Tuesday, April 21, 2020

சீனா - வரம் தந்த சாமி


அந்த 42 நாட்கள் -  5
Corona Virus 2020

(மாா்ச் 25 முதல் மே 3 வரை)

முதல் கொரோனா பாதிப்பு சீனாவில் உகான் நகரில் டிசம்பர் 8 ஆம் தேதி கண்டறியபட்டது. ஆனால் ஜனவரி 14 ஆம் தேதி வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆரம்ப காலங்களில் சீனா இதனை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. உகானில் உள்ள 34 வயதான கண் மருத்துவரான டாக்டர் லி வென்லியாங்  மத்திய மருத்துவமனையில் வேலை பார்த்து வந்தார். சார்ஸ் போன்ற நோய் பரவுவதைப் பற்றி மற்றவர்களுக்கு எச்சரிக்க முயன்றார், ஆனால் "வதந்திகளை" பரப்பியதற்காக அரசாங்கத்தால் லி தண்டிக்கப்பட்டார். நிவாரண முயற்சிகளுக்கு உதவும் போது லி  கடந்த பிப்ரவரி 7 ந்தேதி நோயால் இறந்தார். பின்னர் சுதாரித்து கொண்ட சீன அரசு  தீவிர நடவடிக்கை எடுத்தது.




கொரோனா வைரசை முதலில் மருத்துவர்கள் இது ஒரு வைரஸ் நிமோனியா என்று நினைத்தார்கள் சாதாரண மருந்துகளால் குணப்படுத்த முயன்றார்கள். பின்னர், 2019 டிசம்பரில், இது சீனாவின் பிரதான நிலப்பகுதியிலிருந்து கொரியா மற்றும் தாய்லாந்து வரை பரவியது.

பின்னர் நோய் வெகுவாகப் பரவத் தொடங்கியதும் எந்த நடவடிக்கையையும் சீன அரசால் எடுக்க முடியவில்லை. 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம்தான் கொரோனா வைரஸ் அதிகமாகப் பரவத் தொடங்கியது. கொத்துக்கொத்தாக உயிரிழப்புகள் ஏற்பட்டன. அதன் பிறகுதான், அதன் அபாயத்தை சீன அரசு உணர்ந்தது. கொரோனா பரவிய வுஹான் மற்றும் ஹூபேய் மாகாணங்களை மூடி சீல் வைத்தது அந்த நாட்டு அரசு. அங்கிருந்து மக்கள் வெளியேறவும், வெளியிலிருந்து மக்கள் உள்ளே வரவும் தடை விதிக்கப்பட்டது. ஆனாலும், அதற்குள் சீனாவின் பிற மாகாணங்களுக்கு கொரோனா வைரஸ் பரவியது.

மக்கள் அனைவரும் தங்களின் உடல் வெப்பநிலையைப் பதிவுசெய்வது கட்டாயமாக்கப்பட்டது. ஒவ்வொரு வரிடமும் அவர்கள் மேற்கொண்ட பயணம் குறித்து விவரங்கள் பெறப்பட்டன. அவற்றை வைத்து, கொரேனா வைரஸ் யார் யார் மூலம் தொற்றியது என்பது வரைபடங்கள் மூலம் கண்டறியப்பட்டது. சாலைகள் உள்ளிட்ட பொது இடங்களுக்கு மக்கள் வருவது தடுக்கப்பட்டது. திருமண நிகழ்ச்சிகள், பொது நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பொது நிகழ்ச்சிகள் ரத்துசெய்யப்பட்டன. முகக்கண்காணிப்பு சாதனங்கள், செல்போன்கள் ஆகியவற்றின் மூலம் மக்களின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டது. அரசின் பாதுகாப்பு விதிமுறைகளை மீறுவோருக்கு சிறைத்தண்டனை விதிப்பதற்கான புதிய சட்டம் ஒன்றை சீன அரசு கொண்டுவந்தது.  சீனாவின் வுஹான் நகரில் ஒன்றரைக் கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கிறார்கள்.

ஜனவரி மாதம் சீனப் புத்தாண்டுக்கு ஒரு நாள் முன்னதாக வுஹான் நகரமே தனிமைச்சிறையாக மாற்றப்பட்டது. புத்தாண்டு விழாவை தங்கள் உறவினர்களுடன் கொண்டாடுவதற்காக சுமார் 30 லட்சம் பேர் வுஹானுக்கு வருவது வழக்கம். அதற்கு முன்பாகவே தனிமைச்சிறையாக வுஹான் மாற்றப்பட்டது. அப்படிச் செய்யவில்லையென்றால், உயிரிழப்பு மிக மோசமாக இருந்திருக்கும்.

கொரோனா பாதித்த பகுதிகளில் உள்ள மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பிவழிந்தன. புதிதாக வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்படும் என்பதை சீன அரசு உணர்ந்தது. எனவே, புதிதாக மருத்துவமனைகளை உருவாக்க அரசு முடிவுசெய்து. புதிதாக ஒரு மருத்துவமனையைக் கட்ட வேண்டுமென்றால், குறைந்தபட்சம் 6 மாதங்கள் முதல் எட்டு மாதங்கள் வரை தேவைப்படும்.

ஆனால், வெறும் 10 நாள்களில் அவசர தற்காலிக மருத்துவமனைகளை சீனா உருவாக்கியது. வுஹானில் 1,000 படுக்கைகளும் 30 ஐ.சி.யூ வார்டுகளும் கொண்ட மருத்துவமனை கட்டப்பட்டது. ராணுவத்தினரும் மருத்துவத் துறையினரும் சீனா முழுவதிலுமிருந்து இதற்காகப் பயன்படுத்தப்பட்டார்கள்.
ஜனவரி 23-ம் தேதி முதல் 93 கோடி மக்கள் தங்களைத் தாங்களே தனிப்படுத்திக்கொண்டனர். 14 நாள்கள் என்பது கொரோனா வைரஸ் உயிருடன் இருக்கும் காலம். எனவே, ஒவ்வொருவரும் தங்களை 14 நாள்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பது சீன அரசின் உத்தரவுகளில் முக்கியமானது. 

கொரோனோ வைரஸ் அதிகமாக பாதித்த ஹூபெய் மாகாணத்திலிருந்து வருபவர்களுடன் தொடர்பு வைத்தவர்களாக இருந்தால், 14 நாள்கள் யாருடனும் தொடர்பு வைத்துக்கொள்ளாமல் தனிமையில் இருக்க வேண்டும்.
நகரத்துக்கு வெளியே பயணம் செய்தவர்களாக இருந்தாலும், 14 நாங்கள் தனிமையில் இருக்க வேண்டும். நகரத்துக்கு வெளியே பயணம் செய்தவர்களுடன் ஒரே அறையில் தங்கியிருந்தவர்கள் என்றாலும், 14 நாங்களுக்கு தனிமையில்தான் இருக்க வேண்டும்.

உடல் வெப்பநிலை 37.3 டிகிரி செல்சியஸுக்கு அதிகமாக இருப்பவர்கள், 14 நாள்கள் தனிமையில் இருக்க வேண்டும். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அருகில் இருந்தால், அவர்களும் 14 நாள்கள் தனிமையில் இருக்க வேண்டும்.

முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. மூடப்பட்ட பொது இடங்களுக்குள் யாரும் போக முடியாது. உணவகம் போன்ற எந்த இடமாக இருந்தாலும் அதன் நுழைவுவாயிலில் உடல்வெப்பநிலை பரிசோதிக்கப்பட்ட பிறகுதான் அனுமதிக்கப்பட்டார்கள்.

அத்தியாவசியப்பொருள்கள் வாங்குவதற்கு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே வெளியே செல்ல அனுமதி கொடுக்கப்பட்டது. இப்படியாக, அன்றாட நடவடிக்கைகளில் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டன.

கொரோனோ வைரஸ் பாதிப்பு என்பது உயிரிழப்புகளை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், நாட்டின் பொருளாதாரத்தைக் கடுமையாகப் பாதிக்கும். வீட்டுக்குள் முடங்கிவிட்டால் வைரஸ் பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம். ஆனால், வீட்டில் எந்த வேலையும் செய்யாமல் வெறுமே அமர்ந்திருக்க முடியாது.

எனவே, வீட்டிலிருந்து பணியாற்ற வேண்டும் என்ற முறை கடைப்பிடிக்கப்பட்டது. ஆன்லைன் மூலம் பணிகள் நடைபெற்றன. உணவுகள், மருந்துகள் உட்பட தேவையான பொருள்கள் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்யப்பட்டன.

கொரோனா பாதிப்பால் சீனாவில் ஒரே நாளில் 150 பேர் கூட உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்த நிலையில், மார்ச் 12-ம் தேதி உயிரிழப்பின் எண்ணிக்கை ஒற்றை இலக்கமாக மாறியது. தொற்றும் பெருமளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால் இன்று வரையிலும் சீனாவில் எத்தனை பேர்கள் இறந்தார்கள்? எப்படி தடுப்பு பணியில் செயல்பட்டு மக்களைக் காப்பாற்றினார்கள்? போன்ற எந்த விபரங்களும் வெளியுலகத்திற்கு சீனா தெரிவிக்கவே இல்லை.  சீனா தெரிவிக்கும் புள்ளி விபரங்களும் நம்பகத்தன்மையில்லை.

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

நம்பகத்தன்மை கண்டிப்பாக இல்லை... ஆனால்...

நம்பிக்கையே வாழ்க்கை...!