Rameswaram - Pudukkottai Tamil Sangam Award - Travel Experience 2025 May - 3
•••
ஆறாவது வகுப்புப் படித்துக் கொண்டு இருந்த போது வீட்டுக்கு அருகே இருந்த நூலகம் அறிமுகம் ஆனது. அருகே இருந்த தேநீர்க் கடைகளில் அதிகாலையில் வந்த பல்வேறு விதமான தினசரி செய்தித்தாள்கள் அறிமுகம் ஆனது. அக்காக்கள் நூலகத்தில் இருந்து எடுத்து வருகின்ற பல்வேறு எழுத்தாளர்கள் எழுதிய கதைகளும் அறிமுகம் ஆகத் தினசரி வாழ்வில் வாசிப்பு என்பது சுவாசம் போல மாறியது.
பாடப்புத்தகங்கள் அல்லது நூலகத்தில் இருந்து எடுத்து வருகின்ற புத்தகங்கள் என்று மாறி மாறி அறிவு சார்ந்த செயல்பாடுகளில் அதிகம் கவனம் செலுத்திய காரணத்தினால் பழகிய நண்பர்களில் நான் தனித்தே தெரிய ஆரம்பித்தேன். கல்லூரி ஆண்டு மலரில் ஒரு சிறுகதை எழுதியிருந்தேன். அது தான் என் முதல் முயற்சி.
வேலைக்கு வந்த இடங்களில் பேசும் விதம், செயல்படும் விதம் எல்லாவற்றிலும் மற்றவர்களை விடச் சற்று மாறுதல் தெரிந்த காரணத்தால் மற்றவர்களிடம் இருந்து அந்நியப்படுத்தியது. எளிதாக எவரிடமும் ஒட்ட முடியவில்லை. வாசிப்பு என்ற பழக்கம் திருப்பூர் வந்த போதும் விடவில்லை. முதல் இரண்டு ஆண்டுகளில் எங்கே வாடகை நூலகம் இருக்கும் என்பதனைப் பார்த்து தினமும் பாலகுமாரன், சுஜாதா புத்தகங்களை அதிகம் வாசித்துக் கொண்டு இருந்தேன்.
அதீத பண வெறியில் என் முன்னால் பலரும் ஓடிக் கொண்டு இருந்ததைக் கவனிக்க மறந்தேன். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான லட்சியங்கள் இருந்தது. நோக்கங்கள் இருந்தது. ஆனால் எனக்கு எவ்வித நோக்கமும் இல்லாமல் தினமும் ஒரு புத்தகமாக வாசித்துக் கொண்டு இருந்தேன்.
அந்தச் சமயத்தில் முதல் முறையாகத் "திருப்பூர் தமிழ்ச் சங்கம்" என்றொரு அமைப்பின் விளம்பரம் பார்த்து அங்கே நடந்த நிகழ்ச்சிக்கு சென்றேன். எழுத்தாளர், பத்திரிக்கையாளர் திரு. மாலன் அவர்கள் வந்து இருந்தார். அவருடன் ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டேன். மோகன் பி கந்தசாமி அவர்கள் விழா முடிந்து அவர் வாகனத்தில் என்னைப் பழைய பேருந்து நிலையத்தில் இறக்கி விட்டார். அங்கு நடந்த நிகழ்வுகளை இப்போது என்னால் யோசித்து மனதில் கொண்டு வர முடியவில்லை. ஆனால் மாலன் அவர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் தான் எனக்குப் பெண் பார்க்க உதவியது. அந்தப் படம் தான் பெண் வீட்டுக்கு கொடுத்து அனுப்பப்பட்டது. மாமனார் அடுத்த வாரத்தில் என்னைப் பார்க்க வந்து விட்டார்.
இன்னமும் "திருப்பூர் தமிழ்ச் சங்கம்" போல வேறு சில அமைப்புகள் இங்கே உள்ளது. ஆனால் உள்ளே இருக்கும் அரசியல் நிலைப்பாடு காரணமாகப் பெரிய அளவில் வளரவில்லை. கொடுக்கல் வாங்கல் போலச் செயல்பட்டது. இன்று வரையிலும் தனி நபர்களின் விருப்பு வெறுப்பு அடிப்படையில் தான் ஒவ்வொரு அமைப்பும் செயல்பட்டு வருகின்றது. சில பணக்காரர்கள் தங்கள் புகழ் போதைக்கு இவர்களை ஊறுகாய் போலவே பயன்படுத்திக் கொள்கின்றார்கள். அடுத்தடுத்த வருடங்களில் என்னை இந்த ஊரும், ஏற்றுமதி தொழிலும் உள்ளே இழுத்துக் கொள்ள வாசிப்பு, இலக்கியம், புத்தகம் போன்ற அனைத்தையும் விட்டு வெகு தூரம் விலக வேண்டியதாகி விட்டது.
14 வருட வனவாசம் முடிந்தது. எழுத முடியும் என்ற நம்பிக்கை வந்தது. தட்டெழுத்துப் பயிற்சி இருந்த காரணத்தால் வலைப்பதிவில் எழுதத் தொடங்கினேன். கணினி மூலம் எழுதுவது இயல்பாக இருந்தது. தொழில் வாழ்க்கை உயர்வில் வந்து நின்றது. சுகமாகச் சுவாசிக்க முடிந்த காரணத்தால் அதற்கு முன்னால் 25 வருடங்கள் வாசித்த ஒவ்வொன்றும் ஊற்று போல நினைக்க நினைக்க எழுத்தில் வந்து கொண்டேயிருந்தது.
வாசிப்பவர்களுக்கு ஆச்சரியத்தை அளித்தது. யோசிக்க வைத்தது. உணர்வு பூர்வமாக இருப்பதாகத் தெரிவித்தனர். அனுபவங்களும், அதுவரையிலும் உள் வாங்கிய உணர்வுகளும் கலந்த கலவையாகத் தினமும் எழுதிக் கொண்டு இருந்தேன்.
சென்னையில் உள்ள சந்தியா பதிப்பகமும், கோவையில் உள்ள விஜயா பதிப்பகமும் என் எழுத்தின் கோப்புகளை வாங்கிப் பாதியில் பின் வாங்கி விட்டனர். சந்தியா பதிப்பகம் நாஞ்சில் நாடன் போல எழுத வேண்டும் என்றார். விஜயா பதிப்பகம் வேறு எதையோ என்னிடமிருந்து எதிர்பார்த்தார். அந்த நாட்களில் தான் பதிப்பகம் எப்படிச் செயல்படுகின்றது என்பதனை முதல் முறையாகப் புரிந்து கொண்டேன். ஆனால் எழுத்தின் வாயிலாக அறிமுகம் ஆன திரு மலைநாடன் என்பவர் டாலர் நகரம் புத்தகத்தைத் தன் வெளியீடாகக் கொண்டு வந்தார். ஒரு விமானப் பயணத்தில் வாசித்து உணர்வு பூர்வமாக உள்வாங்கிச் சிவகாசி வந்து முழுமையாக அந்தப் புத்தகம் வர அனைத்து வேலைகளையும் எவ்வித எதிர்பார்ப்பும் இன்றிச் செய்தார்.
பிரபல்யமான, பிரபல்யமற்ற அனைத்து எழுத்தாளர்களின் நிஜமான குணம் புரியத் தொடங்கியது. ஒவ்வொரு ஊரிலும் செயல்பட்டுக் கொண்டு இருந்த இலக்கிய அமைப்புகள் எப்படிச் செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றது? எதன் அடிப்படையில் விருதுகள் தேர்ந்தெடுத்துக் கொடுக்கின்றார்கள் என்பதனையும் உணர்ந்து கொண்டேன். இது தவிர ஒவ்வொரு வார இதழ்களிலும் பணிபுரியக்கூடியவர்கள் தங்களுக்குத் தெரிந்தவர்களை எப்படி முன்னிலை படுத்த எப்படிப்பட்ட தந்திரங்களைக் கையாள்கின்றார்கள்? என்பதனையும் பலரின் நடவடிக்கைகள் மூலம் தெரிந்து கொண்டு எக்காரணம் கொண்டு இந்தப் பாதைக்குள் செல்லவே கூடாது என்பதாக முடிவு எடுத்துக் கொண்டேன். எழுத்துலகில் உள்ள பொறாமை கலந்த வன்மமும், பதிப்பகங்களின் நம்பகத்தன்மையற்ற செயல்பாடு களையும் பார்த்தவன் என்ற முறையில் அடுத்தப் புத்தகம் கொண்டு வருவதை மறந்து விட்டேன்.
அதன் பிறகே அமேசான் கிண்டில் தளத்தில் நான் எழுதுவதை மின் நூலாக மாற்றி வெளியிடத் தொடங்கினேன். அதையும் ஒவ்வொரு முறையும் இலவசமாக வழங்கத் தொடங்கினேன். உலகம் முழுக்கச் சென்று சேர்ந்தது.
முதல் புத்தகத்தை வெளியிட்ட திரு. மாலைநாடன் அவர்களின் 4 தமிழ் மீடியா தளத்தில் சில பல கட்டுரைகள் எழுதி இருப்பதைத் தவிர என்னால் அவருக்குப் பெரிய லாபம் இல்லை. ஆனால் அவர் என்னை நம்பி முதலீடு போட்டு டிசைன் செய்து ஒரு குழந்தை பிறப்பு போல டாலர் நகரம் புத்தகம் வர காரணமாக இருந்தார்.
அப்படித்தான் சென்னை சுவாசம் பதிப்பகம் திரு. ஹரன் பிரசன்னா என்னுடைய புத்தகங்களைக் கொண்டு வந்தார். உங்கள் எழுத்து, தலைப்பு, பொருளடக்கம் அனைத்தும் அடுத்த 25 ஆண்டுகளுக்கும் வருடந்தோறும் விற்பனை ஆகக்கூடியது என்ற ஒரே வார்த்தையில் அங்கீகாரம் அளித்து நான்கு புத்தகங்கள் அடுத்தடுத்துக் கொண்டு வந்தார். அதில் கடைசியாக வந்தது தான் டாலர் நகரம் 2.0. இதில் இரண்டு பகுதிகள் உள்ளது. ஒன்று ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள். மற்றொன்று ஐந்து முதலாளிகளின் கதை.
ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் என்பது அமெரிக்காவில் இருந்து செயல்படக்கூடிய ஒரு இணையத் தளத்திற்காகத் தொடர் போல எழுதியது. அமெரிக்காவில் உச்சகட்ட பதவியில் இருந்தவர்களின் பார்வைக்குச் சென்றதாக இணையத் தள உரிமையாளர் சொன்னார். ஆனால் அவர் எனக்குத் தனிப்பட்ட முறையில் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றவில்லை.
அதேபோல ஐந்து முதலாளிகளின் கதை என்பது அமேசான் கிண்டில் தளம் சார்பாகப் போட்டி ஒன்றை ஆறெழு வருடங்களுக்கு முன் அறிவித்து இருந்தார்கள். அதற்காகவே மூன்று நாட்களில் எழுதினேன். திமுக அரசியல் லாபி அமேசான் கிண்டில் என்பதனை அப்படியே கைப்பற்றி வைத்திருந்த காரணத்தால் திமுக என்ற கட்சியைத் சார்ந்தவர்கள் மட்டுமே வெற்றி பெற்றனர்.
ஆனால் அமேசான் கிண்டில் தளம் ஐந்து முதலாளிகளின் கதைக்காக உருவாக்கியிருந்த அட்டைப் படத்தை நான் மயங்கிப் போகும் அளவிற்கு உலகம் முழுக்க ஒவ்வொரு தளங்களிலும் தொடர்ந்து இடைவிடாது விளம்பரப்படுத்திக் கொண்டேயிருந்தது. மிக அதிகமான பேர்களால் வாசிக்கப்பட்ட நூலாகவும் இருந்தது.
ஒரு பதிப்பகம் என் புத்தகத்தைக் கொண்டு வருவதற்கு என்னிடம் பணம் கேட்டால் நான் வேண்டாம் என்று சொல்லிவிடுவேன். இன்று பெரும்பாலானவர்கள் இப்படிப்பட்ட முறையில் தான் தங்கள் புத்தகங்களைக் கொண்டு வருகின்றார்கள். குறைந்தபட்சம் நாற்பது ஆயிரம். அதிகப்பட்சம் ஒரு லட்சம் வரைக்கும். புத்தக வடிவமைப்பு பொறுத்து மாறும். பதிப்பகம் அடித்துக் கொடுத்து விடுவார்கள். விற்காத புத்தகங்கள் எழுத்தாளர் வீட்டுக்கு வந்து பரணில் உறங்கும். பார்த்துப் பார்த்துச் சங்கடமாக இருக்கும்.
ஆனால் என் புத்தகங்கள் இப்படிப்பட்ட நிலையை அடைந்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். குறிப்பாக என்னை நம்பி முதலீடு போடுபவர்கள் எந்தக் காலத்திலும் நட்டம் என்று சொல்லிவிடக்கூடாது என்பதில் அக்கறையுடன் இருந்தேன். திரு மலைநாடன் மற்றும் திரு ஹரன் பிரசன்னா இருவருக்கும் என் புத்தகங்கள் நல்ல பெயரைத் தந்துள்ளது. அதீத லாபம் இல்லாத போதும் சங்கடம் என்று சொல்லும் அளவிற்கு இல்லை என்பதனை உணர்ந்து மகிழ்ச்சியடைந்தேன். நம் பெயரைச் சொல்லி புத்தகங்கள் கேட்பது என்பது ஒரு வரம். அது சென்னை புத்தகக் கண்காட்சியில் நடந்தது.
இந்த டாலர் நகரம் 2.0 புத்தகத்தைப் புதுக்கோட்டை தமிழ்ச்சங்கம் 2025 ஆண்டுக்காக அறிவிப்பு கொடுத்து இருந்ததைப் பார்த்து சுவாசம் பதிப்பகம் சில மாதங்களுக்கு முன்பு அனுப்பி வைத்து உள்ளனர். இத்துடன் பல தலைப்புகளையும் அனுப்பி இருந்தார்கள்.
இரண்டு வாரத்திற்கு முன்பு இந்தப் புத்தகம் தேர்ந்தெடுக்கப்பட்டதும் சுவாசம் பதிப்பகத்தைத் தொடர்பு கொண்டு என் முகவரி மற்றும் அலைபேசி எண் கேட்க தொடர்பு கொண்ட போது பேசிய பெண்மணி கேட்டுச் சொல்கின்றேன் என்று உருவாக்கிய குழப்பங்கள் சங்கத்து நிர்வாகிகளுக்கு அதீத மன உளைச்சலை உருவாக்கியதாகப் புதுக்கோட்டை சென்றதும் ஒவ்வொருவரும் மாறி மாறி இதையே குறிப்பிட்டுச் சொன்னார்கள்.
ஜோதி கணேசன் என்ற பெயரைப் பார்த்ததும் முதலில் பெண்மணி என்றே கருதியுள்ளனர். என்னைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. முகவரி, அலைபேசி எண் பதிப்பகத்தில் இருந்து வாங்க முடியவில்லை என்றதும் எனக்கு அடுத்ததாகத் தேர்ந்தெடுத்து வைத்துள்ள எழுத்தாளரை அறிவிக்கலாமா? என்று குழுவினர் யோசித்து உள்ளனர்.
என் புத்தகத்தைத் தேர்ந்தெடுத்தவர்களின் ஒருவராக இருந்த ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியர் சொன்ன அறிவுரையின்படி மீண்டும் பதிப்பகத்தைத் தொடர்பு கொண்டதோடு புத்தகத்தில் உள்ள என் மின் அஞ்சல் முகவரி வழியாகவும் என்னைத் தொடர்பு கொண்டனர்.
மின் அஞ்சல் வந்து இரண்டு நாட்கள் கழித்தே நானும் பார்த்தேன். அன்றைய தினம் தான் திரு. ஹரன் பிரசன்னாவும் என்னிடம் அழைத்துச் சொன்னார். அதன் பிறகே என் தொடர்பு எண் பார்த்து தலைவர் திரு. தங்கம் மூர்த்தி என்னுடன் பேசினார். மனம் இரண்டு பக்கமும் இயல்பு நிலைக்குத் திரும்பியது.
மண்டபத்தில் உள்ளே நுழைந்தும் மணமகன் போல மாலை மரியாதை செய்து அழைத்துச் சென்றனர். பரிவட்டம் கட்ட ஏற்பாடு செய்தனர். ஆனால் அது வேண்டாம் என்று மாற்றப்பட்டது. சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர்களின் ஒருவராக இருக்கும் திரு. சுரேஷ் அவர்கள் உடன் மண்டபத்திற்கு உள்ளே அழைத்துச் சென்றனர். எங்கள் முன் புதுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளி மாணவிகள் திருவள்ளுவர் வேடம் அணிந்து ஐம்பது பேர்கள் புடை சூழ எங்களை மேடைக்கு அழைத்துச் சென்று அமர வைத்தனர்.
ஆச்சரியம் என்னவெனில் மேடையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அவர்களும் கீழே பார்வையாளர் வரிசையில் முதல் வரிசையில் புதுக்கோட்டையில் உள்ள நீதிமன்றங்களில் உள்ள அனைத்து நீதிபதிகளும் வந்து அமர்ந்து இருந்தனர்.தொடர்ந்து முக்கிய தொழில் அதிபர்களும் பலரும் வந்து மண்டபம் நிரப்பியது.
இராமேஸ்வரம் - பயணக்குறிப்புகள் (May 1 2025) – 2
இரண்டு வாரத்திற்கு முன்பு இப்படிப்பட்ட சூழலில் நான் கௌரவிக்கப்படுவேன் என்று யாராவது என்னிடம் வந்து சொல்லியிருந்தால் நம்பியிருக்கவே மாட்டேன்.
நீதியரசர் திரு. சுரேஷ் அவர்கள் பேச்சில் சில ஆச்சரியங்கள் காத்திருந்தது.
பயணம் தொடரும்…
No comments:
Post a Comment