Saturday, September 21, 2013

மாடு கட்டி போரடித்தால் மாளாது என்று..........

இன்று படித்தவர்கள் முதல் பலரும் நாம் இனிமேலும் பழங்கதைகளைப் பற்றி பேசி ஒன்றும் ஆகப்போவதில்லை. பிழைப்பதற்கான வழிகளைப் பற்றியே நாம் பேச வேண்டும். காரணம் இங்கே வெள்ளையர்கள் வந்த பிறகே தொழில் நுட்ப வசதிகளும், முன்னேற்றப் பாதைகளும் நமக்கு கிடைத்தன. இன்றும் கூட அவர்கள் மூலம் கிடைக்கும் உலகளாவிய வாய்ப்புகள் மூலம் தான் நாம் வளர்ந்து கொண்டு இருக்கின்றோம்.

குறைகள் சொல்லி புண்ணியமில்லை. நாம் வாழ்வதற்கான வழிகளை தேடிக் கொள்ள வேண்டும். வாழ உதவும் மொழியும், வசதிகளை உருவாக்கும் தொழிலும் தான் நமக்குத் தேவை. ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்குள் வராமல் இருந்தால் இன்னமும் நாம் இருண்ட காலத்திற்குள் தான் இருந்திருப்போம் என்பதே.

இன்று இந்தியாவில் விவசாயம் என்பது லாபம் இல்லாத தொழில். மேலும் வருடந்தோறும் விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கை வருடந்தோறும் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கின்றது.

ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்குள் வந்த போது, இங்குள்ள விவசாயம் எப்படியிருந்தது?

18ஆம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு வந்த ஜான் அகஸ்டஸ் என்ற வெள்ளையர் அன்று ஆங்கிலேய அரசுக்குக் கொடுத்த அறிக்கை.

தண்ணீர் பாய்ச்சி வேளாண்மை செய்வது எங்கும் உள்ளதுதான்.  இந்தியாவில் செய்திருப்பது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. மிகப்பெரிய அறிவுபூர்வமான செயல்பாடு இது. அதுபோலவே ஏராளமான மக்களின் உழைப்பும் அதில் அடங்கியுள்ளது.

பல்வேறுபட்ட உயிர் சூழலமைப்புகள் நிலவுகின்றன. இவற்றுக்கு ஏற்ப நீர்பாசன அமைப்புகளை ஏற்படுத்தி இருப்பது நமக்கு வியப்பளிக்கிறது. மாபெரும் ஏரிகள், மிகப்பெரும் அணைகள், குளங்கள், குட்டைகள், கால்வாய்கள் இப்படி அவர்கள் தேவைக்கு ஏற்ப உருவாக்கி இருந்தார்கள். அவற்றுக்குப் பெயரும் வைத்துள்ளார்கள்.

மலைப்பகுதியில் வாழ்ந்தவர்கள் வித்தியாசமாகச் செய்திருந்தார்கள். கற்பாறைகளை அடுக்கி கால்வாய் அமைத்தார்கள். சில இடங்களில் புவிஈர்ப்பு விசைக்கு எதிராகவே நீரை வழிப்படுத்தியுள்ளார்கள்.  ஏரி, குளங்கள் சின்னதும் பெரியதுமாக இருந்தாலும் மிகச்சிறிய ஏரி மூலம் குறைந்தது 50 ஏக்கர் நிலத்துக்கு நீர் பாய்ந்தது.  நடுத்தட்டுக் குளங்களில் இருந்து 100 ஏக்கர் நிலத்துக்கு தண்ணீர் பாய்ந்தது.

மிகப்பெரிய ஏரி நீரைக் கொண்டு 500 ஏக்கர் வரை பயிர் வைக்க முடிந்தது.  ஏரி குளங்களை ஏற்படுத்த எப்படிப்பட்ட இடங்களைத் தேர்வு செய்தார்கள்?

இரண்டு குன்றுகள் கூடுகின்ற இடத்தில் ஏரி ஒன்றை அமைத்தார்கள்.  அந்த குன்றுகள் மீதும் அவற்றைச் சுற்றியுள்ள இடங்களிலும் பெய்யும் மழைநீர் முழுவதும் ஏரியில் வந்து தேங்குகிறது. மலையடிவாரத்தில் மட்டுமல்லாது ஆறுகளை ஒட்டிய பள்ளத்தாக்குகளிலும் ஏரிகளை அமைத்தார்கள்.

அது மட்டுமல்ல, தண்ணீர் இல்லாத வட்டாரத்தில் ஏரிகளையும், குளங்களையும் வெட்டினார்கள்,  கால்வாய்களை வெட்டி இந்த ஏரி குளங்களை ஆற்றோடும் பெரிய நதியோடும் இணைத்தார்கள்.  கல்லும் முள்ளும் நிறைந்த இடங்கள் நெல்லும், மணியும் விளையும் நிலங்களாக மாற்றப்பட்டன.

ஒரு ஏரியை அமைப்பதற்கு இரண்டு மூன்று ஆண்டுகாலம் பிடித்தது.  மக்கள் ஆயிரக்கணக்கில் வேலை செய்தார்கள். வெட்டுவதற்கு 100 வண்டிகளில் கருங்கற்களை ஏற்றி சென்றார்கள்.  வேலைகளை மேற்பார்வை செய்ய அலுவலர்கள் நியமிக்கப்பட்டார்கள்.  வேலைகளைச் செய்து முடிப்பதற்கான தேதியும் முடிவு செய்யப்பட்டது.

உழைத்த மக்கள் அடைந்த பயன் என்ன?

ஏரி குளங்களை ஏற்படுத்துவதில் ஈடுபட்ட மக்களுக்கு உரிமைகள் வழங்கப்பட்டன.இறையிலி நிலம் வழங்கப்பட்டது.

அதாவது பொதுப்பணிகளில் ஈடுபடுவோருக்கு நிலவரி செலுத்தாமல் பயிர் வைக்கும் உரிமை வழங்கப்பட்டது.  ஏரி வெட்டுவதில் ஈடுபட்டவர்களுக்கு அந்த ஏரி நீர்ப்பாசன நிலம் கட்டுக் குத்தகைக்கு விடப்பட்டது.  விளைச்சலில் நாலில்  ஒரு பங்கை நில உரிமையாளரும், மூன்று பங்கை உழுதவரும் எடுத்துக் கொள்ள வேண்டும். 

18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி மற்றும் 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கக்கால ஆங்கிலேயர் ஆவணங்கள் அலகாபாத் முதல் கோவை வரையில் பரவலாகப் பல இடங்களில் உயர் விளைச்சல் இருந்ததைப் பதிவு செய்துள்ளன.

தென்னிந்தியாவில் காவிரி, கிருஷ்ணா, கோதாவரி ஆற்றுப்படுகைகள் வளம் மிகுந்தவை. இவை போன்று செங்கற்பட்டு மாவட்டம் வளம் மிகுந்த பகுதி அல்ல.  ஆனால் இங்கு கூட உழவர்கள் உயர்ந்த அளவு விளைச்சல் பெற்று வந்தனர்.

1910 கிராமங்களுக்குள் சுமார் 1500 கிராமங்களின் வருவாய் பற்றிய தரவுகள் கிடைத்துள்ளன. 1500 கிராமங்களில் வாழ்ந்த 45000 குடும்பங்கள் ஒவ்வொரு வருடத்திற்கு சராசரியாக 5 டன் (5000 கிலோ) உணவு தானியம் பெற்றது.  65 கிராமங்கள் ஒரு வருடத்திற்குச் சராசரியாக 5000 கலத்திற்கு அதிகமாக உணவு தானியம் உற்பத்தி செய்து வந்தன. (ஒரு கலம் என்பது 125 கிலோ கிராம்) நெல் உயர் விளைச்சல் தரும் கிராமங்களின் சராசரி விளைதிறன் மாநிலத்தின் சராசரி விளை திறனைப் போல இரு மடங்காகும்.

இந்த 65 கிராமங்களுக்கு சிலவற்றின் சராசரி விளைதிறன் மிக அதிகமாக இருந்துள்ளது.  அதாவது காணிக்கு 35 கலம் வரை விளைந்துள்ளது.  இந்த விளைச்சல் எக்டருக்கு 9 டன் ( ஏக்கருக்கு 3600 கிலோ) 1 ஏக்கருக்கு 45 மூட்டைகள் ( 75 கிலோ மூட்டை) விளைச்சல் ஆகும்.

சிங்கப்பெருமாள் கோயிலையும், ஸ்ரீபெரும்புதூரையும் இணைக்கும் சாலையில் வடக்குப்பட்டு கிராமம் அமைந்துள்ளது. 18 ஆம் நூற்றாண்டு ஆவணங்களின்படி வடக்குப்பட்டு கிராமம் வேளாண்மையில்  சிறப்புற்று உயர்விளைச்சல் கண்டது.

1764 இல் வடக்குப்பட்டி கிராமத்தில் 368 எக்டர் நிலப்பரப்பில் (920 ஏக்கர்) 1500 டன் உணவு உற்பத்தியானது.  1762 முதல் 1766 வரையான 5 வருடங்களில் வடக்குப்பட்டின் சராசரி விளை திறன் எக்டருக்கு 4 டன் ( ஏக்கருக்கு 1600 கிலோ).

பார்னார்டு என்பவர் 1774 ஆம் வருடம் நவம்பர்  எழுதிய தனது கடிதத்தில் 1772ல்தான் இது போன்று  கிராமக் கணக்கு ஆவணங்களைத் தாம் சேகரிக்கத் தொடங்கி இருப்பதாகக் குறிப்பிடுகிறார்.

1100 ஆம் ஆண்டு தென்னாற்காடு மாவட்டத்தில் ஏக்கருக்கு 5800 கிலோ விளைந்ததாக கல்வெட்டு கூறுகிறது.

1325 ஆம் ஆண்டு ராமநாதபுரத்திற்கு ஏக்கருக்கு 8000 கிலோ விளைந்ததாக கல்வெட்டு கூறுகிறது. 1807 ஆம் ஆண்டு கோவை மாவட்டத்தில் ஏக்கருக்கு 5200 கிலோ விளைந்ததாக ஐரோப்பிய ஆவணம் சொல்கின்றது.

(அடுத்த பதிவோடு இந்த தொடர் முடிவடைகின்றது. எழுத உதவிய புத்தகங்கள் குறித்து விரிவாக பேசுவோம்)

தொடர்புடைய பதிவுகள்

அட்சய பாத்திரம் -- இங்கே விற்பனைக்கு உண்டு

                                                                                                         

7 comments:

நிகழ்காலத்தில்... said...

எப்படி இருந்தா நான் இப்படி ஆயிட்டேன்னு தமிழகத்துக்கு பேசும்திறன் இருந்தா சொல்லி இருக்கும் ...

திண்டுக்கல் தனபாலன் said...

எழுத உதவிய புத்தகங்கள் குறித்து அறிய ஆவலாக உள்ளேன்...

எஸ் சம்பத் said...

இப்படியிருந்த உணவுதானிய விவசாயத்தை எப்படி கார்ப்பரேட் முதலாளிகள் உலகம் அழித்து, ஒருபுறம் பணம் தரும் பயிர்கள் என திசை திருப்பி இன்று விவசாயமே இல்லை என்ற மலட்டு நிலைக்கு ஆளாக்கியிருக்கிறது என்பதை திரு பி.சாய்நாத் அவர்களின் இரண்டு மணி நேர உரை தெரிவித்ததை பாரத்தோம். புத்தகங்கள் கிடைக்கலாம், தரவுகள் கிடைக்கலாம்- ஆனால் தொடர்ச்சியாக படிக்கும் வண்ணம், விசயம் மக்களை எளிதாக சென்றடையும் வண்ணம் ஜோதியின் எழுத்து அமைவது சிறப்பு, தொடரட்டும் சிறந்த பணி

vimal said...

புள்ளி விவரங்கள் ஆச்சர்யத்தை ஏற்படுத்துகின்றது நெற்களஞ்சியம் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் என்றுமட்டுமே நினைத்திருந்தேன் வடக்குபட்டியும் சளைத்ததல்ல போலிருக்கிறதே ! தகவலுக்கு நன்றி .

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

இவ்வளவு தகவல்களை திரட்டியதற்கு பாராட்டுக்கள். நானும் செங்கல்பட்டு (தற்போதைய காஞ்சிபுரம் மாவட்டம்) மாவட்டத்தை சேர்ந்தவன்.

எம்.ஞானசேகரன் said...

தகவல்கள் எல்லாம் வியப்பாக இருக்கிறது ஜோதிஜி. தற்போது நான் இருப்பது கூட வடக்குப்பட்டுக்கு மிக அருகில் அதாவது தாம்பரத்திற்கு மிக அருகில் படப்பையில்தான்.

ஜோதிஜி said...

வரலாறு சொல்லும் செய்திகள் மிக அற்புதமானவை. அது தேவையானது தேவையற்றது என்பதையும் கடந்து நிற்பவை. துரதிஷ்டமாக நம் வாழ்க்கைக்கு அப்போதைக்கு என்ன தேவையோ அதை மட்டுமே எடுத்துக் கொண்டு வாழ பழகி விட்டோம்.

அதையே ஒவ்வொரு காலகட்டத்திலும் வாழக் கூடிய சமூகம் எடுத்துக் கொண்டு பழசை மறந்து விட்டு அல்லது நினைக்கத் தேவையில்லை என்பதை கருத்தில் கொண்டு நகர்ந்து கொண்டேயிருக்கிறது.

வரலாற்றுத் தடங்களை மேற்கத்திய சமூகம் அழகாக பதிவு செய்வதோடு அவர்களுக்குச் சாதகமான தகவல்களை இட்டு நிரப்பி அது தான் வரலாறு என்பதாகவும் உருவாக்கப்படுவதால் இன்று வரையிலும் அதுவே இறந்த காலம் உருவாக்கிய நிகழ்காலம் என்பதாகவும் இதன் மூலம் எதிர்காலத்தை தீர்மானிக்கக்கூடிய சக்தியாகவும் உருவெடுக்கின்றது.

மிகப் பெரிய இந்திய பல்கலைக்கழகமான நாளந்தா முஸ்லீம் படைபெயடுப்பாளர்களால் அழிக்கப்பட்டது முதல் இலங்கையில் கால் நூற்றாண்டுக்கு முன்னால் அழிக்கப்பட்ட நினைத்துப் பார்க்கமுடியாத ஆவண பொக்கிஷகங்களைக் கொண்டே நூலகத்தை அழித்தது வரைக்கும் தமிழர்களின் வரலாற்றுச் சுவடுகளை ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு ஆதிக்கச் சக்திகள் அழித்துக் கொண்டே வந்து இன்று நம்முடைய வரலாற்று என்பதை என்ன? என்று கேட்கும் நிலைக்கு வந்துள்ளது என்பது கூட ஆச்சரியமல்ல.

இன்று வரையிலும் நம்மை விட அத்தனை விசயங்களையும் நமக்கு தருவது மேற்கத்திய நாகரிகமே என்று நம்மவர்கள் நம்புவது தான் ஆச்சரியம்.

கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றி.