Tuesday, October 30, 2012

இந்தியாவிற்குள் உள்ளதா தமிழ்நாடு?



மானியங்கள் இல்லாவிட்டால் நம் நாடு சிறப்பாக வந்து விடும்.

இது இயல்பாகவே இந்தியாவில் படித்தவர்கள் எப்போதும் உச்சரிக்கும் வார்த்தைகள். ஆனால் பிரிட்டன் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் தன் நாட்டில் உள்ள விவசாயிகளுக்கு எந்த அளவுக்கு மானியங்கள் மூலம் அவர்களை காத்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பது பலருக்கும் தெரிவதில்லை.  

உலகளாவிய பொருளாதாரம் என்ற வார்த்தை இந்தியாவிற்குள் வந்த பிறகு உலகில் உள்ள பன்னாடு நிறுவனங்களுக்கு இந்தியா என்பது ஒரு அற்புதமான சந்தையாக மாறியுள்ளது. 

தவறில்லை.

தரமான பெருட்கள் கிடைக்கும். போட்டிகள் அதிகமாகும். உள்ளே பழமைவாத சிந்தனைகளில் ஊறிக் கொண்டுருப்பவர்கள் மாறியே ஆக வேண்டும் என்ற சூழ்நிலையும் உருவாகும்.  படித்தவர்கள் வெளிநாடு செல்ல தேவையில்லை. ஆனால் வருகின்ற ஒவ்வொரு நிறுவனங்களும் புறவாசல் வழியாகவே வருகின்றது. எந்த ஒப்பந்தங்களும் வெளிப்படையாக இருப்பதில்லை. 

அது குறித்து எவரும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வாயிலாக கேட்டால் கூட ஆயுட்காலம் முடிவதற்குள் முழுமையான விபரங்கள் கிடைத்தால் ஆச்சரியமே.

அந்நிய முதலீடு என்பது இந்தியாவிற்கு தேவை என்பது எத்தனை முக்கியமோ அதே போல் உள்ளே இருக்கும் அடிப்படை கட்டுமானம் சிதையாமல் இருப்பதும் முக்கியம் தானே.?

ஓராயிரம் உள்நாட்டு தொழிலை அழித்து ஒரு பன்னாட்டு நிறுவனம் வளர்க்க நம் நாட்டு அரசியல்வாதிகளுக்கு இந்த அளவுக்கு ஆர்வம் இருக்க காரணம் என்னவாக இருக்க முடியும்?

தேசப்பற்று என்று நீங்கள் சொன்னால் உலகத்தோடு ஒட்டி வாழ்ந்து கொண்டு இருக்கிறீர்கள் என்று அர்த்தம். வேறுவிதமான கற்பிதம் செய்து கொண்டால் அது உங்கள் சிந்தனையின் தவறாகவே இருக்கும்.

உங்கள் சிந்தனையை மாற்றிக் கொள்ளுங்க.

இந்தியாவில் உள்ள பகாசுர நிறுவனங்களின் முழுமையான செயல்பாடுகளும் நமக்குத் தெரிய சில காலம் பிடிக்கும்.  தெரிய வரும் போது எதிர்க்க முடியாது.  எதிர்ப்பை அடக்க அத்தனை அரசு எந்திரங்களும் ஒன்றாக சேர்ந்து செயல்படும்.  இது நாம் பார்த்துக் கொண்டுருக்கும் உண்மை. 

தற்போது இந்தியாவின் நிதித்துறை அமைச்சராக இருக்கும் ப.சிதம்பரம் அற்புதமான அறிவாளித்தனமான மற்றொரு திட்டத்தையும் அறிவித்துள்ளார். பொதுத்துறை நிறுவன பங்குகளை தனியாருக்கு விற்று இந்தியாவின் பொருளாதாரத்தை நிலைப்படுத்தப் போவதாக சொல்லியுள்ளார்.  அந்த பொதுத்துறை நிறுவனம் லாபகரமாக இருந்தாலும் கூட அது குறித்து கவலைப்படப் போவதில்லை.  

மொத்தத்தில் தாங்கள் நினைத்தபடி, தாங்கள் விரும்பிய ஆட்களுக்க தற்போது லாபம் ஈட்டிக் கொண்டுருக்கும் நிறுவன பங்குகளில் குறிப்பிட்ட சதவிகிதத்தை தாரை வார்த்து விடுவது.  

பிறகென்ன?

மெதுமெதுவாக அந்த நிறுவனமே தனியார்களின் கைக்கு வந்துவிடும். ஆனால் தொடங்கும் போது மெதுவாகத் தான் தொடங்குவார்கள்.  

இதைப் போன்ற ஒரு திட்டம் தான் தற்போது ஒன்று உருவாகிக் கொண்டுருக்கிறது.  

இங்கு பேசவிருக்கும் மொத்த திட்டத்தையும் பார்க்கும் போது தமிழ்நாடு என்பது இந்தியாவில் உள்ள ஒரு மாநிலமா? இல்லை அருகில் உள்ள நாடா? என்று யோசிக்க வைத்துவிடும் போல.  அந்த அளவுக்கு ஏகப்பட்ட குளறுபடிகளுடன் இந்த திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. தற்போது ஆண்டு கொண்டுருக்கும் காங்கிரஸ் அரசாங்கம் கட்சி அடிப்படையில் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களுக்கு ஒரு மாதிரியாகவும், காங்கிரஸ் ஆட்சியில் இல்லாத மாநிலங்களுக்கு வேறு விதமாகவும் தங்கள் நல்ல செயல்களை திட்டமிட்டு செய்து கொண்டு வருகிறார்கள். 

முதல் முறையாக ஒரு மாநில அரசாங்கம் மத்திய அரசாங்கத்தின் கொள்கையின் மேல் களங்கம் கற்பித்து நீதிமன்றத்தை நாடுவது இது தான் முதல் முறையாக இருக்கக்கூடும்.

டெல்லிக்கு தேவையில்லாத மின்சாரத்தைக் கூட தமிழ்நாட்டுக்கு தர மனமில்லாத அளவுக்க காங்கிரஸ் அரசாங்கம் புத்திசாலிகளால் கொள்கை வடிவமைக்கப்பட்டு வருகின்றது.

முடிந்தவரைக்கும் மின்சாரம் முதல் ரயில்வே திட்டங்கள் முதல் அத்தனை விசயங்களிலும் தற்போதைய மத்திய அரசாங்கம் புகுந்து விளையாடிக் கொண்டுருக்கிறது.


படத்தை நன்றாக பார்த்துவிட்டு மேலே படிக்கத் தொடங்கலாம்.

இந்திய அரசின் நிறுவனமான கெயில் Gas Authority of India Limited's (GAIL) ஒரு திட்டத்தை வடிவமைத்து உள்ளது. அதாவது கேரளாவில் உள்ள கொச்சியில் இருந்து கர்நாடகாவில் உள்ள மங்களூர் வரைக்கும் பைப்லைன் மூலமாக எரிவாயு (கேஸ்) எடுத்துச் செல்லும் திட்டம்.  liquefied natural gas (LNG) இந்த திட்டத்தின் மூலம் பதிக்கப்பட்ட குழாய் மூலம் நாள்தோறும் 16 MMSCMD (million metric standard cubic metre கொண்டு செல்ல முடியும். 

871 கிலோ மீட்டருக்கு கோவை, திருப்பூர்,நாமக்கல்,சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக விவசாய நிலங்கள், தேசிய நெடுஞ்சாலை வழியாக கியாஸ் பைப்லைன் கொண்டு செல்லப்படுகிறது. இதற்காக கெயில் நிறுவனம்  விவசாயிகளிடமிருந்து  நில அனுபவ உரிமையை எடுத்துக் கொள்ளுவதுடன் நிலத்தில் மதிப்பீட்டில் பத்து சதவீதத்தை விவசாயிகளுக்கு நஷ்ட ஈடாக வழங்கும். பைப் லைன் பதிக்க எடுக்கப்படும் நிலத்தின் இரண்டு பக்கங்களிலும் தலா 10 மீட்டருக்கு இடம் தேவை.பைப்புகள் 5 அடி ஆழத்திற்கு பதிக்கப்படுகின்றன. பைப்பில் விட்டம் 2 அடி ஆகும். பைப் லைன் அமைக்கப்படும் பகுதியின் மீது பயிரிடுவது, வீடுகள் கட்டுவது, மரம் நடுவது, ஆழ்குழாய் கிணறு தோண்டுவது தடை செய்யப்பட்டுள்ளது. 

ஆழமாக வேரோடும் பயிர்களை கியாஸ் பைப் லைன் செல்லும் பகுதிகளில் பயிரிடக் கூடாது என்பது முக்கிய நிபந்தனையாகும்.மேலும் விவசாய நிலங்கள் வழியாக செல்லும் கியாஸ் பைப் லைன் சேதமடைந்தால் சம்பந்தப்பட்ட விவசாயிக்கு மரண தண்டனை விதிக்கப்படுமாம்.கியாஸ் பைப் லைன் அமைக்க உருவாக்கப்பட்டுள்ள  புதிய சட்ட மசோதா படி பைப் லைன் அமைக்க நிலத்தை ஒப்படைக்கும் விவசாயிகளே கியாஸ் பைப் லைன் களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டுமாம்.

பொறுப்பற்ற தன்மையா? இல்லை எவ்வளவு அடித்தாலும் தாங்குபவர்கள் தமிழர்கள் என்று நினைத்துக் கொண்டார்களோ என்பது தெரியவில்லை.  மூக்கைத் தொட தலையைச் சுற்றி கையை கொண்டு வருவது போல இதன் திட்ட வரைபடங்கள் அப்படித்தான் தெரிவிக்கின்றது.  பாதிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு விவசாயிகளும் அந்த அளவுக்கு நொந்து போய் உள்ளார்கள். 

இந்த பைப் செல்வதால் அந்த நிலத்தில் விவசாய கட்டுப்பாடு வரும். அதாவது தண்ணீர் பாய்ச்சகூடாது; மழை பெய்தால் அதைக்கொண்டு பயிர் செய்யலாம்; உழுதல் கூடாது; மரம்,வீடு,ரோடு கூடாது. அந்த பைப்லைனுக்கு பாதிப்பென்றால் அந்த விவசாயிதான் பொறுப்பு! எப்படி நியாயம்?? 

இதற்கு அவர்கள் தரும் இழப்பீடு ஏக்கருக்கு ஆயிரம் ரூபாய்! 

இவர்கள் சொல்லும் காரணம் தமிழகம் வழியாக வந்தால் 310கிமீ; கேரளா, மைசூரு வழியாக வந்தால் 470 கிமீ. ஆனால் வரைபடத்தை பார்த்தால் எது குறைந்த தூரம் என்பது விளங்கும். 

அந்த பாதையைவிட தமிழக பாதையில் மலைகளும் வனப்பகுதியும் அதிகம்.

இந்த திட்டத்தில் மூன்று மாநிலங்கள் சம்மந்தப்பட்டுள்ளது. விற்பனையின் மூலம் வருவாய் கேரளாவுக்கு, எரிவாயு சென்றடையும் மாநிலம்  கர்நாடகா. ஆனால் இந்த குழாய்கள் பதிக்கப்படுவது பெரும்பாலும் தமிழ்நாட்டு பகுதிகளில்.

குறிப்பாக திருப்பூர் சார்ந்த பகுதிகளில் உள்ள விளைநிலங்களுக்குத் தான் அதிக அளவு பாதிப்பு உருவாக்கும். 

310 கி.மீ. தூரத்துக்கு கொண்டு செல்லப்படும் இந்த பைப் லைன்கள், கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள 126 கிராமங்களில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் வழியாக அமைக்கப்படுகிறது.

கோவை மாவட்டத்தில் 15 கிராமங்களும், திருப்பூர் மாவட்டத்தில் 22 கிராமங்களும், ஈரோடு மாவட்டத்தில் 16 கிராமங்களும், நாமக்கல் மாவட்டத்தில் 9 கிராமங்களும், சேலம் மாவட்டத்தில் 29 கிராமங்களும், தர்மபுரி மாவட்டத்தில் 27 கிராமங்களும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 18 கிராமங்களிலும் கடுமையாக பாதிப்படைந்துள்ளன.

இந்த கிராமங்களில் விவசாயிகள் தென்னை, பனை, மரங்களை வளர்க்க முடியாது, பணப்பயிர்களை சாகுபடி செய்ய முடியாது, வீடு,கட்டிடம் கட்ட முடியாது, கனரக வாகனங்களை இயக்க முடியாது.

இதனால் ஆயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதார உரிமை பறிபோகும் ஆபத்து எழுந்துள்ளது. விவசாய நிலங்கள் வழியாக கொண்டு செல்லப்படுவதற்கு பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். திருப்பூரிலும் கடந்த 5 மாதங்களாக விளை நிலங்கள் வழியாக எரிவாயு குழாய் பதிக்கும் பணிக்கு கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது.

காங்கயம  தாலுகாவில் கத்தாங்கன்ணி, அவிநாசி தாலுகா சர்க்கார் கத்தாங்கன்னி, ஊத்துக்குளி, பொங்கலூர் அருகே  உள்ள பெருந்தொழுவு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்படும  நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயிகளின் எதிர்ப்பு காரணமாக இப்பகுதியில் பணிகளை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

நிலங்களை துண்டாடும் சம்பவங்கள் தொடர்ந்து வருகிறது. தற்போது எரிவாயு குழாய் அமைக்கும் பணி காரணமாக ஒரு ஏக்கர், 2 ஏக்கர் நிலங்கள் துண்டாடப்படும் சூழல் உருவாகி, விவசாயிகள் கடும் பாதிப்பை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. குழாய் பதிக்கப்பட்ட நிலத்தில் 60 அடிக்கு எந்த பணிகளையும் செய்ய கூடாது என நிபந்தனை உள்ளது.

இத்திட்டத்தால் விவசாயிகளின் வாழ்வாதரம் கடுமையாக பாதிக்கப்படும். எனவே நெடுஞ்சாலை ஓரம், ரயில  பாதை ஓரம் அல்லது ஆற்றங்கரை ஓரத்தில் இந்த குழாய்களை கொண்டு செல்ல வேண்டும். அமெரிக்கா போன்ற நாடுகளில் நெடுஞ்சாலை வழியாகத்தான் கொண்டு செல்லப்படுகின்றன. இதனால் இந்த திட்டத்தை மாற்றுப்பாதையில் செயல்படுத்த வேண்டும்.

வீடு, கிணறு, ஆழ்குழாய் கிணறு ஆகியவையும் பாதிப்படைகிறது, இதற்கான இழப்பீடு மிகவும் குறைவாக இருக்கிறது. விவசாயிகள  நலன் குறித்து எண்ணிப்பார்க்காமல், குழாய் அமைக்கும் பணியை தொடர்ந்தால், பாதிக்கப்பட்ட விவசாயிகள் தங்களது போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.  கூடங்குளம் போல இது விஸ்பரூபம் எடுக்குமா? இல்லை பிணந்தின்னி கழுகுகள் போல கொடுப்பதை வாங்கிக் கொண்டு நம்முடைய அரசியல் சேகவர்கள் அமைதி காப்பார்களா? என்று தெரியவில்லை. .

இதைப் போலவே மற்றொரு திட்டமும் உருவாகிக் கொண்டுருக்கிறது. 

சென்னை தூத்துக்குடி இடையே நிலத்திற்கு அடியில் ‌பைப் மூலம் கேஸ் கொண்டு செல்லும் பணி நடைபெற உள்ளது. மதுரை, திருவண்ணாமலை, சென்‌னை, திருச்சி, விழுப்புரம், நாமக்கல் உள்ளிட்ட 12 மாவட்டங்கள் வழியாக செல்லும் இந்த திட்டம் சுமார் 640 கி.மீ., தூரம் அமைக்கப்படுகிறது. இதற்காக நிலங்‌கள் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

இதற்காக செயற்கைக்கோள் மூலம் பைப்லைன் செல்லும் திட்டம் வகுக்கப்பட்டது.இந்த திட்டம் செயல்படுத்தும் போது, பைப்லைன் செல்லும் பகுதியில் 100 அ‌டி தூரத்திற்கு கட்டுமானப்பணிகள், போர்வெல் பணிகள் போன்றவை நடைபெற தடை விதிக்கப்படும்/

இந்த திட்டத்தை ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ரியாஜிஸ்டிக் இன்பர்ஸ்டிரக்சர் லிமிடட் நிறுவனம் செய்து வருகிறது. 

தற்போது மத்திய அரசாங்கம் வெற்றி கரமாக நிறைவேற்றியுள்ள ஒரு குடும்பத்திற்கு வருடத்திற்கு 6 கேஸ் சிலிண்டர் என்பது பல்லாயிரக்கணக்கான நடுத்தர வாழ்க்கை வாழ்ந்து கொண்டுருப்பவர்களின் வாழ்க்கையில் இடியாக விழுந்துள்ளது. 

ஆடம்பரம் இல்லாமல் இயல்பாக வாழ்ந்து கொண்டுருப்பவர்களுக்கு வருடத்திற்கு 8 கேஸ் சிலிண்டர் தேவைப்படும்.  வருடந்தோறும் ஒரு குடும்பத்திற்கு 6 கேஸ் சிலிண்டர் மானிய விலையிலும் அதற்கு மேல் தேவைப்படுவ்தை மானியம் இல்லாத விலையிலும் வாங்கிக் கொள்ள வேண்டும்.

தற்போது ஒரு கேஸ் சிலிண்டர் (மானிய விலையில்) ரூபாய் 400.  மானியம் இல்லாமல் வாங்கும் போது இரண்டு மடங்கு அதிகமாகும்.  இதில் மற்றொரு கொடுமையும் உண்டு.  நாம் எப்போது இந்த கேஸ் சிலிண்டர் வாங்குகின்றோமோ அப்போது சந்தை நிலவரப்படி விலை ஏற்ற இறக்கம் இருக்கும்.

தற்போது மத்திய அரசாங்கத்தில் மாற்றப்பட்ட பெட்ரோலிய அமைச்சர் ஜெயபால் ரெட்டி கூட ரிலையன்ஸ் முகேஷ் அம்பானியுடன் மோதல் போக்கை கடைபிடித்த காரணத்தினால் தான் என்று பத்திரிக்கை செய்திகள் சொல்கின்றன.  

ஒரு பக்கம் அரசாங்க பொதுத்துறை நிறுவனம் மூலமும் அம்பானி நிறுவனங்கள் மூலம் இந்த எரிவாயு குழாய் திட்டங்கள் வெற்றிகரமாக நிறைவேற்றி முடித்து விட்டால் வீடுகளுக்கு தனியார் மூலமாக தேவைப்படும் எரிவாயு எளிதாக வழங்கப்பட்டு விடலாம்.

பன்னாட்டு நிறுவனங்களின் வளத்திற்காக விவசாயத்தை அழிக்க நினைக்கும் அரசின் கொள்கைகளை வகுப்பவர்கள் அத்தனை பேர்களும் அதி புத்திசாலிகளாக இருப்பதால் அடித்தட்டு மக்களின் வாழ்க்கை என்பது கேலிக்குறியாகவே இருக்கின்றது. 

இதனால் தான் இந்தியாவின் திட்டக்குழு துணைத்தலைவர் மான்டேக்சிங் அலுலாலியா தண்ணீரை விற்பனை செய்யும் போது தான் அதனை பயன்படுத்துபவர்களுக்கு ஒரு கவனம் உருவாகும் என்று போகிற போக்கில் தத்துவங்களை உதிர்த்துவிட்டு செல்கின்றார். 

சுட்டிகள்



12 comments:

aavee said...

அடப்பாவீங்களா!! நல்ல பதிவு!

Unknown said...

'இந்தியாவுக்கு இளிச்சவாயன் தமிழ்நாட்டுப் பட்டி!'

Easy (EZ) Editorial Calendar said...

அட கடவுளே!!! ஏன் எங்கள் தமிழ் நாட்டுக்கு இப்படி ஒரு சோதனை....

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

துளசி கோபால் said...

அடப்பாவிகளா!!!! அக்ரமத்துக்கு எல்லையே இல்லையா?

ஏற்கெனவே விவசாயி நொந்து நூடுல்ஸ் ஆயாச்சு இதுலே இப்படிவேறயா? :((((((

bandhu said...

இதை எதிர்த்து நீதி மன்றம் செல்ல முடியாதா? கொடுமை என்னவென்றால், கோர்ட் அரசு எடுக்கும் கொள்கை (கொள்ளை?) முடிவுகளில் தலையிடமுடியாது என்று பல சமயம் சொல்லிவிடுகிறது!
(கேஸ் இருந்தால்) வெந்ததை தின்போம். விதி வந்தால் சாவோம் என்று முடிந்துவிடுமா நம் எல்லோரின் நிலைமை?

Unknown said...

ஜி .. நிறைய தகவல் சேர்த்து நல்லா எழுதி இருக்கீங்க....
ஆனால், டெல்லியில் அலுவலகம் இருக்கும் தமிழ் நாட்டில் மிக குறைந்த மக்கள் படிக்கும் டைம்ஸ் ஆப் இந்தியாவிற்கு பதிப்பித்த இந்த விஷயம் திருப்பூரின் விளம்பரம் வாங்கி வளர்ந்த தினமலரல் இருட்டடிக்கபட்டு உள்ளது ...

ஜி கெயில் கம்பனி விளம்பரம் தினமலரில் வந்தது பார்த்தீங்களா ?அதற்கு பிரதிபலனாக.. யாருக்குமே பொது மக்கள் பயனில்லாத யாருக்குமே கெயில் கம்பனியின் விளம்பரம் தினமலரில் வர இது தான் காரணம் என நினைக்கிறென்..

பாதிக்க பட்ட விவசாயிகளின் போரட்டத்தில் பங்க்கு பெற்ற ஒருவரின் போன் எண் இருக்கு அவர் என்னுடய கஸ்டமர் தான்..

உங்களுக்கு தேவைபட்டால் தருகிறேன்...
பேசிக்கொள்ளுங்க..
நன்றி
வினோத்.

Jayadev Das said...

வயிறு எரியுது சார். அம்மா என்ன பண்ணப் போறாங்க.......??

ஜோதிஜி said...

விமர்சனத்தின் மூலம் தங்கள் கருத்துக்களை தெரிவத்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. இந்த பிரச்சனை குறித்து தனிப்பட்ட முறையில் சிலர் மின் அஞ்சல் வாயிலாக என்னிடம் கேட்டார்கள்.

நிச்சயம் தமிழ்நாட்டின் அதிகாரவர்க்கத்திற்கு இது தெரியாமல் இருக்காது. சின்மயி போன்ற அதிக முக்கியத்துவம் பெற்ற பல பிரச்சனைகள் இன்று தமிழ்நாட்டில் இருப்பதால் அந்த பிரச்சனைகளுக்கு நீதி மன்றத்தில் முடிவு வந்தவுடன் இது போன்ற பிரச்சனைகளுக்க அரசாங்கம் கவனம் செலுத்தக்கூடும்.

வினோத் உங்களுக்குத் தான் என்னுடைய முதல் நன்றி. எழுத தாமதம் ஆகி விட்டது.

டீச்சர் மற்றொரு தகவல். கேரளாவில் உள்ள கழிவுகள் பெரும்பாலும் தமிழ்நாட்டின் எல்லைப் பகுதிகளில் தான் கொட்டப்படுகின்றது. காரணம் அங்கே செல்கின்ற லாரிகள் திரும்பி வரும் போது ஏதாவது ஒரு லோடு வேண்டும் என்கிற நோக்கத்தில் அவர்கள் ஏற்றி விடுகின்ற கழிவுகளை இங்கே வந்து ஏதோவொரு இடத்தில் கொட்டிவிட்டு வருகிறார்கள்.

நண்பரே அம்மா எத்தனையைத்தான் கவனிக்க முடியும். இப்போதைக்கு முக்கிய பிரச்சனை தேமுதிக கட்சியை உடைத்து சுக்குநூறாக மாற்ற வேண்டும். கிடைக்கப் போகும் ஒரு எம்பி கூட கிடைக்க விடக் கூடாது. தினந்தோறும் பத்திரிக்கைகள் படித்தால் அவர்கள் கஷ்டம் நமக்கே புரிய வரும்.

நாம் அனைவரும் பொறுமைசாலிகள் அல்லது நல்லதே இறுதியில் நடக்கும் என்று நம்பும் ஜனநாயகவாதிகள். விடிவு கிடைக்கும். நாம் இல்லாத போது.

Anonymous said...

jayalalitha is busy to become india's prime minister....so she cannot raise her voice!karunanithi is doing tv business allover south.he doesn't want ruin his business by making these kind of silly issues.tn people will never get tired of voting to these two!but thiruvalluvar can! tamils shud laugh even when thr ass(es) r bleeding!!

Anonymous said...

Good post. It is very sad to hear these things.

by-Maakkaan.

cheena (சீனா) said...

அன்பின் ஜோதிஜி

தமிழ் நாட்டினைச் சார்ந்த பாராளுமனற உறுப்பினர்கள் என்ன செய்கிறார்கள் . ஏன் இப்பிரச்னைக்குக் குரல் கொடுக்கக் கூடாது.

நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா

Unknown said...

அருமையான விளக்க பதிவு . நன்றி