Showing posts with label காரைக்குடி உணவகம். Show all posts
Showing posts with label காரைக்குடி உணவகம். Show all posts

Wednesday, March 04, 2015

மாற்றங்கள் உருவாக்கும் பாதைகள்

ரு நூற்றாண்டின் நான்கில் ஒரு பகுதியை அனுபவத்திற்கு செலவழித்துள்ளேன் என்பதை வாசிக்கும் போது சற்று மிரட்சியாக இருக்கும். ஆனால் கடந்த 25 ஆண்டுகள் என்றால் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொள்ள முடியும் தானே?  இந்த 25 ஆண்டுக்குள் உருவான சமூக மாறுதல்களும், மாற்றத்திற்கு முக்கிய காரணமாக இருந்த நவீன தொழில் நுட்ப வசதிகளும் ஒவ்வொரு தனி மனிதர்களையும் நிறைய மாற்றம் அடையச் செய்து உள்ளது. நானும் மாறியுள்ளேன். நான் விரும்பாவிட்டாலும் நான் மாறியாக வேண்டிய சூழ்நிலையில் தான் இருக்கின்றேன்.

ம்மிடம் இன்று பணம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பயணம் என்பது இயல்பான ஒன்றாக மாறியுள்ளது. அதற்கான தேவைகளும் உள்ளது. நெருக்கடிகள் நம்மை உந்தித் தள்ளுகின்றது. இன்று எவராலும் எங்கு வேண்டுமானாலும் செல்ல முடிகின்றது. 

ன்று பணம் அதிகம் வைத்திருப்பவர்களால் மட்டுமல்ல, பணிபுரிகின்ற பணிச்சூழலில் நினைத்த நேரத்தில் கண்டங்களைக் கூடக் கணப் பொழுதில் கடந்து விட முடிகின்றது. ஆனால் 25 ஆண்டுகளுக்கு முன் ஒரு மாவட்டத்திற்குள்ளே இருக்கும் அடுத்த ஊருக்குள் செல்ல முடியாமல், அந்த ஊரைப் பற்றி அறிந்திருக்காமலேயே வாழ்ந்து முடித்தவர்கள் அநேகம் பேர்கள். என் மாவட்டத்திற்குப் பக்கத்தில் உள்ள இராமேஸ்வரத்திற்குக் கல்லூரி முடிக்கும் வரைக்கும் பள்ளிச்சுற்றுலா என்ற பெயரில் ஒரே ஒரு முறை தான் நான் சென்றுள்ளேன்.  இன்று நான் தமிழ்நாட்டுக்குள் இன்னமும் முழுமையாக செல்ல வாய்ப்பு அமையாத மாவட்டங்கள் மூன்று உள்ளது. கிருஷ்ணகிரி, தர்மபுரி, கன்யாகுமரி.

டை மழை பெய்தால் கண்மாய் மீன். அளவான மழை என்றால் கடல் மீன். இது தவிர அன்றாட உணவில் ஆட்டுக்கறி. கோவில் திருவிழா என்றால் கோழிக்கறி. வீட்டு விசேடங்கள் என்றால் காய்கறிகளின் அணிவகுப்பு விருந்து தான் வாழ்க்கை. உணவு தான் முக்கியம். உணவே தான் மருந்து என்று வாழ்ந்த வாழ்க்கை. இன்று எப்போது தான் உங்கள் நாக்கை அடக்கப் போறீங்களோ? என்று மனைவி கேட்ட காலம் மாறி மகள்கள் கேட்கும் நிலைக்கு வாழ்க்கை கொண்டு வந்து சேர்த்துள்ளது. 

மார்கழி மாதம் குளிர் பொறுத்து, சில சமயம் சுடுதண்ணீர், பல சமயம் குளிர்ந்த நீரில் குளித்து விட்டு நான்கு சந்துகள் தாண்டி இருந்த பெருமாள் கோவிலுக்கு ஓட்டமும் நடையுமாக அக்காக்களுடன் ஓடியுள்ளேன். பொழுது விடியாத நிலையில் இருட்டுக்குள் தடவி பயந்து ஓடி கோவிலை அடைந்து பூஜை முடிந்து பெற்ற வெண் பொங்கல், சுண்டல் சமாச்சாரத்தைச் சூடு பொறுக்க முடியாமல் தின்று முடிக்கும் போது கிடைத்த மகிழ்ச்சி அடுத்த நாளும் அதே கோவிலுக்குச் செல்ல வைத்தது.  இன்று கோவில்களில் கூடும் கூட்டமும், இதற்கென தங்களை தயார்படுத்திக் கொள்ளும் மனிதர்களும் எனக்கு வேடிக்கைப் பொருளாக மாறியுள்ளனர்.

வீட்டுக்கருகே இருந்த கோவில் குளக்கரையில் கூம்பு வடிவ ஒலி பெருக்கியில் அன்று பேசப் போகின்ற அரசியல்வாதியின் பழையைப் பேச்சை கேட்டுக் கொண்டே கடந்த போதும், இரவில் பாதித் தூக்கத்தில் தூக்கம் வராமல் புரண்டு படுத்த போது அறைகுறையாக அன்றைய அரசியல்வாதி பேசிக் கொண்டிருந்த பேச்சைக் கேட்டபடியே அவற்றை மறந்து போனதுண்டு. "இங்கே அரசியல் பேசாதீர்" என்ற வார்த்தைகள் அடங்கிய வாசகத்தை எந்த இடத்திலும் பார்க்க முடிவதில்லை. அதற்குப் பதிலாக 24 மணி நேரமும் ஒவ்வொரு இடத்திலும் தொலைக்காட்சிகள் அந்த வேலையைச் செய்து கொண்டிருக்கின்றது.  ஆனால் தீவிர அரசியல் கொள்கைகள் மாறி திருகுதாள அரசியல் அங்கீகாரம் பெற்று விட்டது.

றாம் வகுப்புப் படித்த போது படக்கதைகள் அடங்கிய புத்தகத்திற்காக அலைந்த பொழுதுகள், பத்திரிக்கைகளில் வந்த நடிகர் மற்றும் நடிகைகளில் கிசுகிசுகளைப் படிக்க அலைந்த தருணங்கள், விடுமுறை தினங்களில் அருகே இருந்த நூலகத்தில் குடியிருந்த நேரங்கள் எனக் கழித்த பொழுதுகள்.  ஆனால் இன்று வாரப்பத்திரிக்கைகள் தவிர்த்து பெரிய கட்டுரைகள் அனைத்தையும் டேப்லெட் கணினி வழியாகப் படிப்பது தான் வசதியாக உள்ளது. 

ரு நாள் கூடத் தவறாமல் சென்ற பள்ளிக்கூட வாழ்க்கை. பயம் கலந்த மரியாதையோடு ஆசிரியரைக் கண்டு ஒளிந்து திரிந்த வாழ்க்கை. கல்வி தான் நம் வாழ்க்கை. ஒழுக்கம் மட்டுமே நமக்கு உயர்வைத் தரும் என்ற அறிவுரைகள். கல்லூரி வந்த போதிலும் எதிர்காலம் குறித்த எவ்வித அவநம்பிக்கைகளையும் சுமக்காத நம்பிக்கைப் பொழுதுகள். இந்த உலகமே அழகானது என்று நினைத்து வாழ்ந்த காலங்கள்.  நாம் வாசித்த புத்தகங்களில் படித்த, பாதித்த சாதனையாளர்களைப் போல நாமும் ஒரு காலத்தில் சமூகத்தில் உயர்வான  நிலைக்கு வந்து விடுவோம் என்று நம்பிக்கை கொண்டிருந்த வாழ்க்கை என் அனைத்தும் கடந்த 25 ஆண்டு பயணத்தில் மாறியுள்ளதை இந்த மின் நூல் வழியாகப் பேசியுள்ளேன். 

ள்ளிக்கூடத்தில் மக்குப் பையனுக்கும் சராசரி மாணவனுக்கு இடையே உள்ள ஒரு இடத்தை ஆசிரியர்கள் எனக்குக் கொடுத்து இருந்தார்கள். காரணம் பாராட்டிவிட்டால் பாம்பு படம் எடுத்து ஆடி விடும் என்ற நம்பிக்கையில். 

"உன் அக்கா, அண்ணன் பெயரைக் கெடுப்பதற்காகவே நீ எங்களிடம் வந்து சேர்த்துள்ளாய்" என்ற பொதுப் பாராட்டு அவ்வப்போது கிடைக்கும். பத்தாம் வகுப்பு கணக்கு ஆசிரியர் முத்துச் சாமி வழங்கிய ஆசிர்வாதம் இன்னமும் என் நினைவில் உள்ளது. "இந்த வருடம் நீ தேர்ச்சி பெற மாட்டாய். கணக்கில் பத்து மதிப்பெண்கள் எடுத்தாலே ஆச்சரியம்" என்றார். அவரைப் பழிவாங்க வேண்டும் என்பதற்காகவே பத்தாம் வகுப்பில் நூற்றுக்கு 84 மதிப்பெண்கள் எடுத்தேன்.  தனிப்பட்ட வாழ்க்கையில் பணத்தை கையாளத் தெரியாதவனாக இன்னமும் இருப்பது கூடுதல் சிறப்பு.

னால் வாரந்தோறும் ஐம்பது லட்சத்தைக் கையாள வேண்டிய பொறுப்பை வாழ்க்கை எனக்கு வழங்கியுள்ளது. பணம் கைக்கு வந்த அடுத்த 24 மணி நேரத்திற்குள் மொத்த கணக்குகளை ஒப்படைத்து விடுவதால் "அவர் கணக்கு விசயத்தில் புலி" என்று பாராட்டும் அளவிற்கு நிறுவன நிர்வாக விசயங்களில் திறமையைக் காட்ட முடிகின்றது. எனக்குப் பின்னால் எவர் என் பதவியில் வந்து அமர்ந்தாலும் நான் உருவாக்கிக் கொடுத்த "வழிகாட்டலை"த்தான் பின்பற்ற வேண்டும் என்று நிர்வாகம் சொல்லுகின்ற அளவிற்கு ஒவ்வொன்றிலும் எளிமை மற்றும் நேர்மையை உருவாக்க வாழ்க்கை கற்றுத் தந்துள்ளது.

நகைமுரண் என்பது வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்த ஒன்று போல. 

மாற்றம் என்பது மட்டும் மாறாதது. மாற்றங்கள் தான் உங்களை வழி நடத்துகின்றது. மாற்றமே உங்களை உருவாக்குகின்றது. மாற்றத்தை உங்களால் உள்வாங்க முடியாத பட்சத்தில் தேங்கிக் கிடக்கும் குளத்தைப் போல உங்கள் வாழ்க்கை நாற்றம் எடுத்து விடும் என்று அர்த்தம். நான் மாறினேன். என்னை இந்தச் சமூகம் மாற்றியது. மாற்றத்தை உள் வாங்கினேன். தேவையானவற்றைத் தேவையான சமயத்தில் எடுத்துக் கொண்டேன். 

விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் குறுகிய வட்டத்திற்குள் நின்று கொண்டேயிருந்தால் இருட்டறையில் நின்று கொண்டு இந்த உலகத்தைப் பார்க்க விரும்புகின்றோம் என்று அர்த்தம். பல சமயம் திடீரென வெளிச்சம் நம் மீது பரவும் போது நம் வளர்த்துக் கொண்டுள்ள குறுகிய எண்ணங்கள், நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் நாடக வாழ்க்கையை மற்றவர்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டிவிடும். என்றாவது ஒரு நாள் மற்றவர்களின் பார்வைக்குப் படத்தான் செய்யும். 

வெளிப்படைத்தன்மை எல்லா இடத்திலும் தேவையில்லை என்றாலும் உங்கள் மனசு விடாமல் துரத்தும் கேள்விக்கு நீங்கள் பதில் சொல்லியே தானே ஆக வேண்டும்? நான் என்னையே கேள்வியாக்கிக் கொண்டதுண்டு. என்னையே கேலிப் பொருளாக மாற்றிக் கொண்டதும். மற்றவர்களின் கேலிகளைக் கவனித்ததுண்டு. மொத்தத்தில் ஒவ்வொரு நாளையும் பள்ளிக்கூடத் தினம் போலப் பார்ப்பதுண்டு. காரணம் இங்கே ஒவ்வொருவரும் நமக்கு ஆசிரியர்கள். நாம் மாணவர்களாக வாழும் பட்சத்தில். 

ணவு, ஆன்மீகம், அரசியல் இந்த மூன்றையும் பற்றி இந்த மின் நூலில் பேசியுள்ளேன். கடந்த 14 மாத மின் நூல் உலகில் என் முந்தைய ஆறு மின் நூல் வழியாக 66000+ நபர்களைச் சென்றடைந்துள்ளேன். "வாழ்க்கையில் இலக்கு தேவை" என்கிறார்கள். நிச்சயம் ஒரு லட்சம் என்ற இலக்கு நோக்கி இந்தப் பயணம் சென்று சேரும் என்ற நம்பிக்கை வந்துள்ளது. 

ந்த மின் நூலை நண்பர் ராஜராஜனுக்கு சமர்பித்துள்ளேன். அட்டைப்படம் உருவாக்கிக் கொடுத்த நண்பர் மனோஜ் மற்றும் என் மின் நூல்களுக்குச் சிறப்பான வகையில் ஒத்துழைப்பு கொடுத்துக் கொண்டிருக்கும் நண்பர் சீனிவாசன் அவர்களுக்கும் என் நன்றி.

ஏதோவொரு தருணத்தில், யாரோ ஒருவர், உலகின் ஏதோவொரு மூலையில் இருந்து கொண்டு என் எழுத்தை வாசித்துக் கொண்டிருப்பார் என்பதே யான் பெற்ற இன்பம்.

Sunday, May 05, 2013

சத்துணவகம்



காரைக்குடி உணவகம் என்ற பெயரில் பல பயன் உள்ள விபரங்களை எழுதிய போது அதிகப்படியான ஆதரவு கிடைத்தது.  

இடையில் அது போன்ற விசயங்களை எழுத வாய்பில்லை.  காரணம் நான் எழுதக்கூடிய விசயங்கள் நாங்கள் செய்து பார்த்தவைகளாக இருப்பதால் அதன் நம்பகத்தன்மை பொறுத்தே எழுத வேண்டும் என்று மனதில் வைத்திருந்தேன்.  

இப்போது அதற்கான ஒரு வாய்ப்பு மீண்டும் வந்துள்ளது.

சத்துமாவு குறித்து எழுத வேண்டும் என்று சில வாரங்களாக நினைத்துக் கொண்டிருந்ததை இன்று பகிர்ந்து கொள்கின்றேன்.

சமீப காலமாக உங்கள் குழந்தைகளின் ஆரோக்கியத்தை கவனிக்க வேண்டாமா? என்கிற தொனியில் ஏராளமான விளம்பரங்கள் வந்து கொண்டே இருக்கிறது.  

ஹார்லிக்ஸ் என்றால் எப்போதும் அதன் உள்ளே இருக்கும் அதே கோதுமை தான்.  

ஆனால் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் அந்த பாட்டிலின் வடிவமைப்பு, உள்ளே உள்ள கோதுமையின் நிறம், வெளியே ஒட்டப்படும் ஸ்டிக்கர், சுவைக்குச் சேர்க்கப்படும் ஃப்ளேவர் என்று மாறி மாறி விளம்பரங்களில் கவர்ச்சியாக காட்டப்படுவதோடு கூடுதலாக ஒரு தகவலும் அதே விளம்பரத்தில் வரும். இப்போது 20 சதவிகிதம் அதிக அளவோடு என்கிற ரீதியில் மக்களை வந்து தாக்கிக் கொண்டே இருக்கிறது. 

ஹார்லிக்ஸ் மட்டுமல்ல. 

பூஸ்ட், போர்ன்விட்டா, மால்ட்டோவா என்று தொடங்கி ஏராளமான பானங்களுக்குத் தேவைப்படும் அந்த குருணைப் பொருட்களுக்கு இன்று சந்தையில் சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கிறது.

ஒரு மருந்துக்கடையில் சென்று முன்னால் உள்ள அல்லது மேலே உள்ள கண்ணாடிக்கு பின்னால் அந்த வரிசைகளைப் பாருங்கள். குறைந்தபட்சம் 20 விதவிதமான டப்பாக்கள் உங்களை சுண்டியிழுக்கும்.  எதை வாங்குவது? என்று யோசிக்க வைக்கும்.  காரணம் இன்றைய நடுத்தர வர்க்கத்திற்கு தங்கள் குடும்பத்தினர் மேலுள்ள அக்கறை என்பதாக எடுத்துக் கொள்வோம்.  

ஆனால் இதற்குப் பெயர் அக்கறை அல்ல. அவலம்.  

பூஸ்ட்க்கு விளம்பரம் செய்த சச்சினும் சரி, ஹார்லிக்ஸ்க்கு ஒவ்வொரு சமயம் காட்டன் புடவைகள் கட்டிக்கொண்டு விளம்பரம் செய்யும் நடிகைகளும் கல்லா கட்டுவதற்காக பல லட்சக்கணக்கான திருவாளர் நடுத்தரவர்க்கம் தெரிந்தே ஏமாந்து கொண்டிருக்கும் கேணத்தனம் தான் இதற்குப் பின்னால் உள்ளது.  

வீட்டில் இரட்டையர் பிறந்த போது ஒரு விசயத்தில் உறுதியாக இருந்தேன்.  இந்த மாவு சமாச்சாரங்களோ, மண்டையில் மிளகாய் அரைக்கும் கருமாந்திரங்களையோ வாங்கி விடவே கூடாது என்பதில் அக்கறையோடு செயல்பட்ட காரணத்தால் அவர்கள் இப்போது எனக்கு கொடுத்துக் கொண்டிருக்கும் கும்மாங்குத்துக்களை நான் கைப்புள்ள கணக்காக இலவசமாக வாங்கிக் கொண்டிருக்கின்றேன். 

அன்று அவர்கள் உண்ட இயற்கை சார்ந்த வீட்டில் சுயமாய் செய்து கொடுத்த உணவுகளின் காரணத்தால் இன்று அவர்களின் ஒவ்வொரு அடியும் இடி போல என்னைத்தான் தாக்குகிறது. ஒல்லியான அளவான தேகத்தில் உறுதியான சதைப்பற்றில் எனக்கு நேருக்கு நேர் சவால் விடுகின்றார்கள். 

இடையிடையே ஆசைப்படுகின்றார்களே என்று ஒரு சில கருமாந்திரங்களை என் திட்டுக்களையும் மீறி மனைவி வாங்கிக் கொண்டு வந்தாலும் முறைத்துக் கொண்டு அமைதி காத்து விடுவேன்.  இதற்கு முடிவு கட்ட வேண்டும் என்று மனதில் இருந்தாலும் எப்படி எங்கிருந்து தொடங்குவது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்த போது ஒரு தடவை ஒரு மருந்துக்கடையில் சத்துமாவு என்று போட்டிருந்த பாக்கெட்டை பார்த்து விபரம் கேட்ட போது குறிப்பிட்ட தானிய வகைகளைச் சேர்த்து மாவாக மாற்றியது என்றார்கள்.  

கூழ் போல காய்ச்சி குடிக்கலாம் என்ற போது முயற்சித்துப் பார்க்கலாம் என்று வாங்கி வந்து முழுமையாக ஒரு வருடங்கள் முயற்சித்துப் பார்த்தோம்.  ஆனால் எனக்குத்தான் அது பயன் உள்ளதாக இருந்தது.  காலை நேரத்தில் அவசரமாக ஓடும் எனக்கு ஒரு டம்ளர் குடித்து விட்டு செல்ல வசதியாக இருந்தது.  

ஆனால் அதில் உள்ள குறைபாடுகளை எனக்கு இனம் காணத் தெரியவில்லை. காலப்போக்கில் அதன் பலன் பூஜ்யமாக இருந்த காரணத்தால் அதையும் விட்டுவிட நேர்ந்தது.

பள்ளியில் இருந்து வருபவர்களை சில நாட்கள் கவனித்துப் பார்த்த போது அந்த தூக்க முடியாத புத்தக மூட்டைகளை புஸ் புஸ் என்று மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க என்று வந்து சேர்வார்கள். நம் மேல் விழுவது போல வீட்டுக்குள் வருபவர்களை ஆரோக்கிய ரீதியாக மேலும் தயார் படுத்த வேண்டும் என்று மனதில் குறித்து வைத்திருந்தேன்.  

நமக்கும் அதே கதி தான்.  

உண்ணும் உணவுக்கு அப்பாற்பட்டு தேவைப்படும் சத்துக்கள் என்பது உடம்பில் சக்கை போல இருப்பதால் அன்றாட உணவில் சில மாறுதல்களை கொண்டு வந்தே ஆக வேண்டும் என்று தேடுதல் வேட்டை துவங்கியது.

அன்று மக்கள் தொலைக்காட்சியில் அல்மா ஹெர்பல் குறித்து ஒருவர் பேசிக் கொண்டிருந்ததை பார்த்த போது திருப்பூரில் உள்ள அவர்கள் கடையில் உள்ள பொருட்களை ஆராயும் பொருட்டு சென்ற எனக்கு அந்த கடையின் உரிமையாளராக இருந்த பெண்மணி கவர்ந்து விட்டார்.  

ஏறக்குறைய சமவயது உள்ளவர்.  ஒட்டன்சத்திரத்தில் இருந்து பலவிதமான ஏமாற்றங்களையும், பொருள் இழப்புகளையும் தாண்டி அல்மா ஹெர்பல் என்று தமிழ்நாடு, மலேசியா என்று இயங்கும் ஒரு நிறுவனத்தின் கிளை நிறுவனத்திற்கு உரிமை எடுத்து திருப்பூரில் தொடங்கியிருந்தார்.  

தொடர்ச்சியாக குடும்பத்திற்குத் தேவைப்படும் உருப்படியான பல சமாச்சாரங்கள் கிடைக்க, விலையும் இயல்பானதாக இருக்க மாதம் ஒரு முறை அங்கே செல்லும் பழக்கம் உருவானது.  அப்போது மனதில் இருந்த சத்து மாவு குறித்த எண்ணங்களை அவரிடம் பகிர்ந்து கொண்ட போது அவர்களின் நிறுவனமும் அதே போல சில வகையான சத்து மாவுகளை சந்தைப்படுத்திக் கொண்டிருப்பதை சொன்னார்கள். 

ஆனால் நான் அவர்களிடம் இதன் அடிப்படை விசயங்களை எனக்கு எழுதித்தர முடியுமா? என்று கேட்ட போது தயங்காமல் ஒரு காகிதத்தில் எழுதிக் கொடுத்தார்.

இன்று சந்தையில் ஏராளமான சத்துமாவு நிறுவனங்கள் உள்ளது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான சுவைகள்.  

தமிழ்நாடு அரசாங்கம் கூட சத்து மாவு குழந்தைகளுக்கு வழங்குகின்றார்கள். அதையும் நண்பர் மூலம் கேட்டு வாங்கிப் பார்த்தோம். நிச்சயமாக நன்றாகவே உள்ளது, அதற்குப் பிறகு தனியாளாக போட்டியின்று அரசாங்க பிரதிநிதிகளின் செல்லப்பிள்ளையாக அந்த நிறுவனத்தின் செயல்பாடுகளை ஒரு பத்திரிக்கையில் படித்த போது அந்த மாவு குறித்த தரத்தில் பயம் வந்து விட்டது

நீங்கள் கடையில் வாங்கும் மாவு உள்ள பாட்டிலின் மேல் உள்ளே உள்ள காகிதத்தில் உள்ளே உள்ள மாவில் எந்தந்த பொருட்கள் எந்தந்த அளவில் சேர்க்கப்பட்டுள்ளது என்பதையும் குறித்து இருப்பார்கள்.  

செயல்முறை விளக்கத்தையும் அத்துடன் கொடுப்பார்கள்.  ஆனால் நமக்குத் தேவைப்படும் உண்மையான தரம் அதில் இருக்குமா?  நாளொன்றுக்கு லட்சக்கணக்கான கிலோ தயார் செய்யும் ஒரு நிறுவனத்தில் அதுவும் குறிப்பாக நமது நாட்டில் தரம் சார்ந்த அக்கறையில் எந்த அளவுக்கு ஈடுபாட்டுடன் இருப்பார்கள் என்பதெல்லாம் மில்லியன் டாலர் கேள்வி?

கடந்த ஆறு மாதமாக வீட்டில் நாங்கள் செய்து கொண்டிருக்கும் இந்த சத்து மாவு விசயங்களை இங்கே எழுதி வைக்க விரும்புகின்றேன்.  

உடம்பில் அவசியம் தேவைப்படும் எதிர்ப்பு சக்தியை இழந்து கொண்டிருப்பவர்களுக்கும், குழந்தைகளின் உடல் வளர்ச்சியில் அக்கறை கொண்டவர்களுக்கும் இது பயன்படக்கூடும்.  இது என்ன மாதிரியான பலன் தரும் என்று கேட்பவர்களுக்கு, ஒரு முறை செய்து குடித்துப் பாருங்கள் என்பது தான் என் பதிலாக இருக்கும்.  காரணம் திட்டமிட்ட பரிபூரண உணவு என்ற ஒரு வார்த்தை தான் இதற்கு பொருத்தமாக இருக்கும்.

முந்திரி 100 கிராம்
பாதாம் 100 கிராம்
பிஸ்தா 100 கிராம்
கோதுமை கால் கிலோ
ராகி கால் கிலோ
கம்பு கால் கிலோ
சோளம் கால் கிலோ
சிவப்பு அரிசி கால் கிலோ (கடைகளில் தனியாக கிடைக்கின்றது)
பாசிப்பயறு கால் கிலோ
நிலக்கடலை கால் கிலோ
பொட்டுக்கடலை கால் கிலோ
சிவப்பு பீன்ஸ் கால் கிலோ
சோயா கால் கிலோ

நீங்கள் செய்ய வேண்டியது 

ஒவ்வொன்றையும் தனித்தனியாக வறுத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.  வறுக்கும் அளவில் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான தன்மை உள்ளது என்பதை கவனத்தில் வைத்திருக்க வேண்டும். கருப்பு பிடித்து விடக்கூடாது.  

முந்திரி போன்றவற்றை லேசாக வறுத்தாலே போதுமானது.  சோளம் போன்றவற்றை சற்று நன்றாக வறுக்க வேண்டும்.

நன்றாக உலர வைத்துவிட்டு உங்கள் வீட்டுக்கருகே உள்ள மாவுக்கென்று தனியாக அரைக்கும் எந்திரத்தில் சென்று மாவாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.  அவசர கதியில் மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்து விடலாம் என்று யோசித்தால் அந்த அளவுக்கு மாவு போல வருமா? என்பது கேள்விக்குறியே.  

நாங்கள் முயற்சித்துப் பார்த்தோம். சரியாக வரவில்லை.  

ஆனால் மாவு அரைக்கும் எந்திரம் வைத்திருப்பவர்களிடம் போகும் முன் கூட்டம் இல்லாத சமயத்தில் சென்றால் தான் வசதியாக இருக்கும்.  அவர்கள் அவசர கதியில் போட்டு குருணையாக தந்து விடவும், ஏற்கனவே அரைத்த விசயங்களை சுத்தம் செய்யாமல் வைத்திருக்கவும் வாய்ப்பு உண்டு.  பொறுமை அவசியம் தேவை.

மேலே சொன்ன அளவில் ஏறக்குறைய 450 ரூபாய் அளவுக்கு செலவு வரும் (தற்போது சந்தையில் உள்ள எந்த பாட்டிலின் விலையை எடுத்துக் கொண்டாலும் இந்த தொகையில் இரண்டு பாட்டில்கள் தான் வாங்க முடியும்.  அந்த இரண்டு பாட்டிலின் உள்ளே உள்ள வஸ்துகள் அதிகபட்சம் மொத்தமாக 400 கிராம் இருக்கக்கூடும். 

காரணம் தற்போது சிப்ஸ் முதல் எந்த பொருளாக இருந்தால் அடைக்கப்பட்ட பையில் பாதி காற்று பாதி பொருட்கள் என்கிற ரீதியில் தான் உள்ளது.  ஏமாற நாம் தயாராக இருப்பதால் அவர்களை எந்த விதங்களில் குறை சொல்லவே முடியாது.) 

இந்த மாவை நன்றாக உலர வைத்து தனியாக சுத்தமான பாட்டிலில் வைத்துக் கொண்டு விடவும்.  வீட்டில் காபி டீ போன்றவற்றை நிறுத்திவிட்டு அந்த சமயத்தில் இதை பருகலாம்.  காபி, டீ பைத்தியமாக இருந்த என்னை மாற்றிய பெருமைக்கு வீட்டில் உள்ள நிதி மந்திரிக்கு பத்ம வீபூஷன் விருது வழங்கலாம் என்று மனதில் வைத்துள்ளேன்.

ஒரு பெரிய ஸ்பூன் அளவுக்கு மாவு எடுத்துக் கொண்டு ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு நன்றாக கலக்கவும். 

மாவு கட்டியாக இல்லாமல் கலக்கி விட்டு அதில் நாட்டுச்சர்க்கரை (எக்காரணம் கொண்டும் ஜீனியை எந்த வடிவத்திலும் உணவில் சேர்க்காமல் இருப்பது பெரும் புண்ணியம்.  முக்கால்வாசி நோய்களுக்கும், எதிர்ப்பு சக்தி குறைவதற்கும் முக்கிய காரணம் இந்த வெள்ளை எமன் தான் என்பதை எப்போதும் கவனத்தில் வைத்திருக்கவும்)  அல்லது கருப்பட்டி என்று உங்களுக்கு பிடித்ததை அதில் போட்டு கலந்து அதற்குப் பிறகு அடுப்பில் வைத்து கூழாக வரும் வரை கிண்டிக் கொண்டே இருக்க வேண்டும்.  கவனமாக செயல்படாவிட்டால் கட்டியாக நின்று போய்விடும்.

பக்குவமாக தண்ணீர் ஓரளவிற்கு வற்றியதும், கூழ் பக்குவத்தில் இறக்கி சூடு ஆறியதும் குடிக்கலாம்.

குடித்துப் பாருங்கள்.  கும்மாளமிடும் மனம். 

ஒரு மாதமாவது தொடர்ந்து குடித்து வரும் போது உங்கள் உடலில் நிகழ்ந்த மாற்றத்தை நீங்கள் உணரக்கூடும்.  

ஒரு வாரத்தில் கிடைத்த பலனைப் பெற்றவர்கள் கட்டாயமாக ராயல்டியை எனக்கு அனுப்பி வைக்கவும்.

தொடர்புடைய பதிவுகள்


Sunday, December 23, 2012

காரைக்குடி உணவகம் - பசியா? ருசியா?


சாலம்ன் பாப்பையா, திண்டுக்கல் லியோனி பட்டிமன்றத் தலைப்பு போல இருக்குதே என்று யோசிக்கின்றீர்களா?

வேற என்ன செய்வது?  

உண்ண வழியில்லாமல் ஒரு பெருங்கூட்டம் பெருகிக் கொண்டே இருக்கின்றது. அடுத்து என்ன மாதிரி வித்தியாசமான சுவையில் உண்ணலாம் என்று அலையும் கூட்டமும் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே தானே இருக்கிறது.

பழைய சாதம். தொட்டுக்க கொஞசம் முதல் நாள் வைத்த பழைய புளிக்குழம்பு? ரெண்டு வெங்காயம். எனக்கு இது போதும்.

சோறு தவிர வேறெந்த கருமாந்திரமும் தேவையில்லை. சோறு தான் வேண்டும்.  அதை சாப்பிட்டால் எனக்கு சாப்பாடு சாப்பிட்ட திருப்தி?

அய்யோ? இந்த சோறு சாப்பிடுபவர்களைப் பார்த்தாலே எனக்கு எரிச்சலா வரும். விதவிதமான டிபன் வகைகள் தான் எனக்கு எப்போதும் விருப்பம்?

விதவிதமான புதிய வகைகளை சுவைத்துப் பார்ப்பது எனக்கு பிடிக்கும்? வர வர பீட்ஸா,பர்கர் கூட பிடிக்கமாட்டுது. 

அடப் போங்கப்பா சாப்பாடு என்றால் அசைவம் தான் உண்மையான சாப்பாடு. ஒரே ஒரு கருவாடு. ஒரு தட்டு சாப்பிட்டு விடுவேன். எனக்கு சிக்கன், மட்டன் இருந்தா ஒரு கட்டு கட்டி விடுவேன். ஒரு முட்டை கூட சாப்பிட்டுற சாப்பாட்டில் இல்லைன்னா அது என்னப்பா சாப்பாடு?

இந்த ஐந்துக்குள் தானே நாமே ஏதோவொரு இடத்தில் ஒளிந்து தின்று கொண்டிருக்கின்றோம்.

இந்த பஞ்சபாண்டவர்களைப் போல இவங்க முப்பாட்டனும் நான்கில் இருந்து தான் தொடங்குகின்றார்கள். .

இனிப்பு, கசப்பு, துவர்ப்பு, புளிப்பு. 

ஆனாலும் இதன் நீட்சி அதிகம் என்றாலும் இப்போது இதனை மட்டும் எடுத்துக் கொள்வோம்.

கண்மாய் மீனில் கருப்பட்டி போட்டு சமைத்தால் நன்றாகவா இருக்கும்?

அல்வாவை அயிரை மீன் பக்குவத்தில் செய்ய முடியுமா?

புளியோதரையில் அதிகமாக உப்பை அள்ளிக் கொட்டினால்  உப்போதரை என்று சொல்ல மாட்டார்கள்.  செய்தவர் அடிவாங்கி விடுவார். .

சொல்லிக் கொண்டே போகலாம்.  காரணம் நாம் விரும்பும் ருசி தான் நமக்கு முதலில் பசியைத் தூண்டுகின்றது.   குழப்பமாக இருக்கின்றதா? 

இயல்பாக உடம்பில் நேரம் வந்ததும் பசி எடுப்பது என்பது வேறு? 

ருசி நம்மை தூண்டுவது என்பது வேறு.  

திடீரென்று சுவராஸ்சியம் இல்லாமல் ஒரு கிராமத்துக் கடையில் வேண்டா வெறுப்பாக சாப்பிடும் சூழ்நிலை உருவாகின்றது என்று வைத்துக் கொள்ளுங்க.  இயல்பான பசிக்காக உள்ளே நுழைந்து இருப்பீங்க.  வேறு எந்த கடைகளும் அந்த சமயத்தில் கண்களுக்கு தென்பட்டு இருக்காது. ஆனால் அவங்க கொடுத்த கோழிக் குழம்பை பார்த்து சொக்கிப் போய்  என் சொத்தை வேண்டுமானாலும் எழுதித் தருகின்றேன். இன்னோரு கரண்டி ஊத்துங்க என்று உறிஞ்சத் தோன்றுமே? அது தான் ருசியின் மகிமை.

கூழாக மாற்றுங்க.

இன்று ஒவ்வொருவரும் ருசியாக சாப்பிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டு எத்தனையோ விதமான உணவுகளை தினந்தோறும் தினறு பார்க்க முயற்சித்துக் கொண்டே தான் இருக்கின்றோம். ஆனால் எப்படி சாப்பாடுகின்றோம் என்பது தான் பெரிய கேள்விக்குறி?

சாப்பிடுவதைப் பற்றி இப்போது பேச வேண்டும்.

ஒரு கையில் அப்படியே எடுத்து ஒரு உருண்டை உருட்டி அப்படியே வாயில் திணிப்பது ஒரு வகை.  வாய் என்பது ஒரு சிறிய அளவு உள்ள பகுதி. ஆனால் அதன் கொள்ளவுக்கு மேல் திணிக்கும் போது பாதிக்கும் மேலே அரைக்காமலேயே அப்படியே உள்ளே போய்விடுகின்றது.  வயிறு என்பது செரிக்கத்தானே இருக்கிறது என்பது நீங்க சொல்வது என் காதில் விழத்தான் செய்கின்றது.  ஆனால் வயிறு என்பதன் பணி வேறு.

சாப்பிடுவதை முறைப்படுத்தி வைத்திருக்கிறார்கள். 

ஒவ்வொரு விரலின் நுனியில் தொடங்கும் முதல் கோடு வரைக்கும் தான் சாப்பாட்டை எடுக்க வேண்டுமாம். அதாவது நான்கு விரல்களும் சோர்ந்த அந்த அளவுக்கு எடுக்கும் போது தான் கிடைக்கும் அளவு தான் வாயில் இயல்பாக பற்கள் கடித்து நாக்கு சுழற்றி அது கூழாக மாற்றி உள்ளே இறங்க உதவும். அளவுக்கு மீறி எடுத்து வாயில் திணிக்கும் போது தான் பாதி கடித்தும் கடிக்காமலும் உள்ளே போக ஒவ்வொரு பஞ்சாயத்தின் தொடக்கமும் இதில் இருந்து தான் தொடங்குகின்றது.

செரிக்காமல் வயிற்றில் தங்குவது, செரிமாணத்தின் அளவு தெரியாமல் சாப்பிடுவது, எப்போது சாப்பிட வேண்டுமோ அதை மீறி கண்ட நேரத்தில் சாப்பிடுவது, ஓய்வு கொடுத்தே ஆக வேண்டிய நேரத்தில் உள்ளே தள்ளிக் கொண்டேயிருப்பது...............

இத்தனையும் செய்து விட்டு குத்துதே குடையுதே என்றால் அதற்கு என்ன தான் தீர்வு? 

நோய்களின் ஆரம்பம் ஒவ்வொருவரின் வயிற்றில் இருந்து தான் தொடங்குகின்றது. அந்த வயிற்றை சரியாக கவனிக்காமல் வைத்திருக்கும் போது வயிற்றுப் போக்கு முதல் வெளியே தள்ளி விடுப்பா என்று சொல்லாமலேயே செய்யும் வாந்தி வரைக்கும் நம்மை வரவேற்கின்றது.

மைதா மாவு போன்ற சமாச்சாரங்களை வழிக்கு கொண்டு வர ஈஸ்ட் என்ற பொருளைச் சேர்ப்பதை கவனித்து இருப்பீர்கள் தானே? 

காரணம் நொதித்தல் என்ற நிலை நடக்க வேண்டும்.  அப்புறம் வகுத்தல் கூட்டல் பெருக்கல் போன்ற சமன்பாடுகள் நடக்கும். அதன் பிறகே நாம் விரும்பிய பலகாரத்தைச் செய்ய முடியும். மாவு நொதிக்கவில்லை என்றால் நாம் நொந்து போய் அந்த மாவை வேடிக்கைப் பார்க்க மட்டுமே உதவும்.  

அதைப் போலத்தான் நம் வாயில் உள்ள எச்சில் என்ற உமிழ்நீர் என்ற அற்புத பணியைச் செய்கின்றது.  காறி காறி துப்பி அதை வீணாக்கும் மனிதர்களுக்கு அதன் அருமை புரியப்போவதில்லை. 

சுவை என்பது நாக்கு மட்டுமே உணரும். உள்நாக்கில் தொடங்கும் அந்த உணவின் கூழ் என்பது வெறும் சாறு தான். அதற்குப் பிறகு அதன் சுவையை எந்த உறுப்பும் உணர வேண்டிய அவசியமில்லை.  

ஆனால் இந்த நாக்கு வரைக்கும் நடக்கும் பயணத்திற்குத்தான் நான் நாயாய் பேயாய் அலைந்து அலைந்து கண்ட கண்ட இடங்களில் உள்ள கருமாந்திரங்கள் வாங்கி வாயில் கொட்டிக் கொண்டேயிருக்கின்றோம். 

ஆனால் கூழாக மாறி உள்ளே அளவோடு உள்ளே செல்லும் எந்த உணவும் உங்களுக்கு ஆரோக்கியத்தை தருகின்றதோ இல்லையோ அது அவஸ்த்தையை தராது. 

சத்துக்கு உணவா? சக்திக்கு உணவா? இல்லை சாவதற்குள் அத்தனை சுவையையும் தின்று பார்க்கத்தான் இந்த உணவா? என்று எத்தனை எண்ணங்கள் இருந்தாலும் ருசியோடு அத்தனை பசியையும் போக்குவதோடு நன்றாக வாயில் அரைத்து அதை கூழாக்கி உள்ளே அனுப்புங்க.  ஆயுள் கெட்டி என்று அர்த்தம். நோய்கள் வர யோசிக்கும்.

Sunday, December 16, 2012

காரைக்குடி உணவகம் - ருசியா சாப்பிட்டு பழகுங்க


எனக்கு ருசியா சாப்பிடத்தான் பிடிக்குமென்பவர்கள் மட்டும் இந்த பக்கம் வந்து நில்லுங்க?

என்ன எல்லோருமே மொத்தமாக வந்தாச்சா? 

அப்ப எல்லாருமே என்னைப் போல தீனி திங்ற குரூப் தான் போல. சரித்தான்.  

இந்த நாக்கு ருசிக்கு அலைந்து அலைந்து பர்ஸ் கனம் குறைந்தாலும் கண்ட இடத்தில் சாப்பிட்டு வயிறு கதறினாலும் பாழும் மனசு கேட்டால் தானே என்கிறார்களா?  

வாங்க இன்றைய ருசியைப் பற்றி ருசிகரமாக பேசுவோம். .

தொடக்கத்தில் காட்டில் கிடைத்ததை, கண்டதை பிடித்து பச்சையாகவே தின்றார்கள். பிறகு சுட்டுத்தின்றார்கள், அப்புறம் வேக வைத்தார்கள். கடைசியாக பல கலவைகளை சேர்க்கத் தொடங்கிய போது தான் ருசி என்ற வார்த்தைக்கு அர்த்தம் கண்டு பிடித்து அதன் பின்னே அலைய ஆரம்பித்தார்கள். 

இன்று ஒரு கோழி தான். ஆனால் இந்த கோழியில் ஆயிரெத்தெட்டு சுவை.  

ஆனால் இத்தனை ஆயிரம் வருடங்கள் கழித்து நாகரிகம் வளர்ந்து நாம் பலவகையில் முன்னேறி விட்டோம் என்று சொல்லிவிட்டு மறுபடியும் காய்கறிகளை பச்சையாக சாப்பிடுங்க. அது தான் சத்தானது என்கிற நிலைக்கு வந்து விட்டோம். 

ஆனால் நாம் தான் எம்பூட்டு மாறிவிட்டோம் கித்தாய்ப்பாய் அலைகின்றோம்.

ருசி உணவா? இல்லை பசிக்காக உணவா என்று இன்று பட்டிமன்றம் முதல் பாட்டுமன்றம் வரை நடந்து கொண்டேதான் இருக்கின்றது. ருசியை தொடர்ந்து விரும்பினால் கூடிய சீக்கிரம் உனக்கு பசியே எடுக்காத அளவுக்கு குடல் கெட்டு விடும் என்று பயமுறுத்துகிறார்கள். 

ஒரு தட்டு நிறைய கஞ்சி. ஒரே ஒரு பச்சை மிளகாய். 

வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள். அவர்களின் கையை தொட்டுப் பார்த்தால் இரும்பு போல இருக்கும். எப்படி?

நோய்களுக்கு காரணம் இந்த ருசியா?

முதலில் நோய்க்கு காரணம் மனம். 

குழப்பமாக இருக்கின்றதா?

சாப்பாட்டில் நாம் பார்க்கும் சோறு, குழம்பு, காய், பொரியல், கூட்டு, மோர், ஊறுகாய் போல நம் பழக்கவழக்கங்களில் உள்ள விசயங்கள் எந்த அளவுக்கு நம்மை பாதிக்கின்றது? நாம் சாகின்ற வரைக்கும் விரும்பி சாப்பிட நினைக்கும் அளவை எப்படி குறைக்கின்றது என்பதை பார்க்கலாம்.

இப்போதைய வாழ்க்கையில் சோறு தான் கவலை. 

எல்லோருமே இதைத்தான் விரும்பி சாப்பிடுகின்றார்கள்.  இன்று கவலை இல்லாத மனிதனே இல்லை.  அடுத்த வேளை சோற்றுக்கு அலைபவன் முதல் ஆயிரம் கோடிக்கு சொத்து சேர்த்து வைத்து விட்டு அதை காப்பாற்ற, அதற்கு மேலும் சாம்பாரிக்க அலைவர்கள் வரைக்கும் இந்த கவலை தான் படாய் படுத்துகின்றது.  

இந்த கவலை எண்ணங்கள தான் முதலில் வயிற்றை தாக்குகின்றது.  

ஒரு விசயத்தைக் குறித்து நீண்ட நேரம் கவலைப்பட்டுக் கொண்டே இருந்து பாருங்கள். உங்கள்  உடம்பில் மாறுதல்களை உங்களால் உணர முடியும். இப்போது சங்கடப்பட்டாலும் குடி சந்தோஷம் வந்தாலும் குடி என்பது போல எதற்குத் தான் கவலைப்படுவது என்கிற விவஸ்த்தையே இல்லாமல் போய்விட்டது. ஆனால் கவலைப்பட்டு ஒன்றும் ஆகப்போவதில்லை என்று ஒவ்வொருவரும் தெரிந்து வைத்திருந்த போதிலும் கவலைப்படுகின்றார்கள் என்பது தான் ஆச்சரியம். 

கவலைப்படுவதை விட அதை கணக்காக பிரித்துப் பார்க்க கற்றுக் கொள்ளுங்க. 

சிலசமயம் உடனடி தீர்வு கிடைக்கும். சிலவற்றுக்கு பொறுமையாகத்தான் இருக்க வேண்டியிருக்கும். புள்ளைங்க படிக்க மாட்டேன் என்கிறது என்று கவலைப்படுவதை விட அந்த குழந்தை ஆர்வமாக படிக்க என்ன தடை? என்பதை உணர்ந்தாலே பாதி கவலைகளுக்கு தீர்வு கிடைத்து விடும். நாம் டிவி பார்க்கனும். ஆனால் பிள்ளைகள் படிக்கனும் என்றால் ஆயுள் முழுக்க இது கவலையாகத்தான் இருக்கும்.

கவலைகள் நம்மை என்ன செய்யும்? எங்கே அழைத்துச் செல்லும்? 

வயிறு பிசைகின்றதே என்பது போல தொடங்கும். வயிறு உருள்கின்றதே என்பதாக மாறும்.  அது தொடர்ந்து கொண்டே இருந்தால் வயிற்றுக்குள் அமிலம் சுரக்கும். அது வயிற்றுப் புண்ணாக மாறும். இரத்தம் குதியாட்டம் போட்டு பங்காளிங்களா வாங்க வாங்க என்று உடம்பில் உள்ள உறவினர்கள் எல்லாருக்கும் அழைப்பு அனுப்ப அடுத்தடுத்து கடிதாசி போடாமலேயே செய்திகள் கடத்தப்படும்.    கல்லீரல், மண்ணீரல், கனையம் என்று தொடங்கிய இந்த கடிதாசி பயணம் கடைசியில் நுரையீரல் போய்ச் சென்று ஹலோ ஹலோ சுகமா? என்று கேட்கும். 

கடைசியில் இருதயம் வரைக்கும் போய்ச சேர்ந்து வாங்க பழகலாம் என்று சேர்ந்து ஆஞ்சியோகிராம் என்ற காதலியை அறிமுகப்படுத்தும். 

அது அலுத்துப் போனவுடன் தேசிய நெடுஞ்சாலை அதாங்க பை பாஸ் பயணத்தில் கொண்டு போய் விடும். . 

நேத்து தான் பார்த்து விட்டு வந்தேன்.  காலையிலே செத்துட்டாருன்னு வந்து சொல்றாங்கப்பா என்கிற சாவுச் செய்திகளை இப்போது சர்வசாதரணமாக கேட்க காரணமே இந்த திருவாளர் கவலை தான்.   

காரணம் அவருக்குள்ளே எத்தனை பிரச்சனைகள்? எத்தனை கவலைகள்?அணிவகுத்து நின்றதோ? எத்தனை நாட்கள் உள்ளே வைத்துக் கொண்டு தடுமாறினாரோ? 

எவருக்குத் தெரியும். தாங்க முடியாத போது இறுதிப் பயணத்திற்கு அழைப்பு வந்துவிடுகின்றது.

உணவு என்பது உயிர்வாழ்வதற்கு மட்டுமல்ல. அது உங்களை மகிழ்ச்சியடைய வைக்க, உங்கள் வாழ்க்கையை திருப்தி படுத்த, திரும்ப பெற முடியாத நேரங்களை நாம் அனுபவித்து வாழ்கின்றோம் என்பதை உறுதிப்படுத்த என்று இது போன்ற ஆயிரம் வழிகள் மூலம் நாம் நம் வாழ்க்கை அனுபவிக்க முடியும். 

அய்யோ இதைச் சாப்பிட்டால் ஒத்துக்காது.  அந்தப் பக்கமே போகக்கூடாது என்று சொல்லிக் கொண்டே ஏக்கத்தை சுமந்து கொண்டேயிருப்பவர்களின் வாழ்க்கையைப் பாருங்க.  

அனுபவிக்க முடியாத வாழ்க்கையில் ஆயிரத்தெட்டு நரக எண்ணங்களை சுமந்து கொண்டு தானும் வாழாமல் அடுத்தவரையும் வாழ விடாமல் தான் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.

நான் வாழ்ந்த தொடக்க 20 வருட கிராமத்தில் கோழி என்பதை பார்த்ததே இல்லை. அப்பாவுக்கு பிடிக்காது. திருவிழா சமயங்களில் தான் உள்ளே திரியும் கோழிகள் குழம்பாக மாறும்.  ஆனால் ஆடும் கடல் உணவில் உள்ள அத்தனை சமாச்சாரங்கயையும் வகைதொகையில்லாமல் ரவுண்டு கட்டி அடித்தேன். தீனி என்றால் கொஞ்சநஞ்சமல்ல. குழம்பு என்றால் ரெண்டு தடவை. எலும்புக் குழம்பு என்றால் அதுவும் ரெண்டு தடவை. தெறக்கி வைத்த கறியை தெவிட்டாமல் தினற் அந்த காலத்தின் சுவை இன்னமும் நெஞ்சில் இருக்கிறது.

அடுத்து வந்த பத்தாண்டுகளில் முழுக்கோழியை நானே செய்து ஒரு நாளில் ஒரே மூச்சில் அப்படியே விழுங்க முடிந்தது. திருப்பூருக்குள் இருக்கும் அத்தனை அசைவ உணவக வளர்ச்சியிலும் அய்யாவின் பங்களிப்பும் இருந்தது. 

அடுத்த பத்தாண்டில் எல்லாவற்றையும் பொட்டி கட்டி வைத்து விட்டு புள்ளப்பூச்சி போல மாற்றிக் கொள்ளவும் முடிந்தது. தற்போது குழந்தைகள் சுவைக்காக தோன்றும் போது அவர்களுக்கு ஒவ்வொன்றாக அறிமுகம் செய்து வைக்கின்றேன்.  

ஆசையை அளவு கடந்து அனுபவித்து விட்டு வெளியே வந்து விட வேண்டும்.  அனுபவிக்க தெரிவது போல அடக்கத் தெரியவும் வேண்டும். 

அவசரம் இல்லாத நேரத்தில் இந்த தளத்தின் உள்ளே செல்லுங்க.  


மருத்துவ உலகில் இவரைத் தெரியாதவர்கள் எவருமே இருக்க மாட்டார்கள். ஆனால் இவரை முட்டாள் என்று அழைத்தார்கள்.இதன் காரணமாகவே முட்டாள் எப்படி மருத்துவத்தை சொல்லிக் கொடுக்க முடியும் என்பதை சேவை போல செய்து கொண்டிருக்கிறார். 

காரணம் மருத்துவம் என்பது மக்களுக்கு உதவக்கூடியதாக இருக்க வேண்டும். அது மனிதர்களிடம் கொள்ளையடிக்கத் தான் இருக்கின்றது என்பதை சொல்ல மருத்துவ உலகில் ஏராளமான எதிர்ப்புகள் தொடங்கியது. ஆங்கில மருத்துவத்தை விட்டு வெளியே வந்தார். இயற்கை மருத்துவம், அக்குபஞ்சர் என்று ஒவ்வொன்றாக கடந்து நோய்களுக்கு அடிப்படைக் காரணமே மனம் தான் என்று மருந்தில்லா மருத்துவம், இறைவழி மருத்துவம் என்று மக்களுக்கு தன் பாணியில் புரிய வைத்துக் கொண்டிருக்கின்றார். .

பிறப்பால் இஸ்லாமியராக பிறந்தாலும் இன்று மதங்களைத் தாண்டி வந்து சமூகத்திற்காகவே உழைக்கும் மகான் போல முடிந்தவரைக்கும் இந்த மருத்துவம் குறித்து, ஆங்கில மருத்துவத்திற்குப் பின்னால் உள்ள பித்தலாட்டங்களைப்பற்றி பேசி, எழுதி, கூட்டம் நடத்தி வருகின்றார். இவர் எழுதியுள்ள புத்தகங்களை வாசித்துப் பார்த்தேன்.  ஒவ்வொரு நோயும் எப்படி உருவாகின்றது என்பது முதல் படிப்படியாக அவர் நமக்கு புரிய வைப்பதை நீங்கள் வாசித்துப் பார்த்தால் தான் அந்த அனுபவத்தை உணர முடியும். இவரின் வலைதளம் மூலம் தொடர்பு கொள்ளலாம்.கோவையில் தொடர்ச்சியாக கூட்டம் நடக்கின்றது.. 

குறிப்பாக மனம் சார்ந்த விசயங்கள் எப்படி மனிதர்களை மாற்றுகின்றது. நோய்களை எப்படி உருவாக்குகின்றது என்பதை இந்த காணொளி காட்சிகள் மூலம் விளக்குகின்றார். முக்கியமாக நம்மிடம் உள்ள பழக்கவழக்கங்கள் தான் உருவாகும் நோய்களுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது என்கிறார்.

அடுத்த ஒரு வாரத்தில் இவரின் காணொளி காட்சிகளை ஒவ்வொன்றாக பார்த்து வந்தால் உங்கள் வாழ்க்கை குறித்த உண்மையான புரிதல்கள் கிடைக்கக்கூடும்.   உங்களுக்கு கிடைக்கும் நம்பகத் தன்மை உங்களை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும்.       

என்ன பிடிக்குதோ சாப்பிடலாம்.  ஆனால் உங்கள் மனம் விரும்பும் உணவாக இருக்க வேண்டும்.  கலவை சரி இல்லை என்றால் வரும் எச்சரிக்கையை உணர்ந்து கொள்ள வேண்டும்.  மீறுதல் கூடாது. உணர்ச்சி குவியலாய் இருப்பவர்களின் வாழ்க்கை குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் மாறவில்லை என்றால் அவர்களின் அத்தனை எழுச்சியும் படுத்து விடும் என்று அர்த்தம். 

ருசி மட்டுமே வாழ்க்கை என்று பார்த்து சாப்பிட்டவர்களின் வாழ்க்கை பசியின் அருமையை உணராது.  

பசித்த பின் உண. எப்போதும் பசியோடு இரு என்பதை அன்று முதல் இன்று முதல் சொல்லியிருப்பதன் காரணமே குடல் என்பது ஒரு சின்ன சந்து.  பத்து பேர் நிற்கினற இடத்தில் நூறு பேரை கொண்டு போய் அடைத்தால் என்ன ஆகும்?. 

கப்பு வாடை தூக்கத்தானே செய்யும்.  கடைசியில் நம்மை நான்கு பேர்கள் தூக்கிக் கொண்டு செல்லத்தான் உதவும். 

சாப்பிடுங்க. சாப்பிடுங்க. சாப்பிட்டுக் கொண்டேயிருங்க.  இரண்டு பேர் போய் உணவகத்தில் 500 ரூபாய் கொடுத்து அவர்கள் கொடுக்கும் கொஞ்சூண்டு ருசியை தின்று விட்டு ஏக்கத்தோடு வருவதை விட அந்த காசுக்கு வீட்டில் சமைத்து சாப்பிடும் போது வாழ்வில் என்ன மாறுதல் உருவாகும்?.

ருசியான அளவில்லா சாப்பாட்டுடன் அருமை மனைவியுடன் காதலிக்கவும் நேரம் கிடைக்கும். சமையலின் போது தக்காளி வெங்காயத்தை நறுக்கிக் கொடுத்து நானும் உதவுகின்றேன் என்று சொல்லி நைஸ் செய்வது எப்படின்னு சொல்லித் தரவும் வேண்டுமோ?

நான் எழுதும் அரசியல் பதிவுகளுக்குத்தான் ருசியான சாப்பாடு போல மக்கள் அதிக அளவு உள்ளே வருவார்கள். ஆனால் இந்த காரைக்குடி உணவகத்திற்கு ஞாயிறு அன்று வலைதளங்களில் கூட்டம் குறைவாக இருக்கும் என்ற பொது கருத்தையும் மீறி மக்கள் கொடுத்த ஆதரவு வியக்க வைக்கின்றது. 

ஆக மொத்தம் நாம் எல்லாருமே சாப்பாடு ராமனுங்க தானே.? 

ஒவ்வொரு பதிவும் குறைந்தபச்டம் 1500 பேர்களுக்கு சென்றடைகின்றது என்பதை விட சென்ற வாரம் எழுதிய இஞ்சித்தேன் பலரின் வாழ்க்கையில் அறிமுகமாகி நாங்களும் பின்பற்ற தொடங்கி விட்டோம் என்று அழைத்துச் சொன்ன போது எழுதியதன் திருப்தி கிடைத்தது.  நன்றி நண்பர்களே. 

நல்லாச் சாப்பிடுங்க. ருசியா சாப்பிடுங்க. 

ஆனால் வயிற்றில் எதையும் தங்க விடாதீங்க.  

தங்கினால் அந்த பக்கம் சென்று விடாதீங்க. 

அடுத்த ஞாயிறு சந்திப்போம்..  

Sunday, December 09, 2012

காரைக்குடி உணவகம் - அளவில்லா சாப்பாடு



எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடனும். 
எப்பொழுது வேண்டுமானலும் சாப்பிடனும். 
எல்லாவ்ற்றையும் சாப்பிடனும். 

ஆனால் ஆரோக்கியத்தில் குறையேதும் வந்து விடக்கூடாது.

இதுதானே நாம் அனைவருக்கும் இருக்கும் ஆசை?. 

ஆனால் எதார்த்தம் என்பது எல்லா இடங்களிலும் தலைகீழாகத்தானே இருந்து தொலைக்கின்றது.

என் தாத்தா இறந்த போது வயது 84. இரண்டு ஈடு இட்லி சாப்பிட்டு முடித்த பிறகு தான் எதிரே இருப்பவர்களிடம் பேசத் தொடங்குவார்.  அடுத்து வேகம் மட்டுப்படுமே தவிர குறையாது. ஒரு ஈடு என்பது எட்டு என்ற எண்ணிக்கை கொண்டது. சாம்பார் சட்னி போன்ற சமாச்சாரங்கள் என்றால் தூக்கி கடாகி விடுவார். அம்மியில் அரைத்த மிளகாய் துவையல். செக்கில் ஆட்டிய நல்லெண்னெய். கலந்து கொண்டு குழப்பிக் கொண்டு தின்பதைப் பார்ப்பவர்களுக்கு பேதி வந்து விடும். ஆனால் காலையில் அருகே இருந்த ஊரணிக்கரையில் ஏழெட்டு சுற்று வந்து விடுவார்.  மாலையில் 4 கீலோமீட்டர் தொலைவில் உள்ள கோவிலுக்கு தினந்தோறும் சென்று வருவதை பார்த்து இருக்கின்றேன். தூங்கும் போது சொல்லிவிட்டு தான் படுத்தார். காலையில் எழுந்த அவர் உடம்பு இருந்தது. உடம்பில் மூச்சு இல்லை.

அப்பாவுக்கு 60வது வயது முடியும் வரைக்கும் உணவு விசயத்தில் அப்பனுக்கு தப்பாத பிள்ளையாக இருந்தார். அசைவ வெறியர் என்றே அழைகக்லாம். ஆனால் கடைசி காலத்தில் வந்த சர்க்கரை நோயை அவர் பொருட்படுத்தவே இல்லை.

பெரும்பாலும் சர்க்கரை நோயாளிகளை கவனித்துப் பாருங்கள்.  சர்க்கரை நோய் வந்துள்ளது என்று தெரிந்ததும் மருத்துவரிடம் செல்லத் தொடங்குவர். தினந்தோறும் மருத்துவர் சொல்லும் மருந்துக்களையும் எடுத்துக கொள்வர்.  ஆனால் நாளுக்குள் நாள் உடம்பு இளைத்துக் கொண்டேயிருக்கும். குறிப்பிட்ட காலத்திற்குள் ஆளே அடையாளம் தெரியாமல் மாறியிருப்பார்.  

அப்படி என்றால் உண்ட மருத்தின் பலன் தான் என்ன? வைத்திருந்த கட்டுப்பாடுகள் என்ன தந்தது என்றால் மிஞ்சுவது ஒன்றுமே இல்லை. இதற்குப் பினனால் உள்ள மருத்துவ தண்டவாளங்களை புட்டுப்புட்டு வைத்துக் கொண்டிருக்கின்றார் சென்னையில் உள்ள ஒரு இஸ்லாமிய மருத்துவர். மருந்தில்லா மருத்துவம் என்ற பெயரில் சென்னை, கோவை போன்ற இடங்களில் கூட்டங்கள் நடத்திக் கொண்டிருக்கின்றார். அதைப் பற்றி அடுத்த வாரம் எழுதுகின்றேன்.

எனக்குத் தெரிந்து அரசியல்வாதி வைகோ ஒருவர் தான் சர்க்கரை நோயை எப்படி கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்பதையும், உடல்நலத்தையும் எப்படி தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்பதை நடைமுறை சார்ந்த விசயங்களில் சாதிதது காட்டிக் கொண்டிருப்பவர்.  

இதைப் போலத்தான் அப்பாவும் மருத்துவர் கொடுத்தனுப்பும் எந்த மருந்துகளையும் உண்ண மாட்டார். அதுவொரு மூலையில் கிடக்கும்.  காரணம் சாப்பாடு மேல் கைவைத்து விடுவார்கள் என்ற பயம்.  மாரடைப்பில் தான் மரணம் அடைந்தார். எளிதான முறையில் இயல்பாக பேரூந்தில் வந்து கொண்டிருந்த போது தான் இறந்தார்.  ஆனால் கடைசி ஒரு வருடத்தில் தான் நோயின் தாக்கம் அதிகமாக இருந்தது.  உணவு தான் அவரை மனிதனாக சுறுசுறுப்பான இளைஞராக கடைசிவரையிலும் கொண்டு செலுத்தியது. 

20 வயது வரைக்கும் நாம் சாப்பிட்ட சாப்பாட்டின் அளவுக்கும் 40 வயது ஆனதும் மாறிப்போவதற்கான ஒரே காரணம் நமது உழைப்பின் அளவும் தன்மையும் மாறிவிடுவதே. 

கடநத நான்கு வருடங்களாக நான் ஒரே எடை அளவு. அதே தன்மை. குடும்ப நோய்கள் எதுவும் இதுவரையிலும் அண்டவில்லை. எந்த உடற்பயிற்சியும் செய்வதில்லை. பலசமயம் அவசர வேலையின் பொருட்டு அதிகாலை 4 மணிக்கு வெளியே செல்லும் போது  பருத்த உடம்பை தூக்கிக் கொண்டு மூச்சு வாங்கிக் கொண்டு நடைபயிற்சி என்று பலரும் செல்வதை பார்த்துக் கொண்டே செல்வதுண்டு. 

என் கட்டுப்பாடு. என் ஆரோக்கியம். என் விருப்பம்.

கட்டுப்பாடு இருந்தால் வாழ்க்கை. கட்டவிழ்த்து விட்டால் கருமாதி. இதுதான் எளிய தத்துவம்.

ஆனால் நானும் சாப்பாட்டு ராமன் தான்.  

கட்டுப்பாடு என்று எத்தனை வைத்துக் கொண்ட போதிலும் சமயம் கிடைத்தால் விளாசி தள்ளிவிட்டு அப்புறம் அய்யோ அம்மாவென்று தடுமாறுவதுண்டு. இருந்தாலும் என்னை மாற்றிக் கொள்ள எண்ணமில்லை என்பதை விட மனமில்லை என்பது தான் உண்மை. ஆனால் உடம்பில் எதையும் தங்கவிடுவதே இல்லை. 

காலையில் நீங்கள் கழிப்பறை சென்று உட்கார்ந்தவுடன் குறுகிய நேரத்தில் வெளியே வந்து விட முடிந்தால் நீங்க லட்சாதிபதி. அங்கே போய் முக்கல் முனங்கலுடன் பேச்சு வார்த்தை நடத்த வேண்டியிருக்குது என்றால் உடல் மன ஆரோக்கியத்தின் தன்மையை அதிகப்படுத்த வேண்டும் என்று அர்த்தம். 

இரவில் படுத்த அதிகபட்சம் அரைமணி நேரத்திற்குள் ஆழ்ந்த தூக்கம் உங்களை தழுவிக் கொள்கின்றதா?  நீங்க தான் கோடீஸ்வரன். ஆனால் இங்கே பலருக்கும் கனவில் வருபவர்கள் தான் உதவி புரிகின்றார்கள்..

காரணம் உண்பது உறங்குவது இந்த இரண்டுக்குள் தான் நம் அத்தனை பேர்களின் வாழ்க்கையும் இருக்கிறது.

பெரிய நாம் நினைத்தே பார்க்க முடியாத என்று ஏராளமான காரியங்களை மனதில் வைத்திருப்போம். ஆச்சரியமான சாதனைகள் என்று எத்தனை நாம் கடந்து வந்தாலும், கடக்க நினைத்தாலும் அடிப்படையில் இரவு வந்தால் படுத்தவுடன் தூக்கம் வர வேண்டும்.  மூன்று வேளையும் பசியெடுத்தால் தான் சாப்பிட முடியும்.  வயிறு தொடர்ந்து பொருமிக் கொண்டேயிருந்தால் சீக்கிரம் நாலு பேர்கள் நம்மை தூக்கப் போகின்றார்கள் என்று அர்த்தம்.

பல சாதனைகள் செய்து விட்டு தனது உடம்மை வேதனையாக வைத்துக் கொண்டால் என்ன ஆகும்? 

வாழ்க்கை முழுக்க சோதனை தான். 

இஞ்சித்தேன்.

சென்னைக்கு சென்ற போது பலாப்பட்டறை ஷங்கருடன் பேசிக் கொண்டிருந்த போது தான் இந்த இஞ்சித்தேன் அருமையை உணர்ந்து கொண்டேன். அதன் பிறகு வலைதளங்களில் பார்த்த போது தங்கம் பழனி என்பவர் அருமையாக பல விசயங்களை எழுதிக் கொண்டு வருவதையும் பார்க்க முடிந்தது.  பல நண்பர்களுடனும் இது குறித்து பேசி கடைசியாக இஞ்சித் தேன் மூலம் நாலைந்து மாதமாக குடும்பத்தில் பறந்து கொண்டிருந்த காந்தித்தாத்தாவை தற்போது தான் நிறுத்த முடிந்ததுள்ளது.

இஞ்சியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி (சிலர் காய வைக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.  ஆனால் இஞ்சியை காய வைத்தால் சுக்கு என்று மாறி அதன் தன்மையும் மாறி விடும் என்றும் சொல்கின்றார்கள்) அதனை நன்றாக கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும்.  இஞ்சியில் கழுவிய தண்ணீர் பதம் சென்றதும் இஞ்சியின் அளவுக்கு மிதக்கும் அளவுக்கு சுத்தமான தேனில் மூன்று நாட்கள் ஊறவைக்க வேண்டும். மூடியுள்ள பாத்திரத்தை வெயிலில் வைத்து விடுங்க. மூன்று நாளில் இஞ்சி தேனை நன்றாக ஊறிஞ்சி விடும். 

காலையில் பல்துலக்கி விட்டு வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி தேனுடன் எடுத்து (தேனும் இஞ்சியும் சேர்ந்து இருக்க வேண்டும்) சாப்பிட்டு வந்தால் என்ன நன்மைகள்?.

முக்கியமான நோய் எதிர்ப்புசக்தி உருவாகும். எதிரிகளை சமாளிக்க பணத்தைப் போல மனமும் உடலும் உறுதியாகத்தானே இருக்க வேண்டும். 

பருவநிலை மாற்றத்தில் வரும் சளித் தொந்தரவு காணாமல் போய்விடுகின்றது.

எதை வேண்டுமானாலும் உங்கள் வாழ்வில் விரும்பி சேர்த்துக் கொள்ளுங்க. ஆனால் சளியை உடம்பில் சேர்க்கத் தொடங்கினால் சனி பகவான் சிநேகம் பிடிக்க வருகின்றார் என்று அர்த்தம். விரும்பாமலேயே உள்ளே வந்து விடும். பிறகு நீங்களே விரும்பினாலும் வெளியே செல்லாது. 

தேன் இஞ்சி உண்ணும் பழக்கத்தை தினந்தோறும் பயிற்சியில் கொண்டு வரும் போது தான் நன்றாக பசியெடுக்கும். தேனின் மருத்துவ குணங்களை பக்கம் பக்கமாக எழுதலாம். இது நாங்கள் அனுபவத்தில் கண்டு கொண்டிருக்கும் உண்மை. 

அதியமானுக்கு ஔவையார் கொடுத்த நெல்லி

அடுத்து அனைவரும் அன்றாட வாழ்வில் எடுத்துக் கொள்ள வேண்டியது நெல்லி.  இப்போது இதுவும் தேன் நெல்லி என்கிற ரீதியில் வந்து கொண்டிருக்கின்றது. காசைக் கொடுத்து ஏமாறாமல் நாமே முழு நெல்லிக்காய் வாங்கி வந்து நறுக்கி தேனில் ஊறவைத்து சாப்பிடலாம். அல்லது அப்படியே தினந்தோறும் ஒன்றாக பச்சையாக சாப்பிடலாம்.  குழந்தைகளுக்கு சாறாக மாற்றி தினந்தோறும் அரை டம்ளர் கொடுத்து வரலாம்.

இதிலும் முக்கியமாக நோய் எதிர்ப்பு சக்தி. இதிலும் கதை கதையாக எழுத வேண்டிய ஏராளமான சமாச்சாரங்கள். இயற்கை மருத்துவம் குறித்து ஏராளமான வலைப்பூக்கள் உள்ளது. தேடிப்பாருங்கள்.

நாம் சாப்பிடும் சாப்பாட்டில் அளவு தேவையில்லை. எதுவும் சாப்பிடலாம். எப்போதும் சாப்பிடலாம். ஆனால் அது உடம்பில் தங்கிவிடக்கூடாது என்பதை கவனத்தில் வைத்திருக்க வேண்டும். சக்தியாக மாற்றப்பட்டு இருக்க வேண்டும்.  பணத்தை வீட்டில் சேர்த்து வைத்தால் வெகுமானம்.

செரிக்காத சமாச்சாரத்தை உடம்பில் சேர்த்து வைத்தால் என்னவாகும் என்பது தெரியும் தானே?  செரித்தால் நல்லது. செரிக்காவிட்டால்? 

வாயை பொத்திக் கொண்டு இருப்பது அதை விட நல்லது.

இது ரெண்டு மட்டும் தான் இன்றைக்கு உள்ள காரைக்குடி உணவத்தின் சாப்பாடு. 

சாப்பாட்டு ராமன்கள் இந்த இரண்டையும் தினந்தோறும் செய்து வந்தாலே  மகிழ்ச்சியாக விரும்பியதை சாப்பிட்டலாம். ஆனால் நிச்சயம் நம்மிடம் உள்ள காந்தி தாத்தா சிரிக்கும் பணம் பையிலிருந்தபடியே நம்மைப் பார்த்து சிரித்துக் கொண்டிருப்பார்.

இன்னும் கொஞ்சம் போடும்மா என்று குழந்தைகள் ஒரு கட்டு கட்டுவதை வேடிக்கை பார்த்தபடியே நாமும் நைஸாக இன்றைக்கு ரொம்ப நல்ல சமைச்சருக்கே என்று  கேட்டு வாங்கி சாப்பிடலாம்.

ஒரு நிறுவனத்தின் முதலாளியின் முக்கிய வேலை என்ன தெரியுமா?

மூன்று வேளையும் தான் எடுத்துக் கொள்ள வேண்டிய மருந்து மாத்திரைகளை வரிசைப்படி எடுத்துக் கொடுக்க ஒருவரை தனியாக வைத்துள்ளார்.  நிறுவன வேலை பாதி.  இந்த வேலை மீதி.

 எப்பூடி?

அந்த மளிகைச் சீட்டு போலவே இருந்த பட்டியலைப் பார்த்து பயந்தே போய்விட்டேன்.

ஆனால் கடந்த ஒரு வருடமாக அதே நோய்கள், மேலும் மேலும் வீர்யமான மருந்து மாத்திரைகள்.

எங்கே நிம்மதி தான் என்ற வாழ்க்கை தான்.

இயற்கை மருத்துவம் தாமதமாகத்தான் பலன் தரும். ஆனால் நிரந்தரமாக நோயிலிருந்து விடுபட்டு விடலாம். அண்டை வீட்டுக்காரர் நம்மைப் பார்த்து பொறாமைப்பட ஒனிடா டிவி தேவையில்லை. நெல்லியும் இஞ்சியுமே போதுமானது. 

அசைவ உணவு பிரியர்கள் மட்டும் இந்த தலைப்பை படிக்கவும்.


Photo : 4Tamil Media.Com

Wednesday, October 31, 2012

காரைக்குடி உணவகம்



ங்க பக்கம் இப்ப மழை பெய்யுதா? என்று நண்பர் கேட்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது.  காரணம் தொடக்கத்தில் மழை என்றால் ஒரு ஊருக்குள் எல்லா பகுதிகளிலும் வெளுத்துக்கட்டும்.  ஆனால் திருப்பூருக்குள் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமாக இந்த மழை இப்போது பெய்து ஊரை சுத்தப்படுத்திக் கொண்டுருக்கிறது. குறிப்பிட்ட இடத்திற்கு சற்று நேரம் கழித்து செல்லாம் என்றால் அந்த பக்கம் அப்போது தான் மழையின் சாரல் தொடங்குகின்றது. 

வினோதமாக இருந்தாலும், அவசர கடமைகளை மீறி நனைந்து செல்வது வெகு நாளைக்குப் பிறகு மகிழ்ச்சியாக இருக்கிறது.

திருப்பூர் சுற்று வட்டாரத்தில் பெய்யும் மழை இந்த பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு உதவுகின்றதோ இல்லையோ முறையற்ற, அனுமதி பெறாமல் இயங்கிக் கொண்டுருக்கும் சாயப்பட்டறைகளுக்கு பம்பர் லாட்டரி.

மாசுகட்டுப்பாட்டு வாரியத்திற்கு தெரியாமல் (தெரிந்தும்?) தங்கள் பகுதியில் பள்ளத்தில் சேர்த்து வைத்திருக்கும் சாய நீரை எளிதாக இந்த தண்ணீரோடு சேர்த்து கலந்து விட்டு விடலாம் அல்லவா.

ஏற்கனவே திருப்பூர் முக்கால் வாசி மூழ்கிப் போய்விட்டது.  இன்னமும் மீதி இருப்பதால் பலரும் இதற்காகவே உழைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

நல்லது நடக்க வேண்டும் என்றால் சில அழிவுகளை நாம் கண்ணால் காண வேண்டும் என்பார்கள்.  பார்க்கலாம்.  பாதிப் பேர்கள் சொத்துக்களை விற்று தங்களை காப்பாற்றிக் கொண்டு இருக்கிறார்கள்.  மீதிப் பேர்கள் மனம் திருந்த மார்க்கம் இல்லாத வழியில் பயணித்துக் கொண்டுருக்கிறார்கள்.

அனுபங்கள் ஆசிரியராக பொறுமையாக பாடம் கற்பிக்கும். பாடத்தை புரிந்து கொள்ள விரும்பாதவர்களுக்கு பாடங்கள் பாம்பாக மாறி கற்பிக்கும்.
                                                                •••••••••••••••••••••••••••••••••••

நொய்யல் நதியை காப்போம் என்று திருப்பூரில் உள்ள நண்பர்கள் முகப்பு நூல் ஒன்றை உருவாக்கி உள்ளார்கள்.  

அதில் முகப்பு படமாக உள்ள தற்போதைய நொய்யல் ஆற்றின் படம் இது. படத்தை சொடுக்கினால் நண்பர்கள் உருவாக்கியுள்ள முகப்பு நூலுக்கு உங்களை அழைத்துச் செல்லும்.

மழையை ரசிப்பதும் அதில் நினைவதும்  சுகமே.  பெய்த மழையில் அடித்துச் செல்லும் கழிவுகளைப் போல பல சமயம் அடித்தட்டு மக்களின்  இயல்பான வாழ்வாதாரத்தையும் மாற்றி விடுகின்றது.
                                                                      •••••••••••••••••••••••••

ண்பருடன் பேசிக் கொண்டுருந்த போது நீங்க கூட தற்போதைய மின்வெட்டு பற்றி தெளிவாக எழுதவில்லை.  உங்களுக்கு அம்மையார் குறித்த பயமா? என்றார். 

கூகுள் ப்ளஸ் ல் இது விவாதமாக வரும் போது கூட கடைசியில் இது கலைஞர் செய்த முந்தைய தவறு என்றும், இல்லை இது இந்த ஆட்சியின் நிர்வாக சீர்கேடு.  எவரும் பேசப் பயப்படுகிறார்கள். பயந்தாங்கோலி பக்கோடாக்கள் என்கிற ரீதியில் முடிவில்லாமல் போய்க் கொண்டே இருக்கிறது. 

தம்பியண்ணன் அப்துல்லா கூட உயர்வு நவிற்சி அணியில் என்னைப் பற்றி விமர்சித்து இருந்தார்.

கூகுள் ப்ளஸ் ல் சொல்ல முடியாத, நண்பர் ராஜமாணிக்கம் தமிழ் ஹிந்துவில் எழுதிய இரண்டு கட்டுரைகளுக்கு அப்பாற்பட்டு இது குறித்து எழுத வேண்டும் என்று மனதில் வைத்து இருந்தேன். ஒரு மாதத்திற்குப் பிறகு நண்பர் சென்னையில் இருந்த போது கொடுதத புத்தகத்தை முழுமையாக வாசிக்க முடிந்தது.


மின்சாரம் -- பயன்படுத்த அல்ல. புரிந்துகொள்ள மட்டும்  

என்ற தலைப்பில் சில பதிவுகளாக எழுத நினைத்துள்ளேன். முழுக்க முழுக்க புள்ளி விபரங்களை பல வித ஆதாரங்களோடு மிகத் தெளிவாக சா. காந்தி அவர்கள் எழுதி உள்ளார்.

சென்னையில் இருந்த போது நண்பர் என்னிடம் கொடுத்த புத்தகத்தை முழுமையாக வாசித்து முடித்த போது தலைசுற்றாத குறை தான்.  காரணம் தற்போது தமிழ்நாட்டில் இருக்கும் மின்சார தட்டுப்பாடு குறித்து தமிழ்நாடு மின்துறைப் பொறியாளர்களின் அமைப்பின் தலைவரான சா. காந்தி அவர்களால் எழுதப்பட்ட புத்தகம் 

தமிழகத்தில் மின்வெட்டும் மின் கட்டண உயர்வும் -- காரணமும் தீர்வும். 

ஏறக்குறைய நம்முடைய தமிழ்நாடு மின்சார வாரியம் சுய பரிசோதனை செய்து கொண்டு ஒரு வெள்ளை அறிக்கை வெளியிட்டால் எப்படி இருக்குமோ அந்த அளவுக்கு இந்த புத்தகத்தில் சா. காந்தி அவர்கள் தகவல்களை ஆணித்தரமாக கொடுத்துள்ளார். 

கட்சி சார்பற்று, மொத்தமாக நம்முடைய மின்சார வாரியங்கள் கடந்து வந்த பாதை, இந்தியாவில் உள்ள மொத்த மினசாரத்தடத்தின் கதை என்று எல்லா பக்கமும் உள்ள நிறை குறைகளை அலசி துவைத்து காயப்போட்டு உள்ளது. 

இந்த புத்தகத்தை மே 17 இயக்கம், பெரியார் திராவிடர் கழகம் சேர்ந்து ஆழிப்பதிப்பகம் மூலம் வெளியிட்டுள்ளார்கள்.  நண்பரிடம் அனுமதி பெற்ற காரணத்தால் இதில் உள்ள முக்கிய தகவல்களை வலைபதிவில் எழுதி வைக்க விரும்புகின்றேன்.

அதற்கு முன்னால் பொதுவான சில விசயங்களைப் பார்த்து விடலாம்.

சென்ற ஆட்சியில் மின் தட்டுப்பாடு காரணமாக முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமியைப் பற்றி செய்திதாள்களிலும், தளங்களிலும் வந்த நக்கல் விமர்சனங்களை நாம் எவரும் மறந்து விடமுடியாது.  அதே நிலைமையில் இன்றைய காலகட்டத்தில் இன்றைய மின்துறை அமைச்சராக நத்தம் விஸ்வநாதன்.  

நன்றாக விபரம் தெரிந்தவர்கள் மின்சாரத் துறைக்கு அமைச்சராக வருபவர்களை கழிவிரக்கத்தோடு தான் பார்ப்பார்கள். காரணம் தற்போதைய நிலைமையில் தமிழ்நாடு மின்சார வாரியம் என்பது வழங்கும் மின்சாரத்திற்கு வசூல் செய்வது மட்டும் தான் ஒரே வேலை.  மற்றபடி எந்த அதிகாரமும் இல்லாத துறை. மாநிலத்தின் முதலமைச்சர் கூட ஒன்றும் செய்யமுடியாது என்கிற நிலைமை தான் எதார்த்தம்.

குழப்பாக இருக்கிறதா?

மேற்கொண்டு படிக்கக் காத்திருக்கவும்.

அடுத்து ஆட்சிக்கு வருபவர்களுக்கு இரண்டு முக்கிய பிரச்சனை காத்துக் கொண்டு இருக்கிறது.  ஒன்று தண்ணீர் மற்றொன்று மின்சாரம்.
                                                                                  ••••••••••••••••••••••••••

சில நாட்களுக்கு முன் குழந்தைகளுடன் ரசித்து பார்த்த படம் சமீபத்தில் வெளிவந்த சாட்டை.  


நண்பர்களின் கருத்துப்படி இது மிகைப்படுத்தப்பட்ட உணர்ச்சிகளுடன் வெளிவந்த படம் என்கிறார்கள். தற்போதைய சூழ்நிலையில் அம்மணமாக இருக்கும் ஊரில் கோவணம் கட்டியிருந்தால் கூட அவமானம் தான்.  படங்களில் இரண்டு பேர்கள் சேர்ந்து மது அருந்தும் காட்சி வந்தால் மதுப்பழக்கம் உடல் நலத்திற்கு தீங்கானது என்று மிகச் சிறிய எழுதுக்ககளில் கீழே வரும்.  அதைப் போலவே புகை பழக்கத்திற்கும்.  

ஆனால் இந்த சிறிய எழுத்துக்களை எவர் கண்டு கொள்வார்கள்? திருந்துவார்கள் என்ற ஆராய்ச்சி தேவையில்லை.  

தவறான பழக்கம் என்பது இயல்பானதாக மாறிவிட்ட சமூகம் இது.  

ஆனால் கிராமத்து பள்ளிக்கூடங்களில் இன்றும் கந்து வட்டி ஆசிரியர்கள், சாதி வெறி பிடித்த ஆசிரியர்கள், வாங்கும் சம்பளத்திற்கு மனசாட்சிக்கு கூட பயம் இல்லாமல் வேலை செய்ய விருப்பம் இல்லாமல் இருப்பவர்கள், கிராமம் என்றால் லட்சக்கணக்கான பணம் கொடுத்து மாற்றலாகி நகர்ப்புறத்திற்கு வருகின்ற ஆசிரியர்கள், அடிப்படை வசதியற்ற கிராமத்து பள்ளிக்கூடங்கள், மாணவர்களை மனிதர்களாகவே மதிக்க மறுக்கும் ஆசிரியர்கள் என்று பலவற்றையும் பார்த்துக் கொண்டு இருக்கின்றோம்.

ஆனால் நாம் ஏற்றுக் கொள்ள விருமபுவதில்லை.  

நாமும் அதே போலத்தான் அந்த தடங்களைத் தாண்டித்தான் இந்த நிலைமைக்கு வந்து இருந்தால் கூட இப்ப பழைய நிலைமைக்கு மோசம் இல்லை என்று சொல்லிக் கொண்டு நம் குழந்தைகளை ஆங்கில பள்ளிக்கு அனுப்பிக் கொண்டு இருக்கின்றோம்.

திரைப்படம் என்பது வியாபாரம்.  போட்ட முதலீட்டை எடுத்தே ஆக வேண்டும்.  ஆனால் அதற்கு அப்பாலும் படம் எடுப்பவர்களுக்கும், இயக்குநர்களுக்கும் சில அடிப்படை கடமைகள் இருக்கிறது.  

அதைப்பற்றி பேசும் போது தான் எதார்த்தம் தெரியாதவன் என்று முத்திரை குத்தப்படுகின்றது.

என் மூத்த சகோதரி கண்டிப்புக்கு பெயர் போனவர்.  திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் தனது ஆசிரியை பணியைத் தொடங்கினார். கல்லூரியில் பணிபுரிய  வாய்ப்பு வந்த போது எங்கள் குடும்பத்தில் அனுமதிக்கவில்லை.

மாறுதல் வாங்க மனமில்லாமல் நீண்ட வருடங்கள் அங்கேயே இருந்தார். பத்தாண்டுகளுக்கு முன் திருவண்ணாமலையின் உள்ளடங்கிய கிராமத்திற்கு குறிப்பாக போலூர் பக்கம் உள்ளே சென்றால் அது ஒரு தனி உலகமாக இருக்கும்.

பணியில் இருந்த போது பல முறை மிரட்டலுக்கு ஆளானவர்.  ஆனால் விடாமுயற்சியில் பணிபுரிந்த 12 வருடங்களில் அந்த அரசு பள்ளிக்கூடத்தை முன்னேற்றிக் காட்டினார்.  துனை தலைமையாசிரியாக இருந்தவருக்கு தலைமையாசிரியர் பொறுப்பு வந்த போது, காத்துக் கொண்டு இருந்தவர்கள் கோவில்பட்டிக்கு அருகே தூக்கியடித்தனர். அங்கும் பல பிரச்சனைகள் உருவானது. இரண்டு குழந்தைகளையும் அரசாங்க பள்ளியில் தான் படிக்க வைத்து மாவட்ட அளவில் சிறப்பாக தேர்ச்சி பெற்றனர்.  நீண்ட வருடங்களாக ஊருக்கு வெகு தூரத்தில் இருந்து விட்டோம். கடைசி காலத்தில் ஊருக்கு அருகே இருப்போம் என்று தற்போது தேவகோட்டை கல்வி மாவட்டத்திற்கு மாறுதல் வாங்கிக் கொண்டு தேவகோட்டை பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் ஒரு அரசு பள்ளியில் தற்போது தலைமை ஆசிரியராக பணிபுரிந்து கொண்டு வருகிறார்.

 ஏற்கனவே இந்த பகுதியைப் பற்றி தெரிந்தவர்களுக்கு (சாதிப் பிரச்சனை) முழு பின்புலமும் தெரியும். ஒவ்வொரு வாரமும் அவருடன் அழைத்துப் பேசும் போது அவருடைய புலம்பல்களை பொறுமையாக கேட்டுக் கொள்வதுண்டு., இன்றைய கல்வியின் குறிப்பாக அரசாங்கப் பள்ளியின் தரத்தை மாணவர்களின் சிந்தனைகளை, சுயநலமிகளின் போக்கை புரிந்து கொள்ள முடிகின்றது.

ஆனால் இதையும் தாண்டி சில நல்ல பள்ளிக்கூடங்களும் இருக்கின்றது.

திருப்பூர் மாவட்டத்தில் பல பள்ளிக்கூடங்கள் வெகு சிறப்பாக செயல்பட்டுக் கொண்டுருக்கின்றது.  சிவகங்ககை மாவட்ட கல்வி முதன்மை அதிகாரி நடத்தும் கூட்டத்தில் இங்குள்ள அரசாங்க பள்ளிகளைப் பற்றி  குறிப்பிட்டு  சொல்லும் அளவிற்கு என்றால் பார்த்துக் கொள்ளுங்க.

காரணம் மனதிர்களும் அவர்களின் மனசும் தான் காரண்ம்.

மனிதர்களுக்கு பணம் மட்டும் தேவை எனில் பல தொழில்கள் இருக்கின்றது. பேரூந்து நிலையத்தில் மூத்திரம் போக இரண்டு ரூபாய் வாங்கிக் கொண்டு ஓப்பந்தகாரர்களாக, அதில் பணிபுரிபவர்களாக வாழ்க்கை நடத்துபவர்கள் வரைக்கும் இந்த உலகத்தில் பலரும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்களுக்கும் தினந்தோறும் பணம் தான் கிடைக்கின்றது. இதுவரைக்கும் இலைமறை காயாக நடந்து கொண்டுருந்த விசயங்கள் தற்போது நவீனமாக சமீப காலமாக திருப்பூர் நட்சத்திர ஹோட்டலில் வளர்ந்து கொண்டு இருக்கும் விபச்சாரம் வரைக்கும் பணம் சம்பாரிக்க எத்தனையோ வழிகள் இருக்கின்றது.

சமீபத்தில் ருக்மாங்கதன் (தற்போது செக்ஸ் படங்கள் எடுத்துக் கொண்டுருப்பவர்) போல அப்பட்டமாக எடுத்து ஆமாடா நான் இப்படித்தான்.  நீங்க பெரிய ஒழுக்கமா? என்று கேட்டு விடலாம் 

அவர் கொடுத்த பத்திரிக்கை பேட்டியிலும் தைரியமாக இப்படித்தான் பேசியுள்ளார்.

அவர் சொல்லியுள்ள எதார்த்தம் முற்றிலும் உண்மை.

பாராட்டத் தோன்றுகின்றது.

முடிந்தால் குழந்தைகளுடன் சாட்டை படம் பாருங்கள். 

அன்பே சிவம் எடுத்த பிறகு இயக்குநர் மற்றும் நடிகர் சுந்தர் சி எனது திரைப்பட வாழ்க்கையில் இது போன்ற ஒரு படமும் எடுத்துள்ளேன் என்பதே எனக்கு பெரிய திருப்தி என்று சொன்னது போல சமுத்திரகனியும், இயக்குநர் அன்பழகனுக்கும் இது முக்கிய படம்.

முக்கியமாக தயாரிப்பாளர்களில் ஒருவரான இயக்குநர் பிரபு சாலமன் அவர்களையும் பாராட்டத் தோன்றுகின்றது.  

தம்பி ராமையா மிகச் சிறந்த நடிகர் என்பது ஏற்கனவே தெரிந்த விசயம். இந்த படத்திலும் சமுத்திர கனிக்கு போட்டி போட்டு நடித்துள்ளார். வலைதளத்தில் பெரும்பாலும் நல்ல விதமாகத்தான் இந்த படம் குறித்து எழுதி உள்ளனர். 

இது போன்ற படங்களுக்கு குறைந்த பட்சம் அரசாங்கம் வரிவிலக்கு கொடுக்க வேண்டும்.

காசுக்காக அலைந்தோம். காசுக்காகவே அலைகின்றோம்.  காசுக்காகவே எல்லாவற்றையும் இழந்து கொண்டும் இருக்கின்றோம்.