Friday, March 19, 2010

ஸ்ரீபெரும்புதூர் முதல் பெங்களூர் வரைக்கும்

ராஜீவ் காந்தி படுகொலையில் சம்மந்தப்பட்ட பெரும்பாலனவர்களை கைது செய்து அவர்கள் மூலம் பல தகவல்கள் பெறப்பட்டாலும் முக்கியமான குழுவுக்கு தலைமையேற்று இருந்த சிவராசன் தான் என்பதையும், அதை நீரூபிக்க வேண்டிய ஆதாரத்திற்கும் ஏராளமான இடைவெளி இருந்தது.  இதன் பொருட்டு மேற்கொண்டு தகவல்களை உறுதிபடுத்துவதற்காக தலைமறைவாய் இருக்கும் கோடியக்கரை சண்முகத்தை மீண்டும் தேடத் தொடங்கினர்.  சண்முகம் முன் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனு தள்ளுபடியாக அவராகவே பாதுகாப்புடன் புலனாய்வு குழுவினருக்கு ஒத்துழைப்பு கொடுக்கத் தொடங்கினார்.  அப்போது தான் சதுப்பு நிலக்காடுகளின் விடுதலைப் புலிகளின் சாம்ராஜ்யம் முழுமையாக புரிந்தது.  ஆனால் எதிர்பாரத விதமாக சண்முகம் தற்கொலை செய்து கொண்டது பல விதங்களிலும் ஊடகங்களில் ஊகத்தை ஹேஷ்யங்களையும் உருவாக்கியது.  சிவராசன் இருக்கும் இடத்தை கண்டு பிடிக்க முடியவில்லையே தவிர இங்கு கிடைத்த ஆவணங்களின் படி சிவராசன் 1990 ஆம் ஆண்டு பாஸ்போர்ட் புகைப்படம் எடுத்து வைத்திருந்ததும் கிடைத்தது. அதிலும் ஒரு ஆச்சரியம் அப்போது இழந்த ஒற்றைக் கண்ணில் செய்ற்கை கண் பொருத்தாமல் அசலான சிவராசனின் உருவம் கிடைத்தது. 
சிவராசனின் நகர்வும், செயல்பாடுகளையும், வெளியே கடத்திக் கொண்டு இருக்கும் செய்திகளையும் கண்டு பிடிக்கும் அளவிற்கு சிறப்பாக புலனாய்வு குழுவினர் முன்னேறியிருந்தனர். எல்லா வகையிலும் சுற்றி வளைக்கப்பட்ட சிவராசன் இப்போது தன்னுடைய உள் நடவடிக்கைகளை விடுத்து அமைதியாக இருக்க புலனாய்வு குழுவினருக்கு மேலும் சிக்கலாக இருந்தது. அதிர்ஷ்ட வசமாக கடைசியாக கடத்திய செய்தியை கண்டு உணர்ந்தவர்களுக்கு சிவராசன் உள்ளே செயல்பட்டுக்கொண்டுருப்பவர்கன் ஒத்துழைப்போடு இலங்கைக்கு தப்பிக்க போட்டுள்ள திட்டம் தெரிய வந்தது. ஆனால் தமிழ் நாட்டுக்குள் செயல்பட்டுக் கொண்டுருந்த விடுதலைப்புலிகளின் அரசியல் மற்றும்  உளவுப்பிரிவினர் எந்த வகையிலும் முயற்சி செய்ய முடியாத இக்கட்டான சூழ்நிலை.  காரணம் இந்த இரண்டு பிரிவுகளையும் மத்திய மாநில உளவு அமைப்புகள் தங்களுடைய கண்காணிப்பில் வைத்து ஒவ்வொரு நிமிடமும் அவர்களை கவனித்துக் கொண்டுருந்தனர். தேடலின் தொடர்ச்சியாக ரங்கன் என்ற ஈழத்தமிழர் பற்றிய செய்தி கிடைத்தது. இவர் லாட்ஜில் தங்கியிருந்தவர், மற்றொரு வீடும் தனியாக எடுத்து இருந்ததும் தெரியவந்தது. அவரை டிக்சன் என்பவர் பார்க்க வந்து போய்க் கொண்டுருப்பதும் தெரியவர மீண்டும் துரத்தல் ஆரம்பித்தது.

ரங்கன் போலி கடவுச்சீட்டு செய்வதில் கில்லாடி.  சென்னையில் இருந்த (?) ஒரு பிரபலமான TRAVEL AGENCY உடன் தொடர்பு இருந்ததும் கண்டு பிடிக்கப்பட்டது. ரங்கன் திருச்சியில் இருப்பதாக தகவல் கிடைத்ததும் அதிரடி படையினருடன் திருச்சியை வலம் வந்தாலும் கண்டுபிடிக்க முடியாமல் திரும்பினர். ஆனால் இவர்கள் உபயோகித்துக் கொண்டுருந்த மாருதி ஆம்னி என்பதையும் அதன் நிறம் என்பதை வைத்துக்கொண்டு பயணத்தில் இருக்கும் அத்தனை வண்டிகளையும் சல்லடை போடாத குறையாக தேடிக் கொண்டுருந்தனர். இதே சமயத்தில் இவர்களிடத்தில் இல்லாத டிக்சன் புகைப்படத்தை புலனாய்வு குழுவினருக்கு மத்திய உளவுத்துறை அனுப்பி வைத்தது. சிவராசனின் பல்வேறு தோற்ற புகைப்படமும், டிச்னின் புகைப்படத்தையும் ஊடகத்தில் வெளியிட கோவையில் இருந்து ஒருவர் அழைத்தார்.  டிக்சன் முக ஜாடையில் உள்ளவர் டெலிபோன் பூத் வந்து போவதாக சொன்னதும், இதே சமயத்தில் வயர்லெஸ் கருவியை பயன்படுத்தும் போது தொலைக்காட்சி அலைவரிசை மாறுவதாகவும் அருகில் இருந்த காவல்துறையினரிடம் தகவல் வரவும் சரியாய் இருந்தது.

இதே சமயத்தில் கோவை வாகன சோதனையில் இருவர் பிடிபட்டனர். விக்கி, ரகு என்ற இருவருமே விடுதலைப்புலிகள்.  இருவரும் கோவை முனுசாமி நகரில் டிக்சன் மற்றும் குணா என்றவர்களுடன் ஒன்றாக இருந்தவர்கள்.  சென்றவர்கள் நள்ளிரவு வரைக்கும் வராத காரணத்தால் எச்சரிக்கையாக இருந்தனர்.  கோவை காவல்துறையினர் மூலம் சம்மந்தப்பட்ட இடத்தை சுற்றி வளைத்த போது ஜன்னல் வழியே இருவரும் பார்த்து விட்டனர்.  நாங்கள் உங்களை ஒன்றும் செய்ய மாட்டோம் என்று சொல்லிக் கொண்டே உள்ளே நுழைய முற்பட்ட போது அவர்கள் எழுதி வைத்த கடிதமும் கடித்து துப்பிய சயனைடு குப்பியுமே வரவேற்றது.  அந்த இக்கட்டான சூழ்நிலையில் வெளியே நின்று கொண்டுருக்கும் கூட்டத்தையும் பார்த்து, பதட்டப்படாமல் சயனைடை குப்பியை கடிப்பதற்கு முன் முத்தான எழுத்துக்களில் பதட்டப்படாமல் கடிதம் டிக்சன் எழுதியிருந்தார் . .சாவின் இறுதி நொடியில் அவர்களின் அர்ப்பணிப்பு அதை உணர்த்தியது.
 " திரு. கார்த்திகேயன் தங்கள் திறமைக்கு என் பாராட்டுக்கள் ". டிக்சன்

புலனாய்வு குழுவினர் அறையின் உள்ளே முழுமையாக நுழைந்த போது அத்தனை ஆவணங்களை எறித்து முடித்து தங்கள் உயிரையும் உடலை விட்டு பிரித்து இருந்தனர். சோர்ந்து போனாலும் தொடர்ந்த துரத்தலில் வேறொரு புதிய தகவல் கிடைத்தது. முக்கிய தளபதியாக தமிழ்நாட்டில் செயல்பட்டுக் கொண்டுருந்த திருச்சி சாந்தன் பற்றிய தகவல். பெங்களுரில் திப்ப சந்திரா என்ற இடத்தில் காயம்பட்ட விடுதலைப்புலிகள் தங்கி சிகிச்சை எடுத்துக் கொண்டுருப்பதாக வாகன சோதனையில் பிடிபட்ட விக்கி மூலம் கிடைத்தது.  அப்போது விக்கி சொன்ன முக்கிய தகவல் திருச்சி சாந்தன் நீலநிற ப்ரிமியர் பத்மினி காரை பயன்படுத்துவதாகவும், அவரது குழுவினர் பச்சை நிற மாருதி ஆம்னி காரை பயன்படுத்திக்கொண்டுருப்பதாகவும் சொன்னதை வைத்து பெங்களுரில் உள்ள இந்திரா நகர் என்ற மேல்தட்டு மக்கள் வசிக்கும் இடத்தை சென்ற புலனாய்வு குழுவினரின் கண்டுபிடித்தனர்.  அருகில் உள்ளவர்களை விசாரித்த போது அந்த இரண்டு வாகனமும் அங்கு இருப்பதாக உறுதிபடுத்தியதை தொடர்ந்து குறிப்பிட்ட வீட்டை கண்காணித்துக் கொண்டு இருந்தனர்.

வெளியே ஆள் நடமாட்டம் இல்லாத போதும் கூட இரவு நேரத்தில் விளக்குகள் எறிந்து கொண்டுருந்தது.  ஆட்கள் உள்ளே இருக்கிறார்கள். தொடர்ந்து 24 மணி நேர கண்காணிப்புக்கு பிறகு தேசிய பாதுகாப்பு படையில் உள்ள கமேண்டோ பிரிவு இடத்திற்கு வரவழைக்கப்பட்டது. அவசர ஊர்தி, மருத்துவர், சயனைடு அருந்தினால் காப்பாற்ற உதவும் ஏற்பாட்டுடன் தயாராக இருக்க அறிவுறுத்தப்பட்டது.  இயல்பான முகத் தோற்றம் கொண்ட அதிகாரிகள் வீட்டின் விலாசத்தை கேட்பது போல் கதவை தட்ட வேண்டும் என்ற திட்டத்தின்படி செயல்பட, உள்ளேயிருந்தவர்கள் ஜன்னல் வழியே பார்க்க உடனடியாக மூடிவிட்டு உள்ளே வேகமாக ஓடினர்., அதிரடி படையினர் கதவுகளை வெடி வைத்து தகர்த்து அதிரடியாக உள்ளே நுழைய முக்கியமான காட்சி கண் எதிரே நடந்தேறிக் கொண்டுருந்தது.

ஒருவர் சயனைடு குப்பியை கடிக்க முற்பட, மற்றொருவர் குளியல் அறைக்குள் சென்று தப்ப முயற்சிக்க இருவரையும் பிடித்து (அரசன், குளத்தான்) மருத்துவமணை கொண்டு செல்லும் வழியில் ஒருவர் இறக்க, மற்றொருவர் விஷ முறிவையும் மீறி மூன்று நாட்களுக்குப் பிறகு மயக்க நிலையிலேயே இறந்தார். மொத்தத்தில் சிவராசன் பெங்களுருக்குள் தான் இருக்கிறார் என்று உறுதியாய் தெரிந்து விட்டது. இந்திரா நகர் வீட்டின் உரிமையாளர் மூலம் இந்த வீட்டை அவர்களுக்கு பிடித்துக்கொடுத்த ஜகன்நாதன் என்ற தரகர் மூலம் தோமலூர் என்ற மறைவிட தகவல் கிடைத்தது.

அந்தப்பகுதியில் திருட்டுப்பயத்தின் காரணமாக குடியிருந்தவர்கள் உருவாக்கியிருந்த பாதுகாப்பு சோதனையில் காயம் பட்டு சிகிச்சை எடுத்துக்கொண்டுருந்த மற்றொரு புலி இளைஞன் சிக்க அந்த இடத்திலேயே சயனைடு சாப்பிட்டு இறந்துபோக அந்த இடம் மொத்தமாக சுற்றி வளைக்கப்பட்டது. இவர்கள் தேடிச் சென்ற இடத்தில் இருந்து அன்று காலை தான் காயம்பட்டு சிகிச்சை எடுத்துக் கொண்டுருந்தவர்களை வேறு இடம் மாற்றப்பட்டு இருந்தது.

ரங்கநாத் பெங்களுர் தமிழர்.  லேத் தொழிற்சாலையை நஷ்டத்தின் காரணமாக விற்க முயற்சித்துக்கொண்டுருந்தவர். தமிழர் ஆதரவு கொள்கையுள்ள கர்நாடக வசித்துக்கொண்டுருந்த தமிழர் சுரேஷ் மாஸ்டரை அறிமுகம் செய்து வைத்தார். அப்போது அவர்கள் இருவருக்கும் உருவான புரிந்துணர்வில் காயம்பட்டு சிகிச்சை எடுத்துக் கொண்டுருந்தவர்களை பாதுகாப்பு காரணமாக ரங்கநாத் வீட்டில் கொண்டு வந்து சேர்த்து இருந்தனர். ரங்க நாத் வீட்டில் இருந்த இரண்டு அறைகளை ஒன்றை ஒதுக்கி கொடுத்து இருந்தார். இவர் உள்ளே போய் வசதிகளை உருவாக்கியதும்  ஆகஸ்ட் 2 அன்று இரவு 11 மணிக்கு பச்சை நிற மாருதி ஜிப்ஸியில் சிவராசன் குழுவினர் உள்ளே நுழைந்து அறையில் வசிக்க ஆரம்பித்தனர். வந்து தங்கியவர்களுக்காக திரைப்படக் குழுவினருக்காக என்று மாண்டியா மாவட்டத்தில் முதாடி மற்றும் பிருடா கிராமத்தில் இரண்டு வீடுகளைப் பார்த்துக்கொடுத்தார்.  ரங்கநாத் மனைவி மிருதுளாவுக்கு இவர்கள் ராஜீவ் கொலையில் சம்மந்தப்பட்டவர்கள் என்று தெரிந்து விட்டது.

சிகிச்சை எடுக்க வேண்டியவர்களை ரங்கநாத்துக்கு தெரிந்த காலப்பா மருத்துவமனையிலும், மற்றவர்களை கிராமத்திலும் கொண்டு போய் விட்டு வர ஏற்பாடுகள் செய்தனர். சுரேஷ் மாஸ்டர் அறிவுரையின் படி இரண்டு கார்களிலும் வெள்ளை நிறம் அடிக்கப்பட்டது. பெங்களுர் செய்திதாள்கள் கர்நாடகாவில் இலங்கை தமிழர்கள் உள்ளே வந்து இருப்பது பொதுமக்கள் அணைவருக்கும் தெரிந்து விட்டது. இதன் மூலம் கிராமத்தில் தங்கியிருந்தவர்களை சந்தேகத்துடன் பார்க்க ஆரம்பித்தனர். சந்தேகத்தின் அடிப்படையில் அருகில் உள்ள காவல்துறைக்கு தகவல் கொடுக்க காவல்துறை வந்து சோதனை செய்ய முற்பட உள்ளே இருந்தவர்கள் (ஆகஸ்ட் 17) சயனைடு மூலம் உயிர் துறந்தனர். 

புலனாய்வு குழுவினரில் ஒரு பகுதியினர் ரங்கநாத் நண்பர் மூலம் ரங்கநாத்தின் லேத் முகவரி பெறப்பட்டு அங்கு இருந்தவர்கள் மூலம் ரங்க நாத் வீட்டு முகவரி பெறப்பட்டது.  காலையில் பால் வாங்க வெளியே வந்த ரங்கநாத் முதல் நாள் சயனைடு மரணத்தை படித்ததும் மொத்தமும் கை மீறி விட்டது.  எந்த நேரத்தில் காவல்துறையினர் வீட்டுக்கு வந்து இறங்கப் போகிறார்கள் என்பதை உணர்ந்து கொண்டார். மனைவி மிருதுளாவுக்கு இருந்த ஆஸ்துமா அதிகமாக இப்போது வெளியே செல்லக்கூடாது என்ற சிவராசன் மிரட்டலை பொருட்படுத்தாமல் வெளியே வந்தார்.  ரங்கநாத் சிவராசனிடம் சமாதனப்படுத்தி  மனைவியை மீண்டும் உள்ளே அழைத்து வருகின்றேன் என்று வெளியே வந்தபோதிலும் உறுதியாக தெரிந்து விட்டது.  எப்படியும் நம்முடைய விடு தட்டப்படும்.  இந்நேரம் புலனாய்வு குழுவினர் மோப்பம் பிடித்து இருப்பார்கள்?

புலனாய்வு குழுவினர் பெறப்பட்ட தகவல்களை காவல்துறையினரிடம் பகிர்ந்து கொள்ள, கர்நாடக காவல்துறையினர் ரங்கநாத்தையும் சகோதர் வீட்டில் தங்கியிருந்த மிருதுளாவை கண்டு பிடித்தனர். மிருதுளா ஆகஸ்ட் 18 வரைக்கும் தான் சந்தித்த நரக வாழ்க்கையை கடந்த 16 நாட்கள் அனுபவத்தையும் மூச்சு விடாமல் பேச ஆரம்பித்தார்.

ராஜீவ் காந்தி பிறந்த நாள் ஆகஸ்ட் 20.  இன்னும் இரண்டு நாட்கள் தான் இருக்கிறது.

No comments: