Friday, August 09, 2013

அவன் ஒரு தீவிரவாதி

அவனின் நோக்கம்  ஒன்று மட்டுமே. இலக்கை அடைய வேண்டும். உருவாகும் விபரீதங்களைப் பற்றி கவலைப்படுவதில்லை.ஆனால் செயலாக்கம் முக்கியம்.  புத்தி பொறுமையாக இரு என்று எச்சரிக்கும். ஆனால் மனம் மறுக்கும்.

இடைவிடாத இந்த போராட்டத்தில் உணர்ச்சி கொந்தளிப்பாகி மனம் கழிவிரக்கத்தில் கொண்டு போய் சேர்க்கும்.  

நடந்ததை,நடக்கப்போவதை யோசித்து,இப்படி நடந்து விடக்கூடுமோ என்று பயந்து நம்மை சர்வகாலமும் அலைகழித்துக் கொண்டே இருக்கும். இந்த தீவிரவாதி ஒவ்வொரு மனதிலும் நிரந்தரமாகவே இருப்பவர்.இவர் நாட்டை சீர் குலைக்கும் தீவிரவாதி அல்ல.

ஆனால் அதை விட கொடூரமான விளைவுகளை ஏற்படுத்துபவர்.  இவரை நாள்தோறும் நம்மோடு வாழ அனுமதித்துக் கொண்டுருக்கின்றோம். 

அவரின் பெயர் தான் திருவாளர் கவலை.. தீவிரமான எண்ணங்கள் கவலைகளை உருவாக்குகின்றது. பல சமயம் வெறுத்துப் போய் சிலரை காதல், சாதி, மத, பணத் தீவிரவாதியாகவும் மாற்றி விடுகின்றது.

நடந்த சம்பவங்கள்,காணும் காட்சிகள் என்று ஒவ்வொன்றையும் கண்கள் உள்வாங்க, மூளையில் பிரதிபலிக்க ந்யூரான்கள் ஒவ்வொன்றையும் இது தேவை இது தேவையில்லை என்று பிரிக்க முயற்சித்துக் கொண்டிருக்கும் போது மனம் உள்ளே புகுந்து டேய் சோமாறி நீ கம்னு கிட என்று சொல்லிட நரம்புகள் வழியே தனது இலக்கை அடைகின்றது.

திருவாளர் கவலைக்கு உடம்பில் அதன் இலக்கென்பது  வயிற்றுப்பகுதியில் இருப்பதால் மனிதர்களின் ஒவ்வொரு கவலையின் பிரதிபலிப்பும் இங்கே வந்து முடிகின்றது.

பலருக்கு வாழ்க்கை முழுக்க போராடக்கூடிய (ஆரோக்கிய) போராட்டங்களும் இங்கிருந்தே தொடங்குகின்றது. 

நாம் உண்ணும் உணவை  செறிக்க ஹைட்ரோ குளோரிக் அமிலம் (Hydrochloric Acid )என்பதை இயல்பாகவே இயற்கை உருவாக்கி வைத்துள்ளது. 

இந்த அமிலத்தை ஒரு குடுவையில் எடுத்து ஒரு இரும்புத்துண்டை அதில் போட்டு வைத்தால் இருந்த இடம் இல்லாமல் மாயமாக கரைந்து விடும். இது இல்லாவிட்டால் நாம் அம்பேல். 

பர்கர் சாப்பிட்டாலும், பாயாசம் சாப்பிட்டாலும் வயிற்றுக்குள் சென்றால் செரிமானமாக மாறாவிட்டால் ஆய் ஊய் என்று கத்தி ஊரை கூப்பிட்டு இறுதிப் பயணம் செல்ல வேண்டியிருக்கும். 

அளவோடு வளமோடு என்பது உடம்பில் உள்ள ஒவ்வொரு செயல்பாட்டுக்கும் உள்ளது. இப்படித்தான் யாரோ ஒருத்தரு நம்முடைய கண்ணுக்குத் தெரியாத சூத்திரத்தை நிரலியாக எழுதிவைத்துள்ளனர்.  இதை பலர் விதி என்கிறார்கள். புத்திசாலிகள் மதி என்றும் சொல்கின்றார்கள்.

நல்லா பசிக்குது.  போய் ஒரு கட்டு கட்டனும்ன்னு நீங்க கிளம்பிட்டீங்கன்னா உள்ளே இந்த அமிலம் சுரக்கத் தொடங்கியுள்ளது என்று அர்த்தம். பசித்த போது சாப்பிட்ட முடியாதவர்களுக்கு இந்த அமிலம் அதிகமாக சுரந்து இரைப்பை மற்றும் சிறுகுடல் சுவர்களில் உள்ள மியூக்கோஸா (Mucosa)படலத்தை சிதைத்து புண்ணாக மாற்றுகின்றது. உள்ளே உள்ள வயிற்றுச் சுவரே பல சமயம் சாப்பாடாக மாறிவிடுகின்றது. இந்த குடல் புண் உருவாக ஏராளமான காரணங்கள் இருந்தாலும் மற்ற எல்லாவற்றையும் விட கவலைகள் கொடுக்கும் அல்வாத் துண்டுகள் தான் நம் ஆரோக்கியத்தை விலை பேசத் தொடங்கி விடுகின்றது. 

குடல் புண்ணில் இரண்டு வகை உள்ளது.

வாயுக்கோளாறால் உருவாக்குவது Gastric Ulcer

சிறுகுடலில் ஏற்படும் புண் Duodental ulcer

இரண்டையும் சேர்த்து உருவாவதை peptic ulcer

நாம் பேசப்போவது மனித உடற்கூறியல் பற்றியல்ல.  

இந்த குடல்புண்களை அதிக அளவு உருவாக்கும் தீவிரவாதியான கவலையைப் பற்றியே.

கலைகளில்  விருப்பமில்லாதவர்களைக் கூட நாம் பார்த்திருப்போம்.  ஆனால் கவலையில்லாத மனிதனை சித்த சுவாதீனம் இல்லாதவன் என்றே தற்போதைய சமூகம் அர்த்தப்படுத்துகின்றது.

நாம் அணிந்திருக்கும் ஆடைகளைப் போலவே எப்போதும் நம்மோடு இருப்பவை பயமே. சின்ன பயம், பெரிய பயம் என்ற பாரபட்சமின்றி எப்போதும் ஏதோவொரு பயம் நம்மோடு இருக்க அதுவே நமக்குத் தேவையானதாகவும் அன்றாட செயல்பாடுகளையும் அதுவே தீர்மானிக்கின்றது. 

ஏமாற்றம், பயம், நிராகரிப்பு, எரிச்சல், அதிக வேலை, குழப்பம் போன்ற பல காரணிகள் மன அழுத்தத்தை உருவாக்குகின்றது. விவாகரத்துகள், நோய்கள், பதவி இழப்பு, கடன், வறுமை, வேலை அழுத்தம், கோபம், நட்பு முறிவு, உறவு விரிசல், என நம்மைச் சுற்றி நிகழும் எல்லா விதமான காரணிகளும் மன அழுத்தத்திற்குள் கொண்டு போய் விடுகின்றது. 

இவற்றைத் தவிர இந்த மன அழுத்தத்தை நாமே விலை கொடுத்து வாங்கவும் செய்கின்றோம். அதாவது புகை பிடித்தல், சரியான உணவுப் பழக்கம் இல்லாமை, போதைமருத்துப் பழக்கம், குடிப்பழக்கம், சரியான தூக்கம் இல்லாமை போன்றவையே. இந்த மன அழுத்தம் உருவாக இயல்பாகவே பயமும் பங்களாளியாக நம்முடனே தங்கி விடுகின்றது.

பல சமயம் பயங்கள் சொல்லும் வாழ்க்கையே நம்மை பக்குவப்படுத்தவும் செய்கின்றது.

ஒரு அளவு வரை, மன அழுத்தம் இருப்பது சீரான வளர்ச்சிக்கு தேவைப்பட்டாலும் அழுத்தம் அதிகமானால் மனநோயை தூண்டி மன உளைச்சலை அதிகரிக்கும்.  காரணங்கள் அறியப்படாவிட்டால் மன அழுத்தம் முதல் மனநோய் வரைக்கும் என்ற கட்டுரைக்கு நமக்கு தகவல் கிடைத்து விடும் வாய்ப்புள்ளது. 

பதட்டம் பயத்தை உருவாக்குகின்றது. பயம் கவலை வரவேற்கின்றது. கவலைகள் மன அழுத்த கதவை திறக்க இனம் கண்டு கொள்ளாத போது உலகே மாயம் வாழ்வே மாயம் என்று தெருவில் அலையும் பரதேசி வாழ்க்கை அறிமுகமாகின்றது.

குறிப்பிட்ட செயலை செய்வதற்கு முன்பு திட்டமிடுதல் முக்கியம் என்பது எந்த அளவுக்கு முக்கியமோ  எல்லையை மீறத்  தொடங்க மனதில் இனம் புரியாத வேகமும் உருவாகி விடுவதை கவனித்தால் புரியும்.

நேர்மறை மற்றும் எதிர்மறை என இரண்டு வகையான அழுத்தங்கள் உள்ளன. நேர்மறையென்பது சாலை விதிகளை மதித்து வண்டியை ஓட்டுதல். எதிர்மறையென்பது வலது பக்கம் கையை காட்டி இடது பக்கம் வண்டியை திருப்புதல் போன்றது. 

காலையில் எழும் வரையிலும் உயிரைப் பற்றி தெரியாத உடம்பு கண்விழித்து உலகத்தைப் பார்க்கத் தொடங்க ஒவ்வொரு சிந்தனையிலும் இந்த பயங்கள் நம்மில் ஒட்டிக் கொண்டுவிட எழுந்து ஓட வைக்கின்றது.


பாடங்களை சரியாக சொல்லத் தெரியாத போது ஆசிரியரை எப்படி சமாளிக்கப் போகின்றோம்? என்ற பயம் நம் வாழ்க்கையை தொடங்கி வைக்கின்றது. படித்து முடித்து சரியான வேலைகள் கிடைக்காத போது எதிர்கொள்ளும் கேள்விகளை எப்படி சமாளிக்கப் போகின்றோம் என்ற பயம் தொடர வைக்கின்றது. 

மனைவி கேட்ட பூ முழம் முப்பது ரூபாயா? என்று யோசிக்கத் துவங்கும் போது வாழ்க்கை குறித்த அக்கறை பயம் வருகின்றது. மகளுக்கு திருமணம், வீட்டு வாடகை, வங்கியில் மாதம் தோறும் செலுத்த வேண்டிய தொகை என்று பயமென்பது வாழ்நாள் முழுக்க வளர்பிறையாகவே உள்ளது.இதற்கு தேய்பிறை என்பதே இல்லை.

இன்றைய மருத்துவம் அனைத்தையும் கூறுபிரித்து காட்டினால் மனம் சார்ந்த செயல்பாடுகளை ஒரு அளவுக்கு மேல் அதனால் பாகுபடுத்தி பிரித்துக் காட்ட முடியவில்லை.  

ஆனால் தமிழர்களின் வரலாற்றுச் சுவடுகள் மனமே மருந்து என்று  எளிதாக சொல்லிவிட்டுச் சென்று விட்டது.

ஆனால் இந்த மனத்திற்கு எந்த மருந்துகளும் கடைசி வரையிலும் வேலை செய்வதில்லை.  பயிற்சி தான் தீர்வாக உள்ளது.  அந்த பயிற்சியை கொண்டு வர முடியாமல் தான் நாம் தடுமாறுகின்றோம்.  தடுமாற்றமே தடம் புரள வைக்கின்றது.

தற்போதைய சமூகத்தில் ஆழ் மன பயங்கள் ஒவ்வொன்றுக்கும் ஆதாரமாக இன்று இருப்பவை பணம்.

இந்த பணமே எதிர்கால பயத்தை உருவாக்குகின்றது. வளர்க்கின்றது. நாமும் அதையே விரும்புகின்றோம் என்பதால் பயங்களை நம்மோடு ஒட்டி வாழக்கூடிய ஒன்றாகவே இருந்து விடுகின்றது.

பணமில்லாதவன் பசிக்காக ஓட அதுவே பணமிருப்பவர்கள் உடம்பை குறைக்க ஓடுகின்றார்கள்.  இரண்டு செயலும் ஒன்று. ஆனால் காரணங்கள் வெவ்வேறு.

அறிவு வளர வளர சிந்தனைகளின் வளர்ச்சியை இன்றைய சமூகம் கொண்டாடுகின்றது. உருவாகும் கேள்விகளுக்கு பதில் தேட அதுவே வளர்ச்சியின் பாதை என்கிறார்கள். எதையும் கேள்வியாக கேட்டுப் பழகு என்றும் சொல்கின்றார்கள்.

ஒருவகையில் பார்த்தால் அறியாமையே ஆயுதம் போலத்தான் உள்ளது. எதையும் தெரியாமல் இருப்பதால் அவர்கள் மனதில் குழப்பங்கள் உருவாவது இல்லை. இருப்பதே சிறப்பு என்கிற சிறிய வட்டமாக இருந்தாலும் அவரவர் வாழ்க்கையை இயல்பாக அனுபவித்து வாழ முடிகின்றது.

தற்போது வெற்றி என்பதை எளிதாக வரையறைத்து வைத்துள்ளனர். 

வெற்றி என்பது என்ன?  

தேவையான அளவுக்கு பணம் இருந்தால் அவன் வெற்றி பெற்றவன். 

மிதமிஞ்சிய பணமிருந்தால் அவனே சாதனையாளன்.  

ஒருவனிடம் இருக்கும் பணமே சகலத்தையும் தீர்மானிக்கின்றது. அந்தஸ்த்து, அதிகாரம், செல்வாக்கு என்று சகல திசையிலும் பரவி நிற்கின்றது. பணம் தவிர மற்றவற்றை பேசுபவர்களை இறுதியாக பரதேசி என்கிற நிலை வரைக்கும் நம்மவர்கள் கொண்டு வந்து நிறுத்திவிடுகின்றார்கள்.

பணத்தை மெத்தைக்கு கீழே வைத்து தூங்க முடியாமல் போராடிக் கொண்டிருப்பவர்கள் ஒரு பக்கமும் வாழ்க்கைக்கு தேவையான பணத்தை தேடிக் கொண்டிருப்பவர்களும் மறுபக்கம் போராடிக் கொண்டேதான் இருக்கின்றார்கள். 

பணத்தை தேவைக்கு அதிகமாக சேர்த்தவர்களும் எதையும் முழுமையாக அனுபவிக்க முடிவதில்லை.வாழ்க்கை தேவைக்கு தேடிக் கொண்டிருப்பவர்களும் ஆசைப்படுவதை அடைய முடிவதில்லை.

இந்த பணம் ஒவ்வொரு மனிதரையும் நாள்தோறும் மாற்றிக் கொண்டேயிருந்தாலும்  நமக்கு பணத்தாசை குறைவதில்லை.  

பெருமையும் கர்வமும் இதய நோய்களை உருவாக்கும்

கவலையும் துயரமும் வயிற்று நோய்களை உருவாக்கும்

துக்கமும் அழுகையும் சுவாச நோய்களை உருவாக்கும்

பயமும் சந்தேகமும் சிறுநீரக நோய்களை உருவாக்கும்

எரிச்சலும் கோபமும் கல்லீரல் நோய்களை உருவாக்கும்

(தேவையான சமயத்தில்)அமைதியை விரும்புவதே அனைத்தையும் குணமாக்கும்

17 comments:

கோமதி அரசு said...

ஒருவகையில் பார்த்தால் அறியாமையே ஆயுதம் போலத்தான் உள்ளது. எதையும் தெரியாமல் இருப்பதால் அவர்கள் மனதில் குழப்பங்கள் உருவாவது இல்லை. இருப்பதே சிறப்பு என்கிற சிறிய வட்டமாக இருந்தாலும் அவரவர் வாழ்க்கையை இயல்பாக அனுபவித்து வாழ முடிகின்றது.//

நீங்கள் சொல்வதும் சரிதான்.
மனதை அமைதியாக வைத்துக் கொள்வதே எல்லாவற்ருக்கும் நல்லது.
அருமையான விழிப்புணர்வு கட்டுரை.
கவலை ஒழித்தால் அனைத்தும் நலமாம்.

phantom363 said...

stress kills. stress free life - we should all aim for. we should try to avoid stress, or attack it head on - find the root cause and try to resolve it. though i have to say, all this is easier said, than done. :(

ஊரான் said...

மனம் என்பது நமது மூளையின் ஒரு வகை வெளிப்பாடு. Mind is the product of brain. புற உலக எதார்த்தங்களே நமது மூளையில் பதிவாகின்றன. பதிவானவற்றை தொகுப்பதும் அதற்கேற்ப வினையாற்றும் நமது அன்றாட நடவடிக்கை. பதிவான விவரங்களுக்கு ஏற்பவும் விவரங்களை பகுப்பாய்வு செய்வதில் உள்ள இடைவெளிக்கு ஏற்பவும் ஒவ்வொருவரின் செயல்பாடு மாறுபடுகிறது. கவலை, பயம் போன்ற மன நிலைகளும் இவ்வாறுதான் ஏற்படுகின்றன. புற உலகை மனிதன் தனக்கு சாதகமானதாக பயன் படுத்திக் கொள்ளாத வரை / மாற்றி அமைத்துக் கொள்ளாத வரை இத்தகைய நிலைதான் தொடரும்.

தி.தமிழ் இளங்கோ said...

மன உளைச்சல் என்னும் மனக்கவலை பற்றி விளக்கமான கட்டுரை.

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது. – திருக்குறள் ( 7 )

தி.தமிழ் இளங்கோ said...
This comment has been removed by the author.
தி.தமிழ் இளங்கோ said...

ஒரே கருத்து இரண்டுமுறை பதிவாகிவிட்டது. எனவே நீக்கியுள்ளேன்.

எம்.ஞானசேகரன் said...

மனநலம் குறித்த நல்ல கட்டுரை. கவலைதான் அனைத்திற்கும் காரணம். கவலைக்கு பணமே பிரதானம். பணம்தான் வாழ்க்கையின் அத்தனை விஷயங்களையும் தீர்மாணிக்கிறது. எனவே கவலைக்கு நிரந்தர தீர்வு கிடைக்குமா என்ற கவலையே இப்போது என்னை வாட்டுகிறது?!

srinivasan said...

கவலையும் ,மகிழ்சியும் ,நிம்மதி எல்லாமே இருப்பது நமக்குள்ளே அதை வெளியில் தேடுவதால் கிடைக்காது .போதும் என்ற சொல்லே பொன் செய்யும் மருந்து .மருத்துவ விளக்கம் நன்று .

ஜோதிஜி said...

அமைதி என்ற வார்த்தை நம்மை வந்து அடைவதற்கு முன் ஆயிரெத்தெட்டு பாடங்கள் கிடைத்த பிறகே அதன் அருமை புரியத் தொடங்குகின்றது.

ஜோதிஜி said...

அழுத்தம் என்பது இன்றைய வாழ்க்கையில் ஒவ்வொருவரும் விரும்பியே ஏற்றுக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். ஏறக்குறைய கண்களை விற்று சித்திரம் வாங்கும் கதையாக.

ஜோதிஜி said...

உலகின் பார்வையில் நாம் எப்படித் தெரிகின்றோம் உலகத்தை நாம் எப்படி பார்க்கின்றோம்......... இதன் இரண்டுக்கும் நடுவே உருவாகும் ஊசலாட்டம் தான் நம் வாழ்க்கை.

ஜோதிஜி said...

ஒவ்வொரு முறையும் திறக்குறளை நினைத்து ஆச்சரியப்படுவதுண்டு. இன்னும் 1000 வருடம் கழித்து வாழ்பவர்களும் பொருந்தும் குறள் தரும் பாடம்

ஜோதிஜி said...

ஒரு தீர்வின் எல்லை என்பதையே நம்மிடம் உள்ள ஆசைகள் தான் தீர்மானிக்கின்றது.

ஜோதிஜி said...

பொன் செய்யும் மருந்து என்பது தற்போது பொன்னும் பொருளும் அதிகமாக சேர்க்க வேண்டும் என்பதாக மாறியுள்ளது.

'பரிவை' சே.குமார் said...

பெருமையும் கர்வமும் இதய நோய்களை உருவாக்கும்

கவலையும் துயரமும் வயிற்று நோய்களை உருவாக்கும்

துக்கமும் அழுகையும் சுவாச நோய்களை உருவாக்கும்

பயமும் சந்தேகமும் சிறுநீரக நோய்களை உருவாக்கும்

எரிச்சலும் கோபமும் கல்லீரல் நோய்களை உருவாக்கும்

-------------

அது சரி.... இம்புட்டு இருக்கா... இப்போ பணம் இருந்தாலும் இன்னும் தேடிக்கொண்டுதானே இருக்கிறது உலகம்... போதும் என்ற மனமே பொன் செய்யும்ங்கிறதெல்லாம் மழை ஏறிப்போச்சு....

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

அவன் ஒரு தீவிர வியாதிதான்.

கிரி said...

பயம் இல்லாமல் இருப்பதும் கடினம் அதே போல கவலை இல்லாமல் இருப்பதும் கடினம். முன்பு அதிகம் கவலை படுவேன்.. ஒருமுறை கல்கண்டு கல்கண்டு புத்தகத்தில் வந்த குறிப்பு படித்து முற்றிலும் மாறி விட்டேன்.. அது என்னவென்றால் நீங்கள் தினமும் கவலைப்படும் விசயங்களை குறித்து வைத்து பின் கவலைப் பட்டதால் எவ்வளவு பிரச்சனை சரியானது என்று பாருங்கள். கவலைப்படுவதால் ஆகும் முட்டாள் தனம் புரியும் என்று. இதன் பிறகு தற்போது நானே நினைத்தாலும் கவலைப்பட முடிவதில்லை. கவலை வரும்.. வராமல் இருக்காது.. ஆனால் அது சில நிமிடங்கள் அல்லது சில மணி நேரங்கள் தான்.. அதிகபட்சம் தூங்கி எழுந்தால் முடிந்தது.