Rameswaram - Pudukkottai Tamil Sangam Award - Travel Experience 2025 May/ - 2
மே மாதம் 1 2025 அன்று என் பயணம் தொடங்கியது.
ஊருக்குப் பயணம் என்றாலே திருச்சி வரைக்கும் ரயில். அங்கிருந்து ஊருக்கு அல்லது எந்தப் பகுதி என்றாலும் பேருந்துப் பயணம் என்பதாகவே எங்கள் திட்டம் அமைந்து இருக்கும். கோவையில் இருந்து கும்பகோணம் செல்லும் ஜன சதாப்தி ரயில் திருப்பூரில் இருந்து எட்டு மணிக்கு தன் பயணத்தைத் தொடங்குகின்றது. மூன்று மணி நேரத்தில் திருச்சி சென்று சேர்ந்து விடும். அலுப்பு இருக்காது. வேகமான பயணம் என்பதால் அனைவரின் விருப்பமாகவும் இந்த வண்டி இருப்பதால் எப்போதும் நிரம்பி வழியும். நான் இரண்டு வாரங்களுக்கு முன் முன்பதிவு செய்து இருந்தேன்.
()()()
உங்கள் வாழ்க்கையில் முதல் 25 வருடங்களுக்குள் நீங்கள் சென்ற இடங்கள், பயணித்த பயணங்கள் அனைத்தும் பெரிய அளவுக்குத் தாக்கத்தை உருவாக்கியிருக்குமா என்பதை இப்போது யோசித்துப் பாருங்கள்?
சந்தேகமே. கொண்டாட்ட மனநிலையும், முழுமையாகப் புரிதலற்ற, பொறுப்புகள் எதுவும் இல்லாமல், அப்பாவின் பணத்தில் பயணித்த பயணங்கள் மகிழ்ச்சியைத் தந்து இருக்கும். படிப்பினைகளை, பாடங்களைத் தந்து இருக்காது. ஆனால் என் முதல் 25 வருடத்திற்குள் எங்கும் சுற்றுலா பயணங்களோ, திடீர் பயணங்களோ செய்தது இல்லை. வீடு, பள்ளி, கல்லுரி இதற்குள் வாழ்க்கை வட்டம் போலவே முடிந்தது. கல்லூரியை விட்டு வெளியே வந்ததும் முதல் முறையாக வேலைக்குச் சென்ற ஊர் திண்டுக்கல் பேகம்பூரில் உள்ள ஒரு தோல் தொழிற்சாலை. இரண்டு வாரத்தில் நாற்றம் தாங்க முடியாமல் வீட்டுக்குச் சொல்லாமல் ஓடி வந்து விட்டேன். அதன் அங்கு அனுப்பிய பள்ளி நண்பன் மீண்டும் சென்னைக்கு அழைத்துச் சென்றான். அங்குத் தோல் மூலம் செய்யப்படும் பொருட்களை ஏற்றுமதி செய்யும் நிறுவனத்தில் ஒரு வருடம் கூடத் தாக்குப் பிடிக்க முடியவில்லை. இன்று வரையிலும் சென்னை என்ற ஊர் குறித்த என் அபிப்ராயம் மாறவே இல்லை. இந்தியாவில் மிக மிக அற்புதமான நகரம் என்றால் அது சென்னை தான். அனைத்து வாய்ப்புகளும், வசதிகளும் கொட்டிக் கிடக்கின்றது.
பயன்படுத்த தெரிந்தவர்களுக்கும், தேடல் உள்ளவர்களுக்கும் சென்னை என்பது சொர்க்கம். மிக எளிய பின்புலத்தில் உள்ளவர்கள் தன் உழைப்பால் திறமையால் வளர்ந்த அதிசியங்களை நீங்கள் நிச்சயம் பார்த்து இருக்க வாய்ப்புண்டு. ஆனால் வாழ்க்கையை ரசனையாக வாழ வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு அந்த ஊர் நரகம்.
நான் கிராமத்து இளைஞனாக மனதளவில் இருந்த காரணத்தால் மீண்டும் ஊர் திரும்பல். இறுதியாகத் திருப்பூர்.
பலமுறை இந்த ஊர் வேண்டவே வேண்டாம் என்று விலகி விலகிச் சென்றாலும் இந்த ஊர் தொழில் வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை, குழந்தைகளின் வாழ்க்கை என்று மொத்த என் வாழ்க்கை பயணத்தையும் இங்கே இருக்கும்படி செய்தது. இந்த ஊருக்கும் எனக்கு என்ன பூர்வஜென்ம பந்தம் என்பதே விளங்க முடியாத புதிராகவே உள்ளது.
()()()
இரண்டாவது 25 வருடங்களில் சிங்கப்பூர், மலேசியா, கம்போடியா போன்ற நாடுகளும் பல மாநிலங்களுக்கும் பயணம் செய்த போதிலும் அனைத்தும் தொழில் முறை பயணமாக இருந்த காரணத்தால் எவ்வித தாக்கத்தையும் உருவாக்கவில்லை. திருப்பூர் என்ற நகரம் தினமும் 18 மணி நேரம் உறிஞ்சி தின்ற காரணத்தால் எங்கும் நகர முடியவில்லை. ஏன் இப்படி? என்று யாரைப் பார்த்தும் கேட்ட வழியில்லை. சொந்தங்கள், உறவுகள் என்று அனைவரும் விலகி இருந்தனர். எதிலும் கலந்து கொள்ள முடிவில்லை. எல்லோராலும் வெறுக்கப்பட வேண்டியவனாக இந்த வாழ்க்கை மாற்றியது.
அம்மாவிற்கு என் மேல் அபிப்ராயம் இல்லாமல் போனதற்கு இந்த வாழ்க்கை முறையும் ஒரு காரணம். குடும்பத்துடன் பேசிய தருணங்கள் மிக மிகக் குறைவு. உறவாடிய நிகழ்வுகள் கணக்கு எடுத்து விடலாம்.
நிறுவனங்களில் பணி புரியும் போது ஒவ்வொரு இடங்களிலும் தக்க வைப்பதும், அதில் உள்ள அரசியலும், சமாளித்து வர வேண்டிய சூழலுமாக மாறி மாறி அலைக்கழித்து எங்கங்கோ கொண்டு போய்ச் சேர்த்தது.
நம் ஆரோக்கியத்தைக் காப்பாற்றிக் கொள்வதே பெரும்பாடாக ஆனது. இங்குள்ள பல்வேறு பழக்க வழக்கங்களில் இருந்து விலகியிருப்பதே சாதனையாக இருந்தது.
மனிதர்களைப் பணம் என்ற ரூபத்தில் பார்க்கும் மனிதர்கள் இங்கே ஒரு பெரும் சமூகமாக இருப்பதும், அவர்கள் காட்டும் போலித்தனங்களையும் புரிந்து கொள்ளவே ஒரு மாமங்கம் ஆனது. சிரிப்பில் விஷமும், பேச்சில் மரியாதை என்ற பெயரில் அளவெடுக்கும் தன்மையும், தங்களைத் தவிர வேறு எவரும் இங்கே உயர்வு இல்லை என்ற முதல்தலைமுறை பணம் பார்த்த அகங்காரமும் சேர்த்த மனிதர்களுடன் வாழ்ந்த வாழ்க்கையில் தினமும் நம் மனதை உடம்போடு சேர்த்துக் கழுவி சுத்தம் செய்து வாழ வேண்டியதாகவே இருந்தது. இன்று வரையிலும் இப்படித்தான் இங்குள்ள சூழல் உள்ளது.
பயணம் இல்லாத வாழ்க்கை. சின்ன ஊருக்குள் மட்டும் தொழில் சார்ந்த வாழ்க்கை. வாசிப்பு, எழுத்து, உலகம் முழுக்க அவ்வப்போது அறிமுகமான எழுத்து வழியே கிடைத்த நண்பர்களின் அறிமுகம் என்பது மனதை எப்போதும் இளமையாகவே வைத்திருந்தது. வைத்துள்ளது. எந்த நோயும் இல்லை. மருத்துவமனைகளுக்குச் செல்ல வேண்டிய அவசியமும் உருவாகவில்லை. ஆனாலும் வயது என்பது ஏறிக் கொண்டேயிருக்கும் போது என்னன்ன மாறுதல்கள் உடம்பில் உருவாக வேண்டுமோ அது வந்து தானே தீரும்?
2024 வருடத்தில் அம்மா இறந்த பிறகு குடும்பத்தில் நடந்த ஒவ்வொரு நிகழ்வுகளும், கிடைத்த பாடங்களும், படிப்பினைகளும் உடலையும் மனதையும் முதல் முறையாகப் பாதித்தது. அது பயணங்களின் போது தான் எனக்குத் தெரிய வந்தது.
நாம் நம் வயதைப் பற்றி யோசிக்காமல் இருந்தாலும் வெளியே பார்க்கும் பெண்களும் ஆண்களும் மாமா என்ற வார்த்தையில் இருந்து அய்யா என்று மரியாதையுடன் அழைப்பது, சிறிய குழந்தைகளை அறிமுகப்படுத்தித் தாத்தாவைப் பாரு சென்று சொல்வதும் இது போன்ற எதார்த்த வாழ்க்கை நாம் விரும்பாவிட்டாலும் நம் வயதை பலவிதங்களில் நமக்கு நினைவூட்டிக் கொண்டேயிருக்கும்.
கூடவே பயண நேரம் கூடுதலாக இருந்தால் உடம்பு ஒத்துழைக்காது. அடம்பிடிக்கும். முதுகு வலிக்கும். கால் வீங்கும். தொங்கப் போட்டுக் கொண்டே வர முடியாது. மடக்கி வைத்துக் கொண்டே பயணிக்க வாய்ப்பு அமையாது. தென்னக ரயில்வே இருக்கை வசதிகள் ஒவ்வொரு ரயிலிலும் ஒவ்வொரு விதமாக இருப்பதால் நல்ல இருக்கை அமைவது நம்முடைய புண்ணியப் பலனை பொறுத்தே கிடைக்கும்.
ஆனால் திருச்சி ரயில்வே நிலையம் கடந்த சில வருடங்களாகச் சுத்தம், சுகாதாரம் போன்றவற்றிலும் முதன்மையாகவே உள்ளது. அங்கு வெளியே உள்ள ரயில்வே நிலைய கடையில் பில்டர் காபி இன்று வரையிலும் தரமாக உள்ளது. இருபது ரூபாய் என்பது சரியான விலையாகவும் உள்ளது. ரயில் நிலையத்தில் இருந்து வெளியே செல்லும் வழியில் உள்ளே உள்ள உணவகங்களும் தரமாகவே உள்ளது. எப்போது சென்றாலும் ஒரு பில்டர் காபி அருந்தி விட்டு தான் வெளியே செல்வதுண்டு.
ரயில் நிலையத்தில் இருந்து எப்போதும் நடந்தே தான் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் செல்வதுண்டு. குடும்பத்துடன் சென்றாலும் நான் தனியே சென்றாலும் அப்படித்தான் செல்வேன். காரணம் வேடிக்கைப் பார்க்க முடியும். மாற்றங்களை உள்வாங்க முடியும். ஆட்டோ பேரங்களைத் தவிர்த்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டே பேருந்துநிலையம் உள்ளே நுழைந்த போது புதுக்கோட்டை செல்லக்கூடிய பேருந்து கிளம்பத் தயாராக இருந்தது. சுகமான விரைவான பயணம்.
புதுக்கோட்டை பழைய பேருந்துநிலையத்தை இப்போது இடித்துப் புதிதாகப் பெரிதாகக் கட்டிக் கொண்டு இருக்கின்றார்கள். எதிர்புறத்தில் பிரின்ஸ் லாட்ஜ் இருந்தது. ஏற்கனவே நிகழ்ச்சி ஏற்பாட்டளர்கள் சொல்லி இருந்தார்கள். எளிதில் அடையாளம் கண்டு உள்ளே சென்ற போது வரவேற்க புதுக்கோட்டை தமிழ்ச் சங்கத்தைச் சேர்ந்த பலரும் வரவேற்பரையில் இருந்தனர். திரு. பீர்முகம்மது என் அறைக்குச் அழைத்துச் சென்றார். மூன்றாவது தளத்தில் இருந்தது. குளிர்சாதான வசதிகளுடன் தரமான அறை எண் 328.
மீண்டும் தமிழ்ச் சங்கத்து மற்ற உறுப்பினர்களும் வந்து துண்டு அணிவித்து மரியாதை செய்து இனிப்பு வழங்கி வரவேற்றார்கள்.
விழா அரங்கத்திற்குச் செல்ல இன்னும் மூன்று மணி நேரம் உள்ளது. உங்களுக்குரிய வாகனத்தில் ஒருவர் வந்து அழைத்துச் செல்வார். காத்திருங்கள் என்று சொல்லி அனைவரும் சென்று விட்டனர்.
இராமேஸ்வரம் - பயணக்குறிப்புகள் (May 1 2025)
மாலை வந்த வாகனத்தில் பயணித்து அருகே இருந்த மகாராஜா பேக்கரி நிறுவனத்தின் திருமண மண்டபத்திற்குச் சென்றேன்.
ஆச்சரியங்கள் அணி வகுத்து நின்றன.
பயணம் தொடரும்.....
No comments:
Post a Comment