Saturday, December 05, 2020

வணிக சூத்திரங்கள்

பணம், லட்சம், கோடி என்ற வார்த்தைகளை நான் உச்சரிக்கும் போது, வாசிக்கும் போது இன்றும் என் நினைவில் சில பேர்கள் வருவார்கள். என் அம்மா, அப்பா. இப்போது என் மனைவி. காரணம் இவர்கள் இயல்பாகவே பதட்டப்படுகின்றார்கள்.  "நேற்று ஒரு கோடி ரூபாய் சரக்கு லாரியில் சென்றது" என்பது எனக்குச் சாதாரண வார்த்தை. அதுவே இவர்களைப் பதட்டப்படுத்தும் செய்தி. ஒரு கோடிக்கு எத்தனை சைபர் என்று தெரியாதவர்கள் நம்மவர்கள் என்பதனை தாமதமாகவே புரிந்து கொண்டேன். 



திருப்பூரில் உள்ளே வந்து நான் வாங்கிய முதல் சம்பளம் ரூபாய் ஆயிரம். உள்ளே தங்கி அங்கே மற்றொருவருடன் சமைத்துச் சாப்பிட்ட பின்பு என் பங்காக நான் கொடுக்க வேண்டிய தொகை 183.50. மீதமிருந்த பணத்தை என்ன செய்வது என்றே தெரியாமல் முழித்த காலமும், ஒரு லட்சம் மாதச் சம்பளமாக கைக்கு வந்து மீதி தேவைப்படும் தொகைக்குக் கடன் வாங்கிக் கொள்வோம் என்று மனைவியிடம் சொல்லும் காலம் அளவிற்கு வளர்ந்த எனக்கு இன்னமும் பணம் குறித்த ஆசையுள்ளது. ஆனால் வெறியாக உருவாகவே இல்லை என்ற காரணத்திற்குப் பின்னால் உள்ள அனைத்துச் சமாச்சாரங்களும் என் குடும்பத்தினர் உருவாக்கிய தாக்கமாகத்தான் இருந்திருக்குமோ? என்று தோன்றுகின்றது.

பிறந்தது முதல் இன்று வரையிலும் வாழ்வின் எந்த நிலையிலும் அடிப்படை வசதிகளுக்குக் கஷ்டப்படாத குடும்பத்திலிருந்து வந்த என் சூழலில் இருந்தே கொரானா காலப் பிரச்சனைகளையும், அதில் உள்ள சவால்களையும் இத் தொடரில் நான் உங்களுக்குப் புரிய வைக்க முயல்கிறேன்.

நம் சமூகம் அடிப்படையில் குடிமைச் சமூகம். பணம் என்பதனை பாவம் என்பதாக கருதி வந்த சமூகம். அது விதியோடு தொடர்புடையது. உழைப்புக்கு அப்பாற்பட்ட அதிர்ஷ்டத்தோடு சம்பந்தப்பட்டது என்று கருதியே தங்கள் திறமைகளை யார் யாருக்கோ கொடுத்து விட்டு அதன் பலனை அனுபவிக்கத் தெரியாத சமூகமாகவே கடந்து வந்த பெருங்கூட்டத்தின் பிரதிநிதி நாம்.

கடந்த இரண்டு தலைமுறையாக "இருப்பதை வைத்துச் சிறப்புடன் வாழ்" என்று திரும்பத் திரும்ப சொல்லி நம்மை செயலூக்கம் இல்லாதவர்களாக மாற்றி விட்டார்களோ? என்று நான் பலமுறை யோசித்ததுண்டு. நடுத்தர வர்க்கம் என்ற புதிய கோஷ்டி கானம் 1990 க்குப் பிறகு தான் இங்கே நம்பிக்கை மிகுந்த வார்த்தையாக மாறத் தொடங்கியது. அதன் பிறகே சாதாரணமான குடும்பத்திலிருந்து கடல் கடக்கத் தொடங்கினார்கள். டாலர், யூரோ என்ற பேச்சு இயல்பாக மாறியது.  குடும்பக் கடனுக்கு வீட்டில் உள்ள நகைகளை அடகு வைத்துச் சமாளிப்பது போல நாட்டின் கடனுக்கு நாம் தங்கத்தை வைத்துச் சமாளித்த பெருமை கொண்டவர்கள். அந்நியச் செலவாணி என்றால் "களவாணிப் பயலுக" என்பது போலப் பார்த்த நம் அரசாங்கத்தின் இன்றைய உபரி மதிப்பு அநேகம். கடந்த 25 ஆண்டுகளில் சாதித்துள்ளோம். காரணம் மாற்றங்களை நாம் வரவேற்ற பின்பே நடந்த மாயமிது. ஆனால் இன்னமும் தனி மனித வாழ்வில் பெரிய அளவிற்கு மாற்றங்கள் உருவாகவில்லை. பதிலாகப் பணக்காரர்கள் அனைவரும் திருடர்கள் என்ற கருத்து தொடர்ந்து ஆழமாகப் பதிய வைக்கப்பட்டுக் கொண்டேயிருப்பதையும் நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஐந்தாண்டுகளுக்கு முன்பு தொழிற்சாலையில் வேலை முடிந்து வீட்டுக்கு நள்ளிரவில் திரும்பி வந்த நேரத்தில் மனைவியிடம் சொன்னேன். "இந்த வாரம் தொழிலாளர்களின் சம்பளம் மிக அதிகம். 65 லட்சம். கணக்கு முடித்து வரத் தாமதம் ஆகி விட்டது" என்றேன். வணிகவியல் முதுகலை பட்டதாரியான அவர் சாப்பாடு போட்டுக் கொண்டே எளிதாகப் பதில் சொன்னார். "ஏன்? இது போன்ற பெரிய தொகை வரும் போது வேறு யாரிடமாவது கொடுத்து விட்டு நீங்கள் வந்து விட வேண்டியது தானே"? என்றார்.  அவருக்கு பொது மேலாளர் பதவியின் தகுதியைப் புரிந்து கொள்ளத் தெரியவில்லை என்பதனை விட அந்தப் பணத் தொகை பயத்தை உருவாக்கியது என்பதனை புரிந்து கொண்டு பதில் சொல்லாமல் தவிர்த்தேன். ஒரு மாதத்தில் என் பொறுப்பில் வரும் இரண்டரைக் கோடி என்பது அவருக்கு இருதயப் பிரச்சனையை உருவாக்கக்கூடியது.

அவர் மட்டுமல்ல. நடுத்தர வர்க்கத்தின் பிரதிநிதியாக உள்ள எவரும் பணம் குறித்த ஆசையிருக்கும். ஆனால் அதற்கான செயல்பாட்டில் உள்ளே நுழைந்தால் தடுக்கவே செய்கின்றார்கள். இது நான் அனுபவத்தில் பார்த்த உண்மை.

நம்முடைய கல்வி வியாபார நுணுக்கங்களை கற்றுக் கொடுக்கவில்லை. ஒவ்வொரு தொழில் குறித்த அறிவை போதிக்கவில்லை. தொழில் என்பது சாதியோடு தொடர்புடையது என்ற அரசியல் கோஷம் உச்சஸ்தாயில் வலுப்பெற அனைவரும் தொழில்களை வெறுக்கத் தொடங்கி இன்று எந்தப் படிப்பு படித்தாலும் எந்தத் தொழிலுக்கும் லாயக்கில்லை என்ற உன்னத நிலைக்கு வந்து சேர்ந்துள்ளோம். உலகில் வெற்றி பெற்ற மனிதர்களை நம் கல்வி நமக்கு அறிமுகம் செய்து வைக்கவில்லை. ஒவ்வொரு காலத்திலும் வெற்றி பெற்ற தொழில் சமூகத்தின் கதைகள் இங்கே தேவையில்லாமல் போய் இன்னமும் அக்பரும் பாபரும் நம் மாணவர்களைப் பாடாய்ப் படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். இங்கே நடந்த மாற்றங்களும், மாற்றங்களுக்குப் பின்னால் நடந்த கண்ணீர்க் கதைகளும், ஒவ்வொரு சாதனைக்குப் பின்னால் முன்னால் நடந்த சாதக பாதக அம்சங்களும் தெரிந்து கொள்ளாமல் நவீன தொழில் நுட்ப உலகில் பீடு நடை போட்டுக் கொண்டு இருக்கின்றோம். மேலை நாடுகளில் உருவாக்கப்பட்ட செயலிகள் போதுமென்ற எண்ணத்தில் இருப்பதால் சுகவாசி வாழ்க்கைக்குப் பழகிவிட்டோம். நாம் கற்ற கல்வி ஏன் இதனை நம்மால் உருவாக்க முடியாத அளவிற்கு வளர்க்கவில்லை என்ற கேள்வியை விட இதற்கு மேல் நமக்கு ஏன் கஷ்டம்? என்று எளிய தத்துவத்திற்குள் கொண்டு போய் நிறுத்தியும் விடுகின்றது.

இதுவரையிலும் ஆண்ட அரசுகளும் மாற்றங்களை அனுமதிக்காத காரணத்தால் நம்மை அதற்குத் தயார் படுத்தாமல் கடந்தே வந்து விட்டோம். மாற்றங்களை அரசு உருவாக்கும் போது அதற்கு நாம் பட்டப் பெயர்களை சூட்டி வளர்ச்சியை கெடுப்பவர்களுடன் சமரசம் செய்து கொள்கின்றோம். 

"மொண்ணை" என்ற வார்த்தைக்கு உதாரண புருஷராக ஒவ்வொருவரும் பாடசாலையை விட்டு வெளியே வந்தோம். சமூகத்தில் உள்ளே நுழைந்த போது இவ்வுலகம் புதிதாகத் தெரிந்து. புரியாமல் திகைத்தோம். மருண்டு பின்வாங்கி ஓடி ஒளிய முற்பட்டு தன்னைக் காப்பாற்றிக் கொண்டால் போதும்  என்று சுயநல ஆசைளை வளர்த்துக் கொண்டோம். உன்னதமான சிந்தனைகள் அனைத்தும் ஒட்டடை படிந்து போய்விட வாழ்க்கை என்பது கல்யாணம் குழந்தை வளர்ப்பு ஓய்வு என்ற மூன்று வார்த்தைக்குள் எளிதாகப் பொருத்திக் கொண்டோம். அப்படி வாழ்ந்தவர்களை இங்கே வெற்றியாளர்களாக நாம் பார்த்தோம். மேலும் மேலும் வாழ்நாள் முழுக்க போராடிக் கொண்டிருந்தவர்களைப் "பிழைக்கத் தெரியாதவன்" என்று ஒதுக்கினோம்.

ஒவ்வொரு குடும்பத்தினரும் "நீ ஏதாவது ஒரு வேலைக்குப் போய்விடு" என்றே திரும்பத் திரும்ப நியூரான்களில் புகும் அளவிற்கு அறிவுரைகளை ஒவ்வொரு நாளும் வழங்கிக் கொண்டேயிருக்க. தொழில் சமூகம் என்பது அரசியலோடு தொடர்புடையதாக மாறிவிட அனைவரும் "பாதுகாப்பான வாழ்க்கை" போதும் என்றே கருதிக் கொண்டு தங்களுக்குரிய பொன்னான வாய்ப்புகளை ஒவ்வொரு நாளும் இழந்து கொண்டேயிருக்கின்றோம். நம் கலாச்சாரம் இப்படித்தான் இங்கே ஒருவரை உருவாக்குகின்றது. அதுவே பாதுகாப்பு என்று கருதுகின்றது. தனி மனிதர்களின் பணம் குறித்த பார்வையில் பயத்தை முன்னிலைப்படுத்துகின்றது. கடைசியில் ஒருவருக்கு கடைசியாக அடிமையாக இருப்பதே சிறந்தது என்று கொண்டு வந்து நிறுத்துகின்றது.

சுகமாக வாழ்ந்து பழகியவர்களுக்கு கொரானா உருவாக்கிய தாக்கம் அதிகம். மாற்ற முடியாத சிந்தனை கொண்டவர்களை உலுக்கிய விதத்தை அன்றாடம் நாம் செய்தித் தாளில் படித்துக் கொண்டு தான் இருக்கின்றோம். "என் வேலை போய்விட்டது". "என் சம்பளம் குறைந்து விட்டது" என்ற இரண்டு வாக்கியங்களைத் தினமும் கேட்டுக் கொண்டேயிருக்கின்றோம்.  ஆனால் மாற்றத்தை தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டவர்களும் இங்கே இருக்கத்தான் செய்கின்றார்கள். கோடி என்ற வார்த்தையைக் கேட்டாலே பயந்து சாகும் நம்மவர்களுக்கு மில்லியன் டாலர், ட்ரில்லியன் டாலர் என்ற வார்த்தையை சொன்னால் எப்படியிருக்கும்.

நாம் வென்றவர்களைப் பற்றி பேசுவோம்.


வளர்ச்சி என்பதனை நீங்கள் எப்படி பார்ப்பீர்களோ? எனக்குத் தெரியாது.  ஆனால் அந்த வார்த்தையுடன் கொஞ்சம் மசாலா அயிட்டங்களை சேர்த்துப் பார்ப்பதுண்டு. நான் ஒரு ஏற்றுமதியாளன். என் தொழில் எனக்கு வருமானத்தைத் தருகின்றது. அரசுக்கு கொஞ்சம் அந்நியச் செவாணியைத் தருகின்றது. வேறென்ன? என்று பட்டியலிட்டால் ஒன்றுமில்லை. சுபம். 

திருப்பூரில் விவசாயிகளுக்கு மகனாக பிறந்தவர்கள், பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தி பனியன் தயாரிக்கும் நிறுவனத்திற்கு ஷிப்ட் சம்பளத்திற்கு வந்து சாப்பாட்டு பிரச்சனையை தீர்த்துக் கொண்டவர்கள், பட்டப்படிப்பு முடித்தவர்கள் தொடங்கிய நிறுவனங்கள் என்று கலந்து கட்டிய தொழில் சமூகம் திருப்பூர் தொழில் சமூகம். இங்கு தோற்றவர்கள் மிக மிக அதிகம். அதே போல வென்று காட்டியவர்களின் எண்ணிக்கையும் மிக அதிகம். 

மாதம் ஆயிரம் ரூபாய் நமக்கு கிடைத்து விடாதா? என்று ஏங்கியிருந்தவர்கள் 90 லட்சம் மதிப்புள்ள வாகனங்களில் செல்கின்றார்கள். வீட்டில் பல வெளிநாட்டுக் கார்கள் அணிவகுத்து நிற்கின்றது. அவர்கள் செய்து கொண்டிருக்கும் தொழில் வளர்ச்சி, வீழ்ச்சி என்ற மாறி மாறி பயணித்துக் கொண்டு தான் இருக்கின்றது. ஆனால் இவர்களைப் பார்த்து நான் பெருமைப்பட்டதுமில்லை. பொறாமை கொண்டதுமில்லை. இவர்களின் வளர்ச்சி தனி மனித பெருமை. கூட்டு முயற்சியை சரியாகப் பயன்படுத்திக் கொண்டு காலம் பார்த்து சூழலை தங்களுக்கு சாதமாக பயன்படுத்திக் கொண்டு வென்றவர்கள். வென்று வந்த பாதையில் இரத்தச் சுவடுகளும் உண்டு. மனிதாபிமற்ற செயல்பாடுகளும் அதிகமுண்டு. 

இவர்கள் உருவாக்கும் ஆடைகளை ஐரோப்பாவில் அமெரிக்காவில் மற்ற கண்டங்களில் உள்ளவர்கள் அணிகின்றார்கள். அணியும் போது கிடைக்கும் சுகத்தை அவர்கள் இவர்களுக்கு தெரிவிப்பதுமில்லை. இவர்கள் அதனை எதிர்பார்ப்பதுமில்லை. அதாவது கடைசி நுகர்வோர் வரைக்கும் சென்று சேர்ந்து இவர்களின் செயல்பாடுகளுக்கு மகுடம் சூட்டி சாதனைகளை உருவாக்கினாலும்  அது பிராண்ட் என்ற பெயரில் வேறு ஒருவருக்குத் தான் செல்கின்றது.

ஆனால் நாம் பிராண்ட் என்ற பெயரை கடந்த பத்தாண்டுகளில் தான் சுவாசிக்கத் தொடங்கியுள்ளோம். தாமதமாக முழித்துக் கொண்டாலும் நான் எட்ட வேண்டிய உயரத்தை அடைய அடுத்த பத்தாண்டுகள் காத்திருக்க வேண்டும். அதற்குள் சூழல் எப்படி மாறும் என்றே தெரியாது? 

இப்போது நான் சொல்ல விரும்பிய மசாலா விசயத்திற்கு வருகிறேன்.

முதல் மற்றும் இரண்டாம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த கறிகாற் பெருவளத்தான் குறித்து நாம் மனப்பாடப் பகுதியில் படித்து வந்திருப்போம்.  அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து வந்தால் 13 ஆம் நூற்றாண்டுக்குள் சோழர், சேரர், களப்பிரர், பல்லவர், சோழர், பாண்டியர் என்று மாறி மாறி வந்து அடித்துக் கொண்டு மண்ணோடு மண்ணாகிப் போய் வடக்கில் இருந்து திரு நங்கையை பாக்கு வெற்றிலை வைத்து அழைத்து வந்த கதைகளையும் படித்திருப்போம்.  அவரை மாலிகாபூர் என்ற நாம் சொன்னாலும் நமக்கு ஆளவே தெரியாது என்பதற்கு அவரை நான் எப்போதும் உதாரணமாக எடுத்துக் கொள்வதுண்டு. விஜயநகர பேரரசு முதல் நாயக்கர் காலம் வரைக்கும் காணக்கிடைக்கும் வரலாற்று பொக்கிஷங்கள் பார்த்து, படித்த போது நான் உணர்ந்து கொண்டது ஒன்றே ஒன்று தான். கடைக்கோடி தனிப்பட்ட குடும்பம் வரைக்கும் இவர்களின் ஆதிக்கம் சென்று சேரவில்லை. அடங்கியிருந்தார்கள் அல்லது அடக்கப்பட்டு வாழ்ந்து கொண்டிருந்தார்கள். ஆனால் 16 ஆம் நூற்றாண்டு முதல் 1947 வரைக்கும் கிழக்கிந்திய நிறுவனம், பிரிட்டன் அரசு மூலம் உருவான, உருவாக்கிய மாற்றங்கள், மறுமலர்ச்சி போன்றவற்றை எந்தப் பார்வையில் பார்த்தாலும் லேசான சமூக அசைவுகள் தான் உருவானது. வாய்ப்பு இருந்தவர்கள் மேலேறினார்கள். மேலேறியவர்கள் மாற்றத்தை உருவாக்க முனைந்தாலும் அதிலும் முழுமையாக வெற்றி பெறவில்லை என்றே நான் கருதுகிறேன். 

இந்தியா சுதந்திரம் அடைந்து நாமக்கு நாமே என்ற திட்டத்தின் அடிப்படையில் எல்லாமே இங்கு உருவானது. மாறியது. முழுமையான வளர்ச்சி என்று சொல்லமுடியாவிட்டாலும் பெருமைக்குரிய வளர்ச்சி என்கிற ரீதியில் நாம் நம்மை வளர்த்துக் கொண்டோம்.

நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள் 1970 வரைக்கும் இந்தியாவில் நடந்த சமூக கலாச்சார மாற்றங்கள் அனைத்தும் கடைக்கோடி கிராமங்கள் வரைக்கும் செல்லவே இல்லை. செல்ல அனுமதிக்கும் சூழலில் இங்குள்ள அரசியல் மாற்றங்கள் நிகழவே இல்லை. விரும்பிய தலைவர், விரும்பிய கட்சி, விரும்பிய கொள்கைகள், பாரபட்ச பாதைகள் என்று குழம்பு சாம்பார், ரசம், மோர் என்று ஒன்றாக கலந்து கட்டி வயிற்றில் அஜீரணத்தைத்தான் உருவாக்கியது.

நமக்கு மாற்றங்கள் வேண்டும். அந்த மாற்றங்கள் கடைக்கோடி கிராமத்தில் வாழ்கின்றவனுக்கு சென்று சேர வேண்டும் என்ற எண்ணம் எல்லோருடைய மனதில் மட்டும் தான் இருந்தது. காலம் கனியவே இல்லை.

நம் இந்திய தொழில் சமூகத்தில் 1839 ல் ஜாம்ஷெட்ஜி (Jamsetji Nusserwanji Tata) உருவாக்கிய பாதை இன்று ரத்தன் டாடா வரைக்கும் மிகப் பெரிய தேசிய நெடுஞ்சாலைப் பயண சுகமான அனுபவத்தை தொழில் நிறுவனங்களுக்கு முன்னோடியாக இருந்தாலும் அது இங்குள்ள சமூகத்தை முழுமையாக மாற்றியதா? என்றால் இல்லை என்றே சொல்வேன்.  ஒவ்வொரு காலகட்டத்திலும் அந்த நிறுவனங்கள் உருவாக்கிய துணை நிறுவனங்கள், உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் என் அனைத்தும் இந்தியாவின் முகத்தை மாற்றியது என்பது எந்த அளவுக்கு உண்மையோ விரைவான குடிமை சமூக வளர்ச்சியை உருவாக்கவில்லை என்றே கருதுகிறேன்.  அவருக்குப் பின்னால் அவரைப் பார்த்து வளர்ந்த இன்று பெருமை மிக்க அம்பானி அதானி குழுமம் வரைக்கும் குறிப்பிட்ட வட்டத்திற்குள் தான் இருந்தார்கள். லாபம், வளர்ச்சி, நட்டம் என்ற மூன்று வார்த்தைக்குள் இங்குள்ள நிறுவனங்கள் அனைத்தும் செயல்பட்டது.

காரணம் அவர்கள் உருவாக்கிக் கொண்ட பாதையின் தன்மையிது.  இந்த இடத்தில் தான் மேலை நாடுகளில் உருவாக்கப்பட்ட மூன்று விசயங்கள்

 தொடர்ந்து பேசுவோம்..........

புனிதமா? கடமையா? - வாழ்வியல் ரகசியங்கள் 

4 comments:

மெய்ப்பொருள் said...

நடுத்தர வர்க்கத்தின் பிரதிநிதியாக உள்ள எவரும் பணம் குறித்த ஆசையிருக்கும். ஆனால் அதற்கான செயல்பாட்டில் உள்ளே நுழைந்தால் தடுக்கவே செய்கின்றார்கள்.

அதற்கு காரணம் உள்ளது - முயற்சி செய்யும் போது தோல்விகள் வரக்கூடும் .ஒரு தோல்வியை அடுத்து வருவது வெற்றியும் இருக்கலாம் .இங்கு ஒரு அடியை கூட தாங்க முடிவதில்லை . அப்புறம் அடுத்த அடி விழுந்தால் காலி . அதனால் யாரும் சான்ஸ் எடுக்க தயங்குகிறார்கள் .

சேட்டுகள் வெற்றி தோல்வி பற்றி கவலை கொள்வதில்லை . தோல்வி வந்தாலும் அடுத்து முயற்சி செய்வார்கள் அதற்கு காரணம் கூட உள்ளவர்கள் , சொந்தக்காரர்கள் கொடுக்கும் ஆதரவு - இது பண ரீதியாகவோ , தொழில் நுணுக்கமாகவோ இருக்கலாம் . குடும்ப சொந்தங்கள் கூட உள்ள ஒற்றுமை

நான் பார்த்த வரையில் தமிழ்நாட்டில் நாடார்கள் இதை கடைப்பிடிக்கிறார்கள்

மற்றவர்கள்
"இருப்பதை வைத்துச் சிறப்புடன் வாழ்" என்று திரும்பத் திரும்ப சொல்லி செயலூக்கம் இல்லாமல் இருக்கிறார்கள்

ஜோதிஜி said...

எதார்த்தமும் அருமையான விமர்சனமும். நன்றி.

Mohamed Yasin said...

சொந்த தொழில் செய்து நட்டப்படும் போது குடும்பமும், நட்பு வட்டமும் எதற்கு "தேவையில்லாத வேலை" என்று நம்மிடம் கருத்து கூறுகிறார்களே தவிர, ஒருவர் கூட ஏன் தொழில் நஷ்டமடைந்தது என்று வினவுவதில்லை .. நீங்கள் கூறுவது போல ஆயிரங்கள், லட்சங்களாகவும், கோடிகளாகவும் மாற்றம் அடையும் போது மாரடைப்பு நமக்கு வருகிறதோ இல்லையோ?? குடும்பத்தில் உள்ளவர்களுக்கு முதலில் வந்து விடும்.. விழுந்தவனை தூக்க இங்கு குடும்பமும், சமுதாயமும், நட்பும் தயாராக இருப்பதில்லை..உங்கள் வார்த்தைகள் ஒரு வித உத்வேகத்தை தருகிறது.. நன்றி..

ஜோதிஜி said...

தொழில் செய்வதற்கு எந்த அளவுக்கு உங்கள் மனம் (உத்வேகம்) தயாராக இருக்கும் வேண்டுமோ அதே அளவுக்கு குடும்பம் உறவுகளிடத்தில் எதைச் சொல்ல வேண்டும்? எதை வெளிப்படுத்த வேண்டும் போன்ற பல விசயங்களையும் நாம் அறிந்து இருக்க வேண்டும்.