Tuesday, August 30, 2011

அமெரிக்காவும் அடிமைகளின் ரத்தமும்



அமெரிக்காவை கண்டு பிடித்தவர் கொலம்பஸ் என்று பள்ளிக்கூடப் பாடங்களில் படித்து இருப்போம். ஆனால் இதில் சில நுணுக்கமான உண்மைகள் உண்டு.  கொலம்பஸ் அமெரிக்காவை கண்டு பிடித்த ஆண்டு 1491.  இதனைத் தொடர்ந்து அமெரிக்க கடல் பகுதிகளை 1493 வரை கண்டு பிடித்து உலகத்திற்கு அறிவித்தார்..

கொலம்பஸ் அமெரிக்காவின் உள்ளே நுழைந்த போது அங்கே ஆதிவாசிகள் வாழ்ந்து கொண்டிருந்தனர். அவர்கள் பெயர் சிவப்பிந்தியர்கள். இன்று வரை இவர்களுக்கு ஏன் இந்தியர்களின் பெயர்கள் வந்தது என்பதை விளக்கும் காரணங்கள் துல்லியமாக இல்லை.  ஆனால் இந்த பெயரே நிலைத்து விட்டது.

இன்று உலக நாட்டிற்கெல்லாம் பெரியண்ணனாக இருக்கும் அமெரிக்காவும் அடிமை தேசமாகத்தான் தொடக்கத்தில் இருந்தது. அமெரிக்காவை அடிமையாக வைத்திருந்த நாடு பிரிட்டன். ஏன் இது போன்ற சின்னச் சின்ன விசயங்களை நாம் பார்க்க வேண்டும் என்பது உங்களுக்குத் தோன்றும்.  கஷ்டப்பட்டு வந்தவனுக்கு மத்தவங்களோட கஷ்டம் தெரியும்ன்னு சொல்லுவாங்களே?  அது போன்ற பழமொழிகள் இன்று வரைக்கும் வெறும் பேசும் மொழியாகத்தான் இருக்கிறது என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

16 ஆம் நூற்றாண்டு காலத்தில் இன்றைய அமெரிக்கா என்பது அமெரிக்க குடியேற்ற நாடாக இருந்தது. வட மற்றும் தென் அமெரிக்கா போல கண்ட பிரிவினைகள் போலில்லாமல் ஒரே நிலப்பரப்பாக இருந்தது. 1500 ஆம் ஆண்டில் கேப்ரல் என்ற போர்த்துகீசியர் பயணித்த கப்பல் வழிதடுமாறி பிரேசில் பகுதியை சென்றடைய தென் அமெரிக்காவின் பிரேசிலை போர்த்துகீசியர்கள் உரிமை கொண்டாடத் தொடங்கினர். 

பிரிட்டன் அமெரிக்காவின் உள்ளே நுழைவதற்கு முன்பே இரண்டு கணவான்கள் அதாவது ஸ்பானியர்களும், போர்த்துகீசியர்களும் அங்கேயுள்ள கனிம வளங்கை தங்கள் பங்குங்கு ரைட் ராயலாக தங்கள் நாட்டுக்கு அனுப்பிக் கொண்டிருந்தனர். குறிப்பாக தென் அமெரிக்க பகுதிகளில் இருந்த தங்க சுரங்கங்களிலிருந்து எடுக்கப்பட்ட தங்கபாளங்களைப் பார்த்து ஒவ்வொரு ஐரோப்பிய தேசங்களும் நான் முந்தி நீ மூந்தி அமெரிக்காவின் ஒவ்வொரு பகுதிகளையும் ஆக்ரமிக்கத் தொடங்கியது. மொத்தத்தில் வந்தேறிகளால் சூறையாடப்படும் நாடாகத்தான் அமெரிக்கா இருந்தது.

16 ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் பிரிட்டனின் நிறுவனங்கள் உள்ளே வரத் தொடங்கியது.

1607ல் பிரிட்டனை ஆண்டு கொண்டிருந்த முதலாம் ஜேம்ஸ் மன்னர் பெயருடன் அமெரிக்காவில் முதல் முறையாக ஜேம்ஸ் டவுன் என்ற நகரம் உருவாக்கப்பட்டது.  இது தான் முதல் முறையாக இங்கிலாந்து உருவாக்கிய காலணி பகுதியாகும். 

ஆனால் 16 ஆம் நூற்றாண்டு நூற்றாண்டில் இங்கிலாந்தைப் போலவே அமெரிக்காவிற்கு உள்ளே வந்த ஹாலந்து, பிரான்ஸ் தேசங்களை விட முண்டியடித்துக் கொண்டு இங்கிலாந்து மட்டும் தனது குடியேற்றங்களை அமெரிக்காவில் உருவாக்கியது.

இவர்கள் உருவாக்கிய முதல் குடியேற்றப் பகுதி வர்ஜீனிவாகும்.   பிரிட்டன் பந்தக்கால் நட்டு உள்ளே பட்டறையைப் போட்டதும் எப்போதும் போல இங்கிலாந்து அரசாங்கம் அடுத்து கவனம் செலுத்திய விசயம் தொழில் வாய்ப்புகளை குறித்து ஆராய்ந்ததை நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இங்கே செய்ய வேண்டிய வணிகத்தின் பொருட்டு புகையிலை சாகுபடியில் கவனம் செலுத்தினர்.  காரணம் வர்ஜீனியப் பகுதியில் நிலவிய சீதோஷ்ணம் புகையிலை விளைச்சலுக்கு அற்புதமாக இருந்தது. இங்கிலாந்தில் இருந்து பல பிரபுக்குடும்பங்கள் வந்து சேர்ந்ததும் உழைப்பதற்கு ஆயிரக்கணக்கான ஆப்ரிக்க அடிமைகளையும் இறக்குமதி செய்து கொண்டனர். .

17 ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் அமெரிக்கா பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் பெற்றது. ஆனால் இந்த அமெரிக்கா சுதந்திரமடைவதற்கு கருப்பின மக்களின் பங்களிப்பும் மகத்தானது. தங்களை ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த பிரிட்டனை எதிர்த்து அமெரிக்க குடியேற்ற நாடுகள் 1775 ஆம் ஆண்டு சுதந்திரம் கேட்டு ஒரே அணியில் நின்றன. 

அப்போது பிரிட்டன் அரசாங்கம் கலவரத்தினை ஒடுக்க இராணுவத்தை ஏவியது. முறையான் இராணுவ பயிற்சி இல்லாத அடிமையாய் இருந்த கருப்பின மக்கள் அமெரிக்க குடியேற்ற நாடுகளுக்கு ஆதரவாக ஒன்று சேரத் தொடங்கினர்.  வெற்றி பெற்றால் உங்களுக்கு விடுதலை என்று கருப்பின மக்களளுக்கு வாக்குறுதி வழங்கப்பட்டு இருந்தது. இதனை நம்பி களம் புகுந்த கருப்பின மக்கள் நடந்த யுத்தத்தில் ஏறக்குறைய 20 000 பேர்கள் கொல்லப்பட்டனர்.

இதே போல 1776 ல் பிலடெல்பியா சுதந்திர பிரகடனத்தின் பொருட்டு மக்களை ஒரே அணியில் திரட்டிய போதும் உருவான யுத்தத்திலும் ஆயிரக்கணக்கான அடிமைகள் கொல்லப்பட்டனர். இந்த அடிமைகள் கலாச்சாரமென்பது அமெரிக்காவில் எங்கெங்கு காணிணும் அடிமையடா என்பது போல் இருந்தது. பிரிட்டன் அமெரிக்காவை விட்டு வெளியேறியதும் இந்த அடிமைகளின் எண்ணிக்கை பல மடங்கு பெரிதானது.  

காரணம் வளர்ந்து கொண்டிருக்கும் அமெரிக்காவுக்கு உழைக்க ஏராளமான ஆட்கள் தேவைப்பட எல்லாவிதங்களிலும் இந்த கருப்பின மக்கள் தான் ஆபாந்தவர்களாக இருந்தனர்.  அமெரிக்காவின் தென் மாநிலங்களில் பெருவாரியான விளைச்சலில் இருந்த பருத்தி விளைச்சலுக்கு அடிமைகள் பயன்பட்டதைப் போலவே பிரிட்டன் மூலம் அமெரிக்கர்களுக்கு அறிமுகமான குதிரைப் பண்ணைகளை பராமரிப்பது வரைக்கும் உண்டான் அத்தனை வேலைகளுக்கும் இந்த கருப்பின மக்களை அடிமைகளாக பயன்படுத்தப்பட்டனர்.  

18 ஆம் ஆண்டு முதல் 20 ஆம் ஆண்டு வரைக்கும் மொத்த நாடுகளும் ஆப்ரிக்காவை நோக்கி படையெடுக்க இரண்டு காரணங்கள் முக்கியமானதாக இருந்தது. முதலில் மஞ்சள் பிசாசு என்றழைக்கப்படும் தங்கம். மற்றும் ஆப்ரிக்காவில் உள்ள இயற்கை வளங்கள்.  மற்றொன்று உழைப்புக்குத் தேவைப்படும் கருப்பின மக்கள். இந்த தங்கத்தின் காரணமாகவே அமெரிக்காவின் பூர்விக மக்களான சிவப்பிந்தியர்கள் பூண்டோடு அழிக்கப்பட்டனர். 


பிரிட்டன் அமெரிக்காவை தனது ஆட்சி அதிகாரத்தின் கீழ் கொண்டு வந்த போது அங்கு வாழ்ந்து கொண்டிருந்த சிவப்பந்தியர்களின் எண்ணிக்கை இருபது லட்சம் இருந்து இருக்கலாம். ஆதி இன மனிதர்களைப் போலவே குகைக்குள் வாழ்ந்தவர்கள் இருபதாம் நூற்றாண்டுவாக்கிலேயே சற்று வெளியுலக வெளிச்சத்தை பார்த்தனர்.  காரணம் தங்களுக்குரியை வாழ்க்கை முறை மற்றும் வழிபாட்டு முறைகள் எதையும் விட்டுக் கொடுக்காமல் வெளியுலகம் குறித்து கவலைப்படாமலேயே வாழ்ந்த சிவப்பிந்தவர்களின் வாழ்க்கையை அங்கிருந்த மலைக்குகையில் இருந்த தங்கம்  தவிடுபொடியாக்கியது.

1870 ஆம் ஆண்டு. BLACK HILLS. 

இது செவ்விந்தியர்கள் வாழ்ந்து கொண்டிருந்த ஒரு பகுதியாகும்.  இதுவொரு நீண்ட மலைத்தொடர்.  தங்களின் தொழில் வளர்ச்சி பயன்பாட்டிற்காக பிரிட்டனிலிருந்து வந்து பணிபுரிந்து கொண்டிருந்த பொறியாளர்கள் தொழிற்சாலைகள் கட்டவும், தேவைப்படுகின்ற சாலைகளை போட மலைகளைக் குடைந்து முன்றேறிக் கொண்டிருந்தனர். இந்த சமயத்தில் தான் அமெரிக்காவில் அதிக அளவில் கருப்பின மக்கள் கொண்டு வந்து கொண்டிருந்தனர். 

இந்த மலைகளில் வேலை செய்து கொண்டிருந்த கருப்பின மக்கள் வேலை முடிந்து வெளியே வந்த போது அவர்களின் உடம்பின் மேற்பரப்பில் மெல்லிய தங்க துகள்கள் ஓட்டியிருக்க கவனித்த பொறியாளர்கள் அத்தனை பேர்களையும் வரிசையாக அமர வைத்து சோதிக்கத் தொடங்கினர்.

சந்தேகமில்லாமல் தங்கம் தான் என்பதை உணர்ந்து கொண்டனர்.

பிரிட்டீஷ் மற்றும் அமெரிக்க முதலாளிகள் மேற்கொண்டு கருப்பின மக்களை இறக்குமதி செய்து ம்லையின் மொத்த பகுதியையும் வளைத்துக் கொண்டு சிவப்பிந்தியர்களை அப்புறப்படுத்தத் தொடங்கினர். சிவப்பிந்தியர்களுக்கு தங்கமென்பதோ அதன் மதிப்பு போன்ற எதுவும் தெரியாது. 

இவர்கள் சங்கு மற்றும் சிப்பிகளைத்தான் உயர்வாக நினைத்தனர். ஆனால் தங்களை தங்கள் வாழ்விடங்களிலிருந்து அப்புறப்படுத்துகிறார்கள் என்பதை மட்டும் மனதில் கொண்டு எதிர்க்கத் தொடங்கினர். இதே காலகட்டத்தில் துப்பாக்கி மற்றும் பீரங்கி உபயோகத்தில் இருக்க சிவப்பிந்தியர்கள் தங்கள் ஆயுதமான வில் அம்போடு எதிர்த்து நின்றனர். சிவப்பிந்தியர்களுக்கு அவர்கள் வைத்திருந்த நாயும், எருதுகளும் துணை நின்றது. 

உருவானது போர்.

1870களில் துவங்கிய யுத்தம் 1874 வரைக்கும் நான்கு ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து கொண்டு இருந்தது.  இதில் மற்றொரு மகத்தான் ஆச்சரியம் என்னவென்றால் நவீன ஆயுதங்களைப் கொண்டு போரிட்ட அமெரிக்க பிரிட்டன் படைகளை எதிர்த்த நின்ற சிவப்பிந்தியர்கள் பயன்படுத்தியது வெறுமே வில் அம்பு மட்டுமே. அதை வைத்துக் கொண்டே போரிட்டனர்.

அமெரிக்க ராணுவ தளபதி கஸ்டர் தலைமையில் நடைபெற்றது. 

அமெரிக்காவின் உள்நாட்டுப் போரில் முதல் முறையாக இராணுவம் தோற்றது.  ஆனால் மீண்டும் வெறியோடு மீண்டும் ஆயுதங்களை இறக்குமதி செய்து குறிப்பாக பீரங்கிகளை பயன்படுத்தி முன் அறிவிப்பு ஏதுமின்றி .பெண்களைத் தவிர பெரும்பாலோனர்களை ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொல்லப்பட்டனர்.

டக்கோடா, மற்றும் BLACK HILLS  பகுதிகளில் சரணடைந்த சிவப்பிந்தியர்களை வரிசையாக நிற்கவைத்து ஒரேயடியாக முடித்து வைத்தனர். 

கூட்டுப்படைகளிடமிருந்து தப்பியோடிய சிவப்பிந்தியர்களை வாழ்விடங்களை கணக்கெடுத்து மீண்டும் போர் தொடுத்தது

துரத்தி துரத்தி பழி தீர்த்தனர்.

உறங்கிக் கொண்டிருந்த பெண்கள் முதல் தப்பியோடியவர்கள் வரைக்கும் அமெரிக்க அரசு பயன்படுத்திய (கையில் தூக்கிக் கொண்டு செல்லும்) பீரங்கித் தாக்குதலால் செத்து மடிந்தனர். தப்பி ஓடிய செவ்விந்திய ஆண்கள் ஒக்லமா காட்டுப்பகுதிகளுக்கு தஞ்சம் புகுந்தனர்.

இந்த முறை பிரிட்டிஷ் ராணுவமும் அமெரிக்க படைகளுக்கு உதவி புரிய செவ்விந்தியர்கள் திசை தெரியாமல் தடுமாறத் தொடங்கினர். கூட்டுப்படைகள் செவ்விந்தியர்களை ஓட ஓட விரட்டிக் கொன்றது.. இதனைத்தான் வரலாற்றில் LAST LAND RUSH  என்றழைக்கப்படுகின்றது. 

அமெரிக்க மண்ணின் மைந்தர்களை சூறையாடிய அமெரிக்கர்கள் தங்களுக்காக உழைக்க வந்த கருப்பின மக்களையும் நடத்திய விதம் அமெரிக்கா சரித்திரத்தில் ரத்த கவுச்சியடிக்கும் சோக நிகழ்வாகும்.

16 comments:

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு. எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்.
வேதனையாக இருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள். தெரிந்து கொள்வோம்.
உங்கள் உழைப்புக்கு நன்றி.

idroos said...

ஐரோப்பிய ஆதிக்க வெறியர்கள் உருவாக்கிய நாடு அதே தன்மை மாறாமல் இருப்பதில் ஆச்சரியமில்லை..

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

தொடருகிறேன் ...

Anonymous said...

தொடர்ந்து எழுதுங்கள்...தொடருகிறேன்...

சார்வாகன் said...

தொடருகிறேன்..

'பரிவை' சே.குமார் said...

நல்ல பதிவு. எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்.
வேதனையாக இருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள்

Anonymous said...

தொடர்ந்து எழுதுங்கள் .. நல்ல பதிவு.
ஒரு சோகமான வரலாறு ..

Suresh

Unknown said...

சிவப்பந்தியர்கள் கொஞ்சம் பேர் இன்னுமும் இருப்பதாக, படித்திருக்கிறேன்,அது உண்மையா?

ஜோதிஜி said...

இளா

உண்மை. இருக்கிறார்கள். ஆனால் நவீன அமெரிக்கர்களைப் போல சற்று வித்யாசமான மாறுதல்களுடன்.

நண்பர்கள் அணைவருக்கும் நன்றி.

Yaathoramani.blogspot.com said...

அடிமைகள் குறித்து மிக அழமாக விரிவாக
பதிவிட்டுள்ளமைக்கு வாழ்த்துக்கள்
பல புதிய விஷயங்களைத்தெரிந்து கொள்ள முடிந்தது
கடினமான பணிதான் ஆயினும் பயனுள்ள பணி
தொடர்ந்து வருகிறோம்
தொடர வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

த.ம 8

தனசேகர் said...

தொடர்ந்து தொடரைப் படித்து வருகிறேன். அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய வரலாறு. உலகமயமாக்கலின் ஆரம்பமே இந்த அடிமைத்தொழில்தானோ என்று எண்ணத்தோன்றுகிறது. அன்று மிரட்டி அடிமைகளாக்கப்பட்டனர். இன்று தானே அடிமைகளாகிறோமோ (வறுமை, பண ஆசை போன்ற காராங்களால் ) ?

தொடர்ந்து எழுதுங்கள். நீங்கள் முதலிலேயே சொல்லியது போல யாரும் தொடாத வரலாறு.

Theerthagiri said...

தொடர்ந்து படித்து வருகிறேன், I expect your postings..

Giri-Tirupur

Unknown said...

கொலம்பஸ் காலத்தில் இந்தியாதான் செழிப்பான நாடாகவும் , வணிக மையமாகவும் இருந்தது. ஐரோப்பாவில் இருந்து தரை வழியாக இந்தியா வர நிறைய நாடுகளையும், பிரச்சனைகளையும் கடக்க வேண்டி இருந்தது. எனவே இந்தியாவிற்கு கடல் வழியை கண்டுபிடிக்க பிரிட்டன்,போர்ச்சுக்கல்,ஹாலந்து போன்ற நாடுகள் முடிவு செய்தன.
மாலுமிகளுக்கு ஏராளமான நிதி உதவிகளையும் செய்தன.
அப்படி கிளம்பியவர்களில் ஒருவர் தான் கொலம்பஸ். ஆனால் அவர் சென்றடைந்த இடம் அமெரிக்கா. அவர் அந்த நாட்டை இந்தியா என்றே நினைத்து, அங்கு வாழ்ந்த மக்களை இந்தியர்கள் என்று அழைத்தார்.
பிற்காலத்தில் அமெரிக்கோ வெஸ்புகி, வாஸ்கோடகாமா போன்றவர்கள் கொலம்பஸ் கூறியது தவறு என் கண்டுபிடித்தனர். ஆனாலும் கொலம்பஸ் க்கு பிறகு அந்த மக்கள் செவிந்தியர்கள் என்றே அழைக்கப்பட்டனர்

ஜோதிஜி said...

நன்றி மோகன். தெளிவான அருமையான விளக்கம்.

தனசேகர் வெகுவாக ரசித்தேன். உண்மையும் கூட.

பகிர்ந்து கொண்ட நண்பர்கள் அணைவருக்கும் நன்றி.

இராஜராஜேஸ்வரி said...

அடிமைகள் குறித்த ஆழமான அலசல்.