Sunday, June 09, 2013

பொருளாதாரத்தினால் (மட்டுமே) அழியும் சாதிகள்

ஒரு ஏற்றுமதி நிறுவனத்தில் பல துறைகள் உள்ளது. 

பல்வேறு பிரிவுகளில் (H.R.DEPARTMENT) மனிதவளத்துறையும் ஒன்று.   

கடந்த ஐந்தாண்டுகளாகத்தான் இந்த பிரிவுக்கு இங்கே முக்கியத்துவம் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. காரணம் தற்போது திருப்பூருக்குள் வரும் பன்னாட்டு நிறுவனங்கள் குறிப்பிட்ட நிறுவனத்திற்கு ஒப்பந்தம் கொடுக்கும் பொழுதே அவர்கள் எதிர்பார்க்கின்ற ஆவணங்கள்,சான்றிதழ்கள் இருக்கின்றதா? என்று கேட்டு உறுதிப்படுத்திய பிறகே அடுத்த கட்ட பேச்சு வார்த்தையை தொடங்குகின்றார்கள்.  

தற்போதைய போட்டி மிகுந்த சூழ்நிலையில் ஒரு நிறுவன முதலாளி விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தங்களின் கவனத்தை இதன் மேல் வைத்து செயல்பட வேண்டியதாக உள்ளது. 

ஒவ்வொரு நிறுவனமும் பன்னாட்டு நிறுவனங்கள் கேட்கும் சான்றிதழ்களை எடுக்க வேண்டிய கட்டாயம் இருப்பதால் அதன் சட்ட திட்டத்திற்கென்று தங்களின் நிறுவன செயல்பாடுகளை மாற்ற வேண்டியதாக உள்ளது.  குறிப்பாக தொழிலாளர்களின் நலவாழ்வுக்கென பல்வேறு விதமான ஆக்கபூர்வமான செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டிய கட்டாயம் உருவாகி விடுகின்றது. இது சார்ந்த விசயங்களை தனியாகப் பார்ப்போம்.  

நாம் பார்க்கப் போவது மாறி வரும் சமூகத்தில் சாதி ரீதியான ஏற்றத்தாழ்வுகள் எப்படி தொழில் சமூகம் படிப்படியாக மாற்றிக் கொண்டு வருகின்றது என்பதைப் பற்றி பார்க்கலாம்.

மனிதவளத் துறையில் தொழிலாளர்களின் வைப்பு நிதி, சேமநல நிதி என்ற இரண்டு பிரிவுகள் மிக முக்கியமானது. இவை இரண்டும் தொழிலாளர் நலச்சட்டத்தில் மிக முக்கியமான அங்கமாக இருப்பதால் பத்து நபர்களுக்கு மேல் வைத்து வேலை வாங்கும் ஒவ்வொரு நிறுவனமும் இதை கடைபிடித்தே ஆக வேண்டும்.  

ஆனால் இது இந்திய அரசின் மற்றும் தமிழ்நாட்டின்  தொழிலாளர் நலச் சட்டதிட்டங்களில் உள்ள ஓட்டை உடைசல்களை பயன்படுத்தி பெரும்பாலும் எவரும் சரியான விதத்தில் பின்பற்றுவதில்லை. தங்களிடம் பணிபுரியும் தொழிலாளர்கள் குறித்த எண்ணிக்கையை முழுமையாக காட்டுவதும் இல்லை. 

ஆனால் பன்னாட்டு நிறுவனங்கள் எதிர்பார்க்கும் சான்றிதழ்களில் இதுவும் ஒரு அங்கமாக இருப்பதால் தற்போது மேலே சொன்ன இரண்டுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதாக உள்ளது. 

தங்களிடம் பணிபுரிகின்ற தொழிலாளர்களில்  குறைந்த எண்ணிக்கையாவது காட்டியாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றார்கள். 

ஒரு தொழிலாளி ஒரு நிறுவனத்தில் சேரும் பொழுதே அவர்களைப் பற்றிய சுயகுறிப்புகள் முதல் அவர்கள் சார்ந்த பல்வேறு ஆவணங்களை பரிசோதித்து ஒவ்வொருவருக்கும் தனித்தனியான கோப்புகள் உருவாக்கப்படுகின்றது.  இது இவர்களின் ஜாதகம் போல.  இதற்கென்று ஒவ்வொரு நிறுவனத்திலும் மனிதவளத்துறை மேலாளர் இருப்பார்.

அவரின் கீழ் இந்த துறை செயல்படுகின்றது.  இது சார்ந்த முக்கிய முடிவுகள் மற்றும் தேவைப்படும் கையெழுத்துக்கென நிறுவனத்தில் உள்ள பொது மேலாளர் பார்வைக்கு வரும்.  ஒவ்வொரு நாளும் இந்த துறை சார்ந்த கோப்புகள் என் பார்வைக்கு வரும் போது என்னுடைய மற்ற வேலைகளை ஒதுக்கி வைத்து விட்டு இதில் அதிக கவனம் செலுத்துவதுண்டு.  

காரணம் பல்வேறு முகங்கள் உள்ள புகைப்படங்கள், தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து குடியேறியவர்கள், குறிப்பாக அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் முழுவதும் உள்ள புகைப்படங்கள் என்று ரசிக்க யோசிக்க நிறைய வாய்ப்புள்ளது.

எனது கையெழுத்துக்காக வரும் கோப்புகளை கவனிக்கும் போது தமிழ்நாட்டின் மனிதர்களின் சமூக வாழ்க்கை எந்த அளவுக்கு மாறிப்போய்விட்டது என்பதை யோசிக்க முடிகின்றது.  

பணிபுரியும் தொழிலாளர்களின் உண்மையான இருப்பிடம் குறித்து அறிய, அவர்களின் கல்வித்தகுதி, வயது என்று பலதரப்பட்ட விசயங்களை உறுதிப்படுத்த ஏராளமான உண்மையான ஆவணங்கள் ஒவ்வொரு கோப்பிலும் இருக்க ஒவ்வொரு முறையும் ஒரு தொழிலாளர் குறித்த கோப்பு என்பது ஒரு குறும்படம் பார்க்கும் நிலையை எனக்கு உருவாக்குகின்றது.

பள்ளிச் சான்றிதழ் இருப்பதால் அவர்களின் சாதி குறித்து தெரிந்து கொள்ள முடிகின்றது.  அவர்களின் குடும்ப புகைப்படத்தைப் பார்க்கும் குறிப்பிட்ட தொழிலாளரின் அப்பா அம்மா போன்றவர்களின் உண்மையான  முகத்தை வெளிச்சம் போட்டு காட்டுகின்றது.  ஏறக்குறைய ஒவ்வொரு கோப்புகளும் குறிப்பிட்ட நபரின் மொத்த அந்தரங்கத்தையும் விலாவரியாக எடுத்துரைக்கின்றது.  

குறிப்பிட்ட சாதியில் பிறந்திருப்பார். அவரால் மறைத்துக் கொள்ள முடியாத தாழ்வு மனப்பான்மையின் காரணமாக அவரின் நடை உடை மாற்றங்கள் போன்ற பலவற்றையும் வலிய திணித்துக் கொண்டு புதிய அவதாரமாக உருவாகியிருப்பார்.  உடன் பழகும் பலரிடமும் நான் இந்த சாதி என்று சொல்லிக் கொண்டிருப்பார். பல்வேறு ஊரிலிருந்த வந்திருப்பவர்களிடத்தில் இது போன்ற ஆராய்ச்சிகள் உள்ளூற இருந்தாலும் உறுதிப்படுத்த முடியாத நிலையில் அவரவர் வேலையைப் பார்ப்பதற்கே நேரம் சரியாக இருக்கும்.  ஏறக்குறைய இதுவும் ஒரு வகையில் குறிப்பிட்ட நபருக்கு விடுதலை போலவே இருக்கும்.  

தொழிலாளர்கள் தங்கும் வீடுகளில் என்ன சாதி? என்ற பிரச்சனைகள் இருந்த போதிலும் இன்று அதுவும் மாறி வரும் பொருளாதார சூழ்நிலையில் மெதுமெதுவாக மாறிக் கொண்டே தான் வருகின்றது.  மேலும் குறிப்பிட்ட குடியிருப்புகள் என்கிற ரீதியில் இருப்பதால் ஒவ்வொரு பகுதியும் குறிப்பிட்ட மக்களுக்கு தனித்தனி ராஜாங்கம் போலவே உள்ளது. இன்னமும் நிறைய மாற வேண்டும்.

ஆனால் அலுவலக ரீதியாக வேலை செய்பவர்கள் சற்று வசதியான வீடுகளைத் தேடும் போது தான் இந்த பிரச்சனை விஸ்வரூபம் எடுக்கின்றது.  நேரிடையாக தாக்குகின்றது. வீடு கேட்கும் பொழுதே உரிமையாளர்கள் கேட்கும் கேள்விகளுடன் நிச்சயம் இந்த சாதி குறித்த வார்த்தைகளும் வந்து விடுகின்றது. 

நான் இந்த சாதி என்று சொன்னாலும் உறுதிப்படுத்த பல்வேறு யுக்திகளை கையாள்பவர்களையும் பார்த்திருக்கின்றேன்.  

"நாங்க வீடு தருகின்றோம். ஆனால் உள்ளூருக்குள் உங்களைப் பற்றித் தெரிந்தவர்கள் இருந்தால் சொல்லச் சொல்லுங்க" என்று சொல்லி விட பெரும்பாலும் பலருக்கும் பிரச்சனை இங்கேயிருந்து தான் தொடங்குகின்றது.

இது போன்ற நல்லதும் கெட்டதுமான பலவற்றையும் நான் அமைதியாக மனதிற்குள் வைத்துக் கொள்வதுண்டு. 

எங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் இந்த மனிதவளத்துறையில் பணிபுரியும் அறுபது வயதைக் கடந்தவர் ஒவ்வொரு முறையும் கோப்புகளை எடுத்துக் கொண்டு என் அறைக்கு வருவார்.  பல்வேறு துறைகளை கவனிக்கும் நான் குறிப்பிட்ட அந்த துறையை மட்டும் கவனிக்கும் அவரிடம் பலதரப்பட்ட விசயங்களைப் பற்றி உரையாடுவதுண்டு. 

காரணம் பல்வேறு நிறுவனங்களில் அவர் பணியாற்றி வந்த பாதையில் அவர் பார்த்த பலதரப்பட்ட விசயங்களை கேட்கும் பொழுது நமக்கு முடிவெடுக்க வசதியாக இருக்கும்.

சென்ற வாரத்தில் பேசிக் கொண்டிருந்த போது எப்போதும் போல பலவிதமான குற்றச்சாட்டுகள் தான் முன்னால் வந்து விழுந்தது. அதில் நிறுவனத்தில் கூட்டிப் பெருக்குபவர்களைப் பற்றிய குற்றச்சாட்டுக்கள் தான் முதன்மையாக இருந்தது.

ஒரு ஏற்றுமதி நிறுவனத்தில் பல துறைகள் உண்டு.அலுவலகம், உற்பத்திக்கூடங்கள் அது சார்ந்த துணைப்பிரிவுகள் என்று ஏராளமாக இருக்கும்.  காலை எட்டுமணிக்குள் கூட்டிப் பெருக்கி முடித்து இருக்க வேண்டும்.  இதன் காரணமாக காலை ஆறு மணிக்கே இந்த தொழிலாளர்கள் வர வேண்டும்.  

"சார் அவங்களை எந்த கேள்வியும் கேட்க கூடாது என்கிறார்கள்.  அப்படி கேட்டால் அடுத்த நாள் வரமாட்டேன் என்கிறார்கள்" என்றார்.

"ஏன் வேறு நபர்களை போட்டுக் கொள்ள வேண்டியது தானே?" என்றேன்.

"இல்லை சார். ஆட்கள் கிடைப்பதில்லை" என்றார்.

பெரும்பாலும் இது போன்ற வேலையில் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் தான் இருக்கின்றார்கள்.  

இதற்கென்று புதிதான ஆட்கள் வருவதில்லை.  விரும்புவதில்லை என்பது தான் இங்கே முக்கியம்.  

இதில் மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் இவர்களின் குழந்தைகள் நிச்சயம் படித்து மேலே வந்து விட முடிந்தவர்கள்  பெருநகரங்களுக்கு சென்று விடுகின்றார்கள். அவர்கள் வாழ்க்கையின் திசை மாறி விடும்.

கல்லூரி வரைக்கும் சென்று ஒழுங்காக படித்தவர்கள் குறிப்பிட்ட காலகட்டத்திறகுள் பலதரப்பட்ட அலுவலகம் ரீதியான வேலையில் தங்களைப் பொருத்திக் கொண்டு விடுகின்றார்கள். பள்ளி இறுதி வரைக்கும் படித்தவர்கள் முதல் படிப்பை பாதியில் விட்டவர்கள் வரைக்கும் திருப்பூரைப் பொருத்தவரையில் டைலர் வேலை முதல் ஏற்றுமதி துறையில் உள்ள பலதரப்பட்ட வேலைகளை குறுகிய காலத்திற்குள் கற்றுக் கொண்டு அவர்களும் புதிய வாழ்க்கையைத் தொடங்கி விடுகின்றார்கள்.  

யோசித்துக் கொண்டே அவரிடம் கேட்டேன். 

"அப்ப இது போன்ற வேலைகளுக்கு எதிர்காலத்தில் யார் இருப்பார்கள்?" என்றேன்.

"நவீனங்கள் புதிய மாறுதல்களை உருவாக்கும்.  இப்போது சிறிய அளவில் உள்ள வாக்குவம் கீளீனர் போன்ற சமாச்சாரங்கள் காலப்போக்கில் பெரிய ஹால் போன்ற அமைப்புகளை சுத்தம் செய்ய பயன்படுத்தும் நிலைக்கு வரலாம்" என்றார்.

"அப்படிப்பார்த்தாலும் அதிலும் மனித உழைப்பு சில இடங்களில் தேவைப்படுமே" என்றேன்.

"அது போன்ற இடங்களில் பொருளாதார ரீதியாக போட்டி போட முடியாதவர்கள் இது போன்ற வேலையைத் தேர்ந்தெடுக்கும் சூழ்நிலையை உருவாக்கும்" என்றார்.

"புரியவில்லை" என்றேன்.

"தற்போது ஒவ்வொரு வேலைக்கும் ஏராளமான போட்டிகள் உருவாகிக் கொண்டேயிருக்கின்றது.  தகுதிகள் ஒரு பக்கம் என்றால் சம்பளம் குறைவாக கேட்பவர்களுக்குத்தான் முன்னுரிமை கொடுக்கின்றார்கள்.இதுவே காலப்போக்கில் போட்டிகள் அதிகமாகும் போது பலராலும் போட்டி போட முடியாத சூழ்நிலை உருவாகும்.  பாதிப் பேர்கள் சம்பளம் கட்டவில்லை என்று ஒதுங்கி வேறு பக்கம் மாறுவார்கள். வேறு துறைகளை தேர்ந்தெடுப்பார்கள். புதிய துறைகள் வளரும். சில துறைகள் அழியும். பல துறைகளுக்கு ஆட்கள் கிடைப்பதே குதிரை கொம்பாக இருக்கும்.  அது போன்ற சூழ்நிலையில் பலரும் கிடைத்த வரைக்கும் லாபம் என்பதாக கிடைத்த வேலையில் சேருவார்கள்" என்றார்

"அப்போது கௌரவம் சார்ந்த தொழில் அப்படி இல்லாத தொழில் என்கிற மாயபிம்பம் உடைபடும்.  வாழ்ந்தே ஆக வேண்டும் என்கிற சூழ்நிலையில் வாழ்பவர்களின் எண்ணிக்கை எதிர்காலத்தில் அதிகமாகும்" என்று பேசிக் கொண்டே சென்றார்.

அவரும் காரைக்குடி பகுதியைச் சேர்ந்தவர்.  நாட்டுக்கோட்டை நகரத்தார் சாதியில் பிறந்த அவரின் ஒரு மகள் திருமணம் செய்திருப்பது தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த பையனை. அவர் சொன்ன போது எனக்கு ஆச்சரியமாக இல்லை.  ஆனால் அவர் எதனால் இந்த முடிவு எடுத்தார் என்று சொன்ன போது தான் ஆச்சரியமாக இருந்தது. 

"பையன் நல்லவனாக இருந்தான்.  பெண்ணுடன் அலுவலகத்தில் கடந்த ஐந்து வருடமாக ஒன்றாக பணிபுரிந்து கொண்டு இருக்கின்றான்.  எந்த கெட்ட பழக்கமும் இல்லை.  அவனது பெற்றோர்கள் ஊரில் இருக்கின்றார்கள்.  எங்களுடன் இங்கே கூட்டுக்குடித்தனத்தில் இருக்க அவனுக்கும் விருப்பமாகவே உள்ளதால் பாதி செலவு குறையும்.  என் மனைவி குழந்தைகளை பார்த்துக் கொள்கின்றார். இருவரும் ஒரே வண்டியில் சென்று விட முடிகின்றது. என்றார்.

இது குறித்த பிரச்சனைகள் உங்கள் பக்கம் உருவாகுமே? என்றேன்.

"உருவாகியது தான்.  அதற்காக என்ன செய்ய முடியும்.  மகள் வாழ்க்கை முக்கியமா? கௌரவம் முக்கியமா? என்றால் எனக்கு மகள் வாழ்க்கை தான் முக்கியமாகத் தெரிகின்றது.  நான் ஊரை விட்டே வந்து 40 வருடங்கள் ஆகிவிட்டது.  இனி அங்கே போய் வாழும் எண்ணமும் எனக்கில்லை. நான் எதற்கு பயப்பட வேண்டும்" என்றார்.

அவர் அடித்தட்டு மக்கள் குறித்தும் அவர்களின் வேலைகளை குறித்தும் பேசப்பேச பல விசயங்களை அதன் எதார்த்தத்தை புரிந்து கொள்ள முடிந்தது.

கடந்த ஒரு மாதத்தில் பார்த்த சம்பவங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மனதில் வந்து போனது.

நண்பர் திருமணத்திற்கு அழைத்திருந்தார்.  திருமணத்திற்கு முந்தைய நாள் என்னை பார்க்க வேண்டும் சொல்லியிருந்த காரணத்தால் குறிப்பிட்ட அழகு நிலையத்திற்கு வந்து விடுங்கள் என்றார்.  அன்று தான் முதன் முதலாக இந்த அழகு நிலையம் என்ற பியூட்டி  பார்லர் என்ற கடையின் விபரங்களை முழுமையாக பார்த்தேன்.  

திருப்பூரில் சிறிதும் பெரிதுமாக ஏராளமான அழகு நிலையங்கள் இருந்த போதிலும் இப்போது வணிக ரீதியாக பெரிய நிறுவனமாகவே மாறிக் கொண்டு வருகின்றது. 

ஒவ்வொரு நிறுவனமும் அதன் வளர்ச்சியைப் பொறுத்து பல்வேறு இடங்களில் கிளைகளுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது.  இதுவே தமிழ்நாடு அளவில் செயல்படும் நிறுவனங்கள் தங்களது சார்பாளர்கள் என்கிற நிலையில் ப்ராஞ்சைஸ் என்று  பல்வேறு இடங்களில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.  

நண்பர் இருந்த அழகு நிலையத்தில் உள்ளே நுழைந்ததும் நாம் 20 வருடங்களுக்கு பின்னால் வாழ்ந்து கொண்டிருக்கின்றோமோ? என்றே யோசிக்க வைத்தது.  

ஆண்களுக்கு பெண்களுக்கு என்று தனித்தனியாக அறைகள்.  அது சார்ந்த பல்வேறு வசதிகள். தொடக்கத்தில் வரவேற்பறை .

அங்கே மாட்டி வைக்கப்பட்ட அழகு நிலையத்தின் செயல்பாடுகள், விலைப்பட்டியல் போன்றவற்றை படித்த போது "என்னடா ஒரு மயித்த செரைக்கிறதுக்கு  இம்பூட்டு  ஆர்ப்பட்டமா?" என்று வேடிக்கை பார்க்கத் தொடங்கினேன்.

ஊரில் கண்மாய் கரையில், மரத்தடியில் நடந்த முகச் சவரமும், முடிவெட்டலும் சிறிய கடைகளாக மாறியது.  வெறுமனே மரச்சேரில் தொடங்கிய பயணம் சுழலும் இருக்கைக்கு மாறியது.  தண்ணீரை கைகளால் தடவியது மாறி பாட்டிலில் உள்ள பீச்சி மூலம் பீச்சியடித்து சாரல் மழையில் நனைய வைத்தார்கள்.  இருபது வருடத்திற்குள் இன்று அழகு நிலையமாக மாறி இன்று  "கம்ப்ளீட் பேஸ் பிளிச்சீங்" 500 ரூபாய் என்று பயமுறுத்திக் கொண்டிருக்கின்றார்கள். 

ஆனால் வியாபாரம் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கின்றது. சென்ற வாரத்தில் இது போன்ற ஒரு அழகு நிலையத்தை இங்கே திறந்து வைத்தவர் ஒரு அமைச்சர். அத்துடன் மேயர் போன்ற படைபட்டாளங்கள் போன்ற அதிகாரவர்க்கத்தினர் கலந்து கொண்டனர். 

இந்த மாற்றம் கடந்த 20 வருடத்திற்குள் நடந்துள்ளது.  

இங்கே குறிப்பிட வேண்டிய முக்கியமான அம்சம் என்னவென்றால் இந்த அழகு நிலையம் நடத்துபவர்கள் எவரும் நாவிதர் சாதியில் பிறந்தவர்கள் அல்ல.  நான் முடிவெட்டும் கடையில் பணிபுரிபவர்கள் வரைக்கும் சோதித்து பார்த்து விட்டேன்.  பலதரப்பட்ட சாதியில் பிறந்தவர்கள் தான் தற்போது இந்த தொழிலில் இருக்கின்றார்கள். 

நாவிதர் சாதியில் பிறந்தவர்கள் இந்த தொழிலில் சொற்ப எண்ணிக்கையில் தான் உள்ளனர்.

ஒரு தலைமுறைக்குப் பிறகு கல்வி ரீதியாக வளர்ந்துள்ளார்கள்.  அல்லது வேறு துறையை தேர்ந்தெடுத்து தங்கள் வாழ்க்கையை மாற்றி வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.  இது இந்த சாதியில் மட்டுமல்ல.  அடித்தட்டு மக்கள் என்று சமூகம் ஒதுக்கி வைத்த அத்தனையும் இன்று மாறியுள்ளது. 

காரணம் நகரமயமாக்கல், ஒவ்வொரும் தங்கள் பிழைப்பைத் தேடி உருவான இடப் பெயர்ச்சி தான் இன்று இதை சாத்தியமாக்கியுள்ளது. 

ஊரில் சலவை செய்து கொடுப்பவர்களை நாம் எந்த நிலையில் வைத்திருந்தோம்? நாம் எப்படி அவர்களைப் பார்த்தோம் என்பது இதை படிக்கும் ஒவ்வொருவருக்கும் நன்றாகவே தெரியும். 

ஆனால் இந்த துறை எப்படி வளர்த்துள்ளது தெரியுமா?

நகர்புறங்களில் ட்ரை கிளீனர்ஸ் என்பது இன்று வளர்ந்த லாபம் கொழிக்கும் தொழிலாக உள்ளது. எவரும் ஆற்றில் போய் துவைப்பதில்லை.  ஆற்றில் தண்ணீரே இல்லை என்பது வேறு விசயம்.

சலவைக்கல்லில் கூட துவைப்பதில்லை. 

இன்று துணி துவைக்கும் எந்திரங்கள் இந்த வேலையைச் செய்து கொண்டிருக்கின்றது. பெரிய அளவுக்கு முதலீடு போடத் தைரியம் இருப்பவர்கள் வைத்திருக்கும் உலர வைக்கும் எந்திரங்களின் விலையைக் கேட்டதும் தலைசுற்றுகின்றது. இந்த துறையின் முகமே மாறியுள்ளது.  

கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்லும் நகர்புறங்களில் இன்று துணி துவைக்க நேரம் இருப்பதில்லை.  வீட்டில் துணி துவைக்கும் எந்திரங்கள் இருந்த போதிலும் பலரும் இது போன்ற ட்ரை கிளினர்ஸ் கடைக்கு நிரந்தர வாடிக்கையாளராக இருப்பதால் லாபம் கொழிக்கும் தொழிலாகத்தான் உள்ளது.

இது எனக்கு ஆச்சரியமாக இல்லை.  

ஏற்றுமதி நிறுவனங்களில் அயரன் என்றொரு பிரிவு உண்டு. 

அதாவது ஆடைகள் வெட்டி தைத்து பரிசோதித்து வந்த பிறகு கடைசியாக அதை அயரன் செய்து அதன் பிறகே பாலிபேக்கில் போட்டு பெட்டியில் போட்டு லாரியில் ஏற்றுவார்கள்.  

இந்த அயரன் துறையில் பணிபுரிபவர்களை கடந்த 20 ஆண்டுகளாக பார்த்துக கொண்டிருக்கின்றேன்.  15 ஆண்டுகளுக்கு முன் எப்போதும் போல இந்த சாதியில் பிறந்த பலரும் பணிபுரிந்து கொண்டிருந்தார்கள். பெரும்பாலும் 40 வயதை கடந்தவர்களாக இருந்தார்கள்.  

ஆனால் தற்போது முதுகலை பட்டப்படிப்பு படித்தவர்கள் வரைக்கும் இந்த துறையில் பணிபுரிந்து கொண்டிருக்கின்றார்கள்.  

சென்ற மாதத்தில் நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த ஒருவரை நீண்ட நேரமாக பார்த்துக் கொண்டிருந்தேன்.  ஆள் எடுப்பாக இருந்தார்.  அலுவலக ரீதியாக வேலைகளில் மட்டுமே செயல்படக்கூடியவர் என்பதை அவர் செய்து கொண்டிருந்த சொதப்பல் வேலையின் மூலம் புரிந்து கொள்ள முடிந்தது.  காரணம் பீஸ் ரேட்டில் ஆடைகளை தேய்த்துக் கொண்டிருப்பவர்கள் மின்னல் வேகத்தில் தங்கள் வேலைகளை கவனித்துக் கொண்டிருப்பார்கள்.  இவரால் வேகமாக செயல்பட முடியவில்லை என்பதை மனதில் வைத்துக் கொண்டு சாப்பாட்டு நேரத்தில் வெளியே வந்தவரை தனியாக அழைத்துப் பேசிய போது தான் பல உண்மைகள் புரிந்தது.

முதுகலை பட்டப்படிப்போடு வேறு சில படிப்புகளையும் முடித்தவரால் திருப்பூரில் உள்ள அலுவலக நடைமுறைகளில் ஜெயிக்க முடியவில்லை.  உயர் வகுப்பில் பிறந்தவருக்கு இந்த பீஸ் ரேட் சமாச்சாரம் பிடித்த காரணத்தால் கற்றுக் கொள்வதன் பொருட்டு தனது தொழில் வாழ்க்கை பயணத்தை இந்த துறையில் தொடங்கியுள்ளார்.  

இன்று 90 சதவிகித இளைஞர்கள் தான் இந்த அயரன் துறையில் இருக்கின்றார்கள்.  பள்ளி இறுதி வகுப்பு படித்தவர்கள் முதல் பலதரப்பட்ட பட்டங்கள் வாங்கியவர்கள் வரைக்கும் பணிபுரிந்து கொண்டிருக்கின்றார்கள். 

இன்றைய மாறிய சமூகத்தில் குறிப்பிட்ட தொழில் குறித்த எண்ணம் அதன் மூலம் கிடைக்கும் லாபம் குறித்த விசயங்கள் மட்டுமே பேசு பொருளாக இருப்பதால் முதலீடு போடத் தயாராக இருப்பவனுக்கு எல்லாமே ஒரே தொழிலாகத்தான் உள்ளது. 

இன்றும் சாதி ரீதியான கொடுமைகள் இருக்கின்றதா என்றால் இருக்கத்தான் செய்கின்றது.  அது மாறுமா? மறையுமா என்றால் நிச்சயம் என் பார்வையில் மாறும் மறையும் என்றே தோன்றுகின்றது. 

இதற்கென போராளிகள் தேவையில்லை. பொருளாதாரமே மாற்றிவிடும். 

55 comments:

எம்.ஞானசேகரன் said...

உண்மைதான், மாறித்தான் போயிருக்கிறது இன்றைய வாழ்க்கை முறை. நான் கிராமத்தில் பத்தாவது படிக்கும் வரை கண்ட காட்சிகள் வேறு. இப்போது ஊர் பக்கம் சென்றால் பார்க்கும் காட்சிகள் வேறு. வந்தான சிலரால்தான் ஜாதி இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறது. அந்த கிராமத்து வாழ்க்கையில் கலப்புத்திருமணம் செய்து நான் சாதித்தவைகள் இன்னமும் பசுமையாய் இருக்கிறது. இது குறித்து எழுத எண்ணமிருக்கிறது.

எம்.ஞானசேகரன் said...

ஒரு திருத்தம்! மூன்றாவது வரியில் 'வயதான சிலரால்' தான் என்று வந்திருக்கவேண்டும்.

அப்பாதுரை said...

வேலைக்குச் சேருகின்றவர்கள் குடும்பப் படம் தரவேண்டுமா என்ன? வியப்பாக இருக்கிறதே? நான் எங்கும் கண்டிராத வழக்கம்.

நாவிதர் என்பது சாதியா என்ன?

நீங்கள் சொல்லியிருப்பதில் பெரும்பான்மை காலமாற்றத்தின் விளைவுகள். ஒருவிதத்தில் பார்த்தால் சாதிகள் மெள்ள அழியக்கூடும் இதனால். நாவிதர்கள் அயர்ன் செய்வோர் இதெல்லம் சாதியென்றால் நாளைக்கு இத்தொழில்கள் மாறும் பொழுது சாதிகளும் மறையுமே? (அல்லது வேறு பெயர் கொள்ளுமோ?)

ஒரு நடை திருப்பூர் வந்து பார்க்கத் தூண்டுகிறது - உங்கள் எழுத்து.

Rajasankar said...

ஜோதிஜி,

நல்ல அலசல். ஜாதி என்பது இருக்கும் ஆனால் அதிலே ஏற்றத்தாழ்வு தீண்டாமை என்பது பரவலாக இருக்காது. வெளிநாடுகளிலும் இப்படி குடும்ப பெயர், வரலாறு என்பது இருக்கிறது ஆனால் அதிலே மாறினாலும் பெரும்பாலும் கண்டுகொள்வது இல்லை.

மொழி போல், இனம் போல், மதம் போல் ஜாதி என்பது ஒரு அடையாளம். மனிதனுக்கு அடையாளம் தேவைப்படும் வரை அது இருக்கும்.

லெமூரியன்... said...

நண்பா வெகு நாட்களுக்கு பிறகு நான் உங்களுக்கு பின்னூட்டம் இடுகிறேன்.

ஏனென்றால் நான் இப்பொழுது வலை மேய்வதை மிக கம்மியக்கிக் கொண்டேன் ..

புகைப்படத்தை பார்த்து ஜாதிய அடையாளம் சொல்லும் அளவுக்கு நிறம் மற்றும் முகம் படிக்கும் வித்தைகளில் தேர்ந்தவரா நீங்கள்? :-)

என்னை பார்த்த உடனே கண்டு கொண்டீர்கள நான் பறையடிக்கும் குலத்தை சேர்ந்தவன் என்று ??

:-) :-) :-)

ஆனால் இந்த பதிவின் கடைசி வரிதான் நான் பல காலமாக யோசித்த ஒரே விடுதலை கேடயம் ...

ஆமாம் பொருளாதாரத்தில் முன்னேற முடிந்த எவருமே இனி உயர் சாதிதான்...

நாடார் இன வளர்ச்சியை பார்த்து பிரமித்து போயிருக்கிறேன் ...

இங்கு அமெரிக்காவில் அனைத்து வேலைகளுக்குமே போட்டிகள் இருக்கின்றன கறுப்பர்களுக்கும் வெள்ளையர்களுக்கும் ....

எந்த வேலைகளுக்கும் பாகுபாடோ பேதமோ இருப்பதில்லை ...

வேடிக்கை என்னவென்றால் ...இப்போது கருப்பர்களும் வெள்ளையர்களும் செவ்விந்தியர்களையும் (Consider the spanish community as red indians) இந்த்தியர்கள் மற்றும் ஆசிய பகுதியை சார்ந்தவர்களை கண்டு அரண்டு போயிருக்கிறார்கள் ..........


நான் நம்புவது ஒன்றுதான்

மீசையை முறுக்கிக் கொள்பவனும் நெஞ்சில் தொங்கும் நூல் கற்றையை நீவிக் கொள்பவனும் எனக்கும் என் குலத்தை சார்ந்தவனுக்கும் நிகராகவே வரும் ஒரு காலத்தில்

நான் பெருமையாக சொல்லிக் கொள்வேன் நான் பறையன் என்று.

பறையடித்து விலங்கு விரட்டி பயிர் காத்து தமிழ் இனம் காத்தவன் என்று....

ஜோதிஜி said...

வாங்க நண்பா.

அமெரிக்காவில் இருந்து கொண்டு படிக்க நேரம் இல்லை என்ற போதிலும் உங்களை விமர்சனம் எழுத வைத்து விட்டதே? இதுவே என் எழுத்துக்கு கிடைத்த வெற்றி தானே.

நீங்க தவறாக புரிந்து கொண்டீர்கள்.

குறிப்பிட்ட வார்த்தையை மட்டும் எடுத்துக் கொண்டு சிலம்பம் ஆடி விட்டீர்களோ என்று நினைத்து வருத்தப்படுகின்றேன். என்னுடன் பேசிய பழகிய அந்த நான்கு மணி நேரத்தில் என் நடவடிக்கைகளை நீங்களும் கவனித்து இருப்பீர்கள் தானே?

எழுத்தில் நாம் பார்க்கும் சமூகத்தை விவரிப்பது என்பது பொதுவான பார்வை என்பதை படிப்பவர்கள் ஒவ்வொருவரும் கவனத்தில் வைத்திருக்க வேண்டும். குடிகாரனைப் பற்றி ஒருவர் படம் எடுக்கின்றார் என்றால் அவர் 24 மணி நேரமும் குடித்தபடி இருந்த காரணத்தால் தான் அவரால் எடுக்க முடிந்திருந்துருக்கும் என்பது எப்படி பொதுப்புத்தியோ அது போலத்தான் உங்க கருத்தும்.

ஆமாம் பொருளாதாரத்தில் முன்னேற முடிந்த எவருமே இனி உயர் சாதிதான்...

நான் சொல்ல வந்த கருத்தும் இதே. நல்லவேளை கெட்டியாக பிடித்துக் கொண்டதற்கு நன்றி நண்பா.

இதை படித்துப் பார்த்தீர்களா?

http://deviyar-illam.blogspot.in/2013/05/blog-post_12.html


அடிமைத்தனம் ஆதிக்க மனப்பான்மையை வளர்த்தது.

ஆதிக்கம் தொடங்கிய போது தன் சுயநலம் மேலோங்கி நின்றது.

சுயநலம் பெருகப் பெருக சக மனிதனை கேவலப் பொருளாக பார்க்க நாகரிகம் என்ற வார்த்தை நமக்கு பலவற்றையும் கற்றுக் கொடுத்தது.

ஆனால் இந்த படிப்படியான வளர்ச்சியில் ஒவ்வொரு இடத்திலும் வன்மத்தோடு கலந்த பொறாமைகள் நம்மோடு தொடந்து கொண்டேயிருப்பதால் மனிதன் என்ற போர்வையில் நாட்டில் வாழும் மிருகம் போலத்தான் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம்.

இதுவே தான் ஒரே சாதி ஆனால் பொருளாதார ரீதியாக சம அந்தஸ்த்து என்கிற அளவில் மாற்றம் பெற்றுள்ளது.

பணபலத்தில் சமமாக இல்லாதவன் ஒரே சாதியாக இருந்த போதிலும் கூட அவனும் தள்ளி நிற்க வேண்டியது தான்.

சமூகத்தில் ஒவ்வொரு கால கட்டத்திலும் நடக்கும் மாற்றங்களை வந்து போகும் தலைவர்கள் உருவாக்குவதில்லை.

நாம் மனதில் உள்ளே வைத்திருப்பதை, விரும்புவதை செய்து காட்டும் காரியவாதிகளாகத்தான் அவர்கள் இருக்கின்றார்கள்.


Avargal Unmaigal said...

பழைய சாதிகள் அழிய அழிய புதிய சாதிகள் தோன்றிக் கொண்டே இருக்கும் உதாரணமாக நவிதர் வண்ணான் போன்றவைகள் ஒழிந்து லேபர் சாதி மேனேஜ்மெண்ட் சாதி முதலாளி சாதி ஐடி சாதி என்று பல சாதிகள் தோன்றிக் கொண்டே இருக்கும். அந்த காலத்தில் அவர்கள் செய்யும் தொழிலை கொண்டே சாதிகளை வகைப்படுத்தினார்கள்

Avargal Unmaigal said...

இந்தியாவில் சாதி அமெரிக்காவில் ரேசிசம் என்றும் அழியாது. நான் வேலை செய்யும் இடத்தில் இதை தினசசரி பார்க்கிறேன்.

ஜோதிஜி said...

வேலைக்குச் சேருகின்றவர்கள் குடும்பப் படம் தரவேண்டுமா என்ன? வியப்பாக இருக்கிறதே? நான் எங்கும் கண்டிராத வழக்கம்.

ESI AND PF போன்ற விசயங்களுக்கு தொழிலாளர்களுடன் அவர்கள் குடும்பம் சார்ந்த புகைப்படங்கள் அவசியம் தேவை.

ஜோதிஜி said...

ஆனால் தேவைப்பட்டே ஆக வேண்டும் என்பதாக சிலர் உருவாக்கத் தொடங்கத்தான் பிரச்சனைகள் தொடங்குகின்றது என்று நினைக்கிறேன்.

ஜோதிஜி said...

அவசியம் எழுதுங்க. காதல் போட்டியில் ஜெயிக்க வாழ்த்துகள்.

ஜோதிஜி said...

இது குறித்து அமெரிக்காவில் இருந்து வந்த ஒரு மருத்துவர் பேசிய போது சில விசயங்களை புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால் உச்சகட்ட பதவியில் தான் இருக்கின்றது என்றார். நீங்கள் இதைப் பற்றி எழுதலாமே?

வவ்வால் said...

ஜோதிஜி,

what is this?

போன மாசந்தேன் மருத்துவர் ராமதாசர் தான் எனக்கு புடிச்ச நல்ல சமூகத்தலைவருனு கொடி புட்சிங்க, இப்போ பொருளாதாரத்தால் சாதி ஒழிஞ்சிப்புடும்னு சொல்றிங்கோ, ராமதாசர் கோச்சுக்க மாட்டாரு?

ஹி...ஹி அது போன மாசம்,நான் சொல்றது இந்த மாசம்:-))

(மைண்ட் வாய்ஸ்: டேய் உனக்கு ஏன்டா இந்த வேண்டாத வேலை ,போன மாசம்,போன வருசம் எழுதினதை எல்லாம் நியாபகம் வச்சுக்கிட்டு வந்து கேட்டு எதுக்கு "துஷ்டன்"னு பேரு வாங்கிட்டு, வந்தமா, ஆஹா சீரிய சிந்தனை செம்மையான எழுத்து,வாழ்த்த்துக்கள்னு "நல்லவானா" பின்னூட்டம் போட்டு பொழைக்கிற வழியப்பாருடா அவ்வ்)

Indian said...

எங்கள் பகுதியில் (கோவை) சலவைத் தொழில் செய்து வருபவரின் மகன் முடி திருத்தகம் தொடங்கினார். இரண்டு வருடத்துக்கு முன்பு துணி இஸ்திரி செய்ய 4 ரூபாயில் தொடங்கி இப்போது 6 ரூபாய் வாங்குகிறார்கள். ஆனால் அவரின் மகன் முகச்சவரத்திற்கு 30 ரூபாயில் தொடங்கி இப்போது 40 ரூபாய் (based on association price list) வாங்குகிறார்.

வவ்வால் said...

ஜோதிஜி,

//தற்போது ஒவ்வொரு வேலைக்கும் ஏராளமான போட்டிகள் உருவாகிக் கொண்டேயிருக்கின்றது. தகுதிகள் ஒரு பக்கம் என்றால் சம்பளம் குறைவாக கேட்பவர்களுக்குத்தான் முன்னுரிமை கொடுக்கின்றார்கள்.இதுவே காலப்போக்கில் போட்டிகள் அதிகமாகும் போது பலராலும் போட்டி போட முடியாத சூழ்நிலை உருவாகும். பாதிப் பேர்கள் சம்பளம் கட்டவில்லை என்று ஒதுங்கி வேறு பக்கம் மாறுவார்கள். வேறு துறைகளை தேர்ந்தெடுப்பார்கள். புதிய துறைகள் வளரும். சில துறைகள் அழியும். பல துறைகளுக்கு ஆட்கள் கிடைப்பதே குதிரை கொம்பாக இருக்கும். அது போன்ற சூழ்நிலையில் பலரும் கிடைத்த வரைக்கும் லாபம் என்பதாக கிடைத்த வேலையில் சேருவார்கள்" என்றார்

"அப்போது கௌரவம் சார்ந்த தொழில் அப்படி இல்லாத தொழில் என்கிற மாயபிம்பம் உடைபடும். வாழ்ந்தே ஆக வேண்டும் என்கிற சூழ்நிலையில் வாழ்பவர்களின் எண்ணிக்கை எதிர்காலத்தில் அதிகமாகும்" என்று பேசிக் கொண்டே சென்றார்.//

உங்க ஹெச்.ஆர் இந்திய மனப்பான்மையில் பேசி இருக்கிறார், வருங்காலத்தில் அடிப்படை வேலை ,சுத்தப்படுத்தும் வேலைக்கு எல்லாம் கிடைக்கும் ஆட்களின் எண்ணிக்கை குறைவாகவே செய்யும், எந்திரங்கள் வந்தாலும் அவ்வேலையை செய்ய "ஒரு குறிப்பிட்ட" சமூக மக்கள் தான் முன்வரும் சூழல் நிலவும்,எனவே அப்பொழுதும் ஆட்கள் தட்டுப்பாடாகவே இருக்கும்.

வாழ்ந்தால் போதும்னு எல்லாரும் ஓடிவரும் சூழல் இந்தியாவில் உருவாவது கடினம்.

அடிப்படை சுத்திகரிப்பு வேலைக்கும் உயர்ந்த சம்பளம் என்ற நிலை வந்தால் தான் ஆட்கள் தட்டுப்பாடு இல்லாமல் இருக்கும், அம்மாதிரி வேலைகளுக்கு இருப்பதிலே கடைக்கோடி சம்பளம் என செயல்படும் இந்திய முதலாளிகள் "ஆட்கள் கிடைக்கலை"னு புலம்பத்தான்ன் செய்வாங்க.

வளர்ந்த மேலை நாடுகளில் 'டர்ட்டி ஜாப்ஸ்' எனப்படும் சுத்திகரிப்பு வேலைகளுக்கு உயர்ந்த சம்பளமே கொடுக்கிறார்கள். அமெரிக்காவில் பாதாள சாக்கடை சுத்தம் செய்பவர் மென்பொருள் வல்லுனருக்கு இணையான சம்பளமே பெருகிறார்.

இங்கேயும் சம்பளம் உயர்த்தப்படும் நிலை தான் வரவேண்டும், அதை விட்டுவிட்டு வாழ்ந்தால் போதும் என்ற நிலையில் மக்கள் அதிகம் உருவாகுவாங்க,அவங்க குறைச்ச சம்பளத்துக்கே கிடைப்பாங்க என்பது , காலமாற்றம் எப்படி போகும்னு கணிக்காமை.

* பொண்ணுக்கு தாழ்த்தப்பட்ட சமூகத்தில் திருமணம் செய்திருப்பது நல்ல விடயம் தான்,ஆனால் அதிலும் பொருளாதார நலன் பார்த்து தான் செய்திருக்கிறார்.

அவரது சமூகத்துல அதே தகுதியுள்ள வரன் எனில் ஏகப்பட்ட வரதட்சணை கொடுக்க வேண்டியதிருக்கும், இப்பொழுது "ஜாதி" பார்க்கலைனு சொல்லிட்டு செலவை மிச்சப்படுத்திட்டார்.

இப்போ அந்த மணமகனுக்கு/மாப்பிள்ளைக்கு ஒரு தங்கை இருந்து முறைப்படி பேசி திருமணம் செய்யும் நிலை எனில் வரதட்சணை கொடுத்து தான் திருமணம் செய்ய வேண்டும், வழக்கமாக பையனுக்கு வரதட்சணை வாங்கி பொண்ணுக்கு கொடுக்கும் வரதட்சனையை சமன் செய்வார்கள், இப்போ அப்படி நடக்காததால் ,அவரின் மாப்பிள்ளை குடும்பத்துக்கு இழப்பு தானே?

மாப்பிள்ளையின் தங்கைக்கும் நகரத்தார் சமூகத்தில் வரதட்சனை வாங்காமல் வரன் பார்த்துக்கொடுப்பாரா?

மேலும் இங்கே ஜாதியை மீற வச்சது "காதல்" ஆகும், எனவே காதல் திருமணங்கள் மூலமே ஜாதியற்ற சமூகம் உருவாகும்.ஆனால் அது உங்க ஆதர்ச தலைவர் ராமதாசருக்கு புடிக்காது :-))

ஜோதிஜி said...

மருத்துவர் ராமதாஸ் அவர்களை நீங்கள் பார்ப்பது ஒரு சாதீய தலைவராக. நான் அந்த குறைகளுடன் இன்னும் அவருடன் உள்ள நல்ல விசயங்களையும் சேர்த்துப் பார்ப்பதால் நம்முடைய கருத்து முரண்பாடுகள் இன்னும் 5 வருடங்கள் ஆனாலும் மாறப் போவதில்லை.

அப்படியே தொடர்வோம். வழியில் கனம் இருந்தால் தானே மடியில் பயம்.

ஜோதிஜி said...

சரியான விலையைத்தான் சொல்லியிருக்கீங்க.

ஜோதிஜி said...

வாழ்ந்தால் போதும்னு எல்லாரும் ஓடிவரும் சூழல் இந்தியாவில் உருவாவது கடினம்.

நிச்சயம் முரண்படுகின்றேன். இப்பொழுதே இப்படித்தான் பல இடங்களில் பார்த்துக் கொண்டிருக்கின்றேன். என்னவொன்று அலைபேசி, தொலைக்காட்சி, விரும்பிய இரண்டு சக்கர வாகனங்கள், புதுப்படம் போன்ற சின்னச் சின்ன ஆசைகளுடன் தங்கள் கனவை வைத்துக் கொண்டு மாதச் சம்பளம் வாரச் சம்பளத்திற்கென்று வாழ்பவர்கள் தான் அதிகமாக இருக்கின்றார்கள். புதிய முயற்சிகள் எடுக்க எவரும் தயாராக இல்லை என்பதோடு அது குறித்து யோசிக்கவே பயப்படும் சமூகம் தான் உருவாகிக் கொண்டிருக்கின்றது.

இது குறித்து தனியாக ஒரு பதிவே எழுத வேண்டும் என்று மனதில் இருந்ததை உங்கள் இந்த ஒரு வரி தூண்டியுள்ளது.

ஜோதிஜி said...

இங்கேயும் சம்பளம் உயர்த்தப்படும் நிலை தான் வரவேண்டும், அதை விட்டுவிட்டு வாழ்ந்தால் போதும் என்ற நிலையில் மக்கள் அதிகம் உருவாகுவாங்க,

இந்த பதிவில் எழுத விட்டுப் போன ஒன்று வீட்டுக்கு சாக்கடையை சுத்தம் செய்பவருடன் கடந்த இரண்டு மாதமாக பேசிய விசயங்கள். நிச்சயம் உயர்த்துவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இந்த நிமிடம் வரைக்கும் வரவில்லை. வாரந்தோறும் அந்த இளைஞனுக்கு நான் குறிப்பிட்ட பணம் தனியாக கொடுப்பேன். அதற்கே பக்கத்து வீடுகளில் ஏராளமான பிரச்சனைகள் உருவாகிவிட்டது. மாதம் கொடுப்பது போதும் என்று கத்தத் தொடங்கிவிட்டார்கள். சாக்கடை அடைத்துக் கொண்டு நின்றாலும் வேடிக்கை பார்க்கத்தயாராக இருக்கின்றார்களே தவிர அவர்களை மதிக்கத் தயாராக இல்லை. இது நான் பார்த்துக் கொண்டிருப்பது.

அருள் said...

பொருளாதார நிலையில் உயரும்போது சாதியின் தாக்கங்கள் குறையும் என்பது உண்மைதான். ஆனால், கல்வி, வேலை போன்ற அடிப்படையான தகுதிநிலைகளை அடைவதற்கே சாதி ஒரு தடையாகவோ தகுதியாகவோ இருப்பதுதான் அவலம்.

நம்நாட்டில் தனிமனிதனாகவே எல்லாவற்றையும் முடிவு செய்துவிடும் வாய்ப்பு குறைவு. நாம் பிறந்த சாதி பலவிடயங்களை தீர்மானித்துவிடுகிறது. பெரும்பாலான மக்களின் கல்வி, வேலை, பொருளாதாரநிலை, வசிப்பிடம், திருமணம் போன்ற பலவற்றிலும் ஓரளவுக்காவது சாதி தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

நாமாக தேர்ந்தெடுக்காத சாதி, நமது சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தக் கூடியதாக இருப்பதை தவிர்க்க முடியவில்லை. இந்த நிலையில்தான், "ஒருசாதியே தன்னை ஒட்டுமொத்தமாக உயர்த்திக்கொள்ளும் தேவை ஏற்படுகிறது".

இந்திய நாட்டின் மிகப்பெரிய போராட்டங்களும் சமூக சீர்திருத்தங்களும் ஒரு சாதியோ அல்லது சிலசாதிகளில் கூட்டமைப்போ ஒட்டுமொத்தமாக 'அதாவது ஒருசாதியில் உள்ள எல்லோருமே' கூட்டமாக தனது நிலையை உயர்த்த செய்யும் முயற்சியாக நடந்துள்ளது.

நாடார்கள் நேரடியாக அதைச் செய்தார்கள். மறைமலை அடிகள் தமிழன் என்கிற பெயரில் அதைச் செய்தார். அண்ணல் அம்பேதக்ர் தீண்டத்தகாதோர் உரிமை என அதைச் செய்தார். தந்தை பெரியார் பார்ப்பனரல்லாதார் என அதை முன்வைத்தார்.

இங்கு எல்லா போராட்டங்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ, எப்போதும் சாதியால் சாதியினரின் முன்னேற்றத்திற்காக அமைகின்றன

ஜோதிஜி said...

* பொண்ணுக்கு தாழ்த்தப்பட்ட சமூகத்தில் திருமணம் செய்திருப்பது நல்ல விடயம் தான்,ஆனால் அதிலும் பொருளாதார நலன் பார்த்து தான் செய்திருக்கிறார்.

மொத்தமாக உங்க இரண்டு விமர்சனத்தை படித்து முடித்து வாயை பொத்திக்கொண்டு சிரித்துக் கொண்டிருந்தேன். எப்படித் தான் இந்த மாதிரி நோண்டல் கேள்வி கேட்க முடியுதோ என்று?

இருப்பதை பாராட்டுவோம்.
இதுவே வளர வேண்டும் என்று விரும்புவோம்.

ஜோதிஜி said...

அருள் உங்க நல்ல விமர்சனத்திற்கு நான் பதில் சொல்லப் போனால் தலைகீழா தொங்குற ஒருத்தரு என்னை கடித்து குதறி வைக்கப் போறாரு.

ஜோதிஜி said...

மேலும் இங்கே ஜாதியை மீற வச்சது "காதல்" ஆகும், எனவே காதல் திருமணங்கள் மூலமே ஜாதியற்ற சமூகம் உருவாகும்.ஆனால் அது உங்க ஆதர்ச தலைவர் ராமதாசருக்கு புடிக்காது :-))

ராமதாசருக்கு பிடிக்குதோ இல்லையோ இங்கே யாருக்கு உண்மையான காதலைப் பற்றி தெரியும் என்பது தான் என்னுடைய கேள்வியே? அதைப் பற்றி விரிவாக வேறொரு பதிவில் சொல்லி உள்ளேன்.

ஜோதிஜி said...

"ஒரு குறிப்பிட்ட" சமூக மக்கள் தான் முன்வரும் சூழல் நிலவும்,எனவே அப்பொழுதும் ஆட்கள் தட்டுப்பாடாகவே இருக்கும்.

இது உடைபட்டுக் கொண்டு வருகின்றது என்பது இம்பூட்டு பெரிய பதிவு எழுதியும் நீங்க பிடிவாதமாக இல்லை அவங்க தான் கடைசி வரைக்கும் இது போன்ற தொழிலை செய்வார்கள் என்று வறட்டுக் கத்தலாக கத்திக் கொண்டிருந்தால் இதற்கு மேல் நான் என்ன சொன்னாலும் உங்க மைன்ட் வாய்ஸ்ல ஏறாது என்பதால் இத்துடன் என் சிற்றுரையை முடித்துக் கொள்கின்றேன்.

அருள் said...

ஹா...ஹா... பறவைகளுக்கு மனிதனின் துன்பம் புரியாதுதான்...! (சும்மா ஜாலியாதான் சொன்னேன்)

Avargal Unmaigal said...

சட்டம் பலமாக இருந்தாலும் பல மட்டங்களிலும் இருந்துகொண்டுதான் இருக்கின்றன. விரைவில் அது பற்றி சிறு பதிவு இடுகிறேன்

ஜோதிஜி said...

ஆனால் காலம் காலமாக மனிதர்கள் தான் பறவைகளை கொன்னு கொலையெடுக்குறாங்க அருள். இந்த பறவை என்னை அடிக்கடி எழுதத் தூண்டும் சிந்தனைப் பறவை.

ezhil said...

உண்மைதான் பொருளாதார மாற்றம் சாதீய பிரிவுகளை மாற்றிவிடும் தான்... ஆனால் அதற்கு ஆகும் காலம்?...எனக்கும் தெரிந்த ஒரு அயர்ன் செய்பவரின் மகன் காம்பஸ் இன்ட்ரிவியூவில் தேர்ந்தெடுக்கப்பட்டு சென்னையில் நல்ல சம்பளத்தில் வேலை செய்கிறான்... சென்னையை சுற்றிப் பார்க்க மகனிடம் சென்ற பெற்றோரின் மகிழ்வைப் பார்த்தேன்... கண்டிப்பாக அவர்கள் அயர்னிங் வேலையைத் தொடரப் போவதில்லை என்பதே பெரிய மாற்றம்...

வவ்வால் said...

ஜோதிஜி,

உங்க இம்புட்டு பெரியப்பதிவில் , எதை உடைத்தீர்கள் எனப்பார்ப்போமா,

# //"சார் அவங்களை எந்த கேள்வியும் கேட்க கூடாது என்கிறார்கள். அப்படி கேட்டால் அடுத்த நாள் வரமாட்டேன் என்கிறார்கள்" என்றார்.

"ஏன் வேறு நபர்களை போட்டுக் கொள்ள வேண்டியது தானே?" என்றேன்.

"இல்லை சார். ஆட்கள் கிடைப்பதில்லை" என்றார்.//

அது எப்படி குறிப்பிட்ட சமூகம் என சொல்லப்போச்சு என பொங்கினீர்கள், மேற்கண்டதில் 'ஆட்கள்" கிடைப்பதில்லை என்பதில் அவ்வுண்மை ஒழிந்திருக்கிறது.

வழக்கமாகவே ஏதேனும் "கிரிட்டிகலாக" ஒரு உண்மையை சொல்ல வேண்டிய இடத்தில் எல்லாம் சொல்லாமல் மழுப்பிவிட்டு செல்வது உங்கள் பாணி,அதே வகையில் , கூட்டுவதற்கு ஆட்கள் கிடைப்பதில்லை என சொல்லிவிட்டு அப்படியே அயர்னிங், சலூன் என தாவி அனைத்திலும் அனைவரும் இருக்கிறார்கள் என போலியாக நிறுவ கிளம்பிவிட்டீர்கள்.

ஹவுஸ் கீப்பிங் பணியில் கூட்டுவது மட்டுமா இருக்கு, உங்கள் தொழிற்சாலையில் "கழிவறை" இல்லையா? அதை யார் சுத்தம் செய்கிறார்கள்.

எனவே குறிப்பிட்ட சுத்திகரிப்பு பணிக்கு ஆட்கள் குறிப்பிட்ட சமூகத்தில் இருந்து தான் வருகிறார்கள்,அவ்வேலைகள் ஆயிரக்கணக்கில் காலியாக இருந்தாலும் பிறர் வருவதில்லை, ஏன் இக்காலத்தில் வாழவழியற்ற பிறசமூகத்தினர் இல்லவே இல்லையா? நீங்களோ எப்படியும் வாழவழியற்றவர்கள் வருவார்கள் என அவலாசையுடன் காத்திருக்கிறீர்கள், எதிர்க்காலத்திலும் யார் முன்வருவார்கள் "அதே குறிப்பிட்ட சமூகத்தில்" பொருளாதார ஏற்றம் பெறாதவர்கள் தான் நீங்கள் குறிப்பிட்ட 'எப்படியும் வாழனும்" என வருபவர்களாக இருப்பார்கள்.

இதையே குறிப்பிட்டு ,உயர்ந்த ஊதியம் அளித்தால் மட்டுமே அனைவரும் வரும் சூழல் நிலவும் என்றேன்.

தொடரும்...

வவ்வால் said...

தொடர்ச்சி...


# //இது உடைபட்டுக் கொண்டு வருகின்றது என்பது இம்பூட்டு பெரிய பதிவு எழுதியும் நீங்க பிடிவாதமாக இல்லை அவங்க தான் கடைசி வரைக்கும் இது போன்ற தொழிலை செய்வார்கள் என்று வறட்டுக் கத்தலாக கத்திக் கொண்டிருந்தால் //

நான் போட்டதே சின்ன பின்னூட்டம் அதில கொஞ்சமா வெட்டி ஒட்டி ஒரு புது அர்த்தம் எப்படி உங்களால மட்டும் கொண்டு வர முடியுது?

அடிப்படை சுத்திகரிப்பு பணிக்கும் அதிக ஊதியம் கொடுக்கணும் அப்போது தான் அனைவரும் அவ்வேலைக்கு வருவார்கள் என்பதே எனது பின்னூட்டத்தின் சாரம், ஒரு வேளை நான் சரியாக சொல்லத்தவறியிருந்தால் இப்பொழுது சொல்லிவிட்டேன்.

அவ்வாறு அதிக ஊதியம் எல்லாம் தரமாட்டேன் ,வாழ்ந்தாக வேண்டிய வாழ்க்கை கட்டாயத்தில் இருப்பவர்கள் எப்படியும் சுத்திகரிப்பு வேலைக்கு வருவார்கள் என்றால் அது "ஒரு குறிப்பிட்ட சமூகம்(அல்லது மக்கள்)" வாழ்க்கை நிலையில் எப்படியும் கடைநிலையில் இருக்கும் என்ற நம்பிக்கை, பெரும்பாலும் தமிழக சூழலில் வாழ்க்கையின் விளிம்பில் இருக்கும் சமூகம் தாழ்த்தப்பட்டவர்களே, அவர்களிடையே ஏற்படும் பொருளாதார மாற்றம் மெதுவாகவே நிகழ்கிறது, எனவே மற்ற சமூகத்தில் கடைநிலையில் இருப்பவர்களும் மேம்பட்ட நிலைக்கு மாறிய பின்னர் எஞ்சியவர்கள் அவர்களே, எனவே வாழ்ந்தாக வேண்டிய சூழலில் எப்படியும் வருவார்கள் என சொல்ல வருகிறீர்கள் ,இது தான் நீங்கள் முன் வைக்கும் கருத்து.

நான் சொல்வதோ சுத்திகரிப்பு பணிக்கு அதிக சம்பளம் என்றால் அனைவருமே அவ்வேலையை செய்ய முன்வருவார்கள்,எனவே ஆட்கள் தட்டுப்பாடு வராது என்பதாகும், இதனால் தான் அமெரிக்காவில் பாதாள சாக்கடை சுத்தம் செய்பவருக்கு மென்பொருள் நிபுணர் அளவுக்கு சம்பளம் என உதாரணம் சொன்னேன்.

ஆனால் நீங்களோ எங்க வீட்டுக்கு சாக்கடை சுத்தம் செய்பவருக்கே கூடுதல் பணம் கொடுக்க எதிர்ப்பு எனவே சம்பளம் எல்லாம் உயர்த்த வாய்ப்பே இல்லைனு வறட்டு சித்தாந்தம் பேசுறிங்க, இனிமேல் நான் என்ன சொன்னாலும் உங்களுக்கு ஏறாது எனவே எனது சின்னம் சிறிய உரையை முடித்துக்கொள்கிறேன்!

ஜோதிஜி said...

அது எப்படி குறிப்பிட்ட சமூகம் என சொல்லப்போச்சு என பொங்கினீர்கள், மேற்கண்டதில் 'ஆட்கள்" கிடைப்பதில்லை என்பதில் அவ்வுண்மை ஒழிந்திருக்கிறது.

தலைவரே கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்பவர்கள், மற்றும் கழிப்பறையை சுத்தம் செய்யபவர்கள் எங்கள் நிறுவனத்தில் உள்ளவர்கள் எவரும் நீங்கள் குறிப்பிடும் வகுப்பைச் சேர்ந்தவர்கள் இல்லை. இதற்குப் பின்னால் மற்றொரு கொடூரமும் உள்ளது. நிறுவனங்களின் உள்ளே அலுவலகம் போன்ற பகுதிகளில் உள்ள கழிப்பறையை சுத்தம் செய்ய வேண்டியிருப்பதால் ஊரில் உள்ளவர்களை இதற்கென வீட்டு வேலைகளுடன் இந்த வேலைக்கும் பழக்கி வைத்துள்ளார்கள். இது பற்றி நிறைய எழுதலாம். பழைய காலத்து மனிதர்களின் பல பழக்கவழக்கங்களை பார்த்து நொந்து கொண்டிருப்பதால் அது குறித்து விரிவாக எழுத விருப்பம் இல்லை.

இந்த துறையில் இதே வகுப்பைச் சேர்ந்தவர்கள் தான் அதிக அளவில் தான் இருக்கின்றார்கள் என்பது எம்பூட்டு உண்மையோ அதைப்போல மற்ற இனத்து மக்களையும் பல காரணங்களால் இந்த வேலையை செய்ய வைத்துக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களும் ஏற்றுக் கொண்டு செய்து கொண்டிருக்கின்றார்கள் என்பதும் உண்மையே.

வீடுகள், தொழிற்சாலையின் வெளிப்பகுதியில் உள்ள கழிப்பறைகள், பொதுக்கழிப்பிடம் என்பது போன்றவைகளில் தான் இந்த வகுப்பு மக்கள் இருக்கின்றார்கள். மற்ற பகுதிகளில் எப்படி என்று எனக்குத் தெரியல.

கூட்டிப் பெருக்குபவர்கள் நிச்சயம் பல இனத்து மக்கள் தான் இருக்கின்றார்கள். நீங்க சொல்வது போன்ற குறிப்பிட்ட இன மக்கள் இதில் இல்லவே இல்லை என்று சொல்ல முடியாது. நூற்றில் பத்து பேர்கள் தான் இதில் இருக்கின்றார்கள் என்பதை நீங்க ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

ஜோதிஜி said...

என் பதிவுக்கு கிடைத்த அங்கீகாரம் உங்களின் கருத்து எழில். நன்றி.

ஜோதிஜி said...

சுத்திகரிப்பு பணிக்கு அதிக சம்பளம் என்றால் அனைவருமே அவ்வேலையை செய்ய முன்வருவார்கள்

நீங்க எந்த துறையில் இருக்கீங்கன்னு எனக்குத் தெரியல. ஆனா திருப்பூர்ல வந்த நிலைமையைப் பார்த்தால் நொந்து விடுவீர்கள். ஒரு டைலருக்கு ஒரு நாள் 12 மணி நேர ஷிப்ட்டுக்கு குறைந்தபட்சம் 350 ரூபாய். அன்று வேலையில்லை. உள்ளே உள்ள மற்ற எடுபிடி வேலைகளில் கவனம் செலுத்தி அதே சம்பளத்தை வாங்கிக் கொள் என்றால் பின்னங்கால் தெறிக்க ஓடிவிடுவார்கள். சம்பளம் நிறைய வேண்டும் அதே சமயத்தில் வேலையில் கௌரவமும் இருக்க வேண்டும் அதாவது வறட்டுக் கௌரவம் என்கிற மாதிரியான தொழிலாளர்கள் அதிக அளவில் உருவாகிக் கொண்டிருப்பது உங்களுக்குத் தெரியுமா? இங்குள்ள முதலாளிகள் இதைப் படிக்கும் போது உங்களை கொல வெறியோடு பார்ப்பார்கள். நானே வியந்து போய் தொழிலாளர்களின் மாறிக் கொண்டிருக்கும் மனோநிலையை ஆராய்ச்சி செய்து கொண்டு தானே இருக்கின்றேன்.

ஜோதிஜி said...

வழக்கமாகவே ஏதேனும் "கிரிட்டிகலாக" ஒரு உண்மையை சொல்ல வேண்டிய இடத்தில் எல்லாம் சொல்லாமல் மழுப்பிவிட்டு செல்வது உங்கள் பாணி,அதே வகையில் , கூட்டுவதற்கு ஆட்கள் கிடைப்பதில்லை என சொல்லிவிட்டு அப்படியே அயர்னிங், சலூன் என தாவி அனைத்திலும் அனைவரும் இருக்கிறார்கள் என போலியாக நிறுவ கிளம்பிவிட்டீர்கள்.

"நீங்க இப்படி பாராட்டுவது" எனக்கு புதிதல்ல. நீங்க பேசுவது எப்போது எதார்த்தம் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரிந்த போதிலும் வறட்டுபிடிவாதத்தை விட்டு வெளியே வராமல் சிலம்பு சுற்றுவதை ரசிப்பதில் நான் முக்கிய ஆளாக இருப்பதோடு நீங்க எனக்கு அறிமுக நாள் முதல் முதல் ரசிகனாகவே இருப்பதை இந்த இடத்தில் பெருமையுடன் பதிவு செய்ய கடமைப்பட்டுள்ளேன்.

ஜோதிஜி said...

"இல்லை சார். ஆட்கள் கிடைப்பதில்லை" என்றார்.//

இதற்குப் பின்னால் உள்ள உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா?

நானும் ஒரு தொழிலாளர் என்கிற பார்வையோடு பார்த்த உண்மை இது.

என்னப்பா இந்த அறையெல்லாம் அரைகுறையா கூட்டியிருக்கீங்க. கொஞ்சம் சுத்தம் பண்ணிடுங்கப்பா என்ற போது அவர்களிடம் இருந்து வரும் பதில் என்ன தெரியுமா?

இந்த வாரத்தோடு கணக்க முடிச்சுடுங்க சார். வேலை கிடைக்கவில்லை என்கிற கூட்டம் ஒரு பக்கம். செய்கின்ற வேலையை உண்மையாக ஆத்ம சுத்தியோடு பார்க்க விரும்பாத கூட்டம் மறுபக்கம்.

ஆனால் தினந்தோறும் காசு வேண்டும்.

நான் பார்த்துக்கொண்டிருக்கும் தொழிலாளர்கள் உலகம் இங்கே இது தான். இது முதலாளித்துவம் தொழிலாளர் நல ஆதரவு என்பதற்கு அப்பாற்பட்டு உள்ள உண்மை இது தான் நண்பா.

நிகழ்காலத்தில் சிவா இதைப் பார்த்தால் பொங்கி விடுவார்.

vishwa said...

பொருளாதார மாற்றம் சாதிகளை ஒழிக்கும் உண்மை. அதற்கு நமது நாடு
பொருளாதார வளர்ச்சி பெறவேண்டும். தனி நபர் வருமானம் உயர வேண்டும்.
இங்கொன்றும் அங்கொன்றும் உதாரணம் காட்டி போலியான சந்தோசம் அடைகிறோம்.
எங்கள் (திருப்பூர்) நிறுவனத்தில் பணிபுரியும் கழிப்பறை துப்புரவுத் தொழிலாளி நாளொன்றுக்கு நான்கு மணிநேரம் மட்டும் பணி புரிந்து வருகிறார். அவருக்கு மாதம் 8000 ரூபாய் சம்பளம் கொடுக்கிறோம்.எங்கள் நிறுவனத்தில் இந்த வேலைக்கு சேர பலர் முனைகின்றனர். குடும்ப உறுப்பினர் போட்டோ பெறுவது ESI அல்லது ESI அங்கீகாரம் பெற்ற மருத்துவமனையில் அவர்கள் எந்த ஊரில் இருந்தாலும் (குடும்ப உறுப்பினர்கள்) இலவசமாக மருத்துவம் மற்றும் மருந்து வசதிகள் பெறலாம்.

நன்றி
விஸ்வா.

ஜோதிஜி said...

உங்கள் பதிலை நண்பர் வவ்வாலுக்கு டெடிகேட் செய்கின்றேன். நன்றி விஸ்வா.

வவ்வால் said...

ஜோதிஜி,

//நீங்க பேசுவது எப்போது எதார்த்தம் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரிந்த போதிலும் வறட்டுபிடிவாதத்தை விட்டு வெளியே வராமல் சிலம்பு சுற்றுவதை ரசிப்பதில் நான் முக்கிய ஆளாக இருப்பதோடு நீங்க எனக்கு அறிமுக நாள் முதல் முதல் ரசிகனாகவே இருப்பதை இந்த இடத்தில் பெருமையுடன் பதிவு செய்ய கடமைப்பட்டுள்ளேன்.//

ரொம்ப டென்ஷன் ஆகிட்டிங்களோ? என்னை தலைவராக்கிட்டிங்களே அவ்வ்!

வரட்டுப்பிடிவாதத்துடன் சிலம்பம் சுற்றுவதாக சொல்லி இருக்கிறீர்கள்,அப்படி உங்கள் பார்வைக்கு தெரியக்காரணம் அடியேன் அல்ல,அதற்கும் தாங்களே காரணம் :-))

பொருளாதாரத்தால் ஜாதியம் அழியும் என கதைக்க ஆரம்பித்து , கூட்டுவதில் துவங்கி "ஆட்களே கிடைப்பதில்லை" என முடித்துக்கொண்டு, அழகு நிலையம், அயர்னிங்கில் பாருங்கள் எல்லா சமூகமும் வேலைக்கு வந்துவிட்டது என விரிவாக சொல்ல வேண்டிய அவசியம் என்ன?

பின்னிரண்டு பிரிவில் காட்டிய விரிவை "கூட்டுவதிலும்" சொல்லியிருந்தால் நான் ஏன் சிலம்பம் சுற்றப்போகிறேன், நான் கேட்டப்பின்னே மேற்கொண்டு விளக்கி அனைவரும் அதில் வேலை செய்கிறார்கள் என சொல்கிறீர்கள் :-))

நீங்கள் ஒருக்கருத்தினை முன் வைக்கும் போது மையக்கருத்து எது அதற்கு வலு சேர்க்கும் துணைக்கருத்துக்கள் எவை என உணராமல் எழுதுவதனை சீர்திருத்திக்கொள்ளும் எண்ணமின்றி இருப்பதால் , அடுத்தவர் சுட்டிக்காட்டினால் வரட்டுப்பிடிவாதமாக சிலம்பம் சுற்றுவதாகவே தெரியும் :-))

உ.ம்: கூட்டுதல் ,கழிவறை சுத்தப்படுத்தும் பணிக்கு அனைவரும் முன் வருகிறார்கள் என சொல்வதே "பொருளாதாரம் ஜாதியத்தினை அழிக்கும்" என்ற வாதத்திற்கு வலு சேர்க்கும் முதன்மையான கருத்தாகும்.

ஆனால் அதனை மொட்டையாக சொல்லிவிட்டு, சலூன்,அயர்னிங் என்ற அடுத்த நிலை தொழிலை ஒப்பிட்டு விரிவாக பேசுகின்றீர்கள்.

இதுல வேற எழுத்தை ஆய்வு செய்கிறேன்,எழுத்து வடிவம் எப்படி வசப்படும்னு எல்லாம் பாடம் வேற நடத்துறிங்க :-))

# கண்டிப்பாக உங்கப்பதிவுகளின் தொடர் வாசகன் தான், நீங்கள் பல நல்ல கருத்துக்களை மையமாக வைத்து கட்டுரைகள் எழுதுகிறீர்கள்,ஆனால் என்ன ஒன்று இடையிலேயே உங்களையறியாமல் "drift" ஆகி வேறு எங்கோ சுற்ற ஆரம்பித்துவிடுவது வழக்கம், சரி நாம அப்பப்போ கொஞ்சம் சுட்டிக்காட்டி உங்களை "சரிப்படுத்திடலாம்" அப்படினு முயற்சிப்பதும் வழக்கமே :-))

பார்த்தேளா நான் உங்களுக்கே தெரியாம இத்தனை நாளா எப்படி எழுதுவதுனு "பாடம்" எடுத்தேனாக்கும் ஹி...ஹி நீங்க எனக்கு வழிக்காட்ட பார்த்தீங்கோ :-))

ஜோதிஜி said...

உங்களையறியாமல் "drift" ஆகி வேறு எங்கோ சுற்ற ஆரம்பித்துவிடுவது வழக்கம்,

இது உண்மை தான். ஒத்துக் கொள்கின்றேன். குறிப்பிட்ட சிலர் இந்த தவற்றை பல தடவை சுட்டிக் காட்டிக் கொண்டே இருக்கின்றார்கள். ஆனால் எல்லா கட்டுரைகளிலும் இதே போல வருவதில்லை. என் பழைய பதிவுகளை வேறொரு பார்வையில் படித்த போது புரிந்து கொண்டதுண்டு. சில சமயம் உருவாகும் அன்றாட அழுத்தத்தை நீக்க வேண்டிய அவசரத்தில் டைரிக்குறிப்புகள் போல நினைத்ததை எழுதி விடுகின்றேன்.

ஆனால் உங்களை மாதிரி தவற்றை ஒத்துக் கொள்ளாமல் கம்புச்சண்டை நடத்துவதில்லை.

எழுதுபவன் என்ன பார்க்கின்றானோ? எது அவனை தாக்குகின்றதோ அதைப் பற்றி தானே எழுத முடியும். இதென்ன பத்திரிக்கைக்கு எழுதும் எழுத்தா? கவனமாக கத்தரித்து சுத்திகரித்து எழுத?

இந்த இடத்தில் மற்றொரு விசயம் உங்கள் பார்வைக்காக.

இது போன்ற ஒரு விசயத்தை ஆழம் பத்திரிக்கையாக இரண்டு மாதத்திற்கு முன்பு மருதன் எழுதச் சொன்னார். ஆழம் பத்திரிக்கையில் தெளிவான முறையில் கட்டுரைகள் வந்து கொண்டிருப்பதால் நிச்சயம் இங்கே உள்ள அதிகபட்ச விசயங்களை கோர்க்க வேண்டும் என்பதோடு எனக்கு நேரம் கிடைக்காத காரணத்தால் என்னால் எழுதி கொடுக்க முடியவில்லை. ஒரு மணி நேரத்திற்கு முன் அவரிடம் இதைப் படித்துப் பாருங்க. நீங்க சொன்னதை இப்பத்தான் இப்படித்தான் எழுத முடிந்தது என்ற போது அவரின் விமர்சனம் இப்படி வந்தது.

உண்மைகளை அனுபவங்களோடு எழுதும் போது அழகாகத்தான் இருக்கின்றது. நன்றாக வந்துள்ளது என்றார்.

ஒவ்வொருவர் பார்வையும் ஒவ்வொரு விதம் என்பதையும் நீங்கள் புரிந்து கொள்ள மாட்டீர்கள் என்பது எனக்கும் தெரியும்.

நாம முயலுக்கு மூணே கால் என்கிற கோஷ்டியாச்சே(?)

வவ்வால் said...


--------------

ஜோதிஜி,

//இங்குள்ள முதலாளிகள் இதைப் படிக்கும் போது உங்களை கொல வெறியோடு பார்ப்பார்கள். நானே வியந்து போய் தொழிலாளர்களின் மாறிக் கொண்டிருக்கும் மனோநிலையை ஆராய்ச்சி செய்து கொண்டு தானே இருக்கின்றேன்.//

அவ்வப்போது ஆய்வு செய்கிறேன் என சொல்லி சிரிப்பு மூட்டுறிங்க :-))

திருப்பூரில் "முதலாளிகள்" மட்டுமே இருப்பதால் கொலவெறியில் பார்ப்பதில் ஆச்சர்யமில்லை, அவர்கள் "பாஸ்" ஆக மாறினால் உலக தொழிலாளர் தர அளவீடு பற்றியெல்லாம் சிந்திக்க கூடும்.

வறட்டுக்கவுரவம் டெய்லர்கள் பார்ப்பது இயல்பே, அதே சமயம் இதற வேலைக்கு ரூ 400, டெய்லருக்கு 350 ரூ என்றால் தன்னால் நிலை மாறும் என்பதே அடியேனின் நிலைப்பாடு.

வலையுலகில் நிறைய அயல்நாட்டு வாழ் மென்பொருள் வல்லுனர்கள் இருக்கிறார்கள்,ஆனால் அவர்கள் எத்தனைப்பேர் அயல்நாட்டு வாழ் சமூக பொருளாதார நிலை, வாழ்வியல் பற்றி எழுதி இருக்கிறார்கள் எனப்பார்த்தால் யாருமே தேற மாட்டார்கள். அங்கிருந்து கொண்டு தொ.கா பார்த்து இந்திய சினிமா,அரசியல்னு கதைப்பார்கள் :-))

10 ஆம் வகுப்பு (ஓ லெவல்) படித்துவிட்டு ஹெவி வெகிஹில் லைசன்ஸ் வாங்கிவிட்டால் போதும் மென் பொருள் வல்லுனரை விட கூடுதலாக டிரக் ஓட்டி சம்பாதிக்கலாம். கனடாவில் நம்ம ஊரு பஞ்சாபிகள் 10 வகுப்பு தகுதியுடன் டிரக் ஓட்டி வளமாக வாழ்கிறார்கள்.

எனது அயல்நாட்டு நண்பர் சொன்னது இது , மேலும் பல தகவல்கள் கேட்டுப்பெற்றேன், அங்கெல்லாம் டர்ட்டி ஜாப் எனப்படுவதற்கு நல்ல சம்பளம் உண்டு, கல்வி தகுதி ஒரு பொருட்டேயல்ல என்றார்.

உலக அளவில் வியாபாரம் நடக்கிறது என திருப்பூர் தொழில் உலகில் பழக்கமே இல்லாத ஹெச்.ஆர் துறை எல்லாம் திருப்பூருக்குள் நுழையும் போது உலக தொழிலாளர் தரமும் வரட்டுமே என நான் சொல்கிறேன்,ஆனால் நீங்களோ அப்படிலாம் தரம் உயர்த்த வேண்டாம், வாழ வழியே இல்லைனு நிர்பந்தத்தினால் வருவாங்க பயன்ப்படுத்திக்கொள்ளலாம்னு சொல்றிங்க.

உலக அளவிலும்,இந்திய அளவிலும் "மார்ஜினல் பீப்பிள்" எண்ணிக்கை குறைந்துக்கொண்டே தான் வருகிறது, அவ்வாறு குறைக்க திட்டமிடும் அரசே மக்கள் நல அரசு. அப்படி இருக்கையில் வருங்காலத்தில் அவ்வகை மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்னு ஒரு ஹெச்.ஆர் சொல்வதாக சொல்வதே வேடிக்கை ஆகும்.

இதனை நீங்கள் உங்கள் டயரியில் குறித்து வைத்துக்கொள்ளலாம், பத்தாண்டுகளுக்கு பிறகு நான் சொன்னது எவ்வளவு சரி ,நீங்கள் சொன்னது எவ்வளவு பிழை என உணர்வீர்கள்,

" வருங்காலத்தில் "விளிம்பு நிலை தொழில்" செய்வோர் அதாவது வாழவழியில்லை எப்படியாவது வாழ்ந்தாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருப்போரின் எண்ணிக்கை மிக குறைவாக ஆகிவிடும்."

ஜோதிஜி said...

வலையுலகில் நிறைய அயல்நாட்டு வாழ் மென்பொருள் வல்லுனர்கள் இருக்கிறார்கள்,ஆனால் அவர்கள் எத்தனைப்பேர் அயல்நாட்டு வாழ் சமூக பொருளாதார நிலை, வாழ்வியல் பற்றி எழுதி இருக்கிறார்கள் எனப்பார்த்தால் யாருமே தேற மாட்டார்கள். அங்கிருந்து கொண்டு தொ.கா பார்த்து இந்திய சினிமா,அரசியல்னு கதைப்பார்கள் :-))


நான் பலமுறை வியந்தது, நொந்தது இதைத்தான். இன்று வரையிலும் மாறவில்லை என்பது தான் ஆச்சரியம். கோரல் ட்ரா முதல் பல மென்பொருளை திறக்கும் போது தொடக்கத்தில் அதில் பங்கெடுத்தவர்கள், உருவாக்கியவர்கள் என்று பெயர் பட்டியல் வரும். பல தமிழ் பெயர்களை பார்த்துள்ளேன். ஆனால் இன்று வரையிலும் தமிழுக்கென்று தனிப்பட்ட முறையில் உருவாக்குபவர்கள், உருவாக்கிக் கொண்டிருப்பவர்கள் என்று பார்த்தால் வேறு துறையில் இருப்பவர்கள் தான். காசி ஆறுமுகம் இதைப் பற்றி தனது பதிவில் அழகாக சொல்லியிருக்கின்றார்.

ஜோதிஜி said...

" வருங்காலத்தில் "விளிம்பு நிலை தொழில்" செய்வோர் அதாவது வாழவழியில்லை எப்படியாவது வாழ்ந்தாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருப்போரின் எண்ணிக்கை மிக குறைவாக ஆகிவிடும்."

நிச்சயம் இது போன்ற உங்களின் உறுதியான நிலைப்பாட்டினை வரவேற்கவே செய்கின்றேன்,

பசி, பட்டினி என்பது கடந்த ஐம்பது ஆண்டுகளை ஒப்பிடும் போது குறைந்துள்ளது. இல்லவே இல்லை என்று சொல்லமுடியாது. இன்னமும் 40 கோடி மக்கள் இந்திய ஜனத்தொகையில் வாழ முடியாத நிலையில் இருப்பதாகத்தான் புள்ளி விபரங்கள் சொல்கின்றது. மனிதர்களின் அடிப்படை வாழ்க்கை வாழ இன்று எங்கு காணினும் வேலைகள் நிறைய உள்ளது. ஆனால் சம்பாரிக்கும் பணத்திற்கும் அடைய வேண்டிய விருப்பங்களுக்கும் உண்டான இடைவெளியும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேயிருக்கின்றது

வவ்வால் said...

ஜோதிஜி,

//ஆச்சரியம். கோரல் ட்ரா முதல் பல மென்பொருளை திறக்கும் போது தொடக்கத்தில் அதில் பங்கெடுத்தவர்கள், உருவாக்கியவர்கள் என்று பெயர் பட்டியல் வரும். பல தமிழ் பெயர்களை பார்த்துள்ளேன்.//

நீம்களும் அதை கவனித்துள்ளீர்களா,ஜெயஶ்ரீ என்ற பெண்ணின் பெயரெல்லாம் கூட வரும் என நினைக்கிறேன். 2-3 ஆண்டுகளுக்கு முன்னர் இதனை மையமாக வைத்து ,நம்ம ஊரு மென்பொருள் வல்லுனர்கள் உண்மையில் மென்பொருள் வல்லுனர்களே அல்ல என்று, என்றும் அன்புடன் பாலா பதிவில் ஒரு ஆட்டமே பின்னூட்டத்தில்
ஆடியிருக்கேன் :-))
----------------

//எழுதுபவன் என்ன பார்க்கின்றானோ? எது அவனை தாக்குகின்றதோ அதைப் பற்றி தானே எழுத முடியும். இதென்ன பத்திரிக்கைக்கு எழுதும் எழுத்தா? கவனமாக கத்தரித்து சுத்திகரித்து எழுத?//

கண்டிப்பாக எழுதுபவரின் பார்வையில் தான் வரும், ஆனால் தவறான கருத்தாக்கத்தினை அளித்தாலும் இதான் என் பார்வை என்பது வேறு ,இதான் சரியான பார்வை,கூற்று என்பது வேறு.

நீங்கள் சொல்வது உங்கள் கருத்து என சொல்வதேயில்லை,ஸ்வீப்பிங் ஸ்டேட்மென்டாக ஒரு ஜட்ஜ்மெண்ட் அளிக்கிறீர்கள், உங்கள் கூற்றுகளின் "நடையை' கவனிக்கவும்.

#//இந்த இடத்தில் மற்றொரு விசயம் உங்கள் பார்வைக்காக.

இது போன்ற ஒரு விசயத்தை ஆழம் பத்திரிக்கையாக இரண்டு மாதத்திற்கு முன்பு மருதன் எழுதச் சொன்னார். ஆழம் பத்திரிக்கையில் தெளிவான முறையில் கட்டுரைகள் வந்து கொண்டிருப்பதால் நிச்சயம் இங்கே உள்ள அதிகபட்ச விசயங்களை கோர்க்க வேண்டும் என்பதோடு எனக்கு நேரம் கிடைக்காத காரணத்தால் என்னால் எழுதி கொடுக்க முடியவில்லை. ஒரு மணி நேரத்திற்கு முன் அவரிடம் இதைப் படித்துப் பாருங்க. நீங்க சொன்னதை இப்பத்தான் இப்படித்தான் எழுத முடிந்தது என்ற போது அவரின் விமர்சனம் இப்படி வந்தது.//

முன்னர் இப்படித்தான், நான் வினவிலே எழுதியவனாக்கும்னு சொன்னது தான் நினைவுக்கு வருது,அப்போவும் சிரிப்பு தான் வந்தது ,இப்பவும் அஃதே!

இதன் மூலம் நீங்கள் சொல்லவருவது என்னவெனில்,

"ஆழம்" பத்திரிக்கை ஆழமான கட்டுரைகளை வெளியிடும் ஒரு உலகத்தரமான பத்திரிக்கை, அதற்கே ஒரு மணி நேரத்தில் ,போகிற போக்கில் எழுதினேன்,அதுவே ரொம்ப"ஆழம்" என ஆழத்தின் மேன்மைமிகு ஆசிரியர் "மருதன்" அவர்களே பாராட்டியிருக்கிறார், அப்படியாப்பட்ட எனது எழுத்தில் நீயெல்லாம் குறையா சொல்றனு கேட்பதாக நினைக்கிறேன்.

ஹி...ஹி நீங்க "டைம்" பத்திரிக்கைல எழுதி அதன் ஆசிரியரே வாரே வாஹ்னு சொன்னவரா இருந்தாலும், பிழையானவற்றை பிழையென்றே சொல்வேன், ஒருவரின் முன் தகுதி, பின் தகுதி குறித்தெல்லாம் அடியேன் கணக்கில் கொள்வதேயில்லை :-))

பொருளாதாரம் ஜாதியத்தை அழிக்கும்னு சொல்வது சரியே,ஆனால் ஏன் உதாரணமாக ஒப்பிட்டு விவரிக்கும் போது ஜாதிய முறை அதிகம் நிலவும் "துப்புரவு தொழிலை" மேம்ப்போக்காக சொல்லிவிட்டு மற்றதை விவரிச்சீங்க, அப்போ துப்புரவு தொழிலில் பொருளாதாரம் ஜாதியத்தை அழிக்கவில்லையா என்பதை கேட்டதற்கு ஏன் இத்தனை உணர்ச்சிவசப்படுறிங்கனே தெரியல?

நான் கேட்டப்பிறகு விளக்கினிங்க,அதை நான் மறுக்க கூட இல்லை.

சிலர் மூனு கால் முயல்னு சொல்றாங்கன்னு நினைச்சுக்கிட்டு, நீங்க 5 கால் முயல்னு சொல்லிட்டு இருக்கிங்களே அவ்வ்!

# நீங்க செய்த டெடிகேட்டில ஒரு "கடி"கேட் வைக்கிறேன் இருங்க :-))

வவ்வால் said...

ஜோதிஜி,

நான் சொன்னதை மறுக்க வேண்டும் என்ற அவசரத்தில் நிதானம் தப்பிடுச்சு :-))

உங்கள் பதிவில் சொல்லி இருப்பது,

//"சார் அவங்களை எந்த கேள்வியும் கேட்க கூடாது என்கிறார்கள். அப்படி கேட்டால் அடுத்த நாள் வரமாட்டேன் என்கிறார்கள்" என்றார்.

"ஏன் வேறு நபர்களை போட்டுக் கொள்ள வேண்டியது தானே?" என்றேன்.

"இல்லை சார். ஆட்கள் கிடைப்பதில்லை" என்றார்.

பெரும்பாலும் இது போன்ற வேலையில் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் தான் இருக்கின்றார்கள்.

இதற்கென்று புதிதான ஆட்கள் வருவதில்லை. விரும்புவதில்லை என்பது தான் இங்கே முக்கியம். //

அதாவது துப்புறவு தொழிலுக்கு ஆட்கள் தட்டுப்பாடுனு, ஆனால் விஷ்வா அப்படிலாம் இல்லை ஆட்கள் முட்டி மோதிக்கிட்டு வராங்கனு சொல்லுறார், அதாவது நீங்க சொன்னதை தப்புனு சொல்லி இருக்கார்,ஆனால் என்னமோ நான் சொன்னதற்கு பதிலடி போல எனக்கு டெடிகேட் செய்றீங்க :-))

# திருப்பூர்ல இன்னும் ஹவுஸ் கீப்பிங் தொழில் வரவில்லை அல்லது பரவலாகவில்லைனு நினைக்கிறேன் ,சென்னையில் ஹவுஸ் கீப்பிங் தொழில் நன்கு வளர்ந்து வேர் விட்டுள்ளது, மென்பொருள் மற்றும் பெரிய நிறுவனங்களில் எல்லாம் அவுட் சோர்சிங் தான், இதற்கென உள்ள ஹவுஸ் கீப்பிங் ஏஜன்சிகள் , துப்புறவு ஆட்களை வைத்து வேலை செய்வார்கள், நிறுவனத்துக்கும் ,பணியாளர்களுக்கும் நேரடி தொடர்பே இல்லை, எல்லாம் ஏஜன்சி தான் பொறுப்பு.

ஸ்வீப்பர்ஸ் & கிளீனர்ஸ் வேலைக்கு வரவங்க யாரும் 2-3 மாதத்திற்கு மேல் வேலையில் நிற்பதேயில்லை, என சொல்லி ஒரு ஜாதிய காரணமும் சொன்னார் ஒரு ஹவுஸ் கீப்பிங் மேனஜர். அதனடிப்படையிலேயே உங்களிடம் பேசினேன்.

#தமிழகம் தழுவிய ஒரு பொதுவான சமூக சூழலை நீங்க திருப்பூர் என்ற நகரத்தினை வைத்தே அளந்து சொல்கிறீர்கள், அதே போல சென்னையை மட்டும் வைத்து ஒரு கருத்தினை நானும் சொல்ல முடியும்,ஆனால் பொதுவாக தமிழகச்சூழல் என்ற அடிப்படையில் நான் பேச முயன்றேன்,இப்பொழுதாவது நான் சொல்வதன் வித்தியாசம் புரிந்தால் சரி.

ஜோதிஜி said...

பொருளாதாரம் ஜாதியத்தை அழிக்கும்னு சொல்வது சரி

ஆத்தா நான் பாஸாயிட்டேன்.

வவ்வால் said...

ஜோதிஜி,

//ஆத்தா நான் பாஸாயிட்டேன்.//

ம்க்கும் நான் ஆரம்பத்திலே இருந்து இதைத்தான் துப்புறவு தொழிலாளிக்கும் அதிக சம்பளம் கொடுத்தால் அனைவரும் அவ்வேலைக்கு வந்து சமமாகிவிடுவார்கள் என சொல்லி வந்தேன் (ஏன் எனில் வேலை சார்ந்து ஜாதியம் என இருப்பது துப்புறவு துறையில் தான் அதிகம், கோவியார் எல்லாம் காணோம்,அவரெல்லாம் வந்தால் இதை பிரி பிரினு பிரிச்சுடுவார்),அதை ஏனோ சுற்றி வளைத்து மறுத்தே வந்தீர்கள் சரினு ஒரு வரியில் அதையே சொன்னதும், "பல்ப்" பளிச்சுனு எரியுது :-))

இனிமே உங்களுக்கு ஒரு வரியில் பின்னூட்டமிடுவதே சிறந்தது என நினைக்கிறேன்!

vishwa said...

I agree with Mr.Vavaal.

ஜோதிஜி said...

ஒரு ஜாதிய காரணமும் சொன்னார் ஒரு ஹவுஸ் கீப்பிங் மேனஜர். அதனடிப்படையிலேயே உங்களிடம் பேசினேன்.

அதை சொல்லியிருக்க வேண்டியது தானே? நாங்க எதிலேயும் ஒரு க்கு வைத்து பேசுவதே இல்லை. எனக்கு என்ன தோணுதோ என்ன பார்க்கின்றனே எதில் பாதிப்படைகின்றனோ அதை தான் எழுத்தாக்குகின்றேன். நான் வாழும்திருப்பூரின் சமூக கண்ணோட்டம் தான் இப்போது எனக்கு முக்கியம். சென்னையில் நடப்பதை நான் எப்படி உத்தேச கணக்காக கொண்டு எழுத முடியும்? அதைப் பற்றி முழுமையாக எழுதுங்க. ஒரு வேளை என் ந்யுரான்களில் வெளிச்சம் பாய்ச்சும் புண்ணியவான் என்ற பட்டமாவது உங்களுக்கு கிடைக்கக்கூடும்.

நம்மாளுங்க தான் திரைப்படத்தை தாண்டி வரவே மாட்டேன் என்று வலையை நாறடிக்கும் போது நாம் தான் நமக்கு ஆசான் போல எழுத வேண்டியுள்ளது.

Unknown said...

எந்த ஒரு வினையையும் தடுக்க நிச்சயம் ஒரு எதிர்வினை அவசியம். சட்டத்துறை ,காவல் துறை ,போல எதிர் வினை எதுவும் இல்லாவிட்டால் மாறலாம் ,ஆனால் நீண்டகாலங்கள் ஆகும்.எப்படியாகினும் இந்த கட்டுரைக்குரிய நண்பரின் சாதி ஒழிய வேண்டும் என்ற அவா
அவரின் நர்ப்பண்பை காட்டுகிறது,
இன்றைய ஜாதிக்கட்சி தலைவர்கள் அனைவரும் பொருளாதாரத்தில் உயர்ந்தவர்கள் தான் அவர்கள் ஜாதியை விட்டுவிட்டார்களா?அவர்கள் தான் ஜாதித்தீ
அணையாமல் காப்பாற்றுகிறார்கள் .ஜாதி பொருளாதாரத்தில் இல்லை முட்டாள்களின் ரத்தமும்
சதையுமாக இருக்கிறது.பழமைவாதம்,பிர்ப்போக்கு சிந்தனை பொருளாதாரத்தில் உயர்ந்தவர்களிடம் இருக்கக்கூடாதா என்ன ?இது பொருளாதார பிரச்னை
அல்ல அறிவு சார்ந்த பிரச்னை.

செந்தில் ராஜன்

வவ்வால் said...

விஷ்வா,

கருத்தினை ஆமோதித்தமைக்கு நன்றி!

ஜோதிஜி கேட்டேளா, இப்போ யாரு மூனு கால் முயல்னு கணக்கு போட்டானு நீங்களே முடிவு செய்துக்கொள்ளுங்கள்.

-----------

# ஜோதிஜி,

சென்னை கதையை சொல்லும் அவசியமே இல்லை, சொல்லாமலே ய்தார்த்தம் என்ன என்பது தமிழக சூழலில் புரிந்துக்கொள்ள முடியும், திருப்பூர் சமூக அனுபவம் தான் முக்கியம் அதை வைத்தே சொல்வேன் என்றாலும் அதிலும் ஓட்டை இருக்குனு விஷ்வா சொன்னப்பிறகாவது புரிந்திருக்கும் என நினைக்கிறேன்.

புரோஃபைல் புகைப்படத்தில் வெள்ளையும் சொள்ளையுமா படம் இல்லாதவங்க எல்லாம் இருட்டில் இருந்து கல் எறியற ஆளுங்க, எனவே மூனு கால் முயல்னு சொன்னால் போதும், அடங்கிடுவாங்க :-))

# உங்க நியுரானில் ஏற்கனவே ஏகப்பட்ட வெளிச்சம் பாய்ச்சி ஒரு மூனு கால் முயல் கூட சன்மானமா வாங்கியாச்சு, இன்னும் வெளிச்சம் பாய்ச்சினால் ரெண்டு கால் முயலாக ஆனாலும் ஆகிடும், நமக்கு அவ்வளவு ஆசையெல்லாம் இல்லை!

phantom363 said...

What a great observation. I hope you did not mind me sharing this blog in another forum, mostly for educating many narrow minded people.I gave them your URL and also that I follow your blogs for their keen insight. Thank You.

phantom363 said...

How can we ever convince our electorate, that instead of providing free grinders, TV and cheap idlis, if the government could ensure a good primary to secondary quality education for ALL tamil nadu villages. This will give our rural youth a head start, when competing for good jobs, with our urban convent educated children. I dont know if this is ever possible.

ஜோதிஜி said...

அறிவு சார்ந்த பிரச்னை.

யாரிடமாவது சொல்லிப்பாருங்கள். நம்மை குதறி வைத்து விடுவார்கள். காரணம் இங்கே இப்போது உணர்ச்சி பூர்வமாகவே பார்க்கப்பட படுகின்றது.

ஜோதிஜி said...

புதுக்கோட்டை மாவட்டத்தில் இலவசம் கொடுக்கப் போன ஒரு கூட்டத்தில் ஒருவர் மட்டும் எதிர்த்து பேசி ஒழுங்காக மின்சாரம் கொடுங்க என்றாராம். மற்றபடி தமிழ்நாட்டில் நீங்க சொன்னபடி கல்வி இலவசமாய் வேண்டும் என்று குரல் எழுப்ப முடியாத அளவுக்கு மக்களை இலவச பேய் பிடித்து ஆடுகின்றது.

Rathnavel Natarajan said...

பொருளாதாரத்தினால் (மட்டுமே) அழியும் சாதிகள் = திரு ஜோதிஜியின் அற்புதமான பதிவு.
எனது பக்கத்தில் பகிர்கிறேன்.
நண்பர்கள் பொறுமையாக, ஆழ்ந்து படிக்க வேண்டுகிறேன்.