்டு ஆசையை உள்ளே அடக்கிக்கொண்டு இருப்பீர்கள்.  ஆனால் இன்றைய தங்கத் தலைவர்கள் அவ்வாறு இருக்க முடியுமா?  அவர்களின் கடமை கண்ணியம் கட்டுப்பாடு சும்மா இருக்க விடுமா?

உள்ளே வந்தவர்களை " நீங்க தான் சாமி? " என்று கும்பிட கும்பிட குனிய வைத்து "கும்மாங்குத்து" குத்த தொடங்கினார்கள்.  முழுமையாக மூன்று தலைமுறைகள் , ஊருக்கு அனுப்பி, உள்ளே ஆண்டு வந்தவர்கள் அவர்களின் உல்லாச எண்ணத்தில் என்ன உருவாகி இருக்கும்?

" நீங்கள் ஆண்டை சாமி?  நாங்கள் உங்கள் கீழ் அடங்கிப் போக வேண்டியவர்கள்" .

நேரிடையாக சொல்லவில்லை.  ஒருவருக்கொருவர் அடித்து செத்துக்கொண்டு நிரூபித்தார்கள்.

மூன்றாவது தலைமுறையில் தான் பிரிட்டன் அரசாங்கத்தின் கைக்கு இந்தியா போனது.  கிழக்கிந்திய கம்பெனியும் ஓலமோ, ஒப்பாறி மூலமே ஊரைக்கூட்ட வில்லை.  அவர்களின் ஒரே நோக்கம் வணிகம்.  உள்ளே புகைந்து கொண்டுருந்த கலவரம் ஒரு பக்கம்.

சிந்தனைகள் சிதறினால் வணிகமும் சில்லறை கடை போல் ஆகிவிடாதா?

வாழ்க்கையில் சிறந்து விளங்குபவர்களின் சிந்தனைகளை ஊன்றி கவனித்துப் பாருங்கள்? நெருக்கடியான சூழ்நிலையில் அவர்கள் எடுக்கும் முடிவு தான் அவர்கள் சிறப்பானவர்களா? இல்லை சில்லறைத்தனமானவர்களா? என்பதை நமக்கு உணர்த்தும்.

இன்றைய ஓலம் ஊரெங்கும் ஒலித்தாலும் நமக்கு நம்முடைய தலைவர்களை அடையாளம் காட்டவில்லையா?

கிழக்கிந்திய கம்பெனியும், பிரிட்டன் ஆட்சியாளர்களும் தெளிவாக புரிந்து கொண்ட காரணத்தால், உருவாக்கிய சிறப்பான திட்டமிடுதல் காரணமாகத்தான்  இங்குள்ள அத்தனை செல்வமும் சிந்தாமல் சிதறாமல் அங்கே போய்ச் சேர்ந்தது.

கிழக்கிந்திய கம்பெனி அன்று விட்டுக்கொடுத்ததால் கெட்டுப்போய்விடவில்லை. அவர்களின் ஒற்றுமை அன்று தொடங்கியது.

இன்று வரைக்கும் அவர்களை ஐ.நா மேஸ்திரி வேலை வரைக்கும் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது.  நாம் எப்போதும் சித்தாள் வேலையே போதுமென்று இன்று வரையிலும் ஊடகம் பார்த்து சிரித்துக்கொண்டு இருக்கிறோம்.

உணர்ந்தவர்கள், உள்வாங்கியவர்கள்

இன்றுவரையிலும் உலகை ஆண்டு கொண்டுருக்கிறார்கள்.

நாம் உலக வங்கி பார்வையில் ஆட்சி நடத்திக்கொண்டுருக்கிறோம்.

நம்முடைய தமிழினம் ஏறக்குறைய ஆறு கண்டங்களில் வாழ்ந்து கொண்டுருக்கிறார்கள்.  ஆனால் ஒற்றுமையாக உணர்வுடன் தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறோமா?  இருந்து வாழ ஒரு இடம்.  படுத்துக்கொண்டு பார்க்க ஒரு தொலைக்காட்சி. பரவசமாய் படிக்க ஒரு புத்தகம்.  படுக்கும் போது முடிந்தால் அருகில் மனைவி இல்லையேல் ஒரு பானம்.  போதும்.

சுருக்கமாய் வேண்டும். எல்லாமே சுகமாய் இருக்க வேண்டும்.  சுத்தம் என்பது அடுத்தவர் பின்பற்றுவது.  அடிக்க வருகிறான் என்று ஐயோ சாமி, பேஸில் மட்டும் அடிக்காதே என்று தன் கவுரதயைக் காப்பாற்றிக்கொள்வது.

சிறப்பாக சிந்திக்க கற்றுக்கொண்ட அத்தனை தமிழர்களும் வேறு ஒரு தளத்தில் போய் வாழத் தொடங்கி விடுவார்கள்.  காரணம் ஒரு துளி விசம் என்பது மொத்த பாலையும் கெடுத்து விடக்கூடியது என்பதை உணர்ந்தவர்கள் அவர்கள்.

தன்னை, தன்னுடைய ஒற்றுமையை இனத்தால் உணர்வால் ஒன்றினைந்து வாழ்வதை விட மதத்தால், ஜாதியால் வெளிக்காட்ட விரும்புவன் தமிழன் என்றால் எந்த சந்தேகமும் இல்லை.  அக்கறை இல்லாமல் அக்கரையில் இருந்தால் என்ன?  எனக்கென்ன என்று இங்கே இருந்தால் என்ன?  உள்ளுக்குள்ளே குழி பறிப்பதாகட்டும்?  உன் யோக்கியதை எனக்கு தெரியாதா  என்பதாகட்டும்?
தலைவிதியே என்று தனக்கு தானே சமாதானம் செய்து கொள்ளும் போதே தன்னுடன் தன்னுடைய வழித்தோன்றல்களையும் வாழ வழி இல்லாமல் செய்பவன் என்பதை உணர்வதே இல்லை.  அத்தனை தமிழனும் மூன்றே மூன்று கிளை நதிகளில் தான் பயணத்தை தொடங்குகிறான்.

இந்து, முஸ்லீம், கிறிஸ்த்துவன்.

ஆனால் மூன்று நதிகளாக பிரிந்து பயணத்தை தொடங்கினாலும் ஒரே இடத்தில் சேர்ந்து "தலைவிதியே இதற்கு காரணம்" என்பதை கெட்டியாக பிடித்துக்கொண்ட உழைப்பு என்ற ஓடத்தை விட்டு ஓலத்துடன் பயணம் முழுக்க பரிதவிக்கின்றான்.

" இப்படி இருப்பதற்கு காரணம் நீ தான் காரணம் இது பௌத்தம் சொல்லும் தத்துவம்.   ஆனால் தமிழனின் மொத்த வாழ்வியலிலும் கடைபிடித்துக்கொண்டு வரும் இறைபக்தி கூட சற்று ஆச்சரியமாக இருக்கிறது.

ஆமாம்.  தன்னுடைய கர்மத்தை செய்து இறைவனை அடைவது "கர்ம மார்க்கம்".

அறிவைப் பயன்படுத்தி இறைவனை அடைவதற்கு பெயர் "ஞான மார்க்கம்".

ஆனால் இந்த இரண்டையும் விட எளிய பாமரத்தனமாக "பக்தி மார்க்கத்தை" தான் மத வேறுபாடுகள் இல்லாமல் அத்தனை தமிழர்களும் விரும்புகிறார்கள்.

அன்றும் இன்றும் என்றும் இந்த "பக்தி மார்க்கத்தை" கெட்டியாக பிடித்துக்கொண்டு பயணிக்கிறார்கள்.  ஆலயத்திற்குள் சென்று போய் கொட்டி விட்டால் போது.  உடனடி தீர்வு கைக்கு வந்து விடும்.  ஆத்ம திருப்தி.  பூரண மகிழ்ச்சி.

இந்த மார்க்கம் கடைபிடிக்கத் தொடங்கிய தமிழர்களைப் பார்த்து தான் அத்தனை மூட நம்பிக்கைகளும் வரிசை கட்டி வந்து நெருங்கி வந்தது.  அவன் எலும்புகளையும் நொறுக்கிவிட்டது.

நம்பிக்கை என்பது போய் மூடநம்பிக்கைகள் அவனை ஆட்சி புரிய ஆரம்பித்தது.  அத்தனை நல்ல மனிதர்களும் போய் நாற மனிதர்கள் உள்ளே வரத் தொடங்கினார்கள்.  பின்பற்றுபவன் விடமுடியாமல்.  பின்பற்ற நினைப்பவன் வினாக்குறியோடு?

மதமும் வளரவில்லை.  மார்க்கமும் புரிபடவில்லை.  மூலமும் போய்விட்டது.  முகவரியும் மாறிவிட்டது.

வலிக்காத சிந்தனைகளில் இருந்து எங்கே வழி பிறந்து இருக்கிறது.

ஒவ்வொரு துன்பமான காலகட்டத்திலும் மேலை நாடுகளில் கவிஞர்கள், தத்துவ அறிஞர்கள், புரட்சிகள், மேன்மையான சிந்தனைகள் உருவானது. மக்கள் அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்ல உதவியாய் இருந்தது.

ஆனால் இங்கு ஞானிகளும், ரிசிகளும்,வேதங்களும், விற்பனர்களும், வியாக்கியானங்களும், வினோத நம்பிக்கைகளும் தோன்றின.

இந்த வினோத நம்பிக்கைகள் அத்தனையும் உள்ளே உண்மையாக இருந்த சிந்தனைகளையும் மழுங்கடிக்கப்பட்டதாக மாற்றிவிட்டது.

மகாத்மா காந்தியை கொலை செய்தவர்கள் சொன்ன முதன்மையான காரணம் என்ன தெரியுமா?  அத்தனை மக்களையும் கோழையாக மாற்றி விட்டார்.  தன்னை தானே காப்பாற்றிக்கொள்ள முடியாத மக்கள் சகிப்புத்தன்மையுடன் வாழ்ந்தால் என்ன?  வாழாமல் போனால் தான் என்ன?

மேலும் மேலும் உங்கள் பணி என்பது சமூகத்தின் பிணி.  போதும் ஐயா என்று சொல்லாமல் குண்டு மூலம் பதில் உரைத்தார்கள்.

எது எளிதோ, எது கடினம் இல்லையோ? அது தான் தமிழனின் முதல் தேர்வாக இருக்கும்.  விழிப்புணர்ச்சி என்பது அத்தனை சீக்கிரம் உள்ளே நுழைந்து விடாது.  அது எத்தனை விடியாத இரவுகளை அறிமுகப்படுத்தினாலும் கூட.

அறிவை கூர்மையாக்கினால் அது ஆத்மாவை சுத்தப்படுத்திவிடும்.  சுகம் இல்லாத, சுகாதாரம் இல்லாத எந்த விசயங்களையும் உள்ளே அனுமதித்து விடாது,  இதனால் தான் இந்த தமிழனின் உணர்ச்சிகளை நன்றாக உணர்ந்த இன்றைய தலைவர்கள் உணர்ச்சியை தூண்டி தூண்டி தூண்டிலில் சிக்கிய புழு போல் மாற்றி வைத்து இருக்கிறார்கள்.

அடுத்த தேர்தலுக்கு நாட்கள் இருக்கிறது.  மறக்க வைக்க மனப்பாடம் செய்துள்ள வரிகள் அன்று நம்மிடம் வந்து சேரும்.  அது வரையில் பழைய நினைவுகளை அசைபோட்டுக்கொண்டு அவர்களை தொடர்வோம்?

தமிழனின் வாழ்க்கையை மூவாயிரம் ஆண்டு வாழ்வியலை முயன்ற வரை முட்டி நின்று பார்க்கும் சிந்தனையோட்டம் இது.

Saturday, November 07, 2009

அறிவுத்தேடல்

இன்றும் என்றும் எந்தக் கொடுமையான சூழ்நிலையிலும் கொண்டு போய் தன்னை பொருத்திக்கொண்டாலும் தமிழன் என்பவனால் மற்றவர்களைக் காட்டிலும் பல மடங்கு தன்னுடைய ஆளுமை தன்மையை நிலை நாட்டி விட முடியும்.

முட்டி மோதி உள்ளே நுழைந்து வெளிக்காட்டிக் கொள்ள முடியும்.

முடியாத போதும் கூட முயற்சியில் சாதிக்க அத்தனை விசயங்களையும் ஆர்வத்துடன் கற்றுக்கொள்வதும் உண்டு.  கலக்கம் என்பது தமிழன் வாழ்வில் அடுத்தவர் உருவாக்குவது தானே அவனுக்கு அவனால் உருவாவது இல்லை.

கடல் கடந்து போய் தட்டு கழுவுவது முதல் கணிணி ஆளுமை வரைக்கும்.

உழைக்காமல் ஊடகத்தின் முன் ஊத்தப்பல் நாற்றத்தோடு பத்து மணி நேரம் அமர்ந்து இருக்கவும் முடியும்.  உடனே முடிக்க வேண்டிய காரியம் இது என்றவுடன் ஓடிப்போய் ஒன்றிவிடுவதும் உண்டு.  உழைக்க தயங்காத இனம் தமிழினம்.

கடல் கடந்து சென்றவர்கள் இன்று வரைக்கும் எதற்கும் கண்கலங்குவது இல்லை.  காரணம் அவர்களே தெரியாத அத்தனை உழைப்பும் , ஆளுமையும் அங்கு தான் இனம் கண்டு கொள்கிறார்கள்.

வெள்ளிக்கிழமை மதியம் என்றால் அடுத்த நாற்பது மணி நேரமும் உழைத்தோம் என்று ஓய்வு எடுக்க கும்மாளம் போட கிளம்புவர்கள் மத்தியில் அந்த நாற்பது மணி நேரத்தையும் தனது குடும்பத்துக்காக உழைப்பின் மூலம் தூக்கம் மறந்து குடும்பத்து தொல்லைகளை தூர விரட்டுபவர்களை எவ்வாறு சொல்வீர்கள்?

ஆனால் தொடக்கத்தில் தமிழனத்தின் முன்னோர்கள் வீரத்தின் மூலம் தன்னுடைய ஆளுமையை, ஆண்மையை நிலைநாட்டினார்கள்.  இன்று தமிழனம் தன்னுடைய தனி மனித உழைப்பின் மூலம் நிலை நாட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.

இன்று திடீர் தலைவர்களின் அக்கப்போர் அறிக்கைகளும்,  திடுக்கிடக்கூடிய வார்த்தை அலங்காரங்களும் எதை உணர்த்திக்கொண்டு இருக்கிறது?

அன்று மன்னர்களும், ஆளுமை புரிந்தவர்களின் மேதா விலாசங்கள் எதையும் இன்று வரையிலும் சரியாக புரிந்து கொள்ளப் படாவிட்டாலும் தமிழன் என்பவன் தன்னுடைய தகுதியை புரிந்தவன்.  தலையில் உள்ள அறிவை உண்ர்ந்தவன்.

காலம் போட்ட அவசர கோலத்தில் இன்று வீரமென்ற சொல்லை விவேகம் என்ற சொல்லுக்குள் அடக்கி சகிப்புத்தன்மையாக மாற்றிவிட்டுள்ளது.  கத்தி, வாளை தூக்க முடியாதவர்கள் இன்று புத்தியை மட்டும் சுமந்து கொண்டு கடல் கடந்து சென்று கொண்டுருக்கிறார்கள்.

சோழ அரசன் (கிமு 5ம் நூற்றாண்டு) கரிகாற்பெருவளத்தான் வட இந்திய மன்னர்கள் அத்தனை பேரையும் வென்று வரிசையாக வென்ற நாடுகளையும் தன்னுடைய ஆளுமைகக்குள் கொண்டு வந்தவன்.  இறுதியாக இமயத்தில் தமிழர் சின்னத்தை பொறித்து கண்ட வெற்றிகளை சிலப்பதிகாரம், பட்டினப்பாலை, கலிங்கத்துப்பரணி போன்ற இலக்கியங்கள் விரிவாக எடுத்துரைக்கின்றன.  இவர் தான் உலகத்தின் முதல் அணையை உருவாக்கி கல்லணையை காவிரிக்குக் குறுக்கே கட்டியவர்.

பூலித்தேவன் (18ம் நூற்றாண்டு) வெள்ளையருக்கு கப்பம் கட்ட மறுத்து எதிர்த்து நின்ற போது அவனை அழித்தே தீருவதென்று வெள்ளை அதிகாரி ஹெரான், பெரும்படைகளுடன் வந்தான்.  அவனுடன் மற்ற தளபதிகள், கும்பனி படைகள் (நம்மவர்கள்), தளபதி கான்சாகிப் என்கிற மருதநாயகம், நவாப் முகமதலியின் படைகள், தலைவன் மகபூல்கான் போன்ற கூட்டணி படைகளும் ஒன்று சேர்ந்து முற்றுகையிட்டது.

ஒற்றுமை என்பது மற்ற இனத்தை விட நம்மவர்களின் பெரிய குறைபாடு என்பதை அன்று முதல் இன்று வரையிலும் நாம் உணர்ந்து கொண்டு தானே இருக்கிறோம்?

ஆனால் இவர்கள் அத்தனை வைத்திருந்த அத்தனை நவீன ரக ஆயுதங்கள், பெரும்படை பலம் என அத்தனையும் தன்னுடைய மன உறுதியால் தன்னுடைய சுத்தமான வீரத்தால் விரட்டி அடித்தான்.  கடைசியில் வெள்ளையர் நீ கப்பம் தரவேண்டாம்.  தருவதாக மட்டும் ஒத்துக்கொள்.   காரணம் நீ மறுப்பதாக தெரிந்தால் மற்ற அனைவரும் அதேபோல் மறுப்பார்கள் என்றார்.

இது வரலாற்று உண்மை.  இப்போது புரியுமே குறைந்த வீரர்கள். நிறைந்த வீரம்.  கதறடித்த கட்டுறுதி.

காரணம் தமிழனின் வீரம் என்பது எவருடனும் ஓப்பிட முடியாது.  எதையும் சாதிக்கும் மன உறுதி உடையது. மற்ற எந்த இனத்தையும் விட அதிகமாக இருந்தது தமிழினத்தில் மட்டுமே.  வரலாற்று சான்றுகள் அத்தனையும் இவ்வாறு தான் நமக்கு இன்று வரையிலும் பாடமாக பட்டயமாக காட்சியளித்துக்கொண்டு இருக்கிறது.

ஒவ்வொரு காலத்திலும், ஒரு ராஜாவோ, ஒரு நாயகனோ நம் இனத்தை அந்த அளவிற்கு ஆளுமை செய்து இருக்கிறார்கள்.

இரண்டாம் உலகப்போரில் சிதறடிக்கப்பட் ஜப்பான் இன்று ஒரு வணிக வல்லரசாக உருவானது. இதை நாம் இன்று பார்த்துக்கொண்டு தானே இருக்கிறோம்?

கிரேக்கம், ரோமானியத்தை முன்னோடியாக வைத்து முன்னேறினார்கள்.  ஐரோப்பியர்கள் ஜப்பானியரை காட்டியே சீன இனம் உயர்ந்தது.  அரேபியரைக் காட்டியே யூத இனம் உயர்ந்தது.  ஆங்கிலேயர்களின் வளர்ச்சியைக் காட்டியயே ஜெர்மானிய இனம் வளர்ச்சி அடைந்தது.

ஆனால் இன்று தமிழனுக்கு என்று நாடும் இல்லை.  தமிழனை டெல்லியில் நாடுவாரும் இல்லை.

நடுக்கடலில் உணவு ஏற்றிச் சென்ற கப்பலைப் போல, இலங்கையைத் தவிர வேறு எந்த நாட்டுக்கு வேண்டுமானாலும் நாங்கள் போகத்தயார் என்று நடுக்கடலில் அபயம் கேட்டுக்கொண்டுருப்பவர்களைப் போல நம் தமிழினத்தில் ஒலியும் காற்றில் தான் கரைந்து மறைந்து கொண்டு இருக்கிறது.

நாடு நல்ல சூழ்நிலையில் இருந்தாலும் நயவஞ்சகத்தால் நல்லதைத் தவிர அத்தனையும் செய்ய முடிகின்ற தலைவர்களால் தமிழினத்தின் வெற்றிடத்தை எதைக்கொண்டு நிரப்ப முடியும்?
இன்று பெரிய வெற்றிடம்.
காரணம் இன உணர்வும் இல்லை. உணர்வு ஊட்ட வந்தவர்களும் உண்மையானவர்களாக இல்லை.

இனத்தின் பெயரால், மொழியின் பெயரால் இன்று வரையிலும் நமக்கு ஊட்டிக்கொண்டுருப்பவர்கள் ஒன்று ஊட்டியில் ஓய்வெடுக்கிறார்கள்.  இல்லையேல் குத்தீட்டி வரிகளால் குத்திக்கிழிக்கிறார்கள்.  ஒவ்வொரு தலைவரின் பங்களிப்பும் உண்மையாக இருக்கும்பட்சத்தில் உலகத்தில் இருக்கும் தமிழர்களின் பாதிப்பு இன்று வரையிலும் ஏன் ஓலமாய் நம் காதில் வந்து ஒலிக்கின்றது?
முன்னோர்களான மன்னராக இருக்கட்டும்.  ராஜாவா,நாயகனாக, குறுநில மன்னராக, பாளையக்காரராக, பட்டத்து ஜமீனாக இருக்கட்டும்.  அவர்களின் அத்தனை வீரமும் சுத்தமானது.  தன்னுடைய ஆளுமையில் இருந்த மக்களுக்காக தன்னையே அர்பணித்தவர்கள்.

வீரம் என்பது அவர்களின் முரட்டுத்தனத்தின் குறியீட அல்ல.  முட்டாள்காளாக வாழ்ந்து விவேகமற்ற செய்ல்களும் செய்தவர்கள் அல்ல.  அவர்களின் ஆளுமை சுருங்கி இருந்ததே தவிர அவர்களின் எண்ணங்களில் இன்றைய தலைவர்கள் போல் எந்த சுருக்கமும் இல்லை.

அன்று வனத்தில் வாழ்க்கை அமைந்த முன்னோர்கள் நறுமணங்களையும் சுவாசித்து சுகமாகவும் வாழ்ந்தார்கள்.  சுகாதாரமாகவும் வாழ்ந்தார்கள்.
இன்று வனமும் அழிந்து கொண்டே வருகின்றது.  மனமும் இருண்டு கொண்டே தொடர்கின்றது.

வனத்தை,தேயிலைத் தோட்டத்தை உருவாக்கியவர்கள் தேம்பி அழக்கூட தெம்பில்லாமல் முள் கம்பிகளுக்கு பின்னால் முகவரி இழந்து வாழ்க்கை எனபதை வாழ முடியாமல் இறப்பு வராதா? என்று ஏங்குகிறார்கள்.

ஆனால் முன்னோர்களாக வாழ்ந்த மூதாதையர்கள் விவேகம் என்று கருத்தில் கொண்டு நம் இனத்தை கதற விட்டது இல்லை.  இனம் முக்கியம்.  அதைவிட வளர்த்து உணர வைக்க வேண்டிய இனமான உணர்வு முக்கியம்.

உணர்ந்து இருந்தால் உணர்த்திக் காட்டியவர்கள் இன்று இருந்து இருந்தால்   ஐந்து லிட்டர் தண்ணீர் கிடைக்காமல் விக்கிக்கொண்டு ராணுவ வீரர்களிடம் தன்னை தொலைக்க வேண்டியதும் இல்லை.

அறிவைத் தேடு.  அது தான் உன் நம்பிக்கை.  வேண்டாம் இந்த மூட நம்பிக்கை  என்றவர் தந்தையாய் மறைந்து விட்டார்.  படிடா.  அது தான்டா சொத்து.  உன் கர்மத்தை போக்கக்கூடியது அதுமட்டும் தான் என்றவர் கர்மவீரராக காட்சியாக சிலையாக நிற்கிறார்.
இதயத்தில் இடம் பெற்றவர்களும், இன்னலை தீர்க்க வந்து விட்டேன் என்றவர்களும் நடத்தும் ஊடகப்போரில் உங்களையும் என்னையும் எங்கே போய் தேடப்போகிறார்கள்?

அவர்கள் தொலைந்து போயே நாளாகிவிட்டது.

தமிழனின் வாழ்வியல் தடங்கள்.  தொடக்கம் முதல் இன்றைய முடக்கம் வரைக்கும்.

சிந்தனையோட்டம் சரியென்றால் ஓட்டுப்பட்டையின் மூலம் முன்னெடுத்து உணர்வை உள்வாங்குவோம்.

தவறென்றால் விமர்சித்து விரும்பாதவைகள் இல்லாமை ஆக்குவோம்.

Thursday, November 05, 2009

இரவுப்பறவை

இயலாமை என்பது அக்கறையின்மையின் பக்கத்து வீட்டு பங்காளி.

தமிழன் என்ற இனத்தில் இன்று வரையிலும் இயலாமை என்ற வார்த்தை வசதிகளுக்கு ஏற்றபடி மாறி வந்து கொண்டேதான் இருக்கிறது.  காலம் மாறும்.  காட்சிகள் மாறும்.  ஆனால் மாற்றம் ஏதும் பெறாமல் இந்த இயலாத்தனம் மொத்தத்தையும் மற்ற இனத்தை விட தமிழினம் அதிகமாக பெற்றுள்ளது.

மாற்றம் என்பது மாறாதது.  ஆனால் இங்கு மாற்றம் ஏதும் இல்லை.

இத்தனை இயலாமையா? நம்முடைய தமிழின முன்னோர்களிடம் இருந்தது என்று வழிநெடுக பல உதாரணங்கள் பார்த்த போதும், கீழே உள்ள உதாரணத்தை பார்த்தபோது இன்று பார்த்துக்கொண்டுருக்கும் அவலத்தை விடவும் கொடுமையாக இருக்கிறது.

தில்லி அரசாட்சி நடத்திக்கொண்டு இருந்தவன் (கிபி 1311) மாலிக்காபூர் என்ற அலி மன்னர்(?).  நம் ஊரை நோக்கி படையெடுத்து வரப் போகிறார் என்ற செய்தி வந்தது.  செய்தி கிடைத்ததும் தான் தாமதம் திருச்சிக்கு அருகே உள்ள ஊரில் (ஊர் குறிப்பு இல்லை) உள்ள அத்தனை பொதுமக்கள் செய்த செயலை அங்கு சேவை பணியில் இருந்த கிறிஸ்துவ பாதிரிமார்கள் போப்பிற்கு கடிதம் வாயிலாக தெரியப்படுத்தி உள்ளனர்.

"ஊர் மக்கள் அனைவரும், ஊரின் திறந்த வெளிக்குத் திரண்டனர்.  ஆண்கள், பெண்கள், முதியோர், இளையோர், குழந்தைகள் என்று இன்ன பிறர், அவர்களுடன் கூடத் தாம் வளர்த்த ஆடுகள், மாடுகள் அனைத்தையும் ஒருங்கு கூட்டினர்.  அனைவரையும் சுற்றிப் பெரிய விறகுகளைக் கொண்டு வந்து விறகு வேலி அமைக்கப்பட்டது.  முடிவில், விறகு வட்டத்தின் உள்ளே திரண்டிருந்த ஊர்மக்கள், விறகுகளுக்குத் தாமே தீ மூட்டிக் கொண்டனர்.  அனைவரும் கதறிக் கதறித் தீயில் வெந்து செத்தனர்"

தடுக்க முயன்றவர்கள் தட்டுத்தடுமாறியது தான் மிச்சம்.  வேறு என்ன அவர்களால் செய்து விடமுடியும்?

தொடக்க காலத்தில் வாழ்ந்த மன்னர்கள் என்பவர்கள் வீரம் என்பதை வீரனாக வாழ்ந்து காட்டினர்.  ஓரளவிற்கேனும் நாகரிகம் என்பது தவழத் தொடங்கிய காலத்தில் இருந்த தொழில் நுட்பத்தை வைத்துக்கொண்டு 500 ஆண்டுகளுக்கு முன்னால் கடல் பயணத்தின் மூலமாக வந்த அத்தனை மேலைநாட்டினரும் கடல் கடந்து வாணிபம் செய்ய என்ற போர்வையில் உள்ளே வந்து அத்தனை நாடுகளையும் தங்கள் ஆளுமைக்குள் கொண்டு வந்தார்கள்.

ஆனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழ் மன்னர்களான சோழர்கள் நான்கு வகையான படைகளையும் தாங்களே வடிவமைத்து, பயணம் செய்து வெற்றிக்கொடி நாட்டிய நாடுகளின் பட்டியல் இது.

கடாரம் (மலேசியா), சீயம் (தாய்லாந்து), சாவகம் (இந்தோனேசியா), குமர் (கம்போடியா), புட்கம் (பர்மா), சிங்களம் (இலங்கை).

கற்பனையில் கொண்டு வாருங்கள். யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை, மற்ற போர் வீரர்கள், தேவையான உதவியாளர்கள், என்று இத்தனை பேர்களுக்கும் தேவையான அன்றாட தேவைகள்.  ஆயிரம் மைல்களை கடந்து சென்றதோடு அல்லாமல் அத்தனை இடங்களிலும் வெற்றிக்கொடிகட்டு என்று வெற்றியை நாட்டிய இவர்களின் வீரத்தை வெறும் வார்த்தைகளால் புகழ்ந்து விட முடியுமா?

வளர்ந்த இன்றைய தொழில் நுட்பத்தில் இன்று எத்தனையோ ஓட்டைகள்.  கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏராளமான தொழில் நுட்ப உதவிகள் இருந்தாலும் வீரம் என்பது என்னவென்று தெரியாதவர்கள் ஏதோ ஒரு குளிர்சாதன அறைக்குள் அமர்ந்து கொண்டு ஆளுமை செய்து கொண்டுருப்பவர்களை எந்த வகையில் கொண்டு வருவீர்கள்?

அவர்கள் முதிர்ச்சி அடையாதவர்கள், முன்னேற்றத்தை பயன்படுத்த தெரியாதவர்கள் என்று எளிதான வார்த்தைகளுக்குள் அடக்கினாலும் தமிழனின் வீரம் என்பது மற்ற எந்த இனத்தையும் விட மாசற்றது.  விளங்கிக்கொள்ள முடியாத கால நிலை, பருவ நிலை, சூழ்நிலை, அத்தனையும் தங்களுடைய வீரம் ஒன்றினால் மட்டுமே சாதித்து காட்டியவர்கள்.

சென்ற இடங்களில் எவரும் காலணி ஆதிக்கத்தை நிலைநாட்டவில்லை.  எதையும் திணிக்கவில்லை.  புலிக்கொடியை பறக்க விட்டத்தில் அவர்களின் புனிதப்பயணம் முழுமை அடைந்தது.  ஆமாம்.  கல்வெட்டுகளும், காப்பியங்களும், இலக்கியங்களும் அவ்வாறு தான் ஒப்புவிக்கினறன.

பொருளாதார ரீதியாக அங்குள்ளவற்றை இங்கே கொண்டு வராத மன்னர்கள் கூட ஆச்சரியமாக தெரியவில்லை.  ஆனால் கல்வெட்டுகள், குறிப்பேடுகளில் கூட சமஸ்கிருதம் தான் ஆட்சி மொழியாக அங்கங்கே பரிணமிக்கின்றன.  வீரமாய் இருந்தவர்களை விவேகம் கொண்டு அருகில் இருந்தவர்களின் அற்புத ஆலோசனைகள் விளைவாக உருவானது.

தன்னுடைய பலம் என்பதையே பலவீனமாக கருதிக்கொண்டவர்கள்.  இன்று வரையிலும் அதுவே தொடர்ந்து கொண்டுருப்பது தான் ஆச்சரியத்தின் உச்சம்.

மரபுக்கோளாறு ஒரு பக்கம்.  மாற்ற முடியாத சிந்தனைகள் மறுபக்கம்.
மரபு சார்ந்த விசயங்களில் அத்தனை மயக்கம் நம்முடைய தமிழனத்திற்கு. பேரனுக்கு தாத்தாவின் பெயரை சூட்டுவதுடன் நம்முடைய கடமை முடிந்து விடுகிறது.  பண்பு, பாரம்பரியம், கலாச்சாரம் போன்றவற்றை எளிதில் மறந்து மறைத்து விடுகின்றோம்.  ஆளுமை என்பதில் உள்ள உண்மையான அர்த்தத்தை உணர்த்த தவறி விடுகிறோம்.  அவனே அது உணரும் போது அனர்த்தமாகிவிடுகிறது.
நம்முடைய ஆற்றலை நாம் உணராத போதும் கூட நம்மை ஆள வந்தவர்கள் மிக எளிதாக உணர்ந்தார்கள்.  நம்மிடம் உள்ள உழைப்பை மிக எளிதாக கண்டு கொண்டார்கள்.
ரப்பர் உற்பத்தியில் முதலிடம் வகித்துக்கொண்டுருந்த பிரேசில் நாட்டை வீழ்த்த வேண்டும் என்பதற்காக 20 ரப்பர் செடிகளை திருட்டுத்தனமாக மலேசியா நாட்டுக்கு கொண்டு வந்தவர் வெள்ளையர் (1877) சர் ஹென்ரி விக்ரஹாம் என்பவர். ஆனால் மலேசியாவை மொத்த ரப்பர் காடாக மாற்றியவர்கள் அத்தனை பேரும் இங்கிருந்து அழைத்துச் சென்ற நம்முடைய
தமிழின மக்கள்.

இங்கு மட்டுமல்ல.  இலங்கை, பீஜீத் தீவு,யூனியன் பிரதேசங்கள், ஆப்ரிகா வைரச்சுரங்கங்கள் அத்தனை உழைப்பும் தமிழனத்தின் உழைப்பு. ஆமாம் உழைப்பு மட்டும் தமிழனத்தின் பங்கு.  கிடைத்தபங்கு அத்தனையும் எடுத்துக்கொண்டு போனவர்கள் வெள்ளை மக்கள்.

எடுத்தார்கள்.  போனார்கள். 
வென்றார்கள். வாழ்ந்தார்கள்

வசதியான இடத்தில் இருந்து கொண்டு இன்று நமக்கே அறிவுரை சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.

ஆனால் நாம் ?

நாம் இன்று உணரத் தயாராய் இருந்தாலும் நம்மை ஆட்சி செலுத்திக்கொண்டுருப்பவர்களின் அக்கறை என்பது அக்கரையில் உள்ளவர்களின் வாழ்க்கையை விட மோசமாகத்தான் இருக்கிறது.  அவர்களின் வாழ்வியல் அவலம் வெளியே தெரிகிறது.  இங்கு உள்ளே சிறிது சிறிதாக கட்டுமானத்தில் உள்ள கற்கள் உருவப்பட்டுக்கொண்டுருப்பது தெரியாமல் இந்தியா ஒளிர்கிறது என்பதை உரத்து வாசித்துக்கொண்டுருக்கிறோம்.

எத்தனை தடைகளை அமெரிக்கா அரசாங்கம் இந்திய மாணவர்களுக்கு விசா கெடுபிடிகளை உருவாக்கினாலும் பில்கேட்ஸ் குரல் முதன்மையாக எதிர்த்து குரல் வருகிறதே?  காரணம் புரிந்தவர் கணக்கற்ற சொத்துக்கு அதிபதி.  காரணத்தை உணர நேரமில்லாமல் தினந்தோறும் வளர்ந்து கொண்டுருக்கும் ஊடகத்தின் எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணிக்கொண்டுருக்கிறோம். ரசித்துக்கொண்டுருக்கிறோம்?

வாய்ப்பு உருவாக்கப்படவில்லை என்பது ஒரு பக்கம்.  உருவாகி உள்ள வாய்ப்புகளை உன்னதமாக பயன்படுத்த தெரியாத முட்டாள் தனம் மறுபக்கம்.
உணர்ந்தவர் ஏறுவதில் ஆயிரம் தடைக்கற்களை போட்டு வைப்பது ஒரு பக்கம்.  ஓய்ந்து போனவர்களை பார்த்து "பார்த்தாயா?  நான் அப்பவே சொன்னேன்ல?" என்பவர் மறுபக்கம்.
பிய்ந்து போன செருப்பை தைக்கக்கூட தெருவில் ஆள் கிடைக்கிறார்கள்?   நைந்து போன மனத்துடன் வாழும் தமிழனை காக்க எந்த அவதாரம் மனித ரூபத்தில் வரப்போகின்றான்?

தமிழனின் வாழ்வியல் தொடக்கம் முதல் இன்று வரையிலும் உள்ள தொடர் சிந்தனையோட்டம் இது.

முன்னெடுத்துச் செல்லும் உங்கள் கரங்கள் அளிக்கும் ஓட்டுக்கு நன்றி.
விமர்சித்து தொடர்பவர்களுக்கு வணக்கம்

Wednesday, November 04, 2009

துளசிதளம்

தமிழனத்தின் முன்னோர்களும், அரசாண்டவர்களும், ஆளுமை செய்தவர்களும் என அத்தனை பேர்களும் ஆண்டவன் விசயத்தில் " குறையேதுமில்லை மறைமூர்த்தி கண்ணா"  என்று தான் வாழ்ந்து இருக்கின்றனர்.

அத்தனை மன்னர்களும், தமிழினமும் " இறையே" என்ற ஒரு குறிசொல்லில் மொத்தத்தையும் மறந்தனர்.

ஏன்?    தன்னையே உணர தயங்கினர்.

புனிதம்,புண்ணியம் என்ற இரண்டு வார்த்தைகளில் புதிராகத் தான் வாழ்ந்து போய் இருக்கின்றனர்.   அடுத்தவரிடம் "அன்பு செலுத்தி" தன்னை நிலைநாட்டுவதற்கு பதில் " எல்லாம் சிவமயம்" என்பதற்குள் முடித்து விட்டனர்.  முடிந்தும் போயினர்.  இறை நம்பிக்கைகளுக்கும், தங்களுடைய அடிப்படை கடமைகளுக்கும் என்ன வித்யாசங்கள் என்று தெரியாமலேயே ஆண்டவர்களும் வாழ்ந்தனர்.  ஆட்சியில் வாழ்ந்த மக்களும் வாழ்ந்தனர்.

வாழ்ந்தவர்களுக்கு " ஆண்டவனே.........." என்று கடைசி வரையிலும் கதியாய் இருந்தார்கள்.  வாழ்ந்து கொண்டுருந்த வாழ்க்கை ஒவ்வொரு காலகட்டத்திலும் நிர்கதிக்கு அழைத்துக்கொண்டு சென்ற போதிலும் எவருக்கும் மாற்றம் தேவையாய் இல்லை.  முன்னேற்றம் என்பது விதிப்பலனுக்குள் என்று பார்த்துக்கொண்டவர்களுக்கும் பெரிதான ஆசைகளும் இல்லை.
வாழ்ந்தவர்கள் நெஞ்சில் சுமந்த லட்சியங்கள் இல்லாமல் பின் தொடர்ந்து வந்த வழிதோன்றல்களையும் அவ்வாறே பாதை காட்டி மறைந்தனர்.

காரணம் தமிழனின் தாழ்வு மனப்பான்மை என்பது இன்று நேற்று வந்தது அல்ல.  அன்றே தொடங்கியது.  ஆனால் இன்று வரையிலும் விடாமல் தொட்டு தொடர்ந்து கொண்டு வந்து கொண்டு இருப்பது?

தமிழனின் தாழ்வு மனப்பான்மை என்பது பாமரன், பாதிக்கப்பட்டவன், அறிவாளி, அறிவற்றவன் என்ற எந்த வித்யாசங்களும் இல்லை.  மன்னர் முதல் கடவுள் வரைக்கும்.

உயர்வு நவிற்ச்சி அணி என்றாலும், வஞ்சப்புகழ்ச்சி அணி என்றாலும் அணி அணியாக கழுத்தில் தொங்கும் மணியாக பாதுகாத்துக் கொண்டு பயணித்துக்கொண்டுருப்பவன் தமிழன்.  அந்த தாழ்வு மனப்பான்மையே தன்னை தாழ்த்திக்கொண்டு மற்றவர்களை வாழ்த்தி வரவேற்பது.

இன்று?

" உங்கள் பாதம் பட்டதால் இந்த மாவட்டமே புனிதமாகி விட்டது."
"வாழ்த்த வயதில்லை.  உங்களை வணங்குகிறோம்.  "

அன்று "ஆண்டவா காப்பாற்று " என்பது கூட குற்றம்.

" நான் புழுவினினும் சிறியேன்.  தொண்டர் அடிப்பொடியேன்"

"ஒரு பூனையானது பாற்கடலில் உள்ள பாலை நக்கிப் பருகுவதற்கு முயல்வது போல நான் ராமபிரானின் கதையை எழுதுகிறேன்."

அவையடக்கம் என்ற பெயரில் தன்னைத்தானே தாழ்த்திக்கொள்வது என்பது அன்றைய கம்பன் முதல் இன்றைய வம்பன்கள் வரைக்கும்.

"வாருங்கள் ஓபாமா உணவருந்தலாம்" என்று எளிதாக அழைத்து விட முடியும்.  முதல் மந்திரிகளை இவ்வாறு அழைத்தால் அழைத்தவர்களுக்கு உடனடியாக அக்குபஞ்சர் சிகிக்சை கிடைத்துவிடும்.

" மன்னா இது உன்னுடைய உழைப்பின் வெற்றி.  இதற்கு மூலகாரணமே உன்னுடைய திட்டங்களும் முன்னேற்பாடுகளும் உழைப்புமே.  இதற்கு ஏன் ஆண்டவனிடம் போய் நிற்கிறாய்.  வாருங்கள் அடுத்த கடமைக்கு உழைக்க தயாராய் ஆவோம்"

"ஐயகோ.  அப்படியெல்லாம் சொல்லக்கூடாது.  இது இறைவன் அளித்த பிச்சை"

" அப்படியென்றால் புயல்,வெள்ளம்,மழை தாக்கி வீடு இழந்து நாட்டில் நிர்கதியாய் இருப்பது?"

" விதிப்பயன்.   மாறும்.  மாற்றம் அடையும் வரை பொறுத்து வாழ்வதே சிறப்பு."

உரையாடல்களின் மூலம் அன்றும் இன்றும் ஏதாவது மாற்றம் இருக்கிறதா?

இப்போது புரியுமே?

நிர்மூலமாய் இருப்பவர்களின் வினைப்பயன் என்பதால் தானே அதிகாரம் எழுதியவர்கள் கூட அதிசயமாய் பார்த்துக்கொண்டுருப்பது.

காலத்தை விஞ்ஞானம் மாற்றி உள்ளது.  ஆனால் மனத்தை மாற்ற எந்த கருவியும் கண்டு பிடிக்காத ஒரே குறையினால் தான் இன்னமும் குறைத்துக்கொண்டுருக்கிறோம்.

நாம் வாழ்ந்து கொண்டுருக்கும் வசதியான சூழ்நிலையில் வாழ்வாதார பிரச்சனைகளை வெறும் செய்திகளாக படித்துக்கொண்டு இருக்கிறோம்.

ஆனால் இத்தனையிலும் ஒரு ஆச்சரியம்.

தமிழினம் தம்மைப்பற்றிய உணராத பெருமைகளை, அன்று வாழ்ந்த மன்னர்கள் உணர முடியாத நிதர்சனங்கள் இங்கே உள்ளே வந்தவர்கள் உணர்ந்தது மட்டும் அல்லாமல் உள்வாங்கியதை வெளிப்படுத்திய விதம் மொத்தத்தில் ஆச்சரியமாய் இருக்கிறது.

" தமிழரின் மூதாதையரான திராவிடர்களே இந்தியாவின் மூத்த குடிமக்கள்.  உலகில் மிகப் பழைமையான உயர்ந்த நாகரிகமான சிந்து சமமெளி நாகரிகத்திற்கு இவர்கள் சொந்தக்காரர்கள்"

சிந்துவெளி அகழ்வராய்ச்சி மூலம் வெளிப்படுத்திய ஸ்பானீஸ்காரரான  ஹீராஸ் அடிகளார்.  இன்று தமிழ் பெயர் நாகரிகம் இல்லை என்று ரோஷணா, ரோஷன் என்று பிள்ளைகளுக்கு பெயர் வைக்கின்றோம்.  அவரின் பெயரை பார்த்தீர்களா?

" திருக்குறளை லத்தீன் மொழியில் உரைநடையாக மாற்றி வெளியிட்டவர் " இத்தாலியராக உள்ளே வந்த பெஸ்கி.  ஆனால் இவருடைய மற்றொரு பெயர் உங்களுக்கு எளிதாக தெரியும்.  ஆமாம்.  வீரமாமுனிவர்.

" திருவாசகம் படித்து அதில் உருகிப்போய் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து, தமிழ் பக்தி இலக்கியத்தை மேலை நாடுகளுக்கு பரப்பியவர்"

ஜி.யு.போப் என்ற ஆங்கிலேயர்.  இவர் இறக்கும் போது கூட தனது கல்லறையின் மேல் நான் ஒரு தமிழ் மாணவன் என்று எழுதி வைக்கச் சொன்னவர்.

இவையெல்லாம் ஒரு கனாக் காலம் என்று கேள்வி குறியையோ, அல்லது கேலிக்குறியையோ உங்களுக்குள் உருவாக்கும்.  சமகாலத்தில் நம்முடன் வாழ்ந்து கொண்டுருக்கும் மனிதரைப்பற்றி, " உண்மையான மகான் " பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.
                                                                                       வீரமாமுனிவர்
அடுக்கு மொழி, சிலேடை மொழி, சிருங்கார மொழி, தேன் மொழி, பேதி மொழி என்று அத்தனை நடையிலும் பேசிப்பேசி ஆட்சிக்கட்டிலை பிடித்த எந்த தமிழ் தலைவர்களும் செய்யாத சிறப்பை இவர் செய்தவர்.

ஆமாம் தமிழ் மொழியை தனது நாட்டு மொழியாக, தேசிய மொழியாக, அங்கீகரிக்கப்பட்ட மொழியாக, சிறப்பு கொடுத்த மனிதர்.

ஆனால் தமிழர் அல்ல.  சீனர்.

ஆமாம் ஐயா லீ குவான் யூ.
சிங்கப்பூர் என்ற நாட்டை தான் ஆட்சியில் இருந்த 50 ஆண்டுகளில் அடுத்த நூற்றாண்டுக்கு தகுந்தது போல் நகர்த்தி காட்டியவர்.  உண்மையான செயல் வீரர்.  இன உணர்வை தூண்டி என்றும் " இளிச்சவாய்தனமான மானம் இல்லாதவனாக வாழ் நீ "  என்றவர்களுக்கு மத்தியில் அறிவை உந்து சக்தியாய் ஆளுமை என்பது உனது அடக்கமும் உழைப்பும் முக்கியம் என்பதை உணர்த்திக் காட்டியவர்.  பிரிவினை என்பது எதையும் வளர்த்து விடாது என்பது நிதர்சனமான கொள்கையினால் மக்களுக்கு உணர்த்திக் காட்டியவர்.

இப்போது புரியுமே?  புனிதம் என்றவர்களுக்கும், எதுவுமே புதிர் அல்ல என்று சொன்னவர்களுக்கும் உள்ள வித்யாசங்கள்.

"தமிழுக்கு அமுதென்று பெயர்"

ஆனால் அதிகமாக குடித்து வாழ்ந்தவர்கள் மயங்கி கிடந்தாலும் இங்கு வந்தவர்கள் மற்றும் தமிழ்ர்கள் அல்லாதவர்கள் பருகிய ஒரு துளி பல விசயங்களை உலகிற்கு உணர்த்த உதவியாய் இருந்து இருக்கின்றது.

கடவுள் நம்பிக்கை என்பதும், தனிப்பட்ட நம்பிக்கைகள் என்பது அவரவர்களின் வாழ்க்கையில் கிடைத்த அனுபவங்கள் மூலம் உணர்ந்து கொள்வது.  அதுவே ஒவ்வொரு கால கட்டத்திலும் நம்மை உணர வைத்துக்கொண்டுருப்பதும்.
ஜி.யூ.போப்
உங்கள் அறிவின் மூலம், உங்கள் உழைப்பின் மூலம் கிடைத்த வெற்றிகளைப் பார்த்து உங்கள் சிந்தனையில் வெறி வந்து விடக்கூடாது.

கிடைக்கும் அத்தனையும் நம்மை நாசகார செயல்களில் இறக்கி விடக்கூடாது என்பதற்காக உருவாக்கப்பட்ட உருவகம் அது.

காரணம் எல்லையில்லா அறிவென்பது உங்கள் ஆளுமைக்குள் இல்லாவிட்டால் எங்கு போய் நிறுத்தும் என்பதற்கு இன்று பூமியை பல நூறு அடிகள் போய் ஊடுருவித் தாக்கும் ரசாயன குண்டுகள் மூலம் நிர்மூலமாக்கப்பட்ட மனித இனம் உங்களுக்கு உணர்த்தவில்லையா?

ஓலமாய் முடிந்து போனவர்களின் வாழ்க்கை எதை உணர்த்துகிறது?

ஆனால் வெறும் நம்பிக்கைகளை, அதுவே வாழ்க்கையாய், சாப்பாடு போல் உண்டு கொழுத்து அழிந்து போனவர்கள் பின்பற்றியவர்கள் மட்டும்.

ஆனால் சொல்லிக் கொடுத்தவர்கள், வழிகாட்டியவர்கள், அவர்கள் மட்டும் தெளிவாக வாழ்ந்தார்கள், வளர்ந்தார்கள்.

தொடர்ந்தவர்களின் வாழ்க்கை மட்டும் அன்றும் இன்றும் என்றும் வாழ்க்கை நிர்மூலமாகிக்கொண்டுருக்கிறது.

தமிழனின் வாழ்வியலில் "அது ஒரு கனாக் காலம்" முதல் இன்றைய "கதி கலங்கிக் கொண்டுருக்கும் காலம்"  வரையிலும் உள்ள சிந்தனை தொடர் ஓட்டம் இது.

சிறப்பு என்றால் "ஓட்டுப் பட்டையின் " மூலம் மூலத்தை தமிழனின் முகவரி ஆக்குவோம்.

வெறுப்பு என்றால் "விமர்சனம்" :மூலம் ?.

Monday, November 02, 2009

ஈர வெங்காயம்

"இங்கே வந்துருக்க ஆல் வ்யூர்ஸ்க்கு நமஸ்தே அண்டு குட்மார்னிங்.  நைன் ஏஜ்ல கலக்கல் பர்பார்மன்ஸ் கொடுத்துட்டு போயிருக்க குட்டீஸ்களின் சிங்கிங் பாத்து நீங்க என்ஜாய் பண்ணிக்கிட்டு இருக்கீங்க.  வாட்ச் பண்ணிக்கிட்டுருக்க ஜட்ஜ்டோட கமெண்ட்ஸ் நல்லா கலர்புல்லா இருக்குது.  உங்களோட கிளாப் நல்ல மகில்ச்சியை தந்தது போல நம்ம சீப் கெஸ்ட் ஒரு சாங் பாடி நமக்கு ஹேப்பியை தருமாறு கேட்டுக்கொல்கிறன்"

அசாத்திய திறமை படைத்த குழந்தைகளை தனது சூரத்தனத்தால் வழிநடத்துடம் இந்த ஊடக தமிழ் மொழி உங்களையும் என்னையும் வந்து "காது குளிர" வைத்துக்கொண்டுருந்தாலும் தமிழ் மொழியின் ஈரம் இன்னும் குறையவில்லை.


நடைமுறை தமிழ் எத்தனை இருட்டுக்குள் இருந்தாலும் தமிழரின் தமிழ் மொழியின் வீச்சை இன்று வரையிலும் எவராலும் நிறுத்த முடியவில்லை.
என்ன தான் நிறுத்த முயற்சித்தாலும், தமிழ் உள்ளே பேசினாலும் தண்டனைக் கட்டணம் கட்ட வேண்டும் என்று சொன்ன போதிலும் அத்தனை மம்மிகளும் கும்மியடித்துக்கொண்டே தான் படையெடுத்துக்கொண்டுருக்கிறார்கள்.

படையெடுப்பாளர்கள் வந்து அவர்களின் நவரசத்தை நிலைநாட்ட இங்குள்ள பரவசத்தை பாடையில் ஏற்றினாலும் சரி, இப்போது உள்ள "தமிழ் படித்து என்ன ஆகிவிடப்போகிறது" என்று "தமிழ் மணம்" வீசினாலும் சரி தமிழ்மொழி என்பது இன்று வரையிலும் உங்கள் விழி போல் ஓளி வீசிக்கொண்டு தான் இருக்கிறது.

உத்தேச கணக்காக இந்த உலகம் 460 கோடிகள் ஆனது.  இந்த உலகத்தில் முதல் மனிதன் தோன்றி 30 லட்சம் ஆண்டுகள் ஆகிவிட்டது.  தன்னுடைய பிரச்சனையை உணரத் தொடங்கி, மனிதன் மிருகத்தன்மையில் இருந்து மாறி 50 ஆயிரம் ஆண்டுகள் ஆகி உள்ளதாக மானிடவியல் அறிஞர்கள் கூறுகின்றனர்.  அந்த 50 ஆயிரம் ஆண்டுகள் என்பது ஏறத்தாழ உத்தேச கணக்காக 600 தலைமுறைகள்.  இதில் கவனிக்க வேண்டியது என்ன தெரியுமா?  சற்று ஏறக்குறைய 36 ஆயிரம் ஆண்டுகள் வெளி உலகம் ஏதும் தெரியாமல் குகைக்குள்ளேயே தன்னுடைய குறைகள் ஏதும் தெரியாமல் குகைக்குள்ளேயே வாழ்ந்து கழித்து இருக்கின்றான்.

கடந்த 70 தலைமுறைகளில் தான் எழுத்து, பேச்சு, விவசாயம் போன்ற அத்தனை முன்னேற்றங்களும்,  குறிப்பாக ஆறு தலைமுறைக்கு முன்னால் தான் அச்சடித்த வார்த்தைகள், எழுத்துக்கள் என்று அத்தனை முன்றேங்களும் நிகழ்ந்துள்ளது.  அச்சடித்த வார்த்தைகள் உருவான பின்பு தான் நாகரிகம் என்பது மிக வேகம் பிடித்து ஓடத் தொடங்கியது.

ஆனால் இந்த கால கட்டத்தில் எத்தனை மொழிகள், கலாச்சாரம், பண்பாடுகள், எழுத்துக்கள் உருவாகி உள்ளது என்பது யோசித்துப் பாருங்கள்? வாழ்ந்த மக்களை எத்தனை விதமாய் புடம் போட்டு பார்த்து இருக்கிறது.  ஆனாலும் இந்த தமிழ் மொழி இன்று வரையிலும் சுட்ட தங்கம் போல ஜொலிப்பாய் தான் விளங்கிக்கொண்டு இருக்கிறது.

அமெரிக்காவின் மிக உயர்ந்து பொக்கிஷமாக கருதப்படும் எம்பயர் ஸ்டேட் கட்டிடம் போல முப்பது மடங்கு பெரிதான பிரமிடுகளை தந்த எகிப்தியர்களின் எகிப்து மொழி எங்கே போயிற்று?

3000 ஆண்டுகளுக்கு முன்னால் உலகில் சிறந்த மொழி சமஸ்கிருதம் தான் என்று திணிக்கப்பட்ட இந்த மொழி இன்று எங்கே போயிற்று?

மாபெரும் வல்லரசை உருவாக்கிய ரோமபுரி மன்னர்களின் இலத்தின் மொழியை இன்று காணவில்லை?

புத்தர் பரப்பிய பாலி மொழி, மகா அலெக்சாண்டர் பேசிய கிரேக்க மொழி, ஏசு நாதரின் கிப்ரூ மொழி என்று இன்று வரையிலும் நீண்ட பட்டியல் உண்டு.

இவையெல்லாம் காத்து இருப்பு பட்டியல் அல்ல?  காணாமல் போன மொழிகளின் பட்டியல்?  ஆனால் தமிழனின் தமிழ்மொழி?

இன்று வரையிலும் உரித்துக்கொண்டே உடைந்து கொண்டே உருமாறிக்கொண்டே தன்து பயணத்தை படித்துறையில் அமர்ந்து கொண்டு நாம் பார்க்கும் ஜீவநதி போல் தனது ஓட்டத்தை நிறுத்தாமல் ஓடிக்கொண்டே இருக்கிறது.

தமிழ் மொழியின் ஈரம் குறையவில்லை. அதன் மூலம் மாறவில்லை.  முகவரி மாறி உள்ளதே தவிர முகத்தில் ஒப்பனைகள் சேர்ந்து உள்ளதே தவிர அழகு குறையவில்லை.

இன்று வரையிலும் எத்தனையோ நல்லவர்கள் உள்ளே வந்து வளர்க்கின்றோம் என்று தங்களை வளர்த்துக்கொண்டார்களே தவிர தமிழ் தாய்க்கு வளர்ப்பு தாய் தேவையில்லாமல் சுயமாக சுயம்புவாக  நம்மை காத்துக்கொண்டுருக்கிறாள்.

அதன் வீச்சை குறைக்க முடியவில்லை.  உள்வாங்குதல் குறையவில்லை.  ஈரமாக இருக்கும் நாவில் வருவது குழந்தை தமிழாக இருக்கட்டும்.  உளறல் தமிழாக இருக்கட்டும்.  தங்கிலீஸாக இருக்கட்டும்.  தடுமாற்றத் தமிழாக இருக்கட்டும்.

ஆனால் இன்னமும் அழியவில்லை.  அழியாது.

கெட்டுப்போயுள்ளது. நம்மை விட்டுப் போய்விட வில்லை.  இன்னமும் உரித்துக்கொண்டே பயணித்துக்கொண்டு இருக்கிறது.  நம்மை மொத்த தமிழினத்தை இணைத்து வைத்துக்கொண்டுருக்கிறது.

எத்தனை கோபக் கணைகளை தமிழ் திரைப்படங்களை நோக்கி உங்கள் பார்வை பாய்ந்தாலும் உலகமெங்கும் உள்ள அத்தனை தமிழனத்தையும் நல்லவிதமாக கெட்டவிதமாக தன்னுடைய மூல மொழியை இது உன்னுடைய முகவரியின் மொழி என்று நினைவில் வைத்து இருக்க உதவிக்கொண்டுருப்பவர்கள் இந்த ஊடக பிரம்மாக்கள் தானே?

சந்திக்கும் போது பேசுவது ஆங்கிலமாக இருக்கட்டும்.  வெளியே காட்டிக்கொள்ளாமல் மனதிற்குள் சிந்திப்பது தமிழ் தானே?  தமிழ் மொழி என்றால் விழி மருகி அக்கம் பாக்கம் பார்த்துக்கொண்டே பயந்து கொண்டே பின்னங்கால் பிடறி தெரிக்க ஓடிபவர்களும், மருகி பார்வை பார்ப்பவர்களும் விரும்பு நாயக நாயகிகளை எந்த மொழி கொண்டு கனவில் கட்டிப்பிடிக்கிறார்கள்?

தமிழனின் தாழ்வு மனப்பான்மை ஒரு பக்கம் கிடக்கட்டும். உண்மையான தமிழ் மக்கள் விரும்பும் ஆங்கிலமே ஆட்சி மொழியாக மாறித் தொலையட்டும்.  கற்பித்து கொடுத்துக்கொண்டுருக்கும் ஆங்கிலம் மூலம் அத்தனை கலப்பின சிந்தனைகள் உருவாகட்டும்.

பெரியாரின் முன்னோடிகளும் சரி, பின்னோடிகளும் சரி வேறு வழியில்லை. இந்த தமிழ் என்ற வெங்காயத்தை உரித்துக்கொண்டே தான் இருக்க வேண்டும்.  அவனால் ஆங்கிலத்தையும் மூலம் அறிந்து கற்றுக்கொள்ள விரும்ப மாட்டான்.  தமிழ் மொழியை தகறாறு இல்லாமல் யோசித்துப் பழக மாட்டான்.  குறை பிரவசத்தை குதுகலப் பிரசவம் போல் இன்று நேரம் குறித்து குத்திக் கிழிப்பவனிடம் போய் நீங்கள் என்ன பெரிதாக எதிர்பார்த்து விட முடியும்?

கிராமத்தில் கடைக்கோடி தமிழன் வாழ்க்கை அழியும் வரையும், மண் மூடி மேடாக மாறும் வரையும் இந்த தமிழ் மொழி வாழ்க்கையை எவராலும் அழித்து விடமுடியாது.

திருக்குறள் மொழி திக்குவாய் மொழியாக மாறியுள்ளதே தவிர திருட்டு மொழியாக இருட்டு மொழியாக மாறி விடவில்லை.   காரணம் அழிந்து விடக்கூடிய பட்டியலில் தமிழ் மொழி இருக்கிறது என்று ஒவ்வொரு முறையும் ஒப்பாறி போல் உங்களை என்னையும் வந்து அடைவது இது தான் முதல் முறையா?

நீங்கள சாவது வரைக்கும் உண்பது முக்கியம்.  நீங்கள் உண்டு கொழுத்தால் தான் நீங்கள் விரும்பும் ஊடக சிறப்பு தமிழ் உங்களை வந்து அடையும்.  உண்ண நீங்கள் விரும்பும் போதெல்லாம் இந்த வெங்காயம் இல்லாமல் எவ்வாறு சமைப்பீர்கள்.   உரிக்கத் தொடங்கும் போதே உங்களை அறியாமல் இந்த தமிழ் மொழியை உரித்தாலும் உடைத்தாலும் உங்களுடன், உங்கள் வாழ்க்கையுடன் இந்த தமிழ் மொழி வந்து கொண்டே தான் இருக்கும்?

வளர்ந்து வந்த விதத்தைப் பாருங்கள்.  மன்னர் தமிழ், சங்கத்தமிழ், தீந்தமிழ், செந்தமிழ்,பாகவதர் தமிழ், பராசக்தி தமிழ்,பெரியார் தமிழ்,மெட்ரிகுலேசன் தமிழ், ஆங்கில தமிழ், இன்று அலறும் ஊடகத்தமிழ்.

காரணம் தமிழனின் கோணல் சிந்தனைகளை கண்டு நாணி கோணி ஒதுங்கிவிட மாட்டாள் இந்த தமிழ்த்தாய்.