Monday, June 17, 2013

ஏக்கம் வந்தால் தூக்கம் போய்விடும்

அவர் வலையுலகில் பெரும்பாலோனருக்கு தெரிந்த நண்பர் தான். தினந்தோறும் எழுதி வெளியிட்டுக் கொண்டேயிருப்பார். இதை நானும் கவனித்துக் கொண்டேயிருந்தேன். இடையிடையே அவருடன் நான் பேசுவதுண்டு. அவரின் தொழில் வாழ்க்கையைப் பற்றி எனக்கு நன்றாக தெரிந்திருந்த காரணத்தால் அவரின் அதிகமான அவநம்பிக்கைகளையும் உணர்ந்தே வைத்திருந்தேன்.எட்டு படி ஏறினால் பத்து படி சரித்து விடும் அவரின் முயற்சிகளைப் பற்றி அறிந்திருந்த காரணத்தால் இருவரும் பேசிக் கொள்ளும் போது பரஸ்பரம் நம்பிக்கைகளை பறிமாறிக் கொள்வதுண்டு.  

ஒவ்வொரு முறையும் அவர் பதிவு வெளியிட்ட அடுத்த நிமிடத்தில் என் கணினியில் தெரியும். அலுவலக வேலைகள் செய்து கொண்டிருந்தாலும் நோட்டிபிகேசன் வசதிகளை கணினிகளில் நிறுவியிருக்கும் போது நமக்கு வரும் மின் அஞ்சல் முதல் வெளி வந்து கொண்டிருக்கின்ற பதிவுகள் வரைக்கும் உண்டான அத்தனை விசயங்களும் நம் கண் பார்வையில் பட்டுக் கொண்டேயிருக்கும்.

அன்று வெளியிட்ட அவரின் அந்த பதிவைப் பார்த்த போது எனக்கு கோபம் அதிகமானது. அந்த நொடியே "சீக்கிரம் உங்களுக்கு பதிவே எழுதாத சூழ்நிலை உருவாகப் போகின்றது" என்று விமர்சனமாய் எழுதி வைத்தேன்.

அவர் வருத்தப்படமாட்டார் என்ற நம்பிக்கையில் தான் அவ்வாறு எழுதினேன்.  இன்று வரையிலும் தொடர்பில் தான் இருக்கின்றார்.  இப்போழுதும் அவருக்கு அதே ஓய்வு கிடைத்துக் கொண்டு தான் இருக்கின்றது. அதிகமான பதிவுகள் எழுதிவதில்லை.

இன்று புதிய தொழில் முயற்சிகளில் ஏதோவொரு வகையில் முயற்சித்துக் கொண்டேதானிருக்கின்றார்.  முக்கியமாக பதிவுலகத்தை பத்தடி தூரம் தள்ளியே தான் வைத்துள்ளார்.  இதைத்தான் ஒவ்வொரு முறையும் அவருடன் பேசும் போது சொல்லியிருக்கின்றேன்.

இங்கே பிரச்சனை வலையில் எழுதுவதில் இல்லை.  அதற்கான நேரத்தை நாம் எப்படி கையாள்கின்றோம் என்பதில் தான் இருக்கின்றது.  

என் தொடர்பில் உள்ள பலருக்கும் நேரம் தாராளமாக இருக்கின்றது.  ஆனால் எவரும் அந்த நேரத்தில் பதிவு எழுதியே ஆக வேண்டும் என்று எவரும் தன்னை அதற்குள் திணித்துக் கொள்வதில்லை. அப்படியே எழுதினாலும் அதை விளம்பரப்படுத்திக் கொள்ள முனைவதும் இல்லை. 

இதைத்தான் நான் முக்கியமாக கருதுகின்றேன்.

வலையில் எழுதத் தொடங்கும் போது எல்லோருக்குமே ஆர்வம் தோன்றுவது இயல்பே. அது நாள்பட ஒருவிதமான குறுகுறுப்பையும் உருவாக்கும். அடுத்தடுத்து எழுத வேண்டும் என்று உந்தித்தள்ளும். 

நன்றாக எழுதத் தெரிந்தவுடன் தான் பிரச்சனை தொடங்குகின்றது. 

யாராவது பாராட்ட மாட்டார்களா? அதிகமான மறுமொழிகள் வராதா? சிறப்பான அங்கீகாரம் கிடைத்து விடாதா? இன்று எத்தனை ஓட்டுக்கள் நமக்கு விழும்? என்ற ஏக்கமும்  உருவாகத் தொடங்குகின்றது. இதுவே மனதில் அழுத்தமாய் பதிய தினந்தோறும் இணையத்தில் அதிக நேரம் செலவிட வைக்கின்றது. குடும்ப வாழ்க்கை முதல் தொழில் வாழ்க்கை வரைக்கும் பந்தாட்ட களம் போல மாறத் தொடங்குகின்றது.   
  
இது தான் கொடுமையின் முதல் படி. ஆனால் முழித்துக் கொள்பவர்கள் குறைவான நபர்களே. 

பெரும்பாலோனோர் பல வருடங்கள் கடந்து கண்ணீர் காவியமாக மாறியதும் தான் தங்களை உணர்ந்து கொள்ளும் சூழ்நிலைக்கு வருகின்றார்கள். 

வலைபதிவுகளைப் போல இன்று ஏனைய சமூக வலைதளங்களில் இன்று ஏராளனமான பேர்கள் கபடியாட்டம் நடத்திக் கொண்டிருப்பதைப் பார்க்கும் போது மனதிற்குள் இருக்கும் வருத்தம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டேதான் இருக்கின்றது.

தேவையற்று இணையத்தை ஒருவர் அடிக்கடி பயன்படுத்த தொடங்கும் பொழுதே அவரின் அடிப்படை வாழ்க்கையே மாறப் போகின்றது என்று அர்த்தம். 

காரணம் இணையத்தில் எல்லாமே திறந்த வெளியில் இருப்பதால் எவரிடமும் அனுமதி பெறத் தேவையில்லை. இணைப்பு  இருந்தால் போதும். வாய்ப்புகளை உருவாக்கிக் கொண்டால் வசதியாக இணையத்தில் உலாவ முடியும்.  சாக்கடை முதல் அன்றாடம் நடக்கும் சண்டை சச்சரவுகள் வரைக்கும் நம்மால் வேடிக்கை பார்க்க முடியும்.

எவராவது நம்மைப் பார்த்து விடுவார்களோ? என்று பயந்து கொண்டு ஊருக்கு வெளியே உள்ள டூரிங் டாக்ஸியில் பார்த்த படங்களை உங்கள் அறையில் உட்கார்ந்தே ரசிக்க முடியும். ரசிப்பதில் தவறில்லை. ஆனால் அதுவே அன்றாட கடமைகளில் ஒன்றாக வைத்துக் கொள்ளும் போது உளவியலில் மாற்றம் உருவாகத் தொடங்குகின்றது.

குடும்ப கடமைகள் மறந்து போய் குதுகலமாய் வாழ்க்கையை அனுபவிக்க மனம் ஏங்கத் தொடங்குகின்றது. உண்மையான உழைப்பை வெறுக்கத் தொடங்க எண்ண வேர்களில் நாமே விரும்பி வெந்நீரை ஊற்றத் தொடங்குகின்றோம்.

இதைப் போல நன்றாக எழுதிப் பழக வேண்டும் என்று வருபவர்கள்  எழுத்துக்கலை கைகூடி நாள்பட நன்றாகவும் எழுதத் தொடங்கியிருப்பார்கள். ஏனைய பிற சமூக வலைதளங்களில் கவனம் செலுத்த அவர்களை காலப்போக்கில் காணாமல் போகச் செய்து விடும் மாய உலகம் இது.

இதையும் மீறி நாம் நிறைய விசயங்களைப் பற்றி எழுத வேண்டும் என்று முயற்சிப்பவர்களை வேறொன்று தாக்கத் தொடங்குகின்றது.  

எழுதக் கற்றுக் கொள்வதைவிட எழுதியதை விளம்பரப்படுத்த என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்ற குறுக்குப் புத்தி ஓடத் தொடங்கின்றது.

விரைவாக தமிழ்மணம் மகுடம் பெற்று விட ஆர்வம் உருவாக அதிலேயே மனம் லயித்து அதற்கான காரியங்களில் இறங்க வைக்கின்றது. ஓட்டு கிடைக்காத சமயங்களில் ஒவ்வொருவரையும் அழைத்து பேச வைக்கின்றது. அதை ஒரு தினசரி கடமையாக வைத்து அதன் பின் மனம் அலையத் தொடங்குகின்றது. முடியாத பட்சத்தில் போலியான மின அஞ்சல் முகவரி பலவற்றை உருவாக்கி நினைத்ததை சாதிக்க கற்றுக் கொள்ள முடிகின்றது.

இதனால் என்ன லாபம்?  கூட்டிக்கழித்துப் பார்த்தால் நட்டங்கள் தான் அதிகம்.  

நீங்கள் வாங்கிய ஓட்டுக்கள் பத்து காசுக்குக் கூட உதவாது. உங்கள் எழுத்தை பார்வையிட்டவர்கள் தந்த மறுமொழிகள் எதுவும் உங்கள் வாசலுக்கு வசதிகளை கொண்டு வந்து சேர்க்காது. பாராட்டிய வார்த்தைகளை நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் பொழுதே அடுத்த பதிவில் உங்களுக்கு கிடைத்த பாராட்டை விட பலமடங்கு பாராட்டு கிடைத்திருக்கக்கூடும்.  

சுழலும் உலகம் இது.

இறுதியில் நம் சொந்த வாழ்க்கை நட்டாத்தில் நிற்பதை கண்கூடாக பார்க்கலாம்.

இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் எழுத்தின் மூலம் புதிய மாற்றங்கள் வந்து விடும் என்று நீங்கள் நம்பினால் அதை பத்திரமாக உங்கள் வீட்டு பரண் மேல் வைத்து விட்டு வெளியே வாருங்கள்.  காரணம் அந்த நம்பிக்கை பலரின் கால் மேல் பட்டு சிதைப்பட்டு சின்னாபின்னாமாவதை காணும் துர்பாக்கிய நிலைமை உங்களுக்கு வர வேண்டாம்.

உங்கள் வீட்டுக்கருகே உள்ள நூலகத்தின் உள்ளே பத்திரமாக அடுக்கி வைக்கப்பட்டு  ஒட்டடை படித்த நூல்களைப் பார்கக வாய்ப்பிருந்தால் போய் பாருங்கள்.  எத்தனை எத்தனை பேர்கள்? தங்கள் வாழ்க்கை முழுவதையும்  அடகு வைத்து இந்த தமிழ் எழுத்துலகத்திற்கு தங்களை அர்பணித்துள்ளார்கள் என்று பட்டியலிட்டால் பட்டியலை  முடிவுக்கு கொண்டு வரவே உங்களுக்கு பல வருடங்கள் ஆகலாம். 

தமிழர்களைப் பற்றி, தமிழனத்தின் வரலாற்றைப் பற்றி கண்டறிந்து எழுதியவர்கள் முதல் மாறும் சமூகத்திற்கு தேவைப்படும் கருத்துக்களைத் தந்த அத்தனை பேர்களும் தங்கள் குடும்பத்திற்கு வறுமையைத்தான் பரிசாக தந்து விட்டு மறைந்துள்ளார்கள். 

காரணம் இங்கே கவர்ச்சிக்கும் கருத்துக்கும் நடக்கும் போராட்டத்தில் எப்போதும் கவர்ச்சிதான் முன்னால் நிற்கின்றது.  

அது தான் திரைப்படம் மூலமாக நம்மை நோக்கி ஒவ்வொரு காலகட்டத்திலும்  தாக்கிக் கொண்டேயிருக்கின்றது. அதுவே தான் இன்று வலையுலகில் ஒரு படம் வெளியான மூன்று மணிநேரத்தில் திரை விமர்சனம் என்ற பெயரில் எழுத வைத்துக் கொண்டிருக்கின்றது. நீ முந்தி நான் முந்தி என்று போட்டி போட வைக்கின்றது. நாமும் அதைத்தான் ஆதரிக்க விரும்புகின்றோம். 

காரணம் எளிமையானது.  

கருத்துக்களை உள்வாங்கும் போது மனம் தேவையற்ற கவலை கொள்கின்றது.  கலகலப்பாய் படித்து முடிக்கும் போது நிகழ் கால அச்சத்தை அந்த நிமிடமாவது கழட்டி வைக்க முடிகின்றது. 

போதையை விரும்பி போதையை ஆதரித்து போதையிலேயே வாழ விரும்பும் உலகமிது 

இணையத்தில் புழங்குபவர்கள் சில எதார்த்தங்களை அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.  

இணையத்தில் இரண்டு வகையான மனிதர்கள் தான் முன்னிலையில் இருக்கின்றார்கள்.

ஒன்று வேடிக்கை காட்டுபவர்கள் மற்றொன்று வேடிக்கை பார்ப்பவர்கள்.

இந்த இரண்டுக்கும் நடுவே இருப்பவர்கள் தான் எழுதிக் கொண்டிருப்பவர்கள்.  இதைப்போல இணையத்தில் ஆழ்ந்து வாசிக்கும் பழக்கம் உள்ளவர்கள் எவரும் தங்களை எந்த இடத்திலும் காட்டிக் கொள்ளாதவர்களாகத்தான் இருக்கின்றார்கள்.  காரணம் அவர்கள் வாசிப்பின் ருசி அறிந்தவர்கள்.

இணையத்தில் தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்பவர்களைக் கூட இப்படி இனம் கண்டுகொள்ள முடியும்.

நம்மால் பகிர்ந்து கொள்ள முடிகின்றதே என்பதோடு நமக்கு கோர்வையாக .  எழுதவும் வருகின்றதே என்று தாங்கள் பார்க்கும் சமூகத்தை அதன் பிரதிபலிப்பை சொல்ல வருகின்றவர்கள் ஒரு பக்கம்.

நானும் எழுதியே ஆக வேண்டும் என்று பிடிவாதத்துடன் வெட்டி ஒட்டி பதிவு என்ற பெயரில் எதைப்பற்றியாவது எழுதிக் கொண்டிருப்பவர்கள்.

ஏன் எழுதுகின்றோம்? எதற்காக எழுதுகின்றோம் என்பதை யோசித்துப் பாருங்கள்?

ஒவ்வொருவரும் எதிர்பார்க்கும் ஒரு சிறிய அங்கீகாரம் தேவை என்பது தான் முக்கியமாகத் தெரிகின்றது. இங்கே அங்கீகாரத்தை எதிர்பார்க்கதாவர்கள் யாராவது இருக்கின்றார்களா?

ஆனால் இந்த அங்கீகாரத்தின் அளவு கோல் என்பதை தெரிந்து கொள்ளாத போது தான் ஒவ்வொரு பிரச்சனைகளும் நம்மைத் தாக்கத் தொடங்குகின்றது.  அதுவே இறுதியில் நமது சொந்த வாழ்க்கையில் அதிக மன உளைச்சலை பரிசாக தந்து விடுகின்றது.

மேலே சொன்ன  இரண்டு வகையினரும் இருக்கும் துறைகள் முக்கியமாக மென்பொருள் துறை.

இப்போது இந்த துறை உலகம் முழுக்க மூன்று ஷிப்ட்டுகளில் செயல்பட்டுக் கொண்டிருப்பதாலும், உலகம் முழுக்க தமிழர்கள் இருப்பதாலும் இரவு பகல் என்று எந்நேரமும் இவர்கள் இணையத் தொடர்பில் இயல்பாகவே இருக்க வேண்டியவர்களாக இருக்கின்றார்கள்.

இவர்களின் நோக்கம் எதையும் எழுதி சாதிப்பதல்ல. 

தமிழ் மொழிக்கு தேவைப்படும் அவசியமான மென்பொருள் உருவாக்கத்தில் கூட இவர்களின் பங்களிப்பு குறைவே. சுகமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் இவர்களுக்கு எல்லோமே வேடிக்கை. எல்லாவற்றிலும் விமர்சனம். இவர்களின் உலகம் அழகாய் இருக்கும்.

முக்கியமாக உழைப்புக்கேற்ற ஊதியம் இருப்பதால் உலகத்தில் எங்கே இருந்தாலும் அவர்களின் அடிப்படை வாழ்க்கையில் பணரீதியான பிரச்சனைகள் எப்போதும் இருக்காது. 

பெரும்பாலான குடும்பத்தில் கணவன் மனைவி இருவருமே வேலைக்குச் செல்பவர்களாகவும் இருப்பதால் எந்திரகதியில் வாழ்ந்து கொண்டு இருப்பவர்களுக்கு இந்த இணையம் தான் எளிமையான பொழுது போக்கு. அக்கரையில் வாழ்ந்தால் எது குறித்தும் அக்கறையற்று இருப்பவர்கள்.  அப்படியே தேறினாலும் வாசிப்பவர்களும், வாசித்ததை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்பவர்களும், எழுத வேண்டும் என்று நினைப்பவர்களும் சொற்ப எண்ணிக்கையில் தான் இருப்பார்கள். 

தேவை தான் இங்கே பாதையை உருவாக்குகின்றது. தேவையில்லாத போது எந்த தீர்மானமும் நம் மனதில் உருவாவது இல்லை. இயல்பான் வாழ்க்கையே போதுமானதாக இருந்து விடுகின்றது. 

இவர்கள் சமூக வலைதளங்களில் பகிர்வதை கவனித்துப் பாருங்கள். வீட்டு நாய் கக்கா போனது முதல் முந்தா நாள் பார்ட்டியில் வாந்தி எடுத்தது வரைக்கும் லஜ்ஜையின்று பகிர அதையும் பத்துப் பேர்கள் ஆஹா ஓஹோ என்று புன்னகைத்து வழிமொழிந்து கொண்டிருப்பார்கள். 

நெருக்கி பிடித்து கேட்டால் நான் படிக்கும் போது கஷ்டப்பட்டு படித்தேன்.  இப்ப சந்தோஷமா இருக்கேன். உனக்கு எங்கே வலிக்குது போன்ற தத்துவங்களால் நம்மை திணறடிப்பார்கள்.  இவர்களிடம் நாம் எப்போதும் வேடிக்கை பார்ப்பவர்களாக இருந்து விடுவதே உத்தமம். 

காரணம் பொதுவெளியில் எதையெல்லாம் எழுதக்கூடாது என்பதையும் எப்படியெல்லாம் நம் நேரத்தை கொல்ல முடியும் என்பதையும் இவர்கள் மூலம் நம்மால் உணர்ந்து கொள்ள முடியும் என்பதால் இவர்களைத் தான் ஒழுங்ககாக எழுத வேண்டும் என்று நினைப்பவர்கள் குருவாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அடுத்து ஏற்றுமதி துறை. 

இதில் பல துணைப்பிரிவுகள் உள்ளது. உற்பத்திக்கூடங்கள் தவிர்த்து கப்பல் விமான சேவை சார்ந்த பணியில் பதவியில் இருப்பவர்கள் வரைக்கும் இந்த துறையில் இருக்கின்றார்கள். 

ஒரு நாளில் முக்கால்வாசி நேரம் இணையத் தொடர்பில் தான் இருந்தாக வேண்டும். இந்த துறையில் அவரவர் பதவியைப் பொறுத்து இணையத் தொடர்பு என்பது கணனியில் இருக்கும். சிலருக்கு இணையத் தொடர்பென்பது துண்டிக்கப்பட்டதாக இருக்கும்.  மின் அஞ்சலைத் தவிர வேறெதும் இவர்கள் பார்வையில் பட வாய்ப்பிருக்காது. 

கடைசியாக ஊடகத் துறை. 

இங்கேயும் அவரவர் பதவி பொறுத்தே இணையத் தொடர்பு இருக்கும்.  

இதற்கு மேலே பணி ஓய்வு பெற்று வீட்டில் இருப்பவர்கள், ஆர்வத்தின் காரணமாக வீட்டில் கணினி வாங்கி வைத்திருப்பவர்கள்.

உடல் ஆரோக்கியத்துடன் போராடிக் கொண்டிருந்தாலும் ஏதாவது நல்ல செய்திகள் கண்ணில் படாதா என்று போட்டிருக்கும் கண்ணாடி வழியே இந்த உலகத்தை பார்த்துக் கொண்டிருப்பார்கள். சிலர் இதையும் மீறி எழுதிக் கொண்டிருக்கின்றார்கள்.

ஆனால் இன்று ஒருவர் எந்த துறையில் இருந்தாலும் இப்போதுள்ள நவீன வசதிகள் ஒவ்வொருவரையும் இணைய எழுத்தாளர்களாக மாற்றிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொன்றும் நம்பமுடியாத குறைவான விலையில் கிடைப்பதால் அவரவர் கையில் உள்ள கைபேசிகள் ஒரு கணினி அளவில் செயல்பட்டுக் கொண்டிருப்பதால்  நினைத்த கருத்துக்களை நினைத்த இடத்தில் இருந்து கொண்டே சொல்லிவிட முடிகின்றது.  

இந்த எளிய வசதிகள் தான் இன்று தமிழ் இணையத்தை திணறடித்துக் கொண்டிருக்கின்றது.

புதிதாக இந்த இணைய உலகத்திற்கு வருபவர்களுக்கு முதலில் சில மாதங்களுக்கு குழப்பமாகவே இருக்கும். எப்படி இவர்களுக்கு நேரம் கிடைக்கின்றது?  என்ற அங்கலாய்ப்பு இருந்து கொண்டேதான் இருக்கும் என்பதை மறுப்பதற்கில்லை.

இணையம் என்பது மாய உலகம், மந்திர உலகம் என்பது போன்ற பம்மாத்து வார்த்தைகளை நான் பயன்படுத்த விரும்பவில்லை.  

ஆனால் நமக்கு இதுவும் ஒரு அவசியமான உலகம் என்பதை கவனத்தில் வைத்திருங்கள்.  பத்திரிக்கையில் கத்தரித்து வெட்டி ஒட்டி வெளியே வரும் கட்டுரைகளை விட ஆழமான அழகான அற்புதமாக கட்டுரைகளை தந்து கொண்டிருக்கின்ற இந்த இணைய வசதிகளை ஒழுங்காக பயன்படுத்துவோருக்குத் தான் இதன் உண்மையான அருமை புரியும். 

அய்யோ இதைப் பற்றி இவரைப் பற்றி எழுதினால் ஆட்டோ வீட்டுக்கு வந்து விடுமோ என்ற பயமற்று வெளி வரும் உண்மையான பதிவுகள் மூலம் தான்  அரசியல்வாதிகளின் உண்மையான முகமே வெளியே தெரியத் தொடங்கியுள்ளது.

இந்த அவசிய உலகத்தை நாம் எப்படி பயன்படுத்துகின்றோம் என்பதை ஒரு நாளில் பாதி நேரம் ஒதுக்கி வைத்து பதிவுலகம், திரட்டிகள், கூகுள் ப்ளஸ், முகநூல், ட்விட்டர் போன்றவற்றில் ஒரு சுற்று சுற்றிவிட்டு கணினியை நிறுத்தும் போது நிச்சயம் நீங்கள் மயக்க நிலைக்கு அருகே தான் வந்திருப்பீர்கள்.  

காரணம் 80 சதவிகித குப்பைகளைத் தாண்டி உங்களுக்கு பிடித்த ஏதோவொன்றை நீங்கள் அடையாளம் காணக்கூடிய திறமைசாலியாக இருக்க வேண்டும்.

குப்பை என்றதும் புத்தி சார்ந்த விசயங்கள் என்பதாக கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டாம்.  ஒவ்வொருவரும் எதற்காக இந்த இணையத்தை கையாள்கின்றார்கள் என்பதில் தொடங்கி எதைப் பற்றி எழுதலாம்? எதைப் பற்றியெல்லாம் எழுதக்கூடாது? என்பது போன்ற அத்தனை விசயங்களையும் கற்றுக் கொள்ள நாம் இந்த இணையத்தில் தினந்தோறும் ஒரு தடவை முழுமையாக சுற்றி வந்தாலே போதுமானது.  

நமக்கு தேவையான ஒன்று அது மற்றவருக்கு தேவையில்லாததாக இருக்கலாம்.  உனக்கு அறிவுரை சொல்ல வேண்டிய அவசியம் எனக்கில்லை என்பவர்களும் உண்டு. என் தனி மனித சுதந்திரத்தை கெடுக்காதே.  கருத்து சுதந்திரத்தை மதிக்காதவன் என்று கூட பெயர் வரக்கூடும். 

அவசியமான இந்த இணையம் உங்களுக்கு சீக்கிரம் கசந்து போய் விட்டது என்றால் அதற்கு காரணம் மற்றவர்கள் அல்ல. 

உங்களின் தேர்ந்தெடுப்பில் உள்ள பிரச்சனைகள் என்பதை எப்போதும் கவனத்தில் வைத்திருங்கள். 

ச்சீ ச்சீ இந்த பழம் புளிக்கும் என்கிற கதையாக மாறி ஓதுங்கிப் போனவர்களின் பட்டியலில் நீங்களும் சேர்ந்து விடக்கூடாது என்பதை எப்போதும் நினைவில் வைத்திருக்கவும்.

29 comments:

reverienreality said...

நிதர்சனம்....

எனது ஒரே சிறுகதை...இதே தளத்தில்...

http://reverienreality.blogspot.com/2011/11/blog-post.html

bandhu said...

மிக மிக அவசியமான பதிவு. எங்கே கொஞ்சம் கொஞ்சமாக அதிக நேரத்தை செலவழிக்கிறேனோ என்று கொஞ்ச நாளாகவே நினைத்துக்கொண்டிருந்தேன். சந்தேகமே படவேண்டாம்.. நான் பிடுங்குகிற ஆணி எல்லாமே தேவையில்லாத ஆணிதான் என்று தெளிவாக விளக்கிவிட்டீர்கள். நெற்றியில் அடித்தது போல இருந்தது!

தி.தமிழ் இளங்கோ said...

// உங்கள் வீட்டுக்கருகே உள்ள நூலகத்தின் உள்ளே பத்திரமாக அடுக்கி வைக்கப்பட்டு ஒட்டடை படித்த நூல்களைப் பார்கக வாய்ப்பிருந்தால் போய் பாருங்கள். எத்தனை எத்தனை பேர்கள்? தங்கள் வாழ்க்கை முழுவதையும் அடகு வைத்து இந்த தமிழ் எழுத்துலகத்திற்கு தங்களை அர்பணித்துள்ளார்கள் என்று பட்டியலிட்டால் பட்டியலை முடிவுக்கு கொண்டு வரவே உங்களுக்கு பல வருடங்கள் ஆகலாம். //

// தமிழர்களைப் பற்றி, தமிழனத்தின் வரலாற்றைப் பற்றி கண்டறிந்து எழுதியவர்கள் முதல் மாறும் சமூகத்திற்கு தேவைப்படும் கருத்துக்களைத் தந்த அத்தனை பேர்களும் தங்கள் குடும்பத்திற்கு வறுமையைத்தான் பரிசாக தந்து விட்டு மறைந்துள்ளார்கள். காரணம் இங்கே கவர்ச்சிக்கும் கருத்துக்கும் நடக்கும் போராட்டத்தில் எப்போதும் கவர்ச்சிதான் முன்னால் நிற்கின்றது. //

// அவசியமான இந்த இணையம் உங்களுக்கு சீக்கிரம் கசந்து போய் விட்டது என்றால் அதற்கு காரணம் மற்றவர்கள் அல்ல.
உங்களின் தேர்ந்தெடுப்பில் உள்ள பிரச்சனைகள் என்பதை எப்போதும் கவனத்தில் வைத்திருங்கள். //

டாலர் நகரத்தில் திருப்பூரை அலசி எடுத்தது போல, இங்கு இணையத்தில் இணைந்த தமிழர்களின் மனவெளியைத் திறந்து காட்டி இருக்கிறீர்கள்

திண்டுக்கல் தனபாலன் said...

சரியான... மிகச்சரியான அலசல்...

துளசி கோபால் said...

அலசிப் பிழிஞ்சுக் காயப் போட்டாச்சா????

ப.கந்தசாமி said...

எப்படி இவ்வளவு நீளமாக எழுத முடிகிறது என்பதே என் ஆச்சரியம்!

arul said...

very informative post

ஜோதிஜி said...

ஆகா 2011ல் எழுதிய கதையா? போன பதிவில் சொன்ன மாதிரி நச் சென்று குறுகத் தரித்த குறள் போல உள்ளது. நம்ம வீட்டில் இந்த பிரச்சனை இல்லை. வாங்க எல்லோரும் உட்கார்ந்து பேசலாம் என்றால் ஏதோ எழுத வேண்டும் சொன்னீங்களே என்று தொடக்கததில் பூசாரி விரட்டுவார். இப்ப குழந்தைகளும்(?)

ஜோதிஜி said...

உங்கள் விமர்சனம் பார்த்து ரொம்பவே நெகிழ்ந்து போனேன். யாராவது தப்பா எடுத்துக்க போறாங்களோன்னு நினைத்தேன். வந்த அந்த அத்தனை விமர்சனங்களும் என்னை ஆச்சரியப்படுத்தியது.

ஜோதிஜி said...

ஆழ்ந்து படிக்கம் உங்களின் வாசிப்பனுபவம் நான் அறிந்ததே. என்ன செய்வது உண்மைகளை யாராவது ஒருவர் சொல்லித்தானே ஆகவேண்டும்.

ஜோதிஜி said...

உங்களுக்குத்தான் நான் நன்றி சொல்ல வேண்டும்.

ஜோதிஜி said...

இதை எழுத காரணமே நீங்க தான் டீச்சர். இத்தனை வருடமாக எழுதிக் கொண்டிருந்தாலும் எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாது அமைதியாக நீங்க சொன்ன தவம் போல மனதில் உள்ளதை பகிர்ந்து கொள்வதில் நீங்க எனக்கு ஒவ்வொரு முறையும் வழிகாட்டியாக இருக்குறீங்க. நீங்க போட்ட பூக்கள் அடங்கிய பதிவுகளை குடும்பத்தினர் அனைவரும் உட்கார்ந்து ரசித்த போது கடைசி பார்ட்டீ நான் டாக்டர் ஆனது நியூசிலாந்து தான் போவேன் என்று சொல்லியிருக்கின்றார். அவர் அங்கே வரும் வரைக்கும் நீங்க நலமுடன் எந்நாளும் வாழ எங்கள் வாழ்த்துகள்.

ஜோதிஜி said...

அட நீங்க வேற? இந்த முறை கொஞ்சம் உருப்படியாக எழுதி விட்டேன் என்ற சிறிய சந்தோஷம் தந்த கட்டுரை இது. கண்ணு வைக்காதீங்க.

ஜோதிஜி said...

நன்றி அருள்

அனைவருக்கும் அன்பு  said...

மிக சரியான அலசல்தான் ஆனாலும் இன்னும் சொல்ல வந்ததை கொஞ்சம் அழுத்தமாக சுருக்கமாக நச்சுன்னு சொன்னதான் அவங்களுக்கு புரியும் ...எப்படி இப்படி எழுதறீங்க எழுத ஆரமிச்தும் பேனா தன்னிச்சையா இயங்கும் இயக்க சக்தி ஏதும் வைதிருகிரீர்களா ?

சேக்காளி said...

//இந்த முறை கொஞ்சம் உருப்படியாக எழுதி விட்டேன்//
நிச்சயமாக.

சேக்காளி said...

//எழுத ஆரமிச்தும் பேனா தன்னிச்சையா இயங்கும் இயக்க சக்தி ஏதும்//
பேனா இல்லைங்க.நினைப்பதை தானாகவே தட்டச்சிடும் கீ போ(ர்)ட் ஐ wifi இணைப்பில் வைத்திருக்கிறார். யாரிடமும் சொல்லி விடாதீர்கள் என்று என்னிடம் மட்டும் ரகசியத்தை கூறியிருந்தார்.அதை (ரகசியத்தை) கசிய விடுவதில் தான் எத்தனை ஆனந்தம்.

எம்.ஞானசேகரன் said...

மனவோட்டங்களை அப்படியே பதிவு செய்திருக்கிறீர்கள் ஜோதிஜி! அருமை! மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

Saminathan said...

நிச்சயமாக நல்ல பதிவு ; ஆனால் உங்களுக்கு நல்ல ஒரு கத்திரி தேவையென்று நினைக்கிறேன் !

வவ்வால் said...

ஜோதிஜி,

//அலுவலக வேலைகள் செய்து கொண்டிருந்தாலும் நோட்டிபிகேசன் வசதிகளை கணினிகளில் நிறுவியிருக்கும் போது நமக்கு வரும் மின் அஞ்சல் முதல் வெளி வந்து கொண்டிருக்கின்ற பதிவுகள் வரைக்கும் உண்டான அத்தனை விசயங்களும் நம் கண் பார்வையில் பட்டுக் கொண்டேயிருக்கும்.//

அறியாத தகவல் ,பதிவாக்கி அறிய தந்தமைக்கு நன்றி!

முன் கதையையைப்பார்த்தால் "திண்டுக்கல்" தலப்பாக்கட்டு பிரியாணி சாப்பிட்டு எழுதினாப்போல இருக்கே :-))

# ஒரு "குட்டி" ஸ்டோரி( ஒரு குட்டியின் கதையல்ல)

ஒரு குட்டையில் நீந்திக்கொண்டிருந்த "ஜீனியஸ்" மீன் ஒன்று குறுக்கே வலையைக்கண்டது ,வலைக்கு அந்த பக்கம் நிறைய மீன்கள் நீந்தக்கண்டது, அய்யோ பாவம் அறியாத மீன்கள் வலையில் சிக்கிக்கொண்டதே என நினைத்து வருந்தியது, வலை தூக்கப்பட்டப்போது "வலையில் ஜீனியஸ் மீன்" அவ்ளோ தான் கதை :-))

சுபம்!

ஜோதிஜி said...

நீங்கள் யார் என்று சொல்வது புரிகின்றது. ஆனால் தவறு.

சுபம்.

ஜோதிஜி said...

போச்சுடா? இதிலேயாவது சுதந்திரமாக இருந்து விட்டு போறேனே?

ஜோதிஜி said...

நன்றிங்க

ஜோதிஜி said...

இந்த கட்டுரையில் எழுதிய எழுத்துக்களையே வச்சு என் தலையில் தண்ணி தொளிக்க வச்சுடுவீங்க போலிருக்கே

ஜோதிஜி said...

சரளா, சகதியில் இருக்கும் போதே கடிக்கும் மீன்களைப் பற்றி அறிந்தவன் எழுதுவது இயல்புதானே?

saidaiazeez.blogspot.in said...

தன்னைத்தானே பட்டையை தீட்டிக்கொள்ள ஒரு அருமையான பதிவு.

Unknown said...

சரியான... மிகச்சரியான அலசல்

”தளிர் சுரேஷ்” said...

அருமையான அலசல்பதிவு! நீங்கள் சொல்லிய விசயங்களை நானும் செய்து காப்பி பேஸ்ட் உட்பட இப்போது கொஞ்சம் கொஞ்சமாக தவிர்த்து வருகிறேன்! தினசரிபதிவு குறைத்துக் கொள்ள முயன்றுவருகிறேன்! புதியவர்களுக்கு இந்த ஆலோசனைக்கள் மிகவும் பயனளிக்கும்! அருமையான பகிர்வு! நன்றி!

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு
எனது பக்கத்தில் பகிர்கிறேன்.
நன்றி திரு ஜோதிஜி..