Tuesday, November 30, 2010

அப்பா மாற்றிய பாதை

உலகத்தில் பிரபஞ்ச ரகஸ்யத்தை கூட கண்டு பிடித்துவிடுகிறார்கள்.  ஆனால் எத்தனை பேர்கள் தங்களின் அப்பாவைப் பற்றி முழுமையாக உண்மையாக புரிந்திருக்கிறார்கள்? 

பாதி காலம் பயம். மீதி கொஞ்சம் வெறுப்புமாய் வாழ்ந்து வெளியே வந்து விட்ட பிறகு தான் முழுமையான அவரவர் அப்பா குறித்த புரிதலின் ஆரம்பமே தொடங்குகிறது.   நான் அப்பாவாக ஆன பிறகு தான் என் அப்பாவைப் பற்றி முழுமையாக யோசிக்க ஆரம்பித்தேன். 

என் அப்பாவை விரும்பத் தொடங்கிய போது அவரும் இல்லை. அவரின் நினைவுகளை மட்டும் வைத்துக் கொண்டு குழந்தைகளுக்கு நல்ல அப்பாவாக வாழ முயற்சித்துக் கொண்டுருக்கின்றேன். 

ஆனால் இவர் இப்போது அப்பாவைப் பற்றி மூச்சு விடாமல் பேசத் தொடங்கிய பிறகு கொட்டித் தீர்க்கட்டும் என்று அமைதியாய் கேட்டுக் கொண்டுருந்தேன். அவரின் நீண்ட உரையாடலை முடிவுக்கு கொண்டு வந்து விட முடியும் என்ற நம்பிக்கை எனக்குள் உருவானது.   அமைதியாய் இருந்தேன்.

பேசத் தொடங்கினார்.

" நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது சில சமயம் என் அம்மா பள்ளிக்கு வருவார். நானும் அம்மாவும் பள்ளிக்கு வெளியிருக்கும் மரத்தடியில் வெகு நேரம் பேசிக்கொண்டுருப்போம்.  அப்போது தான் அவர் முகத்தில் புதிய மலர்ச்சி தெரியும். சிறையை விட்டு பறவைப் போல அவர் பேச்சில் உற்சாகம் வழிந்தோடும். 

அம்மா பொதுவாக வீட்டில் இருக்கும் போது அதிகமாக பேசமாட்டார்.  ஆனால் நான் எந்த விசயத்தைப் பற்றி அவருனுடன் பேசினாலும் அவரின் தெளிவான கருத்தை எடுத்து வைப்பார். அதிகமாக படிக்கவில்லையே தவிர அவராகவே உணர்ந்த விசயங்களை நகைச்சுவையாக எடுத்து வைப்பார். 

எங்கள் இருவரையும் சேர்த்து பார்க்கும் என் தோழிகள் " யாரிவர்?  உன்னோட அக்காவா?" என்று கேட்பார்கள். 

"அந்த அளவிற்கு அம்மா எப்போதுமே வசீகரமாய் இருப்பார்.  ஆடம்பர சேலைகளோ பெரிதான நகைகள் இல்லாத அவரின் முகம் எப்போதும் புன்னகையுடன் தான் இருக்கும். ஒவ்வொரு நாளும் காலையில் குளித்து பெரிய திலகமிட்ட பிறகே தன்னுடைய அன்றாட கடமைகளை தொடங்குவார்.  அப்பாவும் அம்மாவும் எங்கேயும் சேர்ந்து போய் நான் பார்த்ததேயில்லை. "

"அம்மாவிடம் பல முறை கேட்டுருக்கின்றேன்.  சிரித்துக் கொண்டே மழுப்பி விடுவார்.  ஆனால் குடும்ப விசயங்களைத் தவிர மற்ற எல்லா விசயங்களையும் என்னுடன் பேசிக் கொண்டேயிருப்பார். வீட்டில் என்னுடன் அதிகமாக பேசும் நேரமே தம்பியும் அப்பாவும் இல்லாத நேரமாகத்தான் இருக்கும். என்னுடைய தம்பியை ஒரு அளவிற்கு மேல் அம்மாவால் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதை மெதுவாக புரிந்து கொண்டேன்.  காரணம் அவன் எப்போதுமே அப்பாவுக்கு பிடித்த பையனாக இருந்த காரணமே அவனிடம் ஒவ்வொரு கெட்ட பழக்கங்களும் வீடு வரைக்கும் வர ஆரம்பித்தது.. அதுவே ஏராளமான பிரச்சனைகளும் கொண்டு வந்து சேர்த்தது.  . அப்பாவிடம் இது குறித்து கேட்ட முடியாது.  அவர் ஒரே வார்த்தையில் முடித்து விடுவார்.  

"அவன் ஆம்பிளை அப்படித்தான் இருப்பான்." என்று சொல்லிவிடுவார்..

"எனக்கு என் அம்மாவிடம் பிடித்த விசயமே, எது குறித்தும் புலம்புவதேயில்லை.  பல சமயம் எனக்கு சாப்பாடு கட்டிக் கொடுக்க வீட்டில் ஒன்றுமேயிருக்காது.  அவசரமாய் பக்கத்து டீக்கடையில் ஏதோ ஒன்றை வாங்கி பொட்டலத்தை என் பையில் திணித்து அனுப்பி வைத்து விடுவார். அம்மா என் மேல் வைத்திருந்த நம்பிக்கைதான் பல சமயம் என் பசியை போக்கியிருக்கிறது." 

"நானும் அம்மாவைப்போலவே இருக்க முயற்சிப்பேன்.  ஆனால் என் முகவாட்டம் அவருக்கு என் எண்ணங்களை காட்டி கொடுத்து விடும். பள்ளியில் மற்றவர்கள் அணிந்து வரும் உடைகளும், தோழிகளின் அலட்டல் பேச்சுக்களையும் வந்து சொல்லும் போது அம்மா ஒரே வார்த்தையில் சொல்லுவார்."

"உலகில் அனுபவிக்க வேண்டிய விசயங்கள் வளர்ந்து கொண்டேதான் இருக்கும்.  நம்முடைய ஆசைகளைப் போலவே.  ஆனால் அதற்கான தகுதிகளை நீ அடைய வேண்டுமானால் நம்மைப் போன்றவர்களுக்கு கல்வி வேண்டும். நீ ஓரு அளவிற்கு மேல் வளர்ந்த பிறகு இந்த சுகமெல்லாம் தூசி என்று கருதும் நாள் வரும். அது வரைக்கும் கொஞ்சம் பொறுமையாக இரு.  உன் கவனத்தை வேறு எதிலும் மாற்றாதே" என்பார். 

எனக்கு சற்று எரிச்சலாக இருந்தாலும் புரிந்தது போல் தலையாட்டிவிட்டு மனதுக்குள் மறுகிக் கொள்வேன்.

"வீட்டில் அப்பா உருவாக்கும் ஒவ்வொரு சண்டைகளுக்கு வெவ்வேறு காரணங்கள்.  ஆனால் மொத்தமாக பார்த்தால் அவரின் ஆண்மையற்ற வீராப்பு தான் முதன்மையாக இருக்கும்.  ஓமக்குச்சி நரசிம்மன் போல உள்ள தோற்றத்தில் அவரின் குடியும் பீடிப்பழக்கமும் நிரந்தர நோயாளியைப் போலவே வைத்திருக்க அம்மாவின் வசீகரத்தை அவர் தன்னுடைய தாழ்வு மனப்பான்மையாக மாற்றிக் கொள்ள ஆரம்பித்தார்."

"எனக்கு இது மெதுவாக புரிந்தாலும் அம்மாவிடம் கேட்க முடியாது.  கேட்கும் போதெல்லாம் என் அம்மா ஒரே வார்த்தையில் என்னை அடக்கி விடுவார்.  

"ஆம்பிளைங்றவங்க முன்னபின்ன தான் இருப்பாங்க.  அது என்பாடு.  உன்னோட வேலை படிக்கிறது மட்டும் தான்.  அதில் மட்டும் கவனமாயிரு" என்று அது குறித்து தொடர்ந்து பேச விடமாட்டார்.  பல முறை என் தம்பியே என் புத்தகங்களை ஒழித்து கிழித்து வேறு பக்கம் தூக்கி எறிவது வரைக்கும் நாங்கள் இருவருமே வீட்டுக்குள் நரக வாழ்க்கை தான் வாழ்ந்தோம்.  

பலமுறை அம்மாவுடன் சண்டை போட்டுருக்கின்றேன்.  " எங்கேயாவது போய் விடுவோம்.  இந்த நரகம் போதுமென்று" அழைத்த போதிலும் அம்மா தெளிவாகச் சொன்னது இன்னமும் என் நினைவில் இருக்கிறது. 

" இக்கரைக்கு அக்கறை பச்சை.  நீ நினைப்பது போல பெண்கள் தனியாக வாழ்வது சுலபமில்லை.  படிப்பது, வாசிப்பது, கேட்பது என்பதற்கும் நிஜத்திற்கும் உள்ள வித்யாசத்தை நீ போகப் போக புரிந்து கொள்வாய்" என்று அன்பாக மிரட்டி மாற்றி விடுவார். 

 "அப்பாவின் ஒரே பிரச்சனை அவரின் தாழ்வு மனப்பான்மை.  அவரால் கடைசி வரைக்கும் மாற்றிக் கொள்ளவே முடியவில்லை.  அவரின் தொடர்ச்சியான தொழில் தோல்விகளும், இழந்த சொத்துக்களும், உடல்நலம் குன்றியது என்று எல்லாநிலையிலும் அம்மா கூடவேயிருந்தார்.  ஆனால்...................."

நிறுத்திவிட்டு என்னை பார்த்து புன்னகைத்தார். 

இப்போது ரயில் இடையில் வந்து கொண்டுருந்த மற்றொரு ரயிலுக்காக இருட்டுக்குள் நின்று கொண்டுருந்ததை எங்களால் புரிந்து கொள்ள முடிந்தது. கழிப்பறைக்கு செல்பவர்கள் வந்து சிலர் எங்களுடன் நின்று வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டுருநத்ர்கள். அவரின் பேச்சு தடைபட்டது. எங்கள் இருவரையும் கவனித்த சிலர் சற்று தள்ளிப் போய் நின்று கொண்டு பார்த்துக் கொண்டுருந்தார்கள்.  எதுவும் நடக்கின்றதா என்ற அவர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறாத நிலையில் அவர்களும் தங்களின் படுக்கைக்குச் சென்றனர். 

ரயில் நகரத் தொடங்கியது.  தொடர்ந்தார்.

"ஒரு தடவை அப்பா உடம்பு சரியில்லாம வீட்டுக்குள் இருமிக்கிட்டே படுத்துருந்தார். நான் வெளியே திண்னையில் உட்கார்ந்து படித்துக் கொண்டுருந்தேன்.  அப்பாவின் தொடர்ச்சியான இருமல் கேட்க நான் வேகமாக உள்ளே ஓட அம்மா என்னை தடுத்து படிக்கச் சொல்லிவிட்டு உள்ளே சென்றார்.  அப்பாவின் கோப வார்த்தைகளும், அவர் இருமலை மீறி அம்மாவிடம் சண்டை போடுவது வரைக்கும் என்னால் கேட்க முடிந்தது.  சற்று நேரம் மயான அமைதி.  ஆனால் அம்மா என்னை நோக்கி வெளியே வந்த போது கையில் என்னுடைய பள்ளிக்கூட பைக்கட்டு மூட்டைகளுடன் மற்றொரு சிறிய பையில் தேவையான துணிகளும் இருந்தது..

" இனி இந்தாளுகூட வாழமுடியாது. வா நாம வேற எங்கேயாவது போய் பிழைத்துக் கொள்வோம்" என்று என் பேச்சை எதிர்பார்க்காமல் என் கையை பிடித்துக் கொண்டு ஏறக்குறைய தரதரவென்று இழுத்துக் கொண்டு நடந்தார்.  வந்து நின்ற பேரூந்தில் ஏறி ரயில்நிலையத்துக்கு வந்தோம். 

அது கோயமுத்தூர் செல்வதாக அருகே இருந்தவர்கள் சொன்னார்கள்.  டிக்கெட் கூட எடுக்காமல் அமர்ந்திருந்த அம்மாவை அப்போது தான் முதல் முறையாகப் பார்ப்பது போல பார்த்தேன். 


காரணம் அவர் முகத்தில் அப்படியொரு ரௌத்திரம் தெரிந்தது.  இதுவரைக்கும் அம்மாவின் முகத்தில் நான் கோபத்தின் சாயலைக்கூட பார்த்ததில்லை, ஆனால் இப்போது முற்றிலும் புதிய மனுஷியாக தெரிந்தார். என்ன நடந்தது என்று நான் கேட்ட போது "சமயம் வரும் போது சொல்கின்றேன்" என்று தன்னை இயல்பாக மாற்றிக் கொள்ள முயற்சித்தார். 

ரயில் ஓடத் தொடங்கியது.  எங்களின் வாழ்க்கைப் பாதையும் மாறத் தொடங்கியது.

37 comments:

எண்ணங்கள் 13189034291840215795 said...

நீ ஓரு அளவிற்கு மேல் வளர்ந்த பிறகு இந்த சுகமெல்லாம் தூசி என்று கருதும் நாள் வரும்.//

எத்தனை நிஜம்..


//காரணம் அவர் முகத்தில் அப்படியொரு ரௌத்திரம் தெரிந்தது.//

எல்லாவற்றுக்கும் ஒரு எல்லை இருக்குமே..

எஸ்.கே said...

படிப்பவரின் உணர்வுகளை நினைவுகளையும் தூண்டி விடும் எழுத்துக்களுக்கு சொந்தக்காரர் நீங்கள்!

தமிழ் உதயம் said...

அனுபவம் கற்று கொடுத்த பாடம், அவர் செல்லும் வழி நெடுக...

இளங்கோ said...

நாம் கடந்து வந்ததெல்லாம் ஒன்றுமே இல்லை போலிருக்கிறது..

Thenammai Lakshmanan said...

தொடரட்டும்.. ஜோதிஜி.. எனக்கு இப்போதெல்லாம் இது போன்ற போராட்டக் கதைகள் கேட்கும் காலமாய் இருக்கிறது.. பதிவெழுத வந்தபின் தான் இப்படி எல்லாம் கூட அப்பா அம்மா உறவுகள் இருக்கிறார்கள் என தெரிந்தபோது கஷ்டமாக இருந்தது..

Thekkikattan|தெகா said...

எங்களின் வாழ்க்கைப் பாதையும் மாறத் தொடங்கியது.//

என்னது சஸ்பென்ஸ் :-)

க.பாலாசி said...

முதல் பத்தி படிச்சவுடனே இந்த இடுகையின் போக்கு ஒரு நல்ல அப்பாவை எனக்கு காட்டப்போகிறது என்றே எண்ணினேன். ஆனால் படிக்க படிக்க ஒரு நல்ல அம்மாவையே மீண்டும் பார்க்க நேர்ந்தது. ஆனாலும் இந்த அம்மாவுக்கு இருந்த அழுத்தமும், ரௌத்திரம் அல்லது இயலாமையும் பழக்கப்பட்டேவிட்டது எனலாம். எல்லோரின் வாழ்விலும் இப்படிப்பட்ட அம்மாக்கள் இருக்கவே செய்கிறார்கள். மாறாக அப்பாக்களின் அழுத்தங்களையும் புரிந்துகொள்ளக்கூடிய பிள்ளைகள் கொஞ்சம் குறைவுதான். இதிலும் அதற்கான முடிச்சு லேசாக இருக்கிறது. ஆனால் முழுதும் அவிழ்க்கப்படவில்லை. ஆனாலும் எல்லாவகையிலும் ஒரு குடும்பபச்சுமையில் அதிகம் பாரம் சுமப்பவள் அம்மாவாகத்தானே இருக்கிறாள்...

நல்ல இடுகை ஜோதிஜி..

Chitra said...

அந்த அம்மாவின் உணர்வுகளோடு எங்களையும் ஒட்ட வைத்து விடும், எழுத்து நடை.

vinthaimanithan said...

வலிசுமக்கும் நெஞ்சங்கள் உலகமெங்கும் நிறைந்திருக்கின்றன...

ஹேமா said...

அம்மா என்னும் வார்த்தையே அன்பு ,தியாகம்.
கொடுத்து வைக்க வேணும் இப்படியான அம்மா கிடைப்பதற்கும்.அப்பாக்கள் உழைப்பதோடு சரி,எங்களை ஒழுங்குபடுத்தி வாழ்க்கையை அழகுபடுத்தி செழிக்க வைக்கும் தெய்வம் ....
கண்ணுக்குள் எப்போது எம்மோடு உறங்கும் தெய்வம் அவள்.அவள் புகழ் சொல்ல ஒரு வாழ்நாள் போதாது ஜோதிஜி.என்றாலும் வித்தியாசமான அம்மாக்களையும் கண்டிருக்கிறேன் நான் !

Jerry Eshananda said...

பெரிதாக இருந்தாலும் இதமாக இருந்தது..

http://thavaru.blogspot.com/ said...

“இப்போது முற்றிலும் புதிய மனுஷியாக தெரிந்தார்.”

நீண்டகால நம்பிக்கை முழுவதுமாக சிதையும்பொழுது
எடுக்கும் புதியஅவதாரம். கட்டாயம் வாழ்க்கையில் மனநிறைவு எய்தும் அன்பின் ஜோதிஜி.

Seiko said...

//நான் அப்பாவாக ஆன பிறகு தான் என் அப்பாவைப் பற்றி முழுமையாக யோசிக்க ஆரம்பித்தேன். // இது சராசரியாக எல்லோருக்குமே ஏற்படுகிறது. தங்களை யோசிக்க வைத்தவைகளை தனியாக ஒரு பதிவில் எதிர் பார்க்கிறேன்.
//நல்ல அப்பாவாக வாழ முயற்சித்துக் கொண்டு...// ??
மகள் தனியாக எங்கேயாவது போய் விடலாம் என்று கூப்பிட்டபொழுது கூட போகாத அம்மா, ஒரு நொடியில் மாற்றிய, அந்த அப்பாவுடனான சண்டையில் என்ன தான் நடந்திருக்கும்? பெரிய சஸ் பென்ஸ்??
ரயில் நின்று ஓடுகையில், எது லைவ், எது ஃபிளாஷ்பேக் என்று தெரியாமல் போய்விடப்போகிறது. கவனம்!!

Bibiliobibuli said...

சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பார்கள். துரோகமும் வலியும் சுமக்கும் பெண்களும் அப்படித்தான்.

Tough cookie!!! :)

எல் கே said...

தொடருங்கள்

கோவி.கண்ணன் said...

//என் அப்பாவை விரும்பத் தொடங்கிய போது அவரும் இல்லை. அவரின் நினைவுகளை மட்டும் வைத்துக் கொண்டு குழந்தைகளுக்கு நல்ல அப்பாவாக வாழ முயற்சித்துக் கொண்டுருக்கின்றேன்.
//

மிகச் சரி. இந்த அனுபவம் நம்ம தலைமுறையினருக்கு வெகுவாகவே உண்டு. அது அவர்களின் பொறுப்பற்ற தன்மையா வாழ்க்கை முறையா அவர்கள் வாழும் காலத்தில் பிள்ளைகளுக்கு புரியும் வண்ணம் நடந்து கொண்டதே இல்லை

துளசி கோபால் said...

என்னதான் பொறுமையில் பூமாதேவி மாதிரின்னு எங்களைச் சொன்னாலும் ஒரு சமயம் இல்லாட்டா ஒரு சமயம் ஒரு சின்ன 'சொல்' அப்படியே பத்திக்கிட்டு எங்களை ( பெண்களை) வெடிக்க வச்சுருது. அந்தச் சொல் ஒரு அபவாதச் சொல்லாத்தான் இருந்துக்கணும்.

அநியாயமாப் பழிச்சொல் கிடைக்கும்போது அதை ஏத்துக்க முடியாத நிலைக்குத் தள்ளப்படுகிறோம் என்பதுதான் உண்மை.

'கதை' அடுத்த பகுதி எப்போ?

சின்னதா ஒரு பிழை திருத்தம்.

இக்கரைக்கு அக்கறை = அக்கரை

ஒரு அக்கறையாலேதான் சொல்றேன்:-)

நடை கூடுதல் அழகா வந்துக்கிட்டு இருக்கு இப்பெல்லாம்!!

Unknown said...

//உலகில் அனுபவிக்க வேண்டிய விசயங்கள் வளர்ந்து கொண்டேதான் இருக்கும். நம்முடைய ஆசைகளைப் போலவே. ஆனால் அதற்கான தகுதிகளை நீ அடைய வேண்டுமானால் நம்மைப் போன்றவர்களுக்கு கல்வி வேண்டும். நீ ஓரு அளவிற்கு மேல் வளர்ந்த பிறகு இந்த சுகமெல்லாம் தூசி என்று கருதும் நாள் வரும்//

நிதர்சனம், வாழ்வின் தத்துவத்தை புரிய வைத்த கருத்துக்கள், உங்கள் எழுத்து நடை அதைவிட நன்றாக உள்ளது, தொடருங்கள், நன்றி

Unknown said...

துளசி சொல்வது உண்மைதான், உங்கள் நடை இபோத்ல்லம் முன்னைவிடவும் கவர்வதாக உள்ளது..

ஜோதிஜி said...

துளசி கோபால் நீங்க சொன்னது உண்மைதான். இன்னும் இதில் மூன்று எழுத்துப் பிழைகள் இருக்கின்றது. குறிப்பிட்ட நேரத்தில் எனக்கு கிடைக்கும் ஓய்வுப் பொழுதில் இணையத்தொடர்பு படுத்தி எடுக்கின்றது. பல சமயம் ஆளை விட்டால்போதும் என்கிற அளவிற்கு ஏற்றி விட வேண்டியதாய் விடுகின்றது. இன்னும் கவனத்தை இதில்செலுத்த முயற்சிக்கின்றேன் நன்றி.

Anonymous said...

ore padivil mudithu vidungalen pls. Suspense thanga mudiyala. Idu nijamagave unmai sambavama alladu ungal karpanaiya?

ஜோதிஜி said...

நன்றி

பயணமும் எண்ணங்களும், எஸ்கே, எல்கே

தெகா, சித்ரா

உங்களின் சிலாகிப்பு வாசிப்பு அனுப்வம் உங்களின் வார்த்தைகளில் தெரிகின்றது. நன்றிங்க.

ஜோதிஜி said...

விந்தை மனிதன் மற்றும் தமிழ் உதயம் உங்கள் விமர்சனம் ஒரு கவிதையின் வரிகளைப் போல இருக்கிற்து.

இளங்கோ நான் என்னமாதிரி அடிக்கடி நினைத்துக் கொள்வேனோ அதையே நீங்கள் வார்த்தைகளாக கொடுத்து இருக்கீங்க......

தேனம்மை நாம் எப்போதும் ஒருசின்ன வட்டத்திற்குள் இருக்கின்றேன். காரணம் நம்முடைய தேவைகள் எல்லாவிதங்களிலும் பூர்த்தி அடைந்து விடுவதாக இருந்தது விடுகின்றது. அம்மா அப்பா மற்ற உறவுகள் போன்ற பல மனிதர்களின் விமர்சனம் இருந்தாலும் கூட.

ஆனால் நாம் பார்க்கும் ஜன்னலுக்கு வெளியே உள்ள ஆகாயம் கண்ணுக்குள் அடங்கக்கூடியதா? இந்த மனிதர்களின் துன்பமும் அப்படித்தான்.

இதைத்தான் முன் ஜென்ம பாவம், புண்ணியம் மற்ற கருமாந்திரம் என்று ஜல்லியடிக்கிறார்கள்

ஜோதிஜி said...

இரவு வானம் தொடர்வாசிப்புக்கு நன்றிங்க.


அவர்கள் வாழும் காலத்தில் பிள்ளைகளுக்கு புரியும் வண்ணம் நடந்து கொண்டதே இல்லை

உண்மை தான் கண்ணன். ஆனால் இப்போது என் குழந்தைகளுக்கு ஏதோவொரு சீக்கு சிரங்கு காய்ச்சல் என்று அலையும் போது அல்லது ஒன்றும் புரியாமல் தவிக்கும் போது அன்று வாழ்ந்து சூழ்நிலையில் என் அப்பாவின் அடக்குமுறையான வார்த்தைகளை புரிந்து கொள்ள முடிகின்றது. சிகோ என்ற நண்பர் ஒரு கட்டளை பிறப்பித்துள்ளார்

THOPPITHOPPI said...

விரைவில் சந்திப்போம் ஜி

ஜோதிஜி said...

வினோத் நாம் இருவரின் அனுபவ வயதும் துளசி கோபால்அவர்களின் வயதும் ஏறக்குறைய ஒன்றாக இருக்கும் என்று கருதுகின்றேன். உங்களின் புரிந்துணர்வோடு தொடரும் ஒத்துழைப்புக்கும் வார்த்தைகளுக்கும் நன்றிங்க.

நண்பா சிகோ இதே போல்என் வலைதளத்தில் மேலே சைன் இன் உள் நுழைந்து ஒரு இடுகையை ஒதுக்கிக்கொண்டு உருவாக்கிக் கொள்ளுங்க. தமிழ்மண பயனர் பகுதியில் உங்கள் பெயரை பதிவு செய்துகொள்ளுங்க. பல விதங்களிலும் பயன்படும்.
உங்கள் உத்தரவை நிறைவேற்ற முயற்சிக்கின்றேன்.

ஜோதிஜி said...

விந்தை மனிதன் சிகோ இருவரும் கண்டு பிடித்த விசயங்களை அடுத்த பதிவில்புரிய வைக்கின்றேன்.

ஜோதிஜி said...

உருவமற்றவரே முற்றும் என்று போடும் போது பதில் கொடுக்கின்றேன்.

ஜெயந்தி said...

மனித வாழ்க்கையில்தான் எத்தனை கஷ்டங்களை தாண்டிச்செல்ல வேண்டியிருக்கிறது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கதை இருக்கும்.

தாராபுரத்தான் said...

படிச்சட்டேன்..ம்..சொல்லுங்க

ரோஸ்விக் said...

ரகஸ்யத்தை - ரகஸியா மாதிரி கிக்கா இருக்கு... ஆனால், "ரகசியத்தை" சரியாக இருக்குமோ அண்ணா? :-)

ரோஸ்விக் said...

இதுபோன்ற(வர்களின்) வாழ்க்கைப் பாடங்களை வாசித்தால் ஜுஜுபி காரணங்களுக்காகக் கூட விவாகரத்து அளவிற்குப்போவதும் குறையும். சின்ன சின்ன பிரச்சனைகளை எதிர்கொள்ள இயலாமல் வாழ்க்கையை முடித்துக் கொள்பவர்களின் எண்ணமும் மாறும்.

ரோஸ்விக் said...

அண்ணா எழுத்தாளர் நடை எழுத்தில் தெரியுது... :-)))

ஜோதிஜி said...

உண்மைதானே ஜெயந்தி....

வாங்க தாரபுரத்தான் ஐயா.

நண்பா கிக்கா? ஐய்யோ புல் ஆப் அரிக்குது ராசா.

எழுத்தாள நடையா ரஸிகா போல கொஞ்சம் கிக்க ஏத்தி விட்டுட்டு போயிடக்கூடாது ஆமா???

Ravichandran Somu said...

மூன்று பாகங்களையும் இப்போதுதான் படித்தேன்... Simply superb... தொடருங்கள். அடுத்த பாகத்தை சீக்கிரம் போடவும்.

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
தொடருங்கள்.
நன்றி.

Anonymous said...

சொல், பொருள் சுவை..!
பாராட்டுக்கள்.
- நட்புடன்
மலைநாடான்