Monday, February 17, 2020

அமேசான் முதல் 100



கடந்த வாரம் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த போது, அவர் பேச்சின் ஊடாக நான் புரிந்து கொண்ட விசயங்கள், இதன் மூலம் வலைபதிவில் செயல்படும் நண்பர்கள் தெரிந்து கொள்வதன் பொருட்டு இதனை இங்கே எழுதி வைக்கத் தோன்றியது.

குடும்பம், அடிப்படைக் கடமைகள் போன்றவற்றை நிறைவேற்றிய பின்பு, நிறைவேற்ற முடியாமல் இன்னமும் போராடிக் கொண்டிருப்பவர்களுக்கும் இயல்பாகத் தோன்றுவது, எதிர்பார்ப்பது அங்கீகாரம்.  

அது பலருக்கும் சொந்த வீடு ஒன்று வேண்டும் என்பதில் தொடங்கிப் பரந்து விரிந்து அவரவர் வாழ்நிலை பொறுத்து மாறுபடுகின்றது. 50 வயது கடந்து வாழ்கின்றவர்களுக்கு நம்முடைய தனிப்பட்ட திறமைகளை மற்றவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் உருவாகும் காலகட்டமும் இதுவே.  ஆனால் எப்படிச் செயல்படுத்துவது என்பதில் தான் குழப்பம் உருவாகின்றது.  கற்றுக் கொள்ளக் காலம் கடந்து விட்டதோ? என்ற எண்ணமும் உருவாகி விடக் குழப்பமும் மனதில் உருவாகின்றது.



வலைபதிவில் எழுதிக் கொண்டிருப்பவர்கள் இதனை விட்டு நகர முடியாமல், வேறு எந்தப் பக்கம் செல்வது என்பதனைப் பற்றிப் புரிந்து கொள்ள முடியாமல் மனதிற்குள் குழப்ப மனநிலையில் இருப்பதாகவே எனக்குத் தோன்றுகின்றது.

தமிழ்மணத்தில் பத்தாண்டுகளுக்கு முன்பாக எழுதத் தொடங்கியவர்கள் இன்று திரைப்படம், நாவலாசிரியர் என்று தொடங்கி காலப் போக்கில் பல தளங்களில் தங்களை நிரூபித்து உள்ளனர்.  சிலர் எழுத்தைப் பொழுது போக்காக எடுத்துக் கொண்டு இந்தத் துறையில் அடுத்தடுத்த கட்டத்தில் நகர்ந்து தங்கள் புதுப்பித்துக் கொண்டே வந்துள்ளனர்.

நான் வந்து சேர்ந்த பாதை அமேசான் தளம். 

மின்னூலில் தொடங்கிய பயணம் இன்று இங்கு வந்து முடிந்துள்ளது. 

பலருக்கும் இப்போது எண்ணம் உருவாகி இன்று வந்து சேர்ந்துள்ளனர். சிலர் முயன்று கொண்டும் இருக்கின்றார்கள்.  ஆனால் எத்தனை பேர்களை வாசிக்க வைக்க முடிகின்றது? எத்தனை பேர்களைப் பணம் கொடுத்து வாங்க வைக்க முடிகின்றது? கிண்டில் அன் லிமிட் ல் உள்ளவர்களை தங்கள் வாசகர்களாக மாற்ற முடிந்துள்ளது? என்பதில் தான் அவரவர் திறமை வெளிப்படுகின்றது.

அமேசான் தளம் ஒவ்வொரு நாளும் மதியம் 1.30 இலவசமாகப் படிக்கக் கொடுப்பவர்களின் புத்தகங்களைப் பட்டியலிடுகின்றது.  இது இரண்டு விதமாக உள்ளது.  ஒன்று ஒவ்வொரு தினமும் முதல் 100 அதிகமாக விற்பனையாகும் புத்தகம்.  மற்றொன்று முதல் 100 இலவசப் புத்தகங்களில் அதிகமாக வாசகர்கள் விரும்பிய புத்தகங்கள் என்று இரண்டு விதமாகப் பட்டியலிட்டுக் காட்டுகின்றது.

அண்டார்டிக்கா தவிர்த்து அனைத்துக் கண்டகங்களில் ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் மொழி பேசக்கூடியவர்கள் வாழ்கின்றார்கள். எழுதவும் செய்கின்றார்கள்.  அமேசான் வேறெந்த மொழியையும் இதுவரையிலும் முன்னிலைப்படுத்தவில்லை. உலக அளவில் போட்டி என்பதாக எடுத்துக் கொள்ளலாம்.  ஏறக்குறைய 192 நாடுகளை நம்மால் எடுத்துக் கொள்ள முடியும்.  இதில் தான் நாம் நமக்கான இடத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.  முயல வேண்டும்.

ஒவ்வொரு முறையும் இங்கு சிடி கடைக்குச் செல்லும் போது உரிமம் பெற்ற பட சிடி குவியல் குவியலாக இருப்பதைப் பார்த்துள்ளேன்.  ஒரு வாரத்திற்கு முன்பு, ஒரு மாதத்திற்கு முன்பு வந்த படங்களைக்கூடச் சீண்ட ஆளில்லாமல் இருப்பதைப் பார்த்துள்ளேன். 3 முதல் 10 கோடி செலவழித்து திரைமொழியாக மாற்றப்பட்ட கதைக்கு நேர்ந்த நிலைமையைப் பார்த்து பலமுறை யோசித்துள்ளேன். எங்கே? எப்படித் தோற்றார்கள் என்று எண்ணி வருத்தப்பட்டுள்ளேன்.

காலத்தோடு பொருந்திப் போகாத, போக முடியாத படைப்பாளிகள் தயவு தாட்சண்ணியமின்றி தூக்கி எறியப்படுகின்றார்கள் என்பதே எதார்த்தம்.

 இதுவே தான் வாசிப்பு தளத்திலும் நடந்து கொண்டிருக்கின்றது.

உங்களின் அபரிமிதமான திறமைகள் வெகுஜனம் கொண்டாடப்பட வேண்டும் என்று எண்ணம் உங்களுக்கு உருவாகியிருந்தால் நீங்கள் உங்களை மீளாய்வு செய்து கொள்ளுங்கள். எழுத்து என்பது எழுதிக் கொண்டிருப்பது அல்ல.

உங்களை எழுத்து எழுத வைக்க வேண்டும்.  அது அப்போதைய சூழலில் மற்றவர்களுக்குத் தேவையாய் இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருங்கள்.

இலவசமாகக் கொடுத்தால் மற்றவர்கள் படிப்பார்கள் என்ற எண்ணம் இருந்தால் அதையும் மாற்றிக் கொள்ளுங்கள்.  ஒரு முறை வந்து படித்த பின்பு அடுத்த முறை வாசித்தவர்கள் உங்களைத் தேடி அலையும் வண்ணம் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருங்கள்.

அமேசான் ஒன்றும் உலக நீதிபதி அல்ல. தரத்தையும், தகுதியையும் தீர்மானிக்க. 

ஆனால் ஒவ்வொரு காலகட்டத்திலும் நடக்கும் மாற்றங்களில் இப்போதைய சூழலில் இதுவும் ஒரு காலக்கண்ணாடி. நாம் புரிந்து கொள்ள முடியும். நான் புரிந்து கொண்டேன். மாற்றிக் கொண்டேன். அதன் பொருட்டு நான் அடைந்த இலக்கை, சாட்சியை உங்கள் பார்வைக்குத் தந்துள்ளேன். நம்மை எவரும் அங்கீகரிக்க மாட்டார்கள். நாம் தான் நம்மை முதலில் அங்கீகரித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக இதனை இங்கே எழுதத் தோன்றியது.

காரணம் மனிதர்கள் மனச்சிக்கல் கொண்டவர்கள். அடையாளச் சிக்கல் உள்ளவர்கள்.  நம்மை ஏன் வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் நாளுக்கு நாள் தத்தமது சுயத்தையே இழந்து வாழ்பவர்கள். இவையெல்லாம் மனித உளவியல் தொடர்புடையது.  இவற்றை எல்லாம் யோசித்து தம் திறமைகளை வெளிக்காட்டாமல் இருந்தால் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு நமக்குக் கழிவிரக்கம் தான் மிஞ்சும். அது கடைசியில் பொறாமையாக மாறும். உடல் உறுப்புகளைப் பாதிக்கும். ஆரோக்கியம் இழந்து தவிப்போம். உடம்பு என்பது பாரமாக மாறும்.  மரணம் குறித்த எதிர்பார்ப்பு உருவாகும்.

நம் எண்ணங்கள் தெளிவாக இருக்க வேண்டும்.

தெளிவான எண்ணங்களை வளர்த்துக் கொண்டவர்கள் ,தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டே தான் இருக்கின்றார்கள் என்பதனையும் நாம் உணர்ந்து இருக்க வேண்டும்.
  

8 comments:

சிவானந்தம் said...

//ஆனால் ஒவ்வொரு காலகட்டத்திலும் நடக்கும் மாற்றங்களில் இப்போதைய சூழலில் இதுவும் ஒரு காலக்கண்ணாடி. நாம் புரிந்து கொள்ள முடியும். நான் புரிந்து கொண்டேன். மாற்றிக் கொண்டேன். அதன் பொருட்டு நான் அடைந்த இலக்கை, சாட்சியை உங்கள் பார்வைக்குத் தந்துள்ளேன். நம்மை எவரும் அங்கீகரிக்க மாட்டார்கள். நாம் தான் நம்மை முதலில் அங்கீகரித்துக் கொள்ள வேண்டும்//

அற்புதமான கருத்துக்கள்,
நானும் அமேசானுக்கு போய் பாப்போம் என்று இருக்கிறேன். அதாவது என்னையும் மாற்றிக்கொள்ள முயற்சிக்கிறேன்.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

நீங்கள் சொல்வதை முற்றிலும் ஏற்கிறேன். நான் வைத்துள்ள திட்டங்களில் ஒன்று. விரைவில் முயற்சியில் இறங்கவுள்ளேன். உங்களின் ஆதங்கம் பிறருக்கு ஒரு உந்துசக்தியாக அமையும் என்பனேத என் எண்ணம்.

ஜோதிஜி said...

வாழ்த்தி வரவேற்கிறேன்.

ஜோதிஜி said...

உங்கள் அலைபேசியில் இதனை தரவிறக்கம் செய்து கொள்ளுங்க.
https://play.google.com/store/apps/details?id=com.amazon.kindle&hl=en_IN

சிகரம் பாரதி said...

//காலத்தோடு பொருந்திப் போகாத, போக முடியாத படைப்பாளிகள் தயவு தாட்சண்ணியமின்றி தூக்கி எறியப்படுகின்றார்கள் என்பதே எதார்த்தம்.// - யதார்த்தமான உண்மை. புதிய தகவல்களுக்கு நன்றி.

தமிழ்மணத்துக்கு மாற்றாக வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை .
----- முதல் ஓலை பதிவில் பரீட்சார்த்தமாக ஆறு வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அத்துடன், அடுத்த மாதம் முதல் தமிழ்மணம் போல தனிப்பதிவுகளாக அனைத்து வலைத்தளங்களையும் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன்.

ஜோதிஜி said...

தமிழ்மணம் வெற்றி பெற்றதற்குக் காரணம் அதன் வடிவமைப்பு. மற்றொன்று நம் தளத்தை சேர் என்ற பகுதியில் சேர்த்து விட்டால் போதும். அடுத்த முறை அதுவாகவே இணைத்துக் கொள்ளும் அளவிற்கு வைத்திருந்தனர். நாம் கொடுத்துள்ள குறி சொல் மூலம் அந்தப் பகுதிக்குச் சென்று விடும். நீங்களும் அதே போல மாற்றினால் நன்றாக இருக்கும்.

திண்டுக்கல் தனபாலன் said...

// படைப்பாளிகள் தயவு தாட்சண்ணியமின்றி தூக்கி எறியப்படுகின்றார்கள் //

உண்மை தான்... இருந்தாலும் ஒரு ஏணியாக இருந்து திருப்திப்பட்டுக் கொள்வதில் தவறில்லை...?

சமாளித்தேனா...!?

வெங்கட் நாகராஜ் said...

அமேசான் தளத்தில் உங்கள் செயல்பாடுகள் சிறப்பு.

நானும் என் பதிவுகளை மின்னூலாக்க வேண்டும் - ஆனாலும் பணிச்சுமை, வீட்டு வேலைகள் என நேரத்தினைக் கைக்குள் கொண்டுவர இயலவில்லை. ஒரு தொடரை ஒரே கோப்பில் இணைக்க ஆரம்பித்து பாதியில் நிற்கிறது.

தொடரட்டும் உங்கள் வெற்றிப் பயணம்.