தமிழ்மணம் 2010 முன்னணி வலைபதிவுகள் பட்டியலைப் பார்த்து விட்டீர்களா? நான் சற்று தாமதமாகத்தான் பார்த்தேன். பட்டியலைப் பார்த்துக் கொண்டே வந்த போது என்னுடைய தளமும் இருந்தது. தமிழ்மண நிர்வாகக்குழுவின் பார்வையில் தேவியர் இல்லம் திருப்பூர் 49 என்ற இடத்தில் இருந்தது. தமிழ்மண தொழில்நுட்ப குழுவினர் உழைத்த உழைப்பிற்கு மரியாதை செய்யும் பொருட்டு இந்த அடையாளச் சின்னத்தை என்னுடைய இடுகையில் தலையில் மாட்டி வைத்துள்ளேன். இதே சமயத்தில் ப்ரியமுடன் வசந்த அனுப்பிய இந்த முகப்பு படத்தையும் சேர்த்துள்ளேன்.
தமிழ்மணம் கொடுத்துள்ள இந்த 49ல் எந்த மகிழ்ச்சியும் இல்லை என்பதோடு வருத்தமும் இல்லை. முன்னணி வலைபதிவுகள் என்பதற்கும் சிறந்த இடுகைகள் எனற வார்த்தைக்கும் உண்டான இடைவெளி மிகப் பெரிதானது. இது போன்ற சமயங்களில் அது குறித்து எவரும் பெரிதாக யோசித்து மண்டையை உடைத்துக் கொள்ள விரும்புவதில்லை. இது குறித்து பலரும் என்னிடம் பேசினார்கள். சிலர் தங்கள் வருத்தங்களை மின் அஞ்சல் வாயிலாக பகிர்ந்து கொண்டார்கள்.
மொத்தத்தில் தமிழ்மணம் என்ற திரட்டியின் மூலம் உள்நுழைந்வர்களின் கணக்கீடு. அவ்வளவுதான்.
இந்த பட்டியலில் வராதவர்கள் மன உளைச்சல் அடைய வேண்டிய அவஸ்யமில்லை. என்னைப் போன்றவர்கள் தமிழ்மணம் மற்றும் தமிழிஷ் என்ற இரண்டு தளத்தில் மட்டும் இணைத்துவிட்டு அக்கடா என்று நகர்ந்து போய் விடுவதுண்டு. விந்தைமனிதன் சொன்னதுக்குப் பிறகு கதவையும் திறந்து வைத்தாகி விட்டது.
எத்தனை பேர்கள் படிக்கிறார்கள் என்பதை விட எப்படி புரிந்து கொண்டார்கள் என்பதே எனக்கு முக்கியமாக படுகின்றது. கடைக்குட்டி பிறந்த நாளுக்கு வீட்டில் தொடர்ச்சியாக தங்கிய மூத்த பத்திரிக்கையாளர் முத்து முருகேசன் அழுவாச்சி காவியம் கதாநாயகன் என்ற தலைப்பை படித்துவிட்டு சற்று உணர்ச்சி வசப்பட்டு என்னை பாராட்டியதே இந்த ஆண்டின் சிறந்த விருதாக எடுத்துக் கொண்டேன்.
ஒவ்வொரு மனிதனுமே தனித்தனி தீவு போன்றவர்கள். அவர்களின் எண்ணங்கள் நோக்கங்களை எவராலும் முழுமையாக மாற்றி விடமுடியாது. ஒவ்வொருவரின் வளர்ப்பும், வாழ்ந்த சூழ்நிலையும், அவர்கள் தங்களுடைய குடும்பத்தில் பெற்ற தாக்கங்கள் என்று பலவிதங்களிலும் அவர்களின் எண்ணங்களை தீர்மானிக்கிறது. சிலசமயம் அவரவர் சொந்த வாழ்க்கை அனுபவங்கள் மாற்றிவிடும். சிலருக்கு தாங்கள் படித்த வாசிப்பு அனுபவம் மாற்ற உதவும். சிலர் மட்டும் இதில் விதிவிலக்கு. பந்தயம் கட்டுகிறாயா? எங்கே என்னை திருத்திப்பார்? என்று சொல்பவர்கள் பற்றி நாம் பெரிதாக அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை.
வலையுலகத்தில் அவ்வவ்போது நடந்து கொண்டுருக்கும் பிஸ்கோத்து பிரச்சனைகளை நீங்கள் கூர்ந்து கவனித்துக் கொண்டு வந்தாலே உங்களால் புரிந்து கொள்ளமுடியும். உசுப்பேத்துபவர்கள் எப்போதும் போல அடுத்தவர்களை நோக்கி நகர்ந்துவிடுகிறார்கள். ஆனால் மாட்டிக் கொண்டவர்கள் மட்டும் பரிதாபமாக நிற்கிறார்கள். கூகுள் பஸ்ஸில் நடக்கும் இணைய அரட்டைகளை கவனித்துப் பாருங்கள். எங்கே செல்லும் இந்த பாதை என்பதை எளிதாக புரிந்து கொள்ள முடியும்?
தமிழ்வெளி நிறுவனர் நண்பர் புருஷோத்தமன் (குழலி) உரையாடிய போது சொன்ன விசயங்கள் இப்போது நினைவுக்கு வருகிறது.
" இது தான் சரியான எழுத்து என்று எவரால் அறுதியிட்டு கூறமுடியும்? ஒரு குறிப்பிட்ட விசயங்களில் மாற்றுக் கருத்து இருப்பவர்கள் வந்து படிக்கும் போது எழுதியவர்களின் நோக்கத்தைப் பார்த்து தன்னுடைய இருட்டு சிந்தனைகளை மாற்ற உதவுவதே சிறந்த எழுத்து.,
இதற்கு ஏன் ஓட்டு? என்றார்.
உண்மைத்தமிழனுக்கு விளையாட்டுத்தனமாக செய்த மைனஸ் ஓட்டு என்பதை பார்க்கும் போது எழுதுவதை விட இது போன்ற விசயங்களில் தான் பலருக்கும் அக்கறை இருக்கிறது. அதிலும் குறிப்பிட்ட இணைப்பை சொடுக்கும் போது அது சரியாக மைனஸ் ஓட்டுக்கு அழைத்துச் சென்று நம்மை அறியாமல் அந்த பாவத்தை செய்ய வேண்டியதாக உள்ளது. கரம் சிரம் பார்த்துக் கொள்ளுங்கள். இது போக ஒவ்வொருவரும் யார் யாருக்கும் ஓட்டுப் போடுகிறார்கள் என்ற மற்றொரு ஆராய்ச்சிக் கூட்டம் அல்லும் பகலும் அயராது உழைத்துக் கொண்டுருக்கிறார்கள்.
நாம் வெகுஜன அரசியலில் பங்கெடுக்க, குறைந்தபட்சம் தேர்தல் சமயத்தில் ஓட்டுப் போட விரும்புவதில்லை. ஆனால் அரசியலை வெட்டியாய் விமர்சிக்க, நீ எப்படி என் தலைவரை விமர்சிப்பாய் என்று வம்பு செய்ய தயாராய் இருப்போம்.
மெத்தப் படித்தவர்களுக்கு எல்லாமே விளையாட்டு. புரியாதவர்களுக்கு??
ஆனால் தமிழ்மணம் சொல்லியுள்ள முதல் 100 பதிவுகளில் நீங்கள் விரும்பியவர் வரவில்லையென்றால் ஒன்று உங்களுக்கு இந்த வலையுலக அரசியல் புரியவில்லை என்று அர்த்தம். அல்லது எழுதியவருக்கு இந்த அரசியலை வென்றெடுக்கும் திறமை இல்லை என்று அர்த்தம்.
கோவி கண்ணன் சொன்னது போல எழுதுவது எத்தனை முக்கியமோ அதனை கொண்டு சேர்ப்பது அதனை விட முக்கியம். இது தமிழ்மணம் நிர்வாகத்தின் மேல் உள்ள தவறு அல்ல. இது நம்முடைய ஒவ்வொருவருடைய தவறுமே ஆகும். தொடக்கத்தில் தமிழ்மணத்தில் விளம்பரங்கள் ஏதுமில்லை. உள்நுழைய பயனர் என்று கொடுக்க வேண்டிய அவஸ்யமில்லாமல் தான் வைத்திருந்தார்கள். ஆனால் பரிந்துரை, மணிமகுடம் எல்லாவற்றிலும் நம் மக்களின் மஞ்சுவிரட்டு நடக்க, உங்களுக்கு மட்டும் தான் அரசியல் தெரியுமா? எங்கள் அரசியலைப் பாருங்க என்று முதல் 20 தளங்கள் என்று ஆரம்பித்தார்கள். அது இன்று ரேங்கிங், நூறு தளங்கள் என்று கொடியை நாட்டிவிட்டு ஒவ்வொருவரும் அடிச்சுக்கிட்டு நிற்பதை அமைதியாக வேடிக்கை பார்க்கும் மனோநிலைக்கு வந்திருப்பார்கள் போல.
சூடான இடுகை, பரிந்துரை, மணி மகுடம் போன்றவற்றில் வரும் ஒவ்வொன்றுக்கும் பின்னாலும் அவரவரின் தனிப்பட்ட உழைப்புகள் தான் பின்னால் இருக்கிறது. சென்ஷி மூலம் அறிமுகமான செல்வநாயகி எழுதியிருந்த கவிதை ஒன்று எனக்கு நாலைந்து நாட்கள் மனதை உலுக்கிக் கொண்டேயிருந்தது. ஏன் தமிழ்மணத்தில் உள்ள செல்வராஜ், சசி இடுகைகள் கூட இதில் வரவில்லை. அடுத்த ஆச்சரியம் துளசி கோபால் பெற்ற இடம் 62. நம்ம சுப்பையா வாத்தியார் பெற்ற இடம் 57.???? சூறாவளியை உருவாக்கிய சவுக்கு பெற்ற இடம் 75.
பதிவு போட்ட சிறிது நேரத்தில் பின்னோட்டங்கள் வந்து குவியும் ஹேமா இடுகையும் இதில் காணவில்லை. எனக்கே 49 என்றால் துளசி கோபால் எத்தனை வருடமாக எழுதிக் கொண்டுருக்கிறார். எதன் அடிப்படையில் இந்த 49 தகுதி வந்துள்ளதை புரிந்து கொள்ளுங்க.
இதுவொரு கிலுகிலுப்பை அல்லது கிச்சுகிச்சு.
நண்பர் சாய்தாசன் கூற்றுப்படி ஒரே மாதத்தில் அலெக்ஸா ரேங்கில் பல மடங்கு முன்னால் வந்த சுடுதண்ணியைக் கூட இங்கு காணவில்லை.
என்னமோ போங்க? ஒன்னும் புரியமாட்டுது.
ஆக மொத்தம் நெகிழ்ந்து போன்வர் சொன்ன வாசகம் தான் மொத்தத்தில் சிறப்பானது.
"அண்ணே என் தகுதி எனக்குத் தெரியும். நன்றாக உணர்ந்து உருப்படியாக எழுதிக் கொண்டுருப்பவர்களின் கணக்கும் தெரியும். இதற்குப் பின்னால் உள்ள அரசியலை நான் புரிந்து கொண்டவன் என்ற முறையில், இந்த அரசியலில் நான் வென்றுவிட்டேன் என்கிற ரீதியில் எனக்கு மகிழ்ச்சி தான்" என்றார்.
ஆனால் இதில் நான் ஆச்சரியப்பட்ட ஒரே விசயம் ஒன்று உண்டு. பாலமுருகன் என்று சொன்னால் உங்களுக்குத் தெரியாது. என்னமோ தான் போய் ஹாலிவுட் படத்தை எடுத்துக் கொண்டுருப்பதை போல தன் பெயருக்கு முன்னால் ஹாலிவுட் என்ற பெயரை வைத்துக் கொண்ட பாலாவை உங்களுக்குத் தெரியுமா? ஹாலிவுட் பாலா என்ற பெயரில் அக்கரைச்சீமை என்ற வலைபதிவின் மூலம் கலக்ககிய கண்ணியவான் இன்று காணவில்லை என்ற பட்டியலில் இருக்கிறார்.
"நான் கஷ்டப்பட்டு நாலு பேரு தெரிஞ்சுக்கட்டும்ன்னு எழுதுவேன். அடுத்தவன் போற போக்கில எழுதிட்டு போவாரு. அவருக்கு விழுற ஓட்டு எனக்கு விழாது. அப்புறம் எதுக்கு இந்த ஓட்டுப்பட்டை. இதுக்கு நான் போயி குத்துங்க எஜமான் குத்துங்கன்னு கெஞ்சனும்.
போங்கடா உங்க ஓட்டு அரசியலும், வலைபதிவுகளும் என்று துச்சமாக தன் தளத்தையே தூக்கி எறிந்த ஹாலிவுட் பாலா (அக்கரைச்சீமை) பெற்ற இடம் 99. அதிலும் இந்த 99 இரண்டு பேருக்கு வந்துள்ளது.
அவர் தான் என் பார்வையில் உண்மைத் தமிழர்களை புரிந்து கொண்டவர். இவரே உண்மைத்தமிழன் பெற்ற மூன்றாம் இடத்தை பெற தகுதியானவர். காரணம் பாலாவின் குரு இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். (சரவணன் இதற்காக நீங்க மறுபடியும் ஒரு இடுகையை போட்டு விடாதீங்க.. நீங்க இந்த ஓட்டுக்கு கொடுக்குற முக்கியத்துவத்தை பார்த்தே பலரும் உங்களை ஓட்டு ஓட்டென்று ஓட்டிக் கொண்டுருக்காங்க. ப்ளீஸ் புரிஞ்சுக்க முயற்சி பண்ணுங்க)
எந்த திரட்டிகளிலும் இணைக்காமலேயே வந்து கொண்டுருந்த விமர்சனத்திற்கு பாகம் ஒன்று இரண்டு மூன்று என்று உருவாக்கிய நாமக்கல் பார்ட்டியை நமஸ்காரம் செய்கின்றேன்.
தங்கராசா நீ இதை படிக்கிறாயோ இல்லையோ உன்னோட தைரியம் எனக்கு வர இன்னும் நாளாகும்ப்பா?? ஆனால் முருகா நீ உன் அறிமுகம் என்கிற ரீதியில் உன் வலைதளத்தில் எழுதி வைத்த விசயத்தை தான் இந்த இடத்தில் எழுதி வைத்தால் பொருத்தமாக இருக்கும் என்று கருதுகின்றேன்.
"போய் புள்ளகுட்டிகள படிக்கவைக்கிற வழியைப் பாருங்க"
