Monday, June 03, 2013

ஐந்து - 'வலை'த்ததும் வளையாததும்


1994 ஆம் ஆண்டு

நான் தங்கியிருந்த அறைக்கு சென்னையிலிருந்து ஒரு நண்பர் வந்திருந்தார்.  மூன்று பேர்கள் மட்டுமே தங்கும் அறை. அவர் சென்னை என்றதும் நானும் என் அறையில் இருந்த கேரளாக்காரர் விஜயனும் அவருடன் ஒட்டாமல் ஒதுங்கியே தான் இருந்தோம். நாங்கள் இருவரும் ஆறு மணிக்கே எழுந்து அடிப்படை வேலைகளை முடித்து விட்டு 7 மணிக்கு எங்கள் அறைக்கு மட்டும் வரும் செய்திதாள்களை படிக்கத் தொடங்கியிருப்போம். குளித்து முடித்து எட்டு மணிக்கு அலுவலகத்திற்கு கிளம்பி விடுவோம்.

ஆனால் எங்கள் அறைக்கு வந்திருந்த புதிய நண்பர் எட்டு மணி ஆன போதிலும் கூட படுக்கையிலிருந்து எழுந்திருக்க மாட்டார்.

நாங்கள் காலை எழுந்தவுடன் எங்கள் படுக்கையை சுருட்டி வைப்பது முதல் உள்ளே உள்ள மற்ற அத்தனை பொருட்களையும் வீடு போல சுத்தமாக வைத்திருப்போம். அங்குள்ள முக்கால் வாசி அறைகள் திறந்தே இருக்காது. ஆனால் எங்கள் அறையில் காலை முதல் பக்தி பாடல்கள் ஒலித்துக் கொண்டேயிருக்கும். நாங்கள் அப்போது இருந்த TKW  விடுதியின் முதலாளி எங்கள் அறையைச் சுட்டிக்காட்டி மற்ற அறையில் உள்ளவர்களை திட்டி பேசியிருப்பதைப் பார்த்து இருக்கின்றோம்.  

ஆனால் புதிததாக வந்தவரின் காலை வாழ்க்கை 9 மணிக்குத் தான் துவங்கும்.

அவரது அலுவலகம் காலை பத்து மணிக்குத்தான் தொடங்கும். அப்போது தமிழ்நாட்டிற்குள் காலடி வைத்த சலோரா நிறுவனத்தின் ஃபேக்ஸ் கருவியின் சர்வீஸ் இஞ்சினியராக பதவி உயர்வு பெற்று திருப்பூரில் தொடங்கி இருந்த அலுவலகத்திற்கு வந்திருந்தார்.

எங்கள் இருவரின் நடவடிக்கைகளுக்குத் தலைகீழாக ஒவ்வொன்றையும் செய்து கொண்டிருந்தார்.  நல்ல சாப்பாட்டு ராமனும் கூட.

அறையை ரொம்ப சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்ற கொள்கையைக் கொண்டிருக்கும் எங்கள் இருவரின் நோக்கங்களுக்கு மிகுந்த சவால்களை தந்து கொண்டிருந்தார்.  முதல் மூன்று மாதங்கள் நிறைய சண்டைகள் வந்தது.  ஆனால் நான்காம் மாதம் முதல் நான் அவருடன் சேர்ந்து விட்டேன்.

எங்கள் இருவரையும் ஒரு விசயம் ஒன்று சேர்த்தது.  

அது தான் சாப்பாட்டுச் சமாச்சாரங்கள்..  

அவர் பணி முடிந்து அறைக்கு திரும்பும் இரவு வேலையில் ஒவ்வொரு கைவண்டி கடையாகச் சென்று வாங்கிக் தின்று கொண்டே வருவதை எனக்கும் அறிமுகம் செய்து வைக்க அடுத்த ஒரு மாதத்தில் என்னுடன் ரொம்பவே நெருங்கி விட்டார்.

என்னுடன் தொடக்கம் முதல் இருந்த விஜயனுக்கு ரொம்பவே ஆச்சரியம்.  'யாருடனும் அத்தனை சீக்கிரம் ஒட்ட மாட்டானே' என்று அங்கலாய்ப்புடன் புலம்பிக் கொண்டே அவரும் எங்கள் தீனிக் கூட்டத்தில் சேர்ந்து விட்டார்.  

தினந்தோறும் வண்டிக் கடையில் விற்கும் பொறித்த மீன்களுக்கு மூவரும் நிரந்தர வாடிக்கையாளராக மாறிப் போனோம்.

சென்னையில் இருந்த வந்த நண்பர் தான் திடீரென்று என்னிடம் கேட்டார்.

"நாளை முதல் கம்ப்யூட்டர் கிளாஸ்க்கு போகப் போகின்றேன்.  நீங்களும் வாங்க" என்று என்னையும் அழைத்தார்.

காலை வேலையில் அவர் வைத்திருந்த ஸ்வேகா வாகனத்தில் அழைத்துச் செல்லும் பழக்கத்தை உருவாக்கினார்.  இயல்பான கட்டணம் என்பதோடு வாரத்தில் மூன்று நாட்கள் என்பதால் எனக்கு எளிதாக இருந்தது.  அப்போது திருப்பூருக்குள் கம்ப்யூட்டர் சென்டர் என்பது அரிதாகவே இருந்தது.  

அங்கே நிறைய பெண்கள் படித்துக் கொண்டிருந்தார்கள்.  எங்கள் இருவரையும் தவறாமல் அங்கே செல்ல வைக்க இதுவும் ஒரு முக்கிய காரணமாக இருந்தது.

தொடக்கத்தில் மைரோசாப்ட் வேர்ட், எக்செல் என்று தொடங்கினார்கள்.

ஒரு மாதத்திற்குள் FOX PRO  என்று தொடங்க ஆர்வத்துடன் தான் கற்றுக் கொண்டோம்.  ஆனால் நான் பணிபுரிந்து கொண்டிருந்த உற்பத்தித் துறைக்கு இது தேவையில்லாமல் இருந்தது.

நாள்பட இது வெறுமனே எழுத்து வடிவமாகவே இருக்க புதிய சவால்கள் ஏதும் இல்லாது போக என் ஆர்வம் குறையத் தொடங்கியது.

நான் பின்வாங்கி நின்று விட்டேன்.  நண்பரும் சில வாரங்களில் நின்று விட்டார். அந்த சில மாதங்களில் நான் பார்த்த படித்த கணினி சம்மந்தபட்ட விசயங்கள் எனக்கு மீண்டும் அறிமுகமான ஆண்டு 2002.

2002 ஆம் ஆண்டு.

எனக்கு அலுவலக ரீதியான கணினி என்பது அறிமுகமானது.  

மின் அஞ்சல், வலைதளம் போன்ற அத்தனையும் ஒன்றன் பின் ஒன்றாக அறிமுகமாகி புதிய உலகத்தை பார்க்க வழி செய்தது.  எல்லாமே அலுவலகம் சார்ந்த விடயங்கள்.  வெளிநாட்டுத் தொடர்புகள்.  ஏற்றுமதியின் அலுவலக ரீதியான சூட்சமங்கள். தொடர்பு வட்டங்கள் விரிவிடைந்து கொண்டே சென்றது. தொழிலுக்குத் தேவைப்படும் ஆங்கில அறிவு வளரத் தொடங்கியது. மிகக் குறுகிய காலத்திற்குள் ஒவ்வொன்றாக கற்றுக் கொண்டு சற்று தெளிவான நிலைக்கு உயர்ந்திருந்தேன்.

2004 ஆம் ஆண்டு.

சொந்தமான இரண்டு சக்கர வாகனம் கைக்கு வந்த பிறகு தான் சொந்த கணினி ஆசை உருவானது. நாம் எப்படியும் சொந்தமாக ஒரு கணினியை வாங்கி விட வேண்டும் என்று நண்பர் நாகராஜிடம் சொன்ன போது அவர் பின்னங்கால் பிடறி தெறிக்க ஓடினார்.  காரணம் கையில் ஆயிரம் ரூபாய் கூட சேமிப்பில் இல்லாத வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் போது 50 000 ரூபாய்க்கு மேல் உள்ள கணினி சார்ந்த திட்டங்களைச் சொன்ன போது அலறி அறிவுரையை வழங்கி விட்டு சென்று விட்டார்.

ஆனால் என்னுடைய ஆசைகள் வெறித்தனமாக உள்ளே இருந்தது.

இது குறித்த என் துரத்தல்கள் பலரையும் சென்று பார்க்க வைத்தது.  யாரிடம் பேசினாலும் கடைசியாக இந்த கணினி குறித்த விசயங்களைப் பற்றிக் கேட்க பழகிக் கொண்டிருக்கும் பலரும் ஓடத் துவங்கினார்கள்.  காரணம் எவருக்கும் இது குறித்த அக்கறையில்லை என்பதை விட அவரவரும் மாதச் சம்பளத்திற்குள் தான் போராடிக் கொண்டிருந்தார்கள்.

ஆனால் என் ஆசை நின்றபாடில்லை.

நண்பர் நாகராஜ் வேறொரு நண்பரின் வேலைக்காக  கொங்கு நகரில் இருந்த கனரா வங்கிக்குச் சென்ற போது அங்கிருந்த மேலாளர் அறிமுகமானார். அவரின் சொந்த ஊர் நாகர்கோவில் என்று தெரிய நானும் நாகர்கோவில் தான் என்று நாகராஜ்ம் அறிமுகம் செய்து கொள்ள இருவரும் நெருங்கி விட்டனர். அப்போது தான் அவர் நாகர்கோவிலில் இருந்து திருப்பூருக்கு மாற்றலாகி வந்திருந்தார்.

அடுத்த இரண்டு மாதத்திற்குள் நண்பர் நாகராஜ் உடன் வங்கி மேலாளர் ரொம்பவே நெருங்கி விட்டார். காரணம் அவருக்கு வீடு பிடித்து கொடுத்தது முதல் பல சொந்த வேலைகளைச் செய்து கொடுத்து நாகராஜ் நன்றாகவே காக்கா பிடித்துருந்தார்.

இது தான் சமயமென்று நண்பர் அவருக்குத் தேவைப்பட்டுக் கொண்டிருந்த 'பர்சனல் லோன்' ஏதாவது கிடைக்குமா? என்று கேட்க அவரும் பச்சைக்கொடி காட்ட அப்போது தான் என் சம்மந்தபட்ட விசயங்களை அவருக்குச் சொல்லி அவருடன் சந்திக்க ஏற்பாடு செய்தார்.

அடுத்த ஒரு மாதத்திற்குள் மூத்த அண்ணன் அரசு அலுவலராக இருக்க அவர் கையெழுத்து போட்டு வங்கிக் கடன் கிடைக்க கனவில் வைத்திருந்த கணினி ஆசைகளுக்கு உயிர் வரத் தொடங்கியது. 

அப்போது சிறிய அளவில் கணினி தொழிலில் இருந்த நண்பர் விஜய் அறிமுகமாக அவர் மூலம் மற்றொருவர் அறிமுகம் ஆனார். வங்கி கேட்ட கொட்டேஷன் போன்ற சமாச்சாரங்களை அவர்கள் பார்த்துக் கொள்ள எல்லாமே இலகுவாக நடந்தது.  அப்போது தான் அவர்களிடம் சொல்லி வைத்தேன்.

விசைப்பலகையில் தமிழ் எழுத்துக்களும் வரும்படி உள்ள வசதியான விசைப்பலகை வேண்டும் என்று கேட்டிருந்தேன்.அதுவரையிலும் அவர்களிடம் கேட்ட எவரும் இது போன்று கேட்டதில்லை என்றனர். தமிழ் எழுத்துக்களும் சேர்ந்து உள்ள விசைப்பலகையோடு என் இசை விருப்பங்கள் சார்ந்த துணைக் கருவிகளோடு மொத்தமாக வீட்டுக்குள் வந்து சேர்ந்த போது மொத்த வங்கிக் கடன் வட்டியோடு ஒன்னேகால் லட்சம் என்று தீட்டி பத்திரங்களில் கையெழுத்து வாங்கியிருந்தனர்.   

ஏறக்குறைய மூன்று வருட தவணை என்று ஒலையைக் கொடுத்து கையெழுத்து வாங்கியிருந்தார்கள்.

இரண்டு மாத போராட்டத்திற்குப் பிறகு தொலைபேசி அழைப்பு வீட்டுக்கு கொண்டு வர இணைய இணைப்பு கிடைத்தது.  அலுவலகம் விட்டு வீட்டுக்கு வந்தால் சொந்த தொழில் ஆசைகளை நள்ளிரவு வரை விடாமல் பல திசைகளிலும் விரட்டி முயற்சித்துக் கொண்டேயிருந்தேன்.

அப்போது தான் சொந்த மின் அஞ்சல் முகவரியை உருவாக்கினேன்.  

அப்போது இருந்த VSNL.NET என்ற பெயரில் எனக்கென்று ஒரு மின் அஞ்சல் முகவரியைக் கொடுத்து இருந்தனர்.

அதன் பிறகே SIFY.COM அறிமுகமாக அதில் தான் முதன் முதலாக என் பெயரில் தனியாக மின் அஞ்சல் முகவரியைத் தொடங்கினேன்.  தொடர்ந்து YAHOO, HOTMAIL என்று பல விதமான மின் அஞ்சல் முகவரியோடு 2007 ஆம் ஆண்டு வரைக்கும் இந்த பயணம் தொடர்ந்து கொண்டிருந்த போதிலும் தனிப்பட்ட முன்னேற்றம் எதுவும் கிடைத்தபாடில்லை.  

ஆனால் அண்டார்ட்டிக்கா தவிர உலகில் உள்ள அத்தனை தேசங்களிலும் உள்ள அத்தனை விசயங்களையும் தேடிப்பார்த்த காலமது.   

மாதச் சம்பளத்தோடு கடன் வாங்கியும் தொலைப் பேசி இலாகாவிடம் மாதம் மாதம் போய் கொட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தேன். அப்போது இப்போது போல பலவிதமான கட்டண சலுகைகள் எதுவும் இல்லை.

2007 ஆம் ஆண்டு.

அப்போது பணிபுரிந்து கொண்டிருந்த அலுவலகத்திற்கு தொழில் ரீதியான ஒரு நண்பர் வந்திருந்தார்.  அவர் அலுவலகத் தொடர்பு சார்ந்த ஒரு மின் அஞ்சலை அனுப்பிய போது அதில் ஜிமெயில் என்று போட்டிருக்க அப்போது தான் அது குறித்து அவரிடம் கேட்ட போது ஜிமெயில் குறித்தும் அதன் வசதிகளைப் பற்றியும் என்னிடமும் சொன்னார்.  அப்பொழுதே அவர் மூலம் நான் உருவாக்கி வைத்திருந்த என் தொழில் நிறுவனப் பெயரில் ஒரு மின் அஞ்சல் முகவரியை உருவாக்கினேன்.

ஆனால் கடந்து போன வருடங்களில் தமிழ் குறித்து நான் வைத்திருந்த மென்பொருள் மூலம் நேரம் கிடைக்கும் போதெல்லாம் மனதில் தோன்றியவற்றை அடித்து சேமித்து வைத்திருப்பேனே தவிர இணைய தளங்களில் தமிழ் மொழியும் உண்டு என்பதை 2009 ஆம் மே மாதம் தான் தெரிய வந்தது.  அது வரைக்கும் நான் பயன்படுத்திக் கொண்டிருந்த  பல்வேறு அத்தனை மின் அஞ்சல் முகவரிக்கு பல நாட்டின் இறக்குமதியாளர் குறித்து விபரங்கள், அந்த நாடு குறித்த அறிமுகம் என்று ஆங்கிலம் சார்ந்த தகவல்கள் தான் வந்து கொண்டிருந்தது.  

2009 மே மாதம்

இந்த மாத மத்திம பகுதியில் வேர்ட்ப்ரஸ் தளம் ஏதோவொரு தேடலில் வந்து எட்டிப் பார்க்க, கண்களில் தென்பட்ட தமிழ் தளத்தை ஆச்சரியமாக உள்ளே சென்று பார்த்த பிறகு தான் இந்த தமிழ் இணையம் அறிமுகமானது.

அடுத்த மூன்று வாரங்களில் தடவித் தடவி என்னுடைய பெயரில் ஒரு வேர்ட்ப்ரஸ் தளத்தை உருவாக்கிப் பார்த்த போது அது தோல்வியில் முடிந்தது.  மீண்டும் என் தொழில் நிறுவன பெயரில் முயற்சித்து ஜுலை மத்திம பகுதியில்  ஒரு தளத்தை உருவாக்க முடிந்தது.

வெற்றிகரமாக  ஜுலை 2009 3 அன்று எழுதிய விசயங்களை வெளியிட்டு வைத்தேன். .

இன்று என்னுடைய ஜிமெயிலுக்கு ஒரு நாளைக்கு நூற்றுக் கணக்கான மின் அஞ்சல் வந்து விழுந்து கொண்டேயிருக்கின்றது.  அத்தனையும் தமிழ் சார்ந்த, பதிவுகள் சார்ந்த விசயங்கள் மட்டுமே. இன்று ஹாட் மெயில் முடிந்து போய் அதுவும் வேறு பெயரில் மாறிவிட்டது.  சிஃபி பக்கம் சென்று வருடக்கணக்காகி விட்டது. அதன் தன்மைகளையும் பல முறைகள் மாற்றி விட்டனர். தொடக்கம் முதல் இன்று வரையிலும் யாகூ தான் எனக்கு பல வகையிலும் எல்லா நிலையிலும் உதவியாக இருக்கிறது. 

ட்விட்டர், முகநூல் அறிமுகமான போது அதற்கென்று ஒரு மின் அஞ்சல் முகவரி வேண்டும் என்று AOL மின் அஞ்சல் முகவரியை உருவாக்க அதில் இன்று வரையிலும் படிக்காத மின் அஞ்சல்கள் என்கிற வகையில் 2000க்கு மேலே உள்ளது. மொக்கை, மொன்னை, அற்புதம், அழகு, சிந்தனை, ஆச்சரியம் என்று கலந்து கட்டி இந்த இணையம் என்னை கொண்டு செலுத்திக் கொண்டேயிருக்கிறது.

யார் யாரோ வந்தார்கள்.  யார் யாரோ பிரிந்தும் சென்றார்கள். புதுப்புது நண்பர்கள் அறிமுகமாகிக் கொண்டேயிருக்கின்றார்கள். முடிவில்லா சுழல் போல இழுத்துக் கொண்டே சென்று கொண்டிருக்கிறது.  இந்த பாதை எங்கே செல்லும்? என்று தெரியவில்லை. ஆனால் சுவாரசியமாக இருக்கிறது..

ஆனால் இது வரையிலும் என்ன கற்றுக் கொண்டேன் என்பதும் தெரியவில்லை. 

INFORMATION IS WEALTH  என்கிறார்கள்.  

இன்று தேர்ந்தெடுப்பதில் தான் சவால்கள் அதிகமாக உள்ளது. அறை குறை அறிவு பெற்றவன் கூட இணையத்தில் எழுத முடிகின்றது.

இன்று அனைத்தையும் அறிந்தவன் போல எளிதில் வெளிக்காட்டிக் கொள்ள முடிகின்றது. எவர் எவரோ சொன்னதை வைத்து கொஞ்சம் வெட்டி ஒட்டி இன்று வரை எழுத்து என்ற பெயரில் ஜல்லியடிக்க முடிகின்றது.

நான் இப்படித்தான் என்னை வளர்த்துக் கொண்டேன்.  யாரோ எழுதி வைத்தார்கள். யாரோ சொன்னார்கள். ஆனால் நான் சொல்வதாக எழுத முடிகின்றது.

ஏதாவது ஒரு சந்தேகம் என்றால் இருக்கவே இருக்கு நம்ம கூகுள் ஆண்டவர்.   

கருணை மிகுந்தவர். கண்டதையும் கற்றுத் தர தயாராக இருப்பவர்.  மத மாச்சரியம் அற்றவர். சாதிப் பாகுபாடுகள் கூட இவரிடம் இல்லை. மந்திரங்கள் எதுவும் தேவையில்லை. ஆர்வமிருப்பவர்களை என்றும் ஆதரிப்பவர்.

"தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும்" என்பதை ஒவ்வொரு நாளும் உணர்த்திக் கொண்டேயிருப்பவர்.

நான் கற்றுக் கொண்டே கடந்து வந்த பாதையின் நீளத்தையும் அகலத்தையும் இந்த நான்காம் ஆண்டின் முடிவில் எழுதி வைப்பது பொருத்தமாக இருக்கும் என்ற நம்பிக்கையில் இதையும் இங்கே எழுதி வைக்கத் தோன்றியது.

ஐந்து வயதில் முதல் வகுப்பு சென்ற காலம் போய் இன்று ஐந்து வயதில் பாலர் பள்ளி மூன்றாண்டுகளை கடந்து வர வேண்டியதான இன்றைய கல்விச்சூழல் முழுமையாக மாறியுள்ளது. 

ப்ரிகேஜி, எல்கேஜி, யூகேஜி என்று நான் படித்த மூன்றாண்டு பட்டப்படிப்பு போலவே படித்து முடித்து இன்றுள்ள குழந்தைகள் முதல் வகுப்புக்கு வந்து சேர்கின்றார்கள்.

இன்று நானும் முதல் வகுப்புக்கு இடம் பெயரப் போகின்றேன்.   

தவழ்ந்து, நடக்க, பேசப் பழகிய குழந்தைகளின் வாழ்க்கை முதல் வகுப்பு முதல் முக்கியமானது.

வாழ்க்கையின் முதல்படியாக இருப்பதால் இனி வரும் காலங்களை சற்று நிதானத்துடன் பொறுப்புடன் குறிப்பிட்ட திசை நோக்கி நகர்த்த வேண்டும் என்று மனதில் வைத்துள்ளேன்.

எந்த இடத்திலும் வளைந்து கொடுக்காமல் அப்பா சொல்லாமல் கற்றுக் கொடுத்து விட்டுச் சென்ற நேர்மையை துணை கொண்டு திருப்பூரில் இது வரையிலும் நான் வாழ்ந்த வாழ்க்கையில் எழுதக் கற்றுக் கொண்ட பிறகு கற்றதையும் பெற்றதையும் பதிவுகளாக மாற்ற முடிந்துள்ளது.

என்னை நானே வளைத்துப் பார்த்துக் கொள்ள இந்த பதிவுலகம் உதவியுள்ளது. நான் கடந்து வந்த வழித்தடங்களில் பார்த்த மேடு பள்ளங்களை பதிவுகளாக மாற்ற முடிந்ததுள்ளது. இரண்டு நாளைக்கு முன் சந்தித்த திண்டுக்கல் தனபாலன் மாமனார் "உங்கள் டாலர் நகரம் புத்தகத்தை முழுமையாக படித்து முடித்து விட்டேன்.

தினந்தோறும் நான் சோர்ந்து போகும் போது மீண்டும் மீண்டும் படித்துப் பார்க்கின்றேன். உங்களின் பல சிந்தனைகள் எனக்குள் புதிய பல தாக்கத்தை உருவாக்குகின்றது. உங்களின் "ஆங்கில கல்வியும் அரை லூசுப் பெற்றோரும்" என்ற கட்டுரையை அடிப்படையாக வைத்து எங்கள் சமூக மக்கள் நடத்தும் பள்ளியில் உரையாற்றி பெரிய அளவில் கைதட்டலைப் பெற்றேன்" என்ற போது அவரின் 70 வயது அனுபவங்கள் முன் கூச்சத்துடன் தடுமாறினேன்.

இந்திய அளவில் ஒரு அமைப்பிற்கு தலைமைப் பொறுப்பில் இருப்பவர் சொன்ன வார்த்தைகள் என் தகுதிக்கு மீறியதாகவே இருந்தது. 

நான் எழுதிய விசயங்கள் மற்றவர்களுக்கு உதவியதோ இல்லையோ என்னை  பல விதங்களிலும் மெருகேற்றியுள்ளது என்பதை குறிப்பிட்டே ஆக வேண்டும்.

எழுத்தில் இது வரையிலும் வளைக்க முடியாத பல விசயங்களை இனி முயற்சித்துப் பார்க்க வேண்டும். கற்றுக் கொள்வதற்கு வயதில்லை.  மீண்டும் கற்றுக் கொள்ள தொடங்கப் போகின்றேன்.

ஆதரித்த, ஆதரிக்கும் நண்பர்கள் அனைவருக்கும் என் உளப்பூர்வமான நன்றிகள்.

21 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

பாராட்டுவதில்... ஊக்கம் தருவதில் அவர் முன் அடியேன் கொசுறு... எனக்கு மிகவும் சிறந்த நண்பரும் கூட...

முந்தைய பதிவான :

1. "மனிதனுக்கு வேண்டிய முதன்மை குணம் என்ன?" சிந்திக்க வைத்ததில் பலரில் இவரும் ஒருவர்...

2. சிறந்த பத்து (நண்பர்கள்) பதிவில் வரும் நண்பர்களில் இவருக்கும் ஓர் இடம் உண்டு...

நன்றிகள் பல... வாழ்த்துக்கள்...

saidaiazeez.blogspot.in said...

மிகவும் ருசிகரமான நினைவலைகள். மறக்காமல் இருப்பதே வளர்ச்சி மற்றும் வெற்றியின் இரகசியம்.
ஆல் த பெஸ்ட் ஜோதிஜி

திண்டுக்கல் தனபாலன் said...

/// நான் எழுதிய விசயங்கள் மற்றவர்களுக்கு உதவியதோ இல்லையோ என்னை பல விதங்களிலும் மெருகேற்றியுள்ளது ///

இது தான் வேண்டும்... அவ்வாறே தொடரவும் வேண்டும்... வாழ்த்துக்கள்... மற்றவர்களுக்கு என்று யோசிக்க ஆரம்பித்தால்... நீங்களே சொல்லிட்டீங்க :

/// மீண்டும் கற்றுக் கொள்ள தொடங்கப் போகின்றேன்... ///

உங்கள் பாணியில் சிந்தனைகள் தொடர வாழ்த்துக்கள்...

வவ்வால் said...

ஜோதிஜி,

நல்ல அனுபவங்கள்,5 ஆம் ஆண்டுக்கு வாழ்த்துக்கள், தொடரட்டும் உங்கள் "எழுத்து சித்தர்" பணி!

#2004 இல் ஒரு கணினி வாங்க 1.25 லட்சமா,பகல் கொள்ளையால இருந்திருக்கு, நான் 2002 இலே புதிய அசெம்பில்ட் பெண்டியம்-4 (அல்லது 3 ஆ எனக்குழப்பம்) ரூ 25,000க்கு தான் வாங்கினேன்.

ஹி...ஹி 2004 இல் எல்லாம் திருப்பூரில் இருந்த நண்பரிடம் யாஹூ சாட்டில் பேசிக்கொண்டிருப்பேன், அப்போதே உங்க ஊர்க்கதை ,நிலவரம் எல்லாம் கொஞ்சம் தெரியும். அப்போ ரிலையன்ஸ் இணைய சேவையே திருப்புருக்கு வந்துவிட்டது, பிஸென்னல் விட வேகமாகவும் ,மலிவாகவும் இணைப்புக்கொடுத்தார்கள் என சொல்லுவார்.

ஜோதிஜி said...

ஏறக்குறைய பர்சனல் லோன் போலத்தான் என்று தான் நன்றாக விபரம் தெரிந்ததும் புரிந்தது. பர்சனல் லோன் என்பது கொடூரமான கந்து வட்டி மீட்டர் வட்டியை விட கொடுமையானது. மொத்தம் 55000 வந்தது. கம்யூட்டர், மானிட்டர், ஸ்கேனர், பிரிண்ட்டர், வூப்பர், அப்புறம் ஸ்டீரியோ சம்மந்தபட்ட ஸ்பீக்கர் என்று பெரிய அளவான ஆசைகளை ஒரே சமயத்தில் தீர்த்துக் கொண்டு கட்டி முடிப்பதற்குள் திண்டாடிப் போய்விட்டேன். ரிலையன்ஸ் அந்த சமயத்தில் இருந்ததாக எனக்கு நினைவில்லை. அப்போது பெரிய அளவு வெளி உலக தொடர்பும் எனக்கில்லை. அது போன்ற வாய்ப்புகளும் எனக்கு அமைந்ததும் இல்லை.

பாதி ராவுகள் தூங்காத ராவுகள். படிப்பறியா முதலாளிகள் வளர்வதற்கு எங்களைப் போன்றவர்களின் இள ரத்தம் உதவிய காலமது.

ஜோதிஜி said...

விருந்தோம்பலுக்கு மிக்க நன்றி தனபால்.

ஜோதிஜி said...

வாங்க அஜிஸ். வந்து நாளாச்சே. பழைய நினைவுகள் தான் நம்மை வழிநடத்துகின்றன என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை இன்றும் உண்டு.

ஜோதிஜி said...

நல்ல அனுபவங்கள்,5 ஆம் ஆண்டுக்கு வாழ்த்துக்கள், தொடரட்டும் உங்கள் "எழுத்து சித்தர்" பணி!

ஒரு முடிவோட இருப்பீங்க போல. எனக்கு கொஞ்சம் பயமாயிருக்கு. என்ன ஆகப் போகுதோ?

சிவக்குமார் said...

எப்படி இத்தனை எழுதித் தள்ளுகிறீர்கள் என யோசிப்பேன். பல வருடமாக காத்திருந்த துடிப்புதான் இப்படி சலிக்காமல் உங்களை எழுத வைக்கிறது என நினைக்கிறேன். கூடவே தமிழ் போதையும்

எம்.ஞானசேகரன் said...

இனிமையான 'மறக்க முடியாத நினைவுகள்' ஜோதிஜி அவர்களே!

சிவானந்தம் said...

ஜோதிஜி,

நல்ல அனுபவ தொகுப்பு. கிட்டத்தட்ட எனக்கும் அதே கதைதான். கம்ப்யுட்டர் கற்க ஒரு சென்டருக்கு போய் அவர்கள் சொன்ன எதுவும் மண்டையில் ஏறவில்லை. ஒரே வாரத்தில் முடித்துக் கொண்டேன்.

இருந்தாலும் இணையத்தில் மேயவேண்டும் என்ற ஆர்வம் காரணமாக அடுத்த சில மாதங்களிலே கம்ப்யுட்டர் வாங்கிவிட்டேன். இணையம் மேய என்று சொன்னபோது பலர் ஒரு மாதிரியாக பார்த்ததால், DTP ஆரம்பிக்கப் போகிறேன் என்று சொல்லி வாங்கினேன்.

இதை வாங்குவதற்காக விசாரித்தபோது ஒருவர் கடுப்பாகி ஒரு உதாரணம் சொன்னார். `ஜட்டி ஆணுக்கா, பெண்ணுக்கா, சின்ன குழந்தைக்கா பெரியவங்களுக்கா? இப்படி எதுவும் சொல்லாம விலை விசாரிச்சா நான் என்ன சொல்றது?` என்று குழம்பினார். GB,RAM போன்ற அடிப்படை தகவலே தெரியாமல் விலை கேட்டதால் இந்த கோவம்.அதன் பின் வேறு நண்பரிடம் DTP ஆரம்பிக்கப் போகிறேன் என்று சொல்லி அதற்கு தேவையான தகுதிகளோடு வாங்கினேன். எனக்கும் 2001-ல் ௦30 ஆயிரம் அளவுக்குத்தான் ஆனது.

இன்று கம்யுட்டரின் பயன்பாட்டையும் அது நமக்கு உதவும் விதத்தையும் பார்க்கும்போது நான் எடுத்த புத்திசாலித்தனமான சில முடிவுகளில் இதுவும் ஓன்று உணரமுடிகிறது.

உங்களின் இந்த அனுபவங்கள் உங்களை மேலும் பல வெற்றிகளுக்கு அழைத்து செல்ல வாழ்த்துக்கள்.

Avargal Unmaigal said...

தங்களது வாழ்க்கை அனுபவங்களை மிக தெளிவாகவும் எளிமையாக எடுத்து சொல்லுவதுதான் உங்களது திறமை. உங்கள் அனுபவங்களின் மூலம் பல பாடங்களை கற்றுக் கொள்ள முடிகிறது. கஷ்டப்பட்டு முன்னேறும் ஒருவர் மூலம்தான் பல அனுபபாடங்களை கற்றுக் கொள்ள முடிகிறது. அந்த அனுபவங்கள் வாழ்க்கையின் வெற்றி திசையில் அழைத்து செல்கின்றது. திருப்பூர் பல மக்களின் வாழ்க்கையில் திருப்பங்களை ஏற்படுத்தி கொடுக்கிறது என்பது மறக்க முடியாத உண்மை

ஜோதிஜி said...

நம்முடைய விருப்பங்கள் என்பதே நமது அன்றாட வேலையாக இருக்கும் பட்சத்தில் மிகப் பெரிய சாதனைகளை மிக எளிதில் கொண்டு வந்து சேர்த்து விடும். ஆனால் நாம் தான் வாழ்க்கை வேறு. விருப்பங்கள் வேறு. தொழில் வேறு என்று தானே வாழ்ந்து கொண்டிருக்கின்றோமே. இதன் காரணமாகத்தான் இதிலாவது மனம் ஒப்பி முழுமையாக ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றேன். நன்றி தமிழ்.

ஜோதிஜி said...

அவசரமா வந்து ஓடிப்போயிட்டீங்க போலிருக்கே.

ஜோதிஜி said...

நீங்கள் சொன்னதும் மேலும் ஒரு விடயம் தற்போது என் நினைவுக்கு வந்தது. என் மூத்த அண்ணன் வங்கியில் வந்து கையெழுத்துப் போடும் போது நண்பர் நாகராஜிடம் கேட்டது இவனுக்கு இன்னமும் பைத்தியம் மாறலையே. அவனவன் இடம் வாங்கிப் போடுவான். பிள்ள குட்டிகளுக்கு நகைகளைச் சேர்ப்பான். இவன் புத்தகங்களையும் இது போன்ற விசயங்களிலும் கவனம் செலுத்துகிறானே நீங்களாவது அறிவுரை சொல்லி திருத்தக்கூடாதா என்றார்.

நன்றி சிவா.

ஜோதிஜி said...

தெளிவான விமர்சனம். நன்றி நண்பா

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு. திரு ஜோதிஜி கணினி கற்ற கதை, வாங்கிய கதை சொல்லியிருக்கிறார். அவரது முயற்சி பாராட்டப்பட வேண்டியது; எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டியது.
எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி & வாழ்த்துகள் திரு ஜோதிஜி.

Unknown said...

மிக அருமையான பதிவு ஜோதிஜீ, பாராட்ட கூட முடியாமல் பலதடவை எஸ்கேப் ஆகியிருக்கிறேன், வேண்டுமென்று இல்லை... கிடைத்த நேரத்தில் உம் எழு(கரு)த்தை விழுங்கி கொழுத்திருக்கிறேன்.... நின்று நிதானமாக விளயாடும் கிரிக்கெட் வீரரின் விளயாட்டு போல உங்கள் பதிவு மிக நீண்டு பரந்து கருத்தை சொல்வது சிற(செழி)ப்பு.

ஜோதிஜி said...

நன்றிங்க.

ஜோதிஜி said...

நன்றி சேவியர். பலரும் உள்வாங்கிக் கொண்டு நகர்ந்து விடுவதுண்டு. பாராட்டுக்களை எதிர்பார்த்துக் கொண்டேயிருந்தால் நம் விருப்பத்தின் அடிப்படையில் வேகம் குறைந்து விடும்.

டிபிஆர்.ஜோசப் said...

அங்கே நிறைய பெண்கள் படித்துக் கொண்டிருந்தார்கள். எங்கள் இருவரையும் தவறாமல் அங்கே செல்ல வைக்க இதுவும் ஒரு முக்கிய காரணமாக இருந்தது.//

இப்படியொரு இன்சென்டிவ் இருந்தா யார்தான் படிக்க மாட்டாங்க? ஆனாலும் வருச ரீதியா எவ்வளவு விஷயங்கள ஞாபகத்துல வச்சிக்கிட்டு எழுதியிருக்கீங்க? ஆச்சரியாமாருக்கு.