Friday, August 04, 2023

தடதடக்கும் பாதயாத்திரை படபடக்கும் அறிவாலயம்

 தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தொடங்கிய பாதயாத்திரை ஒரு வாரத்தில் இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டம் என மூன்று மாவட்டங்களில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளை வெற்றிகரமாகக் கடந்து ஆகஸ்ட் 4 மதுரை மாவட்டத்திற்குள் நுழையப் போகின்றது.




 

ஆளுங்கட்சி மட்டுமல்ல பாஜக விற்கு எதிரான அத்தனை சக்திகளும் பாத யாத்திரைக்குக் கூடும் மக்களை பார்த்துப் பயந்திருப்பது கண்கூடு. வெவ்வேறு வழிகளில் அசிங்கப்படுத்த முயன்றாலும், ஒவ்வொரு விதமான டூல்கிட் விசயங்களை இறக்கிய போதும் அண்ணாமலை பாதயாத்திரை பேசு பொருளாகவே இருப்பதால் அறிவாலய வட்டாரம் அடுத்து என்ன செய்வது என்று படபடப்பாய் இருப்பதாகத் திமுகவினர் கிசுகிசுக்கின்றார்கள்.

 

அண்ணாமலைக்கு முன்னால் குமரிஅனந்தன், கருணாநிதி, வைகோ என்று பல்வேறு தலைவர்கள் யாத்திரையை நடத்தியிருந்தாலும் அண்ணாமலையின் பாதயாத்திரை வேறொரு வகையில் முக்கியமானது. ஏற்கனவே வலுவான அடிப்படைக் கட்டமைப்புடன் இருக்கும் கட்சியில் உள்ளவர்கள் நடத்திக் காட்டிய பாதயாத்திரைக்கும் இனி தான் இங்கே முழுமையான கட்சிக்கான கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்ற நிலையில் இருக்கும் தமிழக பாஜக விற்காக அண்ணாமலை நடத்தி வரும் பாதயாத்திரை என்பதனை நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆளுங்கட்சியாக திமுக இருப்பதால் எத்தனை இடைஞ்சல் வரும் என்று அனைவரும் அறிந்ததே. ஆனால் ஸ்டாலின் இது பாவ யாத்திரை என்று ஒற்றை வாக்கியத்தில் முடித்துக் கொண்டு மறைமுகமாக உளவுத்துறை களம் இறக்கி விட்டிருப்பதாகவே தெரிகின்றது.

 

இதுவரையில் இல்லாத அளவுக்குத் திடீரென்று ஒரு பக்கம் சீமான் இஸ்லாமியர்கள் கிறிஸ்துவர்கள் சாத்தானின் பிள்ளைகள் என்கிறார். திமுகவும் அதன் கூட்டணிக்கட்சிகள் மணிப்பூர் விவகாரத்தைச் சிறுபான்மையினருக்கு எதிராக பாஜக நடந்து கொள்வதாக மாற்றி வருகின்றன. சொல்லவே வேண்டாம். திமுக ஆதரவு ஊடகங்கள் அனைத்தும் சொல்லி வைத்தாற் போல அண்ணாமலையின் யாத்திரையை வெவ்வேறு விதமாக விமர்சித்து எழுதி வருகின்றனர்.

 

பாதயாத்திரை கடந்து வரும் மாவட்டங்களில் அண்ணாமலை அந்த மாவட்டத்தில் உள்ள மோடி அரசின் திட்ட பயனாளிகளைப் பட்டியலிட்டுப் பேசுகின்றார். எந்தந்த திட்டங்களில் எத்தனை பேர்கள் பலன் அடைந்துள்ளனர் என்பதனை புள்ளிவிவரமாகப் பேசுவது புது அணுகுமுறை என்று பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர். ரேசனில் வழங்கப்படும் அரிசிக்கு மாநில அரசின் நிதி என்பது இரண்டு ரூபாய். மத்திய அரசின் நிதி தான் 33 ரூபாய். ஆனால் ரேசன் கடைகளில் ஸ்டாலின் தன் முகத்தையும் கருணாநிதி முகத்தையும் மாட்டி வைத்துள்ளார். ஏன் டாஸ்மாக் கடைகளில் இந்த முகங்களை கொண்டு மாட்ட வேண்டியது தானே என்ற கேள்வி மக்களிடம் ரீச் ஆகியுள்ளதாக பாஜக வினர் தெரிவிக்கின்றனர்.

 

கடந்த தேர்தல்களில் திமுக உருவாக்கி வைத்திருந்த மோடி எதிர்ப்பு அலை இல்லாமல் போயுள்ளது. கூடவே பாதயாத்திரையில் அண்ணாமலை இஸ்லாமிய சகோதரன் வழங்கிய குரான் புத்தகத்தை வாங்கி அதனை வணங்கி வைத்துக் கொண்டது, இஸ்லாமியச் சகோதரிகள், பெரியவர்கள் அண்ணாமலையுடன் உரையாடுவதில் காட்டும் என ஆர்வம் அனைத்தும் திமுக விற்கு கிலியை உருவாக்கியுள்ளதாக உளவுத்துறை நோட் போட்டுள்ளதாகத் தெரிகின்றது.

 

பொன் இராதாகிருஷ்ணனுக்கும், ஹெச் ராஜாவுக்கும் அண்ணாமலை அளித்த மரியாதை கட்சியில் உள்ளவர்களால் உற்றுகவனிக்கப்படுவதாக தெரிகின்றது. மதுரைக்குள் நுழையும் யாத்திரையின் இனி புரெபஸர் இராம சீனிவாசன் வழிநடத்தப் போகின்றார். அண்ணாமலை பழைய ஆட்களை மதிப்பதில்லை திமுக ஆதரவு ஊடகங்கள் தொடர்ந்து எழுதி வந்து கொண்டிருந்த அனைத்தும் பாதயாத்திரை மூலம் தவிடுபொடியானதாகப் பாஜகவினர் தெரிவிக்கின்றனர்.

 

2024 ஜனவரியில் எந்த வாரத்தில் பாதயாத்திரை சென்னைக்குள் நுழைய இருக்கின்றதோ அந்த சமயத்தில் நிச்சயம் பாராளுமன்றத் தேர்தல் அறிவிப்பு வர வாய்ப்புள்ளதாகவே தெரிகின்றது. அதற்குள் தமிழகத்தில் அரசியல் கள நிலவரம் எப்படி தகிதிகிப்புடன் இருக்கப் போகின்றதோ என்பதனைப் பற்றி கூட்டணிக் கட்சியினர் ஒவ்வொருவரும் இப்போதே வெவ்வேறு விதமாகப் பேசத் தொடங்கியுள்ளனர். இந்த முறை அண்ணாமலை தலைமையில் முதல் முறையாகப் பாராளுமன்றக் களத்தில் இறங்கப் போகும் தமிழக பாஜக தனக்குரிய நிலையை உறுதியாக உருவாக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். ஆனால் திமுக விற்கு இது வாழ்வா சாவா போராட்டம். மூன்றாண்டு ஆட்சிக்குத் தமிழக மக்கள் வழங்கும் அங்கீகாரம் என்பதாக எடுத்து களத்தை அவ்வளவு சீக்கிரம் விட்டுக் கொடுக்க மாட்டார். கூடவே சட்டமன்றத் தேர்லின் ஆரம்ப புள்ளியும் தொடங்கி விடும் என்பதால் எப்படிப் பார்த்தாலும் திமுக விற்கு வரப் போகின்ற 2024 பாராளுமன்றத் தேர்தல் தங்கள் உறுதிப்பாட்டை நிலை நிறுத்த வேண்டிய அவசிய அவசரங்களில் இருப்பதாகவே அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

இந்தியா கூட்டணி - (INDIA – INDIAN NATIONAL DEMOCRATIC INCLUSIVE ALLIANCE)

No comments: