Wednesday, November 27, 2013

சொல்ல மறந்த கதைகள் (3)

கற்றதும் பெற்றதும் 

புத்தக வாசிப்பென்பது நவீன தொழில் நுட்ப உதவியால் மின் நூல் அளவிற்கு வளர்ந்துள்ளது. எனக்குப் புத்தகங்களைக் கையில் வைத்துக் கொண்டு வாசிக்கும் அந்தச் சுக அனுபவத்தை மின் நூல் தருவதில்லை. இணையத்தில் கிடைக்கும் முக்கியமான சில மின் நூல்களை நான் சேமித்து வைத்துக் கொள்வதுண்டு.  

சில விசயங்களைப் புரிந்து கொள்ள, தெரிந்து கொள்ள உதவும் என்பதன் பொருட்டு அவசரத்திற்கு இந்த மின் நூல்கள் பயன்படுகின்றது. மின் நூல்களை உறுத்தல் இல்லாது வாசிக்க என்கிற ரீதியில் தற்போது நவீன தொழில் நுட்பம் பல வசதிகளைத் தந்த போதிலும் இன்னமும் இதில் ஈடுபாடு வரவில்லை. இணைய மேய்ச்சல் மற்றும் எழுதுவதென்பது 90 சதவிகிதம் வீட்டில் இருந்தபடியே என்கிற சூழ்நிலையில் இருப்பதாலும் அலைபேசியில் கூட இணையத்திற்குள் செல்ல விரும்புவதும் இல்லை.

எதையும் ஈடுபாடுடன் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அதைச் செய்யக்கூடாது. 

இன்று வரையிலும் எனக்கு அலைபேசி என்பது பேசுவதற்கு மட்டுமே. ஆனால் சமீப கணக்கின்படி இந்தியாவில் அலைபேசி வாயிலாக அறுபது சதவிகித மக்கள் இணையத்தைப் பார்வையிட்டுக் கொண்டேயிருக்கின்றார்கள் என்று படித்தேன். சமீபத்தில் இணையத்தில் கிடைத்த எழுத்தாளர் சுஜாதாவின் கற்றதும் பெற்றதும் என்ற மின்நூல் கிடைத்தது.

வாசிக்க வாசிக்க இன்னமும் அவரின் மேல் உள்ள பிரமிப்பும், ஆச்சரியமும் தீர்ந்தபாடில்லை. 

எனக்குத் தெரியாத, மறந்த, புரியாத விசயங்களைப் பற்றி வீட்டில் குழந்தைகள் கேள்விகளாக என்னிடம் கேட்கும் போது நான் வாங்கி வைத்துள்ள பல சுஜாதா எழுதிய நூல்கள் தான் அவர்களுக்கு இன்று உதவி கொண்டு இருக்கின்றது. 

உண்மைகள் உறங்காது

வினவு தளத்தில் பவா செல்லத்துரை பற்றி எழுதியுள்ள கட்டுரையை வாசித்ததும் திருப்பூரில் நடக்கும் பல விழாக்களின் உண்மையான சுயரூபத்தை ஒப்பிட்டு பார்த்துக் கொண்டேன்.

பல கேள்விகள், புன்னகைகள் மனதில் வந்து போனது.

வலைபதிவில் மிக அழகாக அற்புதமாக எழுதிக் கொண்டு வரும் எழுத்தாளர் அமுதவன் எழுதிய பழைய ஒரு பதிவில் நான் படித்த மூன்று வரிகள் என்னுள் இருந்த மொத்த சந்தேகத்தையும் தீர்த்தது.

1) ஒரு அரசியல்வாதி இங்கே புகழுடன் விளங்க வேண்டுமென்றால் அவனுடன் சினிமாவும் இலக்கியமும் கலந்திருக்கவேண்டியுள்ளது.
2) ஒரு சினிமாக்காரன் இங்கே புகழுடன் இருக்க வேண்டுமென்றால் அவனுடன் அரசியல் கலந்திருக்கவேண்டியுள்ளது.
3) ஒரு இலக்கியவாதி இங்கே புகழுடன் இருக்க வேண்டுமென்றால் அவனுடன் அரசியல் சினிமா இரண்டும் கலந்திருக்கவேண்டியுள்ளது

இந்தக் குப்பையான கலவைதான் அத்தனைச் சீரழிவுகளுக்கும் காரணமாக உள்ளது.

மாவீரர்கள்

நான் எழுதத் தொடங்கிய போது நான் புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை விட்டு ஏறக்குறைய 17 வருடங்கள் ஆகியிருந்தது. காரணம் வாழ்க்கை அனுபவங்களை மட்டுமே படிக்க வேண்டிய சூழ்நிலையில் இருந்தேன். 

2007 க்குப் பிறகே வாசிக்கக்கூடிய சூழ்நிலை அமைந்தது.

கல்லூரி வரைக்கும் படித்த ஆயிரக்கணக்கான புத்தகங்கள் தந்த தாக்கம் கூட என்னுள் மறைந்து விட்டது. கற்ற அனுபவங்கள் மட்டுமே நிலையானதாக இருந்த போது தான் ஈழம் குறிதது, வேலுப்பிள்ளைப் பிரபாகரன் குறித்த ஆர்வமும் தேடலும் என்னுள் தொடங்கி இது குறித்து மட்டுமே இரண்டு வருடங்கள் நூற்றுக்கணக்கான புத்தகங்கள் வாங்கிப் படிக்க ஆர்வம் உருவானது. 

இந்தத் தளத்தில் அடிப்படை முதல் ஈழப் போராட்டத்திற்குப் பின்னால் உள்ள சர்வதேச அரசியல் வரைக்கும் நான் அறிந்த புரிந்தவரையில் எழுதியுள்ளேன். இந்தப் பழைய கட்டுரைகள் நிச்சயமாக எவருக்கோ ஒவ்வொரு சமயத்திலும் பயன்படும் என்ற நினைப்பைத் தவிர வேறொன்றுமில்லை. இந்த நம்பிக்கை இன்று வரையிலும் பொய்க்க வில்லை.

குறிப்பாகக் கனடா நாட்டில் உள்ள ஈழத்தமிழர்களுக்கு இந்தக் கட்டுரைகள் இன்று வரையிலும் பயன்படுகின்றது என்பதை அவர்களின் ஒவ்வொரு சமய கடிதமும் எனக்கு உணர்த்துகின்றது. 

வேலுப்பிள்ளை பிரபாகரன் குறித்த நேர்முறை எதிர்மறை கருத்துக்களைப் பல புத்தகங்கள் வாயிலாக முடிந்தவரைக்கும் அறிந்தவன் என்ற முறையில் இன்று வரையிலும் அவர் மேல் கொண்ட மரியாதை ஒரு துளி கூட மாறவில்லை.

அவர் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்துள்ளேன் என்பதே எனக்குப் பெருமையாக உள்ளது. 

அவரின் ஒவ்வொரு பிறந்த நாளான நவம்பர் 26 அன்று என் வலைபதிவில் அவரைப்பற்றி எழுதியுள்ள ஒரு முக்கியத் தலைப்பை மீள்பதிவு செய்வதுண்டு.

ஆனால் பத்திரிக்கையில் இங்கே ஈழ அகதி முகாமில் கணவனைப் பார்க்கச் சென்ற ஒரு கர்ப்பிணிப் பெண்ணைச் சோதனை என்ற பெயரில் நிர்வாணப்படுத்திய நமது தமிழ்நாட்டு காவல் துறையின் அக்கிரமச் செயலைப் பார்த்த போது இனி ஈழம் குறித்து என்ன எழுதி எவருக்குப் புரிய வைக்க முடியும் என்றே தோன்றியது. 

இன்று மாவீரர்கள் தினம். என்னுடைய அஞ்சலிகள். 

தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் எல்லா விசயங்களிலும்அன்றும் இன்றும் என்றும் வாய்ச்சொல்லில் (மட்டும்) மகா வீரர்களாக இருப்பதால் ஈழம் குறித்து என்ன எழுத முடியும்?

செய்திகளை, காட்சிகளை வேடிக்கை மட்டுமே பார்க்க முடியும். 


என் தாய் மொழி என் குழந்தைகளுக்கும் உரியது.

கடந்த பல மாதங்களாக நான் எழுதிய கல்வித் தொடர் குறித்துக் குறிப்பாகத் தமிழ் மொழிக் கல்விக்கான ஆதரவு குறித்தும் எழுதும் போது என்னை நோக்கி வந்த வந்த கேள்விகள் சில உண்டு. 

உன் குழந்தைகள் மட்டும் ஏன் ஆங்கில வழிக்கல்வியில் படிக்கின்றார்கள்?

தற்போது உள்ள குழந்தைகளின் மொழிக் கொள்கையை விமர்சிப்பவர்கள் தங்கள் குழந்தைகளின் தமிழ் அறிவு வளர என்ன செய்கின்றார்கள்?

போன்ற பல கேள்விகள் என்னை நோக்கி வந்தது.

சமீபத்தில் எழுத்தாளர் ஜெயமோகன் உருவாக்கிய எழுத்துரு விவாதம் அடுத்தக் கட்டத்திற்குப் பலரையும் நகர்த்தியது.  அவர் எழுதியதை குறித்து நான் என் பார்வையைச் சொன்ன போது சிலரை வேறு விதமாக யோசிக்க வைத்தது.

ஒருவர் ஒரு கருத்தைச் சொல்கின்றார் என்றால் அதன் மூலம் எனக்கு என்ன தேவை? சுய வாழ்க்கையில் நாம் மாற்றிக் கொள்ள வேண்டியது என்ன? என்பது போன்ற ஆக்கபூர்வமான விசயத்தை மட்டுமே எடுத்துக் கொள்வதுண்டு. அந்தக் கருத்தை எழுதியவரின் கருத்தாக மட்டுமே எடுத்துக் கொள்வதுண்டு. 

தொடக்கம் முதல் குழ்ந்தைகளின் தமிழ் மொழி குறித்த பேச்சு, எழுத்து, வாசிப்புப் பழக்கத்தை மிக நுணுக்கமாகக் கவனித்து அவர்களை வளர்த்து வந்துள்ளேன்.

இன்று தமிழிலில் 98 சதவிகிதம் என்கிற அளவிற்கு வளர்நதுள்ளார்கள். 

இந்தப் படங்கள் தேவையா? இல்லையா என்பதை விட எழுதுபவன் எவரும் தன் வாழ்க்கையில் அதை அப்படியே கடைபிடிப்பதில்லை என்கிற கூற்று மெய்யாகி விடக்கூடாது என்பதற்காக மட்டுமே.

நண்பர் ராஜா, உங்கள் குழந்தைகள் குறித்து நீங்க எழுதுவதன் சிறப்பே உங்களின் சுய அனுபவமாக இருப்பதால் அதைப்படிக்கும் எனக்கு என் குழந்தையை எப்படி வளர்க்க வேண்டும் என்பதைக் கற்றுக் கொள்கின்றேன் என்று பல சமயம் சொல்லியுள்ளார்.

காரணம் நாம் மற்றவர்களின் பார்வையில் எப்படித் தெரிகின்றோம் என்பதை விட நம் மனசாட்சியின் பார்வையில் நாம் எப்படியான மனிதராக தெரிகின்றோம் என்பதே முக்கியமானது.  இதை ஒவ்வொருவரின் அனுபவங்கள் தான் உணர்த்தும். அந்த அனுபவங்கள் தான் இன்று வரையிலும் என்னை இயக்கிக் கொண்டு இருக்கின்றது.

குழந்தை வளர்ப்பில் தாய்மொழி முக்கியமானது என்பதை மீண்டும் ஒரு சொல்லி எங்கள் ஒத்துழைப்பின் மூலம் எங்கள் குழந்தைகள் நாள்தோறும் செய்து கொண்டிருக்கும் பயிற்சியும், குறிப்பிட்ட சில படங்கள் மட்டுமே இங்கே. அவர்கள் கற்றதும் பெற்றதும் 










தொடர்புடைய பதிவுகள்





8 comments:

Raja said...

அண்ணா,
வெளியில் இத்தனை பேசுறியே, நீ உன்குழந்தைகளை எந்த வழி கல்வியில் படிக்க வைக்கிறாய் என்பது, மிக எளிய ஆனால் வலிமையான கேள்வி.நானும் இதை எதிர் கொண்டு ஆகவேண்டும் இன்னும் சில வருடங்களில். ஆனால் நான் தமிழகத்தில் இல்லாததால் சாக்கு சொல்லி தப்பித்துவிட முடியும். நீங்கள் இக்கேள்விக்கு உங்கள் தரப்பு காரணத்தை சொல்லாவிடினும் , உங்கள் தனிப்பட்ட அக்கறையால் எவ்வாறு நீங்கள் உங்கள் குழந்தைகளிடம் தமிழ் மொழி ஆர்வத்தை வளர்த்துல்லேர்கள் என்பதை படம் போட்டு சொல்லிவிடீர்கள் :).


Rajasankar said...

//1) ஒரு அரசியல்வாதி இங்கே புகழுடன் விளங்க வேண்டுமென்றால் அவனுடன் சினிமாவும் இலக்கியமும் கலந்திருக்கவேண்டியுள்ளது.
2) ஒரு சினிமாக்காரன் இங்கே புகழுடன் இருக்க வேண்டுமென்றால் அவனுடன் அரசியல் கலந்திருக்கவேண்டியுள்ளது.
3) ஒரு இலக்கியவாதி இங்கே புகழுடன் இருக்க வேண்டுமென்றால் அவனுடன் அரசியல் சினிமா இரண்டும் கலந்திருக்கவேண்டியுள்ளது
//

காமராஜர், ராஜாஜி போன்றோரெல்லாம் இந்த வரையறைக்குள் வருவார்களா? :-)

மற்ற மாநிலங்களில் நிலை எப்படி? அங்கேயும் இதே நிலை தானா?

பிரச்சினை இது நம்மூரில் வளர்ந்த திராவிட இயக்க பாரம்பரியம் என்பதே. அது தான் அரிசியை விட்டுவிட்டு தவிட்டை கொண்டாடும் முறையை கற்று தந்தது. திராவிய இயக்க சிந்தனையாளர்கள் என சொல்லப்படுவோரெல்லாம் என்ன செய்தாகள்?

அதோடு நிற்கவில்லை தமிழியக்கம் பாடுபட்டு வளர்த்த தமிழை, சைவ, வைணவ இயக்கங்கள் பாடுபட்டு வளர்த்த தமிழை, கம்பன் மேல் காதல் கொண்டோர் அடும்பாடுபட்டு வளர்த்த தமிழையும் சேர்த்தே சொந்தம் கொண்டாடினார்களே அதையெல்லாம் எதிலே சேர்த்துவது?

தமிழிக்கு மாற்றாக இந்தியை எடுத்துவிட்டு ஆங்கிலத்தை வைத்தது தானே இந்த திராவிட இயக்கம் செய்த சாதனை. தமிழுக்கு இருக்கும் பழைய நூல்கள் எல்லாமே திராவிட இயக்கம் காத்ததா? மற்றவர்கள் காத்தார்களா?

சினிமாவும் கூத்தும் குடியும் தான் தமிழ் கலாச்சாரம் என்று செய்தது தானே இந்த திராவிட இயக்க சாதனை. அதை தமிழ்நாட்டில் இருந்து ஒழித்தால் இந்த அவலங்கள் எல்லாம் நீங்கிவிடும்.

திண்டுக்கல் தனபாலன் said...

// நம் மனசாட்சியின் பார்வையில் நாம் எப்படியான மனிதராக தெரிகின்றோம் என்பதே முக்கியமானது.... //

இது ஒன்றே போதும்...

Amudhavan said...

முள்ளிவாய்க்கால் போர் நடந்த (அதனைப் போர் என்று சொல்லமுடியாது. இன அழிப்புத்தான்) இறுதிக்காலத்தில் பிரபாகரன் யாருடைய அரசியல் ஆலோசனைகளைப் பெற்றுக்கொண்டிருந்தார், யாருடைய வழிகாட்டுதல் அவருக்கு இருந்தது என்ற கேள்விகளுக்கான பதில்களில்தான் மொத்த இறுதி முடிவுக்கான மர்ம முடிச்சுகளும் அவிழ்க்கப்படும் என்றே தெரிகிறது.

Raja said...

அமுதவன் சார்,
தோழர் மருதையன் அதற்கான விடையை விளக்குகிறார்.சற்றே நெடிய காணொளி.ஆனால் நிச்சயம் காணவேண்டிய ஒன்று
http://www.vinavu.com/2013/11/05/tanjavur-mullivaykkal-memorial-com-maruthaiyan-interview/


நன்றி
ராஜா

”தளிர் சுரேஷ்” said...

மற்றவர் பார்வையை பற்றி யோசிக்காமல் நம் மனசாட்சிப்படி நடந்துகொள்ளவேண்டும் அருமை! நானும் என் பிள்ளைகளை தமிழில் பேசும்படி வளர்த்து வருகிறேன்! மூத்தமகள் ஜனனி பேசும் கொஞ்சும்தமிழ் என் கவலைகளை சிலமணி நேரங்கள் துரத்தியடிக்கும்! அருமையான பகிர்வு! நன்றி!

கரந்தை ஜெயக்குமார் said...

தங்களையும், தங்களுடைய குழந்தைகளையும் பாராட்டியே ஆக வேண்டும் ஐயா.
எந்த ஒரு இனமாக இருந்தாலும் , அதன் அடையாளம் அவ்வினத்தின் மொழிதானே.
மொழியை அழித்தால் அவ்வினமே அழியும் என்பதை , நம்மில் பலரும் இன்னும் புரிந்து கொள்ளாமல் இருக்கின்றனர்.
கல்வி என்பது இன்று மதிப்பெண் பெறுவதற்கான வழி என்றாகிவிட்டது. இந்நிலை மாறியாக வேண்டும் ஐயா.

Murugan said...

திருப்பூரில் நடக்கும் பல விழாக்களின் உண்மையான சுயரூபத்தை ஒப்பிட்டு பார்த்துக் கொண்டேன்.

பல கேள்விகள், புன்னகைகள் மனதில் வந்து போனது.???கொஞ்சம் விளக்கலாமே ....