Wednesday, December 12, 2012

தமிழ்ச்செடி - உருவான கதை


நான் வலைபதிவு என்ற இந்த உலகத்திற்குள் வந்து நான்கு ஆண்டுகள் முடிந்து ஐந்தாம் ஆண்டின் பாதியில் நிற்கின்றேன்.

எனக்கு வேர்ட்ப்ரஸ் என்ற தளம் 2007 மத்தியில் அறிமுகம் ஆனது. அடுத்த ஆண்டு இப்போது எழுதிக் கொண்டிருக்கும் தளம் நண்பர்களின் முயற்சியால் அறிமுகமானது. சென்ற வருடம் வரைக்கும்  எனது முகம் எதையும் எந்த இடத்திலும் காட்டிக் கொள்ள விரும்பாமல் வலைபதிவுகளில் எழுதுவதை தவிர எங்கும் செல்ல முடியாத சூழ்நிலையில் குடும்பம். தொழில், வாசிப்பு, எழுத்து என்றளவில் தான் இருக்க முடிந்தது.  

இதுவரைக்கும் அனைத்து துறை சார்ந்த விசயங்களையும் எழுத்தில் கொண்டு வந்துள்ளேன். பலரும் எழுத தயங்கும் விசயங்களைப் பற்றியும் எழுதியுள்ளேன். இணைய சுதந்திரம் மற்றும் 66 ஏ குறித்து பயந்து கிடக்கும் இந்த நேரத்தில் கூட நான் நினைத்த கருத்துக்களை விமர்சனங்கள் எழுதுவதில் தயக்கம் காட்டியதில்லை.

அடுத்தவருக்கு அறிவுரைகள் கூறியதும் இல்லை. ஆனால் என் வாழ்வில் நடந்த அனுபவங்களை அது தந்த பாடங்களை எழுத தயங்கியதுமில்லை.

ஆனால் சமரசமோ, சார்பு தனமோ இல்லாத காரணத்தால் பெரிதான சங்கடங்களை இதுவரையிலும். சந்தித்தில்லை.

உண்மைக்கருகே தயக்கமின்றி சென்றிருக்கின்றேன்.

எதிர்மறை நியாயங்களை என் தரப்பு வாதங்களை எடுத்து வைத்து விடுவதுண்டு.  படிப்பவர்கள் வாசிப்புடன் கூடிய யோசிப்பு வேண்டும் என்பதே என் நோக்கம். எந்த காழ்ப்புணர்ச்சிகளையும் வலிய திணிப்பதும் இல்லை. எந்த அரசியல் கட்சி குறித்தும், அரசியல் தலைவர்களையும் குறித்தும் என் மனதில் தோன்றும் விமர்சனங்களையும் எடுத்து வைத்துள்ளேன். 

திரைப்படங்களைப் பற்றி எழுத எனக்கு எப்போதும் விருப்பம் இருந்ததில்லை.  குழந்தைகள் வாழ்வில் அறிமுகமான பிறகு வீட்டில் மட்டும் அவர்களுடன் சேர்ந்து பார்க்கின்றேன். விருப்பு, வெறுப்பு என்று எல்லாவற்றையும் கடந்து வர முடிந்துள்ளது.

சூழ்நிலைகளை கையாள கற்றுக் கொண்டதால் எதுவும் மனதளவில் எதுவும் பாதிப்பதில்லை.தினந்தோறும் பாதிக்கும் விசயங்களை எழுத்தாக கொண்டு வந்துவிடுவதால்  மனம் லேசாகிவிடுகின்றது.

எழுத தொடங்கிய போது எழுத்தாள நடை எதுவுமின்றி நான் வாழ்வில் கடந்து வந்த பாதையில் நடந்த நிகழ்வுகளை அனுபவங்களாக அப்படியே எழுதி வந்துள்ளேன்.

இடுகை தொடங்கிய பிறகு மகாத்மா காந்தி குறித்து தெரிந்து கொள்ள ஆர்வம் வந்தது. படித்த விசயங்களை விட எழுத்தாக எழுத முயற்சிக்கும் போது இன்னும் பல புரிதல்களை உணர்ந்து கொள்ள முடிந்தது.

காந்தி குறித்து முதன் முதலாக பதிவுகளில் தொடர் போல எழுதத் தொடங்கினேன். அதன்பிறகு ஈழம் சார்ந்த ஆர்வம் உருவான்து. பிரபாரகன் குறித்த எதிர் மறை நியாயங்களை என் பார்வையில் முடிந்தவரைக்கும் பதிவு செய்துள்ளேன். பலரும் நான் எழுதிய இந்த ஈழப்பதிவுகளை உதாரணம் காட்டி பாராட்டியுள்ளனர்.

இதுவொரு அங்கீகாரம் அல்ல.

ஒன்றை நாம் அறியத் தொடங்கும் போது அதையே எழுத்தாக மாற்ற நினைக்கும் போது அதுவரையிலும் தெரியாத விசயங்கள் நமக்கு தெரிய வருகின்றது. 

என் எழுத்து, என் பார்வை என் வாழ்க்கை எப்போதும் பரந்துபட்டது. நான் கற்றுக் கொண்ட அனுபவங்கள் கண்க்கில் அடங்கா. கற்றுக் கொள்வதில் உள்ள ஆர்வங்கள் இன்னமும் குறைந்தபாடில்லை.

தேடியலைந்த ஞானத்தை தற்போது எழுத்தாக மாற்றிக் கொண்டு வருகின்றேன். திருப்பூர் தொழில் வாழ்க்கைக்குப் பின்னால் உள்ள சவால்களைப் பற்றியும் வெவ்வேறு தலைப்பில் எழுதி வந்துள்ளேன்.  ஆனால் அதனை தொகுத்து பார்த்த போது டாலர் நகரம் என்றொரு புத்தகத்திற்கு தேவைப்படுகின்ற விசயங்கள் எனக்கு கிடைத்தது.

அது தற்போது தமிழ் மீடியா தளத்தில் திரு. மலைநாடன் கைவண்ணத்தில் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு ஒவ்வொரு வாரமும் தொடராக வந்து கொண்டிருக்கின்றது. . 
கோவையைச் சேர்ந்த உலக சினிமா ரசிகன் சுருக்கமாக மிக அழகாக உலக திரைப்படங்களைப் பற்றி சொன்னதில் என் மனதில் நின்ற ஒரு விசயம் நீர்ப்பறவை குறித்து பேசியது. எவர் தமிழ்நாட்டிற்கு குடிப்பழக்கத்தை அறிமுகப்படுத்தினார்களோ அந்த குடும்பத்தில் இருந்து இந்த படம் வந்தது முதல் ஆச்சரியம். அதை விட அந்த இந்து முஸ்லீம் கிறிஸ்துவ கதாபாத்திரங்களை உருவாக்கிய இயக்குநரின் ஆளுமை குறித்து விவரித்த போது இரண்டு நாட்கள் அவர்கள் பேசிய விசயங்கள் மனதில் உழன்று கொண்டேயிருந்தது.
நான் பிறந்த போது எங்கள் மாவட்டம் இராமநாதபுரம் என்ற பெயரில் தான் இருந்தது.  தற்போது சிவகங்கை மாவட்டம் என்ற அளவுக்கு பெயரளவில் மாறியுள்ளது.  ஆனால் இதுவரையிலும் எந்த பெரிதான முன்னேற்றங்களும் அந்த மாவட்டத்திற்கு கிடைத்தபாடில்லை.

இந்த மாவட்டத்தைப் பற்றி எங்கள் குடும்ப தலைமுறைகளைய் பற்றி எழுத வேண்டும் என்று தோன்றியது. அது பல்வேறு சரித்திர பின்புலத்தை ஆராய பல புத்தகங்களைப் படிக்க காரணமாக இருந்தது.  குறிப்பாக நாடார் குறித்து அவர்களின் முன்னேற்ங்கள் குறித்து எனக்கு நிறைய தகவல்கள் கிடைத்தது.  அதையும் தொடர் போல பதிவுகளாக மாற்ற முடிந்தது.

பொருளாதார நெருக்கடியில் அடிவாங்கிய திருப்பூரை திருப்பி போட்டது. அதற்குப் பின்னால் உள்ள நிகழ்வுகளை அனுபவங்களின் தொகுப்பாக எழுத முடிந்தது. இந்த சமயத்தில் தமிழ் மீடியா தளத்தின் ஆசிரியர் திரு. மலைநாடன் வேண்டுகோளின்படி காக்க காக்க நோக்க நோக்க என்றொரு தொடர் எழுத வாய்ப்பு கிடைத்தது. 

இந்தியா என்பது தொடக்கம் முதல் விவசாய நாடு பெயரில் இருந்தாலும் இன்று இந்த அளவுக்கு வீழ்ச்சியடைய என்ன காரணம் என்பதை பல தனி இதழ்கள் மூலம், பல சரித்திர புத்தகங்கள் மூலம் கண்டு கொண்டு அதை சுவராசிய கோர்வையாக அந்த தளத்தில் எழுத முடிந்தது.

சொந்த அனுபவங்களை எழுதுவதில் அதை முடிந்தவரைக்கும் சுவராசியப் பதிவுகளைக மாற்றுவதில் ஓரளவிற்கு  நான் வெற்றியடைந்துள்ளேன் என்பதை பலரின் உரையாடலின் மூலம் புரிந்து கொள்ள முடிந்தது. பதிவுலகில் எழுதுபவர்கள் தங்களின் அந்தரங்களை எழுத விரும்பவதில்லை. காரணம் இது முகமூடிகளின் உலகமாக இருப்பதால் வலிய போய் ஆப்பு வாங்கிக் கொள்ள எவரும் விரும்புவதில்லை.

ஆனால் அதையும் நான் உடைத்துள்ளேன்.

குழந்தைகள் குறித்து ஏராளமான விசயங்களை தொகுப்பாக தொடர்ந்து எழுதியுள்ளேன். இப்போது கூட குழந்தைகள் குறித்த பழைய நினைவுகளை அதன் தாக்கத்தை சூடு குறையாமல் யோசிக்க முடிகின்றது.

நாம் எழுதிய பழைய பதிவுகளை நாம் தான் எழுதினோமா? என்று ஆச்சரியப்பட வேண்டுமே தவிர நாம் ஏன் இதை எழுதினோம் என்று சங்கடப்பட்டால் அதற்கு பெயர் என்ன என்பதை நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள்.  

இதுவரையிலும் அந்த துர்பாக்கியம் எனக்கு நிகழவில்லை என்பதே எனக்கு திருப்தியாக உள்ளது. 

மதம், அரசியல்,இடஒதுக்கீடு,,ஆன்மீகம்,தேர்தல் களம் என்று என் எழுத்துப் பயணம் வளர்ந்துள்ளது.

தற்போது நடையில் கூடுதல் கவனம் செலுத்தி முக்கியமாக கருத்துக்களுக்குகே மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து எழுதி வருகின்றேன். ஆனால் பலரும் பயப்படும் நீளம் அகலம் பார்த்து எழுதுவதில்லை.
எழுத்தாளர் சுப்ர பாரதி மணியன்

ஆனாலும் பலருக்கும் இது வாசிக்க விரும்பும் தளமாக இருக்கின்றது.

அவசரத்தில் பதிவுலகத்தை பொழுது போக்காக நினைத்து வருபவர்களுக்கு இதற்கென்று ஆயிரம் தளங்கள் உள்ளது. என் அக்கறை சார்ந்த உணர்வுகளை அடுத்தவர்களுக்கு கடத்த முற்படுகின்றேனே தவிர கவர்ந்து இழுத்து உள்ளே கொண்டு வர வேண்டும் என்ற எண்ணத்தில் தலைப்புகள் எதையும் வைப்பதில்லை.

எனக்கு தேவைப்படும் அங்கீகாரமும் இந்த வலைபதிவில் கிடைத்துள்ளது. அக்கறையுடன் பின் தொடர்பவர்கள், ஆர்வமாக வந்து படிப்பவர்கள், நம்பிக்கையுடன்  உள்ளே வருபவர்கள் என்று பரந்து பட்ட ஒரு வாசக வட்டம் எனக்கு கிடைத்துள்ளது. காரணம் இன்று நமக்கு பிடிக்காத ஒரு கருத்து நம்முடைய அனுபவம் அதை கற்றுத் தரும் போது மறுபடியும் வாசிக்க நமக்கு விருப்பமாக இருக்கும்.

வாசிப்பு என்பது அனுபவமும் வயதும் தரும் அருமருந்து. ஆனால் கடைசி வரையில் மயக்கத்திலேயே இருப்பவர்கள் குறித்து நாம் கவலைப்பட்டு ஒன்றும் ஆகப்போவதில்லை.

என்னைப் புரிந்தவர்களும், என்னுடன் பழகியவர்களும், நெருக்கமான உறவில் வந்து நின்றவர்களுமாய் இந்த பயணம் இன்று வரையிலும் அமைதியாக ஆர்ப்பாட்டமின்றி நகர்ந்து கொண்டிருக்கின்றது.

என்னுடைய ஓய்வு நேரங்களை எழுத்தாக முடிகின்றது என்பதே எனக்கு மிகப் பெரிய திருப்தியை தந்துள்ளது. மாற்றுப் பார்வைகள் இருப்பவர்களையும் கவனித்தே வந்துள்ளேன். எனது இந்த எழுத்துப் பயணத்தில் ஒவ்வொரு காலகட்டத்திலும் வெவ்வேறு நண்பர்கள் உதவி புரிந்துள்ளார்கள். அவர்களை அந்த சமயத்திலேயே குறிப்பிட்டும் வந்துள்ளேன். வலைபதிவின் நீட்சியாக என் எழுத்துக்கள் வெகுஜன பத்திரிக்கைகளிலும் வந்து கொண்டிருக்கின்றது என்பதே போதுமான அங்கீகாரமாக இருக்கிறது.

அடுத்த பதிவு 450 என்ற எண்ணிக்கையில் வந்து நிற்கின்றது.
********************************************

நாற்பது வயதுக்கு மேல் எழுத்து மூலம் பலருக்கும் பயன்பட்டதைப் போல அடுத்த கட்டமாக கள ரீதியாக சில விசயங்கள் இந்த ஐந்தாம் ஆண்டில் செய்ய வேண்டும் என்று தோன்றியது.

காலம் காலமாக தனது மலத்தின் மூலம் பறவையினங்கள் விதைகளை பார்க்கும் இடங்களிலெல்லாம் தூவி வந்துள்ளது. இன்று நாம் பார்க்கும் பல காடுகள் நமக்கு பறவையினங்கள் தந்ததே. ஆனால் மனிதர்கள் தனது மனத்தின் மூலம் செய்ய முடிந்ததைக் கூட செய்ய விரும்பாமல் இருப்பது  தான்  சமூகத்தின் மகத்தான் ஆச்சரியம்.

பொதுநலமோ, சுயநலமோ அதையும் தாண்டி கூகுள் என்றொரு இந்த அமைப்பு தோன்றியிருக்காவிட்டால் நாம் அனைவரும் இன்று வரையிலும் தனித்தனி தீவுகளே. புலம் பெயர்ந்தவர்கள் குறிப்பாக ஈழத்தமிழர்கள் இந்த தமிழ்மொழியை இணையத்தில் கொண்டு வந்து சேர்த்திருக்காவிட்டால் தமிழ்மொழியின் அழிவும் சிதைவு இன்னமும் அதிகப்பட்டுப் போயிருக்கும்.

இன்று உலகத்தமிழர்களை ஒன்று சேர்க்க காரணமாக இருந்ததற்குப் பின்னால்  லட்சக்கணக்கான நல்ல மனம் தான் காரணமாகவும் இருக்கின்றது.
*********************************

சிவா மூலம் புதுக்கோட்டையில் உள்ள ஞானாலயா என்ற நூலகம் எனக்கு இந்த வருடம் அறிமுகம் ஆனது.

ஞானாலயா என்ற நூலகத்தை தங்களது குடும்ப சொந்த முயற்சியின் காரணமாக தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு சேவை மனப்பான்மையுடன் இன்று வரையிலும் பொருளாதார பிரச்சனைகள் இருந்த போதிலும் சோர்வு இல்லாது அந்த நூலகத்தை நடத்திக் கொண்டு வரும் திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் சேவையை வலையுலகத்திற்கு புலம் பெயர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்களுக்கு அறிமுகம் செய்து வைக்க முடிந்தது. 

ஞானாலயா தளத்தை புதிய வடிவமைப்பில் மாற்றி இன்று பலருக்கும் பயன் உள்ளதாக மாற்ற முடிந்துள்ளது. இணைய உலக நண்பர்களும் இதில் என்னுடன் கைகோர்த்து அந்த நூலகத்தைப் பற்றி வெளியுலகத்திற்கு அறிமுகம் செய்து வைத்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பதே என் எழுத்தின் மேல் வைத்த நம்பிக்கையும், வலையுலகம் சார்ந்த நம்பிக்கைகளையும் எனக்கு அதிகம் உருவாக்கியுள்ளது. தம்பி அப்துல்லா, நெருங்கிய நண்பர் வெட்டிக்காடு ரவி, நிகழ்காலத்தில் சிவா இன்னும் பெயர் வெளியே சொல்ல விரும்பாதவர்களின் பங்கு அதிகமானது. இதன் தூரம் அதிகமானாலும் நம்பிக்கை அதிகம் உருவாகியுள்ளது என்பதும் உண்மையே. 

எழுத்தாளர் ஜெயமோகன் மூலம் இந்த ஞானாலாயா நூலகம் குறித்து பலருக்கும் சென்றடைந்த காரணத்தால் அவரின் வாசகர் வட்டத்தில் உள்ள பல நண்பர்களும் இதில் ஆர்வமாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள் என்பது கூடுதல் மகிழ்ச்சியை தருவதாக உள்ளது.
***********************************

திருப்பூரில் ராஜமாணிக்கம் என்றொரு நண்பர் இருக்கின்றார்.

குறுகிய காலத்தில் என் எழுத்தின் மூலம் அறிமுகமாகி மிக நெருக்கமாக ஆனவர். அவர் வீடு முழுக்க புத்தகமாக மாற்றி வைத்திருப்பவர். தேசிய கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்தாலும் அறம் அறக்கட்டளை என்ற அமைப்பின் மூலம் தலித் சமூக மக்களை, மாணவர்களை மாவட்ட ஆட்சியர் பொறுப்புக்கு பயிற்சி அளிப்பது முதல் பல தன்னார்வ சமூக சேவைகளை முடிந்தவரைக்கும் பலருடனும் சேர்ந்து செய்து கொண்டு வருபவர்.

பல சமயம் எங்கள்  இருவருக்கும் நக்கல், நையாண்டு, காரசார விவாதங்கள் களைகட்டும். கடைசியில் எனக்குத் தெரியாத விசயங்களைப் பற்றி படிக்க ஒரு புத்தகத்தை எடுத்து கொடுப்பார். 

அன்று அவரைப் பார்க்க அவர் வீட்டுக்குச் சென்று விட்டு வரும் போது திருப்பூர் ஈஸ்வரன் கோவில் அருகே ஒரு பழைய புத்தகக்கடை கண்ணில் பட்டது.   இது போன்ற இடங்களில் புத்தகங்கள் வாங்குவது எனக்கு எப்போதும் பிடிக்கும்.

காரணம் அதிகமான புத்தகங்கள் குறைவான விலையில் கிடைக்கும் என்பதே முக்கிய காரணம்.

அன்று எனக்கு கிடைத்த பல ஆச்சரியமான ஆபூர்வ ரக தமிழ் இலக்கியம் சார்ந்த புத்தகங்களைப் பார்த்து விட்டு இது போன்ற எத்தனையோ புத்தகங்கள் நாள்தோறும் தமிழ்நாட்டில் குப்பைகளுக்கு போய்க் கொண்டு இருப்பதை யோசித்துக் கொண்டே வீட்டுக்கு வந்தேன். 

இது குறித்த என் புரிதலை ராஜமாணிக்கத்திற்கும், கே.ஆர்.பி. செந்திலுக்கும் தமிழ்ச்செடி என்று தலைப்பிட்டு அனுப்பி வைத்தேன்.

தற்போதைய சூழ்நிலையில் இணையத்தில் தமிழ்மொழி, தமிழ் இலக்கியம் சார்ந்த எது வேண்டுமானாலும் நமக்கு கிடைக்கும். 

ஆனால் நாம் தேடித்தான் பெற் வேண்டும். அதை முடிந்தவரைக்கும் ஒரே இடத்தில் கொண்டு வந்து சேர்த்து இணைப்பு கொடுத்து வைத்தால் தேடி அலைபவர்களுக்கு நேரம் மிச்சமாகும். ஆர்வமும் அதிகமாகும் என்பதே என் முதன்மையான நோக்கமாக இருந்தது.  ராஜமாணிக்கம் பலே கில்லாடி. அவர் பதில் கடிதத்தில் என்னென்ன செய்யலாம் என்று ஒரு பட்டியலிட்டு அனுப்பியிருந்தார். எனக்குள் பயம் வந்து விட்டது. காரணம் தொழில் வாழ்க்கையில் கிடைக்கும் நேரம் இதற்கு ஒத்துவராது என்று தோன்றியது.

கே.ஆர்.பி. செந்தில் அவர் வட்டத்தில் உள்ள அத்தனை பேர்களுக்கும் ஆலோசனை கேட்டு அனுப்பி விட பெரும்பாலன மக்கள் அதை புறக்கணித்து விட சிலர் மட்டும் ஆர்வத்துடன் பதில் அளித்து இருந்தனர். ஏழெட்டு மாதங்களுக்கு முன் அந்த தமிழ்ச்செடி என்ற விதை என் மனதில் புதைக்கப்பட்டு இருந்தது.  ஆனால் அந்த ஆர்வம் மட்டும் என்னை விட்டு அகலவில்லை.
******************************

திருப்பூரில் இருக்கும் தம்பி இரவுவானம் சுரேஷ் என் தனிப்பட்ட வாழ்க்கையிலும்  நல்ல புரிதலுடன் ஆர்வமும் அக்கறையுமாய் செயல்பட்டுக் கொண்டிருப்பவர். அவர் வீட்டுக்கு வந்த போது இது குறித்து ஒரு தடவை மேலோட்டமாகச் சொன்னேன்.

காரணம் அவர் வயசு பசங்க பட்டாளமே தனி. அதுவொரு ஜாலி உலகம். ஆனால் அவர் வயதுக்கு மீறி யோசித்து நிச்சயம் இதை செயலாக்கத்தில் கொண்டு விடுவோம். நீங்கள் ஆலோசனை சொன்னால் போதும் என்று என்னை விரட்டத் தொடங்கினார். 

சுரேஷ் மூலம் அப்போது கோவை மு சரளா என்பவர் எனக்கு அறிமுகமானார். மின் அஞ்சல் தொடர்பு உருவானது. ஆனால் என் வேலைப்பளூவில் என்னால் கவனம் செலுத்த முடியவில்லை. அது குறித்து யோசிக்க நேரமில்லாமல் வெளியே வந்து விட்டேன்.

ஆனால் சுரேஷ் என்னை விரட்டிக் கொண்டேயிருந்தார். இப்போது தமிழ்ச்செடி என்ற விதை மன்சில் இருந்து மண்ணில் ஊன்றப்பட்டது.  ஆனால் மனம் தளரா விக்ரமாதித்தன் போல தம்பி சுரேஷ் இது தொடர்பாக பிடித்த நபரின் பெயர் வீடு என்ற தளத்தில் எழுதிக் கொண்டிருக்கும் சுரேஷ்.. 

இரண்டு தம்பிகளும் எனக்கு இடது வலதாக இருந்து கொண்டு என் ஆலோசனைகளை பெற்றுக் கொண்டு வேகமாக செயலாற்றத் தொடங்கினார்.  ஏற்றுமதி துறையில் வடிவமைப்பு துறையில் சொந்தமாக நிறுவனம் வைத்திருக்கும் வீடு சுரேஷ் குமார் ஒரு பிரம்ம ராட்சசன்.  
வீடு சுரேஷ, மெட்ராஸ்பவன் சிவா, செந்தில், நா,மணிவண்ணன்,உலகசினிமா ரசிகன்,கோவை நேரம், எழுத்தாளர் சுப்ரபாரதி மணியனுடன்

கோடு போட்டால் ரோடே போட்டு விடுவார். ஆனால் அவரின் வேகமும் என் வேகமும் நேரேதிர். அவர் எப்போதும் அளவு கடந்த பொறுமையுடன் .நின்று நிதானித்து நகரக்கூடியவர்.தமிழ்ச் செடி என்ற தள வடிவமைப்பு அவரின் கைவண்ணத்தில் தான் உருவானது.

ஆனால் இறுதியில் எடுத்துக் கொண்ட வேலையை மிக அற்புதமாக செய்து முடிக்கக்கூடியவர்.

நான் ஏற்றுமதி நிறுவன நிர்வாக மேலாண்மையில் இருப்பதால் கிடைத்த கிடைக்கும் பல அனுபவங்கள், தினந்தோறும் சந்திக்கும் மனிதர்கள் தரும் தாக்கம் என எப்போதும் என்னில் இருந்து கொண்டேயிருக்கும். பல ஏற்றுமதி நிறுவனங்களில் உள்ளே நுழையும் போது பலரும் பயமுறுத்துவர்.  இது பஞ்சர் பார்க்க வேண்டிய நிறுவனம் அல்ல. டயரே இல்லாத நிர்வாகம் என்று பயமுறுத்துவார்கள். ஆனால் இதைப் போன்ற பாதாளத்தில் கிடந்த மூன்று நிறுவனங்களை மேலே கொண்டு வந்துள்ளது என் தொழில் வாழ்க்கையில் கிடைத்த அங்கீகாரம். நிர்வகிப்பது என்பது எனக்கு இயல்பான விசயம். ஆனால் தாமதம் என்பது எந்த இடத்திலும் சகிக்க முடியாத ஒன்று.

என் குணம் நன்றாக தெரிந்த இரவு வானம் சுரேஷ் இடையில் இருக்க ஒவ்வொன்றும் விரைவாக நடக்கத் தொடங்கியது. 

தமிழ்ச்செடி தளம் உருவானது.

அவரவர் பள்ளிக்கூட தமிழ் ஆசிரியர்கள் குறித்த நினைவுகளை தொடக்கத்தில் பலரிடமும் கேட்டு வாங்கி வெளியிட முடிந்தது.

இன்று முதல் விழாவும் முடிந்துள்ளது.
*****************************

நாம் வாழும் சமூக சூழ்நிலையில் பலவற்றை நம்மால் மாற்ற முடியாது என்பதை எத்தனை தூரம் உண்மையோ நம்மால் முடியக்கூடிய பல விசயங்களை நம்மால் செய்ய முடியும் என்பதும் உண்மைதானே.

இதனை மனதில் கொண்டே நம்மால் முடிந்த பல விசயங்களை பலருட்னும்  சேர்ந்து ஆக்கபூர்வமாக செய்ய வேண்டும் என்று மனதில் தோன்றியது. இதைப் போலவே வலைபதிவில் இருப்பவர்களுக்கு பல தொழில் சார்ந்த சிந்தனைகளை உருவாக்கவும் அதற்காக ஒரு கூட்டமைப்பை உருவாக்க  மற்றொரு தம்பியும் பாடுபட்டுக் கொண்டிருக்கின்றார்.

அது குறித்து விரைவில் அறிவிப்பு வரும்.

தமிழ்ச்செடி என்பது ஒரு அமைப்பு. பதவிகள் போன்ற சமாச்சாரங்கள் இல்லை நடந்து முடிந்த விழாவில் கலந்து கொண்டவர்கள் ஏறக்குறைய 30 பேர்கள். வலைபதிவுகள் குறித்து எதுவும் தெரியாத பெண் ஆசிரியர்கள் கூட கலந்து கொண்டனர்.

அதிகப்படியான விளம்பரங்கள் இல்லை. பெரிதான ஆர்ப்பாட்டங்கள் இல்லை.
ஆனால் வந்திருந்த அத்தனை பேர்களுக்கும் மன நிறைவைத் தந்துள்ளது.

நம்பகத்தன்மையை விதை போல உருவாக்கியுள்ளோம். தமிழ்ச்செடி சிறப்பாக வளரும் என்று நம்பிக்கையில் உள்ளோம்.

எவர் வேண்டுமானலும் இதில் கிளைகளாக இருக்கலாம். தமிழ்மொழி, படித்த பள்ளிக்கூடம் நினைவுகள், தமிழாசிரியர்கள் குறித்த நினைவுகளை தொடக்கத்தில் பதிவு செய்ய நினைக்கின்றோம். மற்றவர்களுக்கு பயன் உள்ள தமிழ் மொழி, இலக்கியம், வாழ்வியல், மின் தொகுப்பு சார்ந்த தளங்களை அறிமுகம் செய்து வைக்கலாம். அவற்றை தனிப்பக்கமாக்கி இணைப்பு கொடுத்து வைத்து விடுவோம்.

தேடல் உள்ளவர்களுக்கும், தேடி வருபவர்களுக்கு இந்த பக்கம் பயன்படும்.

இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் தான் இன்னமும் அறியப்படாத  படிக்கப்படாத கல்வெட்டுக்கள் அதிகம் உள்ளது. திருப்பூரில் நெருங்கிய நண்பர் இந்த  கல்வெட்டு குறித்த பாடத்திற்காக வாரம் தோறும் பயிற்சி  வகுப்புக்குச் சென்று கொண்டிருக்கின்றார். அது குறித்த அனுபவங்களை எழுதி தருகின்றேன் என்று சொல்லியுள்ளார்.

பழங்கால அதிகம் வெளியே தெரியா பல துறை சார்ந்த தமிழ் கல்வெட்டுக்கள்  குறித்து எழுத நினைத்துள்ளோம்.
*****************************

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட எழுத்தாளர் சுப்ரபாரதி மணியன் குறித்த விபரங்களை அடுத்த பதிவில் எழுதுகின்றேன்.

நடந்து முடிந்த விழா குறித்த விபரங்களை தெரிந்து கொள்ள கீழே உள்ள தளங்களில் வழியே பயணித்தால் புரிந்து கொள்ள முடியும். .

ஒன்றை முயற்சித்துப் பார்க்கும் போது சில சமயம் வெற்றி கிடைக்கும். பல சமயம் நல்ல அனுபவங்கள் நமக்கு கிடைக்கும். அந்த அனுபவங்களே நாம் அடுத்து செல்ல வேண்டிய பாதைக்கு உதவக்கூடியதாக இருக்கும். 

அதை நோக்கித் தான் நகர்ந்து கொண்டிருக்கின்றோம்.

நன்றி.

தொழிற்களத்தில் தமிழ்ச்செடி விழா குறித்த விபரங்கள்


21 comments:

Unknown said...

நம் இருவருக்குமிடையில் குணங்கள் வேறாக இருந்தாலும்....!ரசனை ஒன்றுதான் ஜோதிஜி!
“பதறிய காரியம் சிதறும்” என்கின்ற கொள்கையில் வளர்ந்து விட்டேன் என்கின்ற சப்பைக்கட்டு இருந்தாலும் சோம்பேறித்தனம்தான் முக்கியக் காரணம்...!

தி.தமிழ் இளங்கோ said...

//நாம் எழுதிய பழைய பதிவுகளை நாம் தான் எழுதினோமா? என்று ஆச்சரியப்பட வேண்டுமே தவிர நாம் ஏன் இதை எழுதினோம் என்று சங்கடப்பட்டால் அதற்கு பெயர் என்ன என்பதை நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள். இதுவரையிலும் அந்த துர்பாக்கியம் எனக்கு நிகழவில்லை என்பதே எனக்கு திருப்தியாக உள்ளது. //
பதிவர்களுக்கு தங்களைத் தாங்களே எடை போட்டுப் பார்த்துக் கொள்ள ஒரு நல்ல ஆலோசனை சொல்லி இருக்கிறீர்கள்.
//எவர் வேண்டுமானலும் இதில் கிளைகளாக இருக்கலாம். தமிழ்மொழி, படித்த பள்ளிக்கூடம் நினைவுகள், தமிழாசிரியர்கள் குறித்த நினைவுகளை தொடக்கத்தில் பதிவு செய்ய நினைக்கின்றோம். மற்றவர்களுக்கு பயன் உள்ள தமிழ் மொழி, இலக்கியம், வாழ்வியல், மின் தொகுப்பு சார்ந்த தளங்களை அறிமுகம் செய்து வைக்கலாம். அவற்றை தனிப்பக்கமாக்கி இணைப்பு கொடுத்து வைத்து விடுவோம்.தேடல் உள்ளவர்களுக்கும், தேடி வருபவர்களுக்கு இந்த பக்கம் பயன்படும்.//
ஒரு நல்ல எண்ணத்தை விதைத்து நல்ல செயல்பாட்டால் ”தமிழ்ச்செடி” ஒன்றினை உருவாக்கி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்! இதில் பங்கு கொண்ட அனைவருக்கும் நன்றி!
நீங்கள் குறிப்பிட்டுச் சொன்ன தளங்களில் சென்று பார்க்கிறேன். நன்றி!

இராஜராஜேஸ்வரி said...

//நாம் எழுதிய பழைய பதிவுகளை நாம் தான் எழுதினோமா? என்று ஆச்சரியப்பட வேண்டுமே தவிர நாம் ஏன் இதை எழுதினோம் என்று சங்கடப்பட்டால் அதற்கு பெயர் என்ன என்பதை நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள். இதுவரையிலும் அந்த துர்பாக்கியம் எனக்கு நிகழவில்லை என்பதே எனக்கு திருப்தியாக உள்ளது. //

நிறைவான சிந்தனை .. பாராட்டுக்கள்..

Ranjani Narayanan said...

அன்புள்ள ஜோதிஜி,
நீங்கள் நடந்து வந்த பாதையைப் பற்றி வெகு தெளிவாக எழுதி இருக்கிறீர்கள். தமிழ் செடி உருவானதும் அதன் மூலம் செய்ய இருப்பதும் மிக நல்ல முயற்சி.
நீங்களும், உங்கள் அருமை நண்பர்களுமாக எடுத்திருக்கும் இந்த முயற்சி நல்ல பயன் அளிக்கட்டும்.
தமிழ் செடி மூலம் தமிழ் வலைத் தளங்களை இணைக்கும் எண்ணமும் மிகச் சிறந்த ஓர் சிந்தனை.
தமிழ் செடி, ஆலமரமாகி விழுதுகளுடன், வேரூன்றி தலைமுறை தலைமுறையாக எல்லோருக்கும் பயனளிக்க வாழ்த்துக்கள்.

எம்.ஞானசேகரன் said...

பாராட்ட வார்த்தைகள் இல்லை நண்பரே! இதில் என்னை இணைத்துக்கொள்ள ஆர்வமாக இருக்கிறேன். என்னால் முடிந்த பங்களிப்பை செய்ய காத்திருக்கிறேன். என்ன நான் தமிழ்நாட்டிற்கு வெளியே இருக்கிறேன்.ஒரு வலைப்பதிவு எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு உங்கள் தளம். என் நண்பர்கள் பலருக்கு நான் இந்த தளத்தை அறிமுப்படுத்தியிருக்கிறேன். எனக்கு வாசிப்பு பழக்கம் சிறு வயதிலிருந்தே இருந்தாலும் எழுத்து என்பது கைகூடவில்லை. எப்படி எழுதுவது, எப்படி எழுதவேண்டும் என்பதை உங்கள் பதிவுகளிலிருந்துதான் கற்றுக்கொண்டிருக்கிறேன். வாழ்த்துக்கள் ஜோதிஜி!

எம்.ஞானசேகரன் said...

எனது தமிழாசிரியர்கள் குறித்து ஒரு பதிவை தமிழ்ச்செடியில் பகிர வாய்ப்பு கிடைக்குமா ஜோதிஜி?

Lakshmanan17 said...

தமிழ்ச்செடிக்கு இவ்வளவு பேர் நீரும் உரமுமாக இருந்திருக்கிறார்கள் என்பது ஓர் உத்வேகமான சேதி. மனங்கள் கலக்கும்போது செடிகள் மரங்களாகலாம். சொல்லும் சொல்போல எல்லை வானமாகத்தான் தோன்றுகிறது. எழுத்து நேர்மை நிறைய கிட்டும்போல் வெளிப்பாடு பரந்து பட்டு இருக்கும். தோள் கொடுப்பதில் சுகமாக இருக்கிறது. லட்சுமணன்

ஜோதிஜி said...

நிச்சயம். அது தானே எங்கள் நோக்கம். அவசியம் எழுதி அனுப்பி வையுங்கள். அவரவர் பெயர் விருப்பப்பட்டால் முகவரியோடு வெளியிடப்படும்

ஜோதிஜி said...

நல்ல வரிகள். தாங்கள் ஏற்கனவே எழுதி அனுப்பி எழுதிய விசயங்களை இன்னும் கொஞ்சம் கோவையாக்கி அனுப்பி வைப்பீர்கள் என்று நம்பிக்கையுடன் இருக்கின்றேன்.

ஜோதிஜி said...

நன்றி. உங்கள் ஆதரவு எப்போதும் தேவை. எந்த இடங்களில் வாழ்ந்தாலும் அங்கிருந்தபடியே பல வகையிலும் உதவலாமே?

ஜோதிஜி said...

மிக்க நன்றி அம்மா.

ஜோதிஜி said...

நன்றிங்க.

ஜோதிஜி said...

நன்றிங்க

ஜோதிஜி said...

மாறும். மாற்ற வேண்டும். மாற்றி விடுவேன் என்ற நம்பிக்கையுண்டு.

Ravichandran Somu said...

ஜோதிஜி, தாங்கள் கடந்து வந்த பாதையை மிக அழகாக பதிவு செய்துள்ளீர்கள். பல்வேறு தளங்களில் எழுதும் மிகச் சிறந்த கட்டுரையாளராக தற்போது தாங்கள் பிராகசிப்பதைப் பார்த்து மிக்க மகிழ்ச்சியடையும் நண்பன் நான். மேன்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துகள் !!!

தமிழ்ச்செடி ஆலமரம் போல் வளர வாழ்த்துகள் !!!

ஞானாலயாவிற்கு என் பங்களிப்பு மிகக் குறைவானது... தாங்கள் குறிப்பிட்டு சொல்லும் அளவிற்கு நான் பெரிதாக ஒன்றும் செய்யவில்லை.

ஜீவன் சுப்பு said...

//பதிவுலகில் எழுதுபவர்கள் தங்களின் அந்தரங்களை எழுத விரும்பவதில்லை. காரணம் இது முகமூடிகளின் உலகமாக இருப்பதால் வலிய போய் ஆப்பு வாங்கிக் கொள்ள எவரும் விரும்புவதில்லை// உண்மை தான் ...
எதேச்சையாக உங்களது டாலர் நகரம் காணக் கிடைத்து ஒரே மூச்சில் பதினாறு பகுதிகளையும் படித்து முடித்தேன் . ஒரு வரலாற்று படம் பார்த்த உணர்வு . என் எண்ணத்தில் , ஒரு நல்ல எழுத்து அல்லது கட்டுரை , இல்ல படம் எதுவாகினும் அது பாதி ( சு )வாசித்துக் கொண்டிருக்கும்போதே ,என்னை அந்த கட்டுரையின் அல்லது கதையின் தளத்திற்கு இட்டு சென்று, என் சமகால நிகழ்வுகளை மறக்கடித்து என்னுள் புதிய சிந்தனைகளை தோற்றுவிக்க வேண்டும் . அந்த வகையில் உங்களது எழுத்து என்னை வெகுவாக சிந்திக்க வைக்கின்றது .
அடிக்கடி என் சம கால நிகழ்வுகளையும் சமயத்தில் என்னையும் இழக்க செயும் எஸ். ராமகிருஷ்ணன் , ராஜுமுருகன் இவர்களின் வரிசையில் தற்பொழுது நீங்களும் அண்ணா. .....

Tamil seiythigal said...

நல்ல எழுது நடை
மிக்க நன்றி.

ஜோதிஜி said...

நன்றி

ஜோதிஜி said...

ஜீவனுள்ள பாராட்டுக்கள். நன்றி.

ஜோதிஜி said...

உங்களைப் பற்றி தனியே ஒரு பதிவெழும் அளவிற்கு உங்களை கவனித்துக் கொண்டு வருகின்றேன். நிச்சயம் எழுதுவேன். நன்றி ரவி.

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு.
நன்றி.;