Sunday, March 14, 2010

ராஜீவ் என்றொரு சதை துணுக்குகள்

சிவராசன் குழுவினர் எதிர்பார்த்தபடியே ராஜீவ் காந்தி படுகொலையென்பது மனித வெடிகுண்டு மூலம் நிகழ்த்தியாகிவிட்டது. இருபது அடி உயரத்துக்கு எழும்பிய புகைமூட்டமும், உருவான கூச்சலும் குழப்பமும் அங்கு என்ன நடக்கிறது? என்பதே எவருக்கும் புரியவில்லை. காவலுக்கு இருந்த பல போலீஸ்காரர்கள் அலறி அடித்து வெவ்வேறு இடங்களுக்கு ஓடிக்கொண்டுருந்தனர்.  இதிலும் தைரியமான காவல் துறையைச் சேர்ந்தவர்களும், கட்சிக்காரர்களும் மனோதிடத்துடன் அங்கேயே நின்று கொண்டுருந்தனர்.

தேடி வந்த வாழப்பாடியும், மூப்பனாரும் சிதறிக் கிடந்த சதை குவியலில் ராஜீவ் காந்தியின் உடலை தேடினர்.  அந்த சூழ்நிலையில் அத்தனை சுலபமாக இல்லை. ஐந்து நிமிடத்திற்கு முன் உயிருள்ள மனிதர்களாக நின்று கொண்டுருந்தவர்கள் அத்தனை பேர்களும் இப்போது சதை துணுக்குகளாக, தலை கை கால் வேறு வேறாக சிதறிக் கிடந்தார்கள்.  அடையாளம் காண்பதற்காக " ஒவ்வொன்றையும் " புரட்டிப் பார்க்க வேண்டியிருந்தது.  இறுதியாக மனத்துணிவுடன் பார்த்தவர்கள் கண்களில் சிக்கியது ராஜீவ் காந்தி அணிந்து வந்த லோட்டோ ஷீ. அதன் மூலம் மட்டுமே அவரது உடலை கண்டு பிடிக்க முடிந்தது. 

அரற்றிக் கொண்டுருந்த மூப்பனார் மனத்துணிவுடன் குப்புறவாக்கில் கிடந்த உடலை திருப்பிய போது சதை துணுக்குகளாய் கோரமாய் இருக்க உருக்குலைந்து கிடந்த உடம்பில் துணியை போட்டு மூடினார். மேற்கொண்டு எதுவும் குண்டுகள் வெடிக்குமோ என்று உடன் இருந்தவர் மூப்பனாரை அங்கிருந்து நகர்த்த முற்பட அப்போது அவர் சொன்ன வாசகம். " தலைவனே போயிட்டார் இனிமேல் என்னயிருக்கு"  என்றார். அந்த நிமிடம் வரைக்கும் கம்பளம் எறிந்து கொண்டுருந்தது.  லதா கண்ணன், கோகிலா, ஹரிபாபு,ராஜீவ் காந்தியின் பிரத்யோக காவல் அதிகாரி,மாவட்ட காவல்துறை அதிகாரி இக்பால் உட்பட ஒன்பது காவல்துறையைச் சேர்ந்தவர்களும் தணுவுடன் இறந்திருந்தனர். அருகில் இருந்த பலருக்கும் பலத்த காயம். அரசாங்க அறிக்கை என்பது பின்னாளில் வந்து சம்பிராதய கணக்குகளைச் சொன்னதே தவிர உண்மையிலேயே அப்பாவிகள், பார்க்க வந்தவர்கள், உள்ளே இருந்தவர்கள் எத்தனை பேர்கள் இறந்தார்கள் என்பது போய்ச் சேர்ந்த ராஜீவ் காந்தி ஆன்மாவுக்கு தான் தெரியும்?

தூரத்தில் நின்று பார்த்துக்கொண்டுருந்த சிவராசனுக்கு திருப்தி மனதிற்குள் இருந்தாலும் அந்த சூழ்நிலையில் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ளும் படபடப்பு தான் உருவாகியிருந்தது. அந்த சூழ்நிலைதான் அப்போது அவர்களை உந்தி தள்ளியது.  சுபா,நளினியை கூட்டிக்கொண்டு சாலைப்பகுதியை நோக்கி விரைந்தனர்.  அருகில் இருந்த வீட்டில் படபடப்பை அடக்க தண்ணீர் வாங்கி குடித்து விட்டு ஆட்டோ, பேரூந்து மூலம் சென்னை வந்தடைந்தனர். இத்தனை தெளிவாக சிறப்பாக ஒவ்வொன்றையும் திட்டமிட்டு செயல்படுத்தி ஜெயித்த சிவராசன் எதிர்பார்க்காதது ஹரிபாபு இறந்த சம்பவம்.  அவர்களைப் பொறுத்தவரையில் ஆவணத்திற்காக அந்த புகைப்படம் வேண்டும். ஒரு வேளை கொண்டு போய் சேர்த்து ஆவணமாக்குவதின் ஒரு பகுதியாய இருந்துருக்கலாம். எந்த அளவிற்கு வெடிகுண்டின் தாக்கம் இருக்கும். எந்த இடத்தில் நின்று கொண்டு புகைப்படத்தை எடுக்க வேண்டும் என்ற உத்தரவை மீறி ஹரிபாபு சென்றாரா அல்லது அவரின் விதியும் அவரைக் கொண்டு போய்ச் சேர்த்ததா என்பது தெரியாது.

ஆனால் மொத்தமாய் அன்று ஸ்ரீபெரும்புதூர் இருட்டில் நின்று கொண்டு சிரித்த விதி உருவாக்கிய மாய வலை வேறு ஒன்றையும் உருவாக்கியிருந்தது.  அது ஹரிபாபு பயன்படுத்திய புகைப்படக்கருவி சதைக்குவியல் மேல் கிடந்தது முதல் ஆச்சரியம்.  எந்த பிரச்சனையும் இல்லாமல் எடுக்கப்பட்ட புகைப்படம் லட்டாக புலனாய்வு குழுவினர் கைக்கு கிடைத்ததென்பது அடுத்த அதிசயம்.
அந்த இக்கட்டான சூழ்நிலையிலும் கடமை தவறாத காவல்துறை அதிகாரி ராகவன் சம்மந்தப்பட்ட இடத்தை வளைத்து கவனமாக காவல் காத்ததும் அந்த புகைப்பட கருவி வந்து சேர வேண்டிய இடத்திற்கு மிகக் கவனமாக வந்து சேர்ந்ததும் முக்கிய காரணமாக இருந்தது.  இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் அப்போது அங்கே உருவான அக்னிபிழம்பு அந்த புகைப்படகருவிக்கு எந்த சேதாரத்தையும் உருவாக்காத காரணத்தால் துப்பிய புகைப்படங்கள் தமிழக மக்கள் விடுதலைப்புலிகள் மேல் வைத்திருந்த மொத்த மதிப்பும் வெறுப்பாக மாற்ற உதவியதன் தொடக்கப்புள்ளி அது. காரணம் அப்போது வரைக்கும் அரசியலும், விரும்புவர்களும், வெறுப்பவர்களும் உள்ளே இருந்தாலும் அத்தனையும் மீறி ஒரு மொத்தமான நல்ல பார்வை அவர்கள் மேல் இருந்தது என்பது மறுக்க முடியாத உண்மை.  அறிவுஜீவிகளின் லாவணி அன்று முதல் இன்று வரை ஒரே மாதிரியாக இருந்தாலும் ராஜீவ் காந்தி மரணத்திற்குப் பிறகு அவர்களின் கச்சேரி என்பது சுருதி சுத்தமாய் ஒலிக்கத் தொடங்கியது.

அவசரமாய் வரவழைக்கப்பட்ட ஸ்டிரச்சரில் சிதைந்த ராஜீவ் உடலை ஏற்றி சென்னை அரசினர் பொது மருத்துவமனைக்கு அனுப்ப ஏற்பாடு துரிதகதியில் நடந்தது காவல்துறை வண்டியில் ஏற்றப்பட்டு அனுப்பப்பட்டது. இந்த இடத்தில் ராஜீவ் காந்தியை படுகொலை செய்யப்பட வேண்டும் என்ற திட்டத்திலும் அது எவ்வாறு நிகழ்த்தப்பட வேண்டும் என்று உள் கட்டளைகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.  வெறுமனே சாவு என்பதை இது ஒரு பெண்ணால் நடத்தப்பட வேண்டும் என்பதற்கு ஒரு காரணமும் நடக்கும் அந்த சாவும் மிகக் கோரமான சாவாகத்தான் இருக்க வேண்டும் என்று தீர்மானித்தவர்கள் அதன்படியே உருவாக்கி இருந்தார்கள். 

ராஜீவ் காந்தியின் முகத்துக்கு அருகே நிற்கும் தருணத்தில் வெடிகுண்டு வெடித்தால் மட்டுமே எதிர்பார்த்த வெற்றி. காரணம் உருவாகும் மரண விளைவு என்பது விபரீதத்தின் உச்சமாக இருக்க வேண்டும். அந்த அளவிற்கு தான் இறுதியில் நடந்து முடிந்து இருந்தது.மிஞ்சியிருந்த துண்டு துணுக்குகள், பாகங்களை பொட்டலாமாக கட்டி கொண்டு போய் சேர்த்து இருந்தாலும் போஸ்மார்டம் செய்த மருத்தவரின் (டாக்டர் செசிலியா சிரில்) அறிக்கையும் படித்துப் பார்க்கத்தான் வேண்டும். 

" தலையில் கபாலப்பகுதி எலும்புகள் நொறுங்கி பெருத்த சேதமுற்று மூளை சிதறிவிட்டிருந்தது.  முகத்தில் உதடுகளும், மூக்கும், கண்களும் நாசமாகி இருந்தன. முகவாட்டை எலும்புகள் நொறுங்கி இருந்தன.  வயிற்றுப் பகுதியிலும் குடல்கள் கல்லீரல் வெளியே வந்திருந்தன.  இடது நுரையீரல் மிகச் சிதைந்து காணப்பட்டது. வது கை பெருவிரலும், ஆள்காட்டி விரலும் சேதமாக இருந்தன.  எக்ஸ்ரே செய்து பார்த்ததில் உடலில் இருந்த கிட்டத்தட்ட எல்லா எலும்புகளும் உடைந்து இருந்தன.  உடல் முழுவதும் சிறு சிறு குண்டுகளால் துளைக்கப்பட்டு இருந்தது "

இதே போல் வெடித்து சிதறிய தணுவின் தலை, சிதைந்த கை கால்கள் போன்றவைகள் பார்ப்பதற்கு கோரமாக கொடுமையாக இருந்தது. அவர் அணிந்து இருந்த பெட்டிகோட் போன்ற உள்ளாடை ஜாக்கெட் வடிவத்தில் இறுக்கமாக தைக்கப்பட்டு இருந்தது, உள்ளே உருவாக்கப்பட்ட வெடிகுண்டுகளுடன் இணைக்கப்பட வேண்டிய ஓயர்கள் செல்ல வேண்டிய பாதைக்கு குழாய் போன்ற வடிவத்தில் வெளியே தெரியாத அளவிற்கு சிறப்பான தையல்கலை வல்லுனர் தோற்றுப்போகும் அளவிற்கு தைக்கப்பட்டு இருந்தது. வீர்யம் மிக்க மருந்துக்களை சிறு குண்டுகளாக மாற்றப்பட்டு மொத்தமாக கோர்க்கப்பட்டு உருவாக்கப்பட்டு இருந்தது. குண்டுகள் அணிவகுப்புகளால் உருவாக்கப்பட்ட இந்த ஜாக்கேட் இறுக்கமாக இருக்க பெல்ட் வடிவ அமைப்பு கீழே உருவாக்கப்பட்டு இருந்தது. அணிபவர் உடல் பருமன் என்பது மாறலாம். இலக்குக்காக காத்திருக்கும் நாட்களைப் பொறுத்து தொளதொளவென்று மாற வாய்புண்டு.  இதற்காக ஜாக்கெட்டின் கீழே பெல்ட் போன்ற அமைப்பு. 

இதை இழுத்து மாட்டிக்கொண்டால் மொத்தமும் ஒரு ஒழுங்குக்கு வந்து சிறப்பாக உடலுடன் பொருத்திக்கொள்ள முடியும். இதற்கும் மேலே ஜாக்கெட்டுக்குள் வரிசைகிரமமாக வைக்கப்பட்ட வெடிகுண்டுகளைக் கொண்டு ஜாக்கிரதையாக தைக்கப்பட்ட மொத்த அமைப்பையும்,  வெடிக்க வைக்கப்பட வேண்டிய ஓயர்களுக்கான கட்டுப்பாட்டின் பொத்தான் என்பதும் இடுப்புக்கு கீழே வரும்படி உருவாக்கப்பட்டு இருந்தது. இதன் நோக்கமென்பது குனியும் போது கைக்கு எட்டும் உயரம். உள்ளாடையின் உள்ளே மொத்த வெடிகுண்டுகளையும் கட்டுப்படுத்துவது இரண்டு பொத்தான்கள்.  முதல் என்பது இயக்கும் விசையென்பது ஏதும் தவறுதலாக அமுக்கப்படும் பட்சத்தில் மொத்த இயக்கத்தையும் நிறுத்துவதற்கு பயன்படும்.  இரண்டாவது என்பது வெடிக்கச் செய்யும் வீர்யம்.  இத்தனையும் நவீன தொழில் நுட்பமோ, வெளிநாட்டு இறக்குமதியோ அல்ல. வெறி உருவாக்கிய சுதேசி மனப்பான்மை. இது சிங்களர்களுக்கென்று பிரபாகரன் மனதில் உருவாக்கப்பட்ட அமைப்பு பிரபாகரன் துப்பாக்கி சுட கற்றுக்கொண்டது முதல் இது போன்ற வெடிபொருட்கள், பின்னால் வந்த நவீன ரக ஆயுதங்கள் அத்தனையும் பயிற்சி எடுத்து கற்றுக் கொண்டது அல்ல.  புத்தகங்கள் படித்து கற்றுக்கொண்டது. தணு மாட்டியிருந்த வெடிகுண்டு அமைப்பு அமெரிக்காவில் டெட்டராய்ட் நகரில் வெளியிடப்பட்ட புத்தகம் மூலம் உருவாக்கப்பட்டது. இந்த. ஆண் பெண் கரும்புலிகள் என்பது முழுக்க முழுக்க பிரபாகரன் சிந்தனையில் உருவானது. .  

கரும்புலிகளுக்கென்று உருவாக்கப்பட்டவர்கள் இதில் தங்களை அர்பணித்தவர்களை இயக்கத்தில் உள்ள மற்றவர்களிடத்தில் இருந்து தனியாக தேர்ந்தெடுப்பது முதல் அவர்களுக்கென்று உருவாக்கப்பட்ட பயிற்சி வகுப்புகள், பாடங்கள் வரைக்கும் வித்யாசமான சூழ்நிலையில் இருக்கும். உள்ளேயுள்ள மற்ற அமைப்புகளுடன் சம்மந்தம் இருக்காது.  எவரவர் இதில் இருப்பார்கள்?  மற்றவர்களுக்கு தெரியுமா என்பதும் சந்தேகமே. கரும்புலிகளாக இருப்பவர்களுக்கும் அவர்களின் இலக்கு என்பதும், எந்த நாள் வரைக்கும் இந்த உயிர் உடலில் இருக்கும் என்பதும் அவர்களுகே தெரியாது.  நாளை, மறுநாள், அடுத்த வாரம், அடுத்த மாதம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.  மனோதிடத்தின் உச்சம்.  மற்ற தீவிரவாத அமைப்புக்கும் விடுதலைப்புலிகளின் அமைப்புக்கும் உள்ள் மிகப்பெரிய வித்யாசமே இது தான்.  இங்கு தான் ஆரம்பமாகிறது.. மற்றவர்கள் ஒரு குடும்பத்தில் உள்ள ஏழ்மையை பயன்படுத்தி அவர்களின் குடும்பத்திற்காக கொடுக்கப்படும் நிதி என்பதன் மூலம் ஒருவரை தேர்ந்தெடுக்கிறார்கள். அந்த குடும்பத்தின் எதிர்கால வாழ்வுக்காக மும்பை கசாப் போல தனிப்பட்ட ஒருவர் இந்த மனித வெடிகுண்டாக தீவிரவாதியாக மாற்றம் பெறுவார். 

ஆனால் இங்கே என்ன தான் மூளைச்சலவை என்று தொடங்கினாலும் ஒரு அளவிற்கு மேல் இயக்கத்தின் வெற்றிக்கான தங்களால் ஆன முன்னேற்பாடு என்ற அளவிற்கு அவர்களின் இறுதி மனோ திடம் இந்த பாதையில் கொண்டு வந்து அவர்களை நிறுத்திவிடுகின்றது..  தீர்மானிக்கப்பட்ட நாளுக்கு முன் அல்லது அவர்களின் இலட்சியத்திற்கான பயணம் தொடங்கப்படுவதற்கு முன் பிரபாகரன் உடன் உணவு அருந்தும் வைபோகத்துடன் அவர்களுக்கும் விடுதலைப்புலி இயக்கத்திற்கும் உள்ள உறவு முறிந்து விடுகின்றது.அப்போது தொடங்கும் அவர்களின் பயணமென்பது அவர்களின் இறுதி வாழ்க்கை பயணத்தின் தொடக்கப் பாதை.

இவர்கள் தான் கடைசியாக "அக்னிக்குழந்தைகள்" என்றும்," மண் மீட்பிற்காக உயிர் நீத்த மாவீர்கள்" என்ற உருவாக்கப்படும் ஆவணப் பெயரில் வந்து முடிந்து போய் விடுகிறார்கள். சிங்களர்களுக்கென்று உருவாக்கப்பட்ட கரும்புலிகள் இன்று ராஜீவ் காந்திக்கு என்று மாற்றப்பட்ட கொடுமை என்பது இந்தியாவிற்கு மே 22 அன்று புலர்ந்த காலை என்பது கதறும் நாளாக இருந்தது.  காத்துக் கொண்டுருந்த சமூக விரோதிகளுக்கு சொத்துக்களை சூறையாடுதல் தொடங்கி பிடிக்காதவர்களை போட்டுத் தள்ளும் பைபவம் வரைக்கும் கொண்டு செலுத்தியது. அன்றைய தினம் அதிகமாக பாதிக்கப்பட்ட திராவிட முன்னேற்ற கழக அடிமட்ட தொண்டர்களும், இயக்கத்தில் இருந்தவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. குறிவைத்து சொத்துக்கள் சூறையாடப்பட்டது. செங்கல்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டுருந்த மொத்த வாகனங்களும் நிறுத்தப்பட்டன. கலவரத்தீயின் நாக்கு மெதுவாக முன்னேறிக்கொண்டுருந்தது. வரிசையாக நின்று கொண்டுருந்த ஆயிரக்கணக்கான பேரூந்துகளும் நிறுத்தப்பட்டது. 

முடக்கப்பட்டது என்ற வார்த்தை தான் சரியாக இருக்கும். எவருக்கும் எதுவும் தெரியவில்லை.  அவரவருக்கு தெரிந்த வார்த்தைகள் கொண்டு கோர்த்துக் கொண்டுருந்தனர்.  எவர் வாயில் இருந்து ராஜீவ் காந்தி மனித வெடிகுண்டு மூலம் படுகொலை செய்யப்பட்டார் என்று வரவேயில்லை என்பது மிகப் பெரிய ஆச்சரியம்.  காரணம் பயணித்த பேரூந்து நடந்து முடிந்த இடத்தில் இருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் சாலையில் நின்று கொண்டுருந்தது.  முன்னால் பின்னால் எத்தனை ஆயிரம் பேரூந்துகள் நின்று கொண்டுருந்த கணக்கு சொல்லிவிட முடியாது? அன்று செங்கல்பட்டில் நடு இரவு 2 மணிக்கு சிறப்பு சேவையாக விடப்பட்ட ரயில் மூலமாக புளி மூட்டையாக பயணித்து கிளம்பிய சென்னைக்கு மீண்டும் வந்து சேர்ந்த போது விரித்து வைத்து விற்பனை செய்து கொண்டுருந்த முதல் பாதி பக்க செய்திகள் கருப்பாக அந்த அலறல் செய்தியதை பார்த்த படித்த செய்திகள் மூலம் உணர்ந்தவன் இது போன்ற ஒரு தொடர் எழுதவேண்டும் என்பது? 

தமிழக கவர்னராக இருந்த பீஷ்ம நாராயணன் சிபிஐ புலனாய்வு செய்ய வேண்டும் என்று அறிக்கை வாயிலாக தெரிவித்தார். செய்திதாள்கள் முதல் உலக மக்கள் மனங்கள் வரைக்கும் கருமையை உருவாக்கியிருந்தது.. காரணம் இந்தியாவிற்கு சுதந்திரம் பெற்றது முதல் இந்த மனித வெடிகுண்டு தாக்குதல் என்பது புதிது. ஊடகங்கள் அவரவருக்கு தெரிந்த தெரியாத பரபரப்பு சம்பவங்களை அள்ளித் தெளித்து கோர்த்து சேவை புரிந்தார்கள். ஆனால் சிறப்பு விமானம் மூலம் வரவழைக்கப்பட்ட சோனியா, பிரியங்கா மிச்சம் மீதி தேறி இருந்த உடலையும், அக்கு வேறு ஆணி வேறாக செய்த பிரேத பரிசோதனைக்குப்பிறகு கிடைத்தவற்றை பெட்டியில் போட்டுக் கொண்டு டெல்லிக்கு கொண்டு சென்றார்கள். அன்றைய தினம் இந்த படுகொலைக்குப் பின்னால் உள்ள காரணங்கள் எவருக்கும் தெரியவில்லை. பல்வேறு யுகங்கள். இந்து மத தீவீரவாதம், சீக்கியர்களின் கோபம், காஷ்மீர் தீவிரவாதம்,சிஐஏ முதல் எந்தந்த வகையில் கற்பனைக் குதிரைகளை தட்டிவிட முடியுமோ அந்த அளவிற்கு செய்திகள் தறிகெட்டு பறந்தது.

உருவாக்கப்பட்ட புலனாய்வு குழுவின் தலைமைப் பொறுப்பிற்கு வந்தவர்கள், அதில் பங்கெடுத்து இருந்தவர்கள் முதல் இந்திய இராணுவ உயர் மட்டம், இந்திய புலனாய்வு குழுக்கள் வரைக்கும் எவருமே இதை விடுதலைப்புலிகள் இயக்கம் தான் செய்து இருக்கும் என்பதை நம்பத்தயாராய் இல்லை என்பது இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டும்.  ஆனால் இதற்கு காரணமாக அவர்கள் அத்தனை பேர்களும் சொன்ன வார்த்தைகள் அதைவிட நிதர்சனமான உண்மை. 

" இந்தியாவை எப்போதும் சார்ந்து இருக்க வேண்டிய அவர்கள் இது போன்ற முட்டாள் தனமாக காரியத்தை செய்ய துணிச்சல் வராது " என்றார்கள். அதுவே பின்னாளில் முறைப்படியான விசாரணைக்குப் பிறகு தெரிய ஆரம்பித்த போது, தெரிய வந்த போது உருவான கருமை என்பது கலங்கிய மனமாக மாறியது. 

பிரபாகரன் மனம் என்பது எப்படி இருந்து இருக்கும் என்பது அவர் விரும்பும் இயற்கைக்கு மட்டும் தான் தெரிந்து இருக்கும்? அவர் விரும்பிப் படிக்கும் வரலாறு எதிர்காலத்தில் என்ன சொல்லும் என்பதை உணர்ந்து இருப்பாரா? 
அவரே சொல்லியிருப்பது போல் " என்னுடன் உடன் இருப்பவர்கள். பழகியவர்கள், உயிராக நான் நினைத்தவர்கள் என்று அத்தனை பேர்களும் பல்வேறு போராட்டகளத்தின் வாயிலாக நான் இழந்த போது அடையும் மனத்தளர்ச்சிக்கு அளவே இல்லாமல் இருக்கும்.  இதில் இருந்து நாம் மீண்டு வந்து தான் ஆகவேண்டும் என்று என்னைத் தேற்றிக்கொண்டு மீண்டு வருவதுண்டு". 

ஆனால் இந்த கோர நிகழ்வில் இருந்து எப்போது அவர் மனம் மீண்டு வந்தது என்பதை இறுதிவரைக்கும் சொல்லவில்லை என்பதை விட ராஜீவ் காந்தி மரணம் என்பது " துன்பியல் சம்பவம் " என்று எளிதாக நகர்ந்தது தைரியமா? மனோதிடமா? இல்லை நான் செய்தது சரிதான் என்ற.?????
நிஜமான வீரம் என்பதை வீரனாக வாழ்ந்தவர் ஏன் இந்த விசயத்தை மட்டும் நேருக்கு நேர் எதிர்கொள்ள முடியவில்லை?

22 comments:

கண்ணகி said...

அப்போதை அத்ர்ச்சி மீண்டும் கண்முன்.....

ஜீவன்சிவம் said...

ஒரு இனத்தின் வீழ்ச்சி வரலாறு எழுதப்பட்ட தினம் அது. என்னதான் ஆயிரம் சப்பைக்கட்டு கட்டினாலும் புலிகள் இந்த விஷயத்தில் கொஞ்சம் எதிர்கால நலனையும் மனதில் கொண்டு முடிவெடுத்திருக்க வேண்டும். ஆண்டன் பாலசிங்கம் சொன்ன மாதிரி இது ஒரு கருப்பு தினம், துன்பவியல் சம்பவம் தான் அதன் பரிசைத்தான் நம் தமிழர்கள் இப்போது அனுபவித்து கொண்டிருகிறார்கள்.

Anand said...

// துன்பவியல் சம்பவம் தான் அதன் பரிசைத்தான் நம் தமிழர்கள் இப்போது அனுபவித்து கொண்டிருகிறார்கள்

சீக்கியர்களிடம் இதே காங்கிரஸ் மன்னிப்பு கேட்டதே?

Robin said...

கொலை வெறிபிடித்த புலிகளால் எத்தனைபேர் உயிரை மாய்த்தனர்!
"ஆயுதத்தை எடுத்தவன் ஆயுதத்தால் அழிவான்"

ஜோதிஜி said...

நன்றி கண்ணகி ஜீவன் சிவம்,

ஆனந்த் சீமான் கனடாவில் அந்த சீக்கிய அதிகாரியிடம் கேட்ட கேள்விக்கு அவர் பதில் அளிக்கவே விரும்பவில்லை

ராபின் உங்கள் பார்வையின் விமர்சனம். நன்றி.

Barari said...

rajeevirkku seitha kodumaikku kidaiththa thandanaithaan mullivaaikkaalil pirabaavukku kidaiththathu.

சசிகுமார் said...

நண்பா உங்களுடைய தொகுப்பு படிக்கும் போது என் கண்களில் என்னை அறியாமல் கண்ணீர். வேறொன்று சொல்ல தெரியவில்லை

http://thavaru.blogspot.com/ said...

வணங்குகிறேன் நன்று

Jerry Eshananda said...

தொடர்கிறேன்....

ஜோதிஜி said...

நன்றி சசிகுமார், தவறு,

நலமே விழைவு ஆசிரியரே.

வனம் said...

வணக்கம் ஜோதிஜி

ராஜீவ் இலங்கை தமிழருக்கு கொடுத்ததைதான் அவர் திரும்ப பெற்றார்.

உங்களி பழைய பதிவொன்றில் குறிப்பிட்டு இருந்ததைப்போல் \\வலி பெற்றவர்கள் உருவாக்கும் வலி \\ என்பது சரிதான்.

நடிகர் சந்திரபாபு சொல்லி இருப்பார்\\திரையில் அல்ல உண்மையில் அவரின் தற்கொலை முயற்சி தொடர்பான வழக்கில்\\ நெருப்பால் சூடு வாங்குனவனுக்குதான் தெரியும் அந்த நெருப்பின் வலி பார்பவனுக்கு அல்ல.

இராஜராஜன்

ஜோதிஜி said...

நீண்ட நாளைக்குப் பிறகு இராஜராஜன்

சர்வதேச அரசியல் புரிந்துணர்வு இல்லாத சராசரியாய் யோசிக்கும் போது ?

அதுவே சற்று வித்யாசமாய் யோசித்துப் பாருங்கள்.

அன்றும் இன்றும் அடிப்படை தமிழ் மக்களிடையே இங்கு தமிழ்நாட்டில் ஈழத்தில் என்ன தான் நடக்கிறது என்பது யாருக்குமே தெரியாது?

எப்போதும் போல அதுவொரு வாசிக்கும் செய்தி?

ஆனால் ராஜீவ் கொலைக்குப் பிறகு மொத்தமாக இவர்களின் பார்வையை முழுமையாக மறைக்கும் அளவிற்கு என்ன நடந்தது?

தெரியாதா உங்களுக்கு?

யாருக்கும் லாபம்? நட்டம்?

கூட்டி கழித்துப் பாருங்கள். கணக்கு சரியாக வரவில்லை என்றால் சொல்லுங்கள்?

Anonymous said...

Seems racist Robin is back to bitch on sri lankan tamilians

Thenammai Lakshmanan said...

உண்மை சரியான கேள்விதான் கேட்டு இருக்கிங்க ஜோதிஜி நீங்க..

Robin said...

ஜோதிஜி,
உங்கள் பதிவுகளை அடிக்கடி படிப்பதுண்டு. சிலமுறை பின்னோட்டமும் இட்டுள்ளேன். ஆனால் இந்த பதிவில் நான் இட்ட பின்னூட்டத்திற்கு யாரோ ஒரு அனாமதேயம் என்னை தவறாக பேசியதை நீங்கள் அனுமதித்துள்ளீர்கள். ஆனால் நான் கொடுத்த பதிலை மட்டும் அப்படியே அமுக்கி விட்டீர்கள். நான், முதலில் இது வேறு யாரோ செய்த செயல் என்றுதான் நினைத்தேன், ஆனால் இப்போது நீங்கள்தான் இப்படி அனாமதேயமாக வந்து திட்டியுள்ளீர்கள் என்று நினைக்க தோன்றுகிறது. என்னுடைய கருத்து பிடிக்கவில்லையென்றால் அப்போதே வெளியிடாமல் இருந்திருக்கலாமே. அல்லது உங்களுக்கு மாற்றுக் கருத்து இருந்தால் அதையும் வெளிப்படையாக தெரிவித்திருக்கலாமே. ஏன் இப்படி அநாகரீகமாக நடக்கிறீர்கள்?

ஜோதிஜி said...

மன்னிக்கவும் ராபின்.

என்னுடைய தளங்களில் பின்னூட்டம் மூலம் பகிர்ந்து கொள்பவர்கள் மிகக் குறைவு. ஈழத்தவர்களே முகம் காட்டாமல் தங்கள் கருத்துக்களை சில சமயம் பகிர்ந்து கொள்வதே எனக்கு மிகுந்த ஆச்சரியமாக இருக்கிறது. இங்குள்ள மக்கள் சொல்லவே வேண்டாம்.

Seems racist Robin is back to bitch on sri lankan tamilians

இந்த வாசகம் எவர் எழுதினார் என்பது எழுதிய ஆத்மாவுக்குத் தான் தெரியும்.

அசிங்க வார்த்தைகள் இல்லாத எந்த ஒரு பின்னோட்டமும் நான் வெளியிடுவது உண்டு. காரணம் நீண்ட நாட்கள் கழித்து வந்து படிக்கும் எவருக்கோ மன உளைச்சலை தரலாம் அல்லவா?

தங்கள் கருத்துக்கு நன்றி ராபின்.
நீங்கள் மனம் புண்படும் அளவிற்கு இங்கு எதுவும் நடந்த மாதிரி தெரியவில்லை. நான் எவருக்கும் சார்பு தனமாக என்னைக் காட்டிக் கொள்வதும் இல்லை.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

உங்கள் இடுகைகள்.. நடந்தவற்றைக் கண் முன்னே நிறுத்துகிறது!!

Valar (வளர்மதி) said...

நன்றி நன்றி. படிக்கும் ஆர்வத்தை தூண்டும் வண்ணம் உள்ளது உங்கள் எழுத்துக்கள். நிகழ்வை கண்முன் நிறுத்தியது. ஒரேநாளில் 20வதுக்கும் அதிகமான உங்கள் பதிவுகளை படித்துவிட்டேன்.

Anonymous said...

கொலையை நியாயப்படுத்துவதால் எனக்கு கல் மனம் என்று தயவு செய்து நினைக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். ஒருத்தனால் என் குடும்பத்திற்கு எப்போதுமே தொல்லை. அதைத் தடுப்பதற்கு நான் என் குடும்பத்தவர் பக்கத்தில் இருந்து கொண்டே இருக்க வேண்டும். தூங்க முடியாது, பல் விளக்க முடியாது. ஏன் வோஷ் ரூம் போகக்கூட முடியாது. அப்படியான ஒரு நிலையில் எனக்குத் தெரிந்த ஒரே ஒரு வழி, அவனை கொல்வதாகவே இருக்கும். போலீஸிடம் போ, சட்டத்தை கையில் எடுக்காதே என்று சொல்லமாட்டீர்கள் என்று நினைக்கிறேன்.

கற்பழிக்க வருபவனை கொலை செய்தால் எப்படி அது தற்பாதுகாப்பிற்கான கொலை என்று சொல்கிறார்களோ அப்படியே இதுவும் என்று வைத்துக் கொள்ளுங்களேன். இந்திரா காந்தி கொலையை மன்னித்தவர்கள், ராஜீவ் காந்தி கொலையை ஏன் மன்னிக்கிறார்கள் இல்லை. ஏனென்றால் சீக்கியர்கள் இந்தியர்கள், ஈழத்தவன் அயலவன் என்பதாலா?

இதை நாங்கள் தான் செய்தோம் என்று (ஒரு வேளை அவர்கள் தான் செய்தார்கள் என்று நாங்கள் நினைப்பவை எல்லாம் பொய்யாக இராமல் இருந்தால்) இயக்கம் கூறமுடியுமா? அடுத்த நிமிடம் குற்றவாளி கூண்டில் தலைவரை ஏற்றிவிடுவார்கள்.

அவர்கள் அதை மழுப்பியதற்கு தக்க காரணம் இருக்கும். தலைவர் மனதில் என்ன இருந்தது என்று அறியவோ இல்லை அடுத்தவர் மனதில் என்ன உள்ளது என்று அறியவோ எந்த கருவிகளும் இல்லையே! 30 வருடம் ஒரு நாட்டை கட்டி எழுப்பியவருக்கு மறைக்க நியாயமான காரணம் இல்லாமல் இருந்திருக்கும் என்று நான் நினைக்கவில்லை.

இன்னும் ஒன்று என்னை எரிச்சல் படுத்துபவை. உங்கள் பதிவுடன் சம்மந்தம் இல்லை. ஆனாலும் அன்டன் பாலசிங்கத்தின் பெயர் பார்த்ததால் இதையும் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். ஏதோ அன்டன் பாலசிங்கம் தான் தலைவருக்கு அட்வைஸ் சொல்லுபவர் என்று தலைவரை டம்மி பீஸ் போலவும் சிலர் சொல்லுவார்கள். அன்டன் பாலசிங்கத்தை இயக்குவதும் தலைவர் என்று வன்னி மக்களுக்குத் தெரியும். ஒரு நாட்டின் தலைவன் சும்மா சும்மா எல்லாவற்றையும் பற்றி அறிக்கை விட முடியாது. அதுவும் ஒரு நாட்டிற்காகப் போராடும் இனத்தின் தலைவர். அவர் கவனமாக இருக்க வேண்டுமே.

ஜேர்மனி தேவை இல்லாமல் ஸ்பெயின் வெள்ளரிக்காய் பத்தி வாய்விட்டு இப்போது அவர்களுக்கு எவ்வளவு நட்ட ஈடு கொடுக்க வேண்டி வரப்போகிறது என்று தெரியும் தானே?

அப்புறம் ஒரு நாட்டுடன் அவர்கள் போராடவில்லை. கிட்டத்தட்ட எல்லா வல்லரசுகளுடன் போராடினார்கள். அதனால் தான் இந்த இழப்பே தவிர, சிறீலங்காவுடனும் இந்தியாவுடனும் மட்டும் போராடவேண்டி இருந்தால் தோற்றிருக்கமாட்டார்கள்.

அரசியல்வாதிகள் இலவசங்களைக் கொடுத்து மக்களை மயக்கியது போல அந்த நேரம் புலிகளுக்கு எதிராக செய்த பிரச்சாரம் எடுபட்டுவிட்டது. எங்கே தவறினோம் என்றால், இவர்கள் பிரச்சாரத்தால் எங்கள் இரத்த உறவுகள் எங்களை வெறுக்க மாட்டார்கள் என்று அன்டர் எஸ்டிமேட் பண்ணிவிட்டோம். அங்கே தான் தவறே தவிர உண்மையை ஒத்துக்கொள்ளாததோ அல்லது கொலையோ தவறு அல்ல என்பது என்னுடைய தாழ்மையான அபிப்பிராயம்.

Anonymous said...

@ ஜீவன்சிவம்
//என்னதான் ஆயிரம் சப்பைக்கட்டு கட்டினாலும் புலிகள் இந்த விஷயத்தில் கொஞ்சம் எதிர்கால நலனையும் மனதில் கொண்டு முடிவெடுத்திருக்க வேண்டும். //
சில விடயங்களை ஒத்துக்கொள்வதால் எதிர்கால நலனை குழி தோண்டி புதைக்க வேண்டியதாகிவிடும். இப்படி செய்தால் பிழை அப்படி செய்தால் பிழை என்று சொல்லுவது சுலபம். நடைமுறைக்கு எவ்வளவு சாத்தியம் என்று சொல்லமுடியாது.

இதையே வேறு ஒரு ஸ்டேட்டில் இயக்கம் செய்திருந்தால் தமிழ் மக்களுக்கு இவ்வளவு வெறுப்பு வந்திருக்காது போல. அதனால் எவ்வளவு பிரச்சினைகளை இன்று வரை தமிழக மக்கள் மறைமுகமாக அனுபவிக்கிறார்களோ தெரியாது.

J.P Josephine Baba said...

ஆம் தமிழக்ர்களை பக்கத்து ஊர் கேரலத்தவர்கள் கூட புலிகளை நோக்குவது பொன்று தான் பார்த்தார்கள். தமிழர்களுக்கு பொதுவாக வன்முறை கட்டுக்கடாங்கததே....

Anonymous said...

irumbile oru iruthayam mulaithathe.