Showing posts with label ரேஷன் கடை. Show all posts
Showing posts with label ரேஷன் கடை. Show all posts

Friday, November 08, 2013

இலவசத்திட்டங்கள் படும் பாடு

ரேசன் கடைகள் பதிவின் தொடர்ச்சி 

கடந்த திமுக ஆட்சியில் கொடுக்கப்பட்ட இலவச வண்ணத் தொலைக்காட்சி குடும்ப அட்டைக்கு ஒன்று என்ற பெயரில் வந்து சேர அது இன்று வரையிலும் பிரிக்கப்படாமல் ஊரிலேயே பரணில் தான் உறங்கிக் கொண்டிருக்கின்றது. சிறப்பான திட்டம். கலைஞருக்கு இது போன்ற திட்டத்தை எந்த அதிகாரி வடிவமைத்துக் கொடுத்தாரோ அவருக்குத் தமிழர்களின் அடுத்த ஏழெழு தலைமுறைகளும் நன்றிக்கடன் பட்டுள்ளது. 

காரணம் டிவி தேவையில்லை என்று கருதியிருந்தவர்களும், நம்மால் விலை கொடுத்து வாங்க முடியாது என்று நினைத்தவர்களையும் இந்தத் திட்டத்தின் மூலம் அவரவர் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்ததும் தெருவில் கூடும் பழக்கம் குறைந்து விட்டது. வெட்டி அரட்டை முற்றிலும் நின்று விட்டது. 

திரையரங்க கூட்டம் குறைந்து வீட்டில், கடைகளில் என்று சர்வ இடங்களிலும் வந்து சேர்ந்து ‘கனவு காணுங்கள்‘என்ற தினந்தோறும் கொண்டாட்ட மனோநிலையைப் பட்டி தொட்டியெங்கும் பரப்பிய பெருமை கலைஞரையே சாரும். ஒரே வீட்டுக்குள் அறைக்கொன்று என்ற புதிய கலாச்சாரம் உருவானது. 

கலைத்தாகம் மிகுந்த தமிழர்கள் தங்களுக்கான தலைவர்களைச் சினிமாவின் மூலமே தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்தவர்கள் தங்கள் வாழ்க்கையின் லட்சியங்களையும் இந்த டிவி பெட்டியின் மூலம் தேடத் தொடங்கினர். ஏற்கனவே சன் டிவி கலாநிதி மாறன் மூலம் தமிழ்நாட்டில் உருவான புதிய ஊடகத்தமிழ் பரவாத இடங்கள் அனைத்தையும் கொண்டு சேர்த்த பெருமையும் லட்சியங்களை அடைய அதிக உழைப்பு தேவையில்லை என்ற கூட்டமும் பெருகியுள்ளது. 

இந்தக் கூட்டத்தின் ஒரு பகுதியைத்தான் இங்கே உள்ள ரேசன் கடையில் பார்த்தேன். நம் அரசாங்கத்தின் இலவசங்கள் யாருக்கெல்லாம் போய்க் கொண்டிருக்கின்றது என்பதை உணர்ந்து கொள்ள முடிந்தது.


உங்களுக்கு அரசாங்க திட்டங்கள் குறித்துத் தெளிவாகத் தெரிந்தாலும் கூடச் சராசரி அரசாங்க அலுவலகத்தில் நுழைந்தால் நாம் கூமுட்டையோ? என்று தான் தோன்றுகின்றது. இது வேறொரு உலகம் என்பது மட்டும் தெளிவாகத் தெரிகின்றது. 

அரசின் திட்டமான இலவச அரிசி இருபது கிலோ என்பது புழுங்கல் அரிசி இருபது கிலோ மற்றும் பச்சரிசி ஐந்து கிலோ என்றாலும் பல கடைகளில் 15 கிலோ என்கிற அளவுக்குத்தான் போடுகின்றார்கள். ஒரு அட்டைக்கு 5 கிலோ என்பதைத் தனியாக ஒதுக்கி விடுகின்றார்கள். பச்சரசி ஐந்து கிலோ வாங்கினால் புழுங்கல் அரிசி 15 கிலோ தான் என்று சமாளிக்கின்றார்கள். 

இதில் ஒரு பெரிய ஆச்சரியம் என்னவென்றால் நன்கு படித்த வசதியான அத்தனை பேர்களும் அங்கே பணிபுரிபவர்கள் எத்தனை மோசமாகத் திட்டினாலும் பொறுத்துக் கொண்டு அசையாத சிலை போல நிற்பதைப் பார்க்கும் போது இது இவர்களின் இயல்பான குணமா? அல்லது பயிற்சி எடுத்துக் கொண்டு வந்திருப்பார்களா? என்று யோசிக்கத் தோன்றியது. 

ஏறக்குறைய இரண்டு கோடி அட்டை இருப்பவர்களுக்கு வழங்கப்படும் இலவச அரிசியை இன்றைய சூழ்நிலையில் தேவையின் அடிப்படையில் வாங்குபவர்களின் எண்ணிக்கை ஐந்தில் ஒரு மடங்கு கூட இருக்காது. இந்த அரிசியை மட்டும் வாங்கிச் சமைப்பவர்கள் என்றால் தமிழகத்தில் உள்ள உள்ளடங்கிய கிராமங்களைத் தவிர வேறெங்கும் இருக்காது என்றே நினைக்கத் தோன்றுகின்றது. 

சிலர் இட்லி, தோசை மாவுக்கு என வெளிச் சந்தையில் வாங்கிய அரிசியோடு சேர்த்துப் பயன்படுத்திக் கொள்கின்றார்கள். ஆனால் எழுபது சதவிகித மக்கள் வாங்கிய அரிசியை ஒரு கிலோவை ஐந்து ரூபாய்க்கு விற்று விடுகின்றார்கள். இதே போல ஜீனி, பருப்பு வகைகள், பாமாயில் என்று ரேசன் கடையில் வாங்கும் பெரும்பாலான பொருட்களை வெளியே விற்று லாபம் பார்ப்பவர்கள் தான் அதிகம். 

இதே அரிசி பாலீஷ் செய்து வெளிச்சந்தையில் 35 ரூபாய்க்கு மாறி விடுகின்றது.இது தவிர இந்த அரிசி கோழிப் பண்ணைகளுக்குச் செல்வதுமாக அரசாங்கத்தின் பணம் வீணாகிக் கொண்டிருக்கின்றது. 

சில மாதங்களுக்கு முன் அரசாங்கம் கொண்டு வந்த கிலோ இருபது ரூபாய் அரிசியை மக்கள் எவரும் சீண்டக்கூடத் தயாராக இல்லை. ஆனால் மிக நன்றாகவே உள்ளது. சில மாவட்டங்களில் மட்டுமே வெற்றிப் பெற்றது. தற்போதைய சமூகத்தில் பசியைத்தாண்டி ருசிக்கு மாறிவிட்டதால் பொருளாதார ரீதியாக வாழ முடியாதவர்களின் வாழ்க்கைக்கு உதவுவதாகவே இது போன்ற அரிசி பார்க்கப்படுகின்றது. 

இது தவிர நகர்ப்புறங்களில் இன்று லாபம் கொழிக்கும் தொழிலாகப் பார்க்கப்படும் பையில் மாவு விற்கும் சந்தைக்கும் இது போன்ற அரிசியே பலவிதங்களில் உதவிக்கொண்டு இருக்கின்றது. 

இன்று தமிழ்நாட்டில் உள்ள அமைச்சர்களில் (யார் எந்தப் பதவிகளில் இருக்கின்றார்கள் என்றே இன்று வரையிலும் தெரியவில்லை) எத்தனை பேருக்கு கணினியை இயக்கி அலுவலகச் செயல்பாடுகளைப் பார்க்கத் தெரியும்? அதிகாரிகளைத் தவிர அமைச்சர்களைப் பொறுத்தவரையிலும் மின் அஞ்சல் என்றால் ஏதோ துபாய்க்குப் பக்கத்தில் இருக்கும் ஒரு ஊர் என்றே நினைத்துக் கொள்ளும் புத்திசாலிகளாகத்தான் இருக்கின்றார்கள். 

ஆனால் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுக் கொண்டிருக்கும் மடிக்கணினி என்பது குறித்துப் பலரிடம் பேசிப் பார்த்தேன்.

இதிலும் பல நடைமுறை சிக்கல் உள்ளது. தொடக்கத்தில் டைப்பிங் தெரிந்து கணினியை பயன்படுத்தும் போது எளிதாக இருந்தது. ஆனால் இன்று பலரும் விரல் வித்தை வீரர்கள் தான். ஆனால் நம் கல்விச்சூழல் கணினியில் படித்துத் தெரிந்து கொள்ளும் அளவில் இருக்கின்றதா? குறிப்பாக அரசாங்க பள்ளிக்கூட ஆசிரியர்களில் விதிவிலக்குகளைத் தவிர்த்து மாணவர்களை ஊக்கப் படுத்துபவர்களைத் தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டும். அவர்களுக்கே கணினி அறிவு இருக்குமா என்பது சந்தேகமே. இதற்கு மேலாகப் பாடங்களைச் சிடி களில் சேமித்து வைத்து அதை வைத்து பார்த்து படிக்கும் அளவிற்கா நம் வகுப்பறை இருக்கின்றது?

இன்று வரையிலும் தனியார் பள்ளிக்கூடங்களில் பயிலும் மாணவர்கள் கூடப் பள்ளிக்கூடத்தில் கூடக் கணினி என்பதை ஏதோவொரு பூதம் என்பதைப் போலத்தான் பார்த்து தொடுங்க? என்பது போல அறிவுறுத்துகின்றார்கள். அடுத்து இணைய இணைப்பு இல்லாமல் இருக்கும் இந்தக் கணினிகள் தோல் இல்லாத எலும்பு போலத்தான்.

அரசாங்கத்தின் அறிவுரையின் படி ஒவ்வொரு அரசு பள்ளிக்கூடங்களில் பயிலும் மாணவர்களுக்கும்(மேல்நிலைப்பள்ளி)இந்த மடிக்கணினி வழங்கப் படுகின்றது.

விலைக்கு விற்று விடுகின்றார்கள். சிலர் விளையாட பயன்படுத்துகின்றார்கள். மிகக் குறைவான மாணவர்கள் மட்டும் பிரயோஜனமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். அஸ்திவாரம் சரியாகப் போடப்படாமல் அடுக்கு மாடி கட்டுவது போலத்தான் இந்தத் திட்டம் தமிழ்நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது.

ஜெ. வின் தேர்தல் வாக்குறுதி சிறப்புத் திட்டமான மிக்ஸி, கிரைண்டர் மற்றும் மின்விசிறி நடுத்தர வர்க்கத்திற்குக் கீழே உள்ள பல குடும்பங்களுக்கு நிச்சயமாக உதவுகின்றது. ஆனால் பல பேர்களிடம் கேட்ட போது மின் விசிறி மட்டும் தரமாக இருப்பதையும் மற்ற இரண்டு பொருட்களும் நல்லதாக அமைந்தால் அதிர்ஷ்டமே என்கிற ரீதியில் உள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் பேரூந்து சலுகை, சீருடை, மிதிவண்டி, நோட்டுப் புத்தகங்கள் அனைத்தும் கேள்வியே எழுப்ப முடியாத நல்ல திட்டங்கள். ஒவ்வொரு மாவட்டத்தின் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் தொடங்கிப் பள்ளியின் தலைமையாசிரியர் வரைக்கும் தற்போதைய ஆட்சி குறித்த பயம் இருப்பதால் மாணவர்களுக்குக் கொடுத்து முடிக்கும் வரையிலும் உயிரை கையில் பிடித்துக் கொண்டு தான் இருக்கின்றார்கள்.

பசுமை வீடுகள் என்பது ஒவ்வொரு ஆட்சியிலும் கட்சிக்காரர்கள் சொல்லும் நபர்களுக்கு வழங்கப்படும் திட்டம். இலவச காப்பீடு என்பது உதவுகின்றதே தவிர அதைப் பெருமையாகச் சிறப்பான செயலாக்கத்தில் உள்ள திட்டம் என்று சொல்ல முடியவில்லை.

ஏறக்குறைய 11 ஆயிரம் கோடிகள் செலவளிக்கப்படும் இலவச திட்டங்களில் வருடந்தோறும் ஆயிரம் கோடிகளை ஒதுக்கி முதலில் அரசாங்க பள்ளிக்கூடங்களின் கட்டிடங்களைச் செப்பனிட்டாலே போதுமானது. அரசு பள்ளிகளின் மேல் நடுத்தரவர்க்கத்திற்கு இருக்கும் எரிச்சலை குறைத்து நம்பகத்தன்மையை அதிகரிக்க உதவும்.

கலைஞர் திட்டம் கவிழ்ந்து இப்போது அம்மா திட்டம் உச்சத்தில் உள்ளது. ஜெ. வின் சாதனையான டாஸ்மாக் சாராயப் பாட்டில்களில் மட்டும் இன்னமும் அம்மா என்ற பெயர் வரவில்லை. மற்றபடி எல்லா இடங்களிலும் அம்மா புகழ் தான் தமிழ்நாட்டில் தற்போது கொடிகட்டி பறக்கின்றது.

தமிழ்நாட்டு ‘குடிமகன்‘களின் விருப்ப அம்மாவாக இருப்பவர், ஆங்கிலத்தை வளர்த்து தமிழ்த்தாய்க்கு சிலை வைக்க நினைப்பவரிடம் மனதில் எந்தத் தாய் போய் இதையெல்லாம் சொல்லப் போகின்றாரோ?

தொடர்புடைய பதிவுகள்

கிராம பொருளாதாரம் அழிந்த கதை

தப்புத்தாளங்கள்


மற்ற பதிவுகள்

நதிகள் இணைப்புத்திட்டம்  கனவா கற்பனையா?

வெள்ளைத் தோல் சிந்தனைகள் மாறுமா?